24 மே 2017

சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் + ஐ = சேலை. சேல் என்றால் கண். அகட்டல் என்றால் அகற்றுதல் (திருப்புதல்). அதாவது அடிக்கடி கண்களை அங்கும் இங்கும் அலையவிடும் 



பெண்களை நம்பாதே என்பது தான் அந்தக் காலத்துத் தமிழர்கள் சொன்னது.

ஒரேடியாக சேலை கட்டிய மாதர்களை நம்பக் கூடாது என்பது தவறான வியாக்கியானம்.

அப்படி என்றால் அம்மா, அத்தை, அக்கா, தங்கச்சி, மகள், பேத்தி அனைவரையுமே நம்பக் கூடாது என்று பொருள் படுமா.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

இந்தப் பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆறிலும் சாவு வரும். நூறிலும் சாவு வரும் என்று அனைவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இந்தப் பழமொழியை இரு வகையாகப் பிரித்து பார்க்கலாம். ஆறு (6) என்பது ஓர் எண்.

அதே போல நூறு (100) என்பதும் ஓர் எண். அந்த வகையில் இறப்பு என்பது ஆறு வயதிலும் வரலாம் நூறு வயதிலும் வரலாம் என்று பொருள் படுகிறது.


அடுத்து இந்த ஆறு என்பதில் இன்னொரு நெருடல். நதி அல்லது அருவி என்பதையும் ஆறு என்று சொல்கிறோம். அப்படி என்றால் ஆற்றில்கூட இறப்பு வரலாம் என்று பொருள் படுகிறது. சரி தானே. உண்மையான பொருள் அது அல்ல.

இந்தப் பழமொழி மகாபாரதத்திற்குப் போகிறது. குருசேத்திரப் போர். கேள்விப் பட்டு இருப்பீர்கள். மகாபாரதத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

அத்தினாபுரம் அரியணைக்காகக் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்கிற இடத்தில் நடைபெற்ற போர். கௌரவர்களும் பாண்டவர்களும் பங்காளிகள்.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். சரி. அது மகாபாரதம். அது தொடர்பான விளக்கம்.


குருசேத்திரப் போருக்கு முன்னதாகக் குந்தி தேவி தன்னுடைய மூத்த மகன் கர்ணனைச் சந்திக்கிறாள். பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து கொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறாள்.

அப்போது கர்ணன் கூறுகிறான்: நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி; கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூற்று ஒருவராகப் போர் செய்தாலும் சரி; இறப்பது உறுதி. அது எனக்குத் தெரியும் .

ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு. அபப்டி இருக்கும் போது எப்படி செத்தால் என்ன? செய்நன்றி கடனைக் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து உயிரை விடுகிறேன்' என்கிறான்.

இங்கே கர்ணன் கூறிய *ஆறிலும் சாவு நூறிலும் சாவு* எனும் முதுமொழிதான் பின்னர் காலத்தில் பழமொழியாக மாறியது.

குருசேத்திரப் போரைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பற்பல கருத்துகளைச் சொல்கின்றனர். துவாரகை என்பது பழங்காலத்து நகர். கடலில் மூழ்கிய நகரம்.

அந்த நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், குருசேத்திரப் போர் கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் நடைபெற்று இருக்கலாம் என்று  சொல்கின்றனர். போர் நடந்த இடம் இப்போது இந்தியா, ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020





கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி


விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். அதுவே இன்று கல் தோன்றா



மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று சொல்லப் படுகிறது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே அதாவது பூமி உருவாவதற்கு முன்பே தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது. தவறு.

அடியாத மாடு படியாது

விளக்கம்: மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் உழுதல், இழுத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்ய முடியும். 
 


அதற்காக அதைப் போட்டு அடிக்க வேண்டும் என்பது பொருள். அல்ல. அடி என்றதும் எல்லோரும் ரோத்தான் கம்பு குச்சிகளால் அடிப்பதையே கற்பனை செய்து கொள்கிறார்கள். 

தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

23 மே 2017

ஜப்பானிய இளவரசி மாகோ

ஜப்பானின் மன்னர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ. இவருக்கு வயது  25. இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்தவருடன் காதல். 


அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன் காரணமாக அவர் தன் இளவரசி பட்டத்தைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.

இளவரசியின் மாகோவின் காதலன் பெயர் கெய் குமுரோ. தோக்கியோவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


இதைப் பற்றி இளவரசியார் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அரச குடும்பத்தினரும் அவரின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

ஆனாலும் ஜப்பானிய அரசக் குடும்ப வழக்கப்படி அரச குடும்பத்துப் பெண்கள் அரச குடும்பத்தினரைத் தான் திருமணம் செய்ய வேண்டும். சாதாரண நபரைத் திருமணம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரச பட்டத்தைத் துறக்க வேண்டும். மீறினால் அவரின் அரசப் பட்டம் பறிக்கப்படும்.


அதனால் இளவரசி மாகோ தன் காதலுக்காகத் தன் இளவரசி பட்டத்தைத் துறக்க முடிவு செய்துள்ளார். தன் காதலுக்காக தன் இளவரசி அரசப் பட்டத்தையே துறக்கிறார் என்றால் அவரின் காதலை என்னவென்று சொல்வது.

தற்போது ஜப்பானின் முக்கியச் செய்தி இந்த இளவரசியின் காதல் செய்திதான். வாழ்க அந்த இளவரசியாரின் காதல்.