13 செப்டம்பர் 2021

உலகின் ஏழை அதிபர் ஜோஸ் முஜிகா

ஒரு நாட்டின் அதிபராக மிக உயர்ந்த பதவி வகித்தவர். ஆனால் அவர் பதவி விட்டுப் போகும் போது ‘போகாதீர்கள்... கடைசி வரை நீங்கள்தான் எங்களுக்கு அதிபராக இருக்க வேண்டும்’ என்று அந்த நாட்டு மக்களே கண்ணீர்விட்டு அழுதார்கள்.

அந்த வகையில் உலகின் எளிமையான அதிபர் என எடுத்துக்காட்டாய் திகழ்பவர்தான் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸ் முஜிகா (José Mujica). 40-ஆவது அதிபர்.


இப்போது அவருக்கு வயது 86. உருகுவே அரசு வழங்கிய அதிபருக்கான ஆடம்பர மாளிகையைத் தவிர்த்தவர். மனைவிக்குச் சொந்தமான பண்ணை வீட்டிலேயே வாழ்ந்து கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டார்.

அவருக்குச் சொந்தமான நிலம் இல்லை. வீடு இல்லை. ஏழ்மையிலும் எளிமையான வாழ்க்கை. அரசாங்கம் இவருக்கு மாதா மாதம் 60,000 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்குகிறது. இருப்பினும் அந்தப் பணத்தில் 90%, அதாவது 54,000 ரிங்கிட்டை ஏழைகளுக்கும் அறக் கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்கி விடுகிறார்.

இன்றும் தன் பண்ணைத் தோட்டத்தில் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டு சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார். மனைவியுடன் சேர்ந்து மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.


இவர் உருகுவே நாட்டின் போராட்டவாதி. துப்பாமாரோஸ் (Tupamaros) கொரிலா படையின் முக்கியப் புள்ளியாக இருந்தவர். நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் போராடியவர். 12 ஆண்டுகள் சிறைவாசம்.

ஒரே ஒரு கார்தான் சொத்து. 2010-ஆம் ஆண்டு ஜோஸ் முஜிகா தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த போது, 1987-ஆம் ஆண்டில் வாங்கிய ‘வோக்ஸ் வேகன் – பீட்டில்’ காரை மட்டுமே தன் சொத்தாகக் காட்டினார். அதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.

இந்தக் காரை நாட்டின் அருங்காட்சியத்தில் வைப்பதற்கு மக்கள் நிதி திரட்டினர். அதற்குள் ஒரு மில்லியன் டாலருக்கு யாரோ ஒருவர் ஏலம் எடுத்து விட்டார். அந்தப் பணத்தில் தனக்கு ஒரு காசுகூட வேண்டாம் என்றும்; அந்தப் பணத்தை ஏழை அறவாரியங்களுக்கு வழங்குமாறு ஜோஸ் முஜிகா சொல்லி விட்டார்.


பதவி விட்டு விலகியதும், அரசாங்கம் அவருக்குச் சில பாதுகாவலர்களை வழங்கியது. இருந்தாலும் இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள் போதும்; என்னைப் பிடிக்காதவர்கள் இந்த நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் என் உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்கிறார்.

2010-ஆம் ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் உருகுவே நாடின் அதிபராக இருந்தவர். 2015-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார். பதவிக் காலம் முடிந்து, அரசு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தன் சொந்த பண்ணை வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது ஆயிரக் கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் நின்று கண்ணீர் மல்க அவரை வழி அனுப்பி வைத்தார்கள். இப்படியும் ஓர் அதிபரா? இவர் ஒருமுறை இக்கரை மலை நாட்டிற்கு வந்தால் சிறப்பு.


அரசியல் வியாதிகள் எப்படி எப்படி எல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவித்து இருக்கிறார்கள்; நாட்டை எப்படி எல்லாம் கூறு போட்டு விற்கிறார்கள் என்று பார்த்துவிட்டு சென்றால் நல்லது. கக்கன் அவர்களின் மறுபிறவியாக இவரைப் பார்க்கிறேன்.

இவரைப் பற்றி ஒரு முழுக்கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் வெளிவரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.09.2021


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக