05 பிப்ரவரி 2022

கோலா சிலாங்கூர் வரலாறு

கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் ஆட்சியின் கீழ், கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.


18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாகக இருந்தது. பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகம், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

மெலாவத்தி கோட்டை

சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் முகத்துவாரத்தில், கோலா சிலாங்கூர் நகரின் மேற்குப் பகுதியில், ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் சிலாங்கூர் குன்று. அங்கு ஒரு பெரிய கோட்டை உள்ளது. அதை மெலாவத்தி கோட்டை (Kota Malawati) என்று அழைக்கிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் மெலாவத்தி கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகமட்டின் (Sultan Mahmud) மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.

ராஜா லூமு

17-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756-ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா லூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா (Sultan Salehudin Shah) எனப் பெயர் மாற்றம் கண்டது.

இவர் தான் மெலாவத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.

சுல்தான் இப்ராகிம் ஷா


சுல்தான் சலிஹுடின் ஷாவிற்குப் பின்னர் அவருடைய மகன் சுல்தான் இப்ராகிம் ஷா பதவிக்கு வந்தார். இவர் மேலும் அந்தக் கோட்டையின் தற்காப்பு அரண்களுக்கு வலு சேர்த்தார்.

மெலாவத்தி குன்றின் அடிப்பாகத்தில் மேலும் கூடுதலாகப் பீரங்கிகளைச் சேர்த்தார். அதில் ஒரு பெரிய பீரங்கியின் பெயர் ஸ்ரீ ரம்பாய் (Seri Rambai).

தஞ்சோங் கிராமாட் கோட்டை

டச்சுக்காரர்கள் எழுதி வைத்தக் குறிப்புகளின்படி மெலாவத்தி கோட்டையில் 68 பீரங்கிகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தச் சமயத்தில் தான் தஞ்சோங் கிராமாட் குன்றில் மேலும் ஒரு கோட்டை கட்டப் பட்டது.

கி.பி. 1784-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானகம் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. அதற்கு மறு தாக்குதலாக 11 டச்சுக் கப்பல்கள் கடலில் இருந்து கோலா சிலாங்கூரைத் தாக்கின.

ராஜா முகமட் அலி

கோலா சிலாங்கூர் மீதான டச்சுத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகன் (Dirk van Hogen) என்பவர் தலைமை வகித்தார். சிலாங்கூர் சுல்தானகத்திற்கு எதிராக இந்தோனேசியாவின் சியாக் (Siak) அரசும் களம் இறங்கியது. ராஜா முகமட் அலி (Raja Muhammad Ali of Siak) என்பவர் தலைமை தாங்கினார். பயங்கரமான போர்.

கி.பி. 1784-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி டச்சுப் படைகள் கோலா சிலாங்கூர் கடற்கரையில் தரை இறங்கின. மெலாவத்தி குன்றை முற்றுகை இட்டன.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராஹிம் ஷாவின் படைகள் காட்டுக்குள் தஞ்சம் அடைந்தன. கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கரங்களில் வீழ்ந்தன.

அல்திங்பர்க் கோட்டை

அதன் பின்னர் மெலாவத்தி கோட்டை அல்திங்பர்க் (Altingburg) கோட்டை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தஞ்சோங் கிராமாட் கோட்டை உத்ரேட் (Utrecht) என்று பெயர் மாற்றம் கண்டது.

மலாக்காவை டச்சுக்காரர்கள் கி.பி 1641-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1825-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்கள். 183 ஆண்டுகள். இடை இடையே டச்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களின் தொல்லைகள். ரியாவ் தீவுகளில் இருந்து பூகிஸ்காரர்களின் தொந்தரவுகள்.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தின் தென் பகுதியில் ஜொகூர் சுல்தானகம் உச்சத்தில் இருந்தது. கி.பி. 1606-ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகத்துடன் டச்சுக்காரர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினால் ஜொகூர் சுல்தானகம் இந்தோனேசிய வாணிகத்தைத் தன்னகப் படுத்திக் கொண்டது.

டச்சுக்காரர்கள் மீது தாக்குதல்கள்

வெகு நாட்களாகவே கோலா சிலாங்கூர் ஆளுநர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பிணக்குகள். பெரும்பாலானவை வணிகம் தொடர்பானவை.

இந்தோனேசிய - கோலா சிலாங்கூர் வர்த்தகத்தை ஜொகூர் சுல்தானகம் தன்னகப் படுத்திக் கொண்டதும், மலாக்கா டச்சுக்காரர்கள் மீது கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கோப தாபங்கள். அதனால் டச்சுக்காரர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தினார்கள்.

கோலா சிலாங்கூர் கடல் கொள்ளையர்கள்

அந்தச் சமயத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளில் இருந்து வரும் கப்பல்களைக் கடல் கொள்ளையர்கள், மலாக்கா நீரிணையில் சூறையாடி வந்தார்கள். அந்தக் கடல் கொள்ளையர்களுக்குக் கோலா சிலாங்கூர் அடைக்கலம் தருவதாக டச்சுக்காரர்களின் குற்றச்சாட்டு.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தில் ஈய வணிகம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வணிகத்திற்கு கோலா சிலாங்கூர் தடையாக இருந்தது. டச்சுக்காரர்கள் ஒட்டு மொத்த வியாபாரத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர ஆசைப் பட்டார்கள்.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷா


கோலா சிலாங்கூர் போரில், கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கைகளில் வீழ்ந்தன. அதன் பின்னர் அவர்கள் கோட்டைகளுக்குப் பலமான சுவர்களை எழுப்பினார்கள்.

பீரங்கிக் குண்டுகள் ஊடுருவிச் செல்ல முடியாத அளவிற்கு வலுவான சுவர்த் தடுப்புகளைப் போட்டார்கள். இருந்தாலும் அந்தத் தற்காப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

காட்டுக்குள் தஞ்சம் அடைந்த கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷாவின் படைகள் மறுபடியும் தாக்குதல்கள் நடத்தின. இந்த முறை பகாங் பகுதியில் இருந்து 2000 பேர் மலாய்க்காரர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

கோலா சிலாங்கூர் உத்ரேட் கோட்டை

1785 ஜுன் 28-ஆம் தேதி டச்சுக்காரர்களிடம் இருந்து இரு கோட்டைகளும் மீட்கப் பட்டன. அல்திங்பர்க் (Altingburg) கோட்டையும் உத்ரேட் (Utrecht) கோட்டையும் கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களின் கைகளுக்குள் வந்தன்.

அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து டச்சுக்காரர்கள் இன்னொரு முறை தாக்குதல் நடத்தினார்கள். கடலில் இருந்தே பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கினார்கள்.

கோலா சிலாங்கூர் கற்பாறைச் சிதைவுகள்

ஆனால் மெலாவத்தி கோட்டையைத் தரை மார்க்கமாக வந்து தாக்குதல் செய்ய முடியவில்லை. அந்தக் கோட்டை 1871-ஆம் ஆண்டு வரை மலாய்க்காரர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்னர் அந்தக் கோட்டைகளை ஆங்கிலேயர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.

கோலா சிலாங்கூர் நகரில் வரலாறு படைத்த அல்திங்பர்க் கோட்டையும்; உத்ரேட் கோட்டையும்; இப்போது அங்கே இல்லை. அந்த இடங்களில் கற்பாறைச் சிதைவுகள் மட்டுமே காட்சிப் பொருள்களாகக் காணக் கிடைக்கின்றன.

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவிலும்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வலைத் தளத்திலும் பதிவாகி உள்ளது.)

https://ta.wikipedia.org/s/ay96


சான்றுகள்:

1. SEJARAH DAERAH KUALA SELANGOR - http://kualaselangor.selangor.gov.my/kualaselangor.php/pages/view/99?mid=210

2. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 69, no. 2 (271)

3. Bukit Melawati, or Melawati Hill, is also an important historical site that offers interesting insights into Kuala Selangor’s fascinating history. - https://www.visitselangor.com/bukit-melawati/

4. Kota Kuala Selangor - Located near the mouth of the Selangor River, the fort complex at Kuala Selangor actually consists of two forts – the larger stone fort of Kota Malawati on Bukit Selangor and a smaller earthworks fort on Bukit Tanjong Keramat about a kilometre and a half to the northeast. - http://www.sabrizain.org/malaya/sgor5.htm

5. Kuala Selangor as the Selangor earliest administration centre and also the beginning of the Royal Selangor Institution created by Raja Lumu (Sultan Salehuddin) in 1766. - https://selangor.travel/listing/kuala-selangor-district-historical-museum/

6. Kuala Selangor was conquered by Dutch in 1784 while attempting to expand their base in Malacca (Melaka) for a share in the tin trade of Perak and Selangor. Bukit Melawati is a hill overlooking Kuala Selangor and the Strait of Malacca. The Dutch destroyed the existing fortifications on the hill during their 1784 invasion, and built a European-style castle, naming it Fort Atlingsburg after their commander. By the end of the 17th century, the Bugis conquered it and in 1857, the Selangor government was formed. - https://www.kuala-selangor.com/

7. On 17 May 1606, Raja Bongsu, accompanied by 3,000 men and 50 galleys met Matelieff de Jonge.18 A treaty, known as the Dutch-Johor agreement of 1606, was signed. - https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_2014-07-14_095636.html



















 

04 பிப்ரவரி 2022

நேதாஜியின் குடும்பத்தினர்

சுபாஷ் சந்திரபோஸ். மனுக்குலம் பார்த்த வரலாற்று மாந்தர்களில் ஓர் அற்புதமான அவதாரம். இந்தியர்களின் உயிர் ஊன்களில் ஈரமான விழுதுகளை விளைத்துச் சென்ற மாபெரும் மனிதர்.

நேதாஜியின் அரசியல் வாழ்க்கை சுனாமிகளும், சூறாவளிகளும், சுழற்சிகளும், கொந்தளிப்புகளும் நிறைந்தவை. ஏறக்குறைய இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. அவற்றில் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம்.

நேதாஜியின் பேத்தி அனிதா

விடுதலை உணர்வுகளில் வீரமான வசனங்களை எழுதிச் சென்ற ஒரு சகாப்தம். ஆங்கிலேய அடிமைத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போராட்ட வேள்வியில் இறங்கி, முரசு வாகை மழையில் முழுமையாய் நனைந்தவர்.

_எனக்கு இரத்தம் கொடுங்கள்... இந்தியாவிற்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்_ என்று மாபெரும் புரட்சி செய்த ஒரு விடுதலைக் கலசம்.

நேதாஜி  - அவரின் மனைவி எமிலி

1943 பிப்ரவரி 8-ஆம் தேதி, கடலுக்கு அடியில் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பானுக்குப் பயணமானர். 24000 கி.மீ தூரம். 91 நாட்கள் சாகசப் பயணம்.

ஜெர்மனி கால்சபாட் எனும் இடத்தில்
நேதாஜி; அவரின் மனைவி எமிலி (1935)

மலாயாவில் பயணம் என்றால் பினாங்கு, ஈப்போ, கம்பார், ரவாங், கோலாலம்பூர், சிரம்பான், மலாக்கா, மூவார், பத்து பகாட், ஜொகூர் பாரு போன்ற நகரங்களுக்கு வருகை செய்து உள்ளார். பெரும்பாலும் சிங்கப்பூரில் அவரின் விடுதலைப் பணிகள்.

நேதாஜியின் மகளும் மனைவியும்

அவரின் குடும்பத்தினர் தற்போது ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் வாழ்ந்து வருகின்றனர்.

2022 ஜனவரி 22-ஆம் தேதி, பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, *போஸ் 125* எனும் சிறப்புக் கண்காட்சி நடத்தப் பட்டது.

நேதாஜியின் அரிய படங்கள், அரிய தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அடங்கிய கண்காட்சி. இந்தியத் தூதரக வளாகத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி மற்றும் நேதாஜியின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose Pfaff) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேதாஜியின் குடும்பத்தினர் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டனர். அவர்களின் குடும்பப் படம்.


1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose-Pfaff; University of Augsburg). வயது 79.
2. நேதாஜியின் பேத்தி மாயா கரினா (Maya Carina)
3. நேதாஜியின் மூத்த கொள்ளுப் பேத்தி
4. நேதாஜியின் பேரன்
5. ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.02.2022

குறிப்பு:

இந்தியா கல்கத்தாவில் நேதாஜி ஆவணக் காப்பகம் இருக்கிறது (Netaji Research Bureau). நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவத்தைப் பற்றியும், பல அரிய தகவல்களை ’டிஜிட்டல்’ முறையில் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

நேதாஜியின் பேரன் பீட்டர் அருண்

முனைவர் பட்டத்துக்காக நேதாஜியைப் பற்றி ஆய்வு செய்வதாகப் பதிந்து கொண்டு, காப்பகத்தின் உள்ளே செல்ல முடிந்தது. நேதாஜியைப் பற்றி அரிதிலும் அரிதான தகவல்கள் கிடைத்தன.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேதாஜி தன் மனைவியையும் மகளையும் ஐரோப்பாவில் விட்டுச் சென்ற போது மகள் அனிதாவுக்கு வயது சில மாதங்கள்தான். அனிதா தன் தாயால் வளர்க்கப் பட்டார். அனிதா, பேராசிரியர் மார்ட்டின் பிபாப் (Professor Martin Pfaff) என்பவரை மணந்தார்.

நேதாஜியின் மகள் அனிதாவிற்கு பீட்டர் அருண் (Peter Arun), தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna), மாயா கரினா (Maya Carina) எனும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  அனிதா, ஜெர்மன் நாட்டில் உள்ள ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Augsburg) பேராசிரியராகவும், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியில் (Social Democratic Party of Germany) அரசியல்வாதியாகவும் இருந்து உள்ளார்.

நேதாஜியின் பேரப் பிள்ளைகள்:

1. பீட்டர் அருண் (Peter Arun);

2. தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna);

3. பேத்தி மாயா கரினா (Maya Carina).

நேதாஜி. நம் நினைவுகளில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் ஒரு கனல் கோபுரம். சாகாவரம் பெற்ற சரித்திர நாயகன்.

சான்றுகள்:

1. https://www.republicworld.com/india-news/general-news/netaji-subhas-chandra-bose-honoured-by-indian-embassy-in-germany-exhibition-inaugurated-articleshow.html

2. Bose, Sarmila (2005), "Love in the Time of War: Subhas Chandra Bose's Journeys to Nazi Germany (1941)

3. Gordon, Leonard A. (1990), Brothers against the Raj: a biography of Indian nationalists Sarat and Subhas Chandra Bose, Columbia University Press

4. Hayes, Romain (2011), Subhas Chandra Bose in Nazi Germany: Politics, Intelligence and Propaganda 1941-1943, Oxford University Press

 

03 பிப்ரவரி 2022

கோலா கிள்ளான் வரலாறு

முன்னர் காலத்தில், குதிரை அல்லது எருமை மாடுகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் தான், கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து ஊடகங்களாக இருந்தன.

கிள்ளான் ஆற்றின் வழியாக டாமன்சாரா வரையில் படகு சவாரிகள் இருந்தன. அங்கு இருந்து கிள்ளான் நகருக்கு மீண்டும் குதிரை, எருமை மாட்டு வண்டிகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.


அந்த நேரத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக வில்லியம் புளூம்பீல்ட் டக்ளஸ் (William Bloomfield Douglas) என்பவர் இருந்தார். துணை ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Frank Swettenham) இருந்தார்.

கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து முறை; மிக நீண்டது, மிக சலிப்பானது; சீர் செய்யப்பட வேண்டும் என்று பிராங்க் சுவெட்டன்ஹாம் கருத்து தெரிவித்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூர் பகுதிகளில் நிறையவே ஈயம் உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றைப் பத்து துறைமுகத்திற்கு (Pelabuhan Batu) எடுத்துச் செல்ல வேண்டும்.

கிள்ளான் துறைமுகம், அப்போதைய காலக் கட்டத்தில் பத்து துறைமுகம் என்று அழைக்கப்பட்டது. இரயில் பாதை போடும் வேலைகள் தொடங்கின.

1886-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கோலாலம்பூரில் இருந்து புக்கிட் குடு (Bukit Kudu) வரையிலான 19 மைல் இரயில் பாதை திறக்கப்பட்டது.

1890-ஆம் ஆண்டில் அந்த இரயில் பாதை மேலும் 3 மைல் வரை நீட்டிக்கப்பட்டு, கிள்ளான் நகரத்துடன் இணைக்கப் பட்டது.

கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகிய இரண்டு பகுதிகளும் ஏற்கனவே மலேரியா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாக இருந்தன.

கிள்ளான் துறைமுகம் சதுப்பு நில காட்டுப் பகுதியில் இருந்ததால் மிகையான மலேரியா தொற்றலுக்கு உள்ளாகி இருந்தது.

கிள்ளான் துறைமுகம் திறக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மலேரியாவின் கடும் தாக்கத்தால் துறைமுகமே மூடப்பட்டது.

கிள்ளான் துறைமுகத்தில் மலேரியா தாக்கம் ஏற்படுவற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான், அதாவது 1897-ஆம் ஆண்டில், மலேரியா கொசுக்களால் தான், மலேரியா நோய பரவுகிறது என்பதைப் பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்தார்.

அந்த வகையில் அந்தக் கண்டுபிடிப்பில் இருந்து பயன் அடைந்த முதல் காலனித்துவ நாடு மலாயா. தவிர கிள்ளான் துறைமுகமும் மலேரியா தாக்கத்தில் இருந்து விடுபட்டது.

புதர்க் காடுகள் அழிக்கப் பட்டன. சதுப்பு நிலங்கள் நிரப்பப் பட்டன. கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்; துறைமுக நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்; பல துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சதுப்பு நிலக் காடுகளில் தேங்கி நின்ற மேற்பரப்பு நீர் திசை திருப்பப் பட்டது. மலேரியாவின் அச்சுறுத்தல், கிள்ளான் துறைமுகத்தில் இருந்து முற்றாகத் துடைத்து ஒழிக்கப் பட்டது.

அதன் பின்னர் கிள்ளான் துறைமுகத்தில் வணிகம் வேகமாக வளர்ந்தது. 1914-ஆம் ஆண்டில் பல்வேறு துறைமுக வசதிகளுடன் இரண்டு புதிய அணைக்கரைகள் உருவாக்கப் பட்டன.

அதற்கு முன்னர் 1902-இல், கிள்ளான் துறைமுகத்தில் சிலாங்கூர் போலோ விளையாட்டு மன்றம் (Selangor Polo Club) நிறுவப்பட்டது. எனினும் அந்த மன்றம் 1911-இல் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் துறைமுகம் அதிக வளர்ச்சியும்; அதிக விரிவாக்கமும் அடைந்தது. 1940-ஆம் ஆண்டில், அதன் பண்ட பரிமாற்றம் 550,000 டன்னாக உயர்ந்த போது உச்சத்தையும் தொட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது அரச போர் விமானங்களைப் (Royal Air Force) பராமரிக்க, கிள்ளான் துறைமுகத்தில் இருந்த விமானத் திடல்கள் பயன்படுத்தபட்டன. போரின் போது சேதம் அடைந்த துறைமுகத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் புனரமைப்பு செய்யப்பட்டன.

அப்போதைய மலாயாவின் முக்கியமான இரண்டு ஏற்றுமதி பொருட்களான ரப்பர்; பனை எண்ணைய். இவற்றின் ஏற்றுமதி பெருகியது. அதைக் கையாளும் வகையில் துறைமுகத்தின் தெற்குப் பகுதி விரிவு செய்யப்பட்டது. இறக்குமதியும் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சாத்தியம் அல்ல என்று எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இறக்குமதிப் போக்குவரத்து அமைந்தது.

தற்சமயம் கிள்ளான் துறைமுகம், கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கிள்ளான் துறைமுகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சாண்டியாகோ பிரதிநிதிக்கின்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.02.2022

கிள்ளான் துறைமுகம் பற்றி ஒரு கட்டுரை தயாரித்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். அதன இணைய முகவரி:

https://ta.wikipedia.org/s/axgo



 

பாலி தீவு கூத்தா நகரில்...

இந்தோனேசியா பாலி தீவில், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் 35 இலட்சம் பேர் உள்ளார்கள். அவர்கள் தீபாவளியை ஒரு பண்டிகையாகக் கொண்டாடுவது இல்லை. சமயம் சார்ந்த ஒரு திருவிழாவாகப் பார்க்கிறார்கள். இந்து மதம் சார்ந்த ஒரு திருவிழா என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.


தீபாவளி என்று அவர்கள் சொல்வது இல்லை. தீபாளி என்கிறார்கள். ’வ’ எனும் எழுத்து இல்லாமல் உச்சரிக்கிறார்கள். அவர்களின் சொல் வழக்கில் தீபவளி என்பது தீபாளி.

பாலி தீவின் தீபாவளி; இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மற்ற உலக நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல இருந்தாலும், வேறு ஒரு கோணத்தில்; வேறு ஒரு வடிவத்தில். வேறு ஒரு பரிமாணத்தில் பயணிக்கின்றது. கொஞ்சம் அல்ல. ரொம்பவுமே மாறுபட்டுப் போகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பாலி தீவிற்குப் போய் இருந்தேன். கூத்தா இரவு கேளிக்கை மையம் ஒன்றில் இரவு 10 மணி அளவில் தனியாக அமர்ந்து குளிர்பானம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன். அவருடைய பெயர் சதுரங்கா. பெயர் கொஞ்சம் புதுமை. கொஞ்சும் தமிழின் கிறுகிறுப்பு. எனக்குள் வியப்பு. சதுரங்கம் என்றால் செஸ் விளையாட்டுப் போட்டி தொடர்பானது. ’நான் மலேசியாவில் இருந்து வந்து இருக்கிறேன். நீங்கள் என்ன மதம். ஏன் உங்கள் பெயர் சதுரங்கா. புதுமையாக இருக்கிறது’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் நான் ஓர் இந்து. எனக்குத் தெரிந்த வரையில் எங்களுடைய வம்சாவளியினர் எல்லாரும் ‘ஓராங் இந்து’ என்றார். பேச்சு வாக்கில் நான் கேட்டேன்.

‘இந்தோனேசியாவில் எப்படி மற்ற மதத்தைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்? பிரச்சினைகள் வராதா’. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை நிலைகுலைய வைத்தது.

‘எங்கள் நாடு மதச் சார்பற்ற நாடு. ஆறு முக்கியமான மதங்களை அங்கீகரித்து உள்ளது. அதில் இந்து மதம் ஒரு மதம். இந்து மதம் தொடர்பான கலை கலாசாரங்களை ஆதரிக்கிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த நூற்றுக் கணக்கான இந்து ஆலயங்களை மீட்டு எடுத்து வருகிறது. அவற்றைப் பார்க்க பல இலட்சம் பல மில்லியன் பேர் வருகிறார்கள் போகிறார்கள். பாலி ஒரு பசிபிக் சுற்றுலா மையமாக மாறி வருகிறது.’

’பல கோடிக் கோடி ரூபியாக்கள் கிடைக்கின்றன. பல ஆயிரம் பாலி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன’ என்றார். அவரை உற்றுப் பார்த்தேன்.

என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்தப் பக்கம் இந்தக் கரையில் இனவாதத் தாண்டவங்கள் நடிகர் ஆர்யாவின் ’நான் மகான் அல்ல’ படத்தை நினவுபடுத்தின.

கடைசியாக அவர் சொன்ன வார்த்தை. அப்படியே பதிவு செய்கிறேன். ’முன்பு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களை வழி நடத்திய வம்சாவழியினரை; எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் மூதாதையர்களை; இப்போது வந்த 500 ஆண்டு கால மத மாற்றத்தினால் எங்களால் மறக்க முடியாது.

எங்களின் பூர்வீக மதத்தையும் மறக்க முடியாது’ என்றார். நிறைய விசயங்களைச் சொன்னார். இங்கே பதிவு செய்ய இயலாது. மன்னிக்கவும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.02.2022


 

09 ஜனவரி 2022

சோழர்களின் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி

தமிழ் மலர் - 09.01.2022

சோழர் காலத்துச் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி என்பது மாயிருண்டகம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆழ்க்கடல் பகுதியில் அகழிகள் நிறைந்த இருண்ட கருங்கல் கோட்டையை இராஜேந்திர சோழனின் படைகள் கைப்பற்றின என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.


சோழர் செப்பேடுகளின் சிகரமாய் விளங்குவது திருவலங்காடு செப்பேடு. இந்தச் செப்பேடு தென்கிழக்காசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு நடத்தியதை விளக்கமாகக் கூறுகின்றது. லெய்டன் செப்பேடு (Leyden grant); இராஜேந்திர சோழன் செப்பேடு ஆகியவையும் இராஜேந்திர சோழனின் படை எடுப்புகளை உறுதி செய்கின்றன. இராஜேந்திர சோழன் செப்பேடு என்பது தஞ்சாவூர் செப்பேடு என்றும் அழைக்கப் படுகிறது. (Sastri, K. A. Nilakanta 1935; p 211).

ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்


எனும் சொற்கள் அந்தச் செப்பேடுகளில் வருகின்றன. இங்கே ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

’ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்’ எனும் வாசகத்தில் ’மாயிருண்டகம்’ எனும் சொல் வருகிறது. கவனியுங்கள். மாயிருண்டகம் எனும் சொல் கோத்தா கெலாங்கியைக் குறிப்பதாகும். ஆழ்கடலில் அகழிகள் சூழ்ந்த மா இருண்டகம் என்று அந்தச் சோழர் செப்பேடுகள் சொல்கின்றன.

கோத்தா கெலாங்கி கோட்டை கரும்கற்களால் கட்டப் பட்டது. அதனால் அது கறுப்பு நிற கோலத்தில் காட்சி அளித்து இருக்கிறது. அதனால் சோழர் படையினர் அந்தக் கோட்டையை ’மா இருண்ட அகம்’ என்று அழைத்து இருக்கிறார்கள். மா என்றால் பெரிய... இருண்ட என்றால் கருமையான... அகம் என்றால் கோட்டை.

கோத்தா கெலாங்கியில் மாயிருண்டகம் கோட்டையைக் கட்டும் போது அதைச் சுற்றிலும் அகழிகளைத் தோண்டி வைத்து இருக்கிறார்கள். அரண்மனை அல்லது கோட்டைகளின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக அகழ்ந்து அமைக்கப்படும், நீர் நிரம்பிய அரண் அல்லது கொடும் பள்ளத்தை அகழி என்பார்கள்.

அந்த அகழிகளில் முதலைகளை வளர்த்து இருக்கிறார்கள். ஆக அந்த அகழிகளைத் தாண்டித்தான் சோழப் படையினர் கோட்டைக்குள் நுழைந்து கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மனை எதிர்கொண்டார்கள்.


ஆனால் ‘செஜாரா மெலாயு’ (Sejarah Melayu) காலக் குறிப்பு வேறு மாதிரியாகப் பதிவு செய்கிறது. கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மன், சோழர்களின் படைகளை கோட்டைக்கு அப்பால், பத்து மைல்களுக்கு அப்பால், நேருக்கு நேர் மோதினார் என்று ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகளில், ஸ்ரீ லானாங் பதிவு செய்து இருக்கிறார். ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகள் நம்பகத் தன்மையைத் தாண்டிப் போகின்றன என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து.

மேலும் ஒரு கூடுதலான தகவல். தஞ்சைப் பெரிய கோயிலின் தெற்கு விமானச் சுவரில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஸ்ரீ விஜயம் மலாயா படையெடுப்புகள் பற்றிய செய்திகள் பொறிக்கப்பட்டு உள்ளன. கி.பி. 1030 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டவை.

கோத்தா கெலாங்கி பற்றி இப்படி எல்லாம் வலுவான, இறுக்கமான சான்றுகள் இருக்கும் போது; கோத்தா கெலாங்கி எனும் அரசு இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை என்று ஒரு சிலர் அடம் பிடிக்கிறார்கள். கோத்தா கெலாங்கி என்பது பகாங் ஜெராண்டுட் காடுகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகளைக் குறிக்கின்றது என்றும் சொல்கிறார்கள்.

’இருக்கு ஆனால் இல்லை’ என்பதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கோத்தா கெலாங்கி காடுகளைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட வேண்டும். அரசு சாரா பொது இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அகழாய்வுகள்; புவிசார் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.


இன்னும் ஒரு விசயம். அந்த ஆய்வுகள் நடுநிலையான ஆய்வுகளாக இருக்க வேண்டும். நடக்குமா? என்றைக்கு நடக்கும்? இது 20-ஆம் நூற்றாண்டின் மலாயா வரலாற்றில் மற்றும் ஒரு பில்லியன் டாலர் கேள்வி. ஒரு செருகல்.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘காணாமல் போன கோத்தா கெலாங்கி’ எனும் வரலாற்று நூலில் இந்த விவரங்கள் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளன. கோத்தா கெலாங்கி வரலாற்றை அந்த நூல் ஒட்டு மொத்தமாய் அலசிப் பார்க்கின்றது.
தமிழகத்தில் குறிப்பாக தமிழகக் கோயில்களில் கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக் கணக்கான செப்பேடுகள்; கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மிகப் பழைய செப்பேடு கி.பி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

Sastri, K.A. Nilakanta (1949). "Takuapa and its Tamil Inscription Part I.". Malayan Branch of the Royal Asiatic Society. 22.

பெரும்பாலான தமிழ் நாட்டுச் செப்பேடுகள் தமிழிலேயே எழுதப்பட்டு உள்ளன. ஆனாலும் 6-ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் கிடைத்து உள்ளன. சில கல்வெட்டுக்கள் இரு மொழிகளிலும் உள்ளன.


தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கியமான செப்பேடுகள்: லேடன் செப்பேடுகள்; முதலாம் இராஜேந்திர சோழனின் திருவலங்காட்டுச் செப்பேடு; சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு; வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு.

இராஜேந்திர சோழனைப் பற்றி ஐந்து செப்பேடுகள் கிடைத்து உள்ளன. இவற்றை மெய்க்கீர்த்திகள் என்றும் சொல்லலாம். அவற்றில் திருவலங்காட்டுச் செப்பேடு, இராஜேந்திர சோழன் கங்கையை நோக்கி படை எடுத்ததைப் பற்றிச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.

கோத்தா கெலாங்கி பற்றி சோழர் செப்பேடு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தச் செப்பேட்டை தஞ்சாவூர் செப்பேடு (Tanjore Inscription) என்றும் சொல்கிறார்கள். 1030-ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. (Arokiaswamy, Celine W.M. 2000; pp. 37, 38, & 41)

இராஜேந்திர சோழன் கோத்தா கெலாங்கி மீது 1025-ஆம் ஆண்டில் படை எடுத்தார். ஆனால் தஞ்சாவூர் செப்பேட்டில் 1030-ஆம் ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. ஆக படையெடுப்பிற்குப் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்தச் செப்பேடு எழுதப்பட்டு இருக்கலாம். 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sriwijaya (Palembang)
2. பண்ணை (சுமத்திரா) – Pannai
3. மலையூர் (சுமத்திரா) – Malaiyur Jambi
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) – Ilangaasokam
6. மாப்பாளம் (பர்மா) - Maa Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு, பிலிப்பைன்ஸ்) - Mevili Bangkam, Mavimbangam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) – Valaipanthur
9. இலமுரி தேசம் (ஆச்சே) – Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா - தாய்லாந்து) - Madalingam; Maa Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa - Nakkavaaram
13. கடாரம் - Kadaaram


மேலும் சில பகுதிகள் உள்ளன. இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தில் படையெடுத்த பின்னர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு படை தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போய் இருக்கிறது.

The third unit of Chola forces reached Thalai-Thakkolam (Takua-pa) approximately covering the present Krabi, Phangnga and Surat Thani states of upper south Thailand.


ஒரு படை இலங்காசுகம் போய் இருக்கிறது. ஒரு படை கங்கா நகரம் பகுதிக்குப் போய் இருக்கிறது. கங்கா நகரத்திற்குப் போன படைதான் கோத்தா கெலாங்கிக்குப் போய் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போன படை கோத்தா கெலங்கிக்கு போய் இருக்க முடியாது என்பது என் கருத்து.

ஒவ்வோர் ஆண்டும், இறுதி வாக்கில் பகாங், கிளந்தான், திரங்கானு பகுதிகளில் அடர்ந்த மழை பெய்யும். பகாங் ஆறு கரை புரண்டு ஓடும். எளிதில் கடந்து வந்து கோத்தா கெலாங்கி கோட்டைக்குப் போய் இருக்க முடியுமா? ஒரு சந்தேகம். இது என் கணிப்பு. சரி.

சோழர் செப்பேடுகளில் பொறிக்கப் பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள். அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள். சோழர்களின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் காணப் படுகின்றன. திருவலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்கள்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து

உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்

நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்

கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


என பொறிக்கப்பட்ட வாசகங்கள். இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி பட்டியலிடுகிறது. அதில் ஒரு பகுதியில் அவ்வாறு செதுக்கப்பட்டு உள்ளது. (Rajendra Chola, Vol 1, Inscription: 66, p. 98)

பொதுவாகவே சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் (கி.பி. 993), அவை காணப் படுகின்றன. இந்த மெய்க் கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்த வகையில் பார்க்கும் போது, கடாரத்தைக் கைப்பற்றிய இராஜேந்திர சோழனின் படைகளில் ஒரு பிரிவு, கடாரத்தில் இருந்து கிழக்குத் திசையில் இலங்காசுகம் (Lankasuka) நோக்கி நகர்ந்தன.

இலங்காசுகம் என்பது தோராயமாக தற்போதைய தெற்கு தாய்லாந்தின் சோங்கலா (Songkhla), பட்டாணி (Pattani), யாலா (Yala) மற்றும் நாரதிவாட் (Narathiwa) மாநிலங்களை உள்ளடக்கியவை என்று சொல்லப் படுகிறது. சோழப் படைகள் இலங்காசுகத்தைக் கைப்பற்றிய பின்னர் அந்த இலங்காசுகத்தில் ஓர் இளவரசரை அந்த இராச்சியத்தின் துணை அரசராக நியமித்தது. சரி.

திருவாலங்காட்டு கல்வெட்டுகளில் எழுதப்பட்டு உள்ள வாசகங்கள்:

’கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்’
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

(Rajendra Chola, SII, V1, pp. 66 - 98)

இலங்காசுகத்தில் இருந்து சோழர்ப் படைகள், மேலும் தென்கிழக்குத் திசையை நோக்கிச் சென்றன. தற்போதைய மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள வலைப்பந்தூர் (Valaipanthur - Valai Penjuru) வரை சென்றன. வலைப்பந்தூர் அரசையும் கைப்பற்றின. சோழர்ப் படைகளின் அடுத்த நகர்வு கோத்தா கெலாங்கி படையெடுப்பு. (Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja 2009; p. 1)

கோத்தா கெலாங்கியை லெங்குய் (Lenggui) என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இந்தச் சொல் தான் கிளாங்குய் (Glong Gui) எனும் சொல்லாக மருவியது. இன்றைய காலத்தில் இந்தியர்களைக் கிளேங் என்று அழைப்பதற்கான மூலச் சொல்லாக அமைந்து இருக்கலாம். இது என்னுடைய கணிப்பு.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார். பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.01.2022

குறிப்புகள்; NOTES

1. Jan Wisseman Christie, "The Medieval Tamil-language Inscriptions in Southeast Asia and China", Journal of Southeast Asian Studies, Vol. 29, No. 02, September 1998, pp 239-268

2. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

3. Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian, 2009. p. 1. ISBN 9789812309372.

4. Karnjanatawe, Karnjana (30 May 2019). "Tales from the Southern Seas". Bangkok Post. Retrieved 30 May 2019.

5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41