28 டிசம்பர் 2011

கணினியும் நீங்களும் – 125


கயல்விழி குணசேகரன் yalvil_24@yahoo.com
கே: நாம் கணினியில் தட்டச்சு செய்வதைப் படிக்கும் நிரலி இருக்கிறதா. படிக்கும் சிறு குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.


ப: நல்ல கேள்வி. குழந்தைகள் தட்டச்சு செய்வதைப் படிக்கும் ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் Hear PC.  இது ஒரு சின்ன நிரலி. நாம் தட்டச்சு செய்ததை இந்த நிரலி படித்துக் காண்பிக்கும். அதன் வழியாக சரியான உச்சரிப்பை நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனைப் பதிவிறக்கம் செய்ய

http://www.4shared.com/file/fBpmraJ1/installhearpc.html? எனும் இடத்திற்குச் செல்லவும். Muat Turun என்பதைச் சொடுக்கி விடவும் அதில் உள்ள Speak Text  என்பதைச் சொடுக்கி விடுங்கள். நீங்கள் தட்டச்சு செய்தது ஒலிபரப்பாகும். அதுபோல் இதில் உள்ள Display Text தட்டச்சு செய்தால் நீங்கள் தட்டச்சு செய்தது தனியாகக் கணினித் திரையில் காண்பிக்கப்படும்.  பயன்படுத்திப் பாருங்கள்.

கே: சில இளம்பெண்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் பழகியதும் அவர்களுடைய கைப்பேசி எண்களைக் கொடுத்து விடுகின்றனர். கடைசியில் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகின்றார்கள். என்ன சொல்லியும் திருந்திய பாடில்லை. அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

ப: நான் என்ன அறிவுரை சொல்ல வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாகக் கிளிப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொல்லி வருகிறேன். சிலர் கேட்கிறார்கள். ஒரு சிலர் என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘லுக்கும் விடுகிறார்கள். பட்ட பிறகும் புத்தி வரமாட்டேன் என்கிறதே.  நெருப்பு சுடும் என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன சுடும்... எப்படி சுடும்... சுட்டுத்தான் பார்க்கட்டுமே என்று
எல்லாம் பிளேட்டையே திருப்பி போடுகிறார்கள். சுட்ட பிறகு ஐயோ சுட்டு புடுச்சே...  ஐயோ சுட்டு புடுச்சே... என்று ஒரே ஒப்பாரி. இதில் ஆண்-பெண் என்று வேறுபாடு எதுவும் இல்லை.

இப்படி எழுதுவதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். எல்லோரையும் சொல்லவில்லை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கைப்பேசி பேச்சு என்பது ஒரு பேச்சாகவே இருக்கட்டும். அதில் போய் குடும்பம் நடத்தக் கூடாது. ரொம்பவும் தப்பு. உங்களுக்கு என்று வீடு வாசல் இருக்கிறது. தயவு செய்து கைப்பேசி பேச்சை ஒரு பொழுதுபோக்காக மாற்ற வேண்டாம்.

இன்னும் ஒரு வேதனையான செய்தி. எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருக்கிறார். ஊர் பேர் வேண்டாம். அவருக்கு சோறு, தண்ணி வேண்டாம். கைப்பேசி மட்டும் இருந்தால் போதும்.  என்ன செய்வது. அதைக் கட்டிப் பிடித்து கசக்கிப் பிழிந்து கஞ்சி காய்ச்ச வேண்டும்.

பாவம் அந்தக் கைப்பேசி. போன பிறப்பில் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. சொல்லுங்கள். என் மீது கோபப்பட வேண்டாம். நான் சொல்வதைத்
தயவு செய்து கேளுங்கள். வயதில் மூத்தவன் என்பதால் சில அறிவுரைகளைச் சொல்ல வேண்டியது என் கடமை.

1. அவசியமின்றி யாருக்கும் கைப்பேசி எண்களைக் கொடுக்காதீர்கள்.
2. பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தையின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்யுங்கள்.
3. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். அழைப்பை எடுத்து ‘Wrong Number' என்று சொன்னாலும் ஆபத்துதான்.
4. கடலைபோடும் ஆசாமிகளை கறாராகத் தவிர்த்து விடுங்கள்.
5. நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்களும் அல்ல. கண்டிப்பாகப் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களும் அல்ல.
6. சத்தியம் செய்பவர்களை நம்பவே வேண்டாம். கடைசியில் காரியத்தைச் சாதித்துக் கொண்டு கம்பி நீட்டுவதற்குத் தான் அத்தனை ஆயிரம் சத்தியங்கள். கடைசியில் அவதிப்படுவது நீங்கள் தான்.
7. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக, சீரியலில் இறங்கி சீரியஸாக வேண்டாம். இவை தான் நம்முடைய தாழ்மையான அறிவுரைகள். போதுமா இன்னும் வேண்டுமா!  இதற்கு மேலும் அறிவுரை சொல்ல நமக்கு தெம்பு இல்லை.


கே: ஐயா, நான் ஒரு எஸ்.பி.எம். மாணவன். தொல்காப்பியம் தொடர்பான நூல் எனக்குத் தேவைப்படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும். இலவசமாகக் கிடைக்குமா?


தமிழ் மோகன் tamilanmohan@ymail.com

கே: ‘இணையம்எனும் கணினிக் கலைச்சொல்லை உருவாக்கியவர் ஒரு மலேசியர் என்று கேள்விபட்டேன். இது எந்த அளவிற்கு உண்மை?
ப: நீங்கள் கேள்வி பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் 1998ஆம் ஆண்டில் இருந்து, பல கணினி கலைச்சொற்களை உருவாக்கித் தந்துள்ளார். ‘இணையம்எனும் சொல்லை மட்டும் அல்ல; செயலர், நினைவி, நிரலி, அடிப்படைச் செயலி போன்ற பல நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தவர்.

அவர் வேறு யாரும் அல்ல. மலேசியாவில் முத்திரை பதித்த தமிழ் எழுத்தாளர் திரு.இராஜகுமாரன். அவருடைய தமிழ்ச் சேவை உலகளாவிய நிலையில் மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கின்றது.

(வாசகர்களுக்கு ஓர் அன்பான் வேண்டுகோள். என்னுடைய கைப்பேசிக்கு அழைக்கும் போது அர்த்தமுள்ள ஆரோக்கியமான கேள்விகளைக் கேளுங்கள். அண்மையில் ஒருவர் என்னை அழைத்தார்.

கே: கேள்வி கேட்கலாமா?
ப: கேளுங்கள்
கே: நிலாவில் யார் முதலில் கால் வைத்தது?
ப: இது கணினி கேள்வி இல்லையே?
கே: நீங்கதான் கேள்வி கேட்க சொன்னீங்க?
ப: நீல் ஆர்ம்ஸ்டோங்
கே: வலது காலை முதலில் வைத்தாரா? இடது காலை வைத்தாரா?
ப: வலது காலை
கே: நீங்க பார்த்தீங்களா?
ப: தம்பி, நான் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். பிறகு அழையுங்கள்
கே: நான் லாரி ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்;

பின்னர், நான் கைப்பேசியை வைத்துவிட்டேன். இரண்டு மூன்று முறை அழைத்தும் பதில் சொல்லவில்லை. இந்த மாதிரி குண்டக்க மண்டக்க மாதிரி கேள்விகள் கேட்கலாமா. சொல்லுங்கள்.

அன்பான கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்கள் கிடைக்கும். தயவு செய்து கைப்பேசியை நல்லதிற்குப் பயன்படுத்துவோம். நன்மையைப் பெறுவோம். கைப்பேசி அழைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.)

1 கருத்து:

  1. வணக்கம் தமிழன் ,அய்யா தயவு செய்து அவர்களை போல உள்ளவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.அய்யா
    இன்னும் பல பேர் தங்களிடம் பல அவசியம் உள்ள கேள்விகள் கேக்க காத்து இருக்கிறார்கள்.தயவு செய்து
    பயனுள்ள கேள்விகளை கேப்போம் பலவற்றை தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு