02 செப்டம்பர் 2021

புற்றுநோயை எதிர்த்துப் போராடிய மனிஷா கொய்ராலா

தமிழ் மலர் - 02.09.2021

போராடினேன். போராடினேன். போராடிக் கொண்டே இருந்தேன். போராட்டமே தோற்றுப் போகும் அளவிற்குப் போராடினேன். அந்தப் போராட்டத்தின் உச்சத்தில் தான் வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இப்படிப்பட்ட எதார்த்தமான உண்மைகளைச் சொல்பவர் பிரபல திரைப்பட நாயகி மனிஷா கொய்ராலா.


மலாய் மொழியில் ‘மனிஷ்’ எனும் ஒரு சொல். இனிப்பு என்று பொருள். அந்த இனிப்பிற்கு இனிக்கும் சேர்க்கும் இனிய பெண் தான் மனிஷா கொய்ராலா.

புகழ், பெருமை, விளம்பரம் என்று எல்லாமே உச்சத்தில் இருக்கும் போது இவரைப் புற்று நோய் தாக்கியது. கர்ப்பப் பையில் புற்று நோய்.

இப்படியே இறந்து விடுவோமோ. இல்லை பிழைத்துக் கொள்வோமா? நாளைய தினம் கண் விழித்துப் பார்ப்போமா? தெரியவில்லை. எதிர்காலத்தின் மீது பயம். வாழும் ஒவ்வொரு நாளின் மீதும் பயம்.

பயம் தெளிந்ததும் யோசித்தார். நோயைக் கண்டு விலகி ஓடாமல் நேரடியாக எதிர்க்கத் தயாரானார். முட்டி மோதுவோம். என்னதான் வரப் போகிறது. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என்கிற மனநிலைக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொண்டார்.


உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்றார். ஓர் ஆண்டு புற்றுநோய் மையத்தில் சிகிச்சை. 11 மணி நேர அறுவை சிகிச்சை. அடுத்த ஆறு மாதங்களுக்கு கதிர்ச் சிகிச்சை.

பணம் செலவானது ஒரு புறம். ஆனால் வலிகள் அதிகம். மனத்தளவில் நம்பிக்கை இல்லை. உடல் சக்தி முழுவதையும் இழந்து விட்டது போல உணர்வுகள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புற்றுநோயை தன் உடலில் இருந்து விரட்டி அடித்து இருக்கிறார்.

மீண்டு வந்து புதிய உலகத்தில் கால் வைக்கும் போது மருத்துவர்கள் மேலும் ஓர் அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்கள். ‘வெரி சாரி. உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. கர்ப்பப் பையை எடுத்து விட்டோம்’ என்றார்கள்.


ஏற்கனவே நோயின் தாக்கத்தால் தலையை மொட்டை அடித்து இருந்தார்கள். இப்போது அவளுடைய வாழ்க்கை வாரிசுக் கனவையும் மொட்டை அடித்து விட்டார்கள். மன்னிக்கவும். அதற்குக் காரணம் மருத்துவர்கள் அல்ல. நோயின் தாக்கம். நோயின் கொடூரம்.

இருப்பினும் மனிஷா கொய்ராலா மனம் தளரவில்லை. வந்தது வரட்டும். போராடிப் பார்ப்போம் என்று இன்று வரையிலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். அந்தப் போராட்டத்தில் சிரித்து மகிழ்ந்து சின்னப் பிள்ளையாய் வலம் வருகிறார். இப்போது இவருக்கு வயது 51.

அப்போதும் சரி; இப்போதும் சரி; திரைப்படத் துறையில் மின்னுபவர்களில் பெரும்பாலோரின் அடுத்த இலக்கு அரசியலாகத் தான் இருக்கும். ஜொலிக்கும் காலத்திலேயே அரசியல் பேசத் தொடங்கி விடுகிறார்கள். வெற்றி பெறுவது என்பது இரண்டாம் பட்சம். மோதிப் பார்ப்போமே என்று மோதிப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்திய அளவில் மிகப் பெரிய ’பேஷன்’. எம்.ஜி.ஆர். தொடங்கி பாக்கியராஜ், விஜயகாந்த், கமலஹாசன், சரத்குமார், கார்த்திக் வரையில் அந்தப் பாவனையைப் பார்க்கலாம். சிவாஜி, நம்பியார், சிவகுமார், முத்துராமன் போன்றவர்கள் விதிவிலக்கு.

ஆனால், மனிஷா கொய்ராலா அப்படி அல்ல. செல்வாக்கான அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர். தன்னுடைய அழகாலும்; தன்னுடைய திறமையாலும்; தன்னுடைய முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். ரசிகர்களின் மனங்களில் சாவதானமாய்ச் சம்மணம் போட்டவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், 2012-ஆம் ஆண்டில் அவருடைய கணவரும் விலகிச் சென்றார். அதாவது மனிஷா கொய்ராலாவிற்கு கர்ப்பப் பையில் புற்று நோய் இருப்பது தெரிய வந்ததும் கணவர் விலகிச் சென்றார் என்று சொல்லப் படுகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் அவருடைய சொந்த பந்தங்கள் பக்கத்திலேயே இருந்தனர். அவருடைய காசு பணத்திற்காகச் சிலர் பாசமழை பொழிந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களையும் அடையாளம் தெரிந்து கொண்டு, இப்போது ஓரடி தள்ளி நின்றே பழகி வருகிறார். தன்னுடைய குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுடன் பழகுவதைக் குறைத்துக் கொண்டார்.

பொதுவாகவே திரைப்பட நடிகைகளைப் பற்றி நான் கட்டுரை எழுதுவது இல்லை. ஆனால் மனிஷா கொய்ராலா என்பவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டிப் போய் நிற்கிறார். ஒரு போராட்டவாதியாக என் கண்களில் படுகிறார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டமாகத் தெரிகிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு போராட்டப் பெண்ணாக இவரைப் பார்க்கின்றேன்.

அது மட்டும் அல்ல. நோயில் இருந்து மீண்டு வந்ததும் புற்றுநோய் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். பெண்கள் பலருக்கு நிதி உதவிகள் செய்து உள்ளார்.


ஏழைகளுக்காக மூன்று அனாதை ஆசிரமங்களைக் கட்டி, பராமரித்து வருகிறார். தவிர நேபாளத்தில் ஏழை மாணவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தையும் கட்டி இருக்கிறார். ஒரு கிராமத்தில் பத்து மரப் பாலங்களையும் கட்டி கொடுத்து இருக்கிறார்.

ஆக ஒரு நடிகை என்பதையும் தாண்டி ஒரு சமூகச் சேவகியாகப் பயணிப்பதால் இவர் நம் நெஞ்சங்களில் சம்மணம் போட்டு விடுகிறார்.

யார் ஒருவர் மற்றவர்களுக்காகத் தன்னலம் கருதாமல் உதவிகள் செய்கிறார்களோ; அவர்களை நாம் அடையாளப் படுத்த வேண்டும். வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மனிஷா கொய்ராலா. சின்ன வயதிலேயே பெரிய நோய். மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார். அவரே சொல்கிறார்: மிகுந்த வேதனை. மிகுந்த வலி. மிகுந்த பயத்துடன் இருந்தேன். மீண்டு வந்தேன்.

நான் சொல்வது இதுதான்: வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள். வாழ்க்கையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த பரிசு.

மனிஷா கொய்ராலா (Manisha Koirala) 16 ஆகஸ்ட் 1970-இல் பிறந்தவர். 51 வயது. பரதநாட்டியம், மணிப்பூரி நடனங்கள் கற்று அறிந்தவர். நேபாளத்தைச் சேர்ந்தவர்.


இவரின் தாத்தா, பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா. நேபாளத்தின் முன்னாள் பிரதமர். தந்தையார் பிரகாஷ் கொய்ராலா. நேபாளத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இவரின் தம்பி சித்தார்த். ஒரு நடிகர்.

1989-ஆம் ஆண்டு, மனிஷா கொய்ராலா, நேபாள சினிமாத் துறையில் அறிமுகமானார். 1991-ஆம் ஆண்டில், சாடுகர் எனும் இந்தி படத்தின் மூலம், பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1995-ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்க்கிய `பாம்பே' படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல். அதன் பின்னர் தமிழ், இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்தார். புகழின் உச்சிக்குச் சென்றார்.

கமல்ஹாசனுடன் `இந்தியன்', ரஜினிகாந்த் ஜோடியாக `பாபா', அர்ஜூனுடன் `முதல்வன்' எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரை உலகில் ஒரு கலக்கு கலக்கினார்.

2010-ஆம் ஆண்டில் தொழிலதிபர் சாம்ராட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டில் விவகாரத்து. திருமணத்தின் மூலம் அன்பை எதிர்பார்த்தார். பெரும் ஏமாற்றம்.

பணம் இருக்கும் இடத்தில் அன்பை எதிர்பார்க்க முடியாது என்று சொல்வார்கள். உண்மையாக இருக்கலாம். எந்தக் கட்டத்திலும் தன் சுயமரியாதையை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். இன்றும் இருக்கிறார்.


நடிகையாக உயர்ந்து வரும் போது தான் கர்ப்பப் பையில் புற்றுநோய். இறக்கும் கட்டம். புற்றுநோயால் அவதிப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தவர்.

புற்றுநோய் போராட்டம் குறித்து அவர் சொல்கிறார். ’புற்று நோய் தாக்குவதற்கு முன்னால், என் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை மதிப்பு மிகுந்ததாக இருந்தது.

புற்றுநோய் வந்த போது அதை எதிர்த்துப் போராடினேன். போராடினேன். போராடிக் கொண்டே இருந்தேன். என் நோய் மற்றவர்களுக்கு ஒட்டிக் கொள்ளும் என்று சொந்த பந்தங்களில் பலர் விலகிச் சென்றார்கள்.

மற்ற பெண்களைப் போல குழந்தை பெற முடியாது. ஆகவே, 2017-ஆம் ஆண்டில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஓய்வு நேரத்தில் நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்பு, படிப்பது, எழுதுவது, படங்கள் பார்ப்பது, பயணம் செய்வது தவிர குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறார்.


புற்றுநோய் தாக்குவதற்கு முன் பல படங்களில் புகைப்பிடிப்பது போல நடித்தவருக்கு, நோயின் கொடுமையில் சிக்கியதும் தான், புகையினால் ஏற்படும் தீங்கு பற்றி உணர்ந்ததாகச் சொல்கிறார்.

இருப்பினும் மற்ற மற்ற நோய்களைப் போல புற்று நோயையும் குணமாக்க முடியும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களின் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

’என்னை யாராவது இவர் புற்று நோயில் இருந்து மீண்டு உயிர் வாழ்பவர்’ என்று முத்திரை குத்தினால், அதைப் பற்றி நான் துளியும் கவலைப் படமாட்டேன். ஒரு ரோஜா தன் நிறத்தை முற்றிலுமாய் இழக்கப் போகிறது என்பதை உணர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன்? ஒன்றுமே இல்லை. இப்போதுதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். குறைகள் என்பது உடம்பில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்றும் மனிஷா கொய்ராலா சொல்கிறார்.


’ஹீல்டு’ எனும் புத்தகம் எழுதி உள்ளார். புற்று நோயில் இருந்து மீண்டு வந்து பத்து வருடங்கள் முடிந்து விட்டன. மனிஷா கொய்ராலா சந்தித்த பயம், ஏமாற்றம், நிச்சயமற்றத் தன்மை; அதில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட முறை என அந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளார். படித்துப் பாருங்கள்.

1999-ஆம் ஆண்டில் நேபாளம் நாட்டின் சார்பில், ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக மனிஷா கொய்ராலா நியமிக்கப் பட்டார். நேபாள நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்கு எதிராகப் போராடியவர். பெண்கள் நலப் பொது சேவைகளையும் செய்து வருகிறார்.

பெண்கள் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கப் போராட வேண்டும். உயிரே போய்விடலாம் எனும் நிலை வந்தாலும், அஞ்சாமல் எதிர்கொண்டு முன்னேற வேண்டும். ஒரு சிறிய தயக்கம் போதும். நம் நம்பிக்கையை உடைத்துவிடும் என்று மனிஷா சொல்கிறார்.

மனிஷா கொய்ராலா, சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமைகின்றார். தன்னம்பிக்கைத் துளிராய்த் விளங்கும் இவர் ஆண்கள் போற்றும் பெண்ணாய் வாழ்கின்றார். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.09.2021

 

31 ஆகஸ்ட் 2021

மெர்டேகா 2021 நினைவலைகள் - கிள்ளான் தமிழர்கள் (1940)

தமிழ் மலர் - 31.08.2021

இனம், மொழி, சமயம், சடங்கு, சம்பிரதாயம் எதையும் பார்க்காமல் மக்களுக்காகப் போராடியத் தமிழர்கள் அப்போது இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சின்னத் திருத்தம்.

அப்போது இருந்தவர்கள் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். இப்போது உள்ளவர்களில் சிலரும் பலரும் வீட்டுக் கடன்களுக்காக உழைக்கிறார்கள். மன்னிக்கவும்.


பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டுமே சேவை மனப்பான்மைதான். ஒன்று நாட்டு மக்கள். இன்னொன்று மனைவி மக்கள்.

ஆக நாட்டைப் பார்ப்பவன் வீட்டைப் பார்ப்பது இல்லை. வீட்டைப் பார்ப்பவன் நாட்டைப் பார்ப்பது  இல்லை. சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். கவலை இல்லை. எரிமலைகள் நேரம் காலம் பார்த்துச் சீறுவது இல்லை.

விசயத்திற்கு வருகிறேன். அப்போது நல்ல நல்ல மனிதர்கள் வாழ்ந்தார்கள். நம்முடைய நெஞ்சங்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மனித உரிமைகளுக்காகத் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். சுருங்கச் சொன்னால் அவதாரப் புருசர்கள்.

அப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டார்கள். ஒரு சிலர் அரசியல் சுயநலவாதிகளால் மறைக்கப்பட்டு விட்டார்கள். அதனால் இப்போதைய இளைஞர்களும் அவர்களை மறந்தும் விட்டார்கள். 


ஆனாலும் அவர்களை மறக்கலாமா. சொல்லுங்கள். அவர்களை நாம் மறக்கக் கூடாது. மறக்கவே கூடாது. அவர்களைப் பற்றிய சாசனங்களை வருங்காலச் சந்ததியினருக்காக விட்டுச் செல்ல வேண்டும். பெரிய புண்ணியம்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி. மலேசிய நாட்டின் விடுதலை நாள். மலேசிய மக்களின் நினைவு நாள். அந்த நாளில் மறக்கப்பட்ட மலாயாத் தமிழர்களை நினைவு கூருவோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நினைவார்ந்த கடமையாக நினைத்துப் பெருமை கொள்வோம்.

நமக்கு தெரிந்த சுதந்திரம் எது என்றால், அது நம்முடைய மலேசியத் தந்தை துங்கு. அடுத்து நம் மலேசியத் தமிழர்களின் தந்தை துன் சம்பந்தன். மெர்டேகா என்று சொன்னதுமே இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு நன்றாகத் தெரிகின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். போராட்டங்கள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.


மோட் கூலாவ், தோக்கோ அங்கூட் போன்றவர்கள்; ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்பதைப் பற்றி கடந்த காலம் பதில் சொல்லும்.

ஆனால் அவர்களுடைய பெயர்கள் இன்றும் வெளிச்சமாய் பிரகாசிக்கின்றன. வரலாற்று ஏடுகளில் புகழராம் செய்யப் படுகிறார்கள். வாழ்த்துவோம்.

அதே சமயத்தில் மறக்கப்பட்ட தமிழர்கள் பலர் உள்ளனர். கூலிக்கு மாரடிக்கும் கம்பத்து மீன்களையும் வாழ வைக்க தங்களையே அர்ப்பணித்தவர்களை மறக்கலாமா?

ஒரு பட்டியலைத் தருகிறேன். இவர்களில் எத்தனைப் பேர் உங்களுக்குத் தெரியும். நினைவு படுத்திப் பாருங்கள்.

மலாக்கா ராஜா முதலியார்,
தம்புசாமி பிள்ளை,
தம்பிப் பிள்ளை,
காசிப்பிள்ளை,
டாக்டர் லட்சுமியா,
சிபில் கார்த்திகேசு,
பாஸ்தியான் பிள்ளை,
பி.சி. சேகர்,
மேரி சாந்தி தைரியம்,
பி.கே.எம்.மேனன்,
சுவாமி சத்தியானந்தா,
க. குருபாதம்,
ஜும்மாபாய்,
அப்புராமன்,
ஜானகி ஆதிநாகப்பன்,
ஜான் திவி,
தேவாசர்,
தேவகி கிருஷ்ணன்,
சத்யாவதி நாயுடு,
ஆர். ரமணி,
டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம்,
ராசம்மா பூபாலன்,
பரம் குமாரசாமி,
அன்னை மங்களம்,
மகாதேவ் சங்கர்,
கா. அண்ணாமலை,
தனபாலசிங்கம்,
மணி ஜெகதீசன்,
ராஜாமணி,
ராம ஐயர்,
கெங்காதரன் நாயர்,
ஜி. சூசை,
புஷ்பா நாராயணன்,
கே.எஸ். மணியம்,
சங்கீதா கிருஷ்ணசாமி,
முத்தம்மாள் பழனிச்சாமி,
முர்பி பாக்கியம்,
பிரியா விஷ்வலிங்கம்,
ராணி மாணிக்கா,
மணியம் மூர்த்தி,
மோகன்தாஸ்,
மகேந்திரன்,
ஜோசப் ஹரிதாஸ் தம்பு,
டேவிட் ஆறுமுகம்,
அந்தோனி செல்வநாயம்.

பட்டியல் இன்னும் தொடர்கிறது. தொடர்ந்தால் ஏடும் கொள்ளாது. வீடும் கொள்ளாது.

அந்த வகையில் மலாயாத் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடி உயிர்விட்ட இரு தமிழர்கள் இருக்கிறார்கள். இருவருமே நம் மனதை விட்டு நீங்காத வரலாற்றுக் காவியங்கள்.

ஒருவர் மலாயா கணபதி. இன்னொருவர் வீரசேனன். இவர்களுடைய பெயர்கள் விளங்க வேண்டும். வெளிச்சத்திற்கு வர வேண்டும். அதுதான் நம்முடைய ஆசை ஆதங்கம் எல்லாமே.

தொழிலாளர்ச் சமூகம் வஞ்சிக்கப் படக்கூடாது என்பதுதான் மலாயா கணபதி - வீரசேனன் இருவரின் தலையாய நோக்கமாக இருந்தது. அதற்காக அவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.

ஒருவருக்குத் தூக்குக் கயிறு. மற்றவருக்குத் துப்பாக்கிக் குண்டுகள். இந்தக் கட்டுரையில் மலாயா கணபதி அவர்களை அறிமுகம் செய்கிறேன். இவர்களுடன் போராடிய கிள்ளான் தமிழர்களையும் நினைவில் கொள்வோம்.

மலாயா கணபதி என்பவர் மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். வரலாற்றுச் சுவடுகளில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர்.

அன்றைய மலாயாவில் துகில் உரியப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மூன்று இனங்களுக்காக இரத்தம் சிந்திய ஒரு சமூக நீதியாளர். நல்ல ஒரு சமூகச் சிந்தனையாளர்.

இந்திய தேசிய இராணுவத்தில் துப்பாக்கிகளைத் தூக்கியவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிர்த்துப் போராட்டம் செய்தவர். முப்பது வயதிலேயே தூக்குமேடையை எட்டிப் பார்த்தவர். அவர்தான் எஸ். ஏ. கணபதி என்கிற மலாயா கணபதி. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் சகாப்தம்.

தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையாரின் பெயர் ஆறுமுகம். தாயாரின் பெயர் வைரம்மாள்.

கணபதிக்குப் பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கக் கல்வியைச் சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே சமூகச் சேவைகளில் தீவிரமாக  ஈடுபாடு காட்டினார்.

ஜப்பானியர் காலம். இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி மலாயாவுக்கு வந்தார். இந்தியத் தேசிய இராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் எனும் தற்காலிகச் சுதந்திர அரசாங்கம் அமைக்கப் பட்டது.

அந்த அரசாங்கத்தை இந்தியத் தேசிய இராணுவத்தினர் நடத்தி வந்தனர். அதில் கணபதி ஒரு பயிற்றுநராகச் சேவை செய்தார்.

இந்தச் சமயத்தில் தாப்பா, கம்பார் பகுதிகளில் ஆர்.ஜி.பாலன் என்பவர் பொதுவுடைமைக் கொள்கையின் தீவிரமான ஆதரவாளர். 1948 மே மாதம் 30-ஆம் தேதி பிடிபட்டு ஈப்போ சிறையில் அடைக்கப் பட்டார்.

சிறையில் இருக்கும் போதே மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி அவரைக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்தது. இது பலருக்குத் தெரியாத உண்மை. அப்போது சின் பெங் தலைமைச் செயலாளராக இருந்தார். சி.டி.அப்துல்லா என்பவர் மலாய்ச் சமூகப் பிரிவின் தலைவராக இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆகப் பெரிய பதவியை வகித்த ஒரே தமிழர் ஆர்.ஜி.பாலன் அவர்களே. கணபதி இரண்டாம் நிலையில் இருந்தார்.

மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்தியப் பிரிவில் மேலும் இருவர் இருந்தனர். ஒருவர் சி.வி.குப்புசாமி. இவர் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியின் தகவல் பிரசாரப் பிரிவுத் தலைவர். இன்னொருவர் குரு தேவன். இவர் கம்யூனிஸ்டுக் கட்சியின் இரகசியப் புலனாய்வுத் துறையின் தலைவர்.

மலாயாத் தொழிற்சங்கங்களின் பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். 1900-களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.

தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மலபாரிகள் எல்லாம் ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். மச்சான் மாப்பிளே என்று ஒரே பாயில் படுத்துப் புரண்டவர்கள் தான்.

பினாங்கு புறமலையில் கரும்பை வெட்டி ஜுஸ் செய்து குடித்தவர்கள் தான். ரசுலா கப்பலில் ரசகுல்லா சாப்பிட்டவர்கள் தான். அவர்களில் சிலர் தோட்டத்து டஸ்மாக் கடைகளில் காஞ்சிப் போன கருவாட்டைச் சுட்டுத் தின்றவர்கள் தான்.

ஆனால் இப்போது என்ன. நான் உளுந்து நீ உளுத்தம் பருப்பு என்று சமூக வேறுபாடுகலுக்குச் சாயம் பூசிச் சந்தோஷப் படுகிறார்கள். என்ன செய்வது. காலம் செய்கிற கொடுமை. வேதனையாக இருக்கிறது. சரி.

அந்தக் கட்டத்தில் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்சி “முன்னணி” எனும் தமிழ்த் தாளிகையை வெளியிட்டு வந்தது.

அதன் ஆசிரியராகவும் மலாயா கணபதி பணி புரிந்தார். இந்தச் சமயத்தில்தான் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மலாயா கணபதி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்தியப் பிரதமர் நேருவின் தலைமையில் ஆசிய நட்புறவு மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. மலாயாப் பேராளர்களில் ஒருவராக மலாயா கணபதி கலந்து கொண்டார். அதன் பின்னர் 1948-ஆம் ஆண்டு மலாயா விடுதலைப் படையிலும் இணைந்தார்.

மலாயாத் தொழிலாளர்களின் உரிமைகள்; மலாயா மக்களுக்கு விடுதலை; இந்த இரண்டு விசயங்களுக்காகத் தான் அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளனம் பெரும் போராட்டங்களை நடத்தியது. அப்போது மலாயா கணபதி அந்தச் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார்.

1928-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப் பட்டது. பின்னர் அந்தச் சம்பளம் 40 காசாகக் குறைக்கப் பட்டது. பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.

சீனத் தொழிலாளர்களுக்கு மட்டும் நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு. அந்த வகையில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சம்பளத்தில் பாரபட்சம். இந்தியர்களுக்கு 40 காசு சம்பளம் என்றால் சீனர்களுக்கு 60 காசு சம்பளம். ஆனாலும் ஒரே மாதிரியான வேலை.

மஞ்சத் தோல் ஒசத்தியா. கறுப்புத் தோல் ஒசத்தியா. பருப்பு கலரும் மஞ்சள். சாம்பார் கலரும் மஞ்சள். அப்புறம் என்ன. பருப்பா? சாம்பாரா? போராட்டம் தொடங்கியது.

இதைக் கண்டித்து கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940-இல் நடந்தது. மலாயாவின் முதல் இந்தியத் தொழிற்சங்கம்.

அதற்கு முழு ஆதரவாளராக விளங்கியவர் ஆர். எச். நாதன். இவர் 1938-இல் ’தமிழ் நேசன்’ நாளிதழின் ஆசிரியர்ப் பகுதியில் பணிபுரிந்தவர்.

அடுத்து கிள்ளான் இந்தியத் தொழிலாளர்கள் களம் இறங்கினார்கள். 10 காசு சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம். அப்புறம் என்ன. தோட்ட நிர்வாகங்கள் சும்மா இருக்குமா. தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன.

முதலாளியின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாரும் தோட்டத்திற்குள் வரக்கூடாது. நிர்வாகி கிராணிகளுக்கு முன்னால் தொழிலாளர்கள் சைக்கிளில் போகக் கூடாது. அப்படியே போனாலும் அவர்களைப் பார்த்ததும் கீழே இறங்கி நடக்க வேண்டும்.

கறுப்புக் கங்காணிகளின் அட்டகாசமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. அடிமைத் தனமான கட்டுப்பாடுகள். ஆக இந்த மாதிரியான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். சம்பளத்தில் 10 காசு உயர்த்த வேண்டும் என்று கிள்ளான் இந்தியத் தொழிற்சங்கம் முழுமூச்சாகப் போராட்டத்தில் இறங்கியது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2021

சான்றுகள்:

1.  Di sebalik tabir’ sejarah politik Malaysia 1945-1957 (Penerbit USM) - by Azmi Arifin, Abdul Rahman Haji Ismail

2.  From Social Reformist to Independence Fighter - http://sahabatrakyatmy.blogspot.com/2016/03/sa-ganapathy-from-social-reformist-to.html -

3.  A Merdeka salute to martyr S.A. Ganapathy –
http://jameswongwingon-online.blogspot.com/2006/08/merdeka-salute-to-martyr-sa-ganapathy.html

 

28 ஆகஸ்ட் 2021

தாலிபான் ஆட்சியில் தடுமாறும் பெண் உரிமைகள்

தமிழ் மலர் - 28.08.2021

1996-ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்; ஏது செய்வார்கள் என்று எவருக்குமே தெரியாது. அவர்களைக் கொண்டு வந்த அமெரிக்காவிற்கும் தெரியாது.

கடைசியில் பிளேட்டைத் திருப்பிப் போடுவார்கள் என்று அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானும் எதிர்பார்க்கவில்லை. கணிப்பு வேறு. நகர்வு வேறு. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று.


தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சொன்ன முதல் வார்த்தை ‘நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள். நல்ல பேர் எடுங்கள். ரஷ்யாவை விரட்டி விட்டு உங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு விசுவாசமாக இருங்கள்’. இப்படிச் சொல்லித்தான் தாலிபான்களை அமெரிக்கா வளர்த்து விட்டது. ஆட்சியில் உட்கார வைத்தது.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் கடுமையான சமயச் சட்டங்களை அமல்படுத்தினார்கள். தீவிரமான சமயப் பற்றை அமல் படுத்தினார்கள். ஒரு வகையில் அது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை.

’நாட்டைப் பொருளாதாரத் துறையில் முன்னேற்றுங்கள் என்று சொல்லித்தான் உங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால் நீங்கள் என்னடா என்றால் வேறு துறையை வளர்ப்பதில் தான் முனைப்பாக இருக்கிறீர்கள்’ என்று அமெரிக்கா கொஞ்சமாய்க் கோபித்துக் கொண்டது.

தாலிபான்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு பல கோடி கோடி டாலர்களை அமெரிக்கா செல்வு செய்து விட்டது. நவீன ஆயுதங்களைக் கொடுத்து; நன்றாகப் பயிற்சிகளைக் கொடுத்து; நன்றாகப் பழக்கியும் விட்டது. இருந்தாலும் போட்ட காசு திரும்பி வர வேண்டாமா. அதனால் செல்லமாய்க் கடிந்து கொள்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.


இப்போது தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளார்கள். அப்போதும் அதே பல்லவி. இப்போதும் அதே சரணங்கள் தான். அப்போது பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. இப்போதும் மறுக்கப் படுகிறது.

பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. அப்போதும் அதுவே. இப்போதும் அதுவே.

பெண் குழந்தைகளுக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அதன்பிறகு சமயக் கல்வியைத் தவிர பொதுக் கல்விக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் கல்வி கற்பதற்கே தடை என்றால் வேலை செய்வது எல்லாம் எப்படி?

(Ban on women studying at schools, universities or any other educational institution. Taliban have converted girls' schools into religious seminaries.)

முன்பு காலத்திய தாலிபான் ஆட்சியில் ஆண்கள் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் வேலை செய்யக் கூடாது. அப்போது அந்த மாதிரி ஒரு தடை. இப்போது பெண்கள் வேலைக்குப் போவதற்கும் தடை. ஆக பெண்கள் வேலை செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விட்டது.


முந்தைய ஆட்சியில், 1996 செப்டம்பர் 30-ஆம் தேதி, தலிபான்கள் அனைத்துப் பெண்களுக்கும் வேலைக்குச் செல்ல தடை விதித்தனர்.

அப்போது அரசு ஊழியர்களில் 25 விழுக்காட்டினர் பெண்கள் ஆகும். அந்த வகையில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் வேலை இல்லாமல் பாதிக்கப் பட்டனர்.

(Complete ban on women's work outside the home, which also applies to female teachers, engineers and most professionals. Complete ban on women's activity outside the home unless accompanied by a mahram (close male relative such as a father, brother or husband.)

(http://www.rawa.org/rules.htm - Some of the restrictions imposed by Taliban on women in Afghanistan)

ஆண் கடைக்காரர்களுடன் பெண்கள் பழகுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women dealing with male shopkeepers.)

பெண்களின் கல்விக்குத் தடை விதிக்கப் படுவதால் பள்ளியில் பயின்ற பெண்பிள்ளைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அனைத்துப் பெண்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் பெண்களாக இருந்ததால், அவர்களுக்கும் வேலை இழப்புகள்.

1996-ஆம் ஆண்டில் தாலிபான்கள் காபூல் நகரத்தை கைப்பற்றியதும், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதன் விளைவாக, அந்தப் பள்ளிகளை நம்பி வாழ்ந்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் காபூலில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றன. பெண் ஆசிரியர்களின் குடும்பங்கள் தான் ஏராளம்.

இப்போது 2021-ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளனர். பழைய பாவனையில் எது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்தும் வருகிறது.

இதில் கருத்துச் சொல்ல நமக்குத் தகுதி இல்லை. அவர்களின் ஆட்சி. அவர்களின் அதிகாரம். அவர்களின் அரசு கொள்கைகள்.

இந்தப் பக்கம் மட்டும் என்னவாம். யார் யாரோ வருகிறார்கள். யார் யாரோ போகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. நம்ப வீட்டையே சுத்தம் பார்க்க முடியவில்லை. இதில் பக்கத்து வீட்டுச் சுத்தம் பற்றி பேசுவதில் என்னங்க நியாயம் இருக்கிறது. ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளில் துண்டு விழும் போது தான் பிரச்சினையே தோன்றுகிறது.

இப்போதைய தாலிபன்களின் ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், அடிப்படையிலான உரிமைகளில் பாதிப்புகள் ஏற்படும் போது அதிகமாகவே கலக்கம்.

பெண்களுக்கு என்று தாலிபன்கள் வகுத்து வைத்து இருக்கும் சட்ட விதிமுறைகள், இந்த நவீனக் காலத்தில் கிரகித்துக் கொள்ளச் சிரமமாக உள்ளது. அவர்களின் சமய நம்பிக்கை ஆப்கானிஸ்தானிய பஸ்தூன் பூர்வீக மக்களின் சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

தாலிபான்கள் இப்போது கடைப்பிடிக்கும் பெண்களுக்கான விதி முறைகள் 1992-ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்து விட்டன. அந்த விதி முறைகள் ரஷ்யாவிற்கு எதிர்த்துப் போராடிய ரப்பானி - மசூத் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டவை ஆகும்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே விதி முறைகள் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டன. அந்தச் சட்டங்களில் ஒரு சில சட்டங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அனைத்துலக ஊடகங்களின் வெளிவந்த தகவல்களின் சான்றுகளைக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. மற்றபடி சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லை.

ஆப்கானிஸ்தானியப் பெண்கள் பொதுவில் நடமாடும் போது எல்லா நேரங்களிலும் கட்டாயமாகப் பர்தா (burqa) அணிய வேண்டும்.

’ஒரு பெண்ணுக்குச் சொந்தம் இல்லாத ஆண்கள், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் போது தீய எண்ணங்களுக்கு வழி வகுக்கலாம்’ என்று காரணம் சொல்லப் படுகிறது.

(Gohari, M. J. (1999). "Women and the Taliban Rule". The Taliban: Ascent to Power. Karachi: Oxford University Press. pp. 108–110)

பெண்கள் குதிக்கால் சப்பாத்து (high-heeled shoes) அணியக் கூடாது. நடக்கும் போது சப்பாத்தில் இருந்து வரும் சத்தம் ஆண்களின் கவனத்தைச் சிதறடிக்கலாம் என்று காரணம் சொல்லப் படுகிறது.

கணுக்கால் மூடப் படாமல் உடை அணிந்தால் பொதுவில் கசையடி கொடுக்கப்படும்.

(Whipping of women in public for having non-covered ankles. Ban on women wearing high heel shoes, which would produce sound while walking. A man must not hear a woman's footsteps.)

பொதுவான இடங்களில் பெண்கள் சத்தமாகப் பேசக் கூடாது. அந்நியர்கள் பெண்களின் குரலைக் கேட்கக் கூடாது. அதற்காக இந்த ஏற்பாடு என்று தாலிபான்கள் சொல்கின்றனர்.

ஒரு பெண் குழந்தைக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அவளுடைய நெருங்கிய இரத்த உறவு தவிர, வேறு எந்த ஓர் ஆண்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடாது. இந்த விதிமுறையை இப்போது கொண்டு வந்து இருக்கிறார்கள்.

(Griffin, Michael (2001). Reaping the Whirlwind: The Taliban movement in Afghanistan. London: Pluto Press. pp. 6–11, 159–165.)

பெண்கள் தங்கள் தந்தை, சகோதரன் அல்லது கணவன் எனும் ஆண் துணையுடன் தான் வெளியில் செல்ல வேண்டும். தனி ஆளாகச் செல்ல முடியாது.

ஒரு வகையில் பார்த்தால் பெண்கள் வீட்டுக் கைதிகளாக வாழ வேண்டிய நிலை. ஒரு முறை ஓர் ஆப்கானியப் பெண்மணி தெருவில் தனியாக நடந்ததற்காகத் தலிபான்களால் கடுமையாகத் தாக்கப் பட்டார்.

அப்போது அந்தப் பெண் சொன்னது: ’என் தந்தை போரில் கொல்லப் பட்டார். எனக்கு கணவர் இல்லை. சகோதரர் இல்லை. மகன் இல்லை. இந்த நிலைமையில் நான் தனியாக வெளியே செல்ல முடியா விட்டால், நான் எப்படித்தான் வாழ்வது?’

பெண்கள் புர்கா அணியாமல் வெளியே போகக் கூடாது. அப்படி வெளியே  போவதாக இருந்தால் இரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் சாலைகளில் நடக்க வேண்டும்.

ஒரு வீட்டில் தரைத் தளம் அல்லது முதல் தளத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் சன்னல்களைத் திரைத் துணிகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கண்ணாடி ஜன்னல்களாக இருந்தால் சாயம் அடித்து மறைக்க வேண்டும்.
வெளியில் உள்ளவர்கள் பார்த்தால் அறைக்குள் நடமாடும் பெண்களின் உருவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.

(Compulsory painting of all windows, so women can not be seen from outside their homes.)

பெண்களை வைத்துப் புகைப்படம் எடுக்கக் கூடாது. செய்தித் தாள்கள், புத்தகங்களில் பெண்களின் படங்களைக் காட்சிப் படுத்தக் கூடாது.

(Ban on women's pictures printed in newspapers and books, or hung on the walls of houses and shops. Photographing, filming and displaying pictures of females in newspapers, books, shops or the home was banned.)

நாடு முழுவதிலும் இருக்கும் அழகு நிலையங்களைத் தாலிபான்கள் மூடி விட்டார்கள். நெயில் பாலிஷ் என்று சொல்லப்படும் நகப்பூச்சு செய்து கொள்ள பெண்களுக்குத் தடை விதிக்கப் படுகிறது.

(Ban on the use of cosmetics. Many women with painted nails have had fingers cut off.)

கடைகளிலும் சரி; வீடுகளிலும் சரி; பெண்களைப் படம் எடுப்பதற்கும்; அந்தப் படங்களைக் காட்சிப் படுத்துவதற்கும் தடை செய்யப் படுகிறது. கடைகளில் பெண்களின் புகைப்படங்கள் அறவே இருக்கக் கூடாது.

(Latifa (2001). My Forbidden Face: Growing up under the Taliban. New York: Hyperion. pp. 29–107)

பெண்கள் எனும் சொல்லைக் கொண்டு எந்த ஓர் இடத்திற்கும் பெயர் இருந்தால் உடனடியாக மாற்றம் செய்யப் படுகிறது.

எடுத்துக்காட்டாக, பெண்கள் பூங்கா (women's garden) என்று பெயர் இருந்தால், அந்தப் பெயர் வசந்தப் பூங்கா (spring garden) என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது.

பெண்கள் தங்கள் குடியிருப்புகள் அல்லது வீடுகளின் முற்றத்தில் நிற்கக் கூடாது. தெரு நடமாட்டங்களைக் கவனிக்க தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women appearing on the balconies of their apartments or houses. )

வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பெண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

(Ban on women's presence in radio, television or public gatherings of any kind.)

திடலில் பெண்கள் தனியாக ஓடி ஆடி விளையாட முடியாது.

(Ban on women playing sports or entering a sport center or club.)

1998-ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல். அங்கு அரசு நடத்தும் மிகப் பெரிய அனாதை இல்லம். அதன் பெயர் டாஸ்கியா மஸ்கான் (Taskia Maskan).

அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது அந்த இல்லத்தில் வசித்த 400 சிறுமிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியே செல்ல அனுமதிக்கப் படாமல் உள்ளே அடைக்கப் பட்டு இருந்தனர். சரி.

சைக்கிள் அல்லது மோட்டர் சைக்கிள் போன்றவற்றைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. பயணிக்கவும் அனுமதி இல்லை.

(Ban on women riding bicycles or motorcycles, even with their mahrams.)

ஒரு பெண்ணுடன் கணவன் துணையாக வரவில்லை என்றால் டாக்சியில் பயணம் செய்ய முடியாது.

பேருந்து, டாக்சி போன்ற பொதுப் போக்குவரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயணம் செய்ய முடியாது. தாலிபான்களின் முன்னைய ஆட்சியில், பெண்களுக்கு என்று தனியாகப் பேருந்து, மினிபஸ் சேவைகள் இருந்தன. அந்த வழக்கம் மீண்டும் அமலுக்கு வருகிறது.

முந்தைய தாலிபன்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களின் உடல்நல விசயங்களில் கடுமையான பாதிப்பு.

அதாவது ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது. (Ban on women being treated by male doctors.) பெண் மருத்துவர்கள் தான் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

அதன் காரணமாக ஆபத்து அவசர வேளைகளில், முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் பெண்கள் பலர் உயிரிழந்து உள்ளனர்.

இசை கேட்பது தடைசெய்யப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் தான். திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களைப் பார்க்க அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

(Banned listening to music, not only for women but men as well. Banned the watching of movies, television and videos, for everyone.)

அரசு பெண் ஊழியர்கள்; ஆசிரியைகள் விசயத்தைப் பார்ப்போம். பெண் பிள்ளைகளுக்கான கல்வி நிறுத்தப் படுவதாலும்; பெண்கள் அரசு ஊழியர் சேவையில் இருந்து நீக்கப் படுவதாலும் 30,000 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு தாலிபான் தலைவர் முகமது உமார் சொல்கிறார்: ’பெண் அரசு ஊழியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள்; இவர்களின் சேவை நிறுத்தப் பட்டாலும் அவர்களுக்கு மாதந்தோறும் ஏறக்குறைய 5 அமெரிக்க டாலர்கள் (25 ரிங்கிட்) ஊதியம் வழங்கப் படுகிறது.

தாலிபான்கள் புதிய 2021 ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் ஓர் ஆசிரியையின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 1500 ரிங்கிட். ஆக இப்போதைய 25 ரிங்கிட்டை வைத்துக் கொண்டு அந்த ஆசிரியைகள் என்னதான் செய்யப் போகிறார்கள்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு பாதிப்புகள்தான் பெரிதும் உணரப் படுகின்றன. காபூல் நகரத்தில் மட்டும், முந்தைய தாலிபான் ஆட்சியில் 106,256 மாணவிகள்; 148,223 மாணவர்கள்; மற்றும் 8,000 பெண் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். 7,793 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 63 பள்ளிகள் மூடப்பட்டன.

அண்மைய புள்ளி விவரங்களின்படி 90 இலட்சம் ஆப்கான் பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹெராத் நகரில் தாலிபான்கள் பல பள்ளிகளை அழித்து விட்டனர். அதனால் 20 இலட்சம் பெண் குழந்தைகள் தங்களின் கல்வியை இழந்து விட்டனர். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் முந்தைய ஆட்சியில், கட்டாயத் திருமணங்கள்; பாலியல் சித்ரவதைகள்; சந்தையில் பெண்கள் விற்பனை போன்ற கொடுமைகள் எல்லாம் நடந்து உள்ளன.

இது மட்டும் இல்லை. முந்தைய ஆட்சியில், இன்னும் எவ்வளவோ உள்ளன. ஒரு பெண் தன் விரல் நகங்களுக்கு நகப் பூச்சு வைத்துக் கொண்டாள் என்பதற்காக 1996-ஆம் ஆண்டு தாலிபான்கள், அவளுடைய கட்டை விரலையே வெட்டி விட்டார்கள்.

மிக அண்மையில், 2021 ஜூலை மாதம், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் இடத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர், இறுக்கமாகச் சிலுவார் போட்டதற்காகச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சியில் ஆப்கானியப் பெண்களின் உரிமைகள் தடுமாறின. இன்றைய ஆட்சியில் தடுமாறுகின்றன. இனி எப்படியோ தெரியவில்லை.
நல்லதே நடக்க வேண்டும்; பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.08.2021
 
சான்றுகள்;

1. UN Secretary-General interim report on human rights in Afghanistan by Mr. Felix Ermacora, Special Rapporteur of the Commission on Human Rights, November 8, 1994 - http://www.rawa.org/gallery.html

2. Bureau of Democracy, Human Rights, and Labor (1998-01-30). "Afghanistan Country Report on Human Rights Practices for 1997". US Department of State.

3. Allan Nacheman (2001-05-03). "Afghan women tell tales of brutality, terror at hands of Taliban". AFP.

4. Amnesty International (1997-06-01). "Women in Afghanistan: The violations continue".

5. Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) (1997-03-30). "Afghan woman stoned to death for adultery".

6. World: South Asia, Albright warns Taleban on women - http://news.bbc.co.uk/2/hi/south_asia/466739.stm

7. Taliban Killed Young Woman For Wearing Tight Clothing - https://gandhara.rferl.org/a/afghanistan-taliban-woman-killed/31393873.html

8. Indian Author Sushmita Banerjee killed by Taliban in Afghanistan - https://news.biharprabha.com/2013/09/indian-author-sushmita-banerjee-killed-by-taliban-in-afghanistan/

நூல்கள்:

1. The Taliban's War on Women: A Health and Human Rights Crisis in Afghanistan (PDF). Physicians for Human Rights. 1998. ISBN 1-879707-25-X.

2. Skaine, Rosemarie (2002). The Women of Afghanistan under the Taliban. MacFarland & Company. ISBN 0-7864-1090-6.

3. Mehta, Sunita, ed. (2002). Women for Afghan Women: Shattering Myths and Claiming the Future. Palgrave Macmillan. ISBN 1-4039-6017-8.

4. Women of Afghanistan in the Post-Taliban Era: How Lives Have Changed and Where They Stand Today. MacFarland & Company. ISBN 978-0-7864-3792-4.