13 செப்டம்பர் 2020

கலிங்கா சீமா ராணியார் அழகுப் போட்டி

இந்தோனேசியா, ஜாவா தீவு மக்கள் கலிங்கா எனும் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பெரியவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்குக் கலிங்கா என்று பெயர் வைப்பதிலும் பெருமை கொள்கிறார்கள். கலிங்கா என்பது தங்களின் பூர்வீகத்து அடையாளம் என்று சொல்கிறார்கள்.

பள்ளிப் பாட நூல்களில் கலிங்கா; மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; தருமநகரம்; சைலேந்திரம்; சிங்காசாரி என அனைத்துப் பேரரசுகளின் வரலாறுகள் பாடமாகப் போதிக்கப் படுகிறது. இந்தோனேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தோனேசியா இந்திய வரலாற்றுக்கு என்று தனி ஆய்வுத் துறைகளை உருவாக்கி டாக்டர் பட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

தவிர கலிங்கா எனும் பெயரில் பல்வேறான அழகுப் போட்டிகளையும் நடத்துகிறார்கள். மிஸ் கலிங்கா (Miss Kalingga); வீரா கலிங்கா (Wira Kalingga); ரதி கலிங்கா (Ratu Kalingga); ஜோம் கலிங்கா (Jom Kalingga); ராணி சீமா இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) என்று அழகுப் போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் பட்டியலில் ஆண்களுக்கும் கலிங்கா ஆணழகன் கட்டழகுப் போட்டியும் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) எனும் கலை அழகுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். 2013-ஆம் ஆண்டு Solo International Performing Art (SIPA) எனும் போட்டி. ஆங்கிலத்தில் The Legend, History of World Culture di Studio Seven Touch. சீமா மகாராணியாரின் பெயரில் ஒரு பங்களிப்பு.

மகாராணியார் சீமா 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கா பேரரசின் மகாராணியார். கலிங்கா பேரரசு இந்தோனேசியா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. சீமா மகாராணியின் ஆட்சி ஒரு பொற் காலம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.


2012-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த அந்த அழகுப் போட்டியின் இறுதிச் சுற்றில் ரேச்சல் ஜார்ஜியா சந்தானி (Rachel Georghea Sentani) எனும் ஜாவானிய இளம் பெண் தேர்வு பெற்றார். மற்ற மற்ற ஆண்டுகளிலும் போட்டிகள் நடைபெற்று உள்ளன. ஆகக் கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்தோனேசிய மக்களின் வரலாற்று உணர்வுகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவை. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.09.2020

சான்றுகள்:

1. https://m.solopos.com/sipa-2013-finalis-putri-indonesia-jadi-maskot-418731

2. https://blog.tiket.com/en/sipa-solo-international-performing-arts/

3. https://authentic-indonesia.com/blog/solo-international-performing-arts-2019/


12 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் ஆங்கிலேய இதிகாசங்களில் - 2

 தமிழ் மலர் - 12.09.2020

மலாயாவில் ஆங்கிலேயர்களின் அதிகார ஆளுமைகளைப் பார்ப்பதற்கு முன்பு, அவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி ஒரு சின்ன தகவல். ஆங்கிலேயர்கள் அமெரிக்காவில் மட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் பருத்தி வியாபாரம் பார்த்தவர்கள். பருத்தி பருத்தியாய்ப் பணத்தைச் சுரண்டிக் கொண்டு போனவர்கள். 


ஆசியாவில் இருந்து தேயிலையைக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் இருந்த கோதுமை அரிசியை இங்கே கிழக்குப் பக்கமாய்க் கொண்டு வந்து கொட்டினார்கள்.

அடுத்து அடிமை வியாபாரத்திற்கு அரிச்சுவடியும் எழுதினார்கள். சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த சிவப்பு இந்தியர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும்; எங்களைக் கேட்டுத்தான் விழும் என்று வீரவசனம் பேசினார்கள்.

அண்ணாந்து பார்த்தால் ஆகாசம். மல்லாந்து படுத்தால் தமிங்கிலோ வாசம் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பேர் போட்டு விட்டார்களே. அது வரைக்கும் ஆங்கிலேயர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.


ஆங்கிலேயர்கள் இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் வெள்ளைக்கார அதிகாரிகளையும் 60,000 வீரர்களையும் வைத்துக் கொண்டு முப்பது கோடி இந்தியர்களை ஆட்டிப் படைத்து ஆங்கிலேய அர்ச்சுவடி எழுதி இருக்கிறார்கள். இது என்ன சாதாரண விசயமா. சொல்லுங்கள்?

இந்த இடத்தில் ஒன்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் பரப்பளவு 244,755 சதுர கி.மீ. மலேசியாவின் பரப்பளவு 332,370 சதுர கி.மீ. அதைவிட பற்பல மடங்கு பெரியது இந்தியா.

அப்பேர்ப்பட்ட அந்த இந்தியாவை ஐம்பதே ஆண்டுகளில் அடித்துப் பிடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டார்களே. மறக்க இயலுமா.

பர்மாவில் இருந்த மலைஜாதிக் கற்களைக் கொண்டுவர ஆட்களை அனுப்பினார்கள். மலாயாவில் இருந்த காடுகளை வெட்டித் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள்.

சிங்கப்பூரில் இருந்த பாசா காடுகளைத் திருத்தி காபிச் செடிகளை நட்டு வைக்க ஆட்களை அனுப்பினார்கள். கிறிஸ்மஸ் தீவுகளின் சுரங்கங்களை வெட்டி 'பாஸ்பேட்' எனும் உப்பு உலோகம் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

தென் ஆப்ரிக்காவில் காட்டுப் புதர்களை அழித்து கரும்புத் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள். மாலைத் தீவுகளின் ஆழ்கடலில் முத்துகள் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

மடகாஸ்காரின் மலை அடிவாரங்களில் வாசனைத் தாவரங்கள் நடுவதற்கு ஆட்களை அனுப்பினார்கள். பிஜி - சாலமான் தீவுகளின் உடலுழைப்புப் பண்ணைகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அங்கே அனுப்பப் பட்டவர்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து போன இந்தியர்கள். அனுப்பியவர்கள் ஆங்கிலேயர்கள்.

சொந்த பந்தங்களைப் பிரிந்து போனவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். போனவர்கள் பெரும்பாலும் தென் இந்தியர்கள். இப்போது மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் மூத்தத் தலைமுறைகளின் வழித்தோன்றல்கள் தான்.

அவர்களின் மூதாதையர் அங்கேயும் இங்கேயும் எப்படி வேதனைப் பட்டு இருக்கிறார்கள் என்பதை இப்போதைய இளம் சந்ததியினர் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling) எனும் ஓர் ஆங்கிலேய எழுத்தாளர் இருந்தார். மிகவும் புகழ் பெற்றவர். அவர் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்தார்.

அவர் எழுதிய 'ஜங்கல் புக்' எனும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. பலர் படித்து இருக்கலாம். கிராமப்புற வாசனைகள் நிரம்பியது. இந்தியாவைப் பற்றிய உண்மையான வாசகங்கள்.

இருந்தாலும் ஆங்கிலேயத் தத்துவார்த்தக் கற்பனைகள். அதில் 'மவுகிலி' எனும் கதாபாத்திரம். படித்தவர் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக் கொண்டு இருக்கும். அந்த மவுகிலி கதாபாத்திரம் கடைசியில் வனவிலங்கு அதிகாரியாக மாறுகிறார். விக்டோரியா மகாராணியாரிடம் இருந்து ஓய்வூதியம் பெறுகிறார்.

ஒரு கற்பனைக் கதையில்கூட ஆங்கிலேயர்களின் தலைமைத்தனம் ஊறுகாய் போல அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சமாய்த் தொட்டுக் கொள்ளப் படுகிறது. பார்த்தீர்களா.

ஆங்கிலேயர்களுக்கும் மலாயா மக்களுக்கும் நேரடியான, நெருக்கமான சமூகத் தொடர்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலேய மன்றங்கள், கழகங்கள், விடுதிகள் போன்றவற்றில் மலாயா தமிழர்கள் உறுப்பியம் பெற முடியாது.

ஆங்கிலேயர்களின் அலுவலகங்களுக்குள் நுழைய முடியாது. அவர்களின் விடுதிகளுக்குள் தமிழர்கள் போகவும் கூடாது. கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று அமெரிக்காவில் அறிவிப்புப் பலகையே போட்டு இருந்தார்களாம். இது எப்படி இருக்கு?

அந்த மாதிரி இந்தியாவிலும் அறிவிப்புப் பலகை போட்டு இருக்கிறார்கள். காஷ்மீர் சிம்லாவில் நடந்த உண்மை. அங்கேதான் ஆங்கிலேயர்களின் கோடைகால உல்லாச மாளிகைகள் இருந்தன.

இந்திய மக்கள் ஆங்கிலேயர்களைப் போல சட்டை சிலுவார் போட்டுத் தெருவில் நடப்பது எல்லாம் முடியாது. தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்படியே மீறி நடந்தால் கசையடிகள். அபராதங்கள். தண்டனைகள்.

இந்தியர்கள் நுழையக் கூடாத தனிப்பட்ட விடுதிகளில் ஜாமீன் தாரர்கள், சாகிப்புகள், குட்டி குட்டி ராஜாக்கள், குறுநிலத்து மன்னர்கள் போன்ற மேலிடத்துப் புள்ளிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.

இத்தாலிய விஸ்கி, பாரிஸ் வாயின், ரஷ்ய வாட்கா, ஜமாய்க்கா ரம், பெல்ஜிய பீர் என்று மதுபான வகையறாக்கள் ஆறாய் ஓடின. இளம் பெண்கள் குலுங்கி ஆடும் போது வக்கிர மொழிகள் சிப்பிக்குள் இருந்து நளினமாக வெளியே வந்து எட்டி எட்டிப் பார்த்து இருக்கின்றன. சரி. இந்தப் பக்கம் பார்ப்போம்.

சத்தியமாகச் சொல்கிறேன். இங்கே மலாயாவில் தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அநியாயமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களை வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். சான்றுகள் இருக்கின்றன.

அந்தச் சுவடுகளின் தாக்கம் தான் மலாயாத் தோட்டங்களில் வாழ்ந்த ஆரம்ப கால தாத்தா பாட்டிகளையும் ரொம்பவுமே பாதித்து இருக்கிறது.

கிராணிகளைக் கண்டால் சைக்கிளை விட்டு கீழே இறங்கி சலாம் போடுவது. காலில் போட்டு இருக்கும் சிலிப்பரைக் கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்வது. வேட்டியைத் தூக்கி கோவணமாகப் பின்னிக் கொள்வது. மண்டோர்கள் எகிறும் போது மண்ணில் விழுந்து மன்னிப்பு கேட்பது.

கறுப்புத் தோல் வெள்ளைத் தோல் மேனேஜர்கள் அடித்துச் சாற்றும் போது அவர்களுடைய கால்களைக் கட்டிப் பிடித்துக் கெஞ்சுவது. கண்ணீர் வடிப்பது. இப்படி நிறைய உண்டு. மலாயா தமிழர்களை ஆங்கிலேயர்கள் மிகவும் ஏளனமாக நினைத்து கேவலமாக நடத்தி இருக்கிறார்கள்.

இந்தியர்களைப் படிப்பு இல்லாதவர்கள். மிரட்டினால் பதுங்கிப் போகிறவர்கள். உலகத் தரத்திற்கு உயர்ந்து வர முடியாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அந்தக் கோட்பாட்டுக்குச் சூடம் சாம்பிராணி காட்டி தூபம் போட்டு இருக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் எல்லாம் ஒன்றுதான். மொத்தத்தில் ஒரு கொத்தடிமை வாழ்க்கை.

ஆங்கிலேய இதிகாசங்களில் மலாயா தமிழர்களின் வரலாறும் ஒரு பகுதியே. இருந்தாலும் அந்த வரலாறு நீண்டு நெடியது. ஆங்கிலேயர்களின் மலாயா காலனித்துவ ஆட்சியில், மலாயா தமிழர்கள் எழுந்து வரமுடியாத அளவிற்கு அடிமைகளைப் போல அமுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளிகளைப் பறித்து எடுத்து; சாக்குப் பைகளில் போட்டு; மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே அழைத்து வரப் பட்டார்கள்.

அவர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய்ப் பணத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள். ஜிங்கு ஜிக்கான் பாடி பழைய ஆளாகி விட்டார்கள்.

கடைசியில் மலேசிய இந்தியர்களுக்குப் ’பை பை’ காட்டி அவர்களை அனாதைகளாகப் பரிதவிக்க விட்டுச் சென்றது தான் வரலாற்றுக் கொடுமை.

மலாயா சுதந்திரம் அடைந்தது. ஆனால் மலாயா தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இனவாதமும் மதவாதமும் தலை விரித்து ஆடுகிறது. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மலேசிய வரலாற்றில் மலேசியத் தமிழர்கள் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள். அந்தச் சாதனைகள் அனைத்தும், காலத்தால் மறக்க முடியாத காலச் சுவடுகள். வரலாற்று வேதங்கள் வார்த்து எடுக்க முடியாத வரலாற்றுப் படிமங்கள்.

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு தெரியாது. என்ன பொறுக்கி எடுக்கிறது தான் பெரிய இலச்சை புடிச்ச வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த ராகங்கள். வேறு எப்படித்தான் சொல்லுவதாம்.

தமிழகத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே மசாஜ் செய்து இருக்கிறார்கள். அது மட்டுமா. அப்போது அங்கே கிடைத்த ’லைவ் பாய்’ சவர்க்காரத்தைப் போட்டு நன்றாகவே குளிப்பாட்டியும் விட்டு இருக்கிறார்கள்.

உதறல் எடுத்த அந்தச் சாமானிய மக்களை நன்றாகவே துவைத்துக் காயப் போட்டு இருக்கிறார்கள். அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை.

இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களின் குளிர்க் காய்ச்சல் நடுக்கத்தைத் தான் சொல்ல வருகிறேன்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடுங்கள் எனும் ஐஸ்கட்டி ஆலாபனைகள் வேறு. மன்னிக்கவும் காம்போதி ராகங்கள்.
 
எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். அவர்கள் சமாளிக்க வேண்டுமே.

பச்சைக் காடாய்க் கிடந்த ஒரு நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலாயா தமிழர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி இன உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

இதில் மலேசியத் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கிறோம் என்று காலம் காலமாக நானா நீயா போட்டிகள். அந்தச் சாக்கில் ஆயிரம் ஆயிரம் கட்சிகள். தடுக்கி விழுகிற இடம் எல்லாம் கட்சிகள். கட்சிகள். விட்டால் எதிர்க்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கட்சி வந்தாலும் வரலாம். விடுங்கள். இது மலேசிய இந்தியர்களின் போன ஜென்மத்து கர்ம வினைகள்.

ஒரே வார்த்தையில் சொன்னால் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; மலேசியத் தமிழர்களின் வரலாறு சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் கடந்த மலேசிய தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

ஒன்று மட்டும் உண்மை. மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாய் வந்தவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். அதை மறக்காமல் இருந்தால் சரி.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய அந்த வாயில்லா பூச்சிகளுக்கு முதல் மரியாதை செய்வோம். சிரம் தாழ்த்துகிறேன்.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020




கலிங்கா மக்கள் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கா (Kalinga) எனும் மாநிலம் லூசோன் (Luzon) தீவில் உள்ளது. அதன் தலைநகரம் தாபூக் (Tabuk). முன்பு அந்த மாநிலத்தின் பெயர் கலிங்கா – அப்பாயாவோ (Kalinga-Apayao). 1995-ஆம் ஆண்டு கலிங்கா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பரப்பளவு 3,231 சதுர கி.மீ.
(YvesBoquet, Berlin 2017)

இது ஒரு மலைப் பிரதேசம். பலாபாலன் (Balbalan); லுபுவாகான் (Lubuagan); பாசில் (Pasil); பினுபுக் (Pinukpuk); திங்கலாயான் (Tinglayan); தானுடான் (Tanudan) மலைகள் உள்ளன.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் 1500 மீட்டர் உயரத்தில் மலைக் காடுகளில் வாழ்கிறார்கள். இவர்களிடம் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது. உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்கிறார்கள். இவர்களின் முகத் தோற்றங்களில் இந்திய மண்வாசனை தெரிகின்றது.

காதுகளில் பெரிய பெரிய தோடுகளைப் போட்டுக் கொள்கிறார்கள். பெரிய பெரிய கழுத்து ஆபரணங்களையும் அணிந்து கொள்கிறார்கள். வண்ண வண்ண ஆடைகளைப் பாரம்பரிய உடைகளாக அணிந்து கொள்கிறார்கள். இவர்கள் ஒரு வகையான பொங்கல் அறுவடை நாளையும் திருவிழா நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

தங்களைக் கலிங்கர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறார்கள். இந்தக் கலிங்கப் பூர்வீக மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்வதைத் தவிர்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகத் தனித்தே வாழ்கின்றனர். முன்பு காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் கொரில்லா சண்டைகள். ஸ்பானிய போர் வீரர்கள் போய் சண்டையை நிறுத்தி இருக்கிறார்கள்.

இங்கு வாழ்ந்த கலிங்கா இளம் பெண் 2019-ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டிக்கு பிலிப்பைன்ஸ் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் பற்றி சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் கீழ்கண்டவாறு உறுதிப் படுத்துகிறார்.

ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு நடைபெற்றது. அசோகரின் கலிங்கக் கொலைவெறி ஆட்டத்தில் இருந்து தப்பித்த பல ஆயிரம் பேர் கடல் மார்க்கமாகத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் பிலிப்பைன்ஸ் தீவிற்கும் புலம் பெயர்ந்து இருக்கலாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸ் சமவெளிகளில் வாழ்ந்து வந்த உள்ளூர் பிலிப்பைன்ஸ் மக்களுக்குப் பயந்து மலைக்காடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்.
(Sadasivan, Balaji Sadasivan 2011)

இந்தத் தகவல் சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் அவர்களின் கருத்து.

பண்டைக் கால இந்தியாவின் ஒரிசா, ஆந்திரா, வட தமிழ்நாட்டுப் பகுதிகள் கலிங்க அரசு என்று அழைக்கப் பட்டது. அதை மகா மேகவாகனப் பேரரசு என்றும் அழைப்பார்கள். கி.மு. 250 தொடங்கி கி.பி. 400 வரை ஆட்சியில் இருந்த பேரரசு.

கி.பி. 400-ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலிங்கப் பேரரசு இந்திய வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. வெகு காலமாய் அதைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போயின.

மறுபடியும் 7-ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்தப் பேரரசு புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரிசா; ஆந்திர பிரதேசங்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
(IJARMSS 2016)

பின்னர் 8-ஆம் நூற்றாண்டில் கலிங்கப் பேரரசு பர்மாவைக் கைப்பற்றியது. அந்தக் காலக் கட்டத்தில் கலிங்க நாட்டவர் இலங்கை, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் (லூசோன்) போன்ற நாடுகளில் குடியேறினார்கள். ஆங்காங்கே சிற்றரசுகளை உருவாக்கினார்கள்.
(Janette P. Calimag 2016)

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் இருக்கும் கலிங்கர்கள் எனும் பூர்வீகக் குடிமக்கள் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் இதுவரையிலும் மிகத் துல்லியமாகக் கிடைக்கவில்லை.

இருப்பினும் கலிங்கர்கள் என்று அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் கலிங்கா எனும் ஒரு மாநிலத்தை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்து உள்ளது.
 
8-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் தான் கலிங்கர்கள் தீபகற்ப மலேசியாவில் குடியேறி இருக்கலாம். இது 8-ஆம் நூற்றாண்டு மலாயாப் புலம் பெயர்வு.

ஆதிகால மலாயா தமிழர்கள் இந்தக் கலிங்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இங்கே இருந்து தான் கெலிங் எனும் சொல்லும் மலாயா மக்களிடம் பரவி இருக்கலாம்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர மன்னர்களின் பரம்பரையினர் கலிங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் சயாம் பகுதியில் இருந்த நிலப் பகுதிகளை ஆட்சி செய்தார்கள். அதே சமயத்தில் தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
(6. Coedes, George 1968. Walter F. Vella)

7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா ஜாவா தீவில் கலிங்கப் பேரரசு எனும் ஓர் அரசு உருவானது. இந்தியாவின் கலிங்கப் பேரரசின் பெயரே இந்தோனேசியாவின் கலிங்கப் பேரரசிற்கும் வைக்கப் பட்டது.

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறது.
(Drs. R. Soekmono, 1973)

ஆக அந்தக் காலக் கட்டத்திலும் இந்தோனேசியாவில் இருந்து இந்தியர்கள் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்தோனேசியா வரலாற்று ஆசிரியர் பூர்வாந்தாவின் ஆய்வறிக்கையில் இருந்து இங்கே பதிவு செய்யப் படுகிறது.
(H Purwanta 2012)

சான்றுகள்:

1. Source: Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Pg. 79)

2. International Journal of Advanced Research in ISSN: 2278-6236. Management and Social Sciences Impact Factor: 6.284. Vol. 5 | No. 6 | June 2016 www.garph.co.uk IJARMSS | 937

3. Province: Kalinga (province). PSGC Interactive. Quezon City, Philippines: Philippine Statistics Authority. (2016)

4. Edward Dozier (1966) reports that the Kalinga divide themselves into the southern
Kalinga who reside in Lubuagan, Pasil, and Tinglayan

http://nlpdl.nlp.gov.ph:81/CC01/NLP00VM052mcd/v1/v27.pdf // Edward Dozier. The Kalinga are one of the major ethnolinguistic groups inhabiting northern Luzon.

5. The Philippine Archipelago. YvesBoquet, Berlin, (2017), Springer International Publishing. ISBN 978‐3‐319‐5925‐8, pp 62-64

6. Sadasivan, Balaji Sadasivan. (2011). The Dancing Girl: A History of Early India. pp. 135–136. ISBN 978-9814311670.

6. Coedès, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52)

7. Drs. R. Soekmono, (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd Ed (5th reprint edition in 1988 Ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 37.

8. Sneddon, James (2003). The Indonesian Language: Its history and role in modern society. Sydney: University of South Wales Press Ltd. p. 73.

9. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd. p. 216. ISBN 9781784628857.

10. H Purwanta. (2012) Sejarah SMA/MA Kls XI-Bahasa, dkk

11. https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/kalinga

12. THE MIGRANTS OF KALINGA: FOCUS ON THEIR LIFE AND EXPERIENCES (2016) Janette P. Calimag, Kalinga-Apayao State College, Bulanao Tabuk City, and Kalinga.

Citation - தகுதியுரைகள்

In the 6th century, there was a kingdom called Kalingga, name derived from the very Indian kingdom Kalinga. Kalingga was the 6th century Indianized kingdom on the north coast of Central Java, Indonesia. 6th century. Two Indianized empires - the Srivijayan Empire (683-1275 AD) and Majapahit empire (1275 to 14th century) are said to have influence on Philippines' culture.

Source: https://www.quora.com/Is-there-any-link-between-the-present-Kalinga-tribe-in-the-Philippines-and-the-Kalingas-of-ancient-India

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020



11 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் ஆங்கிலேய இதிகாசங்களில் - 1

தமிழ் மலர் - 11.09.2020

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கடல் புறா. எஸ்.எஸ். ரஜுலா. இறக்கை கட்டாமல் பறந்து வந்த கப்பல். பற்பல கடல் கொந்தளிப்புகள், பற்பல சுனாமிகள். பற்பல கடல் சூறாவளிகள். அவற்றை எல்லாம் பார்த்து வந்த கப்பல். நம்முடைய மூதாதையர்களைச் சலிக்காமல் சளைக்காமல் மலாயாவுக்குச் சுமந்து வந்த கப்பல்.

அந்தக் கப்பல் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், கன்னடர்கள், சிங்களவர்கள், சீனர்கள், சீக்கியர்கள் என்று எவரையும் பிரித்துப் பார்க்கவில்லை.

ஒரே தட்டில் சாப்பிட வைத்தது. ஒரே பாயில் படுக்க வைத்தது. ஓர் ஓரத்தில் கக்கல். இன்னோர் ஓரத்தில் கழிசல். அலைகடல் தாண்டி ஒரு சேர கரை சேர்த்த கப்பல். மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒன்றித்துப் பிணைந்து போன ஓர் அழகிய தேவதை.

In the past 130 years, the number of foreign migrant workers in Malaya has grown from about 84,000 in 1880 to more than three million in 2010.

http://suararasmi.blogspot.my/2013/02/migrant.html

தென் இந்தியாவில் இருந்து வந்த அத்தனைப் பேரையும் பினாங்குப் புறமலையில் ஒரே கூண்டுக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. கொப்பூழ்க் கொடி உறவுகளை அப்படியே இறுக்கமாகக் கட்டிப் போட்டது.

அதை ஒரு கப்பல் என்று சொல்வதைவிட மலாயாத் தமிழர்களின் கடல் தேவதை என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு எஸ்.எஸ். ரஜுலா கப்பல் மலாயா தமிழர்களின் வாழ்க்கையிலும் சொப்பனக் கனவாகி விட்டது.

தென் இந்தியத் தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் மலாயாவுக்குக் கொண்டு வருவதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்:


தென் இந்தியாவும் மலாயா தீபகற்பமும் புவியல் ரீதியில் மிக அருகாமையில் இருக்கும் நிலப் பகுதிகள். கப்பல் வழியாகத் தொழிலாளர்களை எளிதாகக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. அப்படி கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் தரை மார்க்கமாகத் தாயகத்திற்குத் தப்பிச் செல்ல முடியாது.

கால்நடையாக மலாயா, தாய்லாந்து, பர்மா காடுகளைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தென்னிந்தியாவிற்குள் செல்வது என்பது மரண சாசனத்தின் முதல் அத்தியாயம். ஆக அது நடக்காத காரியம். அது தான் முதல் காரணம்.

இரண்டாவது காரணம்:

இந்தியா எனும் துணைக் கண்டமும் மலாயா எனும் நாடும் ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. ஏற்கனவே தென் இந்தியாவின் பொருளாதாரம் ஆங்கிலேயர்களால் சுரண்டி எடுக்கப்பட்டுத் துடைக்கப்பட்டு விட்டது. ஒரே வார்த்தையில் கஜானா காலி.

ஆக தென் இந்தியாவின் ஆள்பலத்தைப் பயன்படுத்தி மலாயாவின் இயற்கைச் செல்வத்தைச் சுரண்ட முடியும் என்பது ஆங்கிலேயர்களின் அடுத்த கனவு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்:

தென் இந்திய மக்களின் வறுமை நிலை. சென்னை மாநிலத்தின் கருவூலம் ஆங்கிலேயர்களால் காலியாக்கப் பட்டதும் அதனை நம்பி வாழ்ந்த மக்கள் நிர்கதி ஆனார்கள்.

சென்னை அரசாங்கத்தின் நிதியுதவியை நம்பி வாழ்ந்த விவசாய மக்களுக்கும் பேரிடி. வாழ்வாதாரத் தடங்கல்கள். அதனால் தென் இந்திய மக்களை அடிமை போல நடத்த முடியும் என்பது ஆங்கிலேயர்களின் அசத்தல் உணர்வு. இது மூன்றாவது காரணம்.

நான்காவது காரணம்:

தென் இந்தியர்களின் சாதியக் கோட்பாடுகள். சொந்த தமிழ் இனத்தின் மீதே அதிருப்தி. பெருவாரியான தென் இந்தியர்கள் வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்களுக்கு கீழ்பணிந்து நடப்பவர்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாகப் பயணிக்கும் தன்மை. அதாவது வெள்ளைக்கார எசமானர்களிடம் மீது அவர்கள் வைத்து இருந்த அதீத விசுவாசத் தன்மை. இதுவும் ஒரு காரணம்.

இந்த நான்கு காரணங்களை முன்வைத்து தான் ஆங்கிலேயர்கள் காய்களை அழகாக நகர்த்தினார்கள். 1910-ஆம் ஆண்டுகளில் தென் இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக நலிந்த நிலை. கஜானா காலி. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாகச் சுரண்டி எடுத்துக் கப்பல் கப்பலாக இங்கிலாந்திற்குப் பார்சல் செய்து விட்டார்கள்.

அதனால் அப்போதைய தென் இந்திய மக்கள் தடுமாறித் தத்தளித்து நின்றார்கள். ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும். உள்நாட்டில் கிடைத்தாலும் சரி; அல்லது வெளிநாட்டில் கிடைத்தாலும் சரி. என்ன வேலை கிடைத்தாலும் போய்ச் செய்யலாம் எனும் தயார் நிலையில் இருந்தார்கள். சரி.

மும்பாய்க்கு அருகில் சூரட் எனும் இடம். (Surat is a city in the Indian state of Gujarat). [1] 1600 ஆம் ஆண்டு. ஒரு பாய்மரக் கப்பல் கரை தட்டியது. கப்பலின் பெயர் ’ஹெக்டர்’ (Hector). அப்போதைக்கு ஆங்கிலேயர்களின் முதுமொழி ’வியாபாரம் காலனித்துவம் அல்ல’ (Commerce not Colonization).

[1]. William Hawkins (1600) was a representative of the English East India Company notable for being the commander of Hector, the first company ship to anchor at Surat in India on 24 August 1608.


இப்படிச் சொல்லிதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள். வலது காலை எடுத்து வைத்தார்களா; அல்லது இடது எடுத்து வைத்தார்களா. தெரியவில்லை. எதற்கும் இந்தியாவில் இருக்கும் இட்லி சாம்பாரைக் கேட்டால் தெரியும். எல்லாம் வெள்ளைத் தோல்கள் தானே. உறவு விட்டுப் போகுமா. ஆனால் கடைசியில் என்ன நடந்தது தெரியுங்களா? 

இந்தியா என்கிற ஒரு புண்ணிய பூமியே கண்ணீர் விட்டு அழுதது. 19-ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் அந்தத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆங்கிலேயர்கள் இழுத்துப் பிடித்து இடுப்பில் செருகிக் கொண்டார்கள். அப்புறம் என்ன. அகில இந்தியாவிற்கே மாட்சிமை தங்கிய மகாராணி என்று ஒரு வெள்ளைத் தோல் முடி சூட்டிக் கொண்டது.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுங்களா. ஒரு முறைகூட அந்த விக்டோரியா மகாராணியார் இந்திய மண்ணில் கால் எடுத்து வைக்கவே இல்லை. ஆனால் இந்தியாவின் மாபெரும் மகாராணி. வெற்றித் திலகம் விக்டோரியா மகாராணியார்.

எங்கே எதைப் பார்த்து முட்டிக் கொள்வதோ தெரியவில்லை. கழுதை முட்டும் சுவரைத் தேடுகிறேன். கழுதையும் இல்லை. சுவரும் இல்லை. வயதும் ஓடிவிட்டது.

ஆக விக்டோரியா மகாராணியார் என்பவர் மக்களைப் பார்க்காத ஒரு கலிகாலத்து மகராசி. மன்னிக்கவும். ஒரு மகாராணியார். வானொலி, வாட்ஸ் அப், தொலைபேசி, தொல்லைக்காட்சி என்று எதுவுமே இல்லாத காலக் கட்டம். பருவக் காற்றை நம்பி, பாய்மரக் கப்பல்களில் ஐலசா பாடி வந்த காலம்.

அந்த மகாராணியார் லண்டனில் இருந்து கொண்டே அதிகாரம் பண்ணி சாதனை படைத்து இருக்கிறார். ஒரு நாட்டின் மக்களைப் பார்க்காமலேயே ஒரு நாட்டின் மகாராணியாக ஒருவர் இருந்தார் என்றால் அவர் இவராகத்தான் இருக்க முடியும். உலகம் போற்றும் சாதனை. மிக்க மகிழ்ச்சி. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யலாம்.

இந்தியாவின் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போகும் எண்ணத்துடன் தான் ஆங்கிலேயர்கள் சின்னச் சின்னத் தோனிப் படகுகளில் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் நான்கைந்து மாமாங்கங்களில் மாபெரும் கண்டத்தையே கண்டம் கண்டமாக வெட்டித் துண்டு போட்டு விட்டார்கள்.

அதோடு விட்டு விடவில்லை. சின்னச் சின்னதாகக் கூறு போட்டார்கள். இந்திய மக்களை அப்படியே இனவாரியாக மொழி வாரியாகப் பிரித்தார்கள். அதில் பலரை ஒப்பந்தக் கூலிகள் (Indentured Labor) எனும் பேரில் மலாயா, பர்மா, தென் ஆப்ரிக்கா, கரிபியன், பிஜி, ரியூனியன் தீவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

போன இடங்களில் கொத்தடிமை மொத்தடிமை என்று அந்த வெள்ளந்திகளைக் கசக்கிப் பிழிந்ததுதான் மிச்சம். இருக்கிற வரையில் அவர்களின் இரத்தத்தைச் உறிஞ்சி எடுத்தார்கள்.

மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். கித்தா மரங்களில் வெள்ளையாக வந்த பாலை அப்படியே சிகப்புக் கடுதாசியில் மாற்றி எழுதினார்கள். ஆய கலையில் அறுபத்து மூனாவது கலை.

கடைசியில் என்ன ஆனது. அந்த ஏழைகளையும் அவர்களின் வாரிசுகளையும் 'எப்படியாவது பிழைச்சுப் போங்க' என்று கைகழுவி விட்டு விட்டு ஓடியே போய்ச் சேர்ந்து விட்டார்கள். இந்தப் பெருமை ஆங்கிலேயர்களைத் தவிர வேறு யாருக்கு கிடைக்கும். சொல்லுங்கள்.

அவர்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்கள். இதில் யார் இளிச்சவாயர்கள். நான் சொல்ல வேண்டியது இல்லை. மலாயா தமிழர்களுக்குத் தெரியும். உலகத் தமிழர்களுக்கும் தெரியும். 

உலகத்தில் பாதியை ஆட்சி செய்தவர்கள் இந்த ஆங்கிலேய வெள்ளைக்காரர்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவில் பாதி, ஆசியாவில் கால்வாசி என்று கணக்குப் போடலாம். அவர்கள் ஆட்சி செய்த நாடுகளை ஒரு பெரிய பட்டியல் போடலாம்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… உலகில் 53 நாடுகளை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவற்றில் இப்போது 225 கோடி மக்கள் வாழ்கிறார்கள். உலக மக்கள் தொகை 712 கோடி என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இங்கிலாந்து ஒரு சின்ன நாடு. அந்த நாட்டைக் காட்டிலும் மலேசியா ஒன்றரை மடங்கு பெரியது. உலக வரைப் படத்தில் இங்கிலாந்து ஒரு குண்டுமணி அரிசி. அவ்வளவுதான். ஆனால் ஒரு கட்டத்தில் உலக தாதாக்கள் என்று இப்போது சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இங்கிலாந்தைப் பார்த்து ஓட்டம் எடுத்தவை.

'மண்ணும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம்... ஆளை விடுங்கடா சாமி' என்று ஒலிம்பிக் ஓட்டம் ஓடிய ஐரோப்பிய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.

ஆங்கிலேயர்களின் இதிகாசங்கள் அட்டகாசமான வரலாற்றுச் சுவடுகளை எழுதிச் சென்று உள்ளன. வியாபாரம் செய்ய வந்தவர்கள் இந்தியாவிலும் மலாயாவிலும் வாழ்ந்தவர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றிய பெருமை இருக்கிறதே… சும்மா சொல்லக் கூடாது. காலத்தால் அழிக்க முடியாத ஒரு காம்போதி ராகம்.  

மலாயா இந்தியர்கள் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆங்கிலேயர்களின் அந்த இதிகாசங்களை மறக்க மாட்டார்கள். மறக்க நினைக்கவும் மாட்டார்கள். காம்போதி ராகங்களுக்கு அனுபல்லவிகள் சேர்த்த உலக மகா மனிதர்களை எப்படிங்க மறக்க முடியும்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.09.2020



10 செப்டம்பர் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா - 2

தமிழ் மலர் - 10.09.2020

இந்தோனேசியாவின் வரலாற்றில் மற்றும் ஒரு மகாராணியார் சுகிதா. அழகான அருமையான அற்புதமான மகாராணியார். மஜபாகித் பேரரசில் ஒரு குழப்பமான நிலைமை. அரசியல் நெருக்கடிகள் அலைமோதிய காலக் கட்டம். எந்த நேரத்திலும் கழுத்திற்கு கத்தி வரும் அபாயக் கட்டம். உள்நாட்டுப் போரின் புகைச்சல் வாடை ஓயவில்லை.

மகாராணியார் சுகிதா

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலைமையில் தான் ஓர் இளம் பெண் ஒரு பேரரசிற்கே அதிபதியாகப் பதவி ஏற்கிறார். அவர்தான் மகாராணியார் சுகிதா.

இவருக்கு சொகித்தா (Soheeta) என்று மற்றொரு பெயர். சீனர்கள் இவரை சு கிங் தா (Su King Ta) என்று அழைத்து இருக்கிறார்கள். இவர் இந்தோனேசியா, ஜாவாவைச் சேர்ந்த மஜபாகித் மகாராணியார். 1390-ஆம் ஆண்டு பிறந்து இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

ஜாவா தாமார்வூலான் (Damarwulan) புராண நூல்களில் பிரபு கென்யா (Prabu Kenya) என்று சித்தரிக்கப் படுகிறார். இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் (Parameswara Ratnapangkaja).

சுகிதா மகாராணியாரின் ஆட்சிக் காலம் கி.பி. 1427 - கி.பி. 1447. இதில் கி.பி. 1427-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1437-ஆம் ஆண்டு வரை, பத்து ஆண்டுகளுக்கு தன் கணவர் இரத்தின பங்கஜனுடன் இணைந்து மஜபாகித் அரசை ஆட்சி செய்தார். ஆக மொத்தம் இருபது ஆண்டுகள் ஆட்சி.

கி.பி. 1437-ஆம் ஆண்டு கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் யாருடைய துணையும் இல்லாமல் தன்னிச்சையாக நின்று மஜபாகித் பேரரசை ஆட்சி செய்து இருக்கிறார். ஏற்கனவே மகாராணியார் திரிபுவன விஜயதுங்கா தேவி ஆட்சி செய்து இருக்கிறார். அவருக்குப் பிறகு மஜபாகித் இரண்டாவது பெண் மகாராணியார் சுகிதா.

மஜபாகித் உருவாக்கப் பட்ட காலத்தில், அதன் மேற்குப் பிரிவிற்கு விக்ரமவர்தனா அரசராக இருந்தார். கிழக்குப் பிரிவிற்கு வீரபூமி அரசராக இருந்தார்.

The mortuary deified portrait statue of Queen Suhita, the empress of Majapahit (reign 1429-1447 CE).
The statue discovered at Jebuk, Kalangbret, Tulungagung, East Java, Indonesia.
Colection of National Museum of Indon.

1406-ஆம் ஆண்டு பயங்கரமான உள்நாட்டுப் போர். ரேகிரே போர் (Regreg War) என்று சொல்வார்கள். விக்ரமவர்தனாவின் படைத் தளபதிகளில் ஒருவர் ராடன் காஜா (Raden Gajah). இவருக்கு மற்றொரு பெயர் பிரபு நரபதி (Bhra Narapati).

அந்த ரேகிரே போரில் தளபதி ராடன் காஜா, வீரபூமியை விரட்டிச் சென்று கொன்று விடுகிறார். அது மட்டும் அல்ல. வீர பூமியின் தலையை வெட்டி எடுத்து வந்து விக்ரமவர்தனாவிடம் கொடுக்கிறார்.

அதன் பின்னர் மேற்குப் பிரிவும் கிழக்குப் பிரிவும் ஒன்றாக இணைந்தன. ஒரே அரசு. ஒரே மஜபாகித். அதற்கு விக்ரமவர்தனா பேரரசர்.

Queen regnant Sri Gitarja, Tribhuwana Wijayatunggadewi

ரேகிரே உள்நாட்டுப் போர் முடிந்தது. சற்றே அமைதி. இந்தக் கட்டத்தில் பிரபு வீரபூமியின் மகள் பிரபா தகா (Bhre Daha) என்பவரை விக்ரமவர்தனா திருமணம் செய்து கொள்ளுகிறார்.

ரேகிரே போரில் கொல்லப்பட்ட வீரபூமியின் வைப்பாட்டிகளில் ஒருவருக்குப் பிறந்தவர் தான் பிரபா தகா. இந்தப் பிரபா தகாவிற்கும் விக்ரமவர்தனாவிற்கும் பிறந்தவர் தான் சுகிதா. அதாவது விக்ரமவர்தனாவின் மகள். வீரபூமியின் பேத்தி.

சுகிதா 1427-ஆம் ஆண்டு மஜபாகித் பேரரசின் மகாராணியானார். அப்போது அவருடைய கணவர் இரத்தின பங்கஜன் இருக்கிறார். சுகிதா மகாராணி ஆனதும் அவர் செய்த முதல் வேலை என்ன தெரியுங்களா? தன் தாத்தா வீரபூமியைக் கொன்ற ராடன் காஜாவைத் தேடிப் பிடிக்கும்படி கட்டளை போட்டார்.

Hayam Wuruk Maharaja Sri Rajasanagara

ராடன் காஜா எனும் பிரபு நரபதி ஆறு ஆண்டு காலம் தலைமறைவாகி காடு மேடுகளில் அலைந்து திரிந்தார். கடைசியில் பிடிபட்டார். அப்போது மஜபாகித் அரண்மனை துரோவூலான் (Trowulan) எனும் இடத்தில் இருந்தது. அந்த அரண்மனைக்கு ராடன் காஜா கொண்டு வரப் பட்டார்.

ராடன் காஜா கெஞ்சினார். விக்ரமவர்தனாவின் கட்டளையினால் தான் வீரபூமியைக் கொன்றதாகக் கூறினார். மன்னிப்புக் கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அதற்கு சுகிதா சொன்னாராம்.  

’வீரபூமி என்பவர் என்னுடைய தாத்தா. அவருடைய இரத்தம் என் உடலில் ஓடுகிறது’ என்று சொன்னாராம். பின்னர் கத்தியால் தன் கையைக் கிழித்து இரத்தம் சொட்டுவதைக் காட்டி இருக்கிறார். பின்னர் ஒரு தளபதியைக் கூப்பிட்டு அந்த இரத்தத்தை ராடன் காஜா உடலில் தடவச் சொல்லி இருக்கிறார்.

அதன் பின்னர் ராடன் காஜாவின் தலை கொய்யப் பட்டது. அவரின் உடல் காட்டில் நரிகளுக்குத் தீனியாகப் போடப் பட்டது. ராடன் காஜாவின் தலையை எடுத்துக் கொண்டு போய் யானையை மிதிக்க வைத்து இருக்கிறார்கள். 1433-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

தாத்தாவைக் கொன்றவனைப் பழி வாங்கிய பிறகு தான் மகாராணி சுகிதாவின் கோபம் அடங்கியது. சுகிதாவின் முதல் தண்டனையைப் பார்த்ததும் பலரும் பயந்து பிரமித்துப் போனார்கள். என்ன என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து போய் இருந்தார்கள். ஆனால் சுகிதா அதற்கு நேர்மாறாக நல்லபடியாக ஆட்சி செய்து இருக்கிறார்.

சுகிதா ஆட்சி செய்யும் காலத்தில் பிரச்சினைகள் இருக்கவே செய்தன. மஜபாகித்திற்கு அருகில் ஒரு ஜாவானிய இந்து அரசு. பிளம்பங்கான் அரசு (Blambangan Kingdom) என்று பெயர். மஜபாகித் அரசிற்கு இணையாகப் பலம் வாய்ந்த அரசு. மஜபாகித் அரசிற்கே சவால் விடும் அரசு.

கஜ மதன் - Gajah Mada

இந்த அரசிற்கும் மஜபாகித் அரசிற்கும் ஜென்மப் பகை. இவர்களும் சுகிதாவிற்கு அடிக்கடி பிரச்சினைகள் கொடுத்து வந்தார்கள். இருப்பினும் சுகிதா சமாளித்து விட்டார். தன் படையை வழி நடத்திச் சென்று போர் முனையில் காயம் அடைந்து இருக்கிறார்.

அந்தக் காலத்தில் மகாராணியார்கள் படைகளை நடத்திக் கொண்டு போய் போர் முனையில் சண்டை போட்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்களுக்குப் படைத் தளபதியாக நின்று போர் முரசு கொட்டி இருக்கிறார்கள். காயம், படுகாயம், உயிர் போகும் காயம் எல்லாம் அடைந்து இருக்கிறார்கள்.

இப்போது போல இராணுவ வீரர்களைச் சண்டைக்கு அனுப்பி வைத்து விட்டு, இவர்கள் மட்டும் இங்கே தனியாக ’ஏர்கோன்’ அரண்மனையில் கச்சான் கொரிக்கும் குண்டக்க மண்டக்க வேலை எல்லாம் இல்லை.

Hayam Wuruk
Maharaja Sri Rajasanagara

போர் என்று வந்துவிட்டால் இவர்களும் குதிரை மீது ஏறிப் போய் சண்டை போட வேண்டும். மகாராணியாரைச் சுற்றி பத்து நூறு பேர் தனிப் பாதுகாப்பு வளையம் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் மகாராணியாரும் வாள் பிடித்து போர் புரிவார். சரி.

ஜாவாவில் வாயாங் கூலிட் பொம்மலாட்டத்தில் மகாராணியார் சுகிதாவைப் பற்றிய புராணம் உள்ளது (Damarwulan legend). [#3] இன்றும் நாடக வடிவில் நடிக்கப் படுகிறது.

ஜாவா தாமார்வூலான் புராண நூல்களில் பிளம்பங்கான் போர் பற்றி சொல்லப் படுகிறது. அதில் சுகிதா போர் புரிந்ததைப் பற்றி வாயாங் கிலிடிக் (wayang klitik) எனும் நிழல் ஆட்டத்தில் கதையாகச் சொல்லப் படுகிறது. அதில் சுகிதாவிற்கு கெங்கனா உங்கு (Queen Kencanawungu) என்று பெயர்.

[#3]. The Damarwulan legend is associated with her reign, as it involves a maiden queen (Prabu Kenya in the story), and during Suhita's reign there was a war with Blambangan as in the legend

Source: Claire Holt. Art in Indonesia: Continuities and Change. Ithaca: Cornell UP, 1967, p. 276. Jan Fontein, R. Soekmono

Suhita depicited in 'The Empire's Throne' Documentary Film

பினாங்குங்கான் (Penanggungan); லாவு (Lawu) மலைகளின் அடிவாரத்தில் பல கோயில்களையும் கட்டி இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஜாவா, துலுங்காகுங் மாவட்டத்தில் (Tulungagung Regency) ஒரு சிலையைக் கண்டு எடுத்தார்கள். அது சுகிதாவின் சிலை என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். வலது கையில் ஒரு தாமரை மொட்டு. அரச உடையில் காது பதக்கங்கள்; கழுத்தணிகள்; வளையல்கள்; கணுக்கால், இடுப்புகளில் தொங்கவிடப்பட்ட பதக்கங்கள் கொண்ட சிலை.

1447-ஆம் ஆண்டு, 57-ஆவது வயதில் சுகிதா காலமானார். இவரின் கல்லறையும் கணவர் பரமேஸ்வரா இரத்தினபங்கஜன் கல்லறையும் சிங்கஜெயா எனும் இடத்தில் உள்ளன. இப்போது பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டு இருக்கிறார்கள். மகாராணியார் சுகிதாவிற்குப் பிடித்தமான தாமரை மலர்களை அவரின் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போகிறார்கள்.

கஜ மதன் - Gajah Mada

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் ஆணாதிக்கத்தின் அழுத்தங்களால் மறைக்கப்பட்டு இருக்கலாம்.

சுகிதாவிற்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் தியா கர்த்தவிஜயன் (Dyah Kertawijaya) என்பவர் மஜபாகித் அரசராக நியமிக்கப் பட்டார். கர்த்தவிஜயனின் மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா விஜய பரக்ரமவரதனன் (Sri Maharaja Wijaya Parakramawardhana).

இந்திய வம்சாவழியைப் பின்னணியாகக் கொண்ட இந்தோனேசியா மகாராணியார்கள் ஆறு பேர் மஜபாகித் சிம்மாசனம் பார்த்து இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் நினைவு கூர்ந்து பார்ப்போம். வாழ்த்துவோம்.

1. மகாராணியார் சீமா சத்தியா - கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. பிரேமதா வர்த்தனி மகாராணியார்- சைலேந்திரா பேரரசு கி.பி. 833 - கி.பி. 856)

2. இசையனா துங்கா விஜயா - மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா - பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி - மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகிதா - மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. மகாராணி ரத்னா காஞ்சனா - கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549)

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழிப் பெண்கள் சிலர், பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பெண்மைக்குள் ஓராயிரம் சக்திகளை உருவாக்கி உன்னதம் பேசி இருக்கிறார்கள். பெண்மைக்குள் மறைந்து இருக்கும் மகாசக்திகளுக்கு மகிமைகள் சேர்த்து வரலாறு படைத்து இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருமே மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய மாபெரும் பெண்ணரசிகள். பேரரசிகள். பெண்மையின் செல்வங்கள். பெண்மையின் உச்சங்கள். அவர்களை வரலாறும் மறக்காது. வரலாற்று உலகமும் மறக்காது. வரலாற்று மைந்தர்களும் மறக்கக் கூடாது.

அந்தப் பெருமைகள் எல்லாம் இந்திய வம்சாவழிப் பெண்களுக்கு மட்டும் அல்ல. உலகப் பெண்கள் அனைவருக்குமே அழகியச் சீதனக் கலசங்களாய் அற்புதமான நீலநயனங்கள் பேசுகின்றன.

சான்றுகள்:

1. R. Soekmono, and Satyawati Suleiman. Ancient Indonesian Art of the Central and Eastern Javanese Periods, New York: Asia Society Inc., 1971, p. 146-147

2. https://tirto.id/dyah-suhita-pemimpin-perempuan-terakhir-di-jawa-timur-cDmn

3. Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 242.

4. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.

(முற்றும்)
 
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.09.2020