07 ஜூன் 2016

மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள்

மலாயாவிலும் சரி இலங்கையிலும் சரி… ஆங்கிலேயர்களின் ராஜபோக வாழ்க்கைக்குக் கங்காணி முறை தான் தூபம் ஏற்றி வைத்தது. மலாயாவில் கங்காணி முறை என்று அழைத்தார்கள். அங்கே இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைத்தார்கள். 
 

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரண்டுமே ஆள்கடத்தும் ஜீபூம்பா சதிராட்டங்கள் தான். எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். அதையே மாற்றிப் போட்டுப் பாருங்கள். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தானே லாபம். பாவம் கொக்கு!

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக் கூலி முறையால் இலங்கைக்குத் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலை. அதனால் மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் கொண்டு வந்தார்கள்.

அலிபாபா குகைகளின் விசித்திரங்கள்

ஒன்று மட்டும் உண்மை. மலாயாவில் கங்காணி முறையை முதலில்  சோதித்துப் பார்த்தார்கள். பக்குவமாக இருக்கிறது என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர்தான் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள். 


இலங்கையில் அந்தக் கங்காணி முறை அமல்படுத்தப் பட்டாலும் அதனை ஒப்பந்தக் கூலி முறை என்றே தொடர்ந்து அழைத்தார்கள். பின்னர் காலத்தில் அது ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறிப் போனது. ஆனால் உண்மையாகப் பார்த்தால் அது மலாயாவின் கங்காணி முறை தான்.

ஒரு முக்கியச் செய்தி. மறுபடியும் வாசிப்பது சஞ்சிக்கூலிகள். ஒப்பந்தக் கூலி முறை என்பது வேறு. கங்காணி முறை என்பது வேறு. இதைப் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கிப் போவார். அப்படியே ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகள். அப்படியே ஆட்களை அள்ளிக் கொண்டு வருவார். அது ஒரு வழக்கம்.


இருப்பினும் சஞ்சிக்கூலிகள் விசயத்தில் மூலகர்த்தாவாக இருந்தவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள்தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழர்களை முதன்முதலாக இலங்கைக்குத் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதனால் அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை. 100 விழுக்காட்டுப் புளங்காகிதங்கள்.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. சுரண்டும் கலைக்கு ஒரு பெரிய கலைகளஞ்சியத்தையே எழுதியவர்கள் சும்மா இருப்பார்களா. ஆக, சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் தான் இலங்கையின் மலையகத் தமிழர்கள். மலாயாத் தமிழர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழ்ந்த ஏழைக் குடியானவர்கள், இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பினால் ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால் போதும். அதாவது ஒரே ஒரு கைநாட்டு. 


ஒப்பந்தக் காலம் முடியும் வரையில் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். மீறினால் முதலாளி விதிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். அதற்கும் சரி என்று தலையை ஆட்ட வேண்டும்.

நிஜப் புலிகள் எல்லாம் பூனை மாதிரி

இருந்தாலும் பாருங்கள். வேலைக்குப் போன இடத்தில் நடந்த அநியாயம் அக்கிரமங்களைப் பார்த்துச் சகிக்க முடியாமல் சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி ஓடி வந்ததும் உண்டு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களிடம் அது ஒரு வழக்கமாகியும் போனது.

இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளையும் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா. 


இவற்றைவிட பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள் தானே. பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் என்ன… பூனை மாதிரி தெரிந்து இருக்கும். 

காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலியின் இருட்டைக் கடை அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. அனுபவம் பேசி இருக்கும்.

ஆனால் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசுபட்ட காரியமா. நடக்கிற காரியமா. 


அதனால், கஷ்டமோ நஷ்டமோ… வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொருமி இருக்க வேண்டும். 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயற்காட்டு மண்ணையும் மணல்வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பி இருக்க வேண்டும். ஆக வேதனைப்பட்டது தான் மிச்சம்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார். கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர், தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே அந்தப் பழைய ராகம். பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.

எள் என்றதும் எண்ணெயாய் வடிந்த கங்காணிகள்

தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய் பிடிபட்டவர்களுக்கு கசையடிகள் காத்து நிற்கும். காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போட்டு எறும்புகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் சூடு போடுவதும் நடக்கும். 


அதுதான் ஏற்கனவே கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டார்களே. அப்புறம் எப்படி முதலாளிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாகி விட்டதே. வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா.

ரொட்டியில் பட்டர் தடவ கத்தியைத் தேடுகிறவன் பிடிபட்டவர்களை வறுத்து எடுக்காமல் சும்மா விடுவானா. அந்த வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் தயாராக இருந்தார்களே. அது பற்றாதா? எள் என்றதும் எண்ணெயாய் வடிய ஆள் இருந்த வரையில் வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்து முடிந்தன.


ஆங்கிலேய ராஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் ஆயிற்றே. நாயைச் சுடுவது என்றாலும் நக்கி விட்டுத் தான் சுடுவோம் என்று பாளையங் கோட்டையில் மேஜர் பேனர்மேன் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

பரங்கியர் இழைத்தக் கொடுமைகள்

தமிழ்ப் பாட்டாளிகளுக்கு பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணீர் விட்டு அழுத பாரதியார் தன்னுடைய பாடல்களில் இப்படி எழுதி இருக்கிறார்.

"கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!"


சரி. இங்கே மலாயா நாட்டில் நம் தமிழர்களின் கண்ணீர்க் கதை ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு ஒரு தொடர்கதையாய் நீண்டு போகின்றது. அந்த நீண்ட அத்தியாயத்தில் நம் இனத்தவர் சிந்திய இரத்தம், துடைத்த வியர்வை, இரைத்த தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள் சொல்லில் மாளா. 


இன்றைய இந்த மலேசியா என்கிற நவீன தேசம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் பிடித்து அழகு பார்க்கின்றது. இவை வரலாறு சொல்லும் உண்மைகள். ஆக அந்த உண்மைகளும் உரிமைகளும் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம். நாம் என்ன எழுதினாலும் அவற்றின் படிவங்கள் தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப் படுகின்றன. தவிர இணையத்திலும் உடனுக்குடன் பதிந்து விடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் சில பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய வாரிசுகள் அந்தப் படிவங்களை நிச்சயம் படிப்பார்கள்.

மலாயா மண்ணைச் செம்மைப்படுத்திய தமிழினம்

மலேசியாவில் சிலபல தமிழ் நாளிதழ்கள் இருந்தன. அவற்றில் நம் இனம் அனுபவித்த வேதனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா மண்ணைத் தமிழினம் செம்மைப் படுத்தியது. சாலைகளை அமைத்துக் கொடுத்தது. கம்பிச் சடக்குகளில் ரயில் வண்டிகளை ஓட வைத்தது என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

இந்த மாதிரியான படிவங்கள் தான் எதிர்காலத்தில் சான்றுகளாக மாறும். ஆகவே, நம் மூதாதையர்களைப் பற்றி இப்போதே நாம் எழுதி வைக்க வேண்டும். எழுதியவற்றை ஆவணப் படுத்த வேண்டும்.

05 ஜூன் 2016

மலாயாவில் கங்காணி முறை

திருநெல்வேலியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கிராமம். அதன் பெயர் கீழத்திரு வேங்கடநாதபுரம். அந்த ஊரில் ஒரு கோயில். அதன் பெயர் செங்காணி. சிவப்பு நிலம் என்று பொருள். 

அங்கே இருந்துதான் முதன் முதலாகக் கங்காணி முறை தொடங்கியதாகச் சொல்லப் படுகிறது. அந்த இடத்தில் இருந்து தான் முதன் முதலாக ஆட்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதாகவும் ஒரு பேச்சு.

Balu Estate Kuala Lumpur 1912
இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. வரலாற்று நூல்களை அலசிப் பார்த்தாகி விட்டது. உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் மலாயா சரித்திரத்தில் கங்காணிகள் நல்ல ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். அது கசக்கிப் பிழியப்பட்ட சஞ்சிக்கூலிகளின் அவல வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதற்கு முன்னால் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களைப் பற்றிய தொடர்ச்சி. 



Batang Kali Estate Ulu Yam 1912
இலங்கையில் மிக அழகான, மிக அரிதான இயற்கை வன வளங்கள் இலங்கை மலையகத்தில் தான் உள்ளன. ஒரு நிமிடம் பிளீஸ்! இலங்கையின் மத்திய மலைப்பகுதியை மலையகம் என்று இலங்கையிலும் அழைகிறார்கள். நாமும் இங்கே தீபகற்ப மலேசியாவை மலையகம் என்றுதான் அழைக்கிறோம். 

ஆக, முரண்பாடுகள் வரலாம் இல்லையா. அதைத் தவிர்க்க இலங்கை மலையகம் எனும் சொல்லையே இங்கே பயன்படுத்துவோம். சரியாக இருக்கும்.  

உலகப் புகழ் பெற்ற சிலோன் டீ

இலங்கை மலையகத்தில் அழகான நீர்வீழ்ச்சிகள், அழகான ஆறுகள், அழகான ஏரிகள் இருக்கின்றன. ஏறி இறங்கும் மலைத்தொடர்கள், குனிந்து நிமிரும் குன்றுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையின் மற்ற மற்ற இடங்களைக் காட்டிலும் மாறுபட்ட காலநிலை. வேறுபட்ட வானிலை. இந்த மலையகப் பகுதி ஒரு குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சொர்க்கபுரியாவும் விளங்குகின்றது. 


Batu Caves Estate 1912
சிலோன் டீ என்றால் உலகப் புகழ் பெற்றது. அது உங்களுக்கும் தெரியும். ஆக, அது பயிர் செய்யப்படும் இடத்தைப் பார்க்க எல்லோருக்குமே ஆசை வருமா வராதா. அதனால் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இலங்கை மலையகத்தை தேடிச் செல்வதில் நிச்சயமாக அர்த்தம் இருக்குமா இருக்காதா. கண்டிப்பாக இருக்கும்.

இலங்கைத் தீவின் நடு மையப் பகுதியில் இலங்கை மலையகம் அமைந்து இருக்கிறது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்தத் தேயிலைத் தோட்டங்கள் தான் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

இதை எவராலும் மறுதலிக்க முடியாது. தேயிலை மூலமாகக் கிடைக்கும் அந்நிய செலாவணியே இலங்கையின் பிரதான மூலவளமாகவும் அமைகின்றது. ஏறக்குறைய 25 விழுக்காட்டு மூலதனம் அங்கே இருந்து தான் வருகிறது. அதை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இல்லாத ஆட்டங்களை ஆடி வருகிறது. 



Changkat Salak Estate 1912
அந்தக் காசை வைத்துக் கொண்டு தானே தங்களின் இராணுவத்திற்கு ஆயுதத் தளவாடங்களை வாங்குகிறார்கள். தமிழர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் காசை வைத்துக் கொண்டு தானே தமிழர்களையே அழித்து ஒழிக்கிறார்கள். என்னே புத்தி. விட்டால் பெண்டு பிள்ளைங்களையும் அடைமானம் வைத்து விடுவார்கள் போல இருக்கிறது. விடுங்கள்.

இலங்கை மலையகத்தில் இப்போது 842,323 தமிழர்கள் இருக்கிறார்கள். இது 2012 புள்ளிவிவரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிப் போனவர்கள் ஒரு எட்டு இலட்சம் பேர் இருப்பார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பத்துப் பதினைந்து இலட்சம் வரும். ஆக, இப்படி இலங்கையின் பொருளாதார மூலசக்தியாக விளங்கும் மலையகத் தமிழர்களை இலங்கை அரசாங்கம் பெரும்பாலும் புறக்கணித்தே வந்தது. இன்னும் புறக்கணித்து வருகிறது. அப்போது வெள்ளைக்காரர்கள் பிழிந்து எடுத்தார்கள். இப்போது சிங்களவர்கள் உறிஞ்சி எடுக்கிறார்கள். பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.

லயம் என்கிற தகர டப்பாக்கள்

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், இலங்கை மலையகத் தமிழர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறார்கள். பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இங்கே நம்ப இடத்தில் கொஞ்சம் பரவாயில்லை. 



Damansara Estate Batu Tiga 1912
ஆக, இந்த இரண்டு சஞ்சிக்கூலிகளின் புலம்பெயர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலச்சில உரிமைப் பிரச்சினைகளைத் தவிர… இங்கே எவ்வளவோ தேவலாம். அங்கே உணவு, உடை உறைவிடம் என்கிற அடிப்படை வசதிகளுக்கே அலைமோதுகிறார்கள். அந்த அடிப்படை வசதிகளையே நிவர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

“லயம்” என்கிற தகர டப்பாக்கள்தான் அவர்களின் குடியிருப்புகள். அதுவே அவர்களின் வாழ்விடங்களாகவும் அமைகின்றன. மிகவும் குறுகிய அறைகளில் மொத்தக் குடும்பமும் சுருண்டுக் கிடக்கும். அப்படி ஒரு பரிதாப நிலை. எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாதது. அந்த ராமாயணம் இன்னமும் அங்கே தொடர்ந்து காவியம் பேசுகிறது.

அதே சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழினத் தலைவர்களின் வாய்ச் சவடாலும் தொடர்கிறது. நான் எங்கே வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கத்திக் கதறும் இலங்கை மலையகத் தமிழர்களைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். கரிசனை இல்லாத வெட்கக் கேடுகள்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

சரி நம்ப கங்காணிகளைப் பற்றிய விசயத்திற்கு வருவோம்.

19-ஆம் நூற்றாண்டில் 'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் மலாயா, சுமாத்ரா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளுக்குக் கொண்டு வரப் பட்டனர். செட்டி நாட்டில் இருந்து லேவாதேவித் தொழில் செய்வதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்களும் வந்தனர். 


Kalumpang Estate Bagan Serai 1912


தமிழகக் கரையோரப் பட்டினங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் நகரங்களில் சிறிய அளவில் வர்த்தகங்களைச் செய்தனர்.

தவிர யாழ்ப்பாணம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். ஆனால், குறைவான எண்ணிக்கை. சீக்கியர்களை மறந்துவிடக் கூடாது. இவர்கள் மலாயாவிற்கு வந்து போலீஸ், இராணுவம், காவல், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டனர். தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களில் பெரும்பாலோர் ரப்பர், காபித் தோட்டங்களில் கூலிவேலைகள் செய்தனர்.

ஆங்கிலேயர்களின் கைப் பாவைகள்

இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப் படுத்தினர். ஆங்கிலேயர்களின் கைப் பாவைகளாகப் பிழைத்து வந்த இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு.

 
Kampsey Estate Selangor 2 1912
இவர்கள் இந்தியாவுக்குப் போய் ஆட்களைப் பிடித்து வருவதை, கங்காணி முறை என்று அழைத்தார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஆசை வார்த்தைகளை மூலதனமாகப் போட்டு, சாணக்கியச் சாதுர்யமாக வெள்ளந்திகளைக் கவர்ந்து இழுத்து வரும் முறைதான் கங்காணி முறை.

ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் வேலைகளை எளிமையாக்குவதற்காக, இந்தக் கங்காணி முறையை அமல் படுத்தினார்கள். பணம் கொடுத்து கங்காணிகளைத் தென்னிந்தியாவிற்கு அனுப்பி ஆட்களைக் கொண்டு வருமாறு பணித்தனர். கங்காணிகள் கொண்டு வரும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொருத்து கங்காணிகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது.

மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட கிராமங்களில் வறுமை நிலவிய காலக்கட்டம். அதுவே கங்காணிகளுக்குச் சாதகாக அமைந்தது. பலப்பல நம்பிக்கைகள். பலப்பல உறுதிகள். அடுக்கடுக்காய் அள்ளித் தெளித்து ஆட்களைப் பிடித்து இழுத்து வந்தனர். அந்த வேலைகளை கங்காணிகள் மிகச் சிறப்பாகவே செய்து வந்தனர்.


Damansara Estate Batu Tiga Selangor 1912

மலாயாவில் எளிதாக சம்பாதிக்கலாம். குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்கிற கங்காணிகள் ஆசை வார்த்தைகள். அவற்றை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக் கணக்கில் கொண்டு வரப்பட்டனர். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பாகுபாடுகள் இல்லை.

தமிழர்கள் வரலாற்றில் ரஜுலா கப்பல்

எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த தென் இந்திய மக்களும், சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அப்படி வரும் போது சாதி என்கிற சடங்குச் சம்பிரதாயமும் இறக்குமதி ஆனது.

அப்போது தலை விரித்து ஆடியது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருகிறது. இப்படியும் சொல்லலாஅம். கழுத்து அறுக்கப்பட்டு கசாப்புக் கடைகளில் விற்பனை ஆகிறதாம். ஒரு கிலோ ஒன்றரை வெள்ளியாம். கேள்விப் பட்டேன்.

கங்காணிகளை முழுக்க முழுக்க நம்பிய கிராம மக்கள் கடல் கடந்து பயணம் செய்தார்கள். கப்பலில் பலர் நோய்வாய்ப்பட்டு கப்பலிலேயே இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களின் உடல்களைக் கடலிலேயே வீசி விடுவார்கள். வேறு வழி.

ரஜுலா கப்பலைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தக் கப்பல் மறைந்து போனாலும், அது விட்டுச் சென்ற சில மந்திரப் புன்னகைகள் மட்டும் இன்னும் நம் வரலாற்றில் இருந்து மறையவில்லை. தமிழர்கள் வரலாற்றில் அது ஒரு ஜீவநாடி. சமயங்களில் ரஜுலா கப்பலைச் சிங்காரச் சிறுக்கியே வித்தாரக் கள்ளியே என்று அழகாகவும் வர்ணனை செய்வார்கள். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.

கங்காணிகளைக் குறை காண்பது நமது நோக்கம் அல்ல. அவர்களின் அணுகுமுறைகளினால் ஏற்பட்ட சமூகத் தாக்கங்களைப் பார்க்கிறோம். மனிதாபிமான உணர்வுகளைத் தாண்டிய வஞ்சனைகளில் குறை காண்கிறோம். அவர்களின் அதிகாரக் கோப்புகளில் நியாயங்களைத் தேடுகிறோம்.

Malaysia - Fake Samiyars

In Malaysia we have approximately 100,000 temples to cater approximately 1.5 million Hindus. You may ask why 100,000 temples just for 1.5 million people...


It is because it is a rule here in Malaysia to build a temple outside a house... inside a house... inside a study room... beside a drainage... opposite a bus stop... nearby Tesco and Jaya Jesco super markets... deep inside jungles... beside waterfalls... beside fish ponds... top on the mountain hills and also beside every big tree that can be seen at nearby trunk roads or just next to PLUS highway... 



According to SRM (Survey Research Malaysia) there are approximately 100,000 smaller and big temples in West Malaysia alone. Sarawak and Sabah excluded. Anytime you can visit any of these shrines and at any given moment one samiyar man will be there. Sometimes it depends also on your luck. He will download the God into his body and he will start to help you to solve all your problems. Name a problem and he will solve it.

You would have seen these type of men in smaller temples... where someone gets in trance... have a few bottles of beer usually black stout and starts smoking thick Indian cigars. After that those people around will usually take turn to share their problems with the samiyar in return of some fees.




It is amazing the list of the problems that these samiyars can solve... basically everything and anything. Some of the major problems and services that samiyars offer:

1. Financial problems
2. To stop husband having affairs around
3. Bad SPM results
4. Marriages cum divorces
5. Kidney stone removals
6. Lesen sudah mati
7. Insurance tada bayar
8. Install Windows 7
9. Samsung Galaxy screen hanging
10. Facebook password hacked
11. YES wifi not working
12. Whatsapp not responding
13. Stomach pain after taking Old Town Coffee House laksa
14. Thai hot fried rice habis mati

And the list goes on and on and on. No stoppages. People flock in to see these types of Gurujis from all over the country... just because he or she is a one stop solution.

Most of this people go to these kind of temples when they face financial problems. The temple shrines itself will usually be in dying conditions... with a few aluminiums taken from a nearby besi buruk used as the roof. How can someone who is actually surviving on daily basis offer you advice about your finance or predict your wealth... Utterly ridiculous isn’t it...

Let me ask you... If you bring your daughter or your son to these kind of places and make them bow in front of these mere humans possessed by spirits... how will they ever respect God or a genuine Guru? Young kids being brought to these places where goats and chickens are sacrificed in the name of God... How do you can expect the children to grow up with compassion and love... What would they think of the God that they are praying which demands blood sacrifice...




Gu... means darkness. Ru... means one who removes darkness or gives light. Gu and Ru together... Guru. It means one who removes evil and guides you to the right path. But there are just too many fake Gurus nowadays who are doing exactly the opposite... swaying you out of the right path and putting you into darkness.

People who are looking to gain quick benefits out of your misery can never be Gurus. People who are showing you some stupid magics in order to rip off some of your money will never be able to guide you out of your troubles.I will always say and my message is this:

“Stop trusting these fake Samiyars who get possessed and try to predict your future. The essence of living a good life is believing in yourself and trusting God when you are in happy or at hard times.” Trust in God. Dont trust cheap samiyars.




Do not trust fake Samiyars and do not have the habit of seeking blessings from them. They too are human beings like others and they should not be given the status of God.

It is difficult to distinguish the genuine Gurus from fake ones nowadays. If you are not sure which Gurus to follow... Do not worry... place your faith in God. Trust in God.

You may feel that this article is written sarcastically... Please do not be offended. Thousand apologies.

காமராஜர் கயிறு இழுத்தார்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்த காலம். 'சட்டமன்ற உறுப்பினர் நாள்' என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்தது அன்றைய தமிழக அரசு.

1957-ம் ஆண்டு ராஜாஜி ஹாலின் வெளிப்புற இடத்தில் எம்.எல்.ஏக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன.


பெண் உறுப்பினர்கள், ஆண் உறுப்பினர்களுடன் சரிநிகராக மாறுவேடப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி போன்றவற்றில் பங்கெடுத்து அசத்தினார்கள். கயிறு இழுத்தல் போட்டியில் முதல் ஆளாக நின்று காமராஜரும் கயிறு இழுத்தார்.
முதல்வராக இருந்த காமராஜர், வேஷ்டி சட்டையோடு இந்த போட்டியில் கலந்து கொண்டார். இந்த விளையாட்டுகள் அனைத்திலும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கலக்கினார்கள் என்பதுதான் முத்தாய்ப்பு.

இன்றைய சட்டமன்றங்கள்... அங்கே தமிழகத்திலும் சரி இங்கே மலேசியாவிலும் சரி... படும் பாட்டை நினைக்கும் பொழுது அன்றைய காலம் பொன்னான காலமாகத் தான் தெரிகிறது.


நாம் இன்று போற்றும் அரசியல்வாதிகள் தெய்வங்கள் அய்யா... அவர்கள் எப்படி ஒரு சாதாரண மனிதன் காமராஜரைப் போல இருப்பார்கள்... சாஷ்டங்கமாக நமஸ்கரிக்கவும், கூன்வளைந்து கும்பிடவும் நமக்கு பயிற்சி கொடுத்து விட்டார்கள்.

ஏதோ ஐநூறோ ஆயிரமோ வாங்கிக் கொண்டு தனது பொன்னான வாக்கைப் போடுவதோடு தமிழனின் கடமை முடிந்து போகிறது. அப்புறம் அவர்கள் தெய்வமாகத் தெரிகிறார்கள். கும்பிடுடா தமிழா.. கூன்வளைந்து கும்பிடு...

போங்கடா நீங்களும் உங்கள் சுய மரியாதையும்... காமராஜரும் கக்கனும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கேலி பேசும் கூட்டம்தான் இன்று நம்மை ஆளுகிறது.

-முத்தண்ணா 05.06.2016

03 ஜூன் 2016

இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு

இந்தியத் துணைக் கண்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. அப்போது உலகத்தில் ஏறக்குறைய கால்வாசி பகுதி தமிழர்களின் ஆதிக்கப் பதிவுகளாக அழகு செய்தன. தமிழர்களின் ஆட்சி தென்பகுதிச் சீனாவில் தொடங்கி இந்தோனேசியாவில் இடைப்பட்டு பாரசீகத்தின் கிழக்குப் பகுதி வரை நீண்டு போனது. உலக வரலாற்றில் அது ஒரு கனாக்காலம்.

மகா அலெக்சாண்டர் கி.மு. 326இல் இந்தியாவிற்குள் காலடி வைக்கும் போது சிந்துவெளி நாகரிகம் சிதைந்து கொண்டு இருந்தது.
(சான்று: http://amarnathkk-narean.blogspot.my/2011/12/blog-post.html)

ஆரியர்களின் நெருக்குதல்களினால் நசிந்தே போனது. கீழே இறங்கி வந்த திராவிடர்கள், தென்னிந்தியாவில் அப்படியே ஐக்கியமாகிப் போயினர். மூலைக்கு ஒன்றாய்ப் பிரிந்து வீடுகள், குடிசைகள், குடில்களைக் கட்டிக் கொண்டனர்.

அப்புறம் அவர்களுக்குள் போட்டிப் பொறாமைகள். சண்டைச் சச்சரவுகள். இத்யாதி இத்யாதிகள். தமிழ்ச் சங்கம் சிரிக்கும் படியாகச் சண்டையும் போட்டுக் கொண்டனர்.
கழற்றி வீசப்படும் தொப்புள்கொடி உறவுகள்

இன்றைய வரைக்கும் அந்தச் சண்டை ஓயவில்லை. தொடர்கிறது. இத்தனைக்கும் இந்தத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், கொடவர்கள், துலுவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை மலையகத் தமிழர்கள்… இவர்கள் எல்லாம் யார். உண்மையிலேயே அண்ணன் தம்பிகள். சத்தியமாகச் சொல்கிறேன். தொப்புள்கொடி உறவுகள். ஆனால், சண்டை போடும் போது மட்டும் பாருங்கள். தொப்புள் கொடியைக் கழற்றித் தோளில் போட்டுக் கொண்டு சண்டை போடுகிறார்கள். மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்தப் பக்கம் முல்லைப் பெரியாற்றைக் கட்டிக் கொண்டு கேரளா அழுகிறது. அந்தப் பக்கம் காவேரியைப் பிடித்துக் கொண்டு கர்நாடகா ஒப்பாரி வைக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதியைக் காட்டிக் கொண்டு ஆந்திரா பட்டாசை வெடித்துப் போடுகிறது. கீழே சிங்கள சிம்பன்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மகிந்தா இல்லாத நேரத்தில் பாவம் மைத்திரி பகவானுக்கு ஏழரை நாட்டுச் ச(ம)னியன் தூது போய் இருக்கிறார்.

உலகத்தின் கால்வாசி பகுதியில் இறக்கை கட்டிப் பறந்த தமிழர்களுக்கு இப்போது சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டைச் சேர்க்க வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன் வரையில் அது ஒரு தனியார் சொத்தாகத் தான் இருந்தது. இப்ப கொஞ்சம் தேவலாம். ஆக தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தமிழர்கள் யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆக முடியுமா. இப்போதைக்கு நோ சான்ஸ்.

150 வருடங்களுக்கு முன்னால் தமிழர்கள் பஞ்சம் பார்க்கப் புறப்பட்டவர்கள். போன இடங்களில் எல்லாம் அந்த இடங்களைப் பொன் களஞ்சியங்களாக மாற்றி அமைத்தார்கள். அவர்களின் எச்சங்கள் இன்னமும் நீறுபூத்த நெருப்பாய்த் தகித்து நிற்கின்றன. என்னே தமிழர்கள் வாங்கி வந்த வரம். இதற்கு எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் தேவையா. தேவையே இல்லை. இருக்கிற வயிற்றெரிச்சல் ஒன்றே போதும். எங்கோ இருந்து நீண்ட ஒரு பெருமூச்சு கேட்கிறது.

நம்முடைய சஞ்சிக்கூலிகள் கதைக்கு வருவோம். இன்றைக்கு இலங்கை வாழ் தமிழர்களின் புலம்பெயர்வு பற்றியது. இலங்கையில் வாழும் தமிழர்களை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் ஒரு வகை. இந்தியத் தமிழர்கள் மற்றொரு வகை.

தூத்துக்குடியில் கப்பல் ஏறியவர்கள்

இந்தியத் தமிழர்கள் என்பவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் தான் சஞ்சிக்கூலிகளின் விஷ்ணு பிரம்மாக்கள். அதனால் அவர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மலாயாத் தமிழர்களைவிட இலங்கையின் மலையகத் தமிழர்கள் (இந்தியத் தமிழர்கள்) மிக மிக மோசமாக நடத்தப் பட்டவர்கள். பெரும் அவதிக்கு உள்ளானவர்கள். அங்கே அந்தக் கொத்தடிமைக் கொடுமை இன்னும் தொடர்கின்றது. அவர்களும் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

இலங்கையின் மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் ஏறியப் போனவர்கள் தான். அதாவது தூத்துக்குடியில் இருந்து போனவர்கள். 
(சான்று:http://tamil.thehindu.com/opinion/columns/நம்முடைய-மறதியின்-வரலாறு/)

இலங்கைத் தமிழர் (Sri Lankan Tamils) என்பவர்கள் இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களாகும். (சான்று: https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils)

இவர்களை இலங்கையின் வம்சாவழித் தமிழர் என அழைப்பதும் உண்டு.

இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்குச் சென்றவர்கள். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். பிற பகுதிகளில் சிறுபான்மையாக இருக்கின்றனர்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது அங்கே நிறைய தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டனர்.

அதனால் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களைத் தான் மலையகத் தமிழர் என்று அழைக்கிறோம். இருந்தாலும் இவர்களில் தெலுங்கர், மலையாளி இனத்தவரும் இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள்.

தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்த தெலுங்கர், மலையாளிகளும் இப்போது தமிழ் பேசுபவர்களாகவே மாறிவிட்டனர். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு புதிய திராவிட சமூகமே அங்கே உருவாகி இருக்கிறது.
(சான்று: https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்/)

தமிழக உறவுகள் துண்டிக்கப்பட்டன

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் மலையகத் தமிழர்களை ஒட்டு மொத்த அடிமைகளைப் போல நடத்தி வந்தனர். ஆடுமாடுகளைப் போல வேலை வாங்கினர். ஒடுக்கு முறைகள் பலவந்தமாகத் திணிக்கப் பட்டன. மற்ற மற்றச் சமுதாயத்தினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலையகத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மிக மிக பின் தள்ளப் பட்டதாகவே இருக்கின்றது.

அதை ஒரு வகையான பின்னடைவு என்றே சொல்ல வேண்டும். அவர்களின் தமிழக உறவுகள் எல்லாம் துண்டிக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த நிலம், தோட்டம் துரவு, மற்ற மற்றச் சொத்துக்களையும் இழந்து பரிதவிக்கின்றனர்.

150 ஆண்டு காலத்திற்குத் தொடர்புகள் இல்லாமல் போனதால் அவர்களுடைய சொந்தங்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாமல் போய் விட்டது. அப்படியே தேடிப் போனாலும் அடையாளம் தெரியவே தெரியாது. உறவு மூலம் ரிஷி மூலம் அடிபட்டுப் போய் விட்டது. சரியான சான்றுமிக்க உறவுப் பாலங்களும் இல்லாமல் போய் விட்டன. அதனால் சொத்துகள் மீது உரிமை எதையும் நிலைநாட்ட முடியாமல் போகிறது.

உலகளாவிய நிலையில் இலங்கைத் தேயிலையைப் புகழ்பெறச் செய்தது இந்த மலையகத் தமிழர்கள் தான். அதை உலகமே ஏற்றுக் கொள்கிறது. சரி. மிக மிக முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறோம்.

1948-ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அவர்கள் போன கையோடு, இலங்கையில் குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. பல இலட்சம் மலையகத் தமிழர்களால் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனது. அதனால் அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அதோடு அவர்களுக்கு இலங்கையின் வாக்குரிமையும் இல்லாமல் போனது.

பின்னர் 1950-களில், இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. ஒப்பந்த அடிப்படையில் இலட்சக் கணக்கான மலையகத் தமிழரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என இலங்கை முடிவு செய்தது. ஏறக்குறைய பத்து இலட்சம் பேர்.

அப்படி செய்யப்பட்ட அந்த ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம். அதன்படி தமிழர்களில் பாதி பேருக்கு இலங்கைக் குடியரிமை வழங்கப்பட்டது. மீதிப் பாதிப் பேரை இந்தியா ஏற்றுக் கொள்வது என்றும் முடிவானது.

இலங்கையில் வாழ்ந்த எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை

அதுவும் ஓர் இழுபறி நிலைதான். பலப் பல காரணங்களால் அந்தத் திட்டமும் சரிபட்டு வரவில்லை. தவிர 1980-களில் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை. இலங்கை விடுதலைப் புலிகளின் மீது உலகத்தின் கவனமும் திசை திரும்பிய காலக்கட்டம்.

பதற்ற நிலை காரணமாகப் பலர் இந்தியாவுக்கே திரும்பிப் போகலாம் என்றும் முடிவு செய்தனர். அவர்கள் அந்த நேரத்தில் எடுத்த முடிவு சரியானதாகப் படவில்லை. இங்கே மலேசியாவில் மே 13 வந்த பின்னர், இந்தியர்கள் பலர் தங்களின் குடியுரிமைகளை ரத்து செய்துவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் தாயகம் கிளம்பினார்களே, அந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது..

இப்படி இருக்கையில் இந்தியா ஒரு புதிய குடிநுழைவு சட்டத்தைக் கொண்டு வந்தது. இலங்கையில் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

மலையகத் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. குடிநுழைவு சட்டத்தை அமல்படுத்துவதில் பலப்பல நடைமுறைச் சிக்கல்கள்.

அந்த புரோட்டோகால் இந்த புரோட்டோகால் என்று சொல்லி பாதி பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காமலே போனது. ஆக, இந்தியாவுக்கு திரும்பி வந்த மலையகத் தமிழர்களில் ஐந்து இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். எங்கே. அதே அந்த இந்தியாவில்தான்.

மறுபடியும் சொல்கிறேன். மலையகத் தமிழர்களில் ஐந்து இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

குடியுரிமை என்பது உயிருக்கும் மேலான வாழ்க்கைப் பிரச்சினை

நாடு விட்டு நாடு போய் நட்டாற்றில் விடப்பட்ட தமிழர்கள் திரும்பி தாயகம் வந்தார்கள். வந்தும் நாடற்றவர்களாகவே வாழ்கின்றனர். அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட கொடுமை வேறு எங்கேயாவது நடந்து இருக்குமா. தெரியவில்லை.

ஆக அங்கே மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை நாமும் இங்கே நம்முடைய மலேசியப் பார்வையில் பார்க்க வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

குடியுரிமை என்பது வாழ்க்கைப் பிரச்சினை. உயிருக்கும் மேலானது. பத்து நாளைக்கு சோறு இல்லை என்றாலும் பரவாயில்லை. பட்டினியாக இருந்து விடலாம். ஆனால், குடியுரிமை இல்லாமல் மட்டும் இருக்கவே கூடாது. ஆக, நமக்கும் அவர்கள் மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால்??

சரி. சோறு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் இல்லையா. அந்த மாதிரி மலையகத் தமிழர்களுக்கு என்ன ஆனது என்பதைத் தான் தெரிந்து கொண்டோம். ஆனால் அவர்கள் அங்கே எப்படி வாழ்ந்தார்கள். எப்படி நடத்தப் பட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோமா. இன்னும் இல்லை. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோமே. (தொடரும்)

ான்றுகள்:

http://www.dinamani.com/editorial_articles/article806200.ece
http://tamilnation.co/heritage/gnanaprakasar.htm
http://www.tamilcanadian.com/article/tamil/563