07 செப்டம்பர் 2021

மலாயா அகத்தியர் சிலை

தமிழ் மலர் - 07.09.2021

சிதைவுகளில் பல சிதைவுகள். இனச் சிதைவு; மொழிச் சிதைவு; உணர்வுச் சிதைவு; பண்பாட்டுச் சிதைவு; பாரம்பரியச் சிதைவு; ஆளுமைச் சிதைவு; கட்டுச் சிதைவு; கூட்டுச் சிதைவு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தச் சிதைவுகளில் தலைச் சிதைவாக அமைவது வரலாற்றுச் சிதைவு. அதாவது ’ரூம்’ போட்டு ’டிஸ்கசன்’ பண்ணி ’பிளேன்’ போட்டுச் சிதைக்கும் சிதைவு. தாராளமாகச் சொல்லலாம்.


இதில் இருப்பதை இல்லாமல் செய்வது இருக்கிறதே அதுதான் சிறப்பான வரலாற்றுச் சிதைவு. இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லாக் காலத்திலும் வரலாற்றுச் சிதைவுகளும், நல்லபடியாக நாலுகால் பாய்ச்சல் போட்டு வந்து இருக்கின்றன.

அந்த வகையில் மலையூர் மலைநாட்டிலும் தமிழர்கள் சார்ந்த வரலாறு அன்று மறைக்கப் பட்டன. இன்று மறைக்கப் படுகின்றன. முயற்சிகள் செய்யப் படுகின்றன. இப்படி எழுதுவதால் ‘அரெஸ்ட்’ பண்ணி அடைத்து வைக்கலாம். பிரச்சினை இல்லை. முழுசா நனைந்த பின்னர் முக்காடு தேவை இல்லை.

மலாயா தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்க, ஒரு கூட்டம் இரவு பகலாகத் தூக்கம் கெட்டு, கொசுக்கடி பட்டு ஆளவட்டம் போடுகிறது. உண்மைதானே!


சமரசத்துக்கு இடம் அளிக்காமல்... அதிகாரத்துக்கு அடி பணியாமல்... நேர்மையான முறையில் செய்திகளை மக்களிடம் கொண்டுப் போய்ச் சேர்ப்பதே நம் கடமை.

வரலாறு என்பதைப் பிரித்துப் பாருங்கள். வரல் ஆறு என்று வரும். வரல் என்றால் நிகழ்வு. ஆறு என்றால் பாதை. நடந்து வந்த பாதையின் நிகழ்வுகளே வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் வரலாறு.

வரலாற்றுச் சிதைவு என்பது ஓர் இனத்தின் சிதைவு. ஒரு மொழியின் சிதைவு.  என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் என்று சொல்லிக் கொண்டு கட்டுரைக்கு வருகிறேன்.

சிம்மோர் அகஸ்தியர் சிலையைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இருப்பினும் காலத்தின் கட்டாயம். மீண்டும் பதிவு செய்ய வேண்டி வருகிறது.

மலாயா வரலாற்றில் கங்கா நகரம் என்பது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் புகலிடம். தமிழர்களின் பார்வையில் கங்கை நகரம். கலிங்கர்களின் பார்வையில் கலிங்கா நகரம். உலக வரலாற்றுப் பார்வையில் கங்கா நகரா. இப்போதைக்கு கங்கா நகரம்.


இந்த கங்கா நகர வரலாற்றில் தான் சிம்மோர் அகஸ்தியர் சிலையும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் கங்கா நகரமும்; சிம்மோர் அகஸ்தியர் சிலையும் மறைக்க முடியாத மாபெரும் காலச் சுவடுகள்.

அந்தக் காலச் சுவடுகளில் புற்கள் முளைக்கலாம். பூண்டுகள் முளைக்கலாம். காடுகள் செழிக்கலாம். நதிகள் வழியலாம்.

இருந்தாலும் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; கங்கா நகரம் எனும் பெயர் மட்டும் அப்படியே ஆலம் விழுதுகளைப் போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய்ப் பயணிக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்று உண்மை.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.


அந்தச் சிலையின் எடை 34 பவுண்டுகள். அதாவது 15.4 கிலோ. உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உண்மையை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை இந்தச் சிலை உறுதி படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

கி.பி. 1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் சிதைவுற்றது. அதன் பின்னர் அந்த அரசு ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது.


அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசியக் கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். ஒரு செருகல்.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம்.

1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள்.

கரடுமுரடான காடுகள் அழிக்கப் பட்டன. பச்சைப் பசும்புல் லாலான் மேடுகள் எரிக்கப் பட்டன. ஓடைகள், சமவெளிகள், பொட்டல் காடுகள் போன்றவை பள்ளங்கள் தாண்டிய பாலைவனமாக மாறின.


அங்கே ஈய லம்பங்கள் ஈசல் காடுகளாய் இளைப்பாறின. ஈயம் விளையாடி சீனர்கள் பலர் பெருத்த பணக்காரர் ஆனார்கள். இது ஈப்போ நகரத்தின் ஈய வரலாறு.

காடு விளைந்தாலும் மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் கிந்தா பள்ளத்தாக்கில் அப்படி அல்ல.

கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்; அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம். வேதனையான கணிப்பு.

இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலங்கச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.

பேராக் ஆற்றின் துணை நதிகளான கிந்தா மற்றும் பெர்ணம் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் பெரிய பெரிய வெள்ளங்கள் ஏற்படுவது உண்டு.

தவிர ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அந்தப் பள்ளத்தாக்கில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்ளன. அதனால் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த வழிப்பாட்டுத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆழத்தில் மேலும் ஆழமாகப் புதைப்பட்டுப் போய் இருக்கலாம்.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாகக் காலம் காலமாக வண்டல் மண் குவிந்து வருவதால் கங்கா நகரத்தின் பண்டைய குடியிருப்புகள் புதைபட்டுப் போய் இருக்கலாம்.

இருந்தாலும் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெண்கலச் சிலைகளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்தச் சிலைகள் அனைத்தும் தரைப் பகுதியில் இருந்து கீழே மிக ஆழமான இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டவை. சரி. ஜாலோங் வெண்கலச் சிலைக்கு வருவோம்.

சிம்மோர் பள்ளத்தாக்கில் ஈயம் தோண்டி எடுப்பதற்காக, அப்போதைய மலாயா அரசாங்கம் பல இடங்களைப் பொது மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தது.

சிலை கிடைத்த இடம் தே செங் சியூ (Teh Seng Chew) எனும் சீனருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காக அவருக்குக் கிடைத்த அரசாங்க நிலம். தே செங் சியூ சுங்கை சிப்புட் பகுதியைச் சேர்ந்தவர்.

அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்தார். அதற்காகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

முதலில் ஒரு டிராக்டர் காட்டுப் புதர்களைச் சுத்தப் படுத்திப் போய்க் கொண்டு இருக்கும். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு குழுவினர் மண்வெட்டிகளைக் கொண்டு மண்ணைக் கிளறும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்போது திடீரென ஓர் உலோகப் பொருள், ஒரு தொழிலாளரின் மண்வெட்டியில் பட்டுத் தெறித்தது.

அடையாளம் தெரியாத ஓர் உருவத்தின் சிலை. அந்தத் தொழிலாளி சற்று ஐதீக நம்பிக்கைவாதி. அவர் அந்தச் சிலையைத் தொடவில்லை. பயந்து கொண்டு அவருடைய கண்காணிப்பாளரை அழைத்து விசயத்தைச் சொன்னார்.

அந்தச் சிலையைப் பற்றிய செய்தி கண்காணிப்பாளர் மூலமாக நிலத்தின் சொந்தக்காரர் தே செங் சியூவிற்குப் போய்ச் சேர்ந்தது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.

அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அந்தச் சிலையைப் பார்த்து அவரும் அதிசயித்துப் போனார். சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.


தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் துன் சம்பந்தன் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம். இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி தே செங் சியூ, அமைச்சருக்குத் தெரிவித்தார்.

துன் சம்பந்தன் அப்போது அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் (Minister for Posts and Telecommunications). அந்தச் சமயத்தில் கோலாலம்பூரில் இருந்தார். அந்தச் சிலை கோலாலம்பூருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

துன் சம்பந்தன் அவர்கள் அந்தச் சிலையைப் படம் பிடித்து மலேசிய அரும் காட்சியகங்களின் இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். அப்போது முபின் செபர்ட் (Mubin Sheppard) என்பவர் இயக்குநராக இருந்தார். இவர் மலாயாவில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்.

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையின் படங்கள் உலகளாவிய நிலையில் நான்கு வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

ஆய்வாளர்கள் நால்வர்களின் விவரங்கள்:

1. டாக்டர் ஏ.பி. தோன்புரி, தாய்லாந்தின் கிரிஸ்வோல்ட் மற்றும் பிரீஸ்வுட் அறக்கட்டளை, மேரிலாந்து, அமெரிக்கா. (Dr. A.B. Griswold of Thonburi, Thailand and the Breezewood Foundation, Maryland, U.S.A.)

2. ஸ்ரீ சி.சிவராமமூர்த்தி, தேசிய அருங்காட்சியகத்தின் மேலாளர், ஜனபத், புதுடில்லி, இந்தியா. (Shri C. Sivaramamurthi, Keeper of the National Museum, Janpath, New Delhi.)

3. டாக்டர் டி காஸ்பரிஸ், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல்; ஆப்பிரிக்க ஆய்வுகள் துறை, லண்டன், இங்கிலாந்து (Dr. de Casparis from the School of Oriental and African Studies, University of London)

4. டாக்டர் பி.எச். பாட், லெய்டன், ரிஜக்ஸ் அரும்காட்சியத்தின் இயக்குனர், நெதர்லாந்து (Dr. P.H. Pott, the Director of the Rijksmuseum, Leiden, Netherlands)

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையைப் பற்றி ஆய்வுகள் செய்யப் பட்டன. 11-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிலை என்பதை நால்வரும் உறுதி படுத்தினார்கள்.

அதன் மூலமாகத் தீபகற்ப மலாயாவின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலக் கட்டத்தில் இந்து மதத்தின் சிவ வழிபாட்டைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வுகளின் முடிவுகள்

1. டாக்டர் கிரிஸ்வோல்ட் (Dr. A.B. Griswold) கருத்துகள்: அந்த ஜாலோங் வெண்கலச் சிலை (Jalong Bonze) மலாயாவில் செய்யப் பட்டு இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அந்தச் சிலை எங்கே கிடைத்ததோ அங்கே இருந்து மிக அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தான் அந்தச் சிலையும் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

7-ஆம் - 9-ஆம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டு இருக்கலாம். இந்தச் சிலைக்கும் ஸ்ரீ விஜய பேரரசில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

2. சி. சிவராமமூர்த்தி (C. Sivaramamurthi): இது அகத்திய முனிவரின் சிலை.

3. டாக்டர் டி காஸ்பாரிஸ் (Dr. de Casparis): அகத்திய முனிவரின் தோற்றம் என்பது மிகச் சரி. ஆனாலும் சிலையின் உதடுகள் ஓர் இந்தோனேசியர் அல்லது ஒரு மலாய்க்காரரின் உதடுகளின் சாயலில் உள்ளன. ஒரு ரிஷியின் தோற்றமும் உள்ளது. மஜபாகித் பேரரசில் காணப் பெற்ற சிலைகளுக்கு ஒத்துப் போகிறது.

4. டாக்டர் பி.எச். போட் (Dr. P.H. Pott): இந்து ஜாவானிய வெண்கலைச் சிலைகளில் சிவகுரு (Siva-Guru) சிலைகள் உள்ளன. அந்தச் சிலைகளில் ஒன்றைப் போல சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலை அமைந்து உள்ளது.

கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்: சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.  

அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு புராணக் கதையாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான இந்து கோயில் இருக்கலாம். இந்த வெண்கலைச் சிலைக்கும் அந்தக் கோயிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம்.

இந்தச் சிலை ஏன் அந்த சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதிக்குப் போக வேண்டும்? மலை அடிவாரத்தின் மண்ணுக்குள் புதைந்து கிடக்க வேண்டும். தைப்பிங் அல்லது பீடோர் பகுதியில் இருக்க வேண்டிய சிலை எப்படி சிம்மோர் ஜாலோங் காட்டுக்குள் போனது?

இந்தக் கேள்விகளுக்கு வரலாற்று அடிப்படையில் பதில் காண வேண்டும்.

அத்துடன் ராயல் ஆசியாட்டிக் வரலாற்றுப் பதிவுகளைத் தொடர்ந்து அணுக்கமாகப் படித்து வருகிறேன். 1885-ஆம் ஆண்டில் இருந்து மலாயாவைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் அடங்கி உள்ளன. அவற்றுள் Royal Asiatic Society. Vol. XVIII 1940 தொகுதியில் தான் அகத்தியர் வெண்கலச் சிலையைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

சிம்மோர் ஜாலோங் மலை அடிவாரப் பகுதிக்குச் சென்று களப் பணியில் ஈடுபடலாம் என முடிவு செய்து உள்ளேன். போதுமான அனுமதிப் பத்திரங்கள் தேவை. ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கொரோனா தாக்கம் குறைந்ததும் பயணங்கள் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2021

இந்தக் கட்டுரைக்கான சான்றுகள்:


1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13

2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.

3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

4. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi.

5. https://www.metmuseum.org/art/collection/search/77663





 

2 கருத்துகள்: