08 ஜனவரி 2021

மலாயா கிளந்தான் தமிழர்கள்

மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முற்றுப் பெறவில்லை. மன்சூர் ஷா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முற்றுப் பெறவில்லை.

சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி இளவரசி புத்திரி குனோங் லேடாங் காலத்தில் முற்றுப் பெறவில்லை. மலையூர் காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முற்றுப் பெறவில்லை.

மாறாக மாமாங்கங்கள் பல தாண்டிப் போய் மலாயா மைந்தர்களின் கதைகளில் முடிகின்றது. அந்தக் கதைகளில் ஒன்றுதான் பான் பான் (Pan Pan) தமிழர்களின் கதை. 1700 ஆண்டுகளுக்கு முன்னால் மலாயாவில் தமிழர்கள் அரசாட்சி செய்த கதை.

கி.பி. 300-ஆம் ஆண்டுகளில் மலாயா, தாய்லாந்துப் பெருநிலங்களை ஆட்சி செய்த ஓர் அரசின் கதை. இது சினிமாக் கதை அல்ல. உண்மையான கதை. உண்மையாக நடந்த கதை. ஒரு வரலாற்றுக் கதை.

முன்பு காலத்தில் அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை பான் பான் எனும் பேரரசு மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த ஓர் அரசாகும்.

மலாயா தாய்லாந்து நாடுகளில் புத்த மதம் தடம் பதிப்பதற்கு முன்பாகவே இந்து மதம் சார்ந்த தமிழர்களின் அரசுகள் கோலோச்சி உள்ளன. தென்கிழக்காசியாவில் ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்தும் உள்ளன.

பான் பான் எனும் சொல்லில் இருந்து தான் பான் தான் நீ (Pan tan i); பட்டாணி (Pattani) எனும் பெயர்கள் தோன்றின. வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 300-ஆம் ஆண்டுகள். ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

அதுவே மலாயாவில் தமிழர்கள் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம். உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும்.

ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. தெரியும் தானே. அதுதான் விசயம். ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன தமிழர்களின் இரகசியங்களை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள்.

பான் பான் பேரரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது. கிரா குறுக்குநிலம் (Kra Isthmus) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம்.

அங்குதான் கிழக்குக் கரை பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

1920-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; கருங்கல் சிலைச் சிதைவுகள்; கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் என்று நிறையவே பழம் பொருட்கள் கிடைத்தன.

அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் என்கிற ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படித்தான் தமிழர்கள் சார்ந்த ஓர் அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

மலாயா வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லுக்கு மிகச் சரியானவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வரலாற்றுப் பார்வையில் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் அடிச்சுவடிகளும் அழகாய்த் தெரிகின்றன. இது உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள். பெரும்பாலானவை இந்து சமயம் சார்ந்த சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளின் இடைவெளிக் காலத்தில் பான் பான் அரசு, சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இந்த அரசர் தான் பூனான் சாம்ராஜ்யத்தில் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் சாம்ராஜ்யம் என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு பேரரசாகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.01.2021

சான்றுகள்:

1. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.

2. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. ISBN 981-4155-67-5.

3. https://southeastasiankingdoms.wordpress.com/tag/panpan-kingdom/ - Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries.

4. Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.


 

1 கருத்து:

  1. சிறப்பு ஐயா. இந்த வரலாற்று குறிப்புகள் மிகவும் அரிதானவை. தங்களின் உழைப்பு பாராட்டுகுரியது. தங்களின் தேடல் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு