20 நவம்பர் 2017

பான் பான் இந்தியப் பேரரசு

மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முடியவில்லை. சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி மன்சூர் ஷா காலத்தில் முடியவில்லை. மலையூர் மலாயா காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முடியவில்லை. 



மாறாக மாமாங்கங்கள் பல தாண்டி மலாயா மைந்தர்களின் கதைகளில் போய் முடிகின்றது. அந்தக் கதைகளில் ஒன்றுதான் பான் பான் (Pan Pan) எனும் இந்தியப் பேரரசின் கதை. 

தென்கிழக்காசிய வரலாற்றில் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் காலத்திற்கு மலாயா இந்தியர்களின் வரலாறு ஆழமாய்த் தடம் பதித்து உள்ளது. அவர்களின் வரலாறுகளை மீட்டு எடுப்போம். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதுவே நம்முடைய இனம் சார்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். 



கி.பி. 300-ஆம் ஆண்டுகளில் மலாயா, தாய்லாந்துப் பெருநிலங்களை ஆட்சி செய்த ஓர் இந்தியப் பேரரசின் கதை. இது ஒரு சினிமாக் கதை அல்ல. உண்மையாக நடந்த கதை. ஒரு வரலாற்றுக் கதை. ஒரு வாழ்வியல் கதை. தொடர்ந்து படியுங்கள்.

முன்பு காலத்தில் அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை பான் பான் எனும் பேரரசு மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த ஓர் இந்து அரசாகும். 


A brick terrace with floral votive on top

மலாயா தாய்லாந்து நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே தென்கிழக்காசியாவில் ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

பான் பான் எனும் சொல்லில் இருந்து தான் பான் தான் நீ (Pan tan i); பட்டாணி (Pattani) எனும் பெயர்கள் தோன்றின. வரலாற்று ஆசிரியர்கள் ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள்.



கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 300-ஆம் ஆண்டுகள். ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயாவில் ஓர் இந்திய அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம். உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். 



ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. தெரியும் தானே. அதுதான் விசயம்.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன இந்தியர்களின் இரகசியங்களை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் இந்திய அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

(சான்று: https://www.amazon.com/Ancient-Indian-History-Civilization-Sailendra/dp/8122411983 - Ancient Indian History and Civilization; Paperback – 1999; By Sailendra Nath Sen; Pg: 521)

கங்கா நகரத்திற்கு அடுத்து மலாயாவில் தோன்றிய மற்றோர் இந்துப் பேரரசு லங்காசுகம் (Langkasuka). இந்த லங்காசுகம் கெடா மாநிலத்தின் மேற்கு கரையில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் சன்னம் சன்னமாகத் தாய்லாந்தின் பட்டாணி மாநிலம் வரை பரந்து விரிந்து படர்ந்து போனது. 



அன்றைய பர்மாவில் இருந்து குடியேறிய மோன் (Mon) குடிமக்கள் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தார்கள். முதலில் இந்துக்களாக இலங்காசுகத்திற்கு வந்த இந்த மோன் மக்கள் பின்னர் புத்த மதத்தைத் தழுவினர். இதுவும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு வரலாற்றுப் படிவம்.

ஒரு செருகல். இந்துப் பேரரசு என்று தான் சொல்கிறேன். இந்தியப் பேரரசு என்று சொல்லவில்லை. ஏன் என்றால் பர்மாவில் இருந்து வந்த மோன் குடிமக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இந்துப் பேரரசு என்பது வேறு.
இந்தியப் பேரரசு என்பது வேறு. இந்தியர்ப் பேரரசு என்பது வேறு. மூன்று வெவ்வேறு வகையான ஆளுமைகள் உள்ளன.

இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்துப் பேரரசு. இந்தியக் கண்டத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்தியப் பேரரசு. இந்தியர் வம்சாவளியைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்தால் அது இந்தியர்ப் பேரரசு.


The Bhairava of Wiang Sa

பர்மாவில் இருந்து வந்த மோன் இந்துக்கள் தான் பின்னர் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார்கள். ஆகவே இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர்கள்  மோன் இந்துக்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

இலங்காசுகத்தைச் சீனா நாட்டு வணிகர்கள் டுன்சுன் (Dunxun) என்று அழைத்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை லியாங் அரசப் பரம்பரையினர் (Liang Dynasty) ஆட்சி செய்தனர். 



கி.பி. 539-ஆம் ஆண்டு இலங்காசுக அரசாங்கம் ஒரு தூதுக் குழுவையும் சீனாவிற்கு அனுப்பி வைத்து இருக்கிறது. சீன வரலாற்று ஏடுகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. சரி.

அதற்கும் அடுத்து மூன்றாவதாக வந்தது தான் பான் பான் பேரரசு.

இந்தப் பான் பான் அரசிற்குப் பின்னர் நான்காவதாக வந்தது தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. இந்தத் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றி 09.08.2017 தமிழ் மலர் நாளிதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வலைப்பதிவிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் முகவரி:


https://ksmuthukrishnan.blogspot.com/2018/03/blog-post.html

படித்துப் பாருங்கள்.


The newly discovered linga of the Panpan kingdom

பான் பான் பேரரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது. கிரா குறுக்குநிலம் (Kra Isthmus) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம்.

அங்குதான் கிழக்குக் கரை பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. ISBN 981-4155-67-5.)



1920-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; சிலைச் சிதைவுகள், கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் கிடைத்தன.

அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் பேரரசு எனும் ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படி ஓர் இந்திய அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

மலாயா வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லுக்கு மிகச் சரியானவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும். 



அந்த வரலாற்றுப் பார்வையில் மலாயாவுக்கு வந்த இந்தியர்களின் அடிச்சுவடிகளும் அழகாய்த் தெரிகின்றன. இது உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள்.

பெரும்பாலானவை இந்துச் சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.

(சான்று: https://southeastasiankingdoms.wordpress.com/tag/panpan-kingdom/ - Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries.)

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளில் பான் பான் அரசு சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் இந்து அரசர் ஆட்சி செய்து இருக்கிறார். 


The modest brick remains of Wat Mokhlan Archaeological Site

இந்த அரசர் தான் பூனான் சாம்ராஜ்யத்தில் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் சாம்ராஜ்யம் என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு பேரரசாகும்.

(சான்று: Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.)

சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பிய பிறகு பான் பான் அரசு திறை செலுத்தத் தொடங்கியது. திறை என்றால் கப்பம். ஒரு சிறிய நாடு ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பு கேட்டு அன்பளிப்பு செய்வதே திறை அல்லது கப்பம் ஆகும்.

கி.பி. 529; கி.பி. 533; கி.பி. 534; கி.பி. 535; கி.பி. 571-ஆம் ஆண்டுகளில் திறை செலுத்தப் பட்டது. அந்தச் சமயத்தில் லியாங் (Liang dynasty) எனும் அரசப் பரம்பரையினர் சீனாவை ஆட்சி செய்து வந்தனர்.

பின்னர் 50 ஆண்டுகள் கழித்து தாங் அரசப் பரம்பரையினர் (Tang dynasty) ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கும் பான் பான் அரசு கப்பம் கட்டி வந்து இருக்கிறது.

Albert E. Dien, Six Dynasties Civilization. Yale University Press, 2007 ISBN 0-300-07404-2. Partial text on Google Books. P. 190.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக பான் பான் அரசு நல்லபடியாகப் போய்க் கொண்டு இருந்தது. இருந்தாலும் பான் பான் அரசின் செல்வச் செழிப்பு கீழே இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கண்களை ரொம்ப நாட்களாக உறுத்தி வந்தது.

அப்புறம் என்ன. ஒரு நல்ல நாள் பார்த்து பான் பான் அரசை 
ஸ்ரீ விஜய பேரரசு கொத்திக் கொண்டு போய் விட்டது. அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக தர்மசேது (Dharmasetu) என்பவர் இருந்தார்.

இது நடந்தது கி.பி. 775-ஆம் ஆண்டில். அதோடு பான் பான் அரசாட்சியும் ஒரு முடிவிற்கு வந்தது. இப்படித் தான் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் சொந்தமான ஏராளமான நில புலனங்களும் சொத்துப் பத்துகளும் காலாவதியாகிப் போயின. எல்லாம் அடிபிடி கோளாற்றினால் ஏற்பட்ட தவிடு பொடிகள்.

இப்போது இங்கே மட்டும் என்னவாம். நமக்குள் அடித்துக் கொள்ளவில்லையா. எல்லாம் தொட்டால் சிணுங்கி கேஸ் தான். இப்போது நடக்கிற மாதிரி தான் அப்போதும் நடந்து இருக்கிறது. இதில் என்ன பெரிய பேச்சு வேண்டிக் கிடக்கிறது. இந்தியர்களுக்கே சொந்தமான பரம்பரை புத்தி அவர்களை விட்டுப் போய் விடுமா என்ன.

அந்தக் காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்கு ஆசியாவையே ஆட்சி செய்த இந்தியர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் இப்போதைய சந்ததியினர் அஞ்சுக்கும் பத்தும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. என்ன செய்வது. வாங்கி வந்த வரம்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். வரலாற்று உண்மைகளைத் தேடிப் பிடித்து வரிந்து கட்டி எழுதுவதால் நம் மீது வழக்குப் பிணக்குகள் வரலாம். சொல்ல முடியாது. உண்மையைத் தானே எழுதுகிறோம். அதுவும் வலுவான சான்றுகளுடன் எழுதுகிறோம். சரிங்களா.

மலாயா வரலாற்றில் மறக்க முடியாத மைந்தர்களின் பட்டியலில் மலாயா இந்தியர்கள் முதல் இடத்தில் இருந்து இருக்கிறார்கள். இந்த உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மலாயா இந்தியர்கள் என்று தான் சொல்கிறேன். மலேசிய இந்தியர்கள் என்று சொல்லவில்லை.

கடைசியாக ஒரு விசயம். இந்தோனேசியாவிலும் சரி; தாய்லாந்திலும் சரி; தடம் பதித்துச் சென்ற இந்தியர்களின் வரலாறுகளை அந்த நாட்டு மக்களே தோண்டி எடுத்துப் போற்றிப் புகழ்கிறார்கள். உச்சி முகர்ந்து பார்க்கிறார்கள். தலைப்பா கட்டி தண்டோரா போடுகிறார்கள்

சில இடங்களில் அப்படியா. இல்லையே. வேதனையாக இருக்கிறது. புதைந்து கிடக்கும் இந்திய வரலாறுகளைத் தோண்டி ஒன்றும் எடுக்க வேண்டாம். மண்ணுக்குள் அப்படியே கிடந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கண்ணுக்குத் தெரிகிற இந்தியர்களின் தடய விசயங்களை மட்டும் அழிக்காமல் பழிக்காமல் அப்படியே விட்டால் போதுங்க. பெரிய புண்ணியம்.

(-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-)

14 நவம்பர் 2017

சிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும்

சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது. மயிர் கூச்செறியச் செய்யும் ஒரு நிகழ்ச்சி. அவள் பெயர் சோமியா. நடமாடும் நாட்டியச் சிலை. ஆள் கொஞ்சம் சிவப்பு. அவளுக்குப் பிடித்தக் கலரும் சிவப்பு. அவள் விரும்பிப் பார்ப்பதும் சிவப்பு. விரும்பிப் பழகுவது சிவப்பு. எதிர்ப்பார்ப்பதும் சிவப்பு. கனவு காண்பதும் சிவப்பு. 


சும்மா சொல்லக்கூடாது. கறுப்பிலே பிறந்து கறுப்பிலே வளர்ந்தவள். ஆனால் என்ன. சிவப்பிலே மிதந்து சிவப்பிலே பறக்கிற மாதிரி மயக்க நிலை. இவள் மட்டுமா. இன்னும் எத்தனையோ சிவப்புக் கலர் மேனா மினுக்கிகள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரிக்பீட்ஸ் பக்கம் போய்ப் பாருங்கள். தெரியும். அப்படியே போக ஆசைப் பட்டால் தயவு செய்து கையோடு ஒரு பிலாஸ்டிக் பையையும் எடுத்துச் செல்லுங்கள். 



ஒரு நாள் சோமியா சிவப்பு சேலையைக் கட்டிக் கொண்டு தோட்டத்துச் சிவப்பு செம்மண் சாலையில் நடந்து போனாள்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு முரட்டுக் காளை. கயிறை அவிழ்த்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வருகிறது. அந்தக் காளை சோமியாவைப் பார்த்து பாய்ந்து வருகிறதா இல்லை அவள் கட்டி இருக்கிற சிவப்பு சேலையைப் பார்த்துப் பாய்ந்து பாய்கிறதா. தெரியவில்லை.

பாவம் சோமியா. அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறாள். சிவப்பு சேலை காற்றில் பறக்கிறது. காளையும் பறக்கிறது. சோமியா ஓட, காளை விரட்ட, சோமியா கத்த, காளை கர்ஜிக்க; அங்கே ஆடு புலி ஆட்டம். தேவர் பிலிம்ஸ் தோற்றது போங்கள்.



அந்த நேரம் பார்த்து ஓர் அதிசயம். திடீரென்று ஒரு வாட்டம் சாட்டமான இளைஞன் எங்கேயோ இருந்து மின்னலைக் கிழித்துக் கொண்டு வந்தான். சமூகத்தின் கறைகளைத் துகில் உரிக்கின்ற கர்ம வீரன் கடையப்பா. அவன் எப்படி அங்கே வந்தான்?

அந்தக் கதை இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த ரகசியம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜாவிற்குக் கூட தெரியாதாம். தொடர்ந்து படியுங்கள்.

காளையின் வேகம்; அதன் கால்களின் அழுத்தம்; இரண்டும் கலந்ததால் மண்ணில் தீச்சுவாலைகள். காற்று மண்டலத்தில் அக்கினிப் புகைச்சல். சுற்று முற்றும் சுனாமி பேரலைகளின் இரைச்சல்.



மதம் பிடித்து விரட்டும் காளையின் கழுத்தில் தொங்கிய கயிற்றைத் தன் இடது காலால் ஒரே அழுத்தாக அழுத்துகிறான் கடையப்பா. அவ்வளவுதான். காளை கப்சிப். தலைகுனிந்து தடுமாறிப் போய் நிற்கிறது.

அப்புறம் என்ன. நாலு கால்களைத் தேய்த்துக் கொண்ட முரட்டுக் காளை தன்னுடைய முதுகை முருங்கை மரத்தில் தேய்த்துக் கொள்கிறது.  இரண்டு காலைத்  தேய்த்துக் கொண்ட மனிதக் காளை பெண்ணிடம் முறுக்கிக் கொள்கிறது. 

இது ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மாதிரி இருக்கலாம். சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. 1960-களில் மலாக்கா காடிங் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது ஒரு திரைக் காட்சியாகவும் இருக்கலாம். எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்.



ஆனால் காலா காலத்திற்கும் இயற்கையின் நியதிகளை மிஞ்சிப் போகும் சில அதிசயமான படக் காட்சிகளின் பட்டியலில் அதையும் சேர்க்கலாம். சரிங்களா.

அது ஒரு சினிமாக் கதை என்றே வைத்துக் கொள்வோம்.. சினிமா ஒரு தொழில். அவர்கள் கதை சொல்கிறார்கள். நாமும் பதினெட்டு பட்டியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கிறோம், கேட்கிறோம். அவ்வளவுதான். அதில் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்வோம். கெட்டவற்றை விட்டுத் தள்ளுவோம். இப்போதைக்கு கேள்வி இதுதான்.

கேள்வி: சிவப்புச் சேலை கட்டிய பெண்களை மாடுகளுக்கு ஏன் பிடிப்பது இல்லை?

பதில்: கண் பார்வை இல்லாத ஒருவருக்கு அமாவாசையும் தெரியாது. பௌர்ணமியும் தெரியாது. அந்த மாதிரி மாடுகளுக்கு நீல நிறம் தெரியும். பச்சை நிறம் தெரியும். மஞ்சள் நிறம் தெரியும். ஆனால், சிவப்பு நிறம் மட்டும் தெரியவே தெரியாது. 



இதைப் பற்றி பலர் பல கோணங்களில் பார்த்து விட்டனர். பல கருத்துகளைச் சொல்லியும் விட்டனர். ஆனால் இந்த முறை அறிவியல் கோணத்தில் போய் அது என்ன சொல்கிறது என்று சற்று ஆழமாகப் பார்ப்போம்.   

சிவப்பு சேலை அல்லது சிவப்பு பாவாடைகளைப் பார்த்து காளை மாடுகள் முட்ட வரும் என்பது எல்லாம் காலாவதியான நம்பிக்கை. மூட நம்பிக்கை என்று சொல்ல மாட்டேன். முற்றிலும் தவறான நம்பிக்கை என்று சொல்வதே சரி.

விலங்கினத்தில் மாடுகள் இனம் வித்தியாசமானது. மாற்றுப் பார்வை கொண்ட ஒரு விலங்கினம். மாடுகள் சிவப்பு, பச்சை நிறக்குருடு இனத்தைச் சேர்ந்தவை.  ஆங்கிலத்தில் Red-Green Color Blindness என்று சொல்வார்கள்.

அதாவது மாடுகளுக்கு சிவப்பு நிறமும் பச்சை நிறமும் சுத்தமாகத் தெரியவே தெரியாது. அவை பார்க்கும் எல்லாமே நீலம், மஞ்சள், சாம்பல் நிறத்தில் தான் தெரியும். அதனால் மாடுகளை Dichromacy எனும் உயிரியல் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். 



இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். மாடுகளின் கண்களில் இருக்கும் விழித் திரையில்  சிவப்பு நிறமிகள் (retinal red pigment) இல்லை. சிவப்பு நிறமிகள் இல்லாததால் எந்த ஒரு சிவப்பு பொருளைப் பார்த்தாலும் அதற்குச் சாம்பல் கலந்த பச்சையாகத் தான் தெரியும். மறுபடியும் சொல்கிறேன். மாடுகளுக்கு சிவப்பு நிறம் தெரியவே தெரியாது. இது உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்த உண்மை.

ஆகவே மாடுகளை நிறக்குருடு இனத்தின் Protanopia அல்லது Deuteranopia எனும் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். சிவப்பு நிறத்திற்குப் பதிலாக பச்சை நிறம் தெரிவதால் மாடுகளை மேற்சொன்ன பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள். 

சில விலங்குகளுக்கு நீல நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் நிறம் மட்டுமே தெரியும். அவற்றை Dichromacy நிறக்குருடு இனத்தின் Tritanopia பிரிவில் இணைத்து இருக்கிறார்கள். 

  
Image result for color blindness

மனிதர்களிலும் சிவப்புக் குருடு, நீல நிறக் குருடு உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலருக்கு போக்குவரத்து விளக்கில் உள்ள சிவப்பு நிறம் தெரியாது. சிவப்பு நிறம் மஞ்சளாகத் தான் தெரியும். சிலருக்குச் சாம்பலாகத் தெரியும். இது ஒரு வகையான பரம்பரை நோய்.

ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் உள்ள மூலக்கூறு ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. X - Chromosome, Y - Chromosome  எனும் X – Y நிறமிகள்.

இந்த நிறமிகளும் ஒரு தந்தையிடம் மட்டுமே இருக்கின்றன. தாயாரிடம் இல்லை. X நிறமி என்பது ஓர் ஆண் குழந்தையை உருவாக்குகிறது. Y நிறமி என்பது ஒரு பெண் குழந்தையை உருவாக்குகிறது.

தாயிடம் இருப்பவை இரண்டுமே X – X நிறமிகள். Y நிறமி என்ற எதுவும் இல்லை.

இதில் தந்தையின் X நிறமியும் தாயாரின்  X நிறமியும் சேரும் கட்டத்தில் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு நிறக் குருடு அல்லது நிறமாலை ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

Image result for color blindness

இந்த நிறக் குருடு எப்படி ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் ஏன் ஏற்படுகிறது என்பது மட்டும் தெரியவில்லை. புரியாத புதிர். இந்த நிறக் குருடு மனிதர்களில் பத்து பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. விலங்கினம் தோன்றிய காலக் கட்டத்தில் இருந்தே நிறக் குருட்டுத் தன்மை இருந்து வருகிறது. மாடுகளுக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த சிவப்பு நிறக் குருட்டுத் தன்மை இருக்கிறது.

ஆகவே சிவப்பு சேலை கட்டிய பெண்ணை மாடு முட்ட வருகிறது என்பது எல்லாம் ஒரு தவறான நம்பிக்கை.

சேலையின் அசைவுகளைப் பார்த்து தான் மாடு மிரள்கிறது. சேலையினால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என நினைத்து தன்னைத் தற்காத்துக் கொள்ள மாடு முட்ட வருகிறது. அவ்வளவுதான். 



மனதில் பட்டதைச் சொல்கிறேன். மன்னிக்கவும். இந்தச் சேலைகளினால் ஆடு மாடுகளுக்குப் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. மனித இனத்தில் மட்டுமே இந்தச் சேலைப் பிரச்சனை. மனித இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்குத் தான் இந்த அடிதடி, வெட்டுக்குத்து என்று ஆயிரம் பிரச்சனைகள்.

மனிதனைவிட ஒரு சில பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் கண் பார்வை மிகத் தெளிவாக இருக்கும். மனிதக் கண்களுக்கு புலப்படாத Ultra Violet Rays எனும் புற ஊதா கதிர்களையும் அவற்றால் பார்க்க முடியும்.

நாய்கள், பூனைகள், எலிகள், முயல்கள் போன்ற பிராணிகளுக்கு கண் பார்வை மிகவும் குறைவு. நிறக் குருட்டுப் பிராணிகள். அவற்றுக்கு நீலம், மஞ்சள், சாம்பல் நிறங்கள் மட்டுமே தெரியும். அந்த நிறங்களை மட்டுமே கிரகிக்க முடியும்.

இதில் மனித இனத்திற்கு ஸ்பெஷல் அமைப்பு. அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, சிவப்பு மூன்று நிறங்களைக் கிரகிக்கும் தன்மை கொண்டவன். ஆகவே தான் மனிதனால் அனைத்து நிறங்களையும் பார்க்க முடிகிறது.


மனிதக் கண்களால் பத்து இலட்சம் நிறங்களைப் பார்க்க முடியும். சில வகை வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்றவை நூறு இலட்சம் நிறங்களைக்கூட பார்க்க முடியுமாம்.  
 

சிவப்பு நிறத் துணியை அல்லது சேலையை காளை மாட்டிற்கு முன் காட்டினால் அதற்கு அது கருமையாகவே தெரியும். அது கூட கடுமையான கறுப்பு நிறமாக தெரியாது. ஆக காளை மாடுகள் நீலம், பச்சை இரண்டு நிறங்களை மட்டுமே கிரகித்து உணரும் சக்தி கொண்டவை. சிவப்பு நிறத்திற்கு ‘சான்ஸே இல்லை’.

இனியும் யாராவது இந்த ’காளை மாடு சிவப்பு சேலை’ விவகாரத்தில் தர்க்க வாதம் செய்தால் மேலே சொன்ன அறிவியல் உண்மைகளைச் சொல்லுங்கள். அதையும் அவர்கள் நம்பாமல் எதிர்வாதம் செய்தால் கவலைப்பட வேண்டாம். 

அடுத்த பிறப்பில் ஒரு பூனையாக, ஓர் எலியாக, ஏன் ஒரு காளை மாடாக பிறப்பதற்கு இப்போதே டிக்கட் வாங்கி விட்டார்; எஞ்சிய காலத்திற்கு இங்கேயே ஒத்திகை நடத்துகிறார் என்று நினைத்துச் சமாதானம் அடையுங்கள்.

அந்த மாதிரியான மனிதர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். ஏன் என்றால் எங்கேயோ போகிற சிவப்பு சேலையைப் பார்த்து திசை மாறி உங்கள் மீதே பாய வரலாம். எதற்கும் கடையப்பாவின் டெலிபோன் நம்பரை ரெடியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!

12 நவம்பர் 2017

கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள்

ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதிகளில் ஸ்ரீ விஜய பேரரசின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள். 


இந்தக் கற்பாறைகள் காட்டின் பல இடங்களில் ஆங்காங்கே காணப் படுகின்றன. அனைத்தும் பெரும் பாறைகளில் செதுக்கப் பட்ட தாமரை வடிவங்களிலான கற்பாறைகள் ஆகும்.

ஸ்ரீ விஜய பேரரசு கி.பி. 650-ஆம் ஆண்டுகளில் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ பகுதியில் பிருமாண்டமான கோட்டைகளைக் கட்டி உள்ளது. பின்னர் கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் படையெடுத்து வந்து அந்தக் கோட்டைகளைச் சின்னா பின்னாமாக்கிவிட்டுச் சென்று விட்டான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜா ராஜா சோழனின் மகன் தான் இராஜேந்திர சோழன்.


ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன்

சுங்கை லிங்கியூ காடுகளில் சிதைந்து போன பாறைப் படிக்கட்டுகளும் பாறைக் கோபுரங்களும் பாறைப் படிவங்களும் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என்று நம்பப் படுகிறது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரசார்ந்த தேசிய மலர் தாமரை மலராகும். ஸ்ரீ விஜய பேரரசு அரசாட்சி செய்த இடங்களில் எல்லாம் இந்தத் தாமரைப் படிவங்களைக் காண முடியும்.


தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள்

சுங்கை லிங்க்யூ காட்டுப் பகுதியின் உட்புறங்களில் மட்டுமே இந்தத் தாமரைப் பூக்கள் வடிவத்திலான கற்பாறைகள் கண்டுபிடிக்கப் பட்டன. காட்டுப் பகுதியின் உட்புறங்களுக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

காட்டுப் பகுதிக்குள் செல்ல போலீஸார் அனுமதியும் ஜொகூர் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அனுமதியும் தேவை. அரச மலேசிய இராணுவப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.



2017 மே மாதம் 20-ஆம் தேதி ஓர் ஆய்வுக் குழுவினர் கோத்தா கெலாங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டனர். ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக், வரலாற்றுத் துறை இயக்குநர் ஹாஜி காம்டி காமில், தொல்பொருள் ஆய்வாளர் மஸ்லான் கெலிங், ஜொகூர் சுற்றுலாத் துறை இயக்குனர் ஆகியோருடன் மேலும் சில அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வுப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன். மிகத் துடிப்புடன் தன்னலமற்ற சேவைகள் செய்து வருகிறார்.

மேலும் வரலாற்று ஆய்வாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆலோசகராகச் சேவை செய்கிறார். மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு வரலாற்று வழிகாட்டியாகவும் விளங்குகிறார். வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அகழாய்வுப் பணிகளுக்குச் சேவையாளராகவும் விளங்குகிறார்.  



கோத்தா திங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் ஆய்வுகள் செய்ய மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன. இப்போது மழைக்காலம். அதனால் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

11 நவம்பர் 2017

ஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள்

இந்திய தேசிய இராணுவத்தில் பெண்களுக்கு ஜான்சி ராணி படை எனும் ஒரு தனிப் பிரிவை நேதாஜி தொடங்கினார். ஒரு முறை பர்மா இம்பால் எனும் இடத்தில் பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களின் கூடாரப் பகுதிக்குள் நேதாஜி போய் இருக்கிறார். இருள் நேரம். அப்போது கோவிந்தம்மாள் என்பவர் கடமையில் இருந்து இருக்கிறார்.



ஒரு மர்ம வண்டியில் ஆண்கள் சிலர் முகாமிற்குள் நுழைவதைப் பார்த்த கோவிந்தம்மாள் அந்த வண்டியைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார். வண்டியின் உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்து இருந்தார். அவரை அடையாளம் தெரியாமல் வேறு யாரோ என்று கோவிந்தம்மாள் நினைத்து விட்டார்.

மாறு வேடத்தில் வந்த நேதாஜியைப் பார்த்து விட்டு கதவைத் திறந்து உள்ளே விட மறுத்து விட்டார். நான் நேதாஜி என்று கூறிய பின்னரும் கோவிந்தம்மாள் அவரை உள்ளே விடவில்லை. பின்னர் மாறுவேடத்தைக் கலைத்து முகத்தைக் காட்டிய பின்னரே கோவிந்தம்மாள் அவரை உள்ளே செல்ல அனுமதித்து இருக்கிறார். 




அடுத்த நாள் காலையில் வீராங்கனைகள் எல்லாரையும் நேதாஜி அழைத்தார். அவர்களிடம் 'நேற்றிரவு முகாம் வாசலில் பாதுகாப்புக்கு நின்றது யார் என கேள்வி எழுப்பினார். நான்தான் என கோவிந்தம்மாள் கூறி இருக்கிறார்.

'ஏன் என்னை உள்ளே விடுவதற்கு அனுமதி மறுத்தீர்கள்’ என நேதாஜி மறு கேள்வி கேட்டு இருக்கிறார். நேதாஜியின் கண்களை நேருக்கு நேராக பார்த்த கோவிந்தம்மாள் 'இது போர்க் காலம். எதிரிகள் கூட மாறு வேடத்தில் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் தங்களை அனுமதிக்கவில்லை. தாங்கள் மாறுவேடத்தைக் கலைத்த பிறகு தான் உங்களை உள்ளே விட்டேன்' என பதில் கூறினார்.

கோவிந்தம்மாளின் பதிலால் திருப்தி அடைந்த நேதாஜி, கோவிந்தம்மாளின் முதுகில் தட்டிக் கொடுத்தார். அந்தப் பெண்ணின் திடமான கடமை உணர்வைக் கண்டு வியந்து போனார் நேதாஜி.

இப்படிப்பட்ட பெண்கள் தான் இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவை என்று புகழாரம் செய்தார். அதன் பின்னர் ஜான்சி ராணி படையின் உயரிய விருதான ‘லாண்ட்ஸ் நாயக்’ விருதை கோவிந்தம்மாளுக்கு வழங்கிப் பதவி உயர்வு செய்தார். அது ஜான்சி ராணி படையினருக்குப் பெருமை செய்த ஒரு வரலாற்றுச் சுவடு.




கோவிந்தம்மாள் 1927 பிப்ரவரி 22-ஆம் தேதி தமிழ் நாடு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் முனுசாமி செட்டியார். நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்.

கோவிந்தம்மாள் பிறந்த மூன்று மாதங்களில் தன் குடும்பத்தோடு அப்போதைய மலாயாவுக்கு வந்தார். அவருக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும். மலாயா அஞ்சல் துறையில் பணியாற்றினார். நகைத் தொழிலையும் இதர தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார்.

கோவிந்தம்மாள் மலாயாவில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ஆம் ஆண்டு அருணாச்சலம் செட்டியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அருணாச்சலம் செட்டியார் ஓர் எழுத்தர். ஓர் இரப்பர் தோட்டத்தில் பணி புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் நேதாஜி செய்த பிரச்சாரம் கோவிந்தம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து போனது.

இந்திய விடுதலைப் போரில் மலாயா இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் அதிகமானோர் சேர்ந்தார்கள். அதை அப்போதைய பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கிண்டலாகப் பேசி இருக்கிறார்.




மலாயா இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பால் உறிஞ்சும் பாமரத் தொழிலாளர்கள். அவர்களின் இரத்தம் தான் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து போய்க் கிடக்கிறது என்று சொன்னார்.

அதற்கு நேதாஜி அந்தத் தமிழர்கள் தான் நாளைய ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிக்கப் போகிறார்கள். அது தெரியாமல் ஒரு வெள்ளைச் சவர்க்காரக் கட்டி பேசுகிறது என்று பதிலடி கொடுத்தார்.

அந்த அளவிற்கு இந்திய தேசிய இராணுவப் படையில் மலாயா இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபாடு கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.

ஒருமுறை மலாக்கா பிராந்தாவில் (Melaka Perintah) நேதாஜி பிரசாரம் செய்தார். நேதாஜியின் வீர உரையைக் கோவிந்தம்மாள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படையின் நிதிக்காகத்  தன் ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். திருமணச் சீதனமாகக் கிடைத்த ஓர் ஏக்கர் இரப்பர் தோட்டத்தையும் 1500 வெள்ளிக்கு விற்று அப்படியே அந்தப் பணத்தைத் தானமாகவும் கொடுத்து இருக்கிறார். எப்பேர்ப்பட்ட வீர தான உணர்வுகள்.




குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறிய கோவிந்தம்மாள் இந்திய தேசிய இராணுவப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.1943-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தன்னுடைய 16-ஆவது வயதில் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தார்.

இந்தப் படை முதன்முதலில் 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் என்பவரால் அமைக்கப் பட்டது. அந்தப் படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். அந்த அணியில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்குப் பல வகையான துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இந்திய தேசிய இராணுவப் படையில் கோவிந்தம்மாளின் எண் 4800. அதுவே கோவிந்தம்மாளின் அடையாளம். அவரிடம் திறமை; கடுமையான உழைப்பு; மனவலிமை இருந்தன. அதன் காரணமாக 1000 பேர் கொண்ட ஒரு பெண்கள் அணிக்குத் தலைவராகத் தகுதி உயர்த்தப் பட்டார்.

ஜான்சி ராணி படையில் இருந்த திறமையான 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பர்மா அழைத்து செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு உயர் ரக ஆயுதங்களைக் கையாளும் சிறப்பு பயிற்சிகள் கோவிந்தம்மாளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் கோவிந்தம்மாளும் நவீன ரக ஆயுதங்களை ஏந்தி போர் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

போர்முனையில் பெண்களையும் ஆண்களுடன் இணைந்து போரிட வைக்க வேண்டுமென்பது, நேதாஜியின் நோக்கம். ஆண்களுடன் சேர்ந்து போர்முனைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே பர்மாவில் இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஜான்சிராணி படை இந்திய பர்மிய இம்பால் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஜான்சிராணி படையின் பெண்கள் கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்து எதிர்த் தாக்குதல் செய்ய வேண்டி வந்தது.




உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் சயாமிய இரயில் பாதை வழியாகத் தான் கொண்டு வரப்படும். அந்தப் பாதையும் தகர்க்கப்பட்டு விட்டது. பசியின் கொடுமையால் ஜான்சிராணி படையினர் காட்டில் கிடைத்த பழங்களைச் சாப்பிட்டனர்.

பழங்களின் நச்சுத் தன்மை காரணமாகப் பெரும்பாலோருக்கு வயிற்றுப் போக்கு; வாந்தி. இந்த நிலையில் பெண்கள் படை எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும் ஓர் ஆபத்தான நிலையும் ஏற்பட்டது. எந்த ஒரு பெண்ணும் எதிரிகளிடம் சிக்கிவிடக் கூடாது என்று நேதாஜி நினைத்தார்.

ஜான்சிராணி படையினரை மலாயாவுக்குத் திரும்பி வருமாறு நேதாஜி கட்டளை பிறப்பித்தார். இருப்பினும் படையின் தலைவி கேப்டன் இலட்சுமி சுவாமிநாதன் நேதாஜியின்  கட்டளையை ஏற்க மறுத்து விட்டார். அதற்கும் காரணம் இருந்தது. நேதாஜியின் கட்டளை மீறப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

பெண்கள் பலர் பசி பட்டினியால் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தனர். இரயில் சேவையும் இல்லை. கடல் வழியாகவும் மலாயாவுக்குத் திரும்பிப் போக முடியாது. ஆங்கிலேயர்கள் வான்வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தனர்.

காட்டு வழியாகத் தான் திரும்பி வர வேண்டும். அதுவும் இயலாத காரியம். கரடு முரடான காட்டுப் பாதை. காட்டு விலங்குகள் கடந்து போகும் காட்டுப் பாதை. அதனால் தான் நேதாஜியின் வேண்டுகோளைக் கேப்டன் லட்சுமி மறுத்தார்.

மருத்துவமனை என்பதைக் குறிக்க பொதுவாக அதன் கூரையில் செஞ்சிலுவைச் சங்க அடையாளம் குறிக்கப்பட்டு இருக்கும். எதிரி விமானங்கள் அதன் மீது குண்டுகளைப் போட மாட்டார்கள். அது நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு போர்க் கால சாசனம். ஓர் இரவு அந்த மருத்துவமனையின் மீது வானில் இருந்து ஆங்கிலேயர்கள் குண்டுகளை வீசினார்கள்.

மருத்துவமனை தரைமட்டமானது. அங்கே சிகிச்சை பெற்று வந்த இந்திய தேசிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார். அவர் ஏற்கனவே துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அங்கே தான் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆங்கிலேயக் கொரில்லப் படையின் குண்டு வீச்சுகளால் மேலும் பெண்கள் சிலர் கொல்லப் பட்டனர். அந்தச் சண்டையில் கோவிந்தம்மாள் தப்பித்துக் கொண்டார். ஆனால் அவரின் உயிர்த் தோழிகளான ஸ்டெல்லா என்பவரும் ஜாஸ்மின் என்பவரும் கொல்லப் பட்டார்கள். கோவிந்தம்மாள் இறக்கும் வரையில் அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லி வந்தார்.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் தேதி ஜான்சி ராணிப் படை கலைக்கப் பட்டது. 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வரை கோவிந்தம்மாள் ஜான்சி ராணிப் படையில் சேவை செய்தார். பின்னர் 1949-ஆம் ஆண்டில் தன் கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் கோவிந்தம்மா தமிழகம் வந்தார்.

இந்திய மத்திய அரசின் தியாகி பட்டம் பெற்றார். ஆனால் மத்திய அரசு ஓய்வு ஊதியம் தர மறுத்து விட்டது. இருந்தாலும் மத்திய அரசிற்குப் பதிலாக 1970-ஆம் ஆண்டு தமிழக அரசு கோவிந்தம்மாளுக்குத் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கியது. பல முறை மனு செய்தும் மத்திய அரசின் மருத்துவ உதவி, இலவச வீட்டுமனை போன்ற உதவிகள் கோவிந்தம்மாளுக்குக் கிடைக்கவில்லை.

1960-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சாலை விபத்தில் கோவிந்தம்மாளின் கணவர் இறந்து போனார். அவரின் கணவர் ஒரு லாரி டிரைவர் ஆகும். வேறு வழி இல்லாமல் கோவிந்தம்மாள் கூலி வேலைகள் செய்தார். தன் 4 மகள்கள் 2 மகன்களையும் படிக்க வைத்தார். பின்னர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது; மாவு மில்லில் கூலி வேலை செய்வது என பல்வேறு பணிகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்.




வறுமையில் வாடிய கோவிந்தம்மாள் முதுமையின் காரணமாக 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 89.

நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர் தியாகி கோவிந்தம்மாள். கடைசி காலத்தில் தமிழக அரசு தனக்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடைசி வரை அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவே இல்லை என்பது ஒரு வரலாற்றுச் சோகம்.

தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இந்திய நாட்டின் தேசிய விடுதலைக்காக அர்ப்பணித்த கோவிந்தம்மாள் கடைசி வரையில் சொந்த வீடு இல்லாமலேயே வாழ்ந்தார். மரணிக்கும் தருவாயில் ஆறடி நிலம் கூட இல்லாமல் தான் மறைந்து போனார்!

இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்த தியாக சீலர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

அப்படி தியாகம் செய்தவர்களில் பலர் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவிந்தம்மாள்.