28 ஜூலை 2015

அப்துல் கலாம் - ஓர் இமயம் மறைந்தது

[இந்தக் கட்டுரை 29.07.2015 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.]

அப்துல் கலாம் எனும் அந்தத் தலைமகனின் பெயர் மலேசியாவில் மிகவும் பரிச்சயமான பெயர். பெரும்பாலான மலேசியத் தமிழர்களுக்கு நன்கு தெரிந்த பெயர். 

மலேசியத் தமிழர்கள் அவரை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். அண்ணல் காந்திக்குப் பின்னர் அப்துல் கலாம் மலேசியர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   


மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் மீது அதீதமான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள். அதனால் அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

தவிர மலேசிய ஊடகங்கள் அவருடைய செய்திகளைத் தவறாமல் பிரசுரித்து வருகின்றன. அவரின் மறைவுச் செய்திகளை எல்லாத் தமிழ் நாளிதழ்களும் பிரசுரித்தன. நான்கு ஐந்து பக்கங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு அச்சேற்றின.


இந்தியாவின் இரண்டாவது காந்தி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் அப்துல் கலாம். தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களைக் காண்பது அரிது என்று சொல்லும் அளவிற்கு மலேசிய மனங்களில் நிறைந்து மணம் பரப்புகிறார். 

தஞ்சோங் மாலிம் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பெரியவர் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய அக்கினிச் சிறகுகள் சுயசரிதையைப் பாட நூலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.


இமயம் மறைந்தது இந்தியம் அழுகின்றது

 
இமயத்தின் உச்சியைத் தொடுவதாக இருந்தாலும் சரி; ஆழ்கடலின் அடிபாதத்தைத் தொடுவதாக இருந்தாலும் சரி; மன ியில் மாசிலா உண்மை வேண்டும். 

அந்த ிமையில் மாசிலா நம்பிக்கை வேண்டும் என்று சொன்ன அந்த இமயம் சரிந்து விட்டது. வானத்தின் எல்லையில் இந்தியம் அழுகின்றது. வையகத்தின் எல்லையில் மனுக்குலம் கண்ணீர் சிந்துகின்றது.

ஐயா அப்துல் கலாம் அவர்கள் இனம், மொழி, சமயம், சாதி, சாதி, சடங்கு, சம்பிரதாயம் அனைத்தையும் கடந்து போன ஒரு சாதாரண மனிதர். ஆனால் அன்னைத் தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு மந்திரப் புன்னகை. அகில இந்தியாவிற்கு கிடைத்த ஓர் அறிவு ஜீவி.



மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்

ஏழ்மை எளிமையில் உச்சத்தைத் தொட்ட அந்த இமயம் மறைந்து விட்டது. மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

கரிகாலன் முடியாது என்று சொல்லி இருந்தால் கல்லணை கிடைத்து இருக்காது. காந்தியடிகள் முடியாது என்று சொல்லி இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காது. முடியும் என்றால் முடியும்; முடியாது என்றால் முடியாது.

இரண்டிற்கும் நம்பிக்கைதான் மூல காரணம். முடியும் என்று சொன்னால் வரலாறு எழுதப் படுகிறது. முடியாது என்று சொன்னால் வரலாறு அப்போதே அழிக்கப் படுகிறது. ஆக, "முடியும் என்ற நம்பிக்கை முதலில் ஒவ்வோர் இந்தியனுக்கும் வேண்டும் எனும் தூண்டுதல் உணர்வைத் தூண்டி விட்டவர்.


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் படித்து முதலில் பொறியாளரானார். 

பின்னர் அறிவியலாளரானார். பின்னர் குடியரசுத் தலைவராக உச்சத்திற்கு உயர்ந்து காட்டினார். தன் உயிரினும் மேலாக தமிழை நேசித்தவர். அதையும் தாண்டியிலையில் திருக்குறளைக் காதலித்தவர். இது நமக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் வியமாகும்.

 

பிரம்மசாரி அப்துல் கலாமிற்கு இரண்டு மனைவிகள்

ஒருமுறை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு மாநாட்டில் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அப்துல் கலாம் ஐயா சிரித்துக் கொண்டே எனக்குத் திருமணம் ஆகவில்லை என்றயார் சொன்னது. எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மனைவி அல்ல இரண்டு மனைவிகள் என்றார்.

மாநாட்டிற்கு வந்தவர்கள் மலைத்துப் போனார்கள். தொடர்ந்து சொன்னார். எனக்குச் சின்ன வயதாக இருக்கும் போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. நேரம் வரும் போது சொல்லலாம் என்று நினைத்து இருந்தேன் என்றார். 


அப்துல் கலாம் அவர்கள் திருமணம் ஆகாதவர். ஓர் அசல் பிரம்மசாரி என்று எல்லோருமே நம்பி இருந்தார்கள். ஆனால் திடீரென்று இப்பி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதும் இன்னொரு பத்திரிகையாளர் எழுந்து, உங்கள் மனைவிமார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு  அப்துல் கலாம் அவர்கள் தன் நெஞ்சுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டு ’இங்கே தமிழ் என்கிற ஒரு மனைவி இருக்கிறாள்.’ 

இடது பக்கத்தைத் தொட்டு ’இங்கே திருக்குறள் என்கிற இன்னொரு மனைவி இருக்கிறாள்’ என்றார். அப்புறம் என்ன மாநாட்டு அரங்கமே ஒரு சேரக் கைதட்டி ஆரவாரம் செய்தது. அரங்கமே அதிர்ந்தது. இந்த மாதிரி நகைச்சுவையாகப் பேசுவதில் அவர் கில்லாடி. 

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து சென்றாலும் பதவி அதிகாரத்தைச் சுயநலனுக்காகப் பயன்படுத்தாதவர். தமது குடும்பத்தினரைக் கூட குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்க மட்டார். 

மலேசிய தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம்

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம்பர மாளிகைகளைத் தவிர்த்து வந்தார். இந்திய அரசு அவருக்கு ஒரு பெரிய மாளிகையையே வழங்கியது. 

இருந்தாலும் அவர் மறுத்து விட்டார். ஒரு சாதாரண வீட்டிலேயே ஏழு ஆண்டுகளாகக் கடைசி காலம் வரை வாழ்ந்து காட்டினார்.


தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள்

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது சர்ச்சைகள் கிளம்பின. 

அப்படிப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று பல கோணங்களில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன.

இருந்த போதிலும், ஒரே ஒரு மனுவைத் தவிர மற்ற மனுக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். தூக்கு மேடைக்கு அனுப்பாமல் பலரின் உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கிறார்.

ஒரு குடியரசின் தலைவர், ஒரு பேராசிரியர், ஓர் அறிவியலாளர் என பன் முகங்களை கொண்டு இருந்தாலும் தகைசால் மனிதராக வாழ்ந்து காட்டியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். 

அன்னாரின் மறைவு இந்தியாவுக்கு மட்டும் அல்ல அகில் உலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மனுக்குலம் மயங்கி நிற்கிறது.

மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியுடன்

அப்துல் கலாம் அவர்கள் 1931-ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.

தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக அப்துல் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் பிறந்த வீடு தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் இருக்கின்றது.

ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். அப்துல் கலாம் அவர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர். 

1964-ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் ஒரு ரயிலையும் தனுஷ்கோடிக்கு இழுத்துச் சென்றது. 

ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் இளைஞர் கலாசாரம்


அதைப்பற்றி தன்னுடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் ’தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது. இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்த்தது இல்லை என்று எழுதி இருக்கிறார்.

ஓர் அறிவியலாளரைத் தங்களின் ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் கலாசாரம் மிக மிக அபூர்வம். அதைவிட அபூர்வம் என்ன தெரியுமா. அரசியல் துறையைச் சார்ந்த ஒருவரை மனப்பூர்வமாக ஈர்த்துக் கொளவதாகும். அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள், அதிசயங்களின் ஒட்டு மொத்தக் கலவை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப் பதவிகளில் இல்லை. நிர்வாக ஆளுமை இல்லை. இருந்தாலும், அவர் மீதான ஆத்மீக ஈர்ப்பு மட்டும் கிஞ்சிதமும் குறையவில்லை. 

மாறாக ன் இறுதி காலம் வரையில் பல இலட்சக் கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டு தான் இருந்தார். இட்லரால் கூட செய்ய முடியவில்லை. மாபெரும் மெஸ்மெரிசத் தன்மை. தலை வணங்குகிறோம் தலைவரே!


வீடு வீடாகச் செய்தித் தாள்களைப் போடும் வேலை


* அப்துல் கலாம் அவர்கள் 1931 அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜைனுலாபுதீன். ஒரு படகுக்குச் சொந்தக்காரர். தாயாரின் பெயர் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் சென்றவர்.

* உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வீடு வீடாகச் செய்தித் தாள்களைக் கொண்டு போய் போடும் வேலை செய்தார்.

* இந்திய விமானப் படையில் ஒரு போர் விமானி ஆக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு இலட்சியம். ஆனால், நிறைவேறவில்லை. அதற்கு காரணம், எட்டே எட்டு இடங்கள் இருந்த பணிக்கான தகுதிச் சுற்றில், இவர் 9-வது நபராக வந்தார். போர் விமானியாக ஆக முடியவில்லை. அப்படியே போர் விமானியாகி இருந்தால், ஒரு நல்ல அதிபரை இந்தியா இழந்து இருக்கும்.

* அதிபர் பதவி காலத்திற்குப் பின்னர், தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பணிக்கே மீண்டும் திரும்பினார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.


வீணை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு


* இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாகவும், உலகம் அறிந்த இந்திய அதிபதியாகவும் நன்கு அறியப்பட்டவர்.

* வீணை வாசிப்பது அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. தமிழ் மொழியில் கவிதைகள் எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார்.

* இவர் ஒரு சிறந்த விஞ்ஞானி. அனுபவம் பெற்ற அணுவியல் பொறியியலாளர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (DRDO) போன்ற அறிவியல் கழகங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

* இவருடைய குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். டாக்டர் அப்துல் கலாம் கடைக்குட்டி. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்கவும் நாட்டுக்காகவே உழைத்தவர்.

* ராமேஸ்வரத்தில் இவருடைய அண்ணன் முகம்மது முத்து மீரா லெபாய் மரைக்காயர் இருக்கிறார். அவருக்கு வயது 92.

* "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப் படுகிறார். எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம், வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்புகள் அபரிதமானவை. 
* இந்தியாவை அனைத்துலக அளவில் தலைநிமிர வைத்தது பொக்ரான் அணு ஆயுதச் சோதனை. இந்தச் சோதனை அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது.

* இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கிய பங்கு வகித்தவர்.

* கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் தயாரிக்கும் திட்டமும் இவருடைய தலைமையில் தான் இயங்கி வருகிறது.


இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அவருடைய கனவு


இவர் எழுதியுள்ள நூல்கள்:


  1. Turning Points; A journey through challenges 2012
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை. எஸ். ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds: Unleashing the Power Within India; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்); புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
  6. Mission India (திட்டம் இந்தியா); பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள்; பென்குயின் புக்ஸ், 2005.
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்); ராஜ்பால் & சன்ஸ், 2007.
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.


இவர் பெற்ற உயரிய விருதுகள்:


  • அறிவியல் டாக்டர் (பட்டம்), எடின்பரோ பல்கலைக்கழகம் - 2014
  • சட்டங்களின் டாக்டர் (பட்டம்), சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் - 2012
  • IEEE கவுரவ உறுப்பினர், ஐஇஇஇ - 2011
  • பொறியியல் டாக்டர் (பட்டம்), வாட்டர்லூ பல்கலைக்கழகம் - 2010
  • ஹூவர் மெட, ASME மணிக்கு, அமெரிக்கா - 2009
  • சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா - 2009
  • பொறியியல் டாக்டர் (பட்டம்), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் - 2008
  • கிங் சார்லஸ் II பதக்கம், ராயல் சொசைட்டி, இங்கிலாந்து - 2007
  • அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து - 2007
  • ராமானுஜன் விருது, ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை - 2000
  • வீர் சவர்கார் விருது     இந்திய அரசாங்கம் - 1998
  • தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது, இந்திய அரசாங்கம் -  1997
  • பத்மா பூஷன் (1981)
  • பத்மா விபூஷன் (1990)
  • பாரத் ரத்னா (1997)

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28.07.2015 செவ்வாய்க்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் நதிகளை இணைப்பது; மதுவை ஒழிப்பது; தூக்குத் தண்டனைகளை ரத்து செய்வது ஆகியவை அவருடைய விருப்பமாகவும் நோக்கமாகவும் இருந்தன. அடுத்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. 

அந்தப் பெருமகனின் கனவுகளை நிறைவேற்றினால், அதுவே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். (முற்றும்)

12 ஜூலை 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3

[பாகம்: 3]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 16.06.2015-இல் எழுதப்பட்டது.) 



தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறையாக அழுதார். அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறையாகக் கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை. ஆக, இந்த இரு தலைவர்களும் எங்கே நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சரி. தமிழீழப் போராட்டக் குழுக்களை இந்தியா ஆதரித்தது என்கிற விஷயத்திற்கு வருவோம். இந்தியா ஆதரித்தது என்கிற விஷயம், தமிழீழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்து போனது. இந்தியா என்கிற ஒரு மாப்ரும் வல்லரசே நமது குழுவை ஆதரிக்கும் போது, ஏன் மற்ற மற்றக் குழுக்களுடன் வலிய போய் நாம் சேர வேண்டும். ஏன் நமது கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பு. தவிர, கௌரவப் பிரச்சினையும் கூடவே வந்து தொலைத்தது.

தமிழீழப் போராட்டக் குழுக்களுக்கு இடையே பதவிப் போட்டிகள் ஏற்பட்டதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். கௌரவப் பிரச்சினை என்பது இரண்டாவது பிரச்சினை.

மூன்றாவது பிரச்சினை இப்படி வருகிறது. போராட்டக் குழுக்களுக்குள் சாதிப் பிரச்சினைகள். தொடக்கத்தில் கொஞ்சமாய் இருந்தது. பின்னர் பூதமாய் வெடித்த்து. நீ பெரிசா நான் பெரிசா என்று அடிக்கடி அவர்களின் தலைகளை உருட்டிக் கொண்டார்கள். எல்லோருமே தமிழர்கள் தான். இருந்தாலும், தான் மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் ஒசத்தி என்கிற கௌரவப் பிரச்சினை. என்ன செய்வது.

மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள்

தமிழன் எங்கே போனாலும் அவனுடைய மீசையும் போகாது. அவன் சுட்ட தோசையும் போகாது. கூடவே அந்த மசாலா தோசை என்கிற சாதியும் போகாது. செம்மறியாடு மாதிரி உரசிக் கொண்டே வரும். உரசிக் கொண்டே போகும்.


மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள் ஒரு பக்கம். வசதி படைத்த வன்னியர்கள் ஒரு பக்கம். இவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்கிற பிரச்சினை இன்னொரு பக்கம். பிரபாகரன் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர். கருணாகரன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதற்கு மூல காரணமே, இந்தச் சாதி என்கிற பிரச்சினை தான்.

அவர்கள் பிரிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். காட்டிக் கொடுத்த கருணா, தமிழர்களை விட்டுப் பிரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதை அடுத்த அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மை

இப்போது, இந்தக் காலத்தில் தமிழீழ மக்களிடையே சாதிப் பிரச்சினைகள் ஏறக்குறைய மறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எந்தக் காலத்திலும் சாதி வந்து சமரசம் பேசாது என்பதை இப்போது புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அந்தச் சாதி வாதங்கள் தானே, ஓர் இனம் பாதிக்கப் பட்டதற்கு ஒரு பெரிய காரணமாக இருந்தது. அதை மறந்து விடலாமா. இது மூன்றாவது காரணம்.


ஆக, தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட தமிழ் ஈழ விடுதலை அமைப்புகள், கொள்கை முரண்பாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. 1982 இறுதி வாக்கில் இந்தச் சகோதரப் படுகொலைகள் உச்சத்தை அடைந்தன. இந்த விடுதலைக் குழுக்கள் எப்போதும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதற்கு, மேலே இருந்த இந்திய வல்லரசின் உளவுத் துறையும் முக்கியப் பங்கு வகித்தது. எங்கே வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அந்த உளவுத் துறையை ‘ரா’ (Research and Analysis Wing) என்று அழைப்பார்கள். இந்தக் கட்டத்தில் போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மையும் சேர்ந்து கொண்டது. அடுத்து வந்தது அதிகார மோகம். இந்த இரண்டும் சேர்ந்து அடிமட்ட போராளிகளின் உயிர்களைத் தான் பெரிய அளவில் காவு கொண்டன. ஆக, இவைதான் அந்தக் காரணங்கள்.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கு முழுமையாக உதவி செய்யத் தொடங்கிய காலக் கட்டத்தில் தான், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவரும் இந்திரா காந்தி தான்.


உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு உதவி செய்வது என்று அவர் முழு மூச்சாக இறங்கி விட்டார். இறங்கி வேலை செய்யவும் தொடங்கி விட்டார். அதற்குள் அவருடைய மெய்க்காவலர்களே அவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

தமிழீழப் போராட்டக் குழுக்களை, இந்திரா காந்தி தனித் தனியாகப் பிரித்து வைத்துப் பார்த்தார். உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களின் விடுதலைக்கு, தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

’ரா’ என்பது இந்திய உளவுத் துறை

இந்திய நாட்டின் நலன்களுக்காக, ’ரா’ என்கிற இந்திய உளவுத் துறையை அமைத்தவர் வேறு யாரும் இல்லை. இந்திரா என்கிற இரும்புப் பெண்மணி தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவசரப் பட்டார் என்பதையும் நாம் மறைத்து வைக்க முடியாது.

எம்.ஜி.ஆர். மாதிரி அவருக்கும் தமிழீழ மக்கள் மீது ஆசாபாசங்கள் நிறைந்து இருந்தன. வாஞ்சை நேயங்கள் நிறைந்து இருந்தன. தமிழீழ மக்களின் அவசர நேரங்களில், இந்தியக் கடல்படை மூலமாக உணவு, மருந்து, அத்தியாவசியத் தளவாடப் பொருட்களை, இந்திரா காந்தி அனுப்பி வைத்து இருக்கிறார்.


அந்த உதவிகள் கன்னியாகுமரி வழியாகப் போய் இருக்கிறது. திரிகோணமலை வழியாகவும் போய் இருக்கிறது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. அப்படி பாச உறவுகளில் பாலம் போடும் போது தான், அவருக்கு இறப்பு என்கிற அகாலத் தந்தியின் அழைப்பு வந்து சேர்ந்தது.

ஆனால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அப்படி அல்ல. அம்மா யோசித்துச் செய்தார். மகன் யோசிக்காமல் செய்தார். கேட்பார் பேச்சைக் கேட்டு, தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார். அவ்வளவு தான். சின்ன வயதில் பெரிய பதவி. தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லித் திரிந்த சில புல்லுருவிகளும் அவர் கூடவே இருந்தன. அதில் ஒரு முக்கியப் புள்ளி, டிக்சீட். இவரை ஒரு நேபாளி என்று பலர் நினைப்பது உண்டு. அது தவறு.  அவர் ஒரு கேரளாவாசி.

தனி மாநிலம் கிடைப்பதை டிக்சீட் விரும்பவில்லை

1985 ஜூலை 8-ஆம் தேதி, பூட்டான் நாட்டுத் தலைநகர் திம்பு நகரில், இலங்கை அரசாங்கத்திற்கும் ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்தது. அது முக்கியமான பேச்சு. அதில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் டிக்சீட் என்பவர் கலந்து கொண்டார். அவர் ஈழத்துத் தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொன்னாரே தவிர செய்யவே இல்லை. தமிழர்களுக்குத் தனி ஒரு மாநிலம் கிடைப்பதை இந்த மனிதர் விரும்பவே இல்லை. பல குழப்படிகளைச் செய்தார்.


அந்தப் பூட்டான் அமைதிப் பேச்சில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொது மனிதரை நியமித்து இருக்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழராக இருந்து இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நடுநிலைமை கிடைத்து இருக்கும். நேபாளப் பெண்ணை மூன்றாம் தாரமாகக் கல்யாணம் செய்த ஒரு மனிதருக்கு தமிழர்களின் தராதரங்கள் எப்படிங்க தெரியும். அந்தப் பட்டியலில் டிக்சீட் போன்ற மூன்றாம் தர இனவெறியர்களையும் சேர்க்கலாம்.

இந்த மனிதர் மீது எல்லாத் தமிழர்களுக்கும் ஆத்திரம். தமிழர்கள் பிரிந்து போனதற்கு இந்த டிக்சீட் ஒரு காரணம். அண்டல் பாலசிங்கத்தைக் காலை வாரி விட்டவர் என்றுகூட சொல்வார்கள்.

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு விடுதலைப் புலிகளின் பிடிவாதமே காரணம் என்று இந்திய நடுவண் அரசு அடம் பிடித்தது. அப்போது இலங்கையின் அதிபராக ஜெயவர்த்தனா இருந்தார். இந்தியாவின் பிரதமராக ராஜீவ் இருந்தார். திம்பு வட்டமேசையில் தமிழர் தரப்பின் ஒற்றுமையை உடைப்பதற்கு சதித் திட்டங்கள் தீட்டப் பட்டன என்பது தான் உண்மை. அது காலம் தாழ்ந்து அறியப் பட்ட ஒரு பெரிய உண்மை.

அமைதிப் பேச்சு கைகூடி இருந்தால்

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு  ராஜீவ் காந்தியுடன் இருந்த சில புல்லுருவிகள் தான் காரணம் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அந்த அமைதிப் பேச்சு கைகூடி இருந்து இருந்தால், தமிழ் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைத்து இருக்கும். சொர்க்கத்தில் இருக்கும் எம்.ஜி.ஆரும் மிகப் பெரிய சந்தோஷம் அடைந்து இருப்பார். இந்திரா காந்தியும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்.

ஆக, தமிழீழத் தமிழர்கள் விஷயத்தில், ராஜீவ் காந்தி தீர்க்கமான ஒரு முடிவை எடுக்காமல் கோட்டை விட்டார். அது அவருடைய பெரிய தவறு. கடைசியில் என்ன ஆனது. ஸ்ரீ பெரம்பலூரில் தன்னையே பலிகடா ஆக்கிக் கொண்டார். சொல்லும் போது மனசிற்கு கஷ்டமாக இருக்கிறது.


ஆனால், அவருடைய அம்மா அப்படி இல்லை. அந்த மனுஷி   இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உயிரோடு இருந்து இருக்க வேண்டும். நீங்கள் நம்பினாலும் சரி. நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்று மட்டும் என் மனதில் படுகிறது. பட்டதைச் சொல்கிறேன். இந்திரா காந்தி மட்டும் உயிரோடு இருந்து இருந்தால், தனி ஈழம் கிடைப்பதற்கு ஏதாவது எப்படியாவது ஒரு வழி செய்து இருப்பார்.

வரிந்து கட்டி, கிழக்குப் பாகிஸ்தானைப் பிடுங்கி எடுத்தது மாதிரி, அந்த மனுஷி, தடி எடுத்து தனி ஈழத்தை அடித்துப் பிடித்து வாங்கி இருப்பார். என் உள்மனம் சொல்கிறது. இத்தனை ஆயிரம் அப்பாவி ஜீவன்களும் செத்துப் போய் இருக்க மாட்டார்கள். பல ஆயிரம் ஜீவன்களும் ஊனமாகிப் போய் இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு நல்ல வழி கிடைத்து இருக்கும். என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டன.

அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும்

அடுத்து வருபவர் எம்.ஜி.ஆர். இவரும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருக்க வேண்டும். ஈழ மக்கள் இப்படி இந்த மாதிரி அவதிபட்டு இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய மோசமான பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது. இவரும் ஏதாவது ஒரு வழி பண்ணி இருப்பார்.

தமிழகத்துச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில், தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன. ஓர் உயிர், இரண்டு உயிர் இல்லீங்க. பல லட்சம் உயிர்கள். அத்தனையும் நம்ப மாதிரி மனித உயிருங்க.

அந்தப் பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் சத்தம் இல்லாமல் சன்னமாய்த் தங்களின் ஈனக் குரல்களைச் எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. வன்னியிலும் மன்னாரிலும் முல்லிவாய்க் கடல்காடுகளிலும் அந்த அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உங்களுக்குக் கேட்கிறதோ இல்லையோ எனக்கு எப்போதும் கேட்கும்.

சத்தியமாகச் சொல்கிறேன். தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தவர்களையும், அந்தத் துரோகிகளின் வாரிசுகளையும் தமிழ் ஈழ மக்களின் பாவம் சும்மா விடாது. கூண்டோடு அழித்துவிடும். பாவத்தின் முதல் தூறல்கள் ஆரம்பித்து விட்டன.

உங்களுக்கு ஒருவர் வேண்டப் பட்டவராக இருக்கலாம். ஆனால், அவர் செய்த துரோகத்தை உங்களால் மறக்க முடியுமா. சொல்லுங்கள். அப்படியே அந்தத் துரோகத்தை மறந்து வக்காளத்து வாங்கினால் அதைவிட கேவலம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஆக, தமிழ் ஈழ மக்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து வாழ்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் யார் என்றால் ஒருவர் ஈழத்துத் தமிழ்த் தந்தை செல்வா. அடுத்தவர் தமிழகத்து கருணை மனிதர் எம்.ஜி.ஆர். அதற்கும் அடுத்து வருபவர் இரும்பு மனுஷி இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு, ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.  கனவு கண்டவர். எம்.ஜி.ஆருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு இருக்கிறதே அது ஒரு வகையான பாச உணர்வு. ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு இருக்கிறதே அது இன்னொரு வகையான வாய்மை உணர்வு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றி பெற ஆயுதங்கள் தேவைப் பட்டன. அதற்கு எம்.ஜி.ஆர். தன் சொந்தப் பணத்தில் முதலில் ஏழு கோடி ரூபாய் வழங்கினார். அதனால் மத்திய இந்திய அரசாங்கத்திடம் இருந்து  தொல்லைகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அதைப் பற்றி எம்.ஜி.ஆர்.  கொஞ்சமும் கவலைப் படவில்லை.

என் ஆட்சி போனாலும் பரவாயில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனி மாநிலம் கிடைக்க வேண்டும் என்று துணிந்து நின்றார். அப்படியே சொல்லி வந்தார். செய்தும் காட்டினார். நாளைய கட்டுரையில் இன்னும் பல ரகசியங்கள் வருகின்றன. படிக்கத் தவற வேண்டாம்.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2




 

29 ஜூன் 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2

[பாகம்: 2]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 15.06.2015-இல் எழுதப்பட்டது.) 



1980-ஆம் ஆண்டு, தமிழீழப் போராட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணக் குழுக்கள் உயிர் கொடுத்துப் போராடின. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு போராட்டக் குழு. ஆனால், அந்தக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான் மிக மிக வேதனையான விஷயம். கடைசியில் படுகொலைகளில் போய் முடிந்தது. அதற்குச் சகோதரப் படுகொலைகள் என்று பெயர். விடுதலைக்காகப் போராடப் போன குழுக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. அது மனவருத்தங்களைத் தாண்டிய  மன வேதனைகள்.

1981-ஆம் ஆண்டு குழுக்களின் தலைவர் பதவிகளுக்குப் பயங்கரமான போட்டிகள் வந்தன. அதனால் உயர்மட்டத்தில் கொலைகளும் விழுந்தன என்றும் சொல்லப் படுகிறது. இந்தச் சம்பவங்களை எவராலும் மறைக்க முடியாது. ஏன் என்றால் அவற்றைப் பற்றிய தகவல்களை இணைய ஊடகங்களில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.



விடுதலைப் புலிகளுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்று நாம் எல்லோரும் நினைக்கலாம். அதை மறைக்க நீங்களும் நானும் முயற்சிகள் செய்யலாம். இருந்தாலும்  முடியாதுங்க. இணையம் என்ற மாயை உலகில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. இணையப் பதிவுகளை அழிப்பது என்பது ரொம்பவும் சிரமம்.

நீயா நானா போட்டிகள்

சரி. போராட்டக் குழுக்களில் ஏன் இந்தப் பதவிப் போட்டிகள் வந்தன. அதைக் கொஞ்சம் அல்சிப் பார்ப்போம். அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை முன் வைக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். 1984-ஆம் ஆண்டு இந்தக் குழுக்களுக்குள் அடுக்கடுக்காய் நீயா நானா போட்டிகள். அவை பலத்த மோதல்களில் போய் முடிந்தன. பல உயிருடல் சேதங்கள்.

அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டுச் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லாக் குழுத் தலைவர்களையும் சென்னைக்கு வந்து அவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். சில நாட்கள் கழித்து கலைஞர் கருணாநிதியும், அதே பாணியில் தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார்.

எம்.ஜி.ஆரின் அழைப்புக் கடிதம் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தான் முதலில் போய் கிடைத்து இருக்கிறது. உடனே பிரபாகரன் அவரைப் பார்க்கச் சென்றார். ஆனால், புளொட் என்கிற தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOT); டெலோ என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO); இ.பி.ஆர்.எல்.எவ். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதல் முன்னணி (EPRLF); ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக விடுதலை அமைப்பு (EROS) போன்ற குழுக்களுக்கு ஒரு நாள் பிந்தி போய் அழைப்பு கிடைத்து இருக்கிறது.

கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்கள்

அதனால், அவர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது வருத்தம். எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டனர். பாருங்கள். ஒரே ஒரு நாள் லேட். அதற்கு போய் ஒரு பிணக்கு. எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாது என்று சொல்லி கலைஞர் கருணாநிதியைப் போய்ப் பார்த்து இருக்கின்றனர்.





இதற்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் மேல் எம்.ஜி.ஆருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. சொன்ன சொல்லைப் பிரபாகரன் கட்டிக் காக்கிறாரே என்கிற மன நிறைவு. அதன் பிறகுதான் பண உதவிகள் செய்ய ஆரம்பித்தார். முதன் முதலாக இரண்டு கோடி ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்களுக்கு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இந்தக் குழுக்கள் சென்னைக்குப் போய் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து திரும்பிய சில வாரங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய இனப் படுகொலையே நடந்து முடிந்தது.

வவுனியாவில் கென்பாம் டாலர்பாம் எனும் இடங்களில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் பயங்கரமான கைகலப்பு. தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீக மண்ணில் சிங்களர்கள் குடியேறி ஆக்கிரமிப்புச் செய்தார்கள். அதனால் நடந்த கைகலப்பில் 119 பேர் பலி. அதிகம் பாதிக்கப் பட்டது சிங்களர்கள். 





அதற்குப் பதிலடியாக இலங்கை இராணுவம் முல்லைத் தீவு ஒதியமலை கிராமத்தில் நுழைந்து 27 தமிழ் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது. கொதித்துப் போன விடுதலைப் புலிகள், ஒரு போலீஸ் முகாமையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழித்தனர். அதற்கு அடுத்து பலப் பல கைகலப்புகள். பலப் பல மோதல்கள். அவை ஒரு தொடர்கதையாகவே மாறிப் போயின. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இளைஞர்களின் முகவரிகள் தொலைக்கப் பட்டன

இதை இதோடு நிறுத்திக் கொள்வோம். போராட்டக் குழுக்களில் ஏன் பதவிப் போட்டிகள் வந்தன என்பதைப் பார்ப்போம். இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்கிற நோக்கத்தில் பாரபட்சம் இல்லாமல் பணத்தை வாரி வழங்கினார்கள்.

அப்படி கிடைக்கும் நிதியுதவியை போராட்டக் குழுவின் தலைவர் மட்டுமே கண்காணிக்க முடியும். நிர்வாகம் செய்ய முடியும். அப்படி ஓர் எதேச்சையான அதிகாரம். அந்த அதிகாரம் குழுத் தலைவருக்கு மட்டுமே என்பதும் எழுதப் படாத ஒரு சாசனமாக உருவானது.  





அதனால், அவருக்கு கீழே இருந்த மற்ற மற்றத் தளபதிகளுக்கும் தலைவராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. தலைவர் மட்டுமே எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கிறார் என்கிற ஆதங்கமும் வெளியே வந்து கொட்டியது. அதுவே நாளடைவில் பேராசையாக மாறி வெறிபிடித்துப் போனது. அதைத் தொடர்ந்து உள்ளுக்குள்ளேயே சில பல களையெடுப்புகள். அதன் விளைவு, நன்றாகப் படித்த, அறிவு சார்ந்த பல இளைஞர்களின் முகவரிகள் இரவோடு இரவாக அழித்துத் தொலைக்கப் பட்டன. இது முதலாவது காரணம்.

அடுத்து, தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்து வந்தார். அதனால் இந்திய வல்லரசு தங்களின் பின்னால் எப்போதும் துணை நிற்கும் என்கிற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆபத்து வந்தால் இந்தியா களம் இறங்கும் என்கிற ஒரு நம்பிக்கை. அந்த அசட்டு நம்பிக்கையினால் அசட்டுத் துணிச்சல்கள் வேறு. அதனால் குழுத் தலைமைத்துவங்களில் பதவிப் போராட்டங்கள் உச்சம் பார்த்தன. இது இரண்டாவது காரணம்.

கொரில்லா வன்முறையை விரும்பாத இந்திரா காந்தி

தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்தார். உண்மைதான். ஆனால், அவர் எல்லாக் குழுக்களையுமே ஆதரித்து வந்தார் என்பது தான் சூசகமான உண்மை. எம்.ஜி.ஆரைப் போல அவர் ஒரே ஒரு குழுவை மட்டும் ஆதரிக்கவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

ஒரே ஒரு குழுவை ஆதரித்தால், அந்தக் குழு முதன்மை பெற்று, மற்றக் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்புறம் அந்தக் குழு பிரபலம் அடையும். காலப் போக்கில் பெரிய ஒரு சக்தியாகவும் மாறி விடும். ஆக, கொரில்லா போரினால் தான் ஓர் இனத்திற்கு விடுதலை கிடைத்தது என்கிற அங்கீகாரமும் பிரசித்திப் பெற்று விடும். இல்லையா. 





விடுதலை கிடைப்பது நல்ல விஷயம் தான். தமிழீழத்திற்கு விடுதலை கிடைப்பதில் இந்திரா காந்திக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. ஆனாலும் இந்த மாதிரி வன்முறையில் விடுதலை கிடைப்பதை இந்திரா காந்தி விரும்பவில்லை. கொரில்லா முறையில் விடுதலை வாங்குவது அவருக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தது. பேச்சு வார்த்தையின் மூலமாக விடுதலை கிடைப்பதையே அவர் விரும்பினார்.

இந்திரா எதற்காக பயந்தார்

சரி. அதே அந்தக் கொரில்லா வன்முறையை இந்தியாவில் உள்ள பிரிவினை வாதிகளும் பயன்படுத்தத் தொடங்கினால் என்ன ஆகும். சொல்லுங்கள். மூலைக்கு மூலை பூஞ்சைக் காளான்கள் மாதிரி கொரில்லா அமைப்புகள் கொடிகளைப் பறக்க விடும். கிழக்கே குச்சிப்புடி என்றால் மேற்கே ஒடிசி. வடக்கே பரத நாட்டியம் என்றால் தெற்கே கதக்கலி. அப்புறம் சொல்லவும் வேண்டுமா. அடுத்து ராஜஸ்தான் ஒட்டகங்களைக் களம் இறக்கினாலும் இறக்கி விடுவார்கள். சொல்ல முடியாது. அப்புறம் இந்தியாவின் நிலைமை கட்டவிழ்த்த களிறுக் கதையாகி விடும்.

அதற்காகத் தான் இந்திரா காந்தி பயந்தார். அவர் பயந்து நின்றதிலும் நியாயம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பஞ்சாப், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர், அந்தமான், தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம் போன்ற மாநிலங்கள் தனிநாடு அல்லது தனியாட்சி கேட்டு இந்திரா காந்தியின் சிண்டு முடியைப் பிடித்துப் பேன் பார்த்துக் கொண்டு நின்றன. அது அவருக்கு ஒரு பெரிய தலைவலி.

ஆக, இந்திரா காந்தி இப்படி நினைத்தார். தமிழீழத்தில் ஒரே ஒரு போராட்டக் குழு மட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றால், இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு குளிர்விட்டுப் போகும். அப்புறம் அந்த வெற்றி இந்தியாவிற்குள்ளும் ஊடுருவும். பயங்கரமான எதிர்விளைவுகளைக் கொண்டு வரும். நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. அப்படித்தான் இந்திரா காந்தியின் மூளை வேலை செய்தது.

இந்திரா காந்தி எல்லாக் குழுக்களையும் ஆதரித்தார்

அதனால், இந்திரா காந்தி என்ன செய்தார் தெரியுமா. அவர் எந்த ஒரு போராட்டக் குழுவையும் தனித்து ஆதரிக்கவில்லை. எல்லாக் குழுக்களையுமே ஆதரித்தார். அதை இப்படியும் சொல்லலாம். ‘நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தர உதவி செய்கிறேன். ஆனால், உங்களுக்கு உள்ளேயே நீங்கள் அடித்துக் கொண்டால் அது உங்களுடைய பசால். என்னிடம் மட்டும் வரவேண்டாம். அது தான் எனக்கும் நல்லது என் இந்தியாவுக்கும் நல்லது. அப்படித்தான் இந்திரா காந்தி நினைத்தார்.

தயவு செய்து இதை இந்திரா காந்தியின் ஒரு சதித் திட்டம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். அப்படி ஒரு நினைப்பு வரலாம். வேண்டாங்க. தப்புங்க. அதை வேறு மாதிரி நினைத்து அரசியல் சாணக்கியம் என்று சொல்லிப் பாருங்கள். நன்றாக இருக்கும். பிரகாசமாக இருக்கும். நல்லா சூப்பராகவும் இருக்கும்.





அந்தச் சாணக்கியத்திற்குச் சாணைப் பிடிக்க இந்திய உளவுத் துறையையும் (Research and Analysis Wing) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது. அந்த உளவுத் துறையும் தங்கள் வேலைகளை இம்மியும் பிசகாமல் இடுப்பும் நகராமல் நன்றாகவே செய்து முடித்தன.

கடைசியில் என்ன ஆனது. விடுதலைக் குழுக்களுக்குள் கூடுதலாகத் தான் சண்டைகள் வந்தன. அப்புறம் அவை மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிப் போயின என்பது வரலாறு. இங்கேயும் இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம் அரிச்சுவடி படித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம்

தவிர, இந்திரா காந்தியிடம் இன்னொரு காரணமும் இருந்தது. 1970-களிலேயே இலங்கையின் மீது இந்திரா காந்திக்குக் கோபம் தொடங்கி விட்டது. கிழக்கு பாக்கிஸ்தான் மீது இந்தியா படையெடுத்தது. வங்காள தேசத்தை உருவாக்கியது. அந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே. அப்போதே அந்தச் சமயத்தில் இருந்தே இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம். இந்தியாவுக்கும் கோபம்.





மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து விமானங்கள் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு போக வேண்டும் என்றால் இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின்னர்தான் இந்தியாவின் மேலே பறக்க முடியும். ஆக, வங்காள தேச விடுதலைப் போர் நடக்கும் போது, பாக்கிஸ்தானிய விமானங்கள் இந்திய வான்பரப்பில் பறக்க முடியவில்லை. அதனால், அவை இந்தியத் துணைக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு கிழக்கு பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டி வந்தது.

அப்படி நெடும் தூரம் பயணித்த பாக்கிஸ்தானிய விமானங்களுக்கு, எண்ணெய் எரிபொருள் நீர் உணவு கொடுத்து ராஜ உபசாரம் செய்தது இலங்கை. அது  இந்திரா காந்திக்குக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவருக்கு இலங்கையின் மீது அப்போது இருந்தே கோபம். இரு… ஒரு நாளைக்குப் பார்த்துக்கிறேன்  என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார். 


பிரபாகரன் இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்
 
அந்த வகையில் தமிழீழப் போராட்டமும் சரியாக, கணக் கச்சிதமாக வந்து அமைந்தது. பழி தீர்க்கிற மாதிரி போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். பணத்தைக் கொடுத்தார். ஆயுதங்களை வழங்கினார். தமிழீழப் போராளிகளுக்கு பயிற்சிகள் கொடுக்க இந்தியாவில் முகாம்களையும் அமைத்துக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சித் தளங்கள் இருந்தன. ஆனால், எந்த ஒரு குழுவும் தனித்து நின்று மாபெரும் சக்தியாக விளங்குவதைத் தவிர்ப்பதிலும் ரொம்பவும் எச்சரிக்கையாக இருந்தார். இதுதான் நடந்த விஷயம். அரசியல் என்றால் சும்மா இல்லீங்க. உள்ளே ரொம்ப விஷயம் இருக்கிறது.

தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறை. அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறை. வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை என்று தமிழ்ப் பெரியவர் பழ.நெடுமாறன் சொல்கிறார். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம். போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1