11 செப்டம்பர் 2021

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 11.09.2021

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை அமலில் இருந்தது. அதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 

இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர் (ACS - Anglo Chinese School KLANG).

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை மலாயா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர்களும் சீனர்களும் தடுமாறிப் போனார்கள்.

இந்தக் கட்டத்தில் தான் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance) சட்டம். ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டம். அந்தச் சட்டமே அவர்களைத் திசை திருப்பியது. அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. தடுமாற்ரம் அடைந்தார்கள்.

1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour Ordinance 1912). மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டம். இந்தச் சட்டம் தான் சரியான நேர்த்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது.

1912-ஆம் ஆண்டு மலாயா தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். அந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு: ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டப் பிரிவு.

(The British and rubber in Malaya, c 1890–1940 Jim Hagan and Andrew Wells University of Wollongong: The 1912 Labour Ordinance compelled the planters to set up ad-hoc schools for children of the plantation labour.)

ஆக இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.


அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். எடுத்துக்காட்டாக கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி பகுதியில் டப்ளின் தோட்டம். ஏழு டிவிசன்கள். ஸ்கார்புரோ தோட்டத்த்த்தில் ஆறு டிவிசன்கள். ஜொகூர் சா ஆ தோட்டத்தில் ஆறு டிவிசன்கள்.

ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. அந்த மாதிரி நிறைய பள்ளிகள் தோன்றின. 1920-ஆம் ஆண்டில் மட்டும் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகி விட்டன.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டம் என்பது அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

ஆக அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால், 1925-ஆம் ஆண்டு வரையில் மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் புதிதாக நிறுவப்பட்டன.


தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் போன்றோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். சரி.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர் சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 547 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.


1938-இல் 13 அரசு தமிழ்ப்பள்ளிகள், 511 தோட்டத் தமிழ்ப்பள்ளிகள்; 23 சமயப் பரப்புத் தமிழ்ப்  பள்ளிகள். ஆக மொத்தம் 547 தமிழ்ப்பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் 22,820 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 15,584. பெண்கள் 7236.

இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலம். பெரும் பாதிப்புகள். பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

பின்னர் அந்த எண்ணிக்கை கூடியது. 1947-இல் 741 தமிழ் பள்ளிகள். 33,954 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 20,834. பெண்கள் 13,120.

1956-இல் 47,407 மாணவர்கள். ஆண்கள் 26,128. பெண்கள் 21,279.

1957-இல் 50,766 மாணவர்கள். ஆண்கள் 26,153. பெண்கள் 24,613.

தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 1930-இல் 333; 1938-இல் 547; 1947-இல் 741; 1957- இல் 888. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கல்வி கொள்கையின் மாற்றம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு. அதனால் பல பள்ளிகளை மூடப்பட்டன. அந்த வகையில் 1963-இல் 720 பள்ளிகள். இப்போது இந்த 2021-ஆம் ஆண்டு 526 பள்ளிகள் மட்டுமே உள்ளன. சரி.

1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் (Sydney Francis Barnes) என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அறிக்கையின் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும்; இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.

பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர்ச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ம.இ.கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார்; ஆதி நாகப்பன்; தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்விக் குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலைமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர்.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் தமிழர்களும் ஆதரித்தார்கள். இனங்களுக்கு இடையில் இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

ஆங்கிலம், சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக விளங்கி வருகிறது

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி மெல்ல மெல்லக் கரைந்து போகும்.

அந்த வகையில் தமிழ் மொழியும்; தமிழ் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் பள்ளிகளின் உரிமை எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்பு அடையக் கூடாது. அதே போல ஒரு மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை எந்த இனமும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடப்பாடு. தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடன்பாடு. இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் உரிமை நிலைப்பாடு.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான்; தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகள் இல்லை என்றால் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழி இல்லை என்றால் தமிழர்கள் இல்லை. முதலில் இதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் செய்வதற்குப் பற்பல திட்டங்கள் தீட்டப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

எப்போதும் எதையும் சொல்கிற மாதிரி இல்லை. அரசியல்வாதிகள் சிலரின் குண்டக்க மண்டக்க குத்தூசிகள் எப்போது வேண்டும் என்றால் குத்தலாம். குடையலாம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்கின்றார்கள். எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அங்கே தமிழர் இனத்தின் விந்துயிர்கள் வேர் அறுக்கப் படுகின்றன என்பதை நினைவில் கொள்வோம்.  

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(11.09.2021)



 

07 செப்டம்பர் 2021

மலாயா அகத்தியர் சிலை

தமிழ் மலர் - 07.09.2021

சிதைவுகளில் பல சிதைவுகள். இனச் சிதைவு; மொழிச் சிதைவு; உணர்வுச் சிதைவு; பண்பாட்டுச் சிதைவு; பாரம்பரியச் சிதைவு; ஆளுமைச் சிதைவு; கட்டுச் சிதைவு; கூட்டுச் சிதைவு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தச் சிதைவுகளில் தலைச் சிதைவாக அமைவது வரலாற்றுச் சிதைவு. அதாவது ’ரூம்’ போட்டு ’டிஸ்கசன்’ பண்ணி ’பிளேன்’ போட்டுச் சிதைக்கும் சிதைவு. தாராளமாகச் சொல்லலாம்.


இதில் இருப்பதை இல்லாமல் செய்வது இருக்கிறதே அதுதான் சிறப்பான வரலாற்றுச் சிதைவு. இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லாக் காலத்திலும் வரலாற்றுச் சிதைவுகளும், நல்லபடியாக நாலுகால் பாய்ச்சல் போட்டு வந்து இருக்கின்றன.

அந்த வகையில் மலையூர் மலைநாட்டிலும் தமிழர்கள் சார்ந்த வரலாறு அன்று மறைக்கப் பட்டன. இன்று மறைக்கப் படுகின்றன. முயற்சிகள் செய்யப் படுகின்றன. இப்படி எழுதுவதால் ‘அரெஸ்ட்’ பண்ணி அடைத்து வைக்கலாம். பிரச்சினை இல்லை. முழுசா நனைந்த பின்னர் முக்காடு தேவை இல்லை.

மலாயா தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்க, ஒரு கூட்டம் இரவு பகலாகத் தூக்கம் கெட்டு, கொசுக்கடி பட்டு ஆளவட்டம் போடுகிறது. உண்மைதானே!


சமரசத்துக்கு இடம் அளிக்காமல்... அதிகாரத்துக்கு அடி பணியாமல்... நேர்மையான முறையில் செய்திகளை மக்களிடம் கொண்டுப் போய்ச் சேர்ப்பதே நம் கடமை.

வரலாறு என்பதைப் பிரித்துப் பாருங்கள். வரல் ஆறு என்று வரும். வரல் என்றால் நிகழ்வு. ஆறு என்றால் பாதை. நடந்து வந்த பாதையின் நிகழ்வுகளே வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் வரலாறு.

வரலாற்றுச் சிதைவு என்பது ஓர் இனத்தின் சிதைவு. ஒரு மொழியின் சிதைவு.  என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் என்று சொல்லிக் கொண்டு கட்டுரைக்கு வருகிறேன்.

சிம்மோர் அகஸ்தியர் சிலையைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இருப்பினும் காலத்தின் கட்டாயம். மீண்டும் பதிவு செய்ய வேண்டி வருகிறது.

மலாயா வரலாற்றில் கங்கா நகரம் என்பது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் புகலிடம். தமிழர்களின் பார்வையில் கங்கை நகரம். கலிங்கர்களின் பார்வையில் கலிங்கா நகரம். உலக வரலாற்றுப் பார்வையில் கங்கா நகரா. இப்போதைக்கு கங்கா நகரம்.


இந்த கங்கா நகர வரலாற்றில் தான் சிம்மோர் அகஸ்தியர் சிலையும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் கங்கா நகரமும்; சிம்மோர் அகஸ்தியர் சிலையும் மறைக்க முடியாத மாபெரும் காலச் சுவடுகள்.

அந்தக் காலச் சுவடுகளில் புற்கள் முளைக்கலாம். பூண்டுகள் முளைக்கலாம். காடுகள் செழிக்கலாம். நதிகள் வழியலாம்.

இருந்தாலும் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; கங்கா நகரம் எனும் பெயர் மட்டும் அப்படியே ஆலம் விழுதுகளைப் போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய்ப் பயணிக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்று உண்மை.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.


அந்தச் சிலையின் எடை 34 பவுண்டுகள். அதாவது 15.4 கிலோ. உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உண்மையை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை இந்தச் சிலை உறுதி படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

கி.பி. 1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் சிதைவுற்றது. அதன் பின்னர் அந்த அரசு ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது.


அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசியக் கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். ஒரு செருகல்.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம்.

1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள்.

கரடுமுரடான காடுகள் அழிக்கப் பட்டன. பச்சைப் பசும்புல் லாலான் மேடுகள் எரிக்கப் பட்டன. ஓடைகள், சமவெளிகள், பொட்டல் காடுகள் போன்றவை பள்ளங்கள் தாண்டிய பாலைவனமாக மாறின.


அங்கே ஈய லம்பங்கள் ஈசல் காடுகளாய் இளைப்பாறின. ஈயம் விளையாடி சீனர்கள் பலர் பெருத்த பணக்காரர் ஆனார்கள். இது ஈப்போ நகரத்தின் ஈய வரலாறு.

காடு விளைந்தாலும் மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் கிந்தா பள்ளத்தாக்கில் அப்படி அல்ல.

கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்; அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம். வேதனையான கணிப்பு.

இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலங்கச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.

பேராக் ஆற்றின் துணை நதிகளான கிந்தா மற்றும் பெர்ணம் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் பெரிய பெரிய வெள்ளங்கள் ஏற்படுவது உண்டு.

தவிர ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அந்தப் பள்ளத்தாக்கில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்ளன. அதனால் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த வழிப்பாட்டுத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆழத்தில் மேலும் ஆழமாகப் புதைப்பட்டுப் போய் இருக்கலாம்.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாகக் காலம் காலமாக வண்டல் மண் குவிந்து வருவதால் கங்கா நகரத்தின் பண்டைய குடியிருப்புகள் புதைபட்டுப் போய் இருக்கலாம்.

இருந்தாலும் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெண்கலச் சிலைகளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்தச் சிலைகள் அனைத்தும் தரைப் பகுதியில் இருந்து கீழே மிக ஆழமான இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டவை. சரி. ஜாலோங் வெண்கலச் சிலைக்கு வருவோம்.

சிம்மோர் பள்ளத்தாக்கில் ஈயம் தோண்டி எடுப்பதற்காக, அப்போதைய மலாயா அரசாங்கம் பல இடங்களைப் பொது மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தது.

சிலை கிடைத்த இடம் தே செங் சியூ (Teh Seng Chew) எனும் சீனருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காக அவருக்குக் கிடைத்த அரசாங்க நிலம். தே செங் சியூ சுங்கை சிப்புட் பகுதியைச் சேர்ந்தவர்.

அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்தார். அதற்காகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

முதலில் ஒரு டிராக்டர் காட்டுப் புதர்களைச் சுத்தப் படுத்திப் போய்க் கொண்டு இருக்கும். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு குழுவினர் மண்வெட்டிகளைக் கொண்டு மண்ணைக் கிளறும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்போது திடீரென ஓர் உலோகப் பொருள், ஒரு தொழிலாளரின் மண்வெட்டியில் பட்டுத் தெறித்தது.

அடையாளம் தெரியாத ஓர் உருவத்தின் சிலை. அந்தத் தொழிலாளி சற்று ஐதீக நம்பிக்கைவாதி. அவர் அந்தச் சிலையைத் தொடவில்லை. பயந்து கொண்டு அவருடைய கண்காணிப்பாளரை அழைத்து விசயத்தைச் சொன்னார்.

அந்தச் சிலையைப் பற்றிய செய்தி கண்காணிப்பாளர் மூலமாக நிலத்தின் சொந்தக்காரர் தே செங் சியூவிற்குப் போய்ச் சேர்ந்தது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.

அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அந்தச் சிலையைப் பார்த்து அவரும் அதிசயித்துப் போனார். சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.


தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் துன் சம்பந்தன் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம். இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி தே செங் சியூ, அமைச்சருக்குத் தெரிவித்தார்.

துன் சம்பந்தன் அப்போது அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் (Minister for Posts and Telecommunications). அந்தச் சமயத்தில் கோலாலம்பூரில் இருந்தார். அந்தச் சிலை கோலாலம்பூருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

துன் சம்பந்தன் அவர்கள் அந்தச் சிலையைப் படம் பிடித்து மலேசிய அரும் காட்சியகங்களின் இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். அப்போது முபின் செபர்ட் (Mubin Sheppard) என்பவர் இயக்குநராக இருந்தார். இவர் மலாயாவில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்.

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையின் படங்கள் உலகளாவிய நிலையில் நான்கு வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

ஆய்வாளர்கள் நால்வர்களின் விவரங்கள்:

1. டாக்டர் ஏ.பி. தோன்புரி, தாய்லாந்தின் கிரிஸ்வோல்ட் மற்றும் பிரீஸ்வுட் அறக்கட்டளை, மேரிலாந்து, அமெரிக்கா. (Dr. A.B. Griswold of Thonburi, Thailand and the Breezewood Foundation, Maryland, U.S.A.)

2. ஸ்ரீ சி.சிவராமமூர்த்தி, தேசிய அருங்காட்சியகத்தின் மேலாளர், ஜனபத், புதுடில்லி, இந்தியா. (Shri C. Sivaramamurthi, Keeper of the National Museum, Janpath, New Delhi.)

3. டாக்டர் டி காஸ்பரிஸ், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல்; ஆப்பிரிக்க ஆய்வுகள் துறை, லண்டன், இங்கிலாந்து (Dr. de Casparis from the School of Oriental and African Studies, University of London)

4. டாக்டர் பி.எச். பாட், லெய்டன், ரிஜக்ஸ் அரும்காட்சியத்தின் இயக்குனர், நெதர்லாந்து (Dr. P.H. Pott, the Director of the Rijksmuseum, Leiden, Netherlands)

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையைப் பற்றி ஆய்வுகள் செய்யப் பட்டன. 11-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிலை என்பதை நால்வரும் உறுதி படுத்தினார்கள்.

அதன் மூலமாகத் தீபகற்ப மலாயாவின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலக் கட்டத்தில் இந்து மதத்தின் சிவ வழிபாட்டைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வுகளின் முடிவுகள்

1. டாக்டர் கிரிஸ்வோல்ட் (Dr. A.B. Griswold) கருத்துகள்: அந்த ஜாலோங் வெண்கலச் சிலை (Jalong Bonze) மலாயாவில் செய்யப் பட்டு இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அந்தச் சிலை எங்கே கிடைத்ததோ அங்கே இருந்து மிக அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தான் அந்தச் சிலையும் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

7-ஆம் - 9-ஆம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டு இருக்கலாம். இந்தச் சிலைக்கும் ஸ்ரீ விஜய பேரரசில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

2. சி. சிவராமமூர்த்தி (C. Sivaramamurthi): இது அகத்திய முனிவரின் சிலை.

3. டாக்டர் டி காஸ்பாரிஸ் (Dr. de Casparis): அகத்திய முனிவரின் தோற்றம் என்பது மிகச் சரி. ஆனாலும் சிலையின் உதடுகள் ஓர் இந்தோனேசியர் அல்லது ஒரு மலாய்க்காரரின் உதடுகளின் சாயலில் உள்ளன. ஒரு ரிஷியின் தோற்றமும் உள்ளது. மஜபாகித் பேரரசில் காணப் பெற்ற சிலைகளுக்கு ஒத்துப் போகிறது.

4. டாக்டர் பி.எச். போட் (Dr. P.H. Pott): இந்து ஜாவானிய வெண்கலைச் சிலைகளில் சிவகுரு (Siva-Guru) சிலைகள் உள்ளன. அந்தச் சிலைகளில் ஒன்றைப் போல சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலை அமைந்து உள்ளது.

கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்: சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.  

அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு புராணக் கதையாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான இந்து கோயில் இருக்கலாம். இந்த வெண்கலைச் சிலைக்கும் அந்தக் கோயிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம்.

இந்தச் சிலை ஏன் அந்த சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதிக்குப் போக வேண்டும்? மலை அடிவாரத்தின் மண்ணுக்குள் புதைந்து கிடக்க வேண்டும். தைப்பிங் அல்லது பீடோர் பகுதியில் இருக்க வேண்டிய சிலை எப்படி சிம்மோர் ஜாலோங் காட்டுக்குள் போனது?

இந்தக் கேள்விகளுக்கு வரலாற்று அடிப்படையில் பதில் காண வேண்டும்.

அத்துடன் ராயல் ஆசியாட்டிக் வரலாற்றுப் பதிவுகளைத் தொடர்ந்து அணுக்கமாகப் படித்து வருகிறேன். 1885-ஆம் ஆண்டில் இருந்து மலாயாவைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் அடங்கி உள்ளன. அவற்றுள் Royal Asiatic Society. Vol. XVIII 1940 தொகுதியில் தான் அகத்தியர் வெண்கலச் சிலையைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

சிம்மோர் ஜாலோங் மலை அடிவாரப் பகுதிக்குச் சென்று களப் பணியில் ஈடுபடலாம் என முடிவு செய்து உள்ளேன். போதுமான அனுமதிப் பத்திரங்கள் தேவை. ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கொரோனா தாக்கம் குறைந்ததும் பயணங்கள் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2021

இந்தக் கட்டுரைக்கான சான்றுகள்:


1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13

2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.

3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

4. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi.

5. https://www.metmuseum.org/art/collection/search/77663





 

05 செப்டம்பர் 2021

மாயிருண்டகம் கோத்தா கெலாங்கியில் இராஜேந்திர சோழன்

தமிழ் மலர் - 05.09.2021

இராஜா ராஜா சோழன்; இராஜேந்திர சோழன்; இவர்களின் மெய்க்கீர்த்திகள் இல்லை என்று ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசியத் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். நிதர்சனமான உண்மை. நியாயமான உண்மை.

இராஜேந்திர சோழன் பற்றிய மெய்க்கீர்த்திகள் ஓர் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திச் சான்றுகளைக் கொண்டுதான் சோழர் காலத்துப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்த முடிகிறது.


தமிழகக் கோயில்களில் இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் கிடைத்து உள்ளன. சரி.

மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன? ஓர் அரசரைப் பற்றிய கல்வெட்டுகளில் அல்லது செப்பேடுகளில் செதுக்கப் பட்ட செய்திகள் தான் மெய்க்கீர்த்திகள். பெரும்பாலும் அந்த அரசரின் அருமைப் பெருமைகளைச் சொல்லும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும்; புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் (Meikeerththi - True Glory or Prasaththi) என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.

இன்னும் ஒரு விசயம். கல்வெட்டுகளைச் செதுக்கியவர்கள், மன்னர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி அள்ளி விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக பாண்டியர்களின் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு வாசகம்.

இராமாயணம் நடந்த காலத்தில் ஒரு பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்தார். அவர்தான் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார் என்று சொல்கிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம்.

அப்படிப்பட்ட புகழேந்திகள் இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லா காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆக அந்த மாதிரி அள்ளிவிடும் கல்வெட்டுகளும் இருக்கவே செய்கின்றன.

ஒரு கல்வெட்டின் உண்மையை உறுதிப்படுத்த மற்ற மற்ற கல்வெட்டுகளையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

இல்லாத ஒன்றைப் புகழ்ந்து புகழுரைகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம், முதலாம் இராஜராஜன் காலத்தில் தோன்றியது. இது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவு.

சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இருந்து (கி.பி. 993), அவை காணப் படுகின்றன.


இந்த மெய்க்கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கங்கை நோக்கி இராஜேந்திரன் எடுத்த படையெடுப்புகளைச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள்.

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திச் செப்பேடுகளின் பெயர்கள்:

1. திருவாலங்காட்டுச் செப்பேடு

2. கரந்தைச் செப்பேடு

3. திருக்களர் செப்பேடு

4. எசாலம் செப்பேடு

இதில் ஆனைமங்கலச் செப்பேடுகள் (Leiden Copper plates), நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்கள்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழகத் தொல்பொருள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு இந்த லெய்டன் செப்பேடுகள் மீட்கப்பட வேண்டும் எனத் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு கடிதம் அனுப்பி இருந்தது.

விரைவில் மீட்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. முயற்சி செய்து வரும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர்  டாக்டர் சுபாஷிணிக்கு வாழ்த்துகள். சரி.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பட்டியலிடும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி (Inscription of Rajendra Chola - 1, No: 66). அதில் ஒரு பகுதியில் பின்வருமாறு செதுக்கப்பட்டு உள்ளது.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sri Vijaya
2. பண்ணை (சுமத்திரா) - Pannai
3. மலையூர் (சுமத்திரா) - Malaiyur
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa-Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) - Ilangaasokam
6. மாபப் பாளம் (பேராக்) - Maa-Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு) - Mevili-Bangkam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) - Valaipanthur
9. இலாமுரி தேசம் (ஆச்சே) - Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா  - தாய்லாந்து) - Maa-Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa-Nakkavaaram
13. கடாரம் - Kadaaram

மெய்கீர்த்தியில் பொறிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள்.

அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள், சோழர்களில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.

இப்போது உள்ள தமிழ்ப் பிரியர்கள் அந்த எழுத்துகைத் தவிர்த்து வருகின்றனர். நல்லது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்கள்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு

(Inscription of Rajendra Chola - 1, South Indian Inscription Vol 1, Inscription No: 66, page 98.)

(http://www.mayyam.com/talk/archive/index.php/t-10714.html)

ஸ்ரீ விஜயத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் கடல்படை, முதலில் நக்காவரம் எனும் நிக்கோபார் தீவில் முகாமிட்டு உள்ளது.
இந்தத் தீவில் சோழப் படைகள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிந்து சென்று தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்புகள் நடத்தினார்கள் என்பது வரலாற்று அறிஞர்கள் சிலரின் கருத்து.

மேலும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன் படையெடுப்புகளில் கலந்து கொள்ளவே இல்லை. அவர் உளநாட்டுப் போரில் கவனம் செலுத்தி வந்தார் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. இதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

நிக்கோபார் தீவில் படையெடுப்பு செய்த பின்னர், சோழரின் படைகள், மற்ற மற்ற இடங்களின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். அவற்றில் ஓர் இடம் மாயிருண்டகம் எனும் கோத்தா கெலாங்கி.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.

(Maayirudingam - Johore kingdom of South Malaysia which was the "Maayirudingam" of Rajendra Chola's Meikeerththi. that existed in the southern most end of then Malaysia, a region without much human habitation and prominance in the early 11th century.)

கி.பி. 950-ஆம் ஆண்டுகளில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை.

தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே; சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து ’லெங்குய்’ என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே ’லிங்கி’ எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் ’லெங்குய்’ என்று மருவி இருக்கலாம்.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே லெங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம்.

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார்.

பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். அவரின் முயற்சிகளைப் பாராட்டினால் மட்டும் போதாது. தமிழ் நல்லுள்ளங்கள் அவருக்கு நிதியுதவி செய்ய வேண்டும். என்னுடைய தாழ்மையான கருத்து. வாழ்க கணேசனின் தமிழினச் சேவை. சரி.
 
மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசிற்கு மாயிருண்டக அரசு அடிபணிந்து சேவை செய்து வந்தது. சூளாமணி வர்மன் என்பவர் அந்த அரசின் பேரரசராக இருந்தார்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த நகருக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பாதுகாப்பு அரணாக வலிமை சேர்த்து இருக்கிறது. மாயிருண்டகப் பேரரசை ஆகக் கடைசியாக சூளாமணி வர்மன் என்பவர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இராஜேந்திர சோழனின் படைகள் வருவதை அறிந்த சூளாமணி வர்மன் தன்னுடைய படைகளை எல்லாம் ஒன்று திரட்டினார். இராஜேந்திர சோழன் படைகள் வரும் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று இருக்கிறார். இருபது மைல்கள் கடந்ததும் இராஜேந்திர சோழனின் படைகளை எதிர்கொண்டார்.

யானையின் மீது ஏறி வந்த சூளாமணி வர்மன் சோழப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினார். இராஜேந்திர சோழனும் தன்னுடைய யானை மீது அமர்ந்தவாறு எதிர்த் தாக்குதல் செய்தார். இரு தரப்பிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து போனார்கள்.

அது ஒரு கசப்பான போர். இராஜேந்திர சோழன் கூர் அம்புகளால் சூளாமணி வர்மனைத் தாக்கினார். அதில் ஓர் அம்பு சூளாமணி வர்மன் மீது பாய்ந்தது. அவர் அங்கேயே இறந்து போனார். தலைவரை இழந்த மாயிருண்டகப் படைகள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறி ஓடின.

அதன் பின்னர் சோழப் படைகள் தங்கு தடை இல்லாமல் கெலாங்கி கோட்டைக்குள் நுழைந்தன. கோட்டைக்குள் இருந்த அரண்மனைக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றன. மாயிருண்டகப் பேரரசின் செல்வங்களை எல்லாம் சூறையாடின. குவிந்து கிடந்த பொன்னும் மணியும்; பவளமும் வைரமும்; மாணிக்கமும் மரகதமும் சுத்தமாக வழித்து எடுக்கப் பட்டன.

(சான்று: இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி; கோர்வையின் முதல் தொகுப்பு; எண்: 66, பக்கம்: 98.)

பின்னர் மாயிருண்டகத்தின் அரசர் சூளாமணி வர்மனின் மகள் இளவரசி ஒனாங்கி (ஓனாங் கியூ) என்பவரை இராஜேந்திர சோழன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குச் சென்றன. அடுத்த கட்டுரையில் கடார வரலாற்றுத் தகவலுடன் சந்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.09.2021

சான்றுகள்:

1. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

2. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja

3. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen

4. http://www.hubtamil.com/talk/showthread.php?10464-A-brief-historical-study-of-Singapore-(A-D-1025-1275)

5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41


பின்னூட்டங்கள்.
மலேசியம் புலனம் - 06.09.2021 பதிவுகள்.



கருப்பையா ராஜா சுங்கை பூலோ: முழுதும் படித்தேன். அருமை. பாராட்டுக்கள் ஐயா.

கணேசன் சண்முகம் சித்தியவான்: அருமை ஐயா

முருகன் சுங்கை சிப்புட்: மாபப் பாளம் (பேராக்; மாயிருண்டகம் (ஜோகூர்) புதிய தகவல் அருமை 👏👏

சிவகுரு: அருமை ஐயா..

நாகராஜா: சிறப்புங்க ஐயா

சத்யா பிரான்சிஸ்: முத்து அய்யா வணக்கம். நீங்கள் கோத்தா கலங்கி காட்டிற்குச் சென்று வந்துள்ளீர்கள். மீண்டும் போக வாய்ப்பு கிடைத்தால் சொல்லுங்கள் நானும் வருகிறேன். ஜாலான் 'திக்குஸ்' பயன்படுத்துவோம்.

கருப்பையா ராஜா சுங்கை பூலோ: அது என்ன ஜாலான் tikus

சத்யா பிரான்சிஸ்: யாருக்கும் தெரியாத குறுக்குவழி ஐயா

முகில்: கவிஞரின் ஆர்வத்திற்கு நன்றி. களப் பணிகளுக்கு மூன்று முறை போய் இருக்கிறோம். மீண்டும் போக வாய்ப்புகள் அமையவில்லை. பல நாட்கள் கொசுக்கடி... அட்டைக்கடி... ஒரு கட்டத்தில் கரும் பூரான் கடித்துக் காய்ச்சலே வந்துவிட்டது. காடு மலைகள் என்று அலைந்த எனக்கே இப்படி என்றால்...  😀

கஷடப்பட்டு வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து சம்பந்தப் பட்டவர்களிடம் ஆவணமாகச் சமர்ப்பித்தோம். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. கிடப்பில் உள்ளன.

ஜொகூர் பாருவில் கணேசன் என்பவரும் அயராது தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி புத்தகமாகப் போட்டு ஜொகூர் அதிகாரிகளிடம் கொடுத்து இருக்கிறார். அவருடைய ஆய்வுகளும் அப்படியே கிடப்பில் உள்ளன.

இரகசியங்கள் வெளியாகின்றன என்று கண்டுபிடித்து பாதுகாப்பு வளையங்கள் இறுக்கப்பட்டு உள்ளன. குறுக்கு வழிகள் உள்ளன. பாதுகாப்புகள் கீழ்ப்பகுதிகளில் அதிகம். மேலே கோத்தா திங்கி பகுதிகளில் சற்றுத் தளர்வு. கொரோனா முடியட்டும். போவதற்கு ஏற்பாடுகள் செய்வோம். நன்றிங்க கவிஞரே...

கணேசன் சண்முகம் சித்தியவான்: இதுதான் ஐயா. நம் நாட்டிற்கும் இந்தோனேசியாவிற்கும் உள்ள வித்தியாசம்.

முருகன் சுங்கை சிப்புட்: நானும் வருகிறேன்

முகில்: தாராளமாக... கொரோனா முடியட்டும். ஏற்பாடுகள் செய்வோம்.

முருகன் சுங்கை சிப்புட்:
நன்றி அய்யா அக்டோபர்- ஜனவரி ஏறக்குறைய நான்கு மாதம் ஈப்போவில் விடுப்பில் இருப்பேன் அய்யா...

வெங்கடேசன்: வணக்கம். ஐயா. நேற்றிலிருந்து இனைய தொடர்பு மிக மோசமாக உள்ளது எந்த ஒரு காணொலியும் பார்க்க இயல வில்லை பார்த்த பிறகு என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன். மிக்க நன்றி 🙏

முகில்:  என் பகுதியில் Fiber Optic இணையத் தொடர்புகளிலும்  பிரச்சினைதான்... சமயங்களில் மெதுவாகி விடுகிறது.

வெங்கடேசன்: அங்கும் இந்த சிக்கல் உள்ளது 🙄 நேற்று கண மழை இடி முழக்கத்திற்கு பிறகுதான் இணைய தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ஐயா

தனசேகரன் தேவநாதன்: இந்த செய்திகள் உலகுக்கு பறைசாட்டப் படவேண்டும். ஐயா பாலன் முனியாண்டி அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

பினாங்கில் இந்து அறபணி வாரியத்தின் மேற்பார்வையில் செயல் படும் அருங்காட்சியகத்தில் மலாயா தொடர்பான ஐயாவின் ஆதாரப்பூர்வ இந்த விசயங்கள் எழுத்து வடிவமாக வரை படங்களுடன் முக்கிய மொழிகளில் இடம்
பெற செய்வது சிறப்பாக அமையும்.

அதுவே அவரின் கடின உழைப்பிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாக அமையும். அரசாங்க தேசிய அருங்காட்சியகத்தின் இலட்சணம் நாம் அறிந்ததே. தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி🌹🙏

முகில்: நூல்களாக வெளியிடுவோம். அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுதான் நம்முடைய இலக்கு... நன்றிங்க தனா ஐயா...

தனசேகரன் தேவநாதன்: நிச்சயமாக ஐயா நூல்களாக வரவேண்டும். அதே சமயம் மக்கள் பார்வையிலும் படவேண்டும். அதைப் பார்த்து புத்தகத்தை தேட வேண்டும். கடந்த காலத்தில் பாட நூலில் இருந்த சுவாமி சத்தியானந்தாவின் மலாயா சரித்திரம் உள்ளதை உள்ளபடி சொன்ன நூல். நன்றி ஐயா

முகில்:  நிச்சயமாக... விரைவில் கொண்டு வருவோம். ஆதரவிற்கு நன்றிங்க.

ராதா பச்சையப்பன்: வணக்கம் சகோதரி கலைவாணி அவர்களே... கொஞ்ச நாட்களாக புலனத்தில் பயணிப்பது குறைவாகவே உள்ளது. நலம்தானே?🙏🌺.

கலைவாணி ஜான்சன்:  மகிழ்வுடன் இனிய வணக்கம் சகோதரி... கொஞ்சம் உடல் நலக் குறைவு சகோதரி... ஆகவே தான், பயணிக்க இயலவில்லை... ஆனால் பதிவுகளை பார்த்தும் படித்தும் விடுகிறேன். எழுத கொஞ்சம் தடையாக இருந்ததால் எழுத இயலவில்லை... இப்போது நலம் சகோதரி.... உங்கள் அன்பில் அகம் மகிழ்கிறேன் ... மகிழ்ச்சி, நன்றி.. 🙏🙏

முகில்:  உடல்நலம் முக்கியம் கலைவாணி...

கலைவாணி ஜான்சன்:  வணக்கம் ஐயா....மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா....உடல் நலம் கவனித்துக் கொள்கிறேன் ஐயா... மிக்க நன்றி  🙏

முகில்: உடல் நலமாக இருக்க வேண்டும். பத்திரம்மா.

கலைவாணி ஜான்சன்: எத்தனை குரல் கேட்டும் செவிடர்கள் போல் உலா வரும், வெட்கம் மறந்த மனிதர்கள் அரசியல்வாதிகள் இதைக் கேட்டு அவர்களை மாற்றிக் கொள்ள போகிறார்களா? சுயநலவாதிகள் சகோதரரே... இவர் தெளிவாக கேட்டு உள்ளார்... ஆவது ஒன்றும் இல்லையே.. வேதனை..😔

செல்லா செல்லம்: ஐயா உங்கள் சரித்திர கட்டுரைகள் மிகவும் சிறப்பு

தனசேகரன் தேவநாதன்: பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏன் அடுத்த தேர்தல் வரை நாடாளும் மன்றம் கூடவே கட்டாயமில்லை என்று கூட கூறுவார்கள். ஜிங் ஜக் கூட்டம்.

கலைவாணி ஜான்சன்:
வணக்கம் ஐயா... காலையில் இப்பதிவை படித்து விட்டேன். பின்னூட்டம் எழுத இயலவில்லை... எழுத கடமைப்பட்டுள்ளேன்...

இப்போது எழுதுகிறேன்... முழு பதிவையும் படித்து சில விசயங்கள் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி... கடாரம் ஆண்ட இராஜேந்திர சோழன், பல நாடுகளிலும் பல இடங்களை கைப்பற்றி ஆட்சி கண்டுள்ள விசயம் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.

விரட்டி விரட்டி ஆட்சி கண்ட தமிழன் இன்று பிற இனத்தவர்களால் விரட்டப் படுகிறானே என்ற வேதனையும், கோபமும் தான் அதிகமாகிறது. விட்டு விட்டோமே என்ற ஆதங்கம் ஒரு புறம்....

அன்றைய தமிழனின் மலர்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை  பிறக்கிறது தங்களின் வரலாற்றுப் பதிவில் ஐயா. மெய்க்கீர்த்திகள் சொல்லின் அர்த்தம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா. தெளிவான நீண்ட பதிவுக்கு... நன்றி. 🙏🙏

பெருமாள் கோலாலம்பூர்: உண்மை தான்,19ம் நூற்றாண்டு தமிழன் வாங்கி வந்த வரம் அப்படி. அன்று ஆண்ட பரம்பரை. இன்று அண்டும் பரம்பரை.

முகில்:  நன்றிம்மா கலைவாணி. தென்கிழக்காசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு குறித்து இருவிதமான கருத்துகள் உள்ளன. ஒரு சாரார் இராஜேந்திர சோழன் வரவில்லை. அவருடைய தளபதிகள் தான் படை எடுத்தார்கள் என்கிறார்கள். இன்னும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன்தான் நேரடியாக களம் இறங்கினார் என்கிறார்கள்.

செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் படை எடுத்தார் என்று குறிக்கப்பட்டு உள்ளன. உறுதியாகத் தெரியவில்லை.

கலைவாணி ஜான்சன்: மிக்க மகிழ்ச்சி ஐயா. கருத்துகள் எவ்வாறு இருப்பினும், அவரது சரித்திரம் வரலாற்றில் பதிந்து விட்டது ஐயா. அதுவே தமிழர்களுக்கு சிறப்பான விசயம். அதை விட சிறப்பு தங்களின் வரலாற்று பதிவுகள் ஐயா. நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 🙏🙏

முகில்:  தென்கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுத்த தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. தவிர இடத்தின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

அண்மையில்தான் இராஜேந்திர சோழன் செப்பேடுகளின் விவரங்கள் கிடைத்தன. அதற்கு முன்னர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயெ எழுதிவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.  தமிழ்படுத்தும் போது தடுமாற்ரம். ஓர் எழுத்து பிழையானாலும் வரலாறே பிழையாகிப் போகும்.

தென்கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுத்த வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் எவரும் ஆழமாக எழுதி வைக்கவில்லை. பட்டினத்துப்பாலையை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றனர். செப்பேடுகளில் உள்ளவற்றை பட்டியல் போட்டுக் காட்டவில்லை. இருப்பினும் இயன்ற வரையில் அசல்தன்மை கெட்டுப் போகாமல் தமிழ்ப்படுத்தி கட்டுரை எழுதினேன். நன்றிம்மா.

பெருமாள் கோலாலம்பூர்:  தலைவரே தென்கிழக்காசிய படை யெடுப்பும் கங்கை கொண்டான் படையெடுப்பையும் ஒப்பீடு செய்யும் போது புதிய தகவல் கிடைக்கலாம். ராஜ ராஜன் அங்கும் ராஜேந்திர சோழன் இங்கும் வந்திருப்பார்களோ.

முகில்: இராஜேந்திர சோழனின் ஈழத்தின் மீதான படையெடுப்பு கி.பி. 1018-இல் நடந்துள்ளது. அடுத்து 1019 ஆண்டில் வட இந்தியாவின் வெங்கி, கலிங்கா, வங்காளம் ஆகிய மாநிலங்களைக் கடந்து கங்கை நதியைச் சென்று அடைந்தார்; பாலா நாட்டு மன்னர் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்தார் (Pala king Mahipala I).

1019-ஆம் ஆண்டில் கலிங்கத்து சோம வம்சத்தின் மன்னர் இந்திரனைத் தோற்கடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

சாளுக்கிய படையெடுப்பு கி.பி. 1021-இல் நடந்துள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணப்படுகின்றன. கி.பி. 1024-ஆம் ஆண்டு வரை கங்கை கொண்ட சோழபுரம் படையெடுப்புகள் நடந்து உள்ளன.

அடுத்து இராஜேந்திர சோழனின் படைகள் 1025-ஆம் ஆண்டில் கடாரத்தின் மீது படை எடுத்து இருக்கின்றன. ஆக வருடங்களை வைத்துப் பார்க்கும் போது இராஜேந்திர சோழன், அவரே அவரின் படைகளுக்குத் தலைமை தாங்கிக் கடாரத்தின் மீது படை எடுத்து இருக்கலாம் என்பது உறுதியாகிறது.

(சான்று: சாஸ்திரி, K. A. நீலகண்டர் (2000) [1935]. சோழர்கள். Madras: University of Madras. பக்கம்: 208)

பெருமாள் கோலாலம்பூர்: அருமை தலைவரே. தெளிவான விளக்கம் நன்றி.

வெங்கடேசன்: அருமை. சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார் ஐயா? சோழர்களின. பரம்பரை இன்றும் உள்ளதா? மிக்க நன்றி ஐயா🙏

தேவிசர கடாரம்: இராஜேந்திர சோழனின் வரலாற்றை இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். 🙏🏻👌👍🏻