17 ஏப்ரல் 2021

இந்தோனேசியா இலிங்கசாரம் சிவாலயம்

தமிழ் மலர் - 17.04.2021

இந்தோனேசியா பாலித் தீவிற்கு அருகில் லொம்போக் தீவு (Lombok). சுந்தா தீவுக் கூட்டத்தில் ஒரு சிறிய தீவு. அந்தத் தீவின் தலைநகரம் மத்தாரம். அந்த நகரத்தில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் ஒரு கிராமம். பெயர் இலிங்கசாரபுரம். இந்தக் கிராமத்தில் ஓர் அழகிய ஆலயம். பெயர் இலிங்கசாரம் ஆலயம்.

சிவனைப் பின்னணியாகக் கொண்ட ஆலயம். ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயம். கடந்த சில பத்தாண்டுகளாக அந்த ஆலயத்தைப் புனரமைப்புச் செய்து வருகிறார்கள்.

லொம்போக் தீவில் சாசாக் எனும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள் (Sasak language). சாசாக் மொழி என்பது பாலினிய மொழியும் (Balinese); சும்பாவா மொழியும் (Sumbawa) கலந்த மொழியாகும். அந்த சாசாக் மொழியில் இலிங்கசாரம் (Pura Lingsar) என்றால் சிவாலயம். அதாவது சிவனின் ஆலயம் என்று பொருள்.

சைவ சமயத்தின் முழு முதல் கடவுளரார் சிவன். அவரைக் குறிக்கும் ஒரு வடிவம் தான் இலிங்கம். அருவம், உருவம், அருவுருவம் எனும் மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் என்பது அருவுருவ நிலையாகும்.

இலிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இந்த வழிபாடு நிலவி இருக்கலாம். சான்றுகள் கிடைத்து உள்ளன.


லொம்போக் தீவில் இலட்சக் கணக்கான இந்தோனேசிய இந்து மக்கள் வாழ்கிறார்கள். பற்பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

அந்தக் கிராமத்தில் மட்டும் அல்ல; அந்தக் கிராமம் அமைந்து இருக்கும் லொம்போக் தீவிலும் இந்தோனேசிய இந்து மக்கள் வாழ்கிறார்கள். லொம்போக் தீவு 4,725 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 35 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

லொம்போக் தீவும் பாலி தீவும் அருகாமைத் தீவுகள். ஏறக்குறைய 30 கி.மீ. இடைவெளி. சின்னச் சின்னப் படகுகள் மூலமாக ஐலசா பாடிக் கொண்டே லொம்போக் தீவை அடைந்து விடலாம்.

இலிங்கசாரம் கிராமத்து ஆலயங்களில் இலிங்கசார சிவாலயம் மிக முக்கியமான ஆலயமாகும். இந்த ஆலயத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது. அண்மையில் தான் காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த ஆலயத்தைக் கண்டுபிடித்தார்கள்.

இந்த ஆலயத்திற்கு அருகில் வேறு நிறைய ஆலயங்கள் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மீட்டு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கம் கணிசமான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.

இந்தப் பழங்கால ஆலயங்களை மீட்டு எடுப்பதால் இந்தோனேசியாவின் பழைய தொன்மை வரலாறு மட்டும் மீட்டு எடுக்கப்படவில்லை. அதன் மூலமாக வருமானமும் அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. அதோடு பல நூறு பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் அமைகின்றன.

கலைக் கண்ணோடு பார்க்காமல் கலைக் காரியங்களைச் சாதிக்கும் கண்ணோடும் பார்க்கிறார்கள். அதனால் தான் இந்தோனேசியாவிற்கு மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் படை எடுத்துப் போகிறார்கள். கோடிக் கணக்கில் பணம் குவிகிறது.

மற்ற ஒரு சில நாடுகளைப் போல இல்லை. இருக்கிற இந்து சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களை எல்லாம்; நேரம் கிடைக்கும் போது எல்லாம் நொறுக்குத் தீனி போல நொறுக்கிக் கொண்டு போகிறார்கள். மதச் சகிப்புத் தெரியாத மனிதர்கள்.

அப்புறம் என்னங்க. உழைத்துப் போட ஆள் இருக்கிரது. உட்கார்ந்து சாப்பிட குடிசை இருக்கிறது. அது போதுங்க. அந்த நினைப்பில் வாழும் மனிதர்களைத் தட்டி எழுப்புவது சற்றுச் சிரமமே.

இலிங்கசாரம் சிவாலயம் அந்தத் தீவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இலிங்கசாரம் ஆலயம் 1714-ஆம் ஆண்டில் அனாக் ஆகோங் நுகுரா (Anak Agung Ngurah) எனும் மன்னரால் கட்டப்பட்டது.

இவர் பாலி தீவை ஆட்சி செய்த மன்னர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். பாலினியக் கட்டிடக் கலையில் இந்த ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் பச்சைப் பசுமையான நெல் வயல்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் பசேல் காடுகள். முன்பு காலத்தில் எரிமலைச் சாம்பல்கள் பரவியதால் அந்த மண் பச்சையாகப் பசுமையாக வடிவம் கண்டது. எது போட்டாலும் விளையும் எனும் அமைப்பு கொண்டது.


இந்தோனேசியா எனும் நாட்டையும் இந்தோனேசியாவில் உள்ள இந்து ஆலயங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டில் ஆலயங்கள் ஆழமாய்ப் பதிந்து விட்டன. இந்தோனேசிய மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இந்தோனேசியாவின் கடந்த கால கலாசாரத்தின் விளைபொருளாகத் தான் ஆலயங்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. கடந்த கால அரசுகளின் கடந்த காலத்தையும் பிரதிபலிக்கின்றன. அங்கு உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் அங்கு வாழ்ந்த மன்னர்களால் கட்டப் பட்டவையாகும்.

பாலி தீவில் வாழ்ந்த அரசர்கள் லோம்போக் தீவின் மீது படை எடுத்து அங்கு வாழ்ந்த மக்கள் மீது இந்து சமய நம்பிக்கைகளைப் பரப்பினார்கள். அதனால் பாலி தீவு இந்துக்களுக்கும் லொம்போக் மக்களுக்கும் இடையிலான சமய ஒற்றுமை பரவியது.

இலிங்கசார சிவாலயத்திற்கு யார் வேண்டும் என்றாலும் போகலாம் வரலாம். காலை முதல் மாலை வரை ஆலயம் திறந்து வைக்கப் படுகிறது. ஒரு சிறிய நன்கொடை எதிர்பார்க்கப் படுகிறது. இலிங்கசார சிவாலய வளாகத்தில் நான்கு சிவாலயங்கள் உள்ளன.

1. குனோங் ரிஞ்சனி (லோம்போக்கில் உள்ள தெய்வங்களின் இருக்கை).

2. குனோங் அகோங் (பாலி தீவில் உள்ள தெய்வங்களின் இருக்கை}.

மேலும் இரு தீவுகளுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறிக்கும் இரட்டைச் சன்னதிகள்.

இலிங்கசார சிவாலய வளாகத்தில் விஷ்ணு தெய்வத்திற்கு உருவாக்கப்பட்ட தாமரைக் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் நிறையவே விலாங்கு மீன்கள். அவற்றைப் புனிதப் படைப்புகளாகக் கருதுகிறார்கள். அவற்றுக்கு அவித்த முட்டைகள் உணவாக வழங்கப் படுகின்றன. அந்த விலாங்கு மீன்களுக்கு உணவளிப்பது அதிர்ஷ்டமாகவும் கருதப் படுகிறது.

Lingsar origin from sasak language mean clear revelation from God. The festival at Pura Lingsar is held every 6th full moon or purnamaning sasih kenem on Balinese saka calendar dan 7th full moon or sasih kepitu on Sasak calendar.

2018-ஆம் ஆண்டு லொம்போக் தீவில் ஒரு சுனாமி. மிக அண்மையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த இலிங்கசார சிவாலயத்தில் தான் கொஞ்ச காலம் தங்கி இருந்தார்கள். இனம் மதம் பார்க்காமல் இந்த ஆலயத்தில் அடைக்கலம் பெற்றார்கள்.

இலிங்கசார சிவாலயத்திற்கு பல நூறு மைல்களுக்கு அப்பால் ஜாவா, ஜோக் ஜகார்த்தா, பிரம்பனான் ஆலயம் உள்ளது. கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரம்பனான் ஆலயம் தான் உலகிலேயே மிகப் பெரிய சிவன் ஆலயம் ஆகும். 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாலித் தீவில் புரத்தான் (Pura Bratan) சிவன் ஆலயம் 1633-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. சிவனுக்கும் பார்வதிக்கும் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது.

பாலித் தீவின் தலை நகரம் டென்பசார். அங்கு இருந்து சிங்கராஜா செல்லும் வழியில் பெடுகுல் (Bedugul) எனும் இடத்தில் ஒரு மலை ஏரி உள்ளது. அதன் பெயர் புரத்தான் ஏரி (Lake Bratan). பாலித் தீவின் வடக்கே உள்ளது. அங்குதான் புரத்தான் சிவன் ஆலயம் உள்ளது. அதற்கும் பின்னர்தான் லொம்போக் இலிங்கசார சிவாலயம் கட்டப் பட்டது.

இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடும் காலமாகப் பயணித்து உள்ளது. மற்ற மற்ற மதங்கள் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது.

இந்தோனேசியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்களும் சரி; பேரரசுகளை உருவாக்கியவர்களும் சரி; மகாபாரதம் இராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை வேரூன்றச் செய்து விட்டார்கள்.

வாயாங் கூலிட் எனும் நிழல் பொம்மலாட்டம்; மேடை நாடகங்கள்; கிராமப்புறக் கூத்துகள் வழியாக மகாபாரதம்; இராமாயணக் காவியங்கள் இந்தோனேசியாவில் பிரபலம் அடைந்து விட்டன.

இந்த லொம்போக் தீவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று உள்ளன.

அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் “நீங்கள் ஏன் இப்படி இந்தியப் பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்பது உண்டு. அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் மதத்தை மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்ற இயலாது” என்று பதில் சொல்வார்களாம். இது எப்படி இருக்கு என்று என்னைக் கேட்க வேண்டாம். அவர்களின் பதிலேயே பதில் உள்ளது.

உலக வரலாற்றில் பற்பல நாகரிகங்கள் வந்தன. பார்த்தன. சென்றன. அவற்றில் உச்சம் பார்த்த சில நாகரிகங்கள் இடம் தெரியாமல் மறைந்தும் போயின. அவற்றில் சில அட்ரஸ் இல்லாமலேயே சிதைந்தும் போயின. இவை அனைத்தும் நவீன காலத்து மனிதர்களால் காலா காலத்துக்கும் மறக்கப்பட்ட நாகரிகங்கள்.  

அவற்றில் தமிழர்கள் நாகரிகம் மட்டும் ஏனோ தெரியவில்லை. திசை திரும்பிய இடம் எல்லாம் தழைத்து ஓங்கியது. பல ஆயிரம் ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்தது. அந்த நாகரிகத்தின் பண்பாட்டுச் சுவடுகளும் கலைச் சுவடிகளும் தென்கிழக்கு ஆசியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரந்து விரிந்து படர்ந்து கிடந்தன.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. இப்போது பல இடங்களில் அந்தப் பண்பாட்டுச் சுவடுகளும்; அந்தப் பண்பாட்டுச் சுவடிகளும்; நேற்று ஐலசா பாடி வந்த சாதி சனங்களால் ஓரங்கட்டப்பட்டு; ஒதுக்கப்பட்டு பாவப்பட்ட பிள்ளையாய் பரிதவித்து நிற்கின்றன. அதனால் என் சின்ன நெஞ்சிலும் சின்னப் பெரிய வேதனைகள். சன்னமாய் வலிக்கின்றன. சமயங்களில் அதிகமாகவும் வலிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.04.2021

சான்றுகள்:

1. Pura Lingsar - https://www.lonelyplanet.com/indonesia/nusa-tenggara/mataram/attractions/pura-lingsar/a/poi-sig/452517/356598

2. Sasak language - https://en.wikipedia.org/wiki/Sasak_language

3. Pura Lingsar was built by Anak Agung Ngurah in 1714 - https://en.wikipedia.org/wiki/Pura_Lingsar

4. Bagian Proyek Pembinaan Permuseuman Nusa Tenggara Barat (1997). Peninggalan sejarah dan kepurbakalaan Nusa Tenggara Barat

5. Karda, Made (2015). "Fenomena Kemaliq Lingsar Analisis Wetu Telu (Kajian) Perspektif Budaya" (PDF). Media Bina Ilmiah (in Indonesian). 9 (23).



 

1 கருத்து:

  1. நல்லதொரு தகவல் நண்பரே .தொடர்ந்து நீங்கள் தரும் தகவல்களை படித்து வருகிறேன் .உங்கள் முயற்சி தொடரட்டும் ...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு