16 அக்டோபர் 2014

கருக்கொலை சிசுக்கொலை

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 02.07.2014 நாளிதழில் வெளியான கட்டுரை]


குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். ஆனால், இப்போது குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. படிக்கப் போகிற பதின்ம வயதுப் பெண்கள் குழந்தையைப் பெற்று கழிவறையில் எறிந்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு கலாசாரம் சாதாரணமாகி வருகிறது. மலேசியாவில் மட்டும் அல்ல. உலகத்தில் பல இடங்களில் அந்த மாதிரியான உண்மைகள் பரவலாகி வருகின்றன.



உங்களுக்கு ஒன்று தெரியுமா. இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே விஷம் கொடுத்துக் கொன்று விடுகின்றனர். முன்புதான் அப்படி என்றால் இப்போதும் அந்தச் சறுக்கல்களில் சனி பகவானுக்குச் சங்கு ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



ஒரு சில கிராமத்து எல்லைகளில் மாட்டுச் சாணம் போட்டு கள்ளிச் செடிகளை வளர்த்து வருகிறார்களாம்.  பத்திரிகைச் செய்தியில் படித்த நினைவு. கள்ளிப் பாலைக் கொடுத்து சிசுக்களைக் கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்துக் கொள்ளும் அளவுக்கு மனித மனம் மிருகமாகிப் போகிறதே! ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாத சில தாய்மைகளை என்னவென்று சொல்வது. மனசிற்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது!

சிசுவைப் புதைத்த இடத்தில்
கண்ணீர் வடிக்கிறது பனித்துளி
பாலூட்ட வழி தெரியாமல்
பதறித் துடிக்கிறது கள்ளிச் செடி



கவிதையைப் பாருங்கள். ஆக, அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று யோசித்துப் பார்க்கின்ற விஷயம் இல்லை. எப்படி எல்லாம் குறுக்கு புத்தி கோணலாகிப் போகிறது என்று யோசிக்கின்ற விஷயம். இப்படியே பெண் பிள்ளைகளை அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பெண்களே இல்லாமல் போய்விடுவார்களே. அழகிற்கும் வேண்டும் ஆசைக்கும் வேண்டும். ஆனால், பெண் குழந்தைகள் என்றால் அது மட்டும் வேண்டாம். என்னய்யா அக்கிரமம்.



பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஓர் அணு அளவுகூட அசைய முடியாது. ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். அது சத்தியமான உண்மை. சிசுக்கொலைகளைப் பார்த்து பார்த்து பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விட்டது போலும். அதனால்தானோ என்னவோ அடிக்கடி காட்டு வெள்ளங்களும் கடல் சுனாமிகளும் ஆர்ப்பரித்துப் போகின்றன.

பெண்பிள்ளைகளைக் கொன்றுவிடும் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டம்தான் தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தை திட்டம்.



இந்தத் திட்டம் 1992-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். அவருக்கு நன்றி சொல்வோம். சேலம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது.



பின்னர் 2001-ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. இப்போது குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் ஆண்டுக்கு 60 - 80 இலட்சம் ரூபாய் செலவாகிறது.  இதுவரை 3,800 பெண் குழந்தைகள் 662 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இவர்களில் 3,200 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டுள்ளனர். தவிர 260 பெண் குழந்தைகள் 44 ஆண்குழந்தைகளை வெளிநாட்டவர் தத்து எடுத்துள்ளனர்.



தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001-இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் 2011-இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது. சந்தோஷமான செய்தி.

பெண் பாவம் பொல்லாதது

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை ஒரு பெரிய சுமையாகவே நினைக்கின்றனர். அதாவது பரவாயில்லைங்க. அதையும் தாண்டிப் போய், ஐரோப்பிய நாடுகளில் பிறந்த குழந்தையே பெற்றவர்களுக்கு ஒரு சுமையாகிப் போகின்றது. அப்படி ஒரு நவீனக் கலாசாரம். 


அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் என்பதை எல்லாம் வேண்டும் என்றால் வரலாற்றில் படிக்கலாம். இப்போதைக்கு அப்படி இல்லை. வந்தார்கள் பார்த்தார்கள் படுத்தார்கள் என்பதுதான் அங்கே நடக்கிற கசுமாலக் கூத்துகள்.  காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு வீடு கட்டி வாழ்கிறார்களாம். செய்திகள் வருகின்றன. அதைப் பற்றி கருத்து சொல்ல மனதில் பலம் இல்லை.

இந்தியாவின் சில இடங்களில், பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பிறந்த தளும்பு ஆறுவதற்குள் அரிச்சுவடி தெரியாமல் அதன் முகவரியைச் சுத்தமாக அழித்து விடுகின்றார்கள். இங்கே மலேசியாவில் கொஞ்சம் வேறு மாதிரி. வந்ததும் தெரியாமல் போட்டதும் தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இங்கே ஆண்குழந்தை பெண் குழந்தை என்கிற பேதம் இல்லை. அது ஒன்றுதான் பாக்கி.



ஆக, இங்கே மட்டும் என்ன ஒசத்தி என்று கேட்க வேண்டாம். குழந்தைகளைப் பெற்று வீசி எறியும் கலாசாரத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றாக ஊறிய மட்டைகள் ஒன்றாகத்தான் ஊறிப் போய் இருக்கும். குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், கோயில் குளங்களில் இருந்து சிசுக்கள் மீட்கப் படும் அவல நிலைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். எல்லாரையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போகும் ஒரு சில மனிதப் பிண்டங்களைத்தான் சொல்கின்றேன்.



அண்மையில் மலேசிய தேசிய சேவைக்கு போன ஒரு பதின்ம வயதுப் பெண், குளியறையிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த விஷயம் ஒட்டு மொத்த மலேசியர்களையே பிரமிக்கச் செய்தது. தெரியும்தானே.

அதற்கு எல்லாம் காரணம் என்ன. கணவனை விட்டுப் பிரிந்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள்; திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள்; கணவன் இருந்தும் அவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள்; கருவைக் கலைத்த பின்னர் பிறந்த குழந்தைகள்; பதின்ம வயதில் பக்குவப் படாத ஆசைகள்; வயதுக்கு மீறிய வரைமுறையற்ற வாலிபக் கோளாறுகள். 
அப்புறம் இதை எல்லாம் தாண்டி, கல்யாணம் ஆகாமலேயே பிறந்த குழந்தைகள். ஆக, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலைமை எப்படியோ வந்துவிடலாம். அல்லது அவர்களுடைய ஆசாபாசங்களுக்கு அந்தக் குழந்தை இடைஞ்சலாகியும் போகலாம்.

அந்த மாதிரியான இரக்கமற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன.



ஒரு குழந்தையின் உயிர்க் காற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக, அப்படியே அந்தக் குழந்தையைக் குழந்தைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் அந்த உயிர் காப்பாற்றப்படும் இல்லையா. அப்படி விட்டுச் செல்லப் படும்  குழந்தைகள் தான், பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் பட்டு முறையாக வளர்க்கப் படுகின்றன. முறையாக யாரிடமாவது சேர்க்கப் படுகின்றன.

குறைந்து வரும் பெண் இனம்

இந்த  2011-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்தக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள்


அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெண் சிசுக்கொலை

தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் கொஞ்சம் பரவலாக இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி,  தேனி போன்ற பகுதிகளுக்கும் தொற்றிக் கொண்டது.



அடுத்து 1990-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தக் கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது. மனிதம் இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப்பட்டது. எந்தச் சமூகத்தவர் என்று கேட்க வேண்டாம்.

அதன் பின்னர், பெண்களுக்காக, பெண்களின் விழிப்புணர்வுகளுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்தாலும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவே இல்லை. தொடர்ந்தன.



தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991-ம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் பல மாவட்டங்களில் துரிதப்படுத்தப் பட்டது. தர்மபுரியில் இந்தத் திட்டத்துக்கு பெரும் அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி மீண்டும் இந்தத் திட்டம் இன்னும் கூடுதலாகத் தீவிரப் படுத்தப் பட்டது.

இரு நாட்களுக்கு ஒரு குழந்தை

தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக் கொலைக்கு எதிரான திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும்  தர்மபுரி மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு ஏப்ரல் வரை 89 குழந்தைகள் மட்டுமே தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டன.


இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது. மறுபடியும் சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு குழந்தை. அப்படி என்றால் என்ன வேகத்தில் கலாசாரம் ரவிக் கொண்டு இருக்கிது என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

குழந்தை என்றால் அதில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்கின்ற பேதம் வேண்டாம். பெண் குழந்தை வேண்டாம் என்றால், கடைசியில் கலயாணம் பண்ணும் போது ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தானே தேட வேண்டி இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு தெய்வ மொழியாக மாற வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட!



கடைசியாக, ஒரு கள்ளிச் செடியின் பக்கத்தில், மண்ணுக்குள் இருந்து அம்மா என்ற ஓர் அழுகைச் சத்தம் கேட்கிறது. உங்களுக்கு கேட்கிறதா? இந்த மாதிரி எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் இன்னும் மண்ணுக்குள் அழுது கொண்டே இருக்கின்றனர். அவர்களுடன் அந்த ஆண்டவனும் அழுகின்றார்.

07 அக்டோபர் 2014

ரஷ்யா எப்படி உடைந்தது

மலேசியா தினக்குரல் 23.07.2014 நாளிதழில் வெளிவந்த கட்டுரை

இந்த உலகில் இரண்டே இரண்டு வல்லரசுகள். ஒன்று அமெரிக்கா. மற்றொன்று ரஷ்யா. இது எழுதப் படாத சாசனம். இப்போது சீனாவும் எட்டி எட்டிப் பார்க்கிறது. போட்டிக்குத் தயாராய் நிற்கிறது. இந்தியாவும் களத்தில் இறங்கலாம். இறங்க முடியும். வாய்ப்பு இருக்கிறது. முதலில் இத்தாலிக்கு ‘சப்போர்ட்’ செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்ப்பசேவ்

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து இருக்கும் பத்து இலட்சம் கோடி பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். அப்புறம் வேண்டும் என்றால், வல்லரசு போட்டியில் இந்தியா கலந்து கொள்ளலாம். அந்தத் தகுதி வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

உலக வல்லரசு என்று சொல்லிக் கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரிட்டன் ஆகிய இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது.  மற்ற எந்த நாட்டுக்கும் அந்தத் தகுதி இல்லை. பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், போன்ற நாடுகளைப் போட்டியில் சேர்க்க வேண்டாம்.  அப்படியே கொடுத்தாலும் அது அழகாகவும் இருக்காது. காட்டுவாசிக்கு மேக்கப் போட்டது மாதிரி ஆகிவிடும்.

யார் அந்த உலகப் போலீஸ்காரர்

ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டு காலமாக, உலக வல்லரசுகள் என்கிற அந்தப் பாரம்பரியம் நிலைகாக்கப் பட்டு வருகிறது. ரஷ்யா அமெரிக்கா என்கிற இந்த இரண்டு பேரில் யார் உலகப் போலீஸ்காரராகச் சேவை செய்ய முடியும் என்பதற்கு பலப் பல ஒலிம்பிக் போட்டிகளும் நடந்து இருக்கின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இரண்டு நாடுகளுமே தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கின்றன.

ரஷ்ய போர் வீரர்கள்

சில சமயங்களில் கீழே விழுந்து, மீசையில் ஒட்டிய மண்ணைத் தடவி விட்டு, சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று சொல்லிய வரலாறும் வல்லினங்கள் பேசுகின்றன.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். ஆடம்பரமான வாழ்க்கை. அநாவசியமான செலவுகள். அன்றாடம் அரண்மனைக் களியாட்டங்கள். அடிதட்டு மக்களை அடித்துப் போடும்  அதிகாரங்கள். அடுக்கடுக்காய் அத்துமீறல்கள். இந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்குச் சமாதி கட்டினார் விலாடிமிர் லெனின். அவர் கொண்டு வந்த மக்கள் புரட்சியை அக்டோபர் புரட்சி என்றும் அழைக்கிறார்கள். 

அவருடைய சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு வழி வகுத்துக் கொடுத்தது கார்ல் மார்க்ஸின் தத்ததுவச் சித்தாந்தங்கள். சோசலிச ரஷ்யாவை லெனின் உருவாக்கினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யு.எஸ்.எஸ்.ஆர் என்கிற ஒரு சோசலிஸ்டு நாடு தோற்றுவிக்கப் பட்டது.

இணங்க மறுத்த மகாதேவிகள்

இரண்டாம் உலகப் போர் வந்தது. உலக நாடுகளின் குடுமிகளை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டுப் போனது. நாகசாக்கி ஹிரோசிமாவில் குண்டுகள் போடவில்லை என்றால், போர் தொடர்ந்து போய் இருக்கும். உலக வரலாறும் திருத்தப்பட வேண்டி வந்து இருக்கும். அந்த வாக்கில், சோவியத் ரஷ்யா பக்கத்தில் இருந்த சின்னச் சின்னக் குட்டி நாடுகளை, தன் நாட்டுக்குள் சேர்த்துக் கொண்டது.

யுக்ரெயின் போர்க் கப்பல்கள்

அப்படிச் சொல்ல முடியாது. வன்முறையைப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். சின்னச் சின்ன நாடுகளுக்கு அல்வா துண்டுகளை ஆட்டிக் காட்டி, ஆசைகளை உண்டாக்கி விட்டது. இணங்க மறுத்த மகாதேவிகளும் இருந்தன. அந்த மாதிரியான பெரிய நாடுகளை ‘இணங்கிவிடு மகாதேவி’ என்று சொல்லி ரோத்தான்களைப் பயன்படுத்தியது. அதில் ரொம்ப ரோத்தான் பூசை வாங்கிய நாடு யுக்ரெயின். 

அப்புறம் சோவியத் ரஷ்யா உலகின் மிகப் பெரிய நாடாகப் பேர் போட்டது. அப்போது அதன் நிலப்பரப்பு, ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரை இரண்டு கண்டங்களிலும் பரந்து நிறைந்து விரிந்து கிடந்தது. அதன் பரப்பளவு 6,592,800 சதுர மைல்கள். 17,075,400 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மலேசியாவைப் போல 51 மடங்கு பெரியது. சபா சரவாக்கைச் சேர்த்து தான்.

யுக்ரெயின் விடுதலைப் போராட்டம்

1917-க்குப் பின்னர், சோவியத் யூனியனில் ஒட்டு மொத்தமாகக் கம்யூனிஸ்டு ஆட்சி. நாட்டுக்குள் என்ன தான் நடக்கிறது என்கிற விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது. மறைப்புச் சுவரை எழுப்பி ஒரு நாட்டையே மறைத்து வைத்து இருந்தார்கள். அதனால் அதை இரும்புத் திரை நாடு என்றும் வர்ணித்தார்கள். 

ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின்

ரஷ்யக் கூட்டமைப்பில் ரஷ்யா, பைலோருஷ்யா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜக்ஸ்தான், கிர்க்கிஸ்தான், ஜார்ஜியா, யுக்ரெயின், மால்டோவியா, எஸ்டோனியா, லாட்வியா, லிட்வேனியா என்று 15 மாநிலங்கள் இருந்தன.

குருஷேவ்

இதில் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று மாநிலங்களும் பால்டிக் நாடுகள். இவை பால்டிக் கடலுக்குப் பக்கத்தில் இருந்ததால் அவற்றை பால்டிக் நாடுகள் என்று அழைத்தார்கள். இவை ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்தவை.

லெனினுக்குப் பிறகு, 1924-இல் ஸ்டாலின் வந்தார். இந்த மனிதர் ரஷ்யாவை ஒரு வழி பண்ணிவிட்டுத் தான் போனார். சும்மா சொல்லக் கூடாது. கிராமிய நாடாக இருந்த ரஷ்யாவைக் கைத்தொழில்மய நாடாக மாற்றிய பெருமை இவரைத் தான் சாரும். இருந்தாலும் இவருடைய அடக்கு முறையினால் பலப் பல இலட்சம் பேர் மறைந்து போனார்கள்.

லெனின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சைபீரிய வதைமுகாம்களில் பல இலட்சம் அரசியல் கைதிகள் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். இன்னும் பல்லாயிரம் பேர் நாடு கடத்தப் பட்டனர். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் வந்தார். இவரும் பல மாற்றங்களைச் செய்தார். இவர் ஒரு மிதவாதி. தொழிலாளர் வதை முகாம்களை ஒழித்துக் கட்டினார். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல நூறு  புனர்வாழ்வு மையங்களை அமைத்துக் கொடுத்தார். 

கியூபா ஏவுகணை நெருக்கடி

இவருடைய காலத்தில்தான் ரஷ்யா, முதன் முதலாக மனிதனை (யூரி ககாரின்) விண்வெளிக்கு அனுப்பி வைத்துச் சாதனை செய்தது. இவருக்கும் அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் கியூபா ஏவுகணைகள் தொடர்பாக ஒரு முறுகல் ஏற்பட்டது. அப்போது உள்ளவர்களுக்கு ஞாபகம் வரலாம். மூன்றாம் உலகப் போர் வரக் கூடிய கட்டம். அது 1962-ஆம் ஆண்டில் நடந்தது. கியூபா ஏவுகணை நெருக்கடி என்றும் சொல்வார்கள்.  ஒரு வழியாக நீறு பூத்துப் போனது.

புன்னகை மன்னன் புடின்

அடுத்து, குஷேவிற்குப் பிறகு பிரஷ்னீவ் வந்தார். இவருடைய காலத்தில் தான் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தன. பெருமையாகச் சொல்வது என்றால், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்கள் சுரண்டப் பட்டன என்று தாராளமாகச் சொல்லலாம். இவர் ரஷ்யாவில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்து விடவில்லை. ஒரு வகையில் அந்த நாடு உலகத் தரத்தில் கொஞ்சம் சரிந்து போனது தான் மிச்சம். 

அடுத்து, 1984-ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக கார்ப்பசேவ் பதவி ஏற்றார். இவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். இவருடைய ஆட்சியில் சில பல கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன. கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப் பிடியைத் தளர்த்தினார். உலக அமைதி முயற்சியில் இறங்கினார். அதனால் ரஷ்ய மக்கள் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ரஷ்ய அதிபர்களிலேயே மனதில் நிற்கக் கூடிய மனிதர்

அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனால் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப் பட்டது. உலக நாடுகளில் இவருடைய புகழ் ஓங்கி நின்றது. நல்லபடியாக ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யா சுமுகமாக நடை போட்டது. என்னைக் கேட்டால், ரஷ்ய அதிபர்களிலேயே என் மனதில் நிற்கக் கூடிய ஒரே மனிதர். இவர்தான், ஒரு கம்னியூஸ்ட் நாட்டை ஜனநாயகப் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த நல்ல ஒரு மனிதர்.

ஆனால், என்ன செய்வது. இவருக்கும் ஒரு கஷ்ட காலம். எதிர்பாராத சூழ்நிலை. ரஷ்யாவில் உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. அமெரிக்காவுடன் குசலம் பேசிக் கொண்டு, இங்கே ரஷ்யாவைக் கவனிக்கவில்லை என்கிற ஆத்திரம் ஆதங்கம் வேறு. 1991-ஆம் ஆண்டு மத்தியில், தானியத் தட்டுப்பாடு ரஷ்யாவின் கழுத்தை நெரித்தது. 

கார்ப்பசேவ் அதிபராகும் வரையில் மற்ற மற்ற அதிபர்களிடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தன. தவிர, உலகின் மிகப் பெரிய வல்லரசாகவும் பேர் போட்டு வந்தது. அதனால், முன்பு 1910-களில் வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்ட குட்டி நாடுகளும், பிரிந்து போக வழி இல்லாமல் பேசாமல் இருந்தன.

முதன் முதல் சுதந்திரக் குரல்கள்

கார்ப்பசேவ் அதிபரானதும் அவருடைய அமைதிக் கொள்கை, இந்தக் குட்டி நாடுகளுக்குக் கொஞ்சம் இளக்காரமாகிப் போனது. அதே சமயத்தில் உணவுத் தட்டுப்பாடு என்பது அவர்களுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. இந்த இரண்டுமே பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் உற்சாகத்தையும், மன தைரியத்தையும் கொடுத்தன. 

பால்டிக் நாடுகள் என்று சொல்லப்படும் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய இந்த மூன்று மாநிலங்கள் தான், முதன் முதலில் சுதந்திரக் குரல்களை உயர்த்தின. ஒரு நல்ல நாள் பார்த்து, ஜார்ஜியாவும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது.

சுதந்திரம் கோரி போர்க் கொடி தூக்கிய அந்த நான்கு மாநிலங்களும், தங்களுக்குத் தாங்களாகவே சுதந்திரப் பிரகடனங்களைச் செய்து கொண்டன. அவற்றுக்குத் தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்னுக்கு வந்தன. அடுத்தக் கட்டமாக, உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா களம் இறங்கினார்.

அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ்

பால்டிக் நாடுகளுக்கு உடனடியாகச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இது கார்ப்பசேவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ், கார்ப்பசேவுக்கு மருந்து மாத்திரைகளை அனுப்பி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது. 

ஏன் தெரியமா. கார்ப்பசேவ் என்கிற பிள்ளையைக் கிள்ளிவிட்டது ஜார்ஜ் புஷ் தானே. ஆக, பிரிந்து போன மாநிலங்களின் அதிகாரங்களைப் பரவலாக்கி, அவற்றைச் சாந்தப் படுத்த முயற்சிகள் செய்தார். ஒன்றும் எடுபடவில்லை.

அப்போது கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட தலைவர்கள் சிலர் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தில் இருந்தனர். அவர்களுக்கு கார்ப்பசேவின் அதிரடி மாற்றங்கள் பிடிக்கவில்லை. கார்ப்பசேவினால் பதவியில் அமர்த்தப் பட்டவர்களே, அவருக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். திடீரென்று கார்ப்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். கொள்கைப் பிரிவினைவாதிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சிகள் செய்தனர்.

பொது மக்களுக்கு எதிராக, ராணுவம் களம் இறக்கப் பட்டது. சுட்டுத் தள்ளுமாறு கட்டளை. ஆனால், இராணுவத்தினர் பொது மக்களைச் சுட மறுத்தனர். எங்கள் மக்களை நாங்களே சுட்டுக் கொல்வதா. முடியாது என்று மறுத்து விட்டனர். அப்புறம் என்ன. கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி கலகலத்துப் போனது. கார்ப்பசேவ் விடுவிக்கப் பட்டார்.

சோவியத் ரஷ்யா உடைந்து போனது

புரட்சியைத் தூண்டிவிட்ட எட்டு முன்னணித் தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப் பட்டன. அவர்களில் அறுவர் கைது செய்யப் பட்டனர். இருவர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமரையும் அமைச்சர்களையும் கார்ப்பசேவ் நியமித்தார். இருந்தாலும், போகப் போக கார்ப்பசேவிற்கு கம்யூனிஸ்டு உயர்மட்டக் குழுவின் ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் கார்ப்பசேவின் தலைமைத்துவம் பலகீனம் அடைந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், யுக்ரெயின் ஆகிய ஐந்து மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இங்கே யுக்ரெயின் இருப்பதைக் கவனியுங்கள். சோவியத் யூனியன் மறைந்து விட்டது என்றும் பிரகடனப் படுத்தினார்கள். இப்படித்தான் சோவியத் ரஷ்யா உடைந்து போனது.

பிரிந்து போன மாநிலங்கள் தங்களைக் காமன்வெல்த் கூட்டமைப்பு என்று அழைத்துக் கொண்டன. அதற்கு போரிஸ் யெல்ட்சின் தலைமை தாங்கினார். கார்ப்பசேவ் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இப்படித்தான் கார்ப்பசேவ் என்கிற ஒரு நல்ல மனிதர் பதவியில் இருந்து தூக்கி வீசப் பட்டார்.

சோவியத் யூனியனுக்குச் சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் சில ஆயுதக் கிடங்குகள் யுக்ரெயினிலும் இருக்கின்றன. 
கார்ப்பசேவ் ரஷ்யாவின் காமராசர்

மிக்காயில் கார்ப்பசேவ், ரஷ்யாவின் தொலைதூர பிரிவோல்னயா என்கிற கிராமத்தில், 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர், 21-ஆம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். படிப்படியாக உயர்ந்து ரஷ்யாவின் அதிபரானார். அவருக்கு இப்போது வயது 83.

மிக்காயில் கார்ப்பசேவுக்கு ஒரே மனைவி. 46 வயதில் 1999-ஆம் ஆண்டு புற்று நோயினால் இறந்து போனார். கார்ப்பசேவ் மறுமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு ஒரே ஒரு மகள். ஈரினா மிக்காயிலோவ்னா.

இப்போது கார்ப்பசேவிற்கு மாதா மாதம் பத்தாயிரம் ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கி வருகிறார்கள். கை சுத்தமான மனிதர். ரஷ்யாவின் காமராசர் என்றுகூட புகழாரம் செய்வார்கள். அவருக்கு ரஷ்ய அரசாங்கம் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 

கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு சைபீரியக் குளிர்ப் பிரதேசத்தில் இன்னொரு வீட்டையும் கொடுத்து இருக்கிறது. அவர் கார்ப்பசேவ் அறநிறுவனம் என்கிற ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதில் அவரும் அவருடைய மகளும் அறப் பணிகளைச் செய்து வருகின்றனர். 

24 ஆகஸ்ட் 2014

சீனி நைனா முகமது

தித்திக்கும் தொல்காப்பியத்தில்
திக்கெட்டும் சீனி நைனா முகமது 

(மலேசியா, பேராக் மாநிலப் பொது இயக்கங்களின் இணை ஏற்பாட்டில், அமரர் சீனி நைனா முகம்மது அவர்களுக்கு, 22.08.2014 வெள்ளிக்கிழமை, ஈப்போ பாராகோன் விடுதியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, அன்றைய தினம் இந்தச் சிறப்புக் கட்டுரை தினக்குரல் நாளிதழில் வெளியிடப்பட்டது.)


சீனி நைனா முகமது
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான். அப்படி ஒரு வாசகத்தைத் தன் கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி உயிர் துறந்தவர் ஜி.யு.போப் (George Uglow Pope) என்கிற ஒரு பாதிரியார். தன்னுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டு காலத்தை, தமிழுக்காக அர்ப்பணிப்புச் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற தமிழ்க் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மறக்க முடியாத மாமனிதர்.

திராவிட மொழி இயலின் தந்தை எனப் போற்றப் படுகிறவர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell). இவரும் ஒரு பாதிரியார் தான். ஆனால், சமயத்தைப் பரப்புவதற்கு வந்த இவர், அதற்குப் பதிலாக திராவிட மொழிகளை ஆய்வு செய்து, தமிழ் மொழியின் கண்களைத் திறந்து விட்டுப் போனவர். 


இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூல், அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த நூல் இப்போது தமிழகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாட நூலாகப் பயன்படுத்தப் படுகிறது.

’சுவடி தேடும் சாமியார்’ என்று புகழப் பட்டவர் வீரமாமுனிவர் எனும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi). ஐம்பது ஆண்டு காலம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். 


தமிழில் 23 நூல்களை எழுதியவர். தமிழின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தினால், ஜோசப் பெஸ்கி எனும் தம்முடைய பெயரை, தைரியநாதன் என்று மாற்றினார். ஆனால், அந்தப் பெயர் ஒரு வடமொழி என்பதற்காக, தூயச் செந்தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். 

திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்த வீரமாமுனிவர்

தேம்பாவணி என்பது வீரமாமுனிவர் இயற்றிய அரும் பெரும் காப்பியம். தமிழில் முதல் தமிழ் அகரமுதலியை (அகராதி) உருவாக்கியவரும் இவரே. திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்தவர். 


தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த அந்தத் தமிழ்ப் பெரியாரின் கல்லறை, கேரளாவில் ஓர் உப்பங்கழியில் அனாதையாகப் புதர் மண்டிப் போய்க் கிடக்கிறது. இந்த விஷயம் உலகத் தமிழ் மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்குத் தெரியுமா என்பது எனக்கும் தெரியவில்லை. 

வித்தாலி பூர்ணிக்கா (Vitaly Fournika) ஒரு ரஷ்யர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகாகவி பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி, தன் பெயரைத் தமிழகப்பித்தன் என்று மாற்றிக் கொண்டவர். 


தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை ஆராய்ந்து ரஷ்ய மொழியில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர்.

இரோசி யமாசிடா தமிழ்ப் பேராசிரியர்

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் ஜப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆய்வு செய்தவர். 

தமிழ் மொழி சார்ந்த உலகளாவிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். தமிழ் நாவல்களை ஜப்பானிய மொழியில் மாற்றம் செய்து வருகிறார். செம்மொழி மாநாட்டில் தமிழில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தவர்.

தமிழறிஞர் சீனி நைனா முகம்மது

இவர்களைப் போல அலெக்சாண்டர் துபியான்சுகி, ராபர்ட் தே நோபிலி (இத்தாலி), மிரான் வின்கலோ (அமெரிக்கா), சீகன் பால்கு (ஜெர்மனி), என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்), ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) போன்றவர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் தமிழ் வளர்த்த பெருமக்கள். தமிழுக்காக அரிய பெரிய சேவைகளைச் செய்த மாமனிதர்கள். 

அதே வரிசையில் வருபவர்தான் தமிழறிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள். இவர் தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வந்து, தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவர். பன்மொழிப் புலமையாளர். சிறந்த பண்பாளர். பொதுநலத் தொண்டர். தமிழ்ப் பற்றாளர். 

தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தொல்காப்பியத்தில் மட்டும் தனித்து ஒரு ஞாயிறாகவே ஜொலித்து வந்தார். தொல்காப்பியம் என்றாலே விலகி ஓடும் காலக் கட்டத்தில், அதன் அருமை பெருமைகளை எளிமையாக விளக்கி வந்தார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற அன்னாரின் மறைவு, மலேசியத் தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். என்றுமே நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதயம் கனக்கிறது. 

அவர் நினைவாக சற்று நேரம் சம்மணம் போடுகிறேன். தொல்காப்பியம் என்றால் என்ன என்று எளிய முறையில் சொல்கிறேன். அதுவே, மலேசியம் பார்த்த ஒரு தமிழ் மகனுக்கு நாம் செய்யும் மரியாதை. ஒரு மௌனமான அஞ்சலி. அந்தத் தொல்காப்பிய அறிஞரின் நினைவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.

ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி

உலகில் 2795 மொழிகள் உள்ளன. அந்த அத்தனை மொழிகளிலும், ஒரே ஒரு மொழிக்கு மட்டும் ஒரே ஒரு சிறப்பு இருக்கிறது. மற்ற எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு. அது என்ன சிறப்பு. 

தொல்காப்பியம் என்கிற சிறப்பு தான் அந்தத் தனிச் சிறப்பு. ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி இருக்கிறது என்றால் அது தமிழ் மொழியாகத் தான் இருக்க முடியும். வேறு மொழியாக இருக்க முடியாது. அதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழின் மும்மணிச் சிகரங்கள்

பொதுவாகவே, ஒரு மொழியில் முதலில் தோன்றுவது அதன் கதைகள். காப்பியங்கள், புராணங்கள். அவை அனைத்தும் கதா வடிவங்கள். ஆனால், அந்தக் காப்பியங்கள் 

வருவதற்கு முன்னாலேயே, ஒரு மொழிக்கு இலக்கணம், காப்பியமாக வருகிறது என்றால், அந்த மொழியின் செம்மையை என்னவென்று புகழ்வது. அந்தச் செம்மைத் தன்மை, தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மொழி வல்லுநர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம். இந்த மூன்று இலக்கியங்களையும் தமிழின் மும்மணிச் சிகரங்கள் என்று பெருமையாகச் சொல்வார்கள். இவற்றுள் தொல்காப்பியம் என்பது தலையாயச் சிகரம். 

அதன் செம்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழுக்கு நேர்ந்த ஒரு காலக் கொடுமை. அதை குமரிக் கண்டத்தின் ஆழ் இடுக்கில் புதைந்து கிடக்கும் ஓர் இறுக்கம் என்றுகூட சொல்லலாம். ஆக, அந்த இறுக்கத்தை இப்போதே தளர்த்தி விடுவோம். தொல்காப்பியத்தை இன்றே படிக்கத் தொடங்குவோம்.

இடைச் சங்கத்தில் கபாடபுரம் அழிந்தது

பண்டைய காலத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன. தலைச் சங்க காலத்தில், குமரிக் கண்டம் அழிந்து போனது. 

இடைச் சங்க காலத்தில், கபாடபுரம் அழிந்து போனது. கடைச் சங்க காலத்தில், மதுரை அழிந்து போனது. அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய இந்த இரண்டு நூல்களும் இடைச் சங்கத்தைச் சேர்ந்தவை. 

தொல்காப்பியம் என்பது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  அதை எழுதியவர் தொல்காப்பியர். சேர நாட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் அகத்தியரின் மாணவர்களில் ஒருவர். தொல்காப்பியரைப் பற்றிய உண்மையான முழுமையான வரலாறு இன்னும் எழுதப் படாமல் இருக்கிறது.

தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல்

தமிழ் உலகில் எத்தனையோ தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி மறைந்து இருக்கின்றன. ஆனால், தொல்காப்பிய நூல் மட்டும் சிதைவு பெறாமல், இன்று வரை வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு ஓர் அடிப்படை நூலாகவும் கருதப் படுகிறது. 

தொல்காப்பியம் மிக எளிமையான நூல். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். அது ஓர் இலக்கண நூல். இலக்கிய நூல் அல்ல. அதனால், முதலில் கசக்கும். போகப் போக இனிக்கும். 

கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது

இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோமே என்று சிலர் காலம் தாழ்ந்து வருத்தப் படலாம். தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது. உரைப்பும் இருக்காது.

தொல்காப்பியம் 1,610 பாட்டுகளால் ஆனது. இதில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்கள். இயல் என்றால் துறை. ஆக மொத்தம் இருபத்தேழு இயல்கள். பாடல்களாகவே எல்லாக் கருத்துகளும் சொல்லப் படுகின்றன. அதைச் சூத்திரம் அல்லது நூற்பா என்றும் சொல்வார்கள்.

தமிழ் நூல்களும் காப்பியங்களும், பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் அப்படி அல்ல. அதற்கு கடவுள் வாழ்த்து இல்லை. 

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்ததிகாரம்

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் என்பது மட்டும் இருக்கிறது. பாயிரம் என்றால் கவிதை நடையில் உள்ள முன்னுரை. அந்தப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லை, வடவேங்கடம் தென் குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று சொல்லப் படுகிறது. அந்தப் பாயிரத்தை எழுதியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் ஒன்றாகக் கல்வி பயின்றவர்.

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்து அதிகாரம். தமிழின் எழுத்துகள் என்ன என்ன என்று சொல்லப் படுகிறது. ஆனால், தமிழ் எழுத்துகளின் வடிவம், இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மெய் எழுத்துக்கு புள்ளி வரும். ஆனால், அந்தப் புள்ளி எங்கே வரும் என்றும் சொல்லப் படவில்லை. 

புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும்

முன்பு காலத்தில் ஆணியைக் கொண்டு, பனை ஓலையில் எழுதினார்கள். புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும். அதனால், தமிழ் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பது இல்லை. 

அடுத்து, எழுத்துகள் பிறப்பதைப் பற்றி, இந்த எழுத்து அதிகாரம் சொல்கிறது. ஒலி என்பதுதான் சொல் ஆகிறது. அந்த ஒலியை அரவம், இசை, ஓசை என்று பிரிக்கலாம். 

சீன மொழியைத் தவிர, உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளும் ஒலி எழுத்துகளால் தான் எழுதப் படுகின்றன. ஆங்கிலத்தில்  Phonetics என்று சொல்வார்கள்.

சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது

எழுத்து அதிகாரத்தில் தனித்து நிற்கும் எழுத்துகள்; சொல்லுக்கு இடையில் வரும்போது அந்த எழுத்துகளின் நிலை என்ன ஆகிறது; எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும்; சொற்களில் வரும் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள்; சொற்கள் புணரும் போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் போன்றவை விளக்கப் படுகின்றன.

இரண்டாவதாக வருவது சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது. சொல்லப் படுவது என்பது ஒரு சொல். அந்தச் சொல்தான், எழுத்தால் எழுதப் படுகின்றது. ஒரு மொழிக்கு சொல் என்பதுதான் முதலில் வந்தது. அப்புறம் தான் எழுத்து வந்தது. இதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். 

எழுத்தையும் சொல்லையும் கொண்ட வாழ்க்கை இலக்கணம்

சொல் அதிகாரத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பேசுவது, எவ்வாறு எழுதுவது, எவ்வாறு சொற்களை அமைத்துக் கொள்வது போன்றவை விளக்கப் படுகின்றன. மேலும் சொற்கள் தொடர்களாக அமையும் முறை; வேற்றுமைத் தொடர்கள்; தனிச் சொற்களின் இலக்கணம் போன்றவையும் சொல்லப் படுகின்றன.

மூன்றாவதாக வருவது பொருள் அதிகாரம். அன்றைய காலத்து மக்களின் வாழ்வு எப்படி இருந்தது. எழுத்தையும் சொல்லையும் கொண்டு புனையப் படும் வாழ்க்கை இலக்கணம் எப்படி இருந்தது என்று இந்த அதிகாரத்தில் விளக்கப் படுகிறது. இந்த அதிகாரம் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்புடைய ஒரு பகுதி என்றுகூட சொல்லலாம்.

பாலை என்பது ஓர் அகத் திணை

பொருள் அதிகாரத்தில், அகத் திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.

தமிழ் இலக்கியம் என்பது திணை கோட்பாட்டைச் சார்ந்தது. ஏழு திணைகள் உள்ளன என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஏழு திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் நிலங்கள் சம்பந்தப் பட்டவை. 

இதில் நிலம் இல்லாத பாலை எனும் திணையும் சேர்ந்து கொள்கிறது. பாலை என்பது ஓர் அகத் திணையாகும். 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

இந்த அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி நற்றாய், செவிலித் தாய்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும். ஆனால், அந்தக் கதாமாந்தர்களுக்குப் பெயர்கள் வழங்கப் படுவது இல்லை. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்பது தொல்காப்பியக் கூற்று. 

தொல்காப்பிய நூல் எழுதப்பட்ட பின்னர், அதை எந்தக் கல்வெட்டிலும் எழுதி வைக்கவில்லை. காலம் காலமாகப் பனை ஓலைகளில் எழுதிப் படித்து வந்து இருக்கிறார்கள். தொல்காப்பியம் எழுதப்பட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதற்கு உரை எழுத ஆரம்பித்தார்கள். அதாவது விளக்கம் எழுதினார்கள். 

அப்படி விளக்கம் எழுதியவர்கள், அவர்களின் காலத்து இலக்கண, இலக்கிய அறிவின் அடிப்படையிலேயே உரை எழுதி இருக்கிறார்கள். பல காலக் கட்டங்களில் பலர் விளக்கவுரை எழுதி இருக்கிறார்கள். இருந்தாலும், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் போன்ற புலவர்களின் தொல்காப்பிய உரைகளை மட்டுமே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

தொல்காப்பியம் குழப்பமான நூல் அல்ல

தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கரடு முரடான தமிழில் எழுதப் பட்டது என்று சிலர் சொல்வார்கள். அதற்காக அதை ஒரு குழப்பமான நூல் என்று நினைத்து, ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். அதன் மொழி எளிமையானது. ஆனால், பல சொற்களுக்கு அர்த்தம் சொல்லப்படுகிற விதம் இருக்கிறதே, அங்கே கொஞ்சம் லேசான மயக்கம் வரலாம். 

மயக்கம் என்றால் மயக்கம் போட்டு விழுவதைச் சொல்லவில்லை. தடுமாற்ரம் வரும் என்று சொல்ல வருகிறேன். தொல்காப்பியம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள சற்று சிரமம் ஏற்படும். அவ்வளவுதான். மற்றபடி அது குழப்பமான நூல் அல்ல.

தொல்காப்பியம் என்பது தமிழின் முதல் இலக்கண நூல். தமிழ் மொழியின் உச்சமான படைப்பு. சரி. தொல்காப்பியம் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓரளவுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஐந்திலக்கண நூல்கள் என்றால் என்ன

தொல்காப்பியம் தோன்றிய பிறகு, அதனை அடிப்படையாகக் கொண்டு பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றில் முதன்மையாக வருபவை ஐந்திலக்கண நூல்கள் ஆகும். அந்த ஐந்திலக்கண நூல்களின் பெயர்கள். 1. வீரசோழியம் 2. இலக்கண விளக்கம் 3. தொன்னூல் விளக்கம் 4. முத்து வீரியம் 5. சுவாமிநாதம். இந்த நூல்களின் வரிசையில் மேலும் இரண்டு நூல்கள் உள்ளன. 

தமிழ்நெறி விளக்கம், நன்னூல். இவை இரண்டும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால், அதை ஏழு இலக்கண நூல்கள் என்பதற்குப் பதிலாக ஐந்திலக்கண நூல்கள் என்று அழைக்கிறார்கள்.

தொல்காப்பியத்தில் மூன்றாவதாகச் சொல்லப்படும் பொருள் அதிகாரம் இருக்கிறதே, அதில் ஒரு பிரிவுதான் யாப்பிலக்கணம். இந்த யாப்பிலக்கணம் ஒரு பெரிய பிரிவு. 

அதனால், அதைத் தனியாகப் பிரித்து எடுத்து விட்டார்கள். அதே மாதிரிதான் அணி இலக்கணம். குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒன்று யாப்பிலக்கணம். மற்றொன்று அணி இலக்கணம். இந்த அணி இலக்கணம் என்பது, தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில் மற்றொரு பெரிய பிரிவாகும். ஆக, யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் இரட்டைப் பிறவிகள் மாதிரி எப்போதும் சேர்ந்தே வரும். 

அணி இலக்கணத்திற்கு விளக்கம் தண்டியலங்காரம்

அணி என்றால் அழகு என்று அர்த்தம். செய்யுள்களை அமைக்கும் போது, சொல் அழகு, பொருள் அழகு ஆகிய இரண்டையும் எப்படி சேர்க்க வேண்டும் என்று இந்த அணி இலக்கணம் விளக்குகிறது. அணி இலக்கணத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஒரு பெரிய நூல் இருக்கிறது. அதன் பெயர் தண்டியலங்காரம். 

அணி இலக்கணத்தை இன்னும் பிரித்துப் பார்க்கலாம். நிறைய அணிகள் வரும். அதிசய அணி, சிலேடை அணி, தீவக அணி, வாழ்த்தணி, மயக்க அணி என்று மொத்தம் 35 அணிகள் இருக்கின்றன. இதை எல்லாம் கேட்கும் போது, உங்களுக்கும் கொஞ்சம் மயக்கம் வருகிற மாதிரி இருக்கலாம். கவலைப் படாதீர்கள். போகப் போக எல்லாம் சரியாகி விடும். மயக்கமும் தெளிந்து விடும். 

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழின் இலக்கணத்தை, இப்படி அக்குவேர் ஆணிவேராகச் சல்லடை போட்டு பிரித்து வகுத்துப் பார்த்து இருக்கிறார்கள். 

ஆக, அவர்களின் தமிழ் மொழி அறிவை என்னவென்று சொல்வது. என்னவென்று புகழ்வது. அதனால் தான் அதற்கு செம்மொழி எனும் உயர்த் தகுதி கொடுத்து இருக்கிறார்கள். இமயத்தில் சிகரம் பார்க்கும் ஒரு மொழி இருக்கிறது என்றால் அது நம் தமிழ்மொழியைத் தவிர வேறு மொழியாக இருக்க முடியாது. 

தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது

தமிழ்மொழியின் தோற்றம் மிக மிகத் தொன்மையானது. அப்பேர்ப்பட்ட அந்த மொழியில் தான் தொல்காப்பியம் என்கிற ஓர் இலக்கண இலக்கியமும் ஐக்கியமாகிறது. 

தொல்காப்பியத்திற்கு இணையாக, வேறு ஒரு நூல் இது வரைக்கும் தமிழில் இல்லை. ஆக, தொல்காப்பியம் மாதிரி இன்னொரு நூல், இனிமேலும் கிடைக்கப் போவதும் இல்லை. 

மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்

கடைசியாக ஒரு தனிப்பட்ட பதிவு. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2012-ஆம் ஆண்டில், ஓர் இணையக் கருத்தரங்கை கோலாலம்பூரில் நடத்தியது. அதில் ‘மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்போது தான் தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது அவர்களைச் சந்தித்தேன். நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. 

கணினிக் கலைச் சொற்களை உருவாக்கும் போது, அவற்றின் மூலத்தையும் வேர்த் தன்மைகளையும் எப்படி ஆராய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த வகையில், உருவாக்கப்பட்ட சுழலி, விரலி எனும் இரண்டு கணினிக் கலைச் சொற்களை, ஐயா சீனி. நைனா முகமது அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி.