23 நவம்பர் 2020

கயானா தமிழர்கள்

தமிழ் மலர் - 22.11.2020

அழகு அழகான மக்கள். அழகு அழகான கலாசாரங்கள். அழகு அழகான கலைப் பண்பாடுகள். அழகு அழகான இயற்கை வளங்கள். நீண்டு நெடிந்து பாயும் கடல் மந்திரங்கள். நீண்டு நெடிந்து ஓடும் வரலாற்றுச் சுவடுகள்.

அந்த மந்திரங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களும் புன்னகை செய்கிறார்கள். பொன்மனச் செம்மல்களாய் வரலாறும் படைக்கிறார்கள். அந்த நாட்டின் பெயர் கயானா. அழகிய நாடு. கண்பட்டு விடும் கவின்மிகு நாடு.

கயானா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கே நான்கு விழுக்காடு தமிழர்கள். இருந்தாலும் பாருங்கள். அவர்களில் ஒருவர் அந்த நாட்டின் பிரதமர். 

அந்த நாட்டின் உயர்ப் பதவி. அந்தப் பதவிக்கு அழகு செய்து அழகு பார்க்கிறார். அம்சமான இனவாத மறுப்பிற்கு ஓர் உண்மையைச் சொல்கிறார்.

மனிதர்களில் யாரும் ஒசத்தி இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மனித உயிர்கள் தான். மனுசனை மனுசனாய் நெனைச்சாலே பெரிய விசயம் என்று அசத்தலாக ஒரு மனுக்குல உண்மையையும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

கயானா நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, தமிழ் நாட்டில் இருந்து பல நூறு பல ஆயிரம் தமிழர்கள் அங்கே அழைத்துச் செல்லப் பட்டார்கள். கணக்குப் பிள்ளை வேலைக்கு ஒன்றும் இல்லைங்க.

கரும்புத் தோட்டங்களில் களை பிடுங்கும் வேலைக்குத் தான். மண்ணைக் கொத்தி மரங்களை நடும் வேலைக்குத் தான். மனித முதுகு எலும்புகளில் இரத்தப் பிலாஸ்டர்கள் போடும் வேலைக்குத் தான்.

கயானாவில் தமிழர்கள் இன்றைக்கும் சிறுபான்மை. அன்றைக்கும் சிறுபான்மை. நாம் இருவர் நமக்கு இருவர் என்பது அப்போதே பரிந்துரை செய்யப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் அவர்களில் ஒருவர் அங்கு பிரதமராகப் பதவிக்கு வந்து இருக்கிறாரே. பெரிய ஆச்சரியமான விசயம்.

அவருடைய பெயர் மோசஸ் நாகமுத்து (Moses Nagamootoo). வயது 72. இவர் 2015 மே மாதம் முதல் 2020 ஆகஸ்டு வரையில் கயானா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். இப்போது மார்க்ஸ் பிலிப்ஸ் (Mark Phillips) எனும் கயானா பூர்வீக இனத்தவர் பிரதமராக உள்ளார்.

ஒரு தமிழர் பிரதமர் பதவிக்கு வந்தது ஒரு பெரிய சாதனை என்று சொல்லலாம். பெரிய புலம்பெயர்வு அடைவுநிலை என்றுகூட சொல்லலாம். கயானா தமிழர்களுக்கு முதல் மரியாதை செய்வோம். சரி.

தென் அமெரிக்காவின் வட பகுதியில் கயானா உள்ளது. மேற்கே வெனிசூலா நாடு. கிழக்கே சுரிநாம். தெற்கே பிரேசில். வடக்கே அட்லாண்டிக் பெரும் கடல். கயானாவின் பரப்பளவு 215,000 சதுர கிமீ (83,000 சதுர மைல்).

மலேசியாவில் மூன்றில் இரண்டு மடங்கு. ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி. மக்கள் தொகை 735,554. (2014 கணக்கெடுப்பு). தென் அமெரிக்கா கண்டத்தில் ஆக வடக்கே உள்ளது. மறந்துவிட வேண்டாம். மலேசியாவில் இருந்து 17,655 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 15,078 கி.மீ.

1667-ஆம் ஆண்டில் இருந்து 1814-ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்களின் ஆதிக்கம். பின்னர் பிரிட்டிஷாரின் 150 ஆண்டு கால ஆட்சி. 1966 மே 26-ஆம் தேதி சுதந்திரம். 1970 பிப்ரவரி 23-ஆம் தேதி குடியரசு தகுதி.

அங்கே நீண்ட நெடிய மீசைகளுடன் தமிழர்கள் வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கயானாவில் இப்போது கலப்பின மக்களே அதிகம். தனிப் பெரும்பான்மை இனத்தவர் இல்லை.

கயானா தமிழர்களும் கயானா பூர்வீக பெண்களைத் திருமணம் செய்து கொண்டு ஒரு கலப்பு தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். அவர்களுக்கு அங்கே மதம் ஒரு தடையாக அமையவில்லை.

ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை. மதவாதம் உள்ளது. அருகம்புல் மாதிரி ஆங்காங்கே தலைகாட்டினாலும் இங்கே மாதிரி தீவிரம் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்தவும் இல்லை. இனவாதம் பேசவும் இல்லை. விடுங்கள்.

கயானா நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா நாடுகளைச் சேர்ந்தவர்கள். பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். பல்லின மக்களாய் வாழ்ந்தாலும் இவர்கள் ஆங்கிலம்; கயானிய கிரியோல் (Guyanese Creole) ஆகிய இரு மொழிகளை மட்டுமே அதிகமாகப் பேசுகிறார்கள்.  

கயானாவில் முக்கிய இனம் இந்தோ - கயானிய இனம் (Indo-Guyanese). இவர்களைக் கிழக்கு இந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்டவர்கள். ஒப்பந்தக் கூலிகளின் வாரிசுகள். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5 விழுக்காடு.

இவர்களுக்கு அடுத்த படியாக ஆப்பிரிக்க – கயானி மக்கள் (Afro-Guyanese). அதாவது கரிபியன் பகுதியில் வாழ்ந்த ஆப்பிரிக்க மக்கள். ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாகக் கொண்டு வரப் பட்டவர்கள்.

இவர்கள் முன்பு காலத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப் பட்டார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவளியினர் என்பதை நினைவில் கொள்வோம். பல நூறு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வாழ்ந்து விட்டார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆப்பிரிக்க - கயானிகள் 30.2 விழுக்காடு. மற்ற மற்ற கலப்பு இனமக்கள் 16.7 விழுக்காடு. 9.1 விழுக்காடு பழங்குடியினர்.

இந்தோ - கயானியர்கள்; ஆப்பிரிக்க - கயானியர்கள். இரு பெரும் இனக் குழுக்கள். இந்த இரு இனத்தவர்களுக்கு இடையில் இனக் கலவரங்கள் நடந்து உள்ளன. இப்போது இல்லை. விட்டுக் கொடுத்துப் போக பழகிக் கொண்டு விட்டார்கள்.

இந்தோ - கயானியர்களில் பெரும்பான்மை மக்கள் இந்தியாவின் பீகார்; உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அடுத்த நிலையில் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழர்கள்; தெலுங்கர்கள். இவர்களுக்கும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும்  அடிக்கடி இனப் பிணக்குகள்.

கயானாவில் தமிழர்களும் தெலுங்கர்களும் ஒரு கட்சி. இருவரும் சேர்ந்து கொண்டு வட இந்தியர்களை எதிர்த்து வந்தார்கள். இப்போது நிலைமை பரவாயில்லை.

இங்குள்ள தமிழர்களும் தெலுங்கர்களும் மாமன் மச்சான் போல நன்றாக நெருக்கமாகப் பழகுகிறார்கள். பெண் எடுப்பது பெண் கொடுப்பது எல்லாம் சகஜம் என்றும் சொல்கிறார்கள். காதல் திருமணங்களும் அதிகம். மக்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் ஓர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் குறைவாக இருக்கலாம்.

அதோடு ஒரே கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து விட்டார்கள். 18 ஆயிரம் கி.மீ. அப்பால் வாழும் போது இன உணர்வுகள் சற்றே அடிபட்டுப் போய் இருக்கலாம். அதனால் நெருக்கம் அதிகமாகிப் போனது. ஆக தமிழ் தெலுங்கு கலப்பு இரத்தம் கூடுதலாகவே ஓடுகிறது.

கயானாவில் 57 விழுக்காடு கிறிஸ்துவர்கள்; 28 விழுக்காடு இந்துக்கள்; 7 விழுக்காடு முஸ்லிம்கள். 4 விழுக்காடு மக்கள் எந்த மதத்திலும் சேரவில்லை. ஆளை விடுங்கடா சாமி; எந்த மதமும் வேண்டாம்; இருக்கிற சம்மதமே பெரிசு. அதுவே போதும் என்று மதம் சாராமல் இருக்கிறார்களாம்.

கயானாவில் இருந்து ஒரு கழுகார் இறக்கை கட்டி பறந்து வந்து சொல்லி விட்டுப் போனார். அப்புறம் என்னங்க. இந்த மதங்களினால் தானே இவ்வளவு பிரச்சினைகள்.

நீ ஒசத்தி நான் ஜாஸ்தி என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒப்பாரிகள். அந்தக் கழுகார் அட்ரஸ் வேணுங்களா. வாட்ஸ் அப் பண்ணுங்கள். அனுப்பி வைக்கிறேன். சரி.

நம்ப தமிழர்கள் அப்போது இருந்தே; காலம் காலமாகத் தொட்டுக்க விட்டுக்க இஞ்சிப்புலி ஊறுகாய்களாக நினைக்கப் பட்டார்கள். தப்பாக நினைக்க வேண்டாம்.

அப்போதைய தமிழர்களுக்கு படிப்பு அறிவு கொஞ்சம் குறைச்சல். அதனால் எடுப்பார் கைப்பிள்ளை ஆனார்கள். அம்புட்டுத்தான். ஆனாலும் நல்லது நடந்து இருக்கிறது.

கயானா தமிழர்கள் தங்களைக் கயானாத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தங்களை "மதராசி" என்றும் இந்தோ - கயனீஸ் என்றும் பெரும்பாலும் அடையாளப் படுத்தி கொள்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.  

கயானா தமிழர்கள் பெரும்பாலோருக்குப் பொதுவான தமிழ்மொழி அறிவு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கயானா நாட்டுத் தமிழ்ப் பெண்கள்; தமிழ் மொழி பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.11.2020

சான்றுகள்:

1. T R Janarthanam. Tamils in Guyana.

2. Indian Diaspora (PDF). Indiandiaspora.nic.in. Archived from the original (PDF).

3. Brock, Stanley E. (1999). All the Cowboys Were Indians (Commemorative, illustrated (reprint of Jungle Cowboy) ed.). Lenoir City, TN: Synergy South, Inc.

4. D. Graham Burnett, Masters of All They Surveyed: Exploration, Geography and a British El Dorado
Ovid Abrams, Metegee: The History and Culture of Guyana.

5. Waugh, Evelyn (1934). Ninety-two days: The account of a tropical journey through British Guiana and part of Brazil. New York: Farrar & Rinehart.

(No part of this content may be reproduced, republished, or re transmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.)







 

4 கருத்துகள்:

  1. உலகெங்கும் இறைந்து கிடக்கும் தமிழர்கள் பற்றி அறிய நல்ல தகவல் !

    பதிலளிநீக்கு
  2. உலகெங்கும் இறைந்து கிடக்கும் தமிழர்கள் பற்றி அறிய நல்ல தகவல் !

    பதிலளிநீக்கு