06 ஆகஸ்ட் 2015

எம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள்

மலேசியா தினக்குரல் 05.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

 
கணவனை இழந்து கதறும் மலேசியச் சீனப் பெண்
உலக விண்வழி வாசலில் பலவிதமான மர்மங்கள். பலவிதமான மாயங்கள். மனித மனங்களைத் திகைக்க வைக்கும் மாயஜாலங்கள். அந்த வான்வெளியில் இதுவரை ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. சில நாட்கள் காணாமல் போனவை இருக்கின்றன.

சில மாதங்கள் காணாமல் போனவை இருக்கின்றன. சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள் இருக்கின்றன. கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனவையும் இருக்கின்றன. அத்தனையும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியவை. மனித மனங்களில் அதிசய ராகங்களைப் பாடச் செய்தவை.



MH 370 Phillipines Children
பிலிப்பைன்ஸ் குழந்தைகள் பிரார்த்தனை

அவற்றுள் மாஸ் எம்.எச்.370 விமானம் மாயமாய் மறைந்து போனதுதான் விண்வழி மர்மங்களின் தலைவாசல். உலகத்தையே திகைக்க வைக்கும் ஒரு பயங்கரமான மர்ம நிகழ்ச்சி. இன்னும் நீடிக்கின்றது. இதுவரையிலும் இந்த மாதிரியாக, இப்படி ஒரு விமானம் மாயமாய் மறைந்து போனதும் கிடையாது. மாயஜாலம் காட்டியதும் கிடையாது. உலக மக்களைத் திணற வைத்ததும் கிடையாது.

ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய சிதை பாகம்


இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ரியூனியன் தீவில் கரை ஒதுங்கி இருக்கும் ஒரு விமானத்தின் சிதைப் பாகம், காணாமல் போன எம்.எச். 370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அந்தச் சிதைப் பாகங்கள் எம்.எச். 370 விமானத்திற்கு உரியதா எனும் ஆய்வு பிரான்ஸ் தோலோஸ் நகரத்தில் மேற்கொள்ளப் படவிருக்கிறது.


MH 370 Malaysian Women Pray
மலேசியப் பெண்களின் பிரார்த்தனை

இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட உடைந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தின் உடைந்த பாகம் தான் என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. எம்.எச். 370 விமானமும் அதே போயிங் 777 ரக விமானத்தைச் சேர்ந்ததாகும்.

கண்டு எடுக்கப்பட்ட போயிங் 777 ரக விமானச் சிதை பாகம், விமானத்தின் இறக்கைப் பகுதியில் உள்ளதாகும். அதை விமான தொங்குமடிப்பு (Flaperon) என்று அழைக்கிறார்கள். எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஏறக்குறைய ஐநூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன.



கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை

இந்த எம்.எச். 370 விமானத்தைத் தேடும் பணிகளில், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், கத்தார் போன்ற நாடுகள் ஈடுபட்டன. மொத்தம் 13 நாடுகள். நவீனமான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப் பட்டன. அதிநுட்பமான வான்கோளங்களைப் பயன்படுத்தி ஒவ்வோர் அடி அங்குலத்தையும் அளந்து பார்த்தார்கள்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

கடைசியாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களம் இறங்கியது. இந்த ஆய்வு நிறுவனம் அப்போலோ, ஜெமினி வான்கோலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. மனிதனைச் சந்திர மண்டலத்தில் நடக்க வைத்தது. அந்த நிறுவனமும் தன்னுடைய துணைக்கோளங்களைப் பயன்படுத்தியது. பூமிக்கு 200 மைல்கள் உயரத்தில் இருந்து இந்தியப் பெருங்கடலைப் படம் பிடித்துப் பார்த்தது. 


கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் புத்த ஆலயத்தில் பிரார்த்தனை

63 கப்பல்கள் 58 விமானங்களைக் கொண்டு கடல் காடுகளை அலசிப் பார்த்து விட்டார்கள். ஆனால், காணாமல் போன அந்த மாஸ் எம்.எச்.370 விமானம் மட்டும் இன்னும் கண்ணில் தென்படுவதாக இல்லை. இப்போது அதன் இறக்கைப் பாகம் கிடைத்து இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆய்வு முடிவு என்னவாக இருக்கும். பொறுமையாக இருப்போம்.

இந்தியாவின் பெரும் பங்களிப்புகள்

இந்தியப் பெருங்கடலில் எங்கோ ஒரு தீவுக் கூட்டத்தில், எம்.எச்.370 விமானத்தைத் தரை இறக்கி இருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வாளர் ஒருவர் சொன்னார். ஆனால், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தரை இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்தியா சொல்கிறது. போயிங் 777 போன்ற ஓர் இராட்சச விமானத்தை, அந்தமான் தீவில் இருக்கும் போர்ட் பிளேயர் விமானத் திடலில் தரை இறக்க முடியாது என்று இந்தியக் கடற் படை சொல்லி வருகிறது. 



இந்தியா பூனாவைச் சேர்ந்த கிராந்தி சிர்சாத்
Kranti Shirsath from Pune, four other Indians — Chandrika Sharma (51), Vinod Kolekar (59), Chetna Kolekar (55) and Swanand Kolekar (23) — were aboard the flight, in addition to 154 Chinese, 38 Malaysians, seven Indonesians, six Australians, four Americans and two Canadians.

இந்தியா இதுவரை எட்டு போர்க் கப்பல்கள், ஐந்து கடுங் கண்காணிப்பு விமானங்களைக் களம் இறக்கி இருக்கிறது. அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் இருந்து சென்னை வரையில், 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குத் தேடல் பணிகள் நடைபெற்றன.

பி-81 ரக நீர்மூழ்கிக் கப்பல் விமானங்கள், சி-130ஜே சிறப்பு ஜெட் விமானங்கள், ருக்மணி விமானம் தாங்கிக் கப்பல் போன்றவை களத்தில் இறங்கி இருக்கின்றன. இந்தியாவின் ஜிஎஸ்ஜேடி-7 கடற்படை துணைக்கோளங்களும் பயன்படுத்தப் பட்டன.

ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின்

உலக மக்கள் இனம், மொழி, சமய உறவுகளைத் தாண்டி வழிபாடுகளை நட்த்தி வருகின்றனர். தவிர, ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் என்பவர் வேறு, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரார்த்தனைகள் செய்தார். பலிக்கட்டும் என்று வேண்டினோம். ஆனால், பலிக்கவில்லை. 



MH 370 Bomoh
கோலாலம்பூர் விமான நிலையத்தில்
ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் பிரார்த்தனை

கோடிக் கோடியாகப் பணம் செலவு செய்து விட்டார்கள். இருந்தாலும் காணாமல் போன விமானம் காணாமல் போய் 500 நாட்கள் ஆகிவிட்டன. இன்னமும் கண்ணாமூச்சி காட்டுகின்றது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி பின்னிரவு 1.31-க்கு ராடார் திரையில் இருந்து மாஸ் எம்.எச்.370 விமானம் காணாமல் போனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்கள். அப்புறம் எந்த ஒரு தகவலும் இல்லை. என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவே இல்லை.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அந்த விமானம் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. ராடார் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர், நான்கு மணி நேரம் பறந்து கொண்டே இருந்து இருக்கிறது.

டி கார்சியா தீவுக் கூட்டம்

புலனாய்வாளர்களின் கணக்குப் படி, அந்த விமானம் பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியா வரை போய் இருக்கலாம். இந்தியப் பெருங்கடலின் மேல் போய் இருந்தால் 2000 மைல்கள் கடந்து போய் இருக்க வேண்டும். விமானத்தில் இருந்த எரிபொருள் நான்கு மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். அதுவரை அந்த விமானம் பறந்து கொண்டே இருக்கலாம்.

MH370 Puspanathan Banting
மலேசியா கிள்ளானைச் சேர்ந்த புஸ்பநாதன், மறைந்தவர்களில் ஒருவர்

தேடும் முயற்சிகள் இந்தியப் பெருங்கடல் பக்கம் திசை திருப்பப் பட்டன. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களுக்கு கீழே, டி கார்சியா எனும் தீவுக் கூட்டம் இருக்கிறது. அங்கே அமெரிக்காவின் கப்பற்படை தளம் ஒன்று இருக்கிறது. அங்கே இருக்கும் கப்பல்களும் விமானங்களும் தேடல் பணிகளில் ஈடுபட்டன.  சரி. அது அப்படியே இருக்கட்டும்.

உலக விண்வழி வரலாற்றில் ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். அவற்றுக்கு எல்லாம் தலைமை வகிப்பது நம்முடைய மாஸ் எம்.எச்.370 விமானம்தான். கொஞ்ச நேரத்திற்கு அதைத் தவிர்த்து விடுவோம். மற்ற மற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

2009 - ஏர் பிரான்ஸ் 447

இந்த நிகழ்ச்சி 2009 மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற்றது. அது ஓர் ஏர்பஸ் ஏ-330 ரக விமானம். ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 228 பயணிகள். தென் அமெரிக்கா ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நகரத்திற்கு விடியல் காலை 1.33-க்கு பயணத்தை மேற்கொண்டது. ஜூன் 1-ஆம் தேதி அட்லாண்டிக் கடலில் பறந்து கொண்டு இருக்கும் போது காணாமல் போய் விட்டது. பிரேசில் அட்லாண்டிக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு இருக்கிறது.



அதன் பிறகு அதற்கு என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அட்லாண்டிக் கடலில் எங்கோ ஓர் இடத்தில் விழுந்து இருக்கிறது. அந்த அனுமானத்தில் விமானத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.

அட்லாண்டிக் மாக்கடலில்

இந்தப் பக்கம் தென் அமெரிக்காவின் பிரேசில். அந்தப் பக்கம் ஆப்பிரிக்காவின் செனாகால் நாடு. நடுவில் அட்லாண்டிக் மாக்கடல். அதன் அகலம் 3,450 மைல்கள். பரப்பளவு 41 மில்லியன் சதுர மைல்கள். சராசரி ஆழம் 3.2 கிலோமீட்டர்கள். எவ்வளவு ஆழம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் அந்த விமானத்தை எங்கே போய் தேடுவது. இருந்தாலும் தேடும் முயற்சிகள் கைவிடப் படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப் பட்டது. பிரேசில் நாட்டு வடப் பகுதியின் கடற்கரையில் இருந்து 600 மைகள் தள்ளி அந்த விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. பயணம் செய்த 228 பேரும் இறந்து விட்டார்கள். கறுப்புப் பெட்டி, மற்ற ஒலிப்பதிவு கருவிகளை மீட்டு எடுத்தார்கள்.



விமான விபத்தைப் பற்றிய முழு அறிக்கை, 2012-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கு விமானி ஓட்டி என்று ஒரு சாதனம் இருக்கும். அதை ஆங்கிலத்தில் (autopilot) என்று சொல்வார்கள். ஒரு விமானம் 30,000 அடிகளுக்கும் மேலே போனதும், இந்தத் தானியங்கு விமானி ஓட்டியை முடுக்கி விடுவார்கள்.

அதன் பின்னர் விமானம் சொந்தமாகவே பறக்க ஆரம்பித்து விடும். அதாவது விமானியின் கட்டுப்பாடு இல்லாமல் விமானம் தானாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்தச் சமயத்தில் விமானிகள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.

நிலைகுத்திப் போன விமானம்

ஆனால், அன்றைய தினம், இந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானத்தின் வெளித் தொடர்புக் கருவிகளை பனித் திட்டுகள் மூடி விட்டன. அதனால் தானியங்கு விமானி ஓட்டியின் செயல்பாடுகளில் தடுமாற்றம். விமானத்தை இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு விமானிகளும் அவசரம் அவசரமாக சில முயற்சிகளைச் செய்து இருக்கின்றார்கள். அத்தனையும் வீண். 



விமானத்தின் மூக்குப் பகுதி கீழே வருவதற்குப் பதிலாக மேல் நோக்கிப் போய் இருக்கின்றது. அதனால் விமானம் நிலைகுத்திப் போய், அப்படியே கடலில் விழுந்து இருக்கிறது. கடலில் கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன ஆகும்.

அந்த மாதிரி 10 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விமானம் கீழே கடலில் விழுந்து இருக்கிறது. விமானத்தின் மூக்குப் பகுதியைக் கீழ்ப் பக்கமாகத் தாழ்த்தி இருந்தால், விபத்தைத் தவர்த்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

2003 போயிங் 727

இந்த நிகழ்ச்சி 2003 மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. ஆப்பிரிக்காவில் இருக்கும் அங்கோலா நாட்டின் தலைநகரமான லுவாண்டாவிற்கு அருகில் அந்த விமானம் காணாமல் போனது. புர்க்கினா பாசோ நகரை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது ராடார் திரையில் இருந்து விமானம் காணாமல் போனது. 




விமானத்தில் 12 பேர் இருந்தனர். இந்த விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. பெரிய மர்மமாகவே இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அது ஒரு பெரிய செய்தியாகத் தெரியவில்லை. உலக மக்களும் மறந்து விட்டார்கள்.  

1999 எகிப்திய விமானம் 990


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1999 அக்டோபர் மாதம் நடந்தது. இது ஒரு போயிங் 767 ரக விமானம். நியூயார்க் நகரத்தில் இருந்து கெய்ரோ நகரத்திற்குப் பயணம். அட்லாண்டிக் பெருங் கடலில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, திடீரென்று தலைக் குப்புற விழுந்தது. 14,000 அடி உயரத்தை 36 விநாடி நேரத்தில் கீழ் நோக்கி இறங்கி குப்புற விழுந்து இருக்கிறது. 



பயணம் செய்த 217 பேரும் இறந்து போனார்கள். விமானத்தின் சிதைபாடுகள் பின்னர் கண்டு எடுக்கப்பட்டன. விமானி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டது. விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே போராட்டங்கள் நடந்து இருக்கின்றன.

கறுப்புப் பெட்டியின் உரையாடல்கள் மூலம் கண்டு அறியப் பட்டது. இருந்தாலும், இயந்திரக் கோளாற்றினால் விமானம் விழுந்து விட்டது என்று எகிப்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. போயிங் விமானம் இல்லை என்று இன்று வரையிலும் மறுத்து வருகிறது. 

1996 டி.டபுள்யூ.ஏ. 800

டிரான்ஸ் ஓர்ல்ட் ஏர்லைன்ஸ் (Trans World Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 747-100 ரக விமானம். 1996 ஜூலை 17-ஆம் தேதி நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரோம் நகரை நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் 12-வது நிமிடத்தில், வானத்தில் வெடித்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. பயணம் செய்த 230 பேரும் இறந்து போனார்கள்.

அமெரிக்க விண்வழி வரலாற்றில் மூன்றாவது மிக மோசமான விமான விபத்து என்று சொல்லப் படுகின்றது. பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்து இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், எரிபொருள் சேமிப்புக் களனில் ஏற்பட்ட குறுஞ்சுற்று (short circuit) கோளாற்றினால் வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று புலனாய்வுகள் சொல்கின்றன.

இருந்தாலும், அது ஒரு சதிநாச வேலை என்று பல ஆய்வாளர்கள் இன்றும் சொல்கின்றனர். ஓர் உயிர் இல்லை. இரண்டு உயிர் இல்லை. 230 உயிர்கள். ஆக, அந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு யார் காரணம் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். 

1947 ஸ்டார்டஸ்ட்

67 ஆண்டுகளுக்கு முன்னால் 1947 ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி நடந்த விபத்து. விமானத்தின் பெயர் ஸ்டார்டஸ்ட். தென் அமெரிக்கா போனஸ் ஏர்ஸ் நகரில் இருந்து சிலி நாட்டிற்குப் போன விமானம். திடீரென்று காணாமல் போய் விட்டது. அந்த விமானத்திற்கு ஏன்ன ஆனது ஏது ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. பயணம் செய்த 11 பேரும் இறந்து போனார்கள்.

சதிநாச வேலையாக இருக்கலாம். வேறு கிரகவாசிகள் வந்து பழி வாங்கி இருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள். இருந்தாலும் 2000-ஆம் ஆண்டில் அந்த விமானத்தின் சிதைபாடுகள் கிடைத்தன. ஆழமான ஒரு பனிக்கட்டி ஆற்றில் மூழ்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பயணிகளின் உடல்கள் அழுகிப் போகாமல் அப்படியே அசலாக இருந்தன. 67 ஆண்டுகள் ஆகிப் போனதால் அந்த உடல்களுக்குச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை. இப்படியும் சில உயிர்கள் சொந்தம் இல்லாமல் மறைந்து போகின்றன. நம்ப உயிர் எப்படியோ தெரியவில்லை.

1937 ஏமேலியா இயர்ஹார்ட்

உலக விண்வழி வரலாற்றில், இந்த ஏமேலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) மறைவுதான் மிக மிகச் சோகமான நிகழ்ச்சியாகும். மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பெண்மணி. சின்ன வயதிலேயே சிறகொடிந்து போனார். அவர் இறந்து போனது இன்னும் தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே நீடிக்கின்றது. உலகத்தை விமானத்தின் மூலம் முதன்முதலாகச் சுற்றி வந்த பெண்மணி என்று சாதனை படைக்க ஆசைப் பட்டவர்தான் இந்த ஏமேலியா இயர்ஹார்ட். 



இவர் நிறைய சாதனைகளைச் செய்தவர். நிறைய நூல்களை எழுதி இருக்கிறார். உலகலேயே பெண்களுக்காக முதன்முதலில் பெண் விமானிகள் சங்கத்தை உருவாக்கியவர். இவரைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையையே எழுத வேண்டும். இவரைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஒரு விஷயம். 
 
அமெரிக்க கற்றுப்பினப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். உலகப் பெண்கள் எல்லோருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று போராடியவர். பெண்களால் எதையும் செய்ய முடியும் என்று சாதித்தும் காட்டியவர். ஒரு பெண்ணால், தன்னந் தனியாக உலகைச் சுற்றி வர முடியும் என்று செய்து காட்டியவர். ஆனால், விதி விளையாடி விட்டது. இது நடந்தது 1937-ஆம் ஆண்டு.

சாதனைப் பெண்மணி

விமானம் என்ற ஒரு பொருள் வானத்தில் பறந்து ஒரு இருபது வருடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போதே சாதனை படைக்கக் கிளம்பி விட்டார் இந்தப் பெண்மணி. அப்போது அவருக்கு வயது 39. அவர் பயன்படுத்தியது சாதாரண ஒரு காற்றாடி விமானம்தான். அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு முக்கால்வாசி உலகத்தைச் சுற்றி வந்து விட்டார். இன்னும் 7000 மைல்கள்தான் இருந்தன.

விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் அவசரமாகத் தரை இறங்க வேண்டிய கட்டம். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஹாவ்லாண்ட் தீவில் தரை இறங்க முயற்சி செய்து இருக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவருடைய விமானம் மாயமாய் மறைந்து விட்டது. இது நடந்தது 1937 ஜூலை மாதம் 2-ஆம் தேதி. அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள். `வடக்கேயும் தெற்கேயும் பறந்து கொண்டு இருக்கிறேன்`. அதோடு சரி. அந்த மனுஷி உலக வரலாற்றில் இருந்து மறைந்து போய் விட்டார்.

பிரார்த்தனை செய்வோம்

அவரைத் தேடுவதற்கு அமெரிக்கா ஒரு கப்பல் படையையே அனுப்பி வைத்தது. ஒரு சுவடும் கிடைக்கவில்லை. 250,000 சதுர மைல்கள் தேடி விட்டார்கள். இதுவரையில் ஒரு விவரமும் கிடைக்கவில்லை. 2002-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரையில் 14 மில்லியன் டாலர்கள் செலவு செய்து விட்டார்கள். 2007-ஆம் ஆண்டு தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. 


MH 370 Chinese Pray

இருந்தாலும் அந்தப் பெண்மணியின் எலும்புக் கூடுகள், பசிபிக் பெருங்கடலில் எங்கோ ஓர் ஆழ்ப்பகுதியில் இன்னும் வீர வசனங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றன. நம்முடைய மாஸ் விமான பயணிகளுக்காகவும் இந்த அரிய வீரப் பெண்மணிக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

MH 370 Multi Religion
மலேசிய அனைத்துலக விமான நிலையத்தில் பிரார்த்தனை

கட்டுரையை எழுதி முடிக்கும் போது மனசு லேசாக வலிக்கின்றது. காணாமல் போன மாஸ் எம்.எச்.370 விமானத்தின் எல்லா உயிர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

எம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள்

 
ரியூனியன் சிதைவுகள் எம்எச் 370 பாகங்கள் – நஜிப் உறுதி
ரியூனியன் சிதைவுகள் எம்எச் 370 பாகங்கள் – நஜிப் உறுதி


ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பாகங்கள், காணாமல் போன எம்எச் 370 விமானத்திற்கு சொந்தமானவை என பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பாகங்களை பிரான்ஸில் ஆய்வு செய்த அனைத்துலக ஆய்வாளர்கள், அவை எம்எச் 370 விமானத்தில் உள்ளவை என முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரியூனியன் தீவுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட விமான உடைந்த பாகங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக அவை பிரான்ஸ் கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டன. இச்சோதனையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

விமானம் காணாமல் போய் 515 நாட்கள் கழித்து இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள இந்த உண்மை காரணமாக, விமானம் மாயமானது குறித்த விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியூனியன் தீவுப் பகுதியில் இன்னும் விரிவாகத் தேடினால், விமானத்தின் மேலும் பல பாகங்கள் கண்டறியப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. அதனால் இப்பகுதியில் விரைவில் தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஜூலை 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4

 [பாகம்: 4]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 17.06.2015-இல் எழுதப்பட்டது.) 

தமிழீழ மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். செய்து வந்த உதவிகளைப் பற்றிய தகவல்கள் இந்தத் தொடரில் தெரியப் படுத்த படுகின்றன. இதில் இரகசியம் எதுவும் இல்லை. இந்தியத் தலைவர்கள் பெரும்பாலோருக்குத் தெரிந்த விஷயம்.



ஈழத் தமிழர்களுக்கு, ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கனவு கண்டவர். எம்.ஜி.ஆருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு இருக்கிறதே அது ஒரு வகையான பாச உணர்வு. ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு இருக்கிறதே அது இன்னொரு வகையான வாய்மை உணர்வு.

எம்.ஜி.ஆர். உயிர் பிரியும் போதும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றி பெற ஆயுதங்கள் தேவைப் பட்டன. அதற்கு எம்.ஜி.ஆர். தன் சொந்தப் பணத்தில் முதலில் பல கோடி ரூபாய் வழங்கினார். அதனால் மத்திய இந்திய அரசாங்கத்திடம் இருந்து தொல்லைகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அதைப் பற்றி எம்.ஜி.ஆர். கொஞ்சமும் கவலைப் படவில்லை. தன்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனி மாநிலம் கிடைக்க வேண்டும் என்று துணிந்து நின்றவர் எம்.ஜி.ஆர். அப்படியே சொல்லியும் வந்தார். செய்தும் காட்டினார்.



தமிழ் ஈழ மக்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து வாழ்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஈழத்துத் தமிழ்த் தந்தை செல்வா. அடுத்தவர் தமிழகத்து மக்கள் மனிதர் எம்.ஜி.ஆர். அதற்கும் அடுத்து வருபவர் இரும்பு மனுஷி இந்திரா காந்தி.

அவருடைய உயிர் பிரிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புகூட, 40 லட்சம் ரூபாய் பணத்தைப் புலிகளுக்கு வழங்கியதாகப் பிரபாகரனே கூறி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த நேரத்தில் இந்தியாவின் அமைதி காப்புப் படை வட இலங்கையில் முகாமிட்டு இருந்தது. அதைப் பற்றி எம்.ஜி.ஆர். கவலைப் படவே இல்லை. மத்திய அரசாங்கம் நினைத்து இருந்தால், எம்.ஜி.ஆர். செய்தது நடுவண் அரசாங்கத்திற்கு எதிரானச் செயல் என்று சொல்லி மாநில ஆட்சியையே கவிழ்த்து இருக்கலாம். ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்து இருக்கலாம்.

மறக்க முடியாத காலச் சுவடுகள்

எம்.ஜி.ஆர். கடைசி மூச்சை விடுவதற்கு முன் தன் சொந்தப் பணத்தில் 21 கோடி ரூபாய் கொடுக்கவும் எற்பாடு செய்து இருந்தார். தான் எப்போதும் பார்க்கும் அந்த நம்பிக்கையான மனிதர் வராததால் அதே ஆளைக் கொண்டு வரும்படி பணித்து இருக்கிறார். அந்த ஆள் போய் சேர்வதற்குள் எம்.ஜி.ஆரின் உயிரும் பிரிந்து விட்டது. இருந்தாலும் எம்.ஜி.ஆர். நினைத்தபடி சேர வேண்டிய இடத்தில் பணம் போய்ச் சேர்ந்து விட்டது.




விடுதலைப் புலிகளுடன் எம்.ஜி.ஆர். வைத்து இருந்த இடைவிடாத தொடர்பு; அவர்களுக்கு அவர் அளித்து வந்த மானசீகமான ஆதரவுகள் மறக்க முடியாத காலச் சுவடுகளாகப் பரிணமிக்கின்றன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் புலிகள் செலுத்திய அஞ்சலி ஒன்றே அதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர். மறைந்த போது

எம்.ஜி.ஆரின் மறைவு, உலகம் எங்கும் வாழ்ந்த தமிழர்களை உலுக்கியது. இதை எழுதிக் கொண்டு இருக்கும் அவரின் மறைவு என்னையும் பாதித்தது. நான் அவருடைய ரசிகன் என்பதற்காகச் சொல்ல வரவில்லை. எம்.ஜி.ஆர். மறைந்த போது என் சட்டையில் கறுப்புப் பட்டை அணிந்து ஒரு வாரம் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். அப்போது மலாக்கா ஜாசின் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். அது என்னவோ தெரியவில்லை. எம்.ஜி.ஆர். நம் நெஞ்சக் கலசங்களில் ரொம்பவும் ஆழமாய்ச் சம்மணம் போட்டு விட்டார். 




ஆக, எம்.ஜி.ஆரின் மறைவு, விடுதலைப் புலிகளையும் அதிகமாகவே உலுக்கிச் சிதைத்து விட்டது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.

இரங்கல் செய்தியில் அழுத பிரபாகரன்

ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டு நின்ற நேரம். அப்போது உதவிக் கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவர். தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரர். அவருடைய இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்களின் மார்பில் தீ மூட்டுவது போல் உள்ளது.




என் மீது வைத்து இருந்த அன்பையும், ஈழத்தின் மீது கொண்டு இருந்த ஈடுபாட்டையும் எங்களால் காலம் பூராவும் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். மறைமுகமாகச் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தமிழீழ மக்கள் மனதில் அவை என்றும் நிலைத்து வாழும்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பிய மறைந்த மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர் என்று பிரபாகரன் தன் இரங்கலில் தெரிவித்து இருந்தார்.

சென்னை பாண்டி பஜாரில் சின்ன ரத்தக் களறி

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். 1987 அக்டோபர் 31-ஆம் தேதி, எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து சென்னை திரும்பிய நேரம். அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கினார். 




நான்கு நாட்கள் கழித்து விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் ஆகிய புலித் தளபதிகளைச் சந்தித்தார். தமிழீழத்தில் நடப்பதைப் பற்றி அவர்கள் விளக்கினார்கள். அதன் பிறகு பிரபாகரனின் பிரதிநிதிகள் அடிக்கடி எம்.ஜி.ஆரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர்.

1982-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனுக்கும், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனுக்கும் ஒரு கைகலப்பு. அவர்கள் மொழியில் வேண்டும் என்றால் அது கைகலப்பு. நம்முடைய மொழியில் துப்பாக்கிச் சண்டை. ஒரு சின்ன ரத்தக் களறி. 




ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக, உமா மகேஸ்வரன் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து நீக்கப் பட்டவர். விலகிச் சென்று புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர். இருவரும் பரம எதிரிகள். எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டனர். மோதிக் கொண்டனர்.

கடல் கடந்து வந்து சென்னையில் தலைமறைவு

அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரையுமே சிங்களப் போலீசார் யாழ்ப்பாணத்தில் தேடிக் கொண்டு இருந்தனர். 1982-இல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணி வெடிகுண்டுகளை வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியது ஒரு காரணம். 





1981-இல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி, ராணுவத்தினரைக் கொன்றது இன்னொரு காரணம். அதற்காக அவர்கள் தேடப் பட்டு வந்தனர்.

அதனால், இருவரும் கடல் கடந்து வந்து சென்னையில் கொஞ்ச காலம் தலைமறைவாக வாழ்ந்தனர். ஆனால், வந்த இடத்தில் பழைய பகை சும்மா விடுமா. முட்டிக் கொண்டது. மோதிக் கொண்டனர்.



தமிழகப் போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர். அதைக் கேள்வி பட்ட சிங்கள அரசு சும்மா இருக்குமா. சிங்களப் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இறக்கை கட்டிச் சென்னைக்குப் பறந்து வந்தார்கள். கைது செய்யப் பட்ட போராளிகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். ஆனால், நடந்ததே வேறு.

எந்தக் காரணத்தைக் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்தக் கூடாது. அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்தார். அந்தச் சமயத்தில், தன்னுடைய முதலமைச்சர் அதிகாரத்தை எம்.ஜி.ஆர். நிலை நிறுத்திக் காட்டினார். இது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

பரபரப்பை ஏற்படுத்திய தீர்மானம்

அடுத்து தமிழகச் சட்டசபையில் அவசரம் அவசரமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தீர்மானத்தைக் கொண்டு வரச் சொன்னதும் எம்.ஜி.ஆர். தான். கைது செய்யப் பட்ட போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிற தீர்மானம். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. தமிழகத்தில் உள்ள இருபது கட்சிகளும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிய அந்தத் தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப் பட்ட அந்தத் தீர்மானத்தைக் காரணம் காட்டி இந்திய நடுவண் அரசுக்கு எம்.ஜி.ஆர் அவசரத் தந்தி அனுப்பினார். அந்தத் தந்திதான் பிரபாகரனையும் மற்றப் போராளிகளையும் காப்பாற்றியது. இல்லை என்றால் பிரபாகரனின் வரலாறு சிங்களச் சிறையிலேயே காலாவதியாகிப் போய் இருக்கும்.

உமா மகேஸ்வரனுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டது. அதனால் பிரபாகரன் சென்னையை விட்டு வெளியே போக முடியவில்லை. போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். பிரபாகரன் நீதிமன்றத்திற்கு வரும் போது தமிழகப் போலீஸ் அதிகாரிகளும் உடன் வருவார்கள். 




ஒரு நாள் போலீஸ்காரர்களின் கட்டுக் காவலையும் மீறி பிரபாகரன் மாயமாக மறைந்து போய் விட்டார். தமிழகப் பத்திரிகைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன. பெங்களூர் அல்லது பாண்டிச்சேரியில் பிரபாகரன் மறைந்து இருக்கலாம் என்று ஆருடங்கள் வேறு. போலீஸ்காரர்கள் எப்படி நினைத்தார்களோ தெரியவில்லை. தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். ஆனால், பிரபாகரன் மட்டும் ஆள் அகப்படவே இல்லை.

எம்.ஜி.ஆருக்கே உரித்தான மோகனப் சிரிப்பு

பழ.நெடுமாறன் என்பவர் தமிழகத்தின் மூத்த தமிழறிஞர். பிரபாகரனுக்கு நெருங்கிய மூத்த நண்பர். நல்ல மதிவறிஞர். ஒரு நாள் பெரியவர் பழ.நெடுமாறனை எம்.ஜி.ஆர் பார்த்தார். 




அப்போது எம்.ஜி.ஆர் ஒரு புன்முறுவலுடன், ’என்ன. உங்கள் நண்பர் பிரபாகரனைப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டீர்கள் போல இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். அப்புறம் எம்.ஜி.ஆருக்கே உரித்தான மோகனப் சிரிப்பு. பழ.நெடுமாறனுக்குப் புரிந்து விட்டது. சிரித்துக் கொண்டே அவரும் தலையை அசைத்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்

எம்.ஜி.ஆர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியது யார் தெரியுமா. எம்.ஜி.ஆர். தான். தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீது போலீஸ்காரர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்திற்கும் எம்.ஜி.ஆரின் அந்தச் சிரிப்பு ஒன்றே போதும். உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

பிரபாகரனை நீதிமன்றத்திற்கு கொண்டு போகும் போது, அவர் தப்பிச் செல்ல திட்டம் வகுத்தவர் எம்.ஜி.ஆர். தான். இங்கே இதைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. போகிற மாதிரி போய், போகிற வழியில் பிரபாகரனை விட்டு விடுங்கள் என்று போலீஸ்காரர்களுக்கே உத்தரவு போட்டவர் எம்.ஜி.ஆர்.





1984-ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். ஆனால், இந்த முறை பல ஆயிரக் கணக்கான இளைஞர்களையும் இளம் பெண்களையும் கொண்டு வந்தார். அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. அதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டு இருந்தன.

கறுப்புச் சட்டை போட்ட எம்.ஜி.ஆர்.

தமிழகம் எங்கும் விடுதலைப் புலிகளின் கண்காட்சிகள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப் பட்டது. அவ்வளவுக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதி அளித்து இருந்தார்.

சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கிய போது, அதை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தன. அப்போது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் அதே எம்.ஜி.ஆர். தான்.

ஈழத் தமிழர்களுக்காகக் கறுப்புச் சட்டை அணிந்ததோடு, தன்னுடைய சக அமைச்சர்களையும் கறுப்புச் சட்டை அணியச் சொன்னவர் அதே அந்த எம்.ஜி.ஆர். தான். அவரைப் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் நாளைய கட்டுரையில் வருகின்றன. படிக்கத் தவறாதீர்கள். (தொடரும்)

28 ஜூலை 2015

அப்துல் கலாம் - ஓர் இமயம் மறைந்தது

[இந்தக் கட்டுரை 29.07.2015 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.]

அப்துல் கலாம் எனும் அந்தத் தலைமகனின் பெயர் மலேசியாவில் மிகவும் பரிச்சயமான பெயர். பெரும்பாலான மலேசியத் தமிழர்களுக்கு நன்கு தெரிந்த பெயர். 

மலேசியத் தமிழர்கள் அவரை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். அண்ணல் காந்திக்குப் பின்னர் அப்துல் கலாம் மலேசியர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   


மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் மீது அதீதமான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள். அதனால் அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

தவிர மலேசிய ஊடகங்கள் அவருடைய செய்திகளைத் தவறாமல் பிரசுரித்து வருகின்றன. அவரின் மறைவுச் செய்திகளை எல்லாத் தமிழ் நாளிதழ்களும் பிரசுரித்தன. நான்கு ஐந்து பக்கங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு அச்சேற்றின.


இந்தியாவின் இரண்டாவது காந்தி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் அப்துல் கலாம். தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களைக் காண்பது அரிது என்று சொல்லும் அளவிற்கு மலேசிய மனங்களில் நிறைந்து மணம் பரப்புகிறார். 

தஞ்சோங் மாலிம் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பெரியவர் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய அக்கினிச் சிறகுகள் சுயசரிதையைப் பாட நூலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.


இமயம் மறைந்தது இந்தியம் அழுகின்றது

 
இமயத்தின் உச்சியைத் தொடுவதாக இருந்தாலும் சரி; ஆழ்கடலின் அடிபாதத்தைத் தொடுவதாக இருந்தாலும் சரி; மன ியில் மாசிலா உண்மை வேண்டும். 

அந்த ிமையில் மாசிலா நம்பிக்கை வேண்டும் என்று சொன்ன அந்த இமயம் சரிந்து விட்டது. வானத்தின் எல்லையில் இந்தியம் அழுகின்றது. வையகத்தின் எல்லையில் மனுக்குலம் கண்ணீர் சிந்துகின்றது.

ஐயா அப்துல் கலாம் அவர்கள் இனம், மொழி, சமயம், சாதி, சாதி, சடங்கு, சம்பிரதாயம் அனைத்தையும் கடந்து போன ஒரு சாதாரண மனிதர். ஆனால் அன்னைத் தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு மந்திரப் புன்னகை. அகில இந்தியாவிற்கு கிடைத்த ஓர் அறிவு ஜீவி.



மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்

ஏழ்மை எளிமையில் உச்சத்தைத் தொட்ட அந்த இமயம் மறைந்து விட்டது. மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

கரிகாலன் முடியாது என்று சொல்லி இருந்தால் கல்லணை கிடைத்து இருக்காது. காந்தியடிகள் முடியாது என்று சொல்லி இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காது. முடியும் என்றால் முடியும்; முடியாது என்றால் முடியாது.

இரண்டிற்கும் நம்பிக்கைதான் மூல காரணம். முடியும் என்று சொன்னால் வரலாறு எழுதப் படுகிறது. முடியாது என்று சொன்னால் வரலாறு அப்போதே அழிக்கப் படுகிறது. ஆக, "முடியும் என்ற நம்பிக்கை முதலில் ஒவ்வோர் இந்தியனுக்கும் வேண்டும் எனும் தூண்டுதல் உணர்வைத் தூண்டி விட்டவர்.


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் படித்து முதலில் பொறியாளரானார். 

பின்னர் அறிவியலாளரானார். பின்னர் குடியரசுத் தலைவராக உச்சத்திற்கு உயர்ந்து காட்டினார். தன் உயிரினும் மேலாக தமிழை நேசித்தவர். அதையும் தாண்டியிலையில் திருக்குறளைக் காதலித்தவர். இது நமக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் வியமாகும்.

 

பிரம்மசாரி அப்துல் கலாமிற்கு இரண்டு மனைவிகள்

ஒருமுறை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு மாநாட்டில் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அப்துல் கலாம் ஐயா சிரித்துக் கொண்டே எனக்குத் திருமணம் ஆகவில்லை என்றயார் சொன்னது. எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மனைவி அல்ல இரண்டு மனைவிகள் என்றார்.

மாநாட்டிற்கு வந்தவர்கள் மலைத்துப் போனார்கள். தொடர்ந்து சொன்னார். எனக்குச் சின்ன வயதாக இருக்கும் போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. நேரம் வரும் போது சொல்லலாம் என்று நினைத்து இருந்தேன் என்றார். 


அப்துல் கலாம் அவர்கள் திருமணம் ஆகாதவர். ஓர் அசல் பிரம்மசாரி என்று எல்லோருமே நம்பி இருந்தார்கள். ஆனால் திடீரென்று இப்பி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதும் இன்னொரு பத்திரிகையாளர் எழுந்து, உங்கள் மனைவிமார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு  அப்துல் கலாம் அவர்கள் தன் நெஞ்சுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டு ’இங்கே தமிழ் என்கிற ஒரு மனைவி இருக்கிறாள்.’ 

இடது பக்கத்தைத் தொட்டு ’இங்கே திருக்குறள் என்கிற இன்னொரு மனைவி இருக்கிறாள்’ என்றார். அப்புறம் என்ன மாநாட்டு அரங்கமே ஒரு சேரக் கைதட்டி ஆரவாரம் செய்தது. அரங்கமே அதிர்ந்தது. இந்த மாதிரி நகைச்சுவையாகப் பேசுவதில் அவர் கில்லாடி. 

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து சென்றாலும் பதவி அதிகாரத்தைச் சுயநலனுக்காகப் பயன்படுத்தாதவர். தமது குடும்பத்தினரைக் கூட குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்க மட்டார். 

மலேசிய தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம்

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம்பர மாளிகைகளைத் தவிர்த்து வந்தார். இந்திய அரசு அவருக்கு ஒரு பெரிய மாளிகையையே வழங்கியது. 

இருந்தாலும் அவர் மறுத்து விட்டார். ஒரு சாதாரண வீட்டிலேயே ஏழு ஆண்டுகளாகக் கடைசி காலம் வரை வாழ்ந்து காட்டினார்.


தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள்

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது சர்ச்சைகள் கிளம்பின. 

அப்படிப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று பல கோணங்களில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன.

இருந்த போதிலும், ஒரே ஒரு மனுவைத் தவிர மற்ற மனுக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். தூக்கு மேடைக்கு அனுப்பாமல் பலரின் உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கிறார்.

ஒரு குடியரசின் தலைவர், ஒரு பேராசிரியர், ஓர் அறிவியலாளர் என பன் முகங்களை கொண்டு இருந்தாலும் தகைசால் மனிதராக வாழ்ந்து காட்டியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். 

அன்னாரின் மறைவு இந்தியாவுக்கு மட்டும் அல்ல அகில் உலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மனுக்குலம் மயங்கி நிற்கிறது.

மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியுடன்

அப்துல் கலாம் அவர்கள் 1931-ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.

தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக அப்துல் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் பிறந்த வீடு தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் இருக்கின்றது.

ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். அப்துல் கலாம் அவர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர். 

1964-ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் ஒரு ரயிலையும் தனுஷ்கோடிக்கு இழுத்துச் சென்றது. 

ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் இளைஞர் கலாசாரம்


அதைப்பற்றி தன்னுடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் ’தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது. இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்த்தது இல்லை என்று எழுதி இருக்கிறார்.

ஓர் அறிவியலாளரைத் தங்களின் ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் கலாசாரம் மிக மிக அபூர்வம். அதைவிட அபூர்வம் என்ன தெரியுமா. அரசியல் துறையைச் சார்ந்த ஒருவரை மனப்பூர்வமாக ஈர்த்துக் கொளவதாகும். அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள், அதிசயங்களின் ஒட்டு மொத்தக் கலவை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப் பதவிகளில் இல்லை. நிர்வாக ஆளுமை இல்லை. இருந்தாலும், அவர் மீதான ஆத்மீக ஈர்ப்பு மட்டும் கிஞ்சிதமும் குறையவில்லை. 

மாறாக ன் இறுதி காலம் வரையில் பல இலட்சக் கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டு தான் இருந்தார். இட்லரால் கூட செய்ய முடியவில்லை. மாபெரும் மெஸ்மெரிசத் தன்மை. தலை வணங்குகிறோம் தலைவரே!


வீடு வீடாகச் செய்தித் தாள்களைப் போடும் வேலை


* அப்துல் கலாம் அவர்கள் 1931 அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜைனுலாபுதீன். ஒரு படகுக்குச் சொந்தக்காரர். தாயாரின் பெயர் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் சென்றவர்.

* உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வீடு வீடாகச் செய்தித் தாள்களைக் கொண்டு போய் போடும் வேலை செய்தார்.

* இந்திய விமானப் படையில் ஒரு போர் விமானி ஆக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு இலட்சியம். ஆனால், நிறைவேறவில்லை. அதற்கு காரணம், எட்டே எட்டு இடங்கள் இருந்த பணிக்கான தகுதிச் சுற்றில், இவர் 9-வது நபராக வந்தார். போர் விமானியாக ஆக முடியவில்லை. அப்படியே போர் விமானியாகி இருந்தால், ஒரு நல்ல அதிபரை இந்தியா இழந்து இருக்கும்.

* அதிபர் பதவி காலத்திற்குப் பின்னர், தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பணிக்கே மீண்டும் திரும்பினார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.


வீணை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு


* இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாகவும், உலகம் அறிந்த இந்திய அதிபதியாகவும் நன்கு அறியப்பட்டவர்.

* வீணை வாசிப்பது அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. தமிழ் மொழியில் கவிதைகள் எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார்.

* இவர் ஒரு சிறந்த விஞ்ஞானி. அனுபவம் பெற்ற அணுவியல் பொறியியலாளர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (DRDO) போன்ற அறிவியல் கழகங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

* இவருடைய குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். டாக்டர் அப்துல் கலாம் கடைக்குட்டி. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்கவும் நாட்டுக்காகவே உழைத்தவர்.

* ராமேஸ்வரத்தில் இவருடைய அண்ணன் முகம்மது முத்து மீரா லெபாய் மரைக்காயர் இருக்கிறார். அவருக்கு வயது 92.

* "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப் படுகிறார். எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம், வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்புகள் அபரிதமானவை. 
* இந்தியாவை அனைத்துலக அளவில் தலைநிமிர வைத்தது பொக்ரான் அணு ஆயுதச் சோதனை. இந்தச் சோதனை அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது.

* இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கிய பங்கு வகித்தவர்.

* கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் தயாரிக்கும் திட்டமும் இவருடைய தலைமையில் தான் இயங்கி வருகிறது.


இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அவருடைய கனவு


இவர் எழுதியுள்ள நூல்கள்:


  1. Turning Points; A journey through challenges 2012
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை. எஸ். ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds: Unleashing the Power Within India; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்); புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
  6. Mission India (திட்டம் இந்தியா); பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள்; பென்குயின் புக்ஸ், 2005.
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்); ராஜ்பால் & சன்ஸ், 2007.
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.


இவர் பெற்ற உயரிய விருதுகள்:


  • அறிவியல் டாக்டர் (பட்டம்), எடின்பரோ பல்கலைக்கழகம் - 2014
  • சட்டங்களின் டாக்டர் (பட்டம்), சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் - 2012
  • IEEE கவுரவ உறுப்பினர், ஐஇஇஇ - 2011
  • பொறியியல் டாக்டர் (பட்டம்), வாட்டர்லூ பல்கலைக்கழகம் - 2010
  • ஹூவர் மெட, ASME மணிக்கு, அமெரிக்கா - 2009
  • சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா - 2009
  • பொறியியல் டாக்டர் (பட்டம்), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் - 2008
  • கிங் சார்லஸ் II பதக்கம், ராயல் சொசைட்டி, இங்கிலாந்து - 2007
  • அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து - 2007
  • ராமானுஜன் விருது, ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை - 2000
  • வீர் சவர்கார் விருது     இந்திய அரசாங்கம் - 1998
  • தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது, இந்திய அரசாங்கம் -  1997
  • பத்மா பூஷன் (1981)
  • பத்மா விபூஷன் (1990)
  • பாரத் ரத்னா (1997)

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28.07.2015 செவ்வாய்க்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் நதிகளை இணைப்பது; மதுவை ஒழிப்பது; தூக்குத் தண்டனைகளை ரத்து செய்வது ஆகியவை அவருடைய விருப்பமாகவும் நோக்கமாகவும் இருந்தன. அடுத்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. 

அந்தப் பெருமகனின் கனவுகளை நிறைவேற்றினால், அதுவே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். (முற்றும்)