18 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 65

அன்புள்ள வாசகர்களே, கடந்த சில நாட்களாக சளியும் காய்ச்சலும் கலந்து ரொம்பவும் தொல்லை கொடுத்து விட்டன. அதனால் இந்த அங்கத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. தொடர்ந்து சரி செய்யப் படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.) 31.07.2010

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 18.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

குமாரி. தர்ம ஜெகவர்த்தினி, சிம்பாங் லீமா, கிள்ளான்
கே: வர வர இந்தக் கைப்பேசியால் பெரிய தொல்லைகள் வரும் போல இருக்கிறது. அதிக நேரம் கைப்பேசியைப் பயன் படுத்தினால் மூளைப் புற்று நோய் வரும் என்று சொல்கிறார்கள். உண்மையா?

ப:
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதைப் போல அண்மைய கண்டுபிடிப்புகள் நமக்கு கவலையைக்  கொடுக்கின்றன. முதலாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியை வலது காது பக்கம் வைத்துப் பேசினால் மூளைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இடது காது  பக்கம் வைத்துப் பேசினால் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்.

இரண்டாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியின் அழைப்பு மணி அடிக்கும் போது கைப்பேசியைக் காது பக்கம் கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். மூன்றாவது. நீங்கள் யாரையாவது அழைக்கும் போது கைப்பேசி இரண்டு வாட் சக்தியை வெளியிடுகிறது. அந்தக் கட்டத்திலும் கைப்பேசியைக் காது அருகே கொண்டு போகக்கூடாது என்கிறார்கள்.

இப்படி நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொல்லையே வேண்டாம் என்று நினைத்தால் கைப்பேசியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வர வேண்டும். முடியுமா. முடியாது. அந்தக் காலத்தில் நரி முகத்தில் விழித்தார்கள். இந்தக் காலத்தில் இரண்டு கால் நரிகள் நிறைய இருப்பதால் நாலு கால் நரிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய் விட்டது.

இன்றைய இளம் தலைமுறையினர் கைப்பேசியின் முகத்தில் விழிக்கிறார்கள். திருவள்ளுவர் இப்போது இருந்து இருந்தால் "தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே கைப்பேசி அற்ற வடு" என்று பாடி இருப்பார்.

இரா.பார்த்திபன், தாமான் செம்பாக்கா, பகாவ்
கே: ஆங்கிலத்தில் Pixel என்று சொல்வதைத் தமிழில் எப்படி அழைப்பது?

ப:
Pix என்றால் Picture. அடுத்து el என்றால் element. படங்களை இந்த 'பிக்சல்' குறி
கொண்டு தான் அவற்றின் அளவைச் சொல்கிறார்கள். இந்தத் துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடுக்கப் படும் போது ஒரு படம் கிடைக்கிறது. ஒரு சின்னப் படத்தில் பல ஆயிரம் ஆயிரம் படத் துளிகள் இருக்கும். Pixel என்பதைச் சிலர் தமிழில் படத் தனிமம் என்கிறார்கள். இது சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாமே.


அற்புதசாமி பாஸ்கர், பாண்டான் இண்டா, கோலாலம்பூர்
கே: நடிகை அசின் நடித்தப் படங்களைத் தமிழ் நாட்டில் வெளியீடு செய்யக் கூடாது என்று தடை செய்து இருக்கிறார்கள். அவருக்குச் சாதகமாக ஒரு தரப்பினர் இணையத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நடிகர் சங்கம் செய்தது சரி என்று ஒரு தரப்பினர் போராட்டம் செய்கின்றனர். இணையத்தில் நடைபெற்று வரும் இந்த பனிப் போரில் உங்கள் நிலைப் பாடு என்ன?

ப:
அசின் என்பவர் ஒரு நடிகை. இருந்தாலும் நான் அவரை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறேன். மற்றவர் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் படலாம். ஆனால் என் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் பட வில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா.

இந்தியாவில் உள்ள நடிகர் நடிகையர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று தென் இந்திய நடிகர்கள் சங்கம் தடை போட்டு இருந்தது. அப்படி மீறிப் போனால் அவர்கள் நடித்த படங்கள் தமிழ் நாட்டில் தடை செய்யப்படும் என்றும் சொல்லி இருந்தது. சரி.

அசின் இலங்கைக்குப் போய் இருக்கிறார். ஓர் இந்திப் படப் பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு என்பது அவருடைய வயிற்றுப் பிழைப்பு. இதுதான் அவர் செய்த பாவம். சரி. இலங்கையில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, இன்னும் என்ன என்ன டிவி எல்லாமோ ஒளிபரப்பு செய்கிறார்களே. அதற்கு போய்த் தடை விதிக்க வேண்டியது தானே. இன்னும் ஒன்று. மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டும் இலங்கையில் தடை விதித்து இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இருக்கும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் போய் பிசினஸ் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டியது தானே. அதை விடுங்கள். ஈழத்தில் ஆயிரக் கணக்கானோர் சாகடிக்கப் படும் போது தமிழ் நாட்டுத் தலைவர்கள் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்களே. அவர்களைப் போய் கண்டிக்க வேண்டியது தானே.

அசின் போன்ற இளிச்சவாயர் கிடைத்தால் போதும். அவரைச் சகட்டு மேனிக்கு துவைத்து எடுப்பது. சல்லடை போடுவது. அப்புறம் நொந்து நூலாகிப் போனதைத் தைத்துச் சாயம் பூசுவது. இது என்ன அய்யா வேலை. அசின் என்கிறவர் ஒரு சாதாரண பெண். அவரை இட்லர், இடி அமின் ரேஞ்சுக்கு நினைப்பது தப்பு. உலக மகா மெகா குற்றவாளியாகப் பட்டம் கட்டுவதும் தப்பு. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என் தனிப்பட்டக் கருத்தைச் சொன்னேன். ஆக, இதில் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. மன்னிக்கவும். எந்த ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வயிற்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது.


ரிஷா பாசிர், தாசிக் குளுகோர், பினாங்கு
கே: கணினி நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் சின்னம் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் தேர்வு என்ன?
ப:
உங்கள் கேள்வி சற்று வித்தியாசமாக இருக்கிறது. உலகக் கணினி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களே தத்தம் பெயரைப் போடாமல் சின்னத்தைப் பயன் படுத்துகின்றன. அவற்றில் மிக மிக அழகானது ஆப்பிள் கணினி நிறுவனத்தின் சின்னம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் 1970 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்திலேயே கணினி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'ஆப்பிள்' என்று வைக்கலாமே என்று தோன்றியது. அதையே வைத்தும் விட்டார். உலகில் முதன் முதலில் வெளிவந்த கணினிகளில் ஆப்பிள் கணினியும் ஒன்று.

1970 ஆம் ஆண்டு. 20 ரிங்கிட் சம்பளத்தில் ஒரு தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலை செய்தார் ஓர் இளைஞர். இப்போது 2010ல் அந்த இளைஞரின் சொத்து மதிப்பு 200 கோடி ரிங்கிட்! கணினி உலகத்திற்கு வாருங்கள். கணினி தேவதை கண் சிமிட்டி மாய ஜாலம் காட்டுவாள்.


இரா.பெரியண்ணன், பூச்சோங்
கே: என்னுடைய கணினியில் You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வருகிறது. அதை எப்படி நீக்குவது?

ப:
நீங்கள் பயன் படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் போலியானதாக இருந்தால் அந்த மாதிரி எச்சரிக்கை வரும். விண்டோஸ் இயங்குதளம் என்றால் Windows Operating System. நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்களுடைய கணினி அமெரிக்காவில் உள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்.  கணினியின் உண்மை கண்டு பிடிக்கப் பட்டதும் அந்த எச்சரிக்கை வரும்.

சில சமயங்களில், நீங்கள் உண்மையான அசலான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன் படுத்தினாலும் இந்த அறிவிப்பு வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.  

http://www.softpedia.com/progDownload/RemoveWGA-Download-42782.html எனும் இடத்திற்குப் போய் Remove WGA எனும் ஒரு சின்ன நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் தான் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணினியில் இருந்து இயக்க  வேண்டும். பிறகு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். மீண்டும் திறக்கும் போது அந்த எச்சரிக்கை வராது. ஒரு பணிவான வேண்டுகோள்.

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் Pirated Copy எனும் கள்ளத் தனமானதாக இருந்தால் தயவு செய்து அசல் விண்டோஸ் இயங்குதளத்தை வாங்கிப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

புதிதாக கணினி வாங்கும் போது அசல் விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிக்கச் சொல்லுங்கள். Windows XP Professional விலை 320 ரிங்கிட்டிற்குள் இருக்கும். கடைக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா. ஒரே ஒர் இயங்குதளத்தைப் பல கணினிகளில் பதித்து விடுவார்கள். அதனால் கனினியின் விலையும் குறைவாக இருக்கும். அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும்.

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஏன் என்றால் கணினி வாங்குபவர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்திலேயே மிக நவீனமான கணினி வேண்டும் என்பார்கள். பாவம் கடைக்காரர்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள்.

கள்ள மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டாம். அதனால் பல பிரச்னைகள் வரும். இன்னும் ஒரு விஷயம். கள்ளத் தனமான விண்டோஸ் இயங்குதளத்தை அசல் இயங்குதளமாக மாற்றிக் கொடுக்க ஓர் எளிய முறை இருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப் படும் ஓர் உதவி. ஒரு சின்ன சேவைக் கட்டணத்தைக் கட்டி அசல் இயங்குதளமாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சலுகை விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துபவர்களுக்கு மட்டும் தான். மென்பொருள் காப்புறுதிச் சட்டத்தின் கீழ் இந்தச் சேவை செய்யப் படுகின்றது. ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை சலுகை உண்டு.

உதவி தேவைப் படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கைப்பேசியிலும் அழைக்கலாம். தயவு செய்து SMS குறும் செய்திகள் வழியாகக் கேள்விகள் கேட்க வேண்டாம். நிச்சயமாகப் பதில் கிடைக்காது. சேவைகள் மின்னஞ்சல் வழியாகத் தான் நடக்கும்.


காளியப்பன் ராமசாமி, பெங்காலான் இண்டா, ஈப்போ
கே: உலகச் சந்தையில் எந்த வகையான கைப்பேசிகள் அதிகமாக விறகப் படுகின்றன?

ப:
பட்டியல் வருகிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நோக்கியா (பின்லாந்து)
2. மோட்டோரோலா (அமெரிக்கா)
3. சம்சுங் (தென் கொரியா)
4. žமன்ஸ் (ஜெர்மனி)
5. எல்ஜி (தென் கொரியா)
6. சோனி எரிக்ஸ்சன் (ஸ்வீடன்/ஜப்பான்)

குமரன் சுப்பிரமணியம்  manithan82@gmail.com

கே: கணினியின் முகப்புத் திரையில் காணப்படும் Recycle Bin சின்னத்தைத் தவறுதலாக அழித்து விட்டேன். மீண்டும் அதனைக் கொண்டு வர முயன்றால் Shortcut  எனும் குறுக்கு வழியை மட்டுமே செய்ய முடிகிறது. உதவி செய்யுங்கள்.

ப:
Recycle Bin என்பதற்கு தமிழில் மீளகம் எனும் சொல்லை உருவாக்கி இருக்கிறேன். மீள் + அகம் எனும் வேர்ச் சொற்களைக் கொண்டது. இந்தச் சொல் தமிழுக்குப் பொருந்தி வருமா என்பதைப் பற்றி கணினிப் பற்றாளர்கள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். ஒரு முக்கியமான சின்னத்தை அழித்து விடும் அளவுக்கு அப்படி என்ன மறதி சார்.

இனிமேல் எந்தக் கோப்புகள், ஆவணங்கள், படங்களாக இருந்தாலும் சரி. அவற்றை அழிப்பதைப் பற்றி நினைத்த நேரத்திலேயே  செய்ய வேண்டாம். மூன்று விநாடிகள் பொறுத்து இருந்து அப்புறம் அழியுங்கள். அந்தச் நேரத்தில்  உங்கள் மனசு மாறலாம் இல்லையா. ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

இந்த மாதிரியான தவறுகள் நடந்து விட்டால் அவற்றைச் சரி செய்ய மைக்ராசாப்ட் நிறுவனம் தனி ஒரு நிரலியைத் தயாரித்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் Fix it for me. அதைப் பயன் படுத்தி அந்தச் சின்னத்தை முகப்புத் திரையில் வரவழைத்துக் கொள்ளலாம். நிரலி கிடைக்கும் இடம் http://support.microsoft.com/kb/810869 

இந்த மாதிரியான இணையத் தொடர்புகளை நம்முடைய http://ksmuthukrishnan.blogspot.com வலைப் பூவில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை வாசகர்களுக்கும் சுலபமாக இருக்கும்.


ராஜன் ராஜேந்திரன், லங்காவித் தீவு
கே: கணினியில் நாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று கணினி நிலை குத்தி முடங்கிக் போய் விடுகிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?

ப:
இதை Blue Screen of Death என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னை. RAM எனும் தற்காலிக நினைவியின் பிரச்னை. வன் தட்டுப் பிரச்னை. வரைகலை அட்டைப் பிரச்னை. நச்சு அழிவிப் பிரச்னை. பிரிண்டர் எனும் அச்சு சாதனம் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்னை.

புதிதாகப் பதிப்பு செய்யப் பட்ட மென்பொருள் கொடுக்கும் பிரச்னை. கணினிக்குள் அதிகம் வெப்பம் உண்டாகி விட்டால் ஏற்படும் பிரச்னை. மின்கலப் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த முறை கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னையைப் பற்றி கொஞ்சம் விளக்குகிறேன்.

கணினிக்குள்ளே பல சாதனங்கள் ஒன்று சேர்ந்து செயல் படுகின்றன. சில சமயங்களில் இவற்றுக்குள் பிரச்னை ஏற்பட்டால் கணினி இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் தனக்கு என்று ஒரு வழியை எடுத்துக் கொண்டு அந்த வழியாக அதன் இயக்கத்தை மேற்கொள்ளும். இந்த மாதிரியாக கணினிக்குள் மொத்தம் 16 வழிகள் இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு வழியை இரண்டு சாதனங்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொண்டால் கணினி இயங்குவது நின்று போகும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கணினியில் Start >> Settings >> Control Pannel >> System >> Device Manager எனும் இடத்திற்குப் போக வேண்டும்.

கணினியில் பிரச்னை கொடுக்கும் சாதனத்தின் பெயருக்கு முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி இருக்கும். Device Manager ல் Computer என்பதைச் சொடுக்கிப் பார்த்தால் அந்த 16 வழிகளுக்கான IRQ எண்கள் காட்டப்படும். அதில் ஒரே எண் இரண்டு இடங்களில் இருந்தால் பிரச்னை அங்குதான் இருக்கிறது என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

ஆக, பிரச்னைக்கு உரிய சாதனத்தை பதிப்பு நீக்கம் செய்யுங்கள். பதிப்பு நீக்கம் என்றால் Uninstall. பின்னர் மறுபடி பதிப்பு செய்யுங்கள். இப்படி செய்தால் வன்பொருள்களினால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

1 கருத்து: