03 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு கரும்பு ரப்பர் தோட்டங்களில் தப்பித்தவர்கள் - 1897

1900-ஆம் ஆண்டுகளில் மலாயா ரப்பர் தோட்டங்களில் நிர்வாகத்தினரின் கெடுபிடிகள். காலையில் இருந்து மாலை வரை நீண்ட நேரம் உழைப்பு. இதில் கங்காணிகளின் துன்புறுத்தல்கள். சாதியத்தின் செருக்கு மினுக்குகள். மோசமான தகர டப்பா குடியிருப்புகள். எல்லாம் கலந்த வேதனைகள். எல்லாம் கடந்த சோதனைகள்.

பினாங்கு பத்து காவான் தோட்டம் 1899

அதனால் தமிழர்கள் பலர் தோட்டங்களை விட்டு, கள்ளத் தனமாய் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டனர். தோட்டங்களில் இருந்து தலைமறைவாகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இரவோடு இரவாகக் குடியிருப்புகளில் இருந்து காணாமல் போனவர்கள் அதிகம்.

ஒரு தோட்டத் தொழிலாளிக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறை. அந்த நாளைத் தவிர மற்ற நாட்களில் அவர் குடியிருக்கும் வீட்டில் 24 மணி நேரம் தொடர்ந்து காணப்பட வேண்டும்.

1900-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளியேறியவர்கள் 728 பேர். இவர்களில் 335 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டனர்.

பினாங்கு பத்து காவான் (Batu Kawan) தோட்டத்தில் தலைமறைவான தமிழர்கள் 183 பேர். இவர்களில் 112 பேர் கைது செய்யப் பட்டனர். எஞ்சிய 60 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

பெரும்பாலும் உள்ளூர் மலாய்க்காரர் மக்கள் வாழும் கிராமங்களில் குடியேறி இருக்கலாம். அல்லது தொலைதூரத் தோட்டங்களுக்குத் தப்பித்துப் போய் இருக்கலாம். அல்லது பினாங்கு துறைமுகத்தில் மூட்டை தூக்கும் வேலைகளுக்குப் போய் இருக்கலாம். [#1]

[#1]. Marilyn Gracey Augustine, In Search of a better destiny – Emigration of Tamils to Malayan Peninsula (1786-1910), 2008, p.97

FMS 1895  Penang Tamil

1902-ஆம் ஆண்டில் புரோவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாநிலத்தில் (செபராங் பிறை) உள்ள தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 343. இவர்களில் 130 பேர் கைது செய்யப் பட்டனர். எஞ்சிய 210 பேர் என்ன ஆனார்கள். கேள்விக்குறி? [#1]

[#1]. Ibid., p.97

அதே 1902-ஆம் ஆண்டு மலாக்கோப் தோட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் 71 பேர். கைது செய்யப் பட்டவர்கள் 27 பேர். அந்த ஆண்டு அது தான் மிக உயர்ந்தது ஆகும்.

ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், மலாயா தோட்டங்களில் வேலைக்கு தமிழர்கள் குடிபெயர்ந்தார்கள். ஆனால் நிலைமை மோசமாக  இருப்பதை உணர்ந்ததும் தோட்டங்களில் இருந்து தப்பித்து ஓடி விடும் நிலைமை.

பொதுவாகவே இவர்கள் பிடிபட்டனர். அப்படித் தப்பித்துப் போவதில் வெற்றி பெற்றால் வேறு தோட்டங்களில் அடைக்கலம் ஆனார்கள். ஆனால் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வது என்பது நடக்காத காரியம். ஐலசா பாடிச் செல்லப் படகும் இல்லை. கப்பலும் இல்லை.

1900-ஆம் ஆண்டு பினாங்கு தோட்டங்களில் இருந்து தப்பித்துப் போன தமிழர்கள்
(TAMIL COOLIE DESERTERS IN THE ESTATES OF MALAYA IN THE YEAR 1900)

பத்து காவான் தோட்டம் (Batu Kawan) தப்பித்தவர்கள் 183 - பிடிபட்டவர்கள் 112 - விழுக்காடு 5.72

பினாங்கு கரும்புத் தோட்டங்கள் (Penang Sugar Estates)

கலிடோனியா தோட்டம் (Caledonia) தப்பித்தவர்கள் 64 - பிடிபட்டவர்கள் 28 - விழுக்காடு 8.92

விக்டோரியா தோட்டம் (Victoria) தப்பித்தவர்கள் 49 - பிடிபட்டவர்கள் 7 - விழுக்காடு 10.38

பைராம் தோட்டம் (Byram) தப்பித்தவர்கள் 37 - பிடிபட்டவர்கள் 16 - விழுக்காடு 4.18

பெர்மாக் தோட்டம் (Permaking) தப்பித்தவர்கள் 5 - பிடிபட்டவர்கள் 2 - விழுக்காடு 4.14

மலாக்கோப் தோட்டம் (Malakoff) தப்பித்தவர்கள் 129 - பிடிபட்டவர்கள் 68 - விழுக்காடு 10.41  

பிறை கரும்புத் தோட்டங்கள் (Prai Sugar Estates)

ஜாலான் பாரு தோட்டம் (Jalan Bahru) தப்பித்தவர்கள் 153 - பிடிபட்டவர்கள் 56 - விழுக்காடு 16.95

பெர்மாத்தாங் தோட்டம் (Permatang) தப்பித்தவர்கள் 22 - பிடிபட்டவர்கள் 20 - விழுக்காடு 0.85

டிரான்ஸ் கிரியான் தோட்டம்
(Trans Krian) தப்பித்தவர்கள் 47 - பிடிபட்டவர்கள் 14 - விழுக்காடு 29.46

வால்டோர் தோட்டம் (Val Dor) தப்பித்தவர்கள் 39 - பிடிபட்டவர்கள் 14 - விழுக்காடு 9.76

மொத்தம்: தப்பித்தவர்கள் 728 - பிடிபட்டவர்கள் 335 - விழுக்காடு 8.91

இந்தப் புள்ளி விவரங்களில் இருந்து ஒரு முடிவிற்கு வரலாம். தப்பித்தவர்களில் பாதி பேர் தலைமறைவாகி விட்டார்கள். இவர்கள் எங்கே போனார்கள்; என்ன ஆனார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். நம் தமிழர்கள் எப்படி எப்படி எல்லாம் சிரமப்பட்டு இருக்கிறார்கள். வந்தேறிகள் என்று வந்தேறிகலுக்குக்குத் தெரியுமா? மேலும் சில புள்ளி விவரங்களுடன் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.10.2020

சான்றுகள்:

1. Report of the Committee on Emigration from India to the Crown Colonies and Protectorates, Part–III 1909, (Papers laid before the Committee No. 1), p 111

2. N.Gangulee,Indians in the Empire Overseas–A Survey The New India Publishing House Ltd, London,1947, p 175 26Ibid., p 199

3. Tinker,Hugh. The New System of Slavery–the Export of Indian Labour Overseas(1830–1920) Oxford University Press, London 1974, p 208



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக