29 ஆகஸ்ட் 2020

பூனான் பேரரசு இந்தோசீனா

 தமிழ் மலர் - 28.08.2020

இந்தோசீனா மண்ணில் முதல் அரசு. இந்தோசீனா ஆளுமைகளில் முதன்மை அரசு. இந்தோசீனா கலாசாரங்களில் மூத்த அரசு. இந்தோசீனா நாடுகளில் முதிர்ந்த அரசு. அதுதான் புவி போற்றும் பூனான் அரசு. அதுவே இந்தோசீனாவில் உலக இந்தியர்களின் தலையாய அரசு.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டு மொத்த இந்தோசீனாவையும் ஆட்சி செய்த பழம்பெரும் பண்டைய அரசு. சும்மா சொல்லக் கூடாது. கம்போடியா; வியட்நாம்; லாவோஸ்; தாய்லாந்து; பர்மா; வட மலாயா; ஆகிய ஆறு நிலப் பரப்புகளையும் சம காலத்தில் கட்டிப் போட்டு ஆட்சி செய்த மாபெரும் அரசு.

எப்பேர்ப்பட்ட அரசாக இருக்க வேண்டும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அது மட்டும் இல்லை. பூனான் அரசு ஓர் இந்தியர் அரசு. இந்து மதம் சார்ந்த அரசு. அதை நினைவில் கொள்வோம். ஆகவே பூனான் அரசிற்கு மதிப்பு கொடுப்போம். மரியாதை செய்வோம்.

Funan was an Indianised kingdom in Cambodia, the first important Hinduized kingdom in southeast Asia. It covered portions of what are now Vietnam, Thailand, and Cambodia; that had incorporated aspects of Indian institutions, religion, statecraft, administration, culture, epigraphy, writing and architecture.

https://en.wikipedia.org/wiki/History_of_Laos#Funan_kingdom

ஆனால் என்ன. பழைய அதே காம்போதி ராகம் தான். காலத்தின் கோலத்தினால் அந்தப் பேரரசு காணாமல் போய் விட்டது. கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடிய காலப் பிரளயத்தில் கரைந்து உடைந்து காணாமல் போய் விட்டது.

அரிச்சுவடி அடையாளங்கள் ஆங்காங்கே சின்னதாய்த் தெரிகின்றன. இருந்தாலும் பரவாயில்லை. முதல் மரியாதை செய்வோம். ஏன் என்றால் இந்த அரசைத் தோற்றுவித்தவர் ஓர் இந்தியர். பெயர் கவுந்தியா (Kaundinya). இவருக்கு உதவியாக இருந்தவர் அவரின் மனைவியார் சோமா மகாராணியார்.

பூனான் பெயரைப் பார்த்தால் சீனப் பெயர் மாதிரி இருக்கிறது. அப்புறம் எப்படி அதைத் தோற்றுவித்தவர் ஓர் இந்தியர் என்று மலைக்க வேண்டாம். உண்மை அதுதான். பூனான் பேரரசைத் தோற்றுவித்தவர் ஓர் இந்தியர் தான். தொடர்ந்து படியுங்கள்.

பூனான் பேரரசு 2100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் தோன்றிய ஒரு குட்டி அரசு. அப்படியே பல்கிப் பெருகி ஒரு பேரரசு ஆனது. இந்த அரசு தான் இந்தோசீனாவில் உருவான முதல் அரசு.

இந்த அரசு தோன்றுவதற்கு முன்பு மலாயா கிளாந்தான் மாநிலத்தில் பான் பான் (Pan Pan) எனும் ஓர் அரசு இருந்தது. இதுவும் ஓர் இந்து அரசு தான். அந்தக் காலத்தில் வட மலாயா பகுதியில் இருந்த கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த அரசு. ஒரு சின்ன இடைச் செருகல்.

தென்கிழக்காசிய நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன. காலப் போக்கில் மற்ற மதங்களின் செல்வாக்கினால் அந்த மதம் அப்படியே சரிந்து போனது.


பூனான் அரசைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் பான் பான் அரசைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் பான் பான் அரசில் இருந்து போன கவுந்தியா என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்தார். இவருக்கு கவுந்தி முனிவர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. சரி.

முன்பு காலத்தில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

Pan Pan is a lost small Hindu Kingdom believed to have existed around the 3rd to 7th Century CE believed to have been located on the east coast of the Malay peninsula somewhere in Kelantan or Terengganu.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயா தீபகற்பத்தில் ஓர் இந்தியர் அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம் என்றுகூட சொல்லலாம். நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும்.

ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. பொய் சொல்லவும் தெரியாது.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன இந்தியர்களின் சுவடுகளை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் இந்திய அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

(சான்று: https://www.amazon.com/Ancient-Indian-History-Civilization-Sailendra/dp/8122411983 - Ancient Indian History and Civilization; Paperback – 1999; By Sailendra Nath Sen; Pg: 521)

பூனான் என்பதைச் சீன மொழியில் பூனோங் (Bunong) என்கிறார்கள். கெமர் மொழியில் நோகோர் புனோம் (Nokor Phnom). தாய்லாந்து மொழியில் பூனான் (Funan). வியட்நாமிய மொழியில் பூ நாம் (Phu Nam). மலை இராச்சியம் என்று பொருள்.

இருப்பினும் இந்திய மயமாக்கப்பட்ட அந்தப் பண்டைய பேரரசிற்கு புவியியலாளர்கள் வழங்கிய பெயர் பூனான். இதன் தலைநகரம் வியாதாபுரம் (Vyadhapura). ஆட்சிக் காலம் கி.பி. 50/68 – கி.பி. 550/627). பயன்பாட்டு மொழிகள்: பழைய கெமர் மொழி; சமஸ்கிருதம். பயன்பாட்டு மதங்கள்: இந்து மதம்; பௌத்த மதம்; ஆன்ம வாதம் (Animism). இதற்குப் பின்னர் வந்த அரசு: சென்லா அரசு (Chenla).

பூனான் பேரரசு, கி.மு. 100 ஆண்டுகளில், இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் (Mekong Delta); சீனா; இந்தோனேசியா; இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தப் பேரரசு இந்து மதத்தைத் தழுவி ஆட்சி செய்து வந்தது. இந்தப் பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்து உச்சம் பார்த்தன. பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.

4-ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 586-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டது. இரத்னபானு; இரத்னசிம்மா எனும் இரு சகோதரப் புத்த பிக்குகள் அதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய கம்போடிய அரசர் ஜெயவர்மன் விருப்பப் பட்டார். அதற்காக நாகசேனா எனும் இந்தியப் புத்த பிக்குவைச் சீனாவுக்கு அனுப்பி வைத்தார். ஆக அந்த வகையில் 450-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் பூனானில் பௌத்தம் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பூனான் பேரரசில் இந்து மதம் தலையாய மதமாக இருந்து இருந்தாலும், பௌத்த மதம் இரண்டாம் நிலை மதமாகவே இருந்து உள்ளது. கம்போடியா லாவோஸ் நாடுகளில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள் உறுதி படுத்துகின்றன.

அது மட்டும் அல்ல. பூனான் பேரரசு மன்னர்கள் சீனப் பேரரசருக்குப் பவளத்தில் வரையப்பட்ட சிவன் படங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.

கி.பி. 590-ஆம் ஆண்டில் கம்போடியாவைப் பவவர்மன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். தன் தம்பி சித்திரசேனன் என்பவரின் உதவியால் பூனான் அரசர் யுத்ரவர்மனைத் தோற்கடித்தார். இன்னும் ஒரு தகவல்.

கம்போடியாவை ஆட்சி செய்த பவவர்மன்; சித்திரசேனன் ஆகியோரின் கல்வெட்டுக்களும்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துப் பல்லவ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பலவகைகளில் ஒத்துப் போகின்றன.

பவவர்மன் ஒரு சிவபக்தர். அதனால் கம்போடியா நாட்டில் நான்கு சிவ ஆலயங்களைக் கட்டி இருக்கிறார். அது மட்டும் இல்லை. கம்போடியாவில் பல கோயில்களில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இருக்கிறார். இந்து மதப் பாடல்களைப் பாடும் படி கட்டளை போட்டு இருக்கிறார்.

கம்போடியாவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பவவர்மனுக்குப் பின் வந்த அவருடைய தம்பி மகேந்திர வர்மனும் ஒரு சிவ பக்தர். சரி. பூனான் வரலாற்றுக்கு வருவோம்.

1942-ஆம் ஆண்டு தென் வியட்நாம், மீகோங் வடிநிலத்தில் ஒக்கியோ (Oc Eo) எனும் தொல்பொருள் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட காலத்தில் இந்த ஒக்கியோ நகரம் ஒரு பரபரப்பான துறைமுகமாக இருந்து இருக்கலாம்.

பூனான் பேரரசில் தென்னிந்திய பல்லவ வம்சாவழியினரின் தாக்கங்கள் அதிகமாகவே இருந்து உள்ளன. வியட்நாமில் கிடைக்கப் பெற்ற பல்லவ கிரந்த கல்வெட்டுகள் மூலமாக அந்தப் பல்லவத் தாக்கங்கள் உறுதி செய்யப் படுகின்றன.

பூனான் பேரரசு என்பது பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்படும் சுவர்ணபூமியாகக் கூட இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்; புனோம் பென் (Phnom Penh) அரச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வோங் சோதேரா (Dr Vong Sotheara) என்பவர், ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். கி.பி 633-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் “கெமர் பேரரசின் சுவர்ணபூமியின் பெரிய மன்னர் ஈசனவர்மன் (King Isanavarman). இவர் மகிமையும் துணிச்சலும் நிறைந்தவர். அவர் ராஜாதி ராஜன் ஆவார்.

அவர் சுவர்ணபூமியை எல்லையாகக் கொண்ட கடல் வரை ஆட்சி செய்கிறார். அண்டை நாடுகளில் உள்ள மன்னர்கள் இவரின் கட்டளைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

அந்த ஆவணங்களில் முக்கியமானது லியாங் புத்தகம் (Book of Liang).

இந்த லியாங் புத்தகம் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. பூனான் அஸ்திவாரக் கதையை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது.

"கவுந்தியா என்பவர் ஜியா எனும் தென் நாட்டில் இருந்து வந்தார். (ஜியா என்பது பான் பான் பேரரசைக் குறிக்கிறது) அவர் ஒரு கனவு கண்டார். காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வில் இருப்பதைக் கண்டார். அந்த வில்லை எடுத்துக் கொண்டு அவர் ஒரு கப்பலில் ஏறினார். வெகு தூரம் பயணம் செய்து ஓர் இடத்தில் தரை இறங்கினார். அது ஊர் பெயர் தெரியாத ஒரு நாடு.

அந்த நாட்டை சோமா (Queen Soma) எனும் மகாராணியார் ஆட்சி செய்து வந்தார். அந்த ராணியார் கப்பலையும் கவுந்தியாவையும் கைப்பற்ற விரும்பினார். முடியவில்லை. ஒரு போராட்டம். இருந்தாலும் கவுந்தியா போராடி வெற்றிப் பெற்றார். பின்னர் சோமா மகாராணியாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் சோமா மகாராணியார் அந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை கவுந்தியாவிடம் வழங்கினார் என்று லியாங் புத்தகம் கூறுகிறது.

கவுந்தியாவின் மற்ற பெயர்கள்: கொண்டன்னா (Kondanna); கொண்டின்யா (Kondinya).

பூனான் பேரரசை 18 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர்:

1. சோமா மகாராணியார் (Queen Soma)
2. கவுந்தியா (Kaundinya I)
3. ஸ்ரீ மீரா (Srei Meara)
4. சந்தனா (Candana)
5. ஸ்ரீ இந்திரவர்மன் (Srei Indravarman)
6. கவுந்தியா ஜெயவர்மன் (Kaundinya Jayavarman)
7. ருத்ரவர்மன் (Rudravarman)


வரலாற்றில் இருந்து கரைந்து போன இந்தியர் அரசுகளில் பூனான் அரசும் ஒன்றாகும். இருப்பினும் இன்றும் வரலாற்றில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.08.2020





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக