11 ஜூலை 2017

இந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1

இந்திய மண்ணில் ஆயிரக் கணக்கான ராஜாக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். வீழ்ந்தார்கள். அது வரலாறு. அந்த ராஜாக்களின் ராஜ வாழ்க்கையில் மதுரசங்கள் ஆறாய்ப் பெருகி ஓடின. மாதுரசங்கள் தேனாய் உருகிப் பாய்ந்தன. 



விதம் விதமான வண்டுகள் பள்ளி கொள்ள வந்தன. மன்மத வீணைகளை மீட்டிப் பார்த்தன. கின்கிணிக் குண்டலினியைக் கிண்டிவிட்டுச் சாய்ந்தன. 

அதையும் தாண்டிய நிலையில் சில சின்னஞ்சிறு மொட்டுகள் பட்டுக்குள் சிக்காமல் தப்பிச் சென்றன. பல மொட்டுகள் சிறகொடிந்து போயின.

அவற்றில் சில தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாய் உறைந்து மறைந்து காணாமலும் போயின.

மன்னரின் ஒரே ஒரு பார்வை போதும். ஓராயிரம் ராணிகள் ஓடி வருவார்கள். பல்லாயிரம் சுகங்களுக்குப் பாய் விரித்துப் போடுவார்கள். 




அந்தர்ப்புரம் ஒரு கந்தர்வ லோகமாகிச் சிணுங்கி நிற்கும். மங்கிய வெளிச்சத்தின் மயக்கங்களில் சொர்க்கத்தின் தலைவாசலுக்கே வெட்கம் வந்து வெலவெலத்துப் போகும்.

இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக்கள் வாழ்ந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது தப்புங்க.  பாவங்க அந்த ராஜாக்கள்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்தவர்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாதுங்க! அதைப் பற்றிய தான் இந்தக் கட்டுரை.

மகாராஜாக்களின் வாழ்க்கை வசந்தங்கள் வேதனைகள் (Maharaja The Lives Loves & Intrigues Of The Maharaja Of India - Paperback – 2008) என்பது ஒரு வரலாற்றுப் பதிப்பு. இந்திய எழுத்தாளர் திவான் ஜர்மானி தாஸ் (Diwan Jarmani Dass) எழுதி இருக்கிறார். 



இன்னும் ஒரு நூல் இருக்கிறது. அதன் பெயர் இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை. அதிலும் பற்பல ரகசியங்கள். தலை சுற்றி விட்டது. பேராசிரியர் ஆர். நாத் (R. Nath) என்பவர் எழுதி இருக்கிறார். இணையம் மூலமாக இலவசமாகப் படிக்கலாம்.
(சான்று: http://pdfbookdb.com/2017/private-life-of-the-mughals-of-india-pdf - Private Life Of The Mughals Of India)

இன்னும் சில நூல்கள் உள்ளன. மொகலாய மன்னர்களின் அந்தரங்க வாழ்க்கையை அக்குவேர் ஆணிவேராய் அலசிப் பார்க்கின்றன. எல்லாவற்றையும் படித்து முடிக்க எப்படியும் ஒரு சில வாரங்கள் பிடிக்கும். சரி.

இந்தியாவின் மொகலாயர்களின் அந்தரங்க வாழ்க்கை எனும் நூலைப் படித்த பிறகு வெகு நாட்களாய் எனக்குள் மறைந்து நின்ற மயக்கமும் சற்றே நீர்த்துப் போனது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




ராஜ வாழ்க்கை என்பது காளிக் கோயிலில் பலிக்கடாவாகும் ஓர் ஆட்டுக் கடாவின் வாழ்க்கையைப் போன்றது. இப்படியும் சொல்லலாம்.

ஆசை ஆசையாய்ப் பார்த்து வளர்த்த ஆட்டுக் கடாவிற்கு மஞ்சள் பூசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். குங்குமம் வைப்பார்கள். சந்தனம் தடவுவார்கள். ரோசாப்பூ மாலை போடுவார்கள்.

அப்புறம் கத்தியைக் கழுத்தில் வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கூறு போட்ட ஆடுக்கடா சட்டியில் வெந்து கொண்டு இருக்கும். அதைச் சாப்பிட ஒரு படையே திரண்டு நிற்கும். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

ஆக அந்த மாதிரிதான் அந்தக் காலத்து ராஜாக்களும் வாழ்ந்து இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கத்தி கழுத்திற்கு வரும் என்று பயந்து பயந்து வாழ வேண்டிய ஒரு திரிசங்கு நிலை. இதுதான் அந்தக் காலத்து ராஜாக்களின் ராஜ வாழ்க்கை. 




முக்கால் வாசி இந்திய நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்திகளுக்கும் கடைசி காலத்தில் ஒரு நல்ல அமைதியான சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

காட்டிலே உயரமாக வளர்ந்துவிட்ட ஒரு மரத்தைப் பாருங்கள். மற்ற தாவரங்களில் இருந்து அது தனிமைப் பட்டு தனியாக நிற்கும்.

அதைப் பார்த்தால் என்னவோ விண்ணைத் தொடுவது போல பெருமையாகத் தெரியும். ஆனால் உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் அது தனிமையில் வாடி நிற்பதுதான் தெரிய வரும்.

மேற்கத்திய நாட்டு அரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அதீத ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து இந்தக் காலத்து சாமான்ய மக்கள் நொந்து நலிந்து போவதும்  உண்டு.

இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் ஒரு நல்ல காரியம் செய்து வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் சவ்வாது மேடையில் சிருங்காரப் பாடல்களைக் கேட்பது வரையிலும் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றும் எழுதவில்லை. எழுத அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. யாராவது ஒரு நம்பிக்கையான ஆளைக் கூப்பிட்டு குறிப்பு எடுக்கச் சொல்லி இருக்கலாம். 

அதுவே நாட்குறிப்பாகிப் பின்னர் காலத்தில் புத்தகமாக மாறிப் போய் இருக்கலாம். ராஜா புத்தகம் எழுதியதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருந்தோம்.



அப்போதைய மன்னர்களுக்கு பயம் என்ற ஒன்று தான் சாகும் வரையிலும் தொற்றி அவர்களுக்கு உற்றத் தோழனாக வலம் வந்து இருக்கிறது.

ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. அதை அப்படியே மறைத்து மறைத்து அப்படியே மறைந்து போய் விட்டார்கள்.

நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள். எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள். இந்த இருவர் மீதும் கவனமாக இரு. இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம்

என்று மன்னர்களுக்கு பீர்பால், இபுன் பாத்துத்தா போன்ற அறிவுரைஞர்கள் ஆலோசனை சொல்வார்களாம். அதுதான் சரித்திரத்திலும் நடந்து இருக்கிறது.

மொகலாய அரசர்களில் ஜகாங்கீர் (Jahangir - Mirza Nur-ud-din Beig Mohammad Khan Salim)  என்பவர் மிக முக்கியமானவர். இவர் தான் அக்பருக்கு மகன். ஷா ஜகானுக்குத் தந்தையார். 




சலீம் அனார்கலி காதல் கதை தெரியும் தானே. அமரக் காதல், ஆத்மீகக் காதல், இந்திரக் காதல், இனிதான காதல், இனிக்கும் காதல், இனிக்காத காதல், இம்சைக் காதல், இஞ்சிப்புளிக் புளிக்காதல் என்று இப்படி எத்தனையோ காதல்கள் இருக்கின்றன. பார்த்து இருக்கிறோம். கேட்டு இருக்கிறோம்.

அவற்றில் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே அது இமயத்தின் சிகரத்தையே உரசிப் பார்த்த நல்ல ஒரு காந்தர்வக் காதல். சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்திலேயே சொக்கமான தங்கத்தையும் விலை பேசிய காதல்.

என்னடா வரலாற்றுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று காதல் பக்கம் வந்து விட்டானே என்று நினைக்க வேண்டாம்.

ஆமாம் அன்றாடம் தயிர்ச் சாதம் சாப்பிட்டு சலித்துப் போய் கொஞ்சம் வெங்காயக் குழம்பு சாப்பிடலாமே என்கிற ஆசைதாங்க. அந்த மாதிரி தான். வேறு ஒன்றும் இல்லீங்க. தப்பாக நினைக்க வேண்டாம்.

அந்தச் சலீம் தான் இந்த ஜகாங்கீர். அந்த ஜகாங்கீர் தான் இந்தச் சலீம். அக்பரின் மூத்த மகன். பிஞ்சிலே பழுத்த சின்னப் பையன்.

அக்பரின் அந்தர்ப்புர நாயகிகளில் ஒருவரான அனார்கலியைக் காதலித்து அதனால் ஜகாங்கீருக்குப் பற்பல பிரச்சினைகள். அக்பருக்கும் பிரச்சினைகள்.

அனார்கலி போன பிறகு ஜகாங்கீர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். அது வேறு கதை.
(சான்று: http://creative.sulekha.com/what-is-the-truth-about-anarkali_460884_blog - Akbar who was smitten by her beauty first and gave her the name “Anarkali”)

ஜகாங்கீர் அரசரான பின்னர் என்ன செய்தார் என்பதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் ரெடி நீங்க ரெடியா.

ஜகாங்கீர் ஒரு நாளைக்கு காலையில் இருந்து இரவு படுக்கும் வரை என்ன என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.

அதிகாலை 4 மணிக்கு, கோழி கூவுவதற்கு முன்னாலேயே எழுந்து விடுவார். அவரை எழுப்பி விடுவதற்கு என்றே மன்னருக்குப் பிடித்த ஒரு ராணி இருந்தார்.

மன்னர் எந்த மனைவியோடு எந்த அறையில் தூங்கினாலும் சரி வழக்கமாக அவரை எழுப்பிவிடும் அதே ராணிதான் ஒவ்வொரு நாளும் எழுப்ப வேண்டும்.

அந்த ராணியின் முகத்தில் விழித்தால் தான் காரியங்கள் நல்லபடியாக நடக்கும் என்பது அவருடைய ஐதீகம். இன்னும் ஒன்று. 




அந்தக் காலத்து ராஜாவுக்கு எத்தனை மனைவிகள் என்று என்னிடம் கேட்க வேண்டாம். ஏன் என்றால் அது அவருக்கே தெரியாத தில்லாலங்கடி ரகசியம்.

ஆக அவரை எந்த மனைவி எழுப்பி விடுவார் என்று எல்லாம் பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்.

உங்களிடம் இருப்பதை ஆராய்ச்சி செய்து அதில் கிடைக்கிற மகிழ்ச்சியே பெரிய பாக்கியம் என்று நினைத்தாலே போதும்.  அதுவே பெரிய புண்ணியம்.

மன்னருக்கு முதல் வேலையாக நல்ல ஒரு குளியல். குளியல் தொட்டியில் பன்னீரை ஊற்றி நிறைத்து வைத்து இருப்பார்கள். மன்னருக்குப் பிடித்தமான ரோஜாப் பூக்கள் மிதக்கும்.

ஈரான், ஈராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்து இருக்கும். குளியல் கூடத்தில் ஏறக்குறைய 12 வேலைக்காரர்கள் இருப்பார்கள்.

மன்னர் குளிப்பதற்கான தண்ணீரை முதல்நாள் ராத்திரியிலேயே பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதற்கு முத்திரையிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்.

எல்லாம் உஷார் நிலை தான். யார் கொண்டது. எவனாவது எருக்கம் பூவை இடித்துப் போட்டு இருந்தால் என்ன செய்வதாம்.

வெதுவெதுப்பான நீரில் தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே தனியாக ஓர் ஆள். 

மன்னரின் உடலுக்கு சந்தனம், ஜவ்வாது, வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிட 16 பணிப் பெண்கள். ஓர் ஆள் பற்றாதா என்று நீங்கள் கேட்கலாம். என்ன செய்வது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

குளியல் சடங்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். அடுத்து அங்க ஆபரணங்கள், அடுக்கடுக்காய் அவரின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் எதை அணிந்து கொள்வது என்பதை மன்னர்தான் முடிவு செய்வார்.

ஆடை ஆபரணங்களை மன்னர் அணிந்ததும் அரண்மனை வளாகத்தில் ஒரு சின்ன தம்பட்ட ஒலி எழுப்பப் படும். மன்னர் தனது நாளைத் தொடக்கி விட்டார் என்பதற்கான அறிவிப்பு.

அதன் பிறகு அரண்மனை மருத்துவர் மன்னருக்கு நாடி பிடித்து பரிசோதனை செய்து பார்ப்பார். 

மன்னரின் வயிற்றுப் பிரச்னைகள், உடல் வெப்பம், நாக்கின் நிறத் தன்மை, சிறுநீரின் நிறம், உடல் தோலின் நிற மாற்றம், அடிப் பாதங்களின் மிருதுத் தன்மை, சுவாசம் விடுவதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்து அறிந்து மன்னரிடம் பரிந்துரைகள் செய்வார்.

என்ன என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும், எந்தப் பழ ரசங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்தாலும் மன்னர் தான் முடிவு எடுப்பார். அதன் பிறகு, இறை வழிபாடு.

ஒவ்வொரு நாளும் அறிவுரைகளை வழங்க ஒரு ஞானி அரண்மனையிலேயே தங்கி இருப்பார். அன்றைக்கான ஞான உரையை மன்னருக்குச் சொல்வார். மன்னர் அதைப் பணிவாகக் கேட்டுக் கொள்வார். 

அது முடிந்ததும் சிறப்புப் பூசைகள். சமயப் பெரியவர்கள் காத்து நிற்பார்கள். அவற்றை மன்னர் ஏற்றுக் கொள்வார்.

அதிகாலையில் சூரிய தரிசனம் மிக முக்கியம். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே அந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்களைச் சந்திப்பதற்கு சிறப்பாக அமைக்கப்பட்ட ஓர் உயர்ந்த தனி மாடத்தில் மன்னர் வந்து நிற்பார்.

மதிய உணவுதான் மன்னரின் பிரதான உணவு. அதைத் தயாரிப்பதற்கு 30 சமையல்காரர்கள். மன்னரின் மத்தியானச் சாப்பாட்டைத் தயாரிக்க உதவியாளர்கள் 200 பேர்.

ஒவ்வொரு ராணிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஐட்டம். சுத்தச் சைவமான ராணிகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக அசைவத்தில் பிறந்து அசைவத்திலேயே வளர்ந்த ராணிகளும் இருந்தார்கள். இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

08 ஜூலை 2017

நித்தியானந்தா

ஒரு மனிதனை ஒரு நாய் கடித்து விட்டது என்றால் அது செய்தியா. இல்லீங்க. ஆனால் ஒரு நாயை ஒரு மனிதன் கடித்து விட்டான் என்றால் அதுதாங்க செய்தி. 


ஒரு மனைவியை அவளுடைய புருசன் உரிமையோடு ஏதோ அடித்து விட்டான் என்றால் அது செய்தி இல்லீங்க. 

ஆனால் அதே மனைவி அந்தப் புருசனை வாடா போடா மவனே என்று சொல்லி இழுத்துப் போட்டு நாலு மிதி மிதித்து இருந்தால் அதுதாங்க  செய்தி.

இங்கேதான் நித்தியானந்தா தடுமாறிப் போனார். என்ன போனார். போய் விட்டார். போதுங்களா. ரஞ்சிதா எனும் பெண் செய்தது ஒரு கோளாறு. சும்மா இருந்த சங்கைக் கெடுத்ததாக மீண்டும் ஒரு வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

நித்தியானந்தா. நல்ல மனிதர். நாலும் தெரிந்த சின்னவர். ரொம்பவும் அவசரப் பட்டு விட்டார். இவரை எனக்குப் பிடிக்கும். என்ன காரனம் தெரியுமா. அவருடைய ஆன்மீக எழுத்துகள்.

மதுரை ஆதினத்தின் தலைவர் ஆவதற்கு நித்தியானந்தாவிற்கு தகுதி இல்லையா என்று சிலர் கேட்கலாம். அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. இன்னும் இருக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை.



ஆனால் என்றைக்கு அவர் ரஞ்சித மோகன ராகம் பாடினாரோ அன்றைக்கே அவருடைய அருமை பெருமைகள் எல்லாம் அடிபட்டு போய் விட்டன.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சும்மாவா சொன்னார்கள். என்ன செய்வது. ஏழரை நாட்டு அரசன் அவருக்கு தூது போய் இருக்கிறான். பாவம் அவர்.

குமுதம் வார இதழில் நிதர்சனமான உண்மைகளை எழுதியவர் இந்த நித்தியானந்தா. அவரைப் பற்றி கோடிக் கணக்கான தமிழர்களுக்குத் தெரியும். ஒரு கட்டத்தில் தெய்வமாகக்கூட போற்றினார்கள்.

ஆனால் ரஞ்சிதா – நித்தியானந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. அதுவே உலகத் தமிழர்களிடையே ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியது.

நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் சேர்ந்து இருந்த படங்களை சன் டிவி ’இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று சொல்லிச் சொல்லி விளம்பரம் செய்தது. 

முதல் முறையாக என்று போட்டுப் போட்டு அறுத்து எடுத்து விட்டது. தயவு செய்து சன் தொலைக்காட்சி கோபித்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு முறை அல்ல. இரு முறை அல்ல. பல நூறு முறைகள். ஏதோ வழக்கமான செய்தி தானே என்று பலர் நினைத்தார்கள். குடும்பம், குழந்தை குட்டிகளோடு சேர்ந்து அந்தப் படங்களையும் பார்த்தார்கள்.

அப்போது தான் தனிப்பட்ட ஒருவரின் விவகாரம் விகாரமாக மாறிப் போனது. பார்த்தவர்கள் முகம் சுழித்தார்கள். வேறு என்ன செய்ய முடியும். சொல்லுங்கள்,



அதன் பின்னர் நித்தியானந்தா உலக அளவில் பிரபலமாகிப் போனார். அது மட்டும் அல்ல. ‘பேஸ்புக்’ எனும் சமூக இணையத் தளத்தில் நித்தியானந்தாவைத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விட்டார்கள்.

காயப் போட்டாலும் பரவாயில்லை. அதையும் தாண்டிப் போய் விரசமான விமர்சனங்கள். ம்ம்ம்ம்…. என்ன செய்வது. அதனால் ஒரு கட்டத்தில் ரொம்ப பேர் அந்தப் பேஸ்புக் பக்கம் போவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

இன்னும் ஒரு விசயம். வேலை இல்லாத வெட்டிப் பேச்சுகள். அப்புறம் அப்பா அம்மாவுக்கு சோறு போட முடியாத சில வாக்குப் போக்குகளை அங்கே ரொம்பவுமே பார்க்கலாம். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரிய பெரிய சோம்பேறிகளின் கூடாரமாகப் பேஸ்புக் மாறிக் கொண்டு வருகிறது. ரொம்ப சந்தோஷம்.

சமூகப் பார்வையில் இன்னும் ஒரு செருகல். ஏற்கனவே சீரியல்களைப் பார்த்து பார்த்துப் பல குடும்பங்கள் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. சீரியல் நாடகங்கள் நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக 24 மணி நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டுமா.

அதனால் குடும்பத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. பிள்ளைகளைக் கவனிக்க நேரம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் எதிர்காலமே அடைமானத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.

எத்தனை மணிக்குப் பிள்ளை வீட்டை விட்டு வெளியே போனான். எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தான். யாரோடு போனான். அதை எல்லாம் தெரிந்து கொள்ள நேரமும் இல்லை. அக்கறையும் இல்லை.

வந்தாளே மொகராசி போனாளே மகராசி வருவாளா முகராசி என்று சீரியல்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு நாளைக்கு யாராவது ஒருவன் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிச் சொல்லுவான். 



அண்ணே இது உங்க பையன் மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்குங்க. பள்ளிக்கூடத்தில கேங்க் பைட் போட்டு இருக்கிறானாம்.

அப்புறம் அவரே மறுபடியும் கதவைத் தட்டி இது உங்க பொண்ணு மாதிரி இல்ல இருக்கு. பேஸ்புக்குல வந்திருக்கு. எவனையோ கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்து கிட்டு இருக்கா. ஸடேட்டஸ் அப்டேட் பண்ணி இருக்காள் என்று சொல்லுவான்.

அப்புறம் என்ன. பொண்டாட்டியைப் பார்த்து புருசன் கத்துவான். புருசனைப் பார்த்து பொண்டாட்டி கத்துவாள். சீரியல் எல்லாம் தோற்றுப் போகும்.

அந்தச் சண்டையை பதினெட்டு பட்டியும் டிக்கெட் வாங்காமல் பார்த்து ரசிக்கும். சில பலரின் வீடுகளில் இது தான் இப்போது நடக்கிற ஜிங்கு ஜிக்கா பேஸ்புக் ராமாயணங்கள். எங்கேயோ போய் விட்டேன். வயிற்றெரிச்சல். விடுங்கள். நம்ப நித்தி கதைக்கு வருவோம்.

ரஞ்சிதா வீடியோ காட்சிகள் அத்தனையும் பொய். கிராபிக்ஸ். வரைகலை மூலமாக ’மார்பிங்’ செய்யப் பட்டது என்று நித்தியானந்தா போராடிப் பார்த்தார்.

இந்தக் கட்டத்தில் ஹைதராபாத், புதுடில்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்கள் அந்த வீடியோ காட்சிகளைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தன.

அவை உண்மையான வீடியோ காட்சிகள் தான் என்றும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்றும் அறிக்கை கொடுத்தன. பெங்களூர் நீதிமன்றத்தில் உளவுத் துறைப் போலீசாரால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

சும்மா சொல்லக் கூடாது. அந்தச் சலசலப்பு இன்றும்கூட அடங்கவில்லை. ஆனால் அவர் மதுரை ஆதினத்தின் தலைவராகிப் போனது தான் பெரிய ஜில்லாலங்கடி பிரச்சினை. 



ஓர் ஆதினத்தின் தலைவராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா. இப்படி நான் கேட்கவில்லை. கோடிக் கணக்கான தமிழர்கள் கேட்டார்கள்.

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். மதுரை நகரில் இருக்கிறது. 

ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப் பட்டது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்றுவரை 292 பேர் பீடாதிபதிகளாக இருந்து உள்ளனர்.

292 ஆவதாக அருணகிரி என்பவர் இருந்தார். தனக்குப் பின்னர் அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்தார்.

அத்துடன் நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் பட்டமும் வழங்கப் பட்டது.



மதுரை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்ற ஆதீனத் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக வேறு நித்யானந்தா அறிவித்தார்.

அருணகிரி பணத்தை வாங்கிக் கொண்டு ஆதினத் தலைவர் பதவியை நித்தியானந்தாவிற்கு வழங்கியதாக ’விஸ்வ இந்து பரிசத்’ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

தவிர தமிழகத்தின் மற்ற திருமடங்களின் ஆதரவுடன் மதுரை ஆதீன மீட்புக் குழு என்று ஓர் அமைப்பு அமைக்கப் பட்டது. இந்தக் குழுவினர் ஆதீனத்தின் வாசல் முன்பு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் செய்தனர்.

தமிழகத்தில் செயல்படும் இந்துமத அமைப்புகளுக்கு அது ஒரு பெரிய மரண அடிச் செய்தி. அது முதல் அடி இல்லை. என்றாலும் முக்கியமான அடி. 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை இருக்கிறதே சொல்லில் மாளா. அதைப் புரிந்து கொள்ள இன்னும் பல பத்தாண்டுகள் பிடிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் நித்தியானந்தா ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கினார் என்பது தான் அப்போதைக்கு ஒரு கவுண்டமணியார் செய்தி. 



அந்த அலைவரிசையின் பெயர் ஆனந்தம். ஆன்மிகத் தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமைந்தது. 24 மணி நேர டிவி சேனல். அதற்கான உறுதிப் பத்திரமும் கிடைத்தது. இன்றும் போய்க் கொண்டு இருக்கிறது.

யார் இந்த நித்தியானந்தா? இவருடைய முழுப்பெயர் இராஜசேகர். 1978 ஜனவரி மாதம் முதல் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார்.

தன்னுடைய பன்னிரண்டாவது  வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் தியானம் செய்யத் தொடங்கினார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி  பரிவிராஜக  வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.

பின்னர் தியானபீடம் எனும் சேவை மையத்தை 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கி வைத்தார்.

ரஞ்சிதாவுடன் இருந்த காணொளியை  2010, மார்ச் 2-இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இவரைப்  பற்றிய நிகழ்படம் வெளியானதும், இவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி  தலைமறைவானார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டத்தில் கர்கி எனும் ஊரில் பதுங்கி இருப்பதாக செய்திகள் கசிந்தன. கர்நாடக காவல்துறை 2010 ஏப்ரல் 21 இல் கைது செய்தனர்.  

அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தன.

நித்தியானந்தா ஆதீனத் தலைவர் ஆனார் என்பதுதான் பலரால் கிரகிக்க முடியாத விசயமாக இருந்தது. ஊடகங்கள் தொடங்கி பாமரர் வரை அழுது தொலைத்தார்கள்.



இப்போது என்ன ஆனது தெரியுங்களா. நித்தியானந்தா வேண்டாம் என்று சொல்லிய ரஞ்சித மலர் தெலுங்கு நடிகர் சஞ்சீவியின் ஆசைநாயகியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். நல்ல நவரசக் கோலங்கள்.

ஆக ஓர் ஆண்மகனின் வாழ்விற்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். அவனுடைய தாழ்விற்குப் பின்னாலும் ஒரு பெண் நிற்கிறாள். அதே போல நித்தியானந்தாவின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருந்தாள்.

மனுசனாகப் பிறந்த அத்தனைப் பேருக்கும் ஆசைகள் இருக்குங்க. இல்லை என்று யாரையாவது ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கள். பிடித்தமானவர் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டால் போதுங்க. 

குடும்ப மகிழ்ச்சி இமயமலையில் இருந்து இறங்கி கீழே அன்னபூர்னா வரை சாய்ந்து நிற்கும். சாகும் வரை சாகடிக்கும் மனச் சாரல்கள். அது போதுங்க.

நித்தியானந்தா பிரம்மசரியத்தைக் கலைத்து விட்டு சாதாரண சாமான்ய நிலைக்கு திரும்பச் சொல்கிறார் ரஞ்சித மலர். திரும்புவாரா நித்தி. அப்படி ஒரு திருப்பம் ஏற்படுமா. வரவே வராது.

ஆண்கள் எல்லாரும் கடுக்காய் சாப்பிட வேண்டும் என்று அண்மையில் நித்தி ஆலோசனை சொல்லி இருக்கிறார்.  எது எப்படியோ. ஒன்று மட்டும் உண்மை. 

தலைப் பாகை கட்டி பிரியாணி சோறு சாப்பிட்டவர்களுக்கு நாசி லெமாக் ரொட்டி சானாய் சரிபட்டு வருமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

07 ஜூலை 2017

கரும் சுற்றுலா

காசு பார்க்கும் கருஞ்சுற்றுலா

தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள், அங்கோர் வாட், ரோமாபுரி கொலிசியம், பிரம்பனான் சிவன் ஆலயம், பொரபுடுர் புத்த ஆலயம். இவை உச்சம் பார்க்கும் உலக அதிசயங்கள். மனிதங்கள் தேடிப் போகும் மாபெரும் அதிசயங்கள். 


ஒரு முறை பிரம்பனான் சிவன் ஆலயத்தைப் பார்த்தவர்கள் மறுபடியும் பார்க்க ஆசைப் படுகிறார்கள். இரண்டு முறை தாஜ்மகாலைப் பார்த்தவர்கள் மூன்றாவது முறையும் பார்க்கத் துடிக்கின்றார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாறி வருகிறது. அண்மைய காலங்களில் உலகச் சுற்றுலாத் தளங்கள் என்ப கரும் சுசுற்றுலா பக்கமாய்ப் பாதை மாறிப் போகின்றன.

அது என்ன கரும் சுற்றுலா எனும் கருஞ்சுற்றுலா என்று கேட்பது காதில் விழுகிறது. கருஞ்சுற்றுலா என்பதை ஆங்கிலத்தில் Dark Tourism என்று அழைக்கிறார்கள். 


இது ஒரு புதிய வகையான சுற்றுலாத் துறையாகும். ஏறக்குறைய ஒரு பத்து ஆண்டுகளாக இந்தத் துறை உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. 


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாவீரன் ஜூலியஸ் சீசரைக் கொலை செய்தார்களே அந்த இடம் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. கென்னடியைச் சுட்டுக் கொன்றார்களே டாலாஸ் என்கிற இடம், அதுவும் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது.

அதே போல ரஷ்யா நாட்டில் ரஸ்புட்டின் (Rasputin) எனும் பைத்தியக்காரச் சாமியாரைக் குத்திக் கொலை செய்தார்களே அந்த இடமும் இப்போது ஒரு பிரசித்தி பெற்ற கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. அதற்கு முன் ஸ்ரீ லங்காவைப் பற்றி ஒரு சின்னத் தகவல்.

முள்ளிவாய்க்கால் கொலைக் களம்

அண்மைய காலங்களில் ஸ்ரீ லங்காவிற்கு நிதி நெருக்கடி. கஜானா காலி. தொட்டுக்க பட்டுக்க கிடைக்கிற வருமானத்தில் பெரும்பகுதி இராணுவத்திற்குச் செலவு செய்வதிலேயே தீர்ந்து போகிறது. மிச்சம் மீதி இருந்தால் அதிலே அரசியல் மூக்கை நுழைத்துக்  கொள்கிறது. 



கடைசியாக ஏழைப் பாமரர்களுக்கு இரண்டு மூன்று அல்வாத் துண்டுகள். என்றைக்கு அப்பாவித் தமிழர்களைக் கொன்றுக் குவித்தார்களோ அன்றைக்கே ஏழரை நாட்டுச் சனி பகவான் அங்கே சங்கு ஊதி விட்டான்.

அப்புறம் புகழ்பெற்ற ஓர் அரசியல் குடும்பம். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்திற்கு ஜால்ரா போட்டது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் சும்மா விடுமா. அந்தக் குடும்பத்திற்கும் ஏழரை நாட்டுத் தலைவன் செய்தி அனுப்பி விட்டான். கடைசி கடைசியாக சரியான அடி விழுந்து இருக்கிறது.

இறந்து போன பல இலட்சம் தமிழர்களின் பாவமும் சாபமும் சும்மா விடுமா. அந்தக் குடும்பத் தலைவன் நினைத்து இருந்தால் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஒரு பக்கம் சாயாமல் நியாயத்தைப் பாருங்கள். இதை ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. சரி.

வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பல இடங்களைக் கருஞ்சுற்றுலா இடங்களாக மாற்றி வருகிறார்கள். 

 

வியட்நாம் போரில வியட்கோங்குகள் தோண்டிய சுரங்கப் பாதைகள், தாட் மாவ் தான் தாக்குதல் (Tat Mau Than Offensive), மை லாய் படுகொலை (My Lai Massacre)  போன்ற இடங்கள் இப்போது பிரசித்தி பெற்று வருகின்றன. 

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் போய்ப் பார்த்துவிட்டு வாயு வேக மனோ வேகத்தில் திரும்பி விடுகிறார்கள்.

அதே போல கம்போடியாவில், போல் போட் (Pol Pot) என்கிற கொடுங்கோலன் ஆட்சி செய்த போது இருபது இலட்சம் கம்போடியர்கள் கொலை செய்யப் பட்டனர். அங்கே நிறைய கொலைக் களங்கள் உள்ளன.

எடுத்துக் காட்டாக துவோல் சிலேங் (Tuol Sleng) சிறைச்சாலையைச் சொல்லலாம். அந்தச் சிறைச்சாலையில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர். 

 

பெரும்பாலோர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள். இதே போல பற்பல இடங்கள் இருக்கின்றன.  அவற்றைச் சுற்றுலா மையங்களாக மாற்றி வருகின்றனர்.
(சான்று: https://en.wikipedia.org/wiki/Tuol_Sleng_Genocide_Museum - The site is a former high school which was used as the notorious Security Prison 21 (S-21) by the Khmer Rouge regime)

கன்னிவெடிகளில் சிக்கிக் கை கால் இழந்தவர்களுக்காக அங்கே புனர்வாழ்வு மையங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த மையங்களும் இப்போது மனித நேய அனுதாபங்களைப் பெற்று வருகின்றன.

அங்கோர் வாட்டைப் பார்க்கிறார்களோ இல்லையோ கை கால் இல்லாதவர்களைப் போய்ப் பார்க்கிறார்கள். அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஆதரவு தெரிவிக்கிறார்கள். அங்கே மனிதநேய வசந்தம் வீசுகின்றது.



ஆக அதே போல முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தையும் ஒரு கருஞ்சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். அதை இப்போதே மைத்திரி சிவசேனா செய்தால் நாட்டுக்கும் நல்லது. அந்த மனுசனுக்கும் நல்லது.

அந்த மனுசனுடைய வீட்டுக் கஜானா நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். சீனா பாகிஸ்தான் லொட்டு லொசுக்குகளை வாங்கிப் போட்ட மாதிரியாகவும் இருக்கும். 


மைத்திரி சிவசேனா வீடு நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். விலைவாசி ஏறிப் போன மாதிரியாகவும் இருக்கும். நம்ப விசயத்திற்கு வருவோம்.

நீயுமா புருட்டஸ் – ஜூலியஸ் சீசர்

ஜூலியஸ் சீசர் மறக்க முடியாத வரலாற்று நாயகர். கிளியோபாட்ரா எனும் பச்சைக் கிளியை எகிப்திய சிம்மாசனத்தில் உட்கார வைத்து ஆசை ஆசையாய் அழகு பார்த்தவர். கி.மு. 44-இல் அதாவது 2058 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரியில் கொலை செய்யப் பட்டார். அது ஒரு கொடூரமான கொலை.

ஜூலியஸ் சீசர் சர்வாதிகார ஆட்சி செய்வதாக ரோமாபுரியின் செனட்டர்கள் சந்தேகப் பட்டனர். மக்களாட்சியில் இருந்து ஜூலியஸ் சீசர் விலகிச் செல்வதாகவும் நினைத்தனர். 



அவரைத் தீர்த்துக் கட்டினால் தான் நல்ல முடிவு ஏற்படும் என்று கருதினர். அந்தச் செனட்டர்களுக்குப் பதவிகள் கொடுத்து பணம் புகழைக் கொடுத்ததே ஜூலியஸ் சீசர் தான். என்ன செய்வது.

ஒரு நாள் 60 செனட்டர்களும் ஒன்றுகூடி ஜூலியஸ் சீசரைத் தீர்த்து கட்டுவது என்று ரகசியமாகத் திட்டம் போட்டனர். அதே மாதிரி செய்தும் காட்டினர்.

இதை மையமாக வைத்து ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதி இருந்தார். அதன் பெயர் ’ஜூலியஸ் சீசர்’ (Gaius Julius Caesar). முன்பு சீனியர் கேம்பிரிட்ஷ் தேர்வில் அது ஓர் ஆங்கில இலக்கியப் பாட நூல்.

அதில் ஒரு வாசகம் வரும். உலகப் புகழ் பெற்றது. நாற்பது ஐம்பது ஆண்டுகளாகியும் அந்த வாசகத்தை இதுவரையிலும் மறக்க முடியவில்லை.

‘நீயுமா புருட்டஸ்’. ('…and you too, Brutus?'). உயிருக்கு உயிராய் நம்பிய மார்க்கஸ் புருட்டஸ் (Marcus Junius Brutus) என்கிற ஆத்ம நண்பனே் ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்தினான். அதுதான் கடைசிக் கத்திக் குத்து. அதோடு ஜூலியஸ் சீசரின் கதையும் முடிந்தது.

பதினைந்து வயதில் ஓர் அப்பா

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் புருட்டஸ் என்பவன் ஜூலியஸ் சீசருக்கு மகன் முறையில் வருகிறான். அல்லது ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 



ஏன் என்றால் புருட்டஸின் அம்மா செர்வீலியா (Servilia Caepionis) என்பவர் ஜூலியஸ் சீசரின் வைப்பாட்டியாகும். புருட்டஸ் பிறக்கும் போது ஜூலியஸ் சீசருக்கு வயது பதினைந்து. வயதைக் கவனியுங்கள்.

ஆக அந்த 15 வயதில் ஓர் ஆண்மகன் ஒரு பிள்ளைக்குத் தகப்பனாக முடியுமா. முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி இத்தாலியர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை அப்படியே விட்டு விடுவோம்.
(Plutarch (1910). Arthur H. Clough, eds. Lives. London: Dutton - Life of Brutus, 5.2.)

இன்னும் ஒரு செய்தி. ரஷ்யாவில் ஒரு பதின்மூன்று வயது பையன். அவனுடைய மனைவிக்கு பன்னிரண்டு வயது. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இருக்கிறாள். என்ன சொல்லப் போகிறீர்கள்.

ரஷ்யக் கிராமப் புறங்களில் இந்தியாவைப் போல பால்ய விவாகங்கள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 




ஜூலியஸ் சீசருக்கு மொத்தம் 23 கத்திக் குத்துகள். அவற்றில் புருட்டஸின் குத்துதான் நெஞ்சைப் பிளந்து கொண்டு போனது. ஜூலியஸ் சீசர் இறந்து 17 ஆண்டுகளுக்குப் பின் ரோமாபுரி மன்னராட்சிக்குத் திரும்பியது. 

ஒக்டோவியா (Gaius Octavius) என்பவன் மாமன்னராக முடி சூட்டிக் கொண்டான். ஜூலியஸ் சீசர் இறந்த இடம் பூமிக்கு அடியில் பல அடிகள் ஆழத்தில் இருக்கிறது.

ஜான் கென்னடி அரும் காட்சியகம்


ஜுலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கும் மேலே ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி இருக்கிறார்கள். இப்போது அந்த இடம் ஒரு கருஞ்சுற்றுலா இடமாக மாறி வருகிறது. நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள்.

மாவீரன் அலெக்ஸாண்டருக்குப் பின் நம் மனங்களில் பதியும் ஒரே மாவீரன் இந்த ஜூலியஸ் சீசர்தான். ஜூலியஸ் சீசரின் பெயரைச் சொல்லி் இத்தாலியும் காசு பார்க்கிறது. 




நவீன கால வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு மனிதர் நெப்போலியன் (Napoleon Bonaparte). பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவரைச் சிறை வைத்தார்கள். இருந்தாலும் தப்பித்து வந்தார். சிறையில் இருக்கும் போது கொடிய நஞ்சு வைத்துக் கொல்லப் பட்டார். அண்மையில் தான் தெரிய வந்தது.
(சான்று: http://www.bbc.co.uk/history/historic_figures/caesar_julius.shtml - Julius Caesar (100BC - 44BC)

அடுத்து அதிபர் கென்னடி வருகிறார். ’உனக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க வேண்டாம். உன்னால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’. (Ask not what your country can do for you, ask what you can do for your country.) உலகம் கேட்ட ஓர் அருமையான தத்துவப் பொன் மொழி. சொன்னவர் ஜான் கென்னடி (John Fitzgerald Kennedy).

1963 நவம்பர் மாதம் 22-ஆம் தேதி, டெக்சஸ் டாலாஸ் நகரில், லீ ஹார்வே ஓஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அப்போது அவருக்கு வயது 46. மிகச் சின்ன வயதிலேயே போய் விட்டார். மூன்று ஆண்டுகள்தான் பதவியில் இருந்தார். அமெரிக்க அதிபர்களில் ஆப்ரகாம் லிங்கனுக்குப் பின் மக்கள் மனங்களில் இன்று வரை நீங்காத இடம் வகிப்பவர் ஜான் கென்னடி ஆகும். 


இவருடைய அசாத்தியமான துணிச்சல் உலக மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



ஒரு முறை ரஷ்யா தன்னுடைய ஏவுகணைகளைக் கியூபாவில் நிறுத்தி வைத்து இருந்தது. அப்போது ரஷ்யா உலகப் பெரும் வல்லரசு. 

இருபத்து நான்கு மணி நேரத்தில் ஏவுகணைகளை எடுக்காவிட்டால் அமெரிக்கா போர் தொடுக்கும் என்று கென்னடி எச்சரிக்கை செய்தார்.
(சான்று: Len Scott; R. Gerald Hughes (2015). The Cuban Missile Crisis: A Critical Reappraisal. Taylor & Francis. p. 17.)

மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய வாய்ப்பு இருந்தது. அந்தச் சமயத்தில் ரஷ்யாவின் அதிபராகக் குருஷேவ் இருந்தார். ரஷ்யா ஆடிப் போனது. சொன்னதைச் செய்பவர் கென்னடி எனும் பயத்தில் ரஷ்யா பின் வாங்கியது.

அடுத்து சந்திரனில் மனிதனை இறக்கும் அப்போலோ விண்வெளித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் இதே கென்னடிதான். அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.

பாவம் அவர். அதைப் பார்க்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவருக்காக ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 350,000 பேர் வருகை தருகிறார்கள். அதுவும் ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாகும்.

இப்படி உலகக் கருஞ்சுற்றுலாத் தளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடைசியாக ராஸ்புட்டினைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். ரஸ்புட்டின் எனும் பெயர் உலக வரலாற்றுச் சுவடுகளில் மறைக்க முடியாத கறைகளை விட்டுச் சென்ற பெயர். 



ஆனால் எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர். அது ஒரு மந்திரச் சொல். 

வரலாற்றில் ரஸ்புட்டின் எனும் சொல் இல்லாமல் இருந்தால் அது ஒரு வரலாறாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெயர் மிகவும் புகழ்பெற்றது.

ரஷ்யாவை ஆட்டிப் படைத்த ரஸ்புட்டின்

ரஸ்புட்டின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பள்ளிக்கூட வாசல் பக்கமே போகாதவன். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்தவன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஊர் சுற்றித் திரிந்த ஒரு சாமான்யச் சிறுவன். ஆனால் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தையே தன் பிடிக்குள் இறுக்கிப் பிடித்தான் என்றால் அது ஒரு பெரிய விசயம் இல்லையா.



காடுமேடுகளில் அலைந்த அந்தச் சிறுவன் தான் ரஷ்ய நாட்டு மகாராணியையே தன் மாயவலைக்குள் சிக்க வைத்தான். அந்த மகாராணியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு ரஷ்யாவின் தலைவிதியையே மாற்றி அமைத்தான். உண்மையிலேயே அவன் ஒரு பைத்தியக்காரச் சித்தன்.

அந்த மகாராணி அவனுக்கு மனைவியாகவே வாழ்ந்தவள். அவனைக் கொல்வதற்கு என்ன என்னவோ செய்து பார்த்தார்கள். மனுசனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் ஒரு வழியாகக் கதையை முடித்து விட்டார்கள். எப்படி?

அது ஒரு வரலாற்று ஆவணம். இவரைப் பற்றி அடுத்த வாரம் ஒரு முழுக் கட்டுரையை எழுதுகிறேன். காத்திருங்கள் அன்பர்களே...

04 ஜூலை 2017

மலாக்கா செட்டிகள் 1

காலத்தின் பேரலையில் தாய்மொழியைத் தொலைத்துவிட்ட ஒரு சமூகம் தனித்து நிற்கின்றது. இருந்தாலும் அந்தச் சமூகம் தங்களின் கலை, கலாசாரங்களை மறக்கவில்லை. சார்ந்து வளர்ந்த சமயத்தையும் மறக்கவில்லை. 



அந்தச் சமூகத்தினருக்கு மலேசியாவிலேயே மிக மிகப் பழமையான இந்துக் கோயிலைக் கட்டிய பெருமை. இந்துக்களின் பெருமைகளில் இனிய ஓர் இதிகாசத்தைச் சேர்க்கும் மலாக்கா ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்தின் மகிமை. அந்த ஆலயத்தைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறது அந்தச் சமூகம். நாமும் பெருமைப் படுவோம்.

மலாக்கா செட்டிகள். இவர்கள் தான் நான் சொல்லும் அந்தச் சமூகம். உலகம் போற்றும் ஓர் உன்னதமான சமூகம். ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் அமைதியான மனிதர்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத மலாக்கா தமிழர்கள்.

உழைப்பால் முன்னேறிய பழம் பெரும் மூத்தச் சமூகத்தவர்கள். இந்து சமயத்திற்காக இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளங்களின் அவதாரங்கள். பாராட்டுவோம். வாழ்த்துவோம். 




1880-களில் மலாயா ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சஞ்சித் தொழிலாளர்கள் வேறு. தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மூன்று பங்காளிகளும் ஒரே கப்பலில் ஒரே பாய் விரிப்பில் ஒன்றாகப் படுத்துப் புரண்டவர்கள்.

ஒன்றாகவே பினாங்கு புறமலையில் அடைக்கலமாகி அங்கே இருந்து தீபகற்ப மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றவர்கள்..

அவர்கள் தான் சஞ்சித் தொழிலாளர்கள். இவர்கள் வேறு. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் வேறு. இரு தரப்பினரும் வேறு வேறு தமிழர்ச் சமுதாயங்கள்.

மலாக்கா செட்டிகள் அனைவருமே தமிழர்கள் தான். பெரும்பாலோர் இந்து சமயத்தவர்கள். ஒரு சிலர் இஸ்லாம் சமயத்தையும், வேறு சிலர் கிறிஸ்தவ சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகள் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்து வியாபாரம் செய்ய மலாக்காவிற்கு வந்தவர்கள். 




அவர்கள் இங்கு வந்து ஏறக்குறைய 600 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனை ஆண்டுகள் என்பதைப் பாருங்கள். 600 ஆண்டுகள். ஆக காலத்தால் மூத்த ஒரு சமூகம். வரலாற்றில் மதிக்கப்பட வேண்டிய ஒரு சமூகம். ஆனால் இப்போது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு சமூகம்.
(சான்று: http://m.himalmag.com/the-indian-peranakans-of-malaysia/ - Unknown to many Malaysians, for the last 600 years a small community known as the Melaka Chittys)

அதே மாதிரி சஞ்சிக்கூலிகள் எனும் பெயரில் வந்த தமிழர்கள் மலாக்காவிற்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் மலாயா காபி, ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்ய வந்தவர்கள்.

ஆகவே மலாக்கா செட்டிகளை 19-ஆம் நூற்றாண்டுச் சஞ்சித் தமிழர்களின்  பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சமூகம், மக்கள் தொகையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மலாக்காவில் மட்டும் அல்ல. மலேசிய அளவிலும்தான். அவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 700. அவ்வளவுதான்.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் எண்ணிக்கை எப்படி குறைந்து கொண்டே வருகிறதோ அதே போல மலாக்கா செட்டிகளின் மக்கள் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.




முன்பு காலத்தில் மலாயாவுக்கு வந்தவர்கள் சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார்கள். சின்ன வயதிலேயே நிறையவே பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். முப்பது வயதில் ஆறு ஏழு பிள்ளைகளுக்குத் தாய் தகப்பன் ஆனார்கள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லையே. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறார்கள். சரி.

மலாக்கா செட்டிகளின் வாரிசுகள் வேலைகளைத் தேடி ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஒரு சிலர் தான் நிரந்தரமாக மலாக்காவிலேயே தங்கி விடுகின்றனர். ஆக மலாக்கா செட்டிகள் என்பவர்கள் மலேசியச் செட்டிகளாக மாறி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகளைப் பார்த்தால் தோற்றத்தில் இந்தியர்களைப் போலத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் எல்லாம் மலாய்க்காரர்களின் அணிகலன்களாக இருக்கும்.

பெரும்பாலும் மலாய் மொழியில் தான் பேசுவார்கள். இப்போது நாகரிகமான மேற்கத்திய உடைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மைய காலங்களில் மலாக்கா செட்டிகள் பலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். மலாக்கா செட்டிப் பெண்களும் தமிழ் இளைஞர்களைத் திருமணம்  செய்து கொள்கின்றனர். ஒரு கலப்புத் திருமணச் சமுதாயம் மலாக்காவில் உருவாகி வருகிறது. அவர்களுடைய நடை உடை பாவனைகளும் மாறி வருகின்றன. 




இருந்தாலும் இன்னும் சிலருக்கு அந்தப் பழைய பாரம்பரிய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. மலாக்கா செட்டிச் சமூகத்தைச் சார்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றனர். வற்புறுத்தியும் வருகின்றனர்.

சரி. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் யார்? அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மலாக்கா செட்டிகள் 14-ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் பண்ணை எனும் கலிங்கப் பட்டணத்தில் இருந்து வந்தவர்கள்.
(சான்று: https://en.wikipedia.org/wiki/Chitty#History - Historical records stated that the Tamil traders from Panai in Tamil Nadu settled down in Malacca during the sovereignty of the Sultanate of Malacca.)

மற்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் வந்தனர். பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்.

வந்த புதிதில் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்று அழைக்கப் படவில்லை. சரி. அப்புறம் எப்படி மலாக்கா செட்டி என்ற பெயர் வந்தது. 




19-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் லேவாதேவி தொழில் செய்வதற்காக நகரத்தார்கள் எனும் ஒரு புதிய தமிழர்ச் சமூகம் மலாக்காவிற்கு வந்தது. அவர்களைச் செட்டியார்கள் என்று அழைத்தார்கள். இவர்களும் தமிழ்நாட்டின் காரைக்குடி, திருச்சி, இராமநாதபுரம் போன்ற நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அதற்கு முன்னரே வேறு ஒரு தமிழர்ச் சமூகம் மலாக்காவில் பேர் போட்டு விட்டது. அதுதான் மலாக்கா செட்டி என்கிற சமூகம்.

அதனால் வட்டித் தொழில் செய்ய வந்த நகரத்தார்களை அங்கு இருந்த மலாய் சீனச் சமூகத்தவர்கள் அவர்களைச் செட்டியார்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே காலம் காலமாக வாழ்ந்து விட்ட தமிழர்ச் சமூகத்தை மலாக்கா செட்டிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

அதாவது மலாக்காவில் இரு செட்டியார்ச் சமூகங்கள் இருக்கின்றன. இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே உள்ள கால இடைவெளி நானூறு ஆண்டுகள் ஆகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது..

சுருங்கச் சொன்னால் ஒரு சமூகத்தினர் செட்டியார்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இன்னொரு சமூகத்தினர் மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப் படுகின்றனர்.

இதில் முதலாவதாக வந்தவர்கள் மலாக்கா செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் தான் செட்டியார்கள் ஆனார்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக முதன்முதலில் வந்த மலாக்கா செட்டியார்கள் எனும் சொல் வழக்கம் பின்னர் காலத்தில் மலாக்கா செட்டிகள் என்று பெயர் மாற்றம் கண்டது.




செட்டி எனும் சொல்லின் பொருள் வியாபாரி என்பதாகும். மலாய் மொழியிலும் அப்படித் தான் பொருள் படுகிறது.

அப்படிப் பார்க்கும் போது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலாயாவுக்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வந்த வணிகர்களில் மலாக்கா செட்டிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1400-ஆம் ஆண்டுகளிலேயே பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்கா செட்டிகள் மலாக்காவில் வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள்.

இந்த மலாக்கா செட்டிகள் என்பவர்கள் இப்போதைய மலாயாத் தமிழர்களின் தலைமுறைக் காலங்களுக்கு முந்தியவர்கள். மலாக்கா செட்டிகள் மிகப் பழமையானவர்கள்.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சி செய்த போது அவருடைய அரண்மனையில் மலாக்கா செட்டிகள் நல்ல நல்ல பதவிகளில் இருந்து இருக்கின்றனர்.

தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத் தளபதிகள் போன்ற பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். (சான்று: Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)

இருந்தாலும் இப்போதைய நிலையில் மலாக்கா செட்டிகள் தங்களின் அடையாளத்தை இழக்கும் ஓர் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

1414-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே மலாக்கா மாநிலத்தில் வாணிகம் செய்ய வந்த இந்த மலாக்கா செட்டிகள் இங்குள்ள மலாய் மக்களைத் திருமணம் செய்து கொண்டனர். அப்படியே தனி அடையாளத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர்.

பார்ப்பதற்கு மலாய் இனத்தவரைப் போன்று காட்சி அளிக்கும் செட்டி மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.





தங்களுக்கு என்று தனி ஓர் அடையாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் அதே பாரம்பரியத்துடன் கலைகளை வளர்த்தும் வருகின்றனர். போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார், ஜப்பானியர் போன்றவர்களால் மலாக்கா ஆளப்பட்டு இருந்தாலும் மலாக்கா செட்டிகள் இன்னும் அவர்களின் அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பரமேஸ்வரா காலத்தில் மலாக்கா செட்டிகள் தங்களுக்கு என்று ஒரு சிறிய கோயிலை மலாக்கா புறநகர்ப் பகுதியில் கட்டிக் கொண்டார்கள். அதற்கு கஜபதி அம்மான் கோயில் என்று பெயரும் வைத்தார்கள்.

கஜபதி என்பதை கஜபேரம் என்றும் அழைத்தார்கள். கஜம் என்றால் யானை. கஜம் எனும் சொல்லில் இருந்து தான் Gajah எனும் சொல்லே உருவானது.

கஜ புரம் (Gajah Puram) எனும் சொற்கள் மருவி காஜா பூராங் (Gajah Berang) ஆனது. பின்னர் மலாக்கா காஜா பேராங் (Malacca Gajah Berang) ஆனது. இப்போது சொல்கிறார்களே காஜா பேராங் அது கஜபதி எ(Gajah Pathy) னும் சொல் தொடரில் இருந்து உருவானது. புரியுதுங்களா.
(சான்று: Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas—Chitty ... By Samuel S. Dhoraisingam)




வரலாற்றை எப்படித் திருப்பிப் போட்டு எழுதினாலும் இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நம்மிடம் சரியான வலுவான சான்றுகள் இருக்கின்றன. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் சான்றுகளைத் தூக்கிப் போட முடியும்.

லண்டன் வரலாற்றுப் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் சீனா பெய்ஜிங் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் அந்தச் சான்றுகள் பத்திரமாக இருக்கின்றன. அந்தக் காப்பங்களில் டிஜிட்டல் முறையில் அந்தச் சான்றுகளைப் பத்திரப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

பரமேஸ்வரா காலத்திலேயே கடல்படை தளபதிகளாகவும் நிதி அமைச்சர்களாகவும் இருந்த மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா தகுதி மிக அண்மையில் தான் வழங்கப்பட்டது. அதாவது 58 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற 2015-ஆம் ஆண்டு தான் வழங்கப்பட்டது.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு 2005-ஆம் ஆண்டிலேயே பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். மலாக்கா செட்டிகளுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.

எனக்குள் ஓர் ஆதங்கம். மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்தாலும் மண் உரிமைச் சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

நிலம், வீடு வாங்குவதில் எந்தச் சிறப்புச் சலுகையும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் சராசரி இந்தியர்களின் நிலை தான்! பெயருக்குத் தான் பூமிபுத்ரா எனும் தகுதி. ஆனால் சிறப்பு உரிமைகள் எதுவும் இல்லை.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு மலாக்காவில் மட்டும் நிலம் வாங்கும் உரிமை உண்டு. மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை! மற்றபடி எந்தச் சிறப்புச் சலுகையும் வழங்கப் படவில்லை!

மலாக்கா செட்டிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றி முதல் அமைச்சரிடம் விடாமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. Who wants to be a Millionaire எனும் ராகத்தில் அதுவும் பெரிய ஒரு கேள்வி.

தற்பொழுது மலாக்காவில் வசித்து வரும் மலாக்கா செட்டி சமூகத்தவர்கள் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்கள். தங்கள் வழிபாட்டிற்காகக் காஜா பேராங் புறந்கர்ப் பகுதியில் சில இந்துக் கோயில்களை அமைத்து வழிபட்டனர். மிகப் பழமை வாய்ந்த சில கோயில்கள்.

மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:


• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ பொய்யாத விநாயகர் மூர்த்தி ஆலயம், ஜாலான் துக்காங் இமாஸ் (1781)
• ஸ்ரீ காளியம்மன் ஆலயம், பாச்சாங் (1804)
• ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், காஜா பேராங் (1822)
• ஸ்ரீ கைலாசநாதர் சிவன் ஆலயம், காஜா பேராங் (1887)
• ஸ்ரீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம், காஜா பேராங் (1888)
• லிங்காதரியம்மன், காஜா பேராங்
• கட்டையம்மன் ஆலயம்
• ஸ்ரீ அய்யனார் ஆலயம், பாச்சாங்
• ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம், காஜா பேராங்


இருந்தாலும் தற்போது இந்த ஆலயங்கில் சிலற்ற மலாக்கா  இலங்கைத் தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

(தொடரும்)

29 ஜூன் 2017

அம்பிகா சீனிவாசன் 2

பாகம்: 2

அம்பிகா சீனிவாசன். அப்போது மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் அருந்தலைவர். இப்போது விழிப்புணர்வு மன்றங்களின் பெருந்தலைவர். நடப்பு ஆளுமைக்குச் சவால் விடும் ஓர் உருமாற்றம். துணிச்சல் மிக்கத் தமிழ்ப் பெண்ணாகப் பெருமாற்றம்.



இப்படித்தான் டத்தோ அம்பிகாவைப் பற்றி நான்கே வரிகளில் சொல்ல முடிகிறது. சமூக விழிப்புணர்வுகளின் பரிணாமத்தில் எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ சோதனைகள். அந்த வேதனைகளிலும் சோதனைகளிலும் எத்தனையோ சாதனைகள்.

அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் இருக்கிறன்தே அது எத்தனையோ அரசியல் சுனாமி  அலைகளைத் தாண்டிப் பயணித்து வருகின்றது. 


அதில் ஒன்றும் ஒரு பெரிய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலமும் இல்லை. எல்லாமே அர்ப்பணிப்புச் சுவடுகளின் பிரதிபிம்பங்கள் தான். சமூக விழிப்புணர்வுகளுக்கான காணிக்கைகள் என்றும் சொல்லலாம். தப்பில்லை.
 

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறைத் தனமான நிகழ்வுகள். அவரைச் சிறுமைப்படுத்திய சில பல குறுந் தகவல்கள். அவருக்கு எதிராக நாடு முழுமையும் பிரசாரங்கள். 


'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டார். அவற்றை எல்லாம் தாண்டி அம்பிகா பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு சமயம் அம்பிகாவின் வீட்டிற்கு முன்னால் ‘பர்கர்’ கடைகள் திறக்கப் பட்டன. பெர்சே 3.0 பேரணியினால் பர்கர் வியாபாரிகளுக்கு 200,000 ரிங்கிட் நட்டம் என்று குற்றச்சாட்டுகள். வருவோர் போவோருக்கு எல்லாம் இலவசமாக, சுடச்சுட ‘பர்கர்கள்’ வழங்கப் பட்டன. 




அம்பிகாவிடமே நேரடியாகப் போய் ’பர்கர்’ கொடுத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்கள். அம்பிகா ஒரு சுத்தமான சைவம். புலால் உண்ண மாட்டார் என்று தெரிந்தும் அவரிடமே போய் அசைவத்தைக் கொடுத்தது சரியா தவறா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2012/05/11/traders-stage-burger-protest-in-front-of-ambigas-house/ - Traders upset over their loss of income a symbolic protest outside Bersih co-chairman Datuk S. Ambiga's house by giving away free burgers.)

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து 200 பேர் அடங்கிய ஒரு குழுவினர், அவருடைய வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடினர். தங்களின் பின்புறங்களைக் காட்டி அம்பிகாவை அசிங்கப் படுத்தினர். 


அந்த மனுஷியின் மனத்தை வேதனைப் படுத்தினர். அவரை மட்டும் அல்ல. அந்தக் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த அத்தனை பேரும் வேதனை அடைந்தனர்.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2012/05/16/group-performs-butt-exercises-in-front-of-ambigas-home/ - A group of army veterans turned their backs and performed “butt exercises” in front her house in Bukit Damansara.)

இப்படிப்பட்ட செயல்களினால் தலைமைத் துவத்தின் மீது இருந்த விசுவாசம் பாதிக்கப் பட்டது. ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எப்படி என்று பலர் வேதனை அடைந்தனர். அது ஒரு பெரிய வேதனையான விசயம். 




அம்பிகா என்பவர் ஒரு முப்பதாயிரம் வழக்கறிஞர்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தவர். அதுவும் அவர் ஒரு பெண். 

அவர் மிக மிக மோசமான நிலையில் கொச்சைப் படுத்தப்பட்டார் என்பதுதான் வேதனையிலும் வேதனையான விசயம். அவருக்கு ஏற்பட்ட சம்பவங்களைப் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது அப்படியே இருக்கட்டும். அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறேன். 2009-ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த எண்மருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் வழங்கப் பட்டன.

அந்த விருது வழங்கும் நிகழ்வில் டத்தோ அம்பிகாவைப் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபரின் துணைவியார் ஹில்லரி கிலின்டன் இப்படி அடையாளப் படுத்தினார். 




“மலேசியாவில் அம்பிகா மிக விநோதமான ஓர் ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத் தக்கவை. புதிய சட்ட சீர்த் திருத்தங்களையும் புதிய செயல் ஆக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர்.

நிர்வாகத் திறமையிலும் சரி நீதித் துறையிலும் சரி புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருகிறார். அவருடைய முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எல்லோர் மனங்களில் சமயச் சகிப்புத் தன்மையை விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் நல்ல சிறந்த பெண்மணியாக அடையாளப் படுத்துகிறது. ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப் படுகிறார் என்று அம்பிகாவை அறிமுகம் செய்தார்கள். 




அது ஓர் உலகளாவிய கௌரவிப்பு நிகழ்ச்சி. ஒரு மனிதருக்கு நோபல் பரிசைக் கொடுப்பதும் சரி ஒரு பெண்மணிக்கு இந்த மாதிரியான வீரப் பெண்மணி என்கிறப் பரிசைக் கொடுப்பதும் சரி. இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றன.

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்ன தெரியுங்களா. அந்த கௌரவிப்பு நிகழ்ச்சியைப் பற்றி மலேசிய ஊடகங்களுக்குத் தெரியாமல் போனதுதான். எப்படி என்றுதான் தெரியவில்லை. ’தி ஸ்டார்’ பத்திரிகையும் ‘சன்’  பத்திரிகையும் துணுக்குச் செய்திகளாகப் போட்டன.

ஒருக்கால் இப்படியும் நடந்து இருக்கலாம். ராய்ட்டர்ஸ், ஏ.பி, செய்தி நிறுவனங்களில் பணி புரிந்த பத்திரிகையாளர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காமல் போய் இருக்கலாம். அல்லது  பத்திரிகையாளர்கள் அசந்து தூங்கிப் போய் அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்து இருக்கலாம்.

அல்லது கொட்டாங்குச்சியில் சோறாக்கிக் குடும்பத்துக்குப் போடும் வேலை செய்து இருக்கலாம். வேண்டாங்க. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு.

எது எப்படியோ அந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் உள்ள தலையாய இந்தியப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. ஜப்பான், கொரியா நாட்டுப் பத்திரிகைகளும் பெரிது பெரிதாகச் செய்திகளை வெளியிட்டன.

ரொம்ப வேண்டாம். இருண்ட கண்டத்து நாடுகள் என்று சொல்கிறார்களே ஆப்பிரிக்க நாடுகள்; அந்த நாடுகளில் உள்ள நாளிதழ்கள் கூட அம்பிகாவின் செய்திகளைப் பிரசுரித்தன. 

 

இணையத்தின் வழியாகத் தெரிந்து கொண்டோம். ஏதோ ஒரு வகையில் உலக மக்களுக்குச் செய்திகள் போய்ச் சேர்ந்துவிட்டன. மகிழ்ச்சி.

அவரைப் பற்றிய சில விவரங்கள். டத்தோ அம்பிகாவின் முழுப்பெயர் அம்பிகா சீனிவாசன். அவர் 1956 நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சிரம்பானில் பிறந்தவர். 61 வயதாகிறது.

இவருடைய தகப்பனாரின் பெயர் டத்தோ டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அம்பிகாவின் தாயார் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்.

அம்பிகாவின் தந்தைவழி தாத்தா, மலாயா ஆங்கிலேய ஆட்சியில் தொழிலாளர் இலாகாவில் ஆணையராகப் பணிபுரிந்தவர். 


அவருடைய கணவர் வழியாக ’ஆனந்தவிகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனுக்கு அம்பிகா பேத்தி ஆகின்றார்.
 

(சான்று: https://ta.wikipedia.org/s/2cey - தாய்வழி தாத்தா பெரும்பாலோர் அறிந்த ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் ஸ்ரீநிவாசன் ஆவார்.)

அம்பிகாவின் தகப்பனார் டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன் 1974-இல் கோலாலம்பூர் பொதுமருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை நிறுவியவர் (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept). 


அதன் தலைவராகவும் சேவை செய்தவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் அம்பிகா. 



டத்தோ அம்பிகா 1979-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் (University of Exeter, England, LLB Law, 1979). அவருடைய தகப்பனார் அவரை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப் பட்டார்.

ஆனால் கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் பள்ளியியில் படிக்கும் போதே சட்டம் பயில வேண்டும் என்கிற ஆசை அம்பிகாவிற்கு வந்துவிட்டது. அதுவே அவரைச் சட்டக் கல்லூரிக்கும் இழுத்துச் சென்றது. 1975-ஆம் ஆண்டு அந்தப் பள்ளியின் தலைமை மாணவராக (Head Prefect) இருந்தவர்.

சென்ற 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் படித்த அதே எக்ஸ்டர் பல்கலைக்கழகம் அவரை அழைத்து அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது.

ஒரு வழக்கறிஞர் நிலையில் அம்பிகா உயரிய சேவைகளை வழங்கி இருக்கிறார். அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அதற்காக அவருக்கு அந்தக் கௌரவ டாக்டர் விருது வழங்கப் பட்டது. 




1982 மார்ச் மாதத்தில் இருந்து அம்பிகா வழக்கறிஞராகச் சேவை செய்து வருகிறார். இப்போது சொந்தமாக ஒரு சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஒரு நாட்டின் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பது என்பது மிக மிகச் சவால் நிறைந்தது. அதுவும் முப்பதாயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்து இருக்கிறார்.

அதுவும் ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு மன்றத்திற்குத் தலைவர் ஆவது என்பது சாதாரண விசயம் அல்ல என்று மேடையில் சொன்ன போது எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி  (Standing Ovation) பெருமை செய்தனர்.

இன்னும் ஒரு செய்தி. சென்ற 2011 செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier de Legion d’Honneur) வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

நடிகர் திலகம் சிவாஜிக்குச் செவாலியர் வழங்கினார்களே அதே விருது தான் அம்பிகாவுக்கும் வழங்கப் பட்டது. 

 

மலேசியாவில் மனித உரிமைகளுக்காகவும் சட்ட ஆளுமைக்காகவும் அம்பிகா போராடி வருகிறார். அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த விருது வழங்கப் பட்டது.

இந்தச் செவாலியர் விருது மலேசியாவில் இதுவரையில் 20 பேருக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. அவர்களில் மாட்சிமை தங்கிய பேரரசர் துவாங்கு மிஷான் ஜைனல் அபிடின், டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், நடிகை மிச்சல் இயோ போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

2008-ஆம் ஆண்டில் பேராக் சுல்தான் இவருக்கு DPMP எனும் டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

இவர் வாதாடிய வழக்குகளில் லீனா ஜோய் என்பவரின் வழக்கு தான் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்காகும். ஒரு முஸ்லீம் சமயத்தவர் அவருடைய விருப்பத்தின் பேரில் மற்ற சமயங்களுக்கு மாற முடியும் என்று அம்பிகா வாதாடினார். 





இந்த வழக்கு 2007-ஆம் ஆண்டு, மலேசிய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அது ஒரு நீண்ட வழக்கு. மலேசிய அரசியலமைப்பின் Article 121(1A) சட்டப் பிரிவின் கீழ் அந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கு உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வழக்கைப் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் அந்த வழக்கைப் பற்றிய விவரங்கள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன. விருப்பப் பட்டவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


(சான்று: https://www.worldwatchmonitor.org/2016/03/malaysian-court-upholds-right-to-convert-from-islam/ - Lina Joy who converted from Islam to Christianity in 1998 at the age of 26)

(தொடரும்)