03 பிப்ரவரி 2022

பாலி தீவு கூத்தா நகரில்...

இந்தோனேசியா பாலி தீவில், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் 35 இலட்சம் பேர் உள்ளார்கள். அவர்கள் தீபாவளியை ஒரு பண்டிகையாகக் கொண்டாடுவது இல்லை. சமயம் சார்ந்த ஒரு திருவிழாவாகப் பார்க்கிறார்கள். இந்து மதம் சார்ந்த ஒரு திருவிழா என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.


தீபாவளி என்று அவர்கள் சொல்வது இல்லை. தீபாளி என்கிறார்கள். ’வ’ எனும் எழுத்து இல்லாமல் உச்சரிக்கிறார்கள். அவர்களின் சொல் வழக்கில் தீபவளி என்பது தீபாளி.

பாலி தீவின் தீபாவளி; இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மற்ற உலக நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல இருந்தாலும், வேறு ஒரு கோணத்தில்; வேறு ஒரு வடிவத்தில். வேறு ஒரு பரிமாணத்தில் பயணிக்கின்றது. கொஞ்சம் அல்ல. ரொம்பவுமே மாறுபட்டுப் போகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பாலி தீவிற்குப் போய் இருந்தேன். கூத்தா இரவு கேளிக்கை மையம் ஒன்றில் இரவு 10 மணி அளவில் தனியாக அமர்ந்து குளிர்பானம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன். அவருடைய பெயர் சதுரங்கா. பெயர் கொஞ்சம் புதுமை. கொஞ்சும் தமிழின் கிறுகிறுப்பு. எனக்குள் வியப்பு. சதுரங்கம் என்றால் செஸ் விளையாட்டுப் போட்டி தொடர்பானது. ’நான் மலேசியாவில் இருந்து வந்து இருக்கிறேன். நீங்கள் என்ன மதம். ஏன் உங்கள் பெயர் சதுரங்கா. புதுமையாக இருக்கிறது’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் நான் ஓர் இந்து. எனக்குத் தெரிந்த வரையில் எங்களுடைய வம்சாவளியினர் எல்லாரும் ‘ஓராங் இந்து’ என்றார். பேச்சு வாக்கில் நான் கேட்டேன்.

‘இந்தோனேசியாவில் எப்படி மற்ற மதத்தைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்? பிரச்சினைகள் வராதா’. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை நிலைகுலைய வைத்தது.

‘எங்கள் நாடு மதச் சார்பற்ற நாடு. ஆறு முக்கியமான மதங்களை அங்கீகரித்து உள்ளது. அதில் இந்து மதம் ஒரு மதம். இந்து மதம் தொடர்பான கலை கலாசாரங்களை ஆதரிக்கிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த நூற்றுக் கணக்கான இந்து ஆலயங்களை மீட்டு எடுத்து வருகிறது. அவற்றைப் பார்க்க பல இலட்சம் பல மில்லியன் பேர் வருகிறார்கள் போகிறார்கள். பாலி ஒரு பசிபிக் சுற்றுலா மையமாக மாறி வருகிறது.’

’பல கோடிக் கோடி ரூபியாக்கள் கிடைக்கின்றன. பல ஆயிரம் பாலி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன’ என்றார். அவரை உற்றுப் பார்த்தேன்.

என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்தப் பக்கம் இந்தக் கரையில் இனவாதத் தாண்டவங்கள் நடிகர் ஆர்யாவின் ’நான் மகான் அல்ல’ படத்தை நினவுபடுத்தின.

கடைசியாக அவர் சொன்ன வார்த்தை. அப்படியே பதிவு செய்கிறேன். ’முன்பு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களை வழி நடத்திய வம்சாவழியினரை; எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் மூதாதையர்களை; இப்போது வந்த 500 ஆண்டு கால மத மாற்றத்தினால் எங்களால் மறக்க முடியாது.

எங்களின் பூர்வீக மதத்தையும் மறக்க முடியாது’ என்றார். நிறைய விசயங்களைச் சொன்னார். இங்கே பதிவு செய்ய இயலாது. மன்னிக்கவும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.02.2022


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக