14 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 77

(21.11.2010 ஞாயிற்றுக் கிழமை கேள்வி பதில்களை காலை 10.00 மணிக்கு மேல் பார்க்கலாம்) 
 

இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங்
கே: கணினியை வைரஸ் தாக்கிவிட்டது என்கிறார்களே, வைரஸ் என்றால் என்ன?


ப: கணினி வைரஸ் என்பது கணினியைத் தாக்கும் ஒரு நச்சு நிரலி. கணினித் துறையில் தேர்ச்சிப் பெற்ற நிபுணர்களால் எழுதப் படும் சின்னச் சின்ன நிரலிகள். இந்த நிரலிகளை விஷமத் தனத்திற்காக அல்லது விளையாட்டிற்காக எழுதுவார்கள்.

இந்த நச்சு நிரலி ஒரு கணினிக்குள் நுழைந்ததும் கணினி முழுமையும் பரவி சேதம் விளைவிக்கும். ஒவ்வொரு வைரஸ் நச்சு நிரலிக்கும் தனித் தனியாக சில எழுத்துக் கோவைகள் இருக்கும். அவற்றுக்குப் பெயர் Strings. இதை Signatures என்பார்கள்.

இதுதான் நச்சு நிரலியின் கையெழுத்து. இந்தக் கையெழுத்தை வைத்துதான் ஒரு நச்சு நிரலியின் தலை எழுத்து நிர்ணயம் செய்யப் படுகிறது. Vital Information Resources Under Siege என்பதன் சுருக்கமே Virus.

1960 ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவம். கணினி அறிஞர்கள் கணினியை இயக்குவதற்கான அடிப்படை நிரலிகளை எழுதிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக ஒரு நிரலியைக் கண்டுபிடித்தார்கள். தானாகவே மாறும் தன்மை கொண்ட நிரலி. அதற்கு Self Altering Automata என்றும் பெயர் வைத்தார்கள்.

1980 ஆம் ஆண்டில் அந்த நிரலி ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு வெளியாகி விஷமிகளின் கைகளில் சிக்கியது. அதுவே இப்போது வைரஸ் எனும் பெயரில் கணினி உலகைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது.

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட்.
கே: நம்முடைய கணினியின் Operating System எனும் இயங்கு தளத்தை 'சி' எனும் கணினி மொழியில் எழுதி இருக்கிறார்களாம். உண்மையா? முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி எது?
ப: நாம் ஒரு தமிழரைப் பார்த்தால் தமிழில் பேசுகிறோம். சீனச் சகோதரரைப் பார்த்தால் நம்முடைய மலேசிய மொழியைப் பயன் படுத்துகிறோம்.


ஒரு வெள்ளைக்காரரைப் பார்த்தால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இல்லையா. அந்த மாதிரி கணினிக்குத் தெரிந்த மொழி ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் Machine Language.

கணினி புரிந்து கொண்டு செயல் படுகின்ற மொழி. அந்த மாதிரியான மொழிகளில் C, C++, C#, Java, Pascal, Cobra என்று ஒரு நூறு மொழிகள் உள்ளன. இவற்றில் எல்லாம் மிகவும் வலிமையான மொழி C மொழி ஆகும்.

விண்டோஸ் இயங்குதளம் அந்த மொழியில் தான் எழுதப் பட்டு இருக்கிறது. மிகவும் பிரமாதமான மொழி. அந்த மொழியை படிப்பதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த மொழி ஜாவா. அதைப் படிக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன.

சரி. முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி Fortran. ஐ.பி.எம் நிறுவனம் 1957 ஆம் ஆண்டில் உருவாக்கியது. FORmula TRANslation என்பதன் சுருக்கம். கணித அறிவியல் பணிகளுக்கு இந்த மொழி பயன் படுத்தப் படுகிறது.

ஒரு கல்லூரி மாணவி, ஜோகூர்

கே: நான் உங்களிடம் PHP கணினி மொழி பற்றிய கேள்வியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் ஒரு கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று யாரோ கேட்ட கேள்வியை நான் கேட்டதாகப் பத்திரிகையில் போட்டு இருக்கிறீர்கள். ஒரு கல்லூரியில் கணினித் துறையில் படிக்கும் மாணவிக்கு 'பார்மேட்' செய்யத் தெரியாதா? என்னுடன் படிப்பவர்கள் இது கூடவா எனக்குத் தெரியவில்லை என்று நினைக்க மாட்டார்களா?
ப: அப்படியா. மடிக்கணினியை Format செய்வது என்பது கணினி சம்பந்தமான ஒரு நல்ல கேள்வி. எல்லாருக்கும் பயன்படும் கேள்வி. அந்தக் கேள்வி உங்களுடைய கணினித் திறமையைச் சிறுமை படுத்தி விட்டதாகச் சொல்கிறீர்கள். நீண்ட வசை மொழிகளை வேறு எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி.


உங்களுக்கு ஒன்று தெரியுமா. உலகத்திலேயே மிகச் சிறந்த சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி Mr.Bean. அந்த மிஸ்டர் பீனின் மனைவி சுனேத்ரா ஓர் இந்தியர்.

ஓர் இந்தியரைக் கல்யாணம் செய்து கொண்டதால் மிஸ்டர் பீன் என்கின்ற ரோவான் அட்கின்சனை ஆங்கிலேயர்கள் தவறாக நினைக்கவில்லையே.

அதனால் மிஸ்டர் பீனின் கலைத் திறைமை சிறுமைப் பட்டுப் போகவில்லையே. பார்க்கும் பார்வைகள் வேறு. பாவனைகளும் வேறு.

கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' உலவியை Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. சரி. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த நரிப் பிழம்பின் சாதனைகளைக் கண்டிப்பாக இங்கே சொல்ல வேண்டும்.


இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த உலவி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸக்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த

நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத் தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள். ஆக, வேகமாகவும் பாது காப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவம் அமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல் படுகிறது.

தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி. அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன.

http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.

11 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 76

(அன்பு வாசகர்களே, உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. சென்ற அக்டோபர் மாதம் தென்னிந்தியா சுற்றுலா போய் இருந்தேன். கொடைக்கானல், இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இணைய வசதிகள் உள்ளன. இருப்பினும், மலேசிய நண்பன் நாளிதழ் ஆசிரியருடன் இணையத் தொடர்பு கொள்வதில்தான் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. அதனால், இரண்டு வாரங்களுக்கு கேள்வி-பதில் அங்கம் இடம் பெறவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.)

ஜி.இராமன் graman@tm.com.my
கே: சில பெற்றொர்கள் Streamyx இணையத் தொடர்பைப் பொருத்திக் கொள்வதால் பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் பயப்படுகிறார்கள். இதைத் தடுக்க வழி இருக்கிறதா?

ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இருந்தாலும், பிள்ளைகள் பார்க்கக் கூடாத படங்களைப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் ஒரு வகையில் பெற்றோர்களே.

பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு இவர்கள் பார்க்க வேண்டிய படங்களைப் பார்த்து முடித்து, அந்தப்
படங்களுக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யும் போது சேவலும் கூவி விடுகிறது.

அரக்கப் பரக்க படுக்கப் போகும் போது
சி.டி.யை மறந்து விடுகிறார்கள். மறுநாள் பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் அந்தப் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பழியை எதிர்வீட்டு எல்லம்மா மீதும் பக்கத்து வீட்டு பார்வதியின் மீதும் போட்டு தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வார்கள். உள்ளங் கையில் புண்ணை வைத்துக் கொண்டு கண்ணாடி மீது குறை சொல்வது தப்பு.
http://www.sofotex.com/downloads/d94055.html
எனும் இணையத் தளத்திற்குப் போய் Parental Control Flter எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.


எஸ்.பி.பாலகிருஷ்ணன்   oum9100@yahoo.com.sg
கே: என்னிடம் அசல் விண்டோஸ் XP இருக்கிறது. கண்னியை விற்றவர் அதை என்னிடம் கொடுத்தார். இப்பொழுது கணினியை இயக்கியதும் This copy of window is not genuine என்று வருகிறது. அப்படி என்றால் என்னுடைய விண்டோஸ் செயலி போலியானதா?

ப: நல்ல கேள்வி. உங்களுடைய விண்டோஸ் XP உண்மையானதுதான். அதில் கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம். இருந்தாலும் என்ன நடந்திருக்கலாம். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. என்ன தவறு என்பது எனக்குத் தெரியும். அந்தத் தவறை இங்கே சொன்னால் எனக்குதான் பிரச்னை.

என் நண்பருக்கும் இந்த மாதிரி நடந்திருக்கிறது. உங்களிடம் கணினியை விற்றவர் அசல் விண்டோஸைப் பயன் படுத்தவில்லை என்பதை
அவரிடமே போய் புகார் செய்யுங்கள். பிரச்னையைப் பதற்றம் இல்லாமல் சொல்லுங்கள். தீர்த்து வைப்பார்.

அவர் பிடிவாதம் செய்தால், அதற்கும் வழி
இருக்கிறது. சமாதானமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்க்கலாம். சிங்கப்பூரில் இந்த மாதிரியான சிக்கலகள் குறைவு. வேதனையாக இருக்கிறது.

Raju Murali   <raju_pollathavan@yahoo.com>
கே: சார், வணக்கம். நான் ஒரு கல்லூரி மாணவன். எனக்குத் தமிழ் மொழியின் மீது மிகவும் பிரியம். எனக்கு சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம், மற்றும் பல நிறைந்த இணையத் தளம் வேண்டும். சார், உதவி செய்யுங்கள்.

ப: உங்களுடைய மின்னஞ்சலில் நீங்கள் ஒரு பொல்லாதவன் என்று பதிவு செய்து இருக்கிறீர்கள். உண்மையிலேயே பொல்லாதவரா. இருந்தாலும் தமிழ் மொழி யின் மீது ஏற்பட்டுள்ளஇணக்கத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். http://www.tamilnation.org/literature/anthologies.htm எனும் இணையத் தளத்திற்குப் போய் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி முத்துக் குளியுங்கள்.

அங்கே இருந்து பார்த்தால் தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல் தெரியும். வாழ்த்துகள்.

வனஜா முத்து, ஜாலான் செராஸ், கோலாலம்பூர்
கே: எனக்கு சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுகள் வேண்டும். அதிகமான விலையில் விற்கிறார்கள். வாங்கிக் கொடுக்க சிரமமாக இருக்கிறது. உங்களுடைய உதவி தேவை சார்?

ப:
இல்லாதவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வதே நம்முடைய நோக்கம், நம்முடைய இலட்சியம். இந்த வாரம் ஒரு புதிய விளையாட்டின்
இடத்தைத் தருகிறேன். ஒவ்வொரு வாரமும் ஓர் இடம். சரியா. இந்தத் இணையத் தளம் பசிபிக் மாக்கடலில் மேற்கு சமோவா தீவில் இருக்கிறது.

உலகில் உள்ள விளையாட்டுகள், படங்கள், செயலிகள் எல்லாவற்றையும் கோடிக்கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

ஏழை நாடுகளுக்கு இலவசமாகக் கொடுப்பதே இவர்களுடைய வேலை. அவர்களுடைய கணக்கு ஏழைகள், ஏழை நாடுகள். அவ்வளவுதான். பாலித் தீவிற்குப் போயிருந்த போது தெரிய வந்தது. http://rapidshare.com/files/254436672/Tropix_DL.exe எனும் தளத்திற்குப் போய் Free User என்பதைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள் ளுங்கள். இதைத் தயாரித்தவர்கள் செலவு செய்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர்களுக்கு கிடைத்த வருமானம் 36 மில்லியன் டாலர்கள். 1800 மடங்கு பணம் பார்த்து விட்டார்கள். இப்பொழுது இலவசமாகக் கிடைக்கிறது.

ஆர்.ஜெகநாதன், சிம்பாங் அம்பாட், தைப்பிங்
கே: Computer எனும் சொல் எப்படி உருவானது? அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ப:
Compute எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் Computer எனும் சொல். Compute என்றால் கணக்கிடுதல் என்று பொருள். அந்தச்
சொல்லில் இருந்து வந்ததைத் தமிழில் கணினி என்கிறோம்.

கணினி என்பது தூய்மையான தமிழ்ச் சொல். இந்தக் 'கம்பியூட்டர்' எனும் சொல்லுக்கு வேறு மாதிரியாகவும் விளக்கம் கொடுக்கிறர்கள். Computer எனும் சொல்லின் ஒவ்வோர் எழுத்தையும் பிரித்து அதற்கு விளக்கம் இப்படித் தரப் படுகிறது. 
Commonly Operated Machine Particularly Used for The Education and Research.

பொ.செல்லத்தேவன், பத்துக்கேவ்ஸ், கோலாலம்பூர்
கே: 16 Bit, 32 Bit, 64 Bit Operating System என்கிறார்களே அப்படி என்றால் என்ன? எதை வைத்து இந்த எண்களைக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்?
ப: Operating System என்றால் ஒரு கணினியை இயக்குகின்ற முறைமை. கணினியை இயக்குவதற்கு பல நிரலிகள் இருக்கலாம். இருந்தாலும் ஆகப் பெரிய இயக்க முறைமைக்குத் தான் Operating System என்று பெயர். Windows Operating System அவற்றுள் ஒன்று. இந்த இயக்க முறைமைதான் ஒரு கணினியைச் செயல் பட வைக்கும் தலையாய இயக்கம். சுருக்கமாகத் தமிழில் இயங்குதளம் என்கிறோம்.

இந்த இயக்க முறைமை இல்லை என்றால் கணினி இயங்காது. இந்த இயக்க முறைமையில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல்கள் பரிமாறப் படுகின்றன அல்லது எவ்வளவு வேகத்தில் அலசப் படுகின்றன என்பதை இந்த 16, 32, 64 எண்கள் குறிக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த கணினிகள் 16 Bit அளவில் இயங்கின. பத்து வருடங்களுக்கு முன்னால் வந்தவை 32 Bit அளவில் இயங்கின. இப்போது வரும் கணினிகள் 64 Bit அளவில் இயங்குகின்றன. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் ஒரு மில்லியன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆற்றலை இப்போது வரும் கணினிகள் பெற்று உள்ளன. நிரலி என்பது வேறு. கணினி இயக்க முறைமை என்பது வேறு.

வி.எஸ்.வி.வெங்கடாசலம்  <venkatnelah@gmail.com>கே: சார், என்னுடைய கைப்பேசியில் (Handphone) ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன்படுத்த ஆசைப் படுகிறேன். இணையத்திலிருந்து அந்த அகராதியைப் பதிவிறக்கம் செய்து கைப்பேசியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கைப்பேசியில் தான், கணினியில் அல்ல. என் நண்பர் சொல்கிறார். கணினியைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியும், கைப்பேசி விஷயங்கள் அதிகம் தெரியாது என்று. உங்களால் முடியும் என்று நான் பந்தயம் கட்டி இருக்கிறேன். உங்கள் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார்?
ப:
கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன் படுத்த முடியும். அது ஒன்றும் பெரிய வர்ம சாஸ்திரம் அல்ல. இந்த மாதிரியான சின்ன
விஷயங்களுக்கு எல்லாம் பந்தயம் கட்ட வேண்டாம். ஆரோக்கியம் அல்ல.

http://www.freelang.net/dictionary/tamil.php எனும் இணையத்தளத்திற்குப் போங்கள். ரமேஷ் கௌரி ராகவன் என்பவர் ஓர் அருமையான செயலியை உருவாக்கிக் கொடுத் திருக்கிறார். அவருக்கு முதலில் நன்றி சொல்வோம்.

இந்த அகராதியைக் கணினிக்குள் பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள். அப்புறம் கைப்பேசிக்குள் பதிவேற்றம் செய்யலாம். அதன் பின்னர் உங்கள் கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகர வரிசை புன்னகை பூக்கும்.

சில கைப்பேசிகளில் அந்த அகர வரிசையை 3GP முறைமைக்கு மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம். 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

பிரச்னை இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்கள். மிகவும் சிரமமாக இருந்தால் என் கைப்பேசி 012-5838717 க்கு அழைக்கலாம். தமிழ் எழுத்துருகள் (Fonts), விளையாட்டுகள், ஆவணங்கள் என்று நிறைய இலவசமாகக் கொடுக்கிறார்கள். இணையத்தில் இலட்சக்கணக்கானவர் தமிழுக்காகப் பல வகைகளில் உதவி செய்கிறார்கள்.

சிவனேஸ் ஈஸ்வரி sivanes1526@gmail.comகே: சார், வணக்கம். இணையத்தின் மூலமாக வேலை செய்வது பற்றி இன்று காலை கைப்பேசியில் பேசினேன். அதற்கு நீங்களும் உங்கள் மகன் ஸ்ரீ முருகமுதன் அவர்களும் நல்ல பதில்களைக் கொடுத்தீர்கள். நன்றி. Yayasan Kemajuan Sosial Malaysia எனும் அற நிறுவனத்தில் சில மாதங்கள் Tele Working பற்றி படித்தேன். சொந்தமாக வேலையைத் தேடிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார்கள். இணையத்தில் வேலைத் தேடி தரும் நிறுவனங்கள் எத்தனையோ உள்ளன. இருந்தாலும் இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து உதவி செய்யுங்கள்.
ப:
நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டு சில வாரங்களாகி விட்டன. Tele Working என்பதை தொலைநிலைப் பணி என்று தமிழில் சொல்லலாம்
அல்லது இணைய வழி வேலை என்றும் சொல்லலாம். இப்போது உலகமே பொருளாதார வகையில் ஒரு மந்தமான நிலையில் இருக்கிறது.

மலேசியப் பிரதமரிடம் பல்கலைக்கழகப் படிப்பு உதவி பெறும் குமாரி.காஞ்சனா


உலகமே அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதால் ஏற்படும் ஒரு இக்கட்டான நிலைமை. எல்லாம் ஜார்ஜ் புஷ் முன்பு பண்ணிய வேலை. ஒரு சில மாதங்கள் பொறுத்து தொலைநிலைப் பணிகளில் ஈடுபடுவது நல்லது என்று நான் நினக்கிறேன். இருப்பினும்

http://www.typeinternational.com/
http://www.online-dataentry.com/
http://my.88db.com/


எனும் இடங்களுக்குப் போய் முயற்சி செய்து பாருங்கள். உறுதியாக எதையும் சொல்ல முடியாது. உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுகள்.

10 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 75




சரவணன் சற்குணன், தம்பின்
கே: கணினி மூலமாக மின்சாரம், தண்நீர், அஸ்ட்ரோ, இண்டா வாட்டர் சேவைக் கட்டணங்களைக் கட்டுவது தேவை இல்லாத தலைவலிகள் என்று சிலர் புலம்புகிறார்கள். உங்கள் கருத்து என்ன?
மலேசியா அஸ்ட்ரோ நிறுவனத்தின் சின்னம். மலேசியக் கோடீஸ்வரர் திரு.அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிறுவனம்

ப: வீட்டில் இருக்கும் மனைவி ஆசை ஆசையாகச் செய்து கொடுக்கும் இட்லி தோசை இருக்கிறதே அது சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பாருங்கள், பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பார்வதி அம்மாள் கடையில் சுட்டுத் தரும் இட்லி தோசை மட்டும் ரொம்பவும் பிடிக்கும். ரொம்பவும் ருசியாக இருக்குமாம். இது எல்லாம் ஒரு நினைப்பு. அந்த நினைப்புதாங்க  பிழைப்பையே கெடுக்கிறது. மனைவியின் அருமை போகப் போகத்தான் தெரியும். அப்படித் தாங்க எல்லாம்.

உலகமே கணினி மயமாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கணினி இல்லை என்றால் மனுக்குலம் இயங்காது எனும் ஒரு நிலைமை ஏற்படப் போகிறது. உண்மையிலும் உண்மை.

அதற்குள் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன கணினி, தேவையில்லாத ஒரு பிரச்னை என்று நீங்கள் நினைத்தால், பின்னர் பிரச்னை உங்களுக்குத்தான்.

ஏனென்றால், கணினி இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. அப்போது நீங்கள் நிச்சயம் பின் தள்ளப்படுவீர்கள். அப்புறம் உங்கள் சந்ததியினர் உங்களை மதிப்புக் குறைவுடன் பார்க்கலாம்.

உலகளாவிய ஞான சூன்யமாகப் பார்த்தாலும் பார்க்கலாம். அந்த மாதிரியான நிலைமை வந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் கணினியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். படித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.

ஆசிராவரணி, தாமான் இண்டா, தெலுக் இந்தான்
கே: கணினி மனிதனின் அறிவை மிஞ்சி விடுமா?
எதிர்கால மடிக்கணினி

ப: நல்ல கேள்வி. மனிதனைப் போல கணினியால் சிந்திக்க முடியாது. நல்லது கெட்டது சரி பிழை என்று எதுவுமே அதற்கு தெரியாது. தன்னை உருவாக்கியது யார் என்றும் தெரியாது. ஆனால், மனிதன் சொல்லும் கட்டளைகளை நொடிப் பொழுதில் செய்து விடுகிறது. மனிதன் சொன்னால்தான் அது கேட்கும். செய்யும்.

சொன்னதைச் செய்யக்கூடியது. அவ்வளவுதான்! சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதனின் கட்டளைகளை நிறைவேற்றும் போது மனிதனையே அது மிஞ்சிவிடுகிறது. இருப்பினும் அதன் வேகம் இருக்கிறதே அது மனித மூளையின் வேகத்தையே தாண்டிவிடுகிறது. அபாரமான வேகம்.

அண்மையில் Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தக் விஷயத்தில் கணினி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றத் தொடங்கி விடும். அப்புறம் என்ன.

கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வந்துவிடும். அடுத்து வீட்டு கணினியை இந்த வீட்டிக் கணினி குறை சொல்லும். இந்த வீட்டுக் கணினி எதிர்வீட்டுக் கணினியை வம்புக்கு இழுக்கும்.

மெகா சீரியல்கள் பார்ப்பதில் கணினிகளுக்குள் வாய்ச்சண்டை வரலாம்.   அடடா... கவலைப்பட வேண்டாம். இதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும். நடக்கப் போகிறது என்னவோ உண்மை. பொறுத்து இருங்கள். வேடிக்கையைப் பார்க்கலாம்!

ஜெயக்குமார் சிவபாலன், பத்தாங் பெர்சுந்தை
கே: கணினியைப் பயன் படுத்திக் கெட்டுப் போனால் அதைப் பழுது பார்க்க நிறைய காசு செலவு ஆகிறது. கணினி கெட்டுப் போகாமல் இருக்க வழி இருக்கிறதா?
கணினியைப் பாதுகாக்க வேண்டும்தான். அதற்காக மருத்துவரைக் கூப்பிட்டு அதன் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எல்லாம் சோதனை செய்யவது...

ப: வானொலி, தொலைக்காட்சி, கைத்தொலைப்பேசி, சலவைச் சாதனம், கார் போன்றவை நம் வாழ்க்கையில் அத்தியாவசியச் சாதனங்கள். அவை எப்படி இயங்குகின்றன என்பது பலருக்குத் தெரியாது. இருந்தாலும் அவை நம் வாழ்வில் ஒன்றாய்க் கலந்து விட்டன.

இந்தச் சாதனங்கள் பழுது அடைந்து போனால், பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் செல் கிறோம். žர் செய்து கொள்கிறோம். அதே போலதான் கணினியும். கணினியைத் தவறாகப் பயன்படுத்திக் கெட்டுப் போனால் பெரிய தொல்லை என்று பலர் தயக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

கெட்டுப் போன கிட்னியை வெட்டி வீசிவிட்டு வேறு ஒன்றை வைத்துக் கொள்வது நடைமுறைக்கு வந்துவிட்டது இல்லையா. ஆக, வீட்டிலிருக்கும் வளர்ப்புப் பிள்ளையாகக் கணினியை நினைக்க வேண்டும்.

கெட்டுப் போகாத பொருள் எதுதான் இல்லை. சொல்லுங்கள். எல்லாமே  ஒரு நாள் பழுதாகிவிடும். சந்தையில் விற்கும் கண்ட கண்ட பவுடர்களைப் பூசி நம்முடைய உடலை நாம் அழகு பார்க்கவில்லையா.

போற்றிப் போற்றி பார்க்கும் இந்த உடலும் ஒரு நாளைக்குப் பழுதாகி மண்ணுக்குப் போகிறதுதானே.

அதற்கு ஏதாவது ஒன்று வந்துவிட்டால் டாக்டரைப் போய்ப் பார்க்கவில்லையா.  அதைப் போல கணினியும் ஒரு நாள் பழுதாகும். žர் செய்ய வேண்டும். அவ்வளவுதான். அப்படி நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்க வேண்டும்.

முதலில் கணினி கெட்டுப் போனால் எனும் அச்சத்தைத் தூக்கி வீச வேண்டும். வந்தது வரட்டும் எனும் நம்பிக்கை வரட்டும். இப்பொழுது வரும் கணினிகள் சுலபத்தில் கெட்டுப் போகாதவை.

உள்ளே தூசி புகுந்தால் தும்மலும் வராது. வெளியே தண்நீர் பட்டால் காய்ச்சலும் வராது. சரியா. கணினிகள் மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமாகிக் கொண்டு வருகின்றன.

பத்மாவதி, ஆர்.ஆர்.ஐ, சுங்கை பூலோ
கே: கணினியில் 'மூர் விதி' என்று இருக்கிறதாம். அப்படி என்றால் என்ன?
இவர்தான் கணினி வித்துவான் கோர்டன் மூர்

ப: மூர் விதி என்பதை ஆங்கிலத்தில் Moore's Law என்கிறார்கள். Intel கணினி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் Gordon E. Moore என்பவர் ஒருவர். இவர் 1965 ஆம் ஆண்டில் கணினிகளைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார்.

ஒவ்வோர் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை கணினியின் ஆற்றல், செயல் பாட்டுத் திறன்  இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதே சமயத்தில் அதன் தயாரிப்பு விலை இரண்டு மடங்காகக் குறையும். இதுதான் அவர் சொன்ன தீர்க்கதரிசனச் சொற்கள்.

இதை மூர்ஸ் கோட்பாடு என்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர் சொன்னது என்னவோ அது சரியாகவே நடந்து வருகிறது. கணினி உலகில் இப்படி ஓர் அதிசயம் நடக்கும் என்று முன்னறிந்து சொல்லி விட்டார்.

அவர் வியூகம் செய்தது போல கணினியின் ஆற்றல், திறன், சக்தி, வேகம், நம்பிகை எல்லாமே  படுபயங்கரமாகக் கூடிவிட்டது. அதற்கு ஏற்றவாறு அதன் விலையும் அளவுக்கு அதிகமாகக் குறைந்தும் விட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 35 கோடி ரிங்கிட்டிற்கு விலை போன வன்தட்டு இன்று முன்னூறு வெள்ளிக்கு விற்கப் படுகிறது. இது எங்கு போய் முடியுமோ தெரிய வில்லை.

இந்த நிலைமை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் ஆருடம் சொல்கிறார்கள். எதற்கும் ஓர் இல்லை இருக்கும் இல்லையா. Infinity எனும் இல்லாமை நிலைமை வர முடியாது.

உங்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் கணினியின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரிங்கிட் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். இதே கணினி பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் அதன் விலை RM8,000 ஆக இருந்திருக்கும்.

இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் விலை ஐம்பது ரிங்கிட்டிற்கும் கீழே குறைந்து போயிருக்கும். போதுமா! அதற்குள் கணினியின் திறமை எங்கேயோ போயிருக்கும். நீங்களும் நானும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

இப்போதுள்ள கணினிகள் இன்னும் பத்து ஆண்டுகளில் பத்து காசுப் பொருள் ஆகிவிடும். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளக் கூட மாட்டார்கள். அப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக வரும். நினைவில் வைத்துக் கொள்வோம்.

குமாரி லெட்சுமி வீரராகு, சித்தியவான் (குறும் செய்தி 3.10.2010)
கே: Hard Disk என்பதை வன்தட்டு என்கிறோம். முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட வன்தட்டுகளைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்கள்?
வன்  தட்டின் உட்பாகம்

ப: நம் கணினியில் உள்ள வன்தட்டில் தான் செய்திகள் படங்கள் தகவல்கள் எல்லாமே பதிவு செய்யப் படுகின்றன. இங்குதான் கணினியின் Operating System அமர்ந்து கொண்டு கணினியை இயக்குகிறது. 1956ல் தான் வன்தட்டைக் கண்டுபிடித்தார்கள். IBM நிறுவனம் கண்டுபிடித்தது.

அதன் கொள்அளவு 5 MB. இங்கே கொள் அளவு என்றால் Space. வன் தட்டின் பெயர் RAMAC 305. இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்கும். அவ்வளவு பெரியது.  அப்போதைக்கு அது பெரிய விஷயம். அதன் விலை 50,000 அமெரிக்க டாலர்கள்.

இப்போது நாம் 1 Terra Byte வன்தட்டுகளைப் பயன் படுத்துகிறோம். இது அப்போது இருந்திருந்தால் இதன் விலை என்ன தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 35 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது பினாங்கு பாலத்தைப் பாதி கட்டி முடித்து விடலாம்.


கொள் அளவு விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
1000(TB) Tera Bytes = 1 Peta Byte(PB)
1000(PB) Peta Bytes = 1 Exa Byte(EB)

இப்போது நாம் 2010 ஆண்டில் 'பெத்தா பைட்'டில் இருக்கிறோம்.


கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
பயர் பாக்ஸ் - உலகின் தலை சிறந்த உலவி

ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' ஐ Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. இந்த நரிப் பிழம்பின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும். இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த நிரலி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸ”க்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத்தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள்.

ஆக, வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல்படுகிறது.

இந்த உலவி தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன. http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.

கணினியும் நீங்களும் - பகுதி 74

(அன்புள்ள வாசகர்களே, அண்மையில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஈப்போ மருத்துவமனையில் CCU பிரிவில்  ஒரு வாரம் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அதனால் சரிவர மேல் பதிவுகள் செய்ய முடியவில்லை. இப்போது உடல் நலம் தேறி வருகிறது.  மறுபடியும் பழைய நிலைக்கு வர சில நாட்கள் பிடிக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.)
ksmuthukrishnan@gmail.com

எஸ்.பி.பாலக்கிருஷ்ணன்  oum9100@yahoo.com.sg
கே: வலைத் திரட்டி என்றால் என்ன?
ப: இணையத்தில் இலட்சக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. இந்த வலைப் பதிவுகளை எல்லாம் ஓர் இடத்தில் ஒன்று திரட்டி தொகுத்துத் தரும் இணையத் தளத்திற்குப் பெயர் தான் வலைத் திரட்டி.

தமிழில் பல திரட்டிகள் உள்ளன. தமிழ் மணம், தமிழிஷ், உலவு, தமிழ் 10, திரட்டி, இண்டிலி, தமிழ்ப் பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சாம் ஜோசுவா sam.jo511@gmail.com
கே: பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களுக்காகக் கணினி பயிலரங்கம் நடத்தவிருப்பதாகக் கேள்வி பட்டோம். எத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்? கலந்து கொள்ள என்ன தகுதி தேவை?

ப:
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் கணினிப் பயன் பாட்டில் பின் தங்கி விடக் கூடாது. சிறந்து விளங்க வேண்டும் எனும் ஒரு தூர நோக்குச் சிந்தனை. 25.09.2010 - 26.09.2010 ஆகிய இரு தினங்களில் லூமுட் - தெலுக் பாத்தேக் கடல் கரை மையத்தில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்கம் நடைபெறுகிறது.

மாண்புமிகு டத்தோ வீரசிங்கம் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 60 தமிழ் எழுத்தாளர்களும் 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்கிறார்கள். கணினியில் தமிழை உள்ளீடு செய்வது; தமிழ் நிரலிகளைக் கணினிக்குள் நிறுவுவது; தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது; தமிழில் வலைப் பூக்கள் தயாரிப்பது போன்ற விவரங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்யப் படுகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் வரலாற்றில் இது ஒரு முன்னோடித் திட்டம். கணினிச் சகாப்தத்தில் தமிழ் எழுத்தாளர்கள் முத்திரை பதிக்கும் ஒரு காலக் கட்டம்.

இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனக்கு என்று ஓர் இணையத் தளத்தையும் உருவாக்கிச் சாதனை படைக்கிறது.

இந்தப் பயிலரங்கத்திற்கு உயிரோட்டம் வழங்கி வரும் மூத்த எழுத்தாளர்கள் இராம.பெருமாள், சித.நாராயணன், திருமதி.கமலாட்சி ஆறுமுகம், ஜி.பி.செல்வம், மா.செ.மாயதேவன் ஆகியோருக்கு நம்முடைய பாராட்டுகள். வாழ்த்து கள்.
http://peraktamilwriters.blogspot.com

நவீனச் செல்வம், தாப்பா  (குறும் செய்தி 05.09.2010)
கே: இணையத்திலிருந்து காப்பி அடித்து கேள்விகளுக்குப் பதில் கொடுத்து நல்ல பேர் வாங்குவது  பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:
சாயம் அடிக்கப் பயன் படுத்திய ஏணியை எட்டி உதைத்துச் சந்தோஷப் படுபவர்களைப் பற்றி நினைக்க நேரம் இல்லை.

கல்லூரி மாணவி, ஜொகூர் பாரு
கே: என்னுடைய கணினியில் நிறைய Virus எனும் அழிவிகள் நுழைந்து விட்டதாக நினைக்கிறேன். கணினி மெதுவாக வேலை செய்கிறது. கணினியை Format சுத்திகரிப்பு செய்ய வேண்டுமா?

ப: கணினி மெதுவாக வேலை செய்தால் வைரஸ்கள் கணினிக்குள் நுழைந்து விட்டன என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், வைரஸ்களின் தாக்குதலினால் தான் ஒரு கணினி மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு பொதுவான முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. மற்ற காரணங்களும் இருக்கின்றன. 

அதற்காகக் கணினியைச் சுத்திகரிப்பு செய்துதான் ஆக வேண்டும் எனும் அவசியம் இல்லை. Hard Disk என்பது கணினியின் உயிர்ப் பொருள்களில் ஒன்று. அந்த வன் தட்டை அடிக்கடி சுத்திகரிப்புச் செய்யக் கூடாது.

சுத்திகரிப்பு என்றால் Format. வன் தட்டின்  ஆயுள் காலத்தில் ஒரு பத்து தடவை வரை சுத்திகரிப்பு செய்யலாம். அதற்கு மேல் போகக்கூடாது.

அப்புறம் அதன் செயல் திறன் குறையும். இல்லாத பிரச்னைகளைக் கொடுக்கும். அவசியம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் NTFS எனும் கோப்பு முறையில் செய்யுங்கள். FAT 32 முறையில் செய்யவே வேண்டாம்.

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள். தேவை இல்லாத ஆவணங்கள், விளையாட்டு நிரலிகள், படங்கள், பாடல்கள் இருந்தால் முடிந்த வரையில் குறைத்து விடுங்கள்.

ஒரு சிலரின் கணினிகளில் தேவை இல்லாத படங்கள், பாடல்கள் என்று மலை மலையாகக் குவிந்து கிடக்கும். குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைத் தொட்டியாகக் கணினியை  மாற்றக் கூடாது.

கணினி மனுக்குலத்திற்கு கிடைத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதைத் தெய்வமாக நினைத்து மரியாதை செய்யுங்கள்.

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com
கே: RSS என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப:
Rich Site Summary அல்லது Really Simple Syndication என்பதன் சுருக்கமே RSS. தமிழில் இதைச் செய்தி ஓடை என்று அழைக்கிறார்கள்.

இணையத்தில் உலா வரும் இலட்சக்கணக்கான வலைப் பதிவுகளில் நமக்குப் பிடித்தவை என்று ஒரு சில இருக்கலாம்.

இந்த வலைப் பதிவுகளின் செய்திகளைத் தொடர்ந்து படிக்கத் தான் இந்தச் செய்தி ஓடை முறையைப் பயன் படுத்துகிறார்கள்.

ஒரு வலைப் பதிவில் காணப் படும் செய்தி ஓடையில் பதிந்து கொண்டால் அந்த வலைப் பதிவில் இருந்து அறிவிப்புகள் வரும்.  அந்த அறிவிப்புகளின் வழி  செய்திகளைத் தடை இல்லாமல் படிக்கலாம்.

21 அக்டோபர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 73




வித்யாவதி vithiyaa_7@yahoo.com
கே: ஒருங்குறி என்றால் என்ன? இதைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

ப:
உலகத்தில் மொத்தம் 42806 மொழிகள் உள்ளன. இவற்றுள் அதிகமாகப் பயன் படுத்தப்படும் மொழிகள் 226. இவற்றுள் தமிழ் மொழி 15 ஆவது இடத்தில் இருக்கிறது.

அதிகமானோர் பேசப் படும் இந்த மொழிகளில் பல இலட்சம் வகையான எழுத்துருகள் உருவாக்கப் பட்டு விட்டன. அதனால் கணினியில் அவற்றை எல்லாம் பயன் படுத்த முடியாத நிலைமை.

தமிழ் மொழிக்கு மட்டும் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட எழுத்துருகள் உள்ளன. இப்படியே விட்டால் நிலைமை மோசமாகி விடும். ஆக, ஒரு மொழிக்கு ஓர் ஒருங்குறி இருந்தால் போதும்.

எதிர்காலத்தில் கணினியின் பயன்பாடு சுலபமாகி விடும் என்று கணினி அறிஞர்கள் நினைத்தார்கள்.

ஒருங்குறி அல்லது Unicode என்றால் ஒரு மொழியின் எழுத்து வடிவங்களை உலகத்தில் உள்ள எல்லாக் கணினிகளும் தெரிந்து கொள்கின்ற ஓர் எளிய முறைப்பாடு. இதை ஆங்கிலத்தில் universal font encoding scheme என்று சொல்கிறார்கள்.

இந்த அனைத்துலக முறைப்பாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் 128 கட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்தக் கட்டங்களை slot block என்று அழைக்கிறார்கள். 128 கட்டத்திகுள் ஒவ்வொரு மொழியும் அதன் எழுத்துருகளை அடக்க வேண்டும்.

அந்த வகையில் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் 65,500 கட்டங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. World Unicode Consortium எனும் உலக ஒருங்குறி ஒன்றியம் 198 மொழிகளில் ஒருங்குறிகளை உருவாக்கி இருக்கிறது.

இந்த ஒன்றியத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கிறது. தமிழ் ஒருங்குறிக்கான வேலைகள் 1991ஆம் ஆண்டு தொடங்கியது. இன்னும் வேலைகள் நடக்கின்றன.

எதிர்காலத்தில் உலகமே இந்த ஒருங்குறியைத் தான் பயன் படுத்தப் போகிறது. உங்களுக்கு இஷ்டப் பட்ட எழுத்து களைப் பயன் படுத்த முடியாது. பயன் படுத்தினாலும் அவை ஒருங்குறி எழுத்து களாக இருக்க வேண்டும். அதனால் இப்பொழுது இருந்தே ஒருங்குறியைப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

முரசு அஞ்சல் ஒருங்குறியில் வேலை செய்யும் மிக அருமையான தமிழ் நிரலி. நிறையப் பயன் பாடுகள் உள்ளன. உலகின் தலையாயத் தமிழ் நிரலி என்று கூட சொல்லலாம்.

மலேசியக் கணினி வல்லுநர் திரு.முத்து நெடுமாறன் உருவாக்கியது. விலையும் மலிவு. நூறு ரிங்கிட். மலேசியப் பொருட்களுக்கு மலேசியர்கள் தான் முதலில் ஆதரவு தர வேண்டும்.

புவனேஸ்வரி <maya_asoka@yahoo.com.my>
கே: சார், என் வீட்டில் கொசு தொல்லை அதிகம். கணினியில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. கணினியைக் கொண்டு கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எப்படி சார். இந்த உதவியைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் உங்களை மறக்க மாட்டேன்.

ப: ஏழு ஜென்மம் எட்டு ஜென்மம் என்று எல்லாம் சொல்லி ரொம்பவும் புகழ வேண்டாம். ஏற்கனவே புகழை விரும்புகிறவன் என்று சொல்லி என்னைக் கஞ்சிக் காய்ச்சி இருக்கிறார்கள். இதில் நீங்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். உதவி வேண்டும் என்றால் செய்கிறேன்.

http://download.cnet.com/Anti-Mosquito/3000-2056_4-75221053.html
எனும் இடத்தில் கொசுவை விரட்டும் நிரலி இருக்கிறது. பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிப்பு செய்யுங்கள். Activate என்பதைச் சொடுக்குங்கள். அதன் பிறகு Hide என்பதைச் சொடுக்குங்கள்.

இந்த நிரலி மனிதர்களின் காது களுக்குக் கேட்காதச் சத்தத்தை வெளியாக்கும். ஆனால், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், எறும்புகள் போன்றவற்றிற்கு கேட்கும்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு அவை அலறி அடித்து ஓடும். கொசு தொல்லையும் குறையும். சந்தோஷம் தானே. கணினியை அடைத்ததும் கொசுக்கள் மறுபடியும் வரும். உங்கள் வசதி எப்படி? 


ஹரிஹரன்,  தாமான் மஷ்னா, புக்கிட் கெமுனிங்
கே: தமிழ்ப் பத்திரிகையில் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்களைப் அதிகமாகப் பயன் படுத்தி உங்கள் ஆங்கிலப் புலமையைக் காட்டுகிறீர்கள். புகழ்ச்சிக்கு அடிமை ஆக வேண்டாம்.

ப: எலி அம்மணமாக  ஓடுகிறது என்றால் அதற்குச் சட்டைச் சிலுவார் போடத் தெரியாது என்று அர்த்தம் இல்லை. மற்ற எலிகள் எல்லாம் பார்த்துப் புகழ வேண்டும். சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இல்லை.

அதற்குப் பொருத்தமான, சரியான  சட்டை கடையில் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். புரிகிறதா. பாவம் எலி. ஆளை விடுங்கடா சாமி என்று அஞ்சு கால் ஓட்டத்தில் ஓடுகிறது. அதைப் பார்த்து நீங்கள் என்னடா என்றால் எலி ஓட்டமாய்  ஓடி நோபல் பரிசை வாங்கப் பார்க்கிறது என்கிறீர்கள்.

ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்காத போது என்ன செய்வது. இருக்கிற ஆங்கிலச் சொல்லைப் பயன் படுத்திப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். பேசுகிறவர்கள் எதையாவது பேசட்டும். நம்ப பாட்டுக்கு நம்ப வேலையைச் செய்வோம்.


பவாணி இந்திராணி சகோதரிகள், ராசா செயா, நெகிரி செம்பிலான்
கே: திருப்பதி சாமியார் உலகத்திலேயே பணக்காரச் சாமியார் என்கிறார்கள். புள்ளி விவரங்கள் கிடைக்குமா. உங்களுக்குத் தெரியாதது எதுவும் இருக்காது என்று அக்காவாகிய நான் சொல்கிறேன். இணையத்தில் அலசிப் பார்த்து ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.

ப: என் மீது ரொம்ப நம்பிக்கை. எப்போது நான் உங்களுக்குத் தம்பி ஆனேன். நீங்கள் எனக்கு அக்காவா. இல்லை இந்திராணி என்பவருக்கு அக்காவா?
நம்ப திருப்பதி சாமியார் இருக்கிறாரே இவர் உலகத்தில் நம்பர் ஒன் சாமியார் என்பது முற்றிலும் உண்மை. அவருடைய சொத்து மதிப்பு இரண்டு  இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எல்லாம் ரூபாய் கணக்கில் வருகின்றன.

அந்தச் சொத்தில் இருந்து வருடத்திற்கு வட்டி மட்டும் 300 கோடி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று கிலோ தங்கம் காணிக்கையாக உண்டியலில் சேர்கிறது. வருடத்திற்கு ஒரு டன் தங்கம். ஒரு நாளைக்கு பத்து அண்டாக்களிலிருந்து இருபது அண்டாக்கள் வரை உண்டியல் பணம் வருகிறது.

ஓர் அண்டாவில் ஒன்றரைக் கோடி பணம் தேறும். திருப்பதி கோயிலின் தங்க நகைகளின் மதிப்பு மொத்தம் 18 டன்கள். அப்படி என்றால் அதை ஏற்றிச் செல்ல ஐந்து ஆறு லாரிகள் வேண்டும். அவற்றின் மதிப்பு 120 கோடியைத் தாண்டுகிறது.

பக்தர்கள் 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களைத் தானமாகத் திருப்பதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். மலேசியாவில் மட்டும் 12 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கேள்வி.

திருப்பதி கோயிலில் மொத்தம் 32 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அதை நம்பி ஒரு இலட்சம் குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கிலோ லட்டு செய்யப் படுகிறது.

முருகன் குப்புசாமி <murugank1520@yahoo.com>
கே: நான் ஓர் இடைநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர். இணையத்தில் NHM தமிழ் ஒருங்குறி எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முகவரியை முன்பு நம்முடைய நண்பனில் கொடுத்து இருந்தீர்கள். என் கணினியைச் சுத்திகரிப்பு செய்ததும் அது அழிந்து விட்டது. தயவு செய்து மறுபடியும் அந்த முகவரியைக் கொடுத்து உதவுங்கள்?

ப: தமிழில் தட்டச்சு செய்ய NHM நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. இந்த நிரலி Phonetics எனும் ஒலி முறைமையில்  வேலை செய்கிறது. நிரலியைப் பதிப்பது மிக மிகச் சுலபம். நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் http://software.nhm.in/products/writer

அந்த நிரலியை முதலில் உங்கள் கணினிக்குள் பதிப்பு செய்யுங்கள். பதிப்பு செய்யும் போது எந்த மொழி என்று கேட்கப் படும். அப்போது தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

பதிப்பு செய்யப் பட்டதும் ஒரு வெள்ளை மணியின் சின்னம் ஆகக் கீழே உள்ள பணிப் பட்டையில் தோன்றும். அந்த மணியை வலது சொடுக்கு செய்யுங்கள்.

அப்புறம் Start automatically when starting Windows என்பதைச் சொடுக்கி விடவும். கணினி தொடங்கும் போதே நிரலியும் தொடங்கும். அதன் பிறகு Language என்பதில் Tamil என்றும் Keyboard என்பதில் Phonetic என்றும் இருக்கும். அதை மட்டும் சொடுக்கி விடுங்கள். மற்றவை தேவை இல்லை.

தவறு நடந்து விட்டால் பயப் பட வேண்டாம். திருத்திக் கொள்ள முடியும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும் போது நீங்கள் தட்டச்சு செய்வது எல்லாம் ஆங்கிலத்தில் வரும்.

Alt பொத்தானையும் 2 பொத்தானையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் வெள்ளை நிறச் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் தட்டச்சு தமிழுக்கு மாறிவிட்டது என்று அர்த்தம்.

கொஞ்ச நேரம் பயிற்சி செய்து பாருங்கள். கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து விடுங்கள். எல்லாம் சரியாக வந்து விடும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருந்தால் ஆங்கிலம். தங்க நிறத்தில் இருந்தால் தமிழ். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.