12 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங் லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார்.

பரமேஸ்வரா சீனாவிற்குப் போய் சேர்ந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்புகள் மிங் பேரரசின் வரலாற்றுப் பதிவுகளில் காணப் பெறலாம்.

You, king Parameswara, travelled tens of thousands of li across the ocean to the capital. I the Yongle Emperor have been glad to meet with you, king, and feel that you should stay. Now I am conferring upon you, king, a gold and jade belt, ceremonial insignia, two "saddled horses", 100 liang of gold, 500 liang of silver, 400,000 guan of paper money, 2,600 guan of copper cash, 300 bolts of embroidered fine silks and silk gauzes, 1,000 bolts of thin silks...

(சான்று: http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786)

சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப் பட்டதை மேலே காணலாம். அதன் தமிழ் மொழியாக்கம் கீழே:

** அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்து இருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

** தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்து இருக்கின்றனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று மிகச் சரியாகவும் இருக்கின்றது.

** இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்குப் பிரதிபலனாக அமையும்.

** மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை; சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம்; சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள்; 100 லியாங் தங்கம்; 500 லியாங் வெள்ளி; 400,000 குவான் காகிதப் பணம்; 2,600 செப்புக் காசுகள்; 300 பட்டுச் சேலைகள்; 1000 மென் பட்டுத் துணிகள்;

மிங் அரசர் பரமேஸ்வராவுக்கு வழங்கிய இதர அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள் என அந்த வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன.

பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர்.

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ், ரோமாபுri, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஒரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சயாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.

16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று எழுதி இருக்கிறார். (Whoever is lord of Malacca shall have his hands on the throat of Venice.)

தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர் எழுத்தாளரும் ஆகும். சீனாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். சீனாவை அரசர் செங்டு (Zhengde Emperor) ஆட்சி செய்த போது அவரின் வரலாற்று ஆசானாகத் திகழ்ந்தவர்.

(சான்று: Cortesao, Armando (1990), The Suma Oriental of Tome Pires, 1512–1515, Laurier Books Ltd, ISBN 978-81-206-0535-0 - p. lxxv)

பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவினார். முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது. இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்ட பின்னர் ராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறலாக இருந்தது.  அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பதும் மற்றொரு குறைகூறல்.

புதிய சமயத்தைத் தழுவவில்லை எனும் காரணத்தினால் மலாக்காவில் சமயச் சச்சரவுகள். அதனால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை.

அவரால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446-இல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்ட சகோதரர் ராஜா காசிம் என்பவர் பதவிக்கு வந்தார்.

ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். பதவிக்கு வந்ததும் ராஜா காசிமின் பெயர் சுல்தான் முஷபர் ஷா என்று மாற்றம் கண்டது. அதன் பின்னர் மலாக்கா சுல்தானிய ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் தான் மலாக்காவில் இருந்த இந்தியர்களின் அரசு அதிகாரங்கள் குறைந்து போயின.

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். போதுமான சான்றுகளுடன் கட்டுரையை முடிக்கின்றேன். மலாக்காவைப் பரமேஸ்வரா கண்டுபிடிக்கவில்லை இஸ்கந்தார் ஷா என்பவர்தான் கண்டுபிடித்தார் என்பது தவறான கூற்று. மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பரமேஸ்வரா என்றால் மலாக்கா.

ஆக ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப் படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கின்றோம். பரமேஸ்வராவைப் பற்றிய கூடுதலான புதிய தகவல்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக