18 ஆகஸ்ட் 2021

தமிழ் நெஞ்சர் பி.கே. குமார் மறைவு

தமிழ் மலர் - 18.08.2021

காலம் மாறுகிறது. ஞாலம் மாறுகிறது. மனிதர்களும் மாறுகிறார்கள். மறைந்தும் கரைந்தும் போகிறார்கள். மறைந்து போகும் மனிதர்களில் நாலு நல்லது செய்தவர்களும் நிறைந்து வாழ்கிறார்கள். அவர்களில் நமக்கு வேண்டியவர்களும் இருக்கிறார்கள். தெரியாதவர்களும் இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது.


என்ன செய்வது. போக வேண்டிய நேரம். முடியாது என்று சொல்ல முடியாது. மேலே இருந்து வரும் அழைப்பை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஆண்டவன் கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்லவும் முடியாது.

மாற்றங்களின் கால வெள்ளத்தில் கொரொனா ஒன்றே மாறாதது என்பது போல திரும்புகிற திசைகளில் எல்லாம் கொரோனா. கொரோனா. எத்தனையோ உயிர்களைக் காவு கொண்டு வருகிறது. தெரிந்தவர் தெரியாதவர்; அறிந்தவர் அறியாதவர் என்று எத்தனையோ உயிர்கள் மறைந்து வருகின்றன.

அந்தப் பாவனையில் மலேசியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான மாண்புமிக்க ஒரு தமிழரையும் இழந்து நிற்கிறோம். காலம் செய்த கோலம். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டு இருந்த பி.கே. குமார் எனும் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.

17.08.2021-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு, ஈப்போ தனியார் மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.


பி.கே. குமார் ஒரு சமூக ஆர்வலர். தொழில்துறை முனைவர். வணிக வள்ளல். மலேசிய நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். மலேசியாவில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து தனிமனிதராக நிகழ்த்திக் காட்டியவர்.

மலேசியாவில் தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காக, 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

மற்றவர்களின் கையை எதிர்ப்பார்க்காமல் தன் சொந்தச் சேமிப்பில் இருந்து சில பல ஆயிரங்களைச் செலவு செய்தவர்.

தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.


மலேசியத் தமிழர்களுக்கு, குறிப்பாக ஈப்போ புந்தோங் வாழ் தமிழ் மக்களுக்காக மறுமலர்ச்சித் திட்டங்கள் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர். அரும்பாடு பட்டவர்.

தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் முதன்முதலாக நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்திக் காட்டியவர். அவர் அரசியல்வாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆன்மீகவாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காகச் சொந்தப் பணத்தைச் செலவு செய்தவர். பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம். அவர்தான் பி.கே.குமார். ஈப்போ வாழ் மக்களுக்கு நன்கு தெரிந்தவர். பலருக்கும் நெருங்கிய தோழர்.

அதையும் தாண்டிய நிலையில் அவர் ’மலேசியம்’ புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைத் தமிழர்களுக்காகப் பதிவு செய்து வந்தவர்.


அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தி கொள்ள இறைஞ்சுகின்றோம்.

பி.கே.குமார் 1956 ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். வயது 65. மனைவி முத்து ராசாத்தி. மகன் ஜெயக்குமார். மருமகள் யோகேஸ்வரி தேவி. மகள் தாமரைச் செல்வி. மருமகன் இரா. மாறன். பேரப் பிள்ளைகள்: ஜெ. புவனேந்திர குமார், ஜெ. ஆதீஸ்வரி, மா. சுருதி.

பி.கே.குமார், நாடறிந்த சமூகச் சேவையாளர். பேராக் இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர். மலேசியத் தமிழர் சங்கத்தின் துணைத் தலைவர். மலேசியத் தொழில் முனைவர் மையத்தின் தலைவர். ஈப்போ செகதாரியஸ் தங்கும் விடுதி; குமார் வணிக வளாகம் ஆகிய நிறுவனங்களின் தோற்றுநர்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தமிழர் மாநாடுகளின் தலைவர். 1996-ஆம் ஆண்டு தொடங்கி 2003-ஆம் ஆண்டு வரை சுங்கைபாரி அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர். ஈப்போ வள்ளலார் அன்பு நிலையத்தின் காப்பாளர். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எப்போதுமே எதையாவது புதுமையாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத் துடிப்பில் நகர்ந்து கொண்டே இருந்தவர். இருபத்து நான்கு மணி நேரமும் வணிகம், வியாபாரம், வர்த்தகம் என்று பேசிக் கொண்டே இருப்பார்.


கடைகளில் அமர்ந்து சாப்பிடும் போதுகூட வணிகம் பற்றித்தான் பேசுவார். சமயங்களில் எனக்கே சலிப்பு ஏற்பட்டு மறைமுகமாகத் தொட்டுக் காட்டியதும் உண்டு. ‘என்னங்க குமார். இங்கேயுமா வணிகம் வர்த்தகம்... சாப்பிடுங்க’ என்று கடிந்து கொண்டதும் உண்டு.

1970-ஆம் ஆண்டுகளில் சிப்பாங் லொத்தியான் தமிழ்ப்பள்ளியில் அடியேன் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்த காலம். அப்போது பி.கே.குமாரின் தந்தையார் பாலகுருசாமி, சிப்பாங் சுங்கை பீளேக் நகரில் ஒரு சின்ன மளிகைக் கடை வைத்து இருந்தார்.

அந்தக் கடைக்குச் சமயங்களில் போவது வழக்கம். இருப்பினும் என்னுடைய மாணவர் பன்னீர்செல்வம் என்பவரின் மூலமாக பி.கே.குமார் அறிமுகம் ஆனார்.

அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் நேசன் நாளிதழின் சிறுவர் அரங்கம் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைத் திருத்தி வெளியிட்டு வந்தேன். அந்த வகையில் பி.கே. குமாரின் எழுத்துகளைத் திருத்தி பிரசுரிக்கச் செய்தேன். தொடர்ந்து கதைகள் கட்டுரைகள் எழுதினார். அப்போதே பி.கே.குமார் ஓர் எழுத்தாளராகி விட்டார்.


பின்னர் தொடர்பு இல்லாமல் போனது. நானும் ஆசிரியர் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்கு வந்தேன். பின்னர் 40 ஆண்டுகள் கழித்து ஈப்போவில் என் மனைவியைச் சந்தித்து என்னைப் பற்றிக் கேட்டு இருக்கிறார்.

ஒருநாள் வீடு தேடி வந்தார். மாணவன் எனும் பாவனை தோழன் என்று மாறியது. அடிக்கடி வெளியே உணவகங்களுக்கு ஒன்றாகச் சாப்பிடப் போவோம். தட்டுப்படும் போது கைச்செலவிற்கு உதவி செய்து இருக்கிறார். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் அழைப்பு வந்து சேரும். அவர் ஏற்பாடு செய்த சில நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் சேவை செய்து உள்ளேன். கடைசியாக பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைநிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் சிறந்த தமிழாசிரியரைத் தேர்வு செய்யும் பொறுப்பு. பாரபட்சம் இல்லாமல் தேர்வு செய்தோம்.

1977-ஆம் ஆண்டில் ‘திராவிட மாயை’ எனும் நூலை பி.கே. குமார் எழுதி இருக்கிறார். அண்மையில் மேலும் ஒரு நூல். அதன் பெயர் ’வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும்.


வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். இப்படிச் சொன்னவர் தான் பி.கே.குமார்.

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளுடன் தொடர்பில் இருந்தவர். தொய்வு இல்லாமால் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வந்தவர். நாடளாவிய நிலையில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசி வந்தவர்.

அவரின் பார்வையில், கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் மாறி இருக்கிறது. மாறி விட்டது. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்; மிகத் திறமையான தலைமைத்துவம் மிக்க தலைமையாசிரியர்கள்; தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்; சமூக ஆர்வலர்கள்; அரசு சார்பற்ற இயக்கங்கள்; முன்னாள் மாணவர் சங்கங்கள்; தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்புகள்; இந்தத் தமிழ் நெஞ்சங்களின் வற்றாத ஆதரவுக் கரங்கள் தமிழ்ப்பள்ளிகளை நோக்கி திசை திரும்பி உள்ளன என்று சொல்கிறார்.


தமிழ் ஊடகங்களும் அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், தங்களால் இயன்ற பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. அது போல இந்தச் சாதனைகளும் ஒரே நாளில் நடைபெற்றவை அல்ல. இப்படிச் சொன்னவர் பி.கே.குமார்.

மலேசியாவில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சாரும். விளையாட்டுகள் மட்டும் அல்லாமல் மனக் கணக்கு விளையாட்டுகளையும் அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த விசயம் மலேசியாவில் பலருக்கும் தெரியாது.

அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார். போற்றுகிறேன் அன்பரே.

வணிகம் செய்ய விருப்பம் வந்து விட்டால், அச்சம் சந்தேகங்களை விட்டு ஒழித்து விட வேண்டும். மனத் தடைகளை முதலில் அகற்றிவிட வேண்டும். வணிகம் செய்ய அடிப்படைத் தேவை துணிச்சல். நம்மால் முடியும் என்கிற துணிச்சல். மனத் தடைகளை நீக்குங்கள். தெளிவுடன் இருங்கள். எந்த வியாபாரம் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் விருப்பப் பட்டே செய்யுங்கள்.


விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முன்னேற்றம் தானாகவே வந்து சேரும் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

பல்லின சமுதாயத்தினர் வாழும் மலேசிய நாட்டில் சகோதரத் துவத்துவம் மிகவும் முக்கியமானது. அந்தச் சகோதரத் துவத்துவத்தை நல்லிணக்கம் மூலமாகத் தான் கட்டிக் காக்க முடியும்.

அதே சமயத்தில் பல இனங்களுக்கு இடையில்  ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். பல இனங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் செல்வர் பி.கே. குமார் அறைகூவல் விடுத்து வந்துள்ளார்.

அரசியல்வாதிகள் அவர்கள் பங்கிற்குச் சமூகச் சேவைகள் செய்தாலும் அரசியல் துறையில் சாராதவர்களும் சமூகச் சேவைகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்குக்கும் நல்லதைச் செய்வதைத் தங்களின் தலையாயச் சமூகப் பணியாகக் கருத வேண்டும். 


போட்டி விளையாட்டுக்களின் வழி இளம் சமுதாயத்தினர் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இனங்களுக்கு இடையிலான சமூகப் புரிந்துணர்வை வளர்க்க முடியும்.

எதிர்காலத் தலைமுறையினரிடம் இன வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டியது இந்தக் காலத்துத் தலைமுறையினரின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் பி.கே. குமார் வலியுறுத்தி வந்தார்.

ஒருநாள் மாலை வேலை. மலேசியாவில் உள்ள தமிழர்களுக்காக ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் நான் சொல்லும் இந்தக் கருத்துகளையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மறந்து விட்டேன்.

அவர் இறப்புச் செய்தி வந்ததும் அவர் கேட்டுக் கொண்டதும் நினைவிற்கு வந்தது. அவர் போய் விட்டார். இருந்தாலும் அவர் சொன்ன கருத்துகள் இங்கே மீண்டும் உயிர் பெறுகின்றன.

பி.கே.குமார் கடைசியாக என்னிடம் சொன்னது. பதிவு செய்கிறேன். மலேசிய வாழ் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.


கஷ்டமோ நஷ்டமோ; எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம். அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசியத் தமிழர்களாகிய நாம் இந்த விநாடி வரையில் சலிக்காமல் சளைக்காமல் நம் தமிழ் மொழி உரிமைகளுகாகத் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

வயிற்றில் சுமந்த வலி அம்மாவுக்குத் தெரியும். தோளில் சுமந்த வலி அப்பாவுக்குத் தெரியும். பக்கத்து வீட்டு பாப்பாத்திக்குத் தெரியுமா. அல்லது பசார் மலாம் பக்கிரிசாமிக்குக்குத் தெரியுமா. மீசையில் மண் ஒட்டினாலும் குற்றம். ஒட்டா விட்டாலும் குற்றம். அப்படிச் சொல்கிறவர்களிடம் நாம் மாற்றுக் கருத்துகள் சொல்ல முடியாது. அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நாம் பாட்டிற்குப் போய்க் கொண்டே இருப்போம்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற மேடை முழக்கம். அப்படிச் சொன்னவர்: பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.


அதைக் கேட்டு ஆவேசம் அடைந்து கண்டக் குரல் எழுப்பினார் பி.கே.குமார். பத்திரிகை செய்தியாளர்களை அழைத்து கண்டனத்தைத் தெரிவித்தார். மறுநாள் பத்திரிகையில் அவரின் செய்திகள் வெளியாகின.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். ரொம்பவும் தப்பு. ஆட்சேபம் தெரிவித்தார்.

அவருடைய மனத்தாங்கலையும் பதிவு செய்கிறேன். மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால வலிமைக் கேடயம். அதுவே பி.கே. குமார் அவர்களின் மனவேதனை.


அன்பர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள். நம் இனத்தில் பலரை இழந்து கொண்டு வருகிறோம். இந்தக் கொரோனா எப்போது ஓயும் என்று தெரியவில்லை. வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். கவனமாகப் பயணியுங்கள்.

பி.கே.குமார் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர். ஆகவே இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்டால் கொரோனா தாக்காது என்று தவறாகக் கருத வேண்டாம். கவனம். கவனம்.

மலேசியத் தமிழர்களை வணிக விரும்பிகளாக உருமாற்றம் காண வேண்டும் என்று கனவு கண்ட பி.கே.குமாரின் கனவுகள் நனவாக வேண்டும். பி.கே. குமார்... அன்பரே, அருமைத் தோழரே, தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை என்றைக்கும் மறவாது. ஓர் ஆசிரியரின் கண்ணீர் அஞ்சலிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.08.2021


பேஸ்புக் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் சிவாயநம.

Mageswary Muthiah: ஆழ்ந்த இரங்கல்.

Kala Balasubramaniam:
Om Shanthi

Kanaka Ambal: ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமசிவாய

Mariamal Surinarayanan: Om Namasivaya

Jeeva Muthu: ஆழ்ந்த அனுதாபங்கள்..

Manimala Tamil: Om Namah Shivaya

Muniandy Andy: ஓம் நமச்சிவாய

Mageswary Muthiah: ஓம் நமசிவாய.

Francis Silvan: நல்ல மனிதர்... எனது தொலைகாட்சி நாடகத்தில் நடித்து இருக்கிறார்.. சமுகப் பற்றாளர்... எனது படைப்புக்களின் தீவிர ஆதரவாளர்...

Sarasvathy Arjunan: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Barnabas: ஆழ்ந்த இரங்கல். சகோதரரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுகிறோம்.

Sara Rajah: ஓம் நமசிவாய

Parimala Muniyandy: ஆழ்ந்த இரங்கல்

வே சங்கர்: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமசிவாய

Arni Narendran: Om Shanthi - Condolences to bereaved family

Magentiran Nawamani: நல்ல மனிதர்

Maha Lingam: ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஓம் நமசிவாய..

Gunasegaran Karuppiah: தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை. வாழ்க அவர் நாமம். 🙏🏼

Letchumanan Nadason: ஆழ்ந்த இரங்கல்.

Sheila Mohan: அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமச்சிவாய...

Malathi Nair: Deepest condolances to bereaved family

Anbarasan Shanmugam: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Raghawan Krishnan: RIP the Great Soul

Chitra Ramasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Jeyabalan Ramasamy: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமச்சிவாய 🙏

Mani Kumar: நன்றாக பழகக் கூடியவர்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

MA Chandran: ஒரு நிகழ்ச்சி முடிந்து இவர் வீட்டுக்குப் போனபோது அனைவருக்கும் முகமலர விருந்தளித்து அனுப்பிய பண்பாடறிந்த தமிழர்.

’சினிமா மோகமும் திராவிட மாயையும்’ தலைப்பில் அவர் எழுதிய நூலைக் கேட்டேன். ’இப்போ கைவசமில்லை எப்படியும் உங்களுக்கு அனுப்புவேன்’ என்றார். அனுப்பாமலேயே மறைந்து விட்டார்.

ஒரு தமிழின பொழிப்பற்றாளர் மறைவு மிக வருத்தத்தைத் தருகிறது. அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆழந்தி இரங்கல். ம.அ.சந்திரன்

Parameswari Doraisamy: ஆழ்ந்த இரங்கல்

MP Tarah: எதையும் பெரிதா எடுத்துக் கொள்ளாதவர். யாருக்கும் தலை வணங்காதவர். நிறைய நல்ல நல்ல கட்டுரைகளை எழுதியவர். நல்ல மனிதர். பி. கே. குமார் அவர்கள்.

Mariamal Surinarayanan: தமிழ்ப் பள்ளிகள் இழந்துவிட்ட சிறந்த தமிழர்

Palar Thangamarimuthu: ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி

Gunaraj George: Shivaya Namaha

Prabagaran Praba: May be an image of one or more people and text that says 'ஆழ்ந்த இரங்கல்... கண்ணீர் "அஞ்சலி"'

Nyana Moorthy: ஓம் நமசிவாய

Ramayah Muru: ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரியன் குடும்பத்தினருக்கு.

Vimal Sandhanam: பார் வாழும் மட்டும் புகழ் நிலைக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Mohamedu Ali: உங்கள் கட்டுரை நன்று. சிறப்பான பதிவு. சார். என்னைத் தொடார்பு கொள்ளுங்கள். 0176837865. அலி. K.k. நன்றி.

Prabu Prabu: 🙏🙏🙏

Mohamedu Ali:
சிறப்பான பதிவு

Rajaletchumy Munusamy: 🙏🙏🙏

Thanabalen WaiRawan: ஆழ்ந்த இரங்கல் 🙏🏻ஓம் நம சிவாய🙏🏻 🙏🏻

Ayadorai Teresa: 🙏🙏🙏








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக