23 நவம்பர் 2019

மலேசியாவில் பிரபலமற்ற அமைச்சர்

தமிழ் மலர் - 23.11.2019

மலேசியாவில் தற்போது இருக்கும் அமைச்சர்களில் யார் பிரபலமானவர்கள், யார் பிரபலமற்றவர்கள் என்று மலேசியன் இன்சைட் இணையத் தளச்செய்தி நிறுவனம் வாக்கெடுப்பு மேற்கொண்டது. அதில் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் பிரபலம் அற்றவர் என்ற முடிவு கிடைத்து உள்ளது.


அண்மையில் பிரதமர் துன் மகாதீர் தம்முடைய பெர்சத்து கட்சி உச்சமன்ற உறுப்பினர் கூட்டத்தை நடத்தி முடித்த பிறகு அனைத்துத் தரப்பினரும் தமக்கு அமைச்சரவை மாற்றத்தைக் கொண்டு வருமாறு நெருக்குதல் கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

இருந்த போதிலும் எந்தெந்த அமைச்சருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தாம் அமைச்சரவை மாற்றம் குறித்து சிந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் தி மலேசியன் இன்சைட் நிறுவனம் இந்த இணையத்தள வாக்கெடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இதில் பிரபலமற்ற முதல் 10 அமைச்சர்கள் பட்டியல்:

முதலிடத்தில் மஸ்லி மாலிக்

இரண்டாவது இடத்தில் வேதமூர்த்தி,

மூன்றாவது இடத்தில் சைட் சாடிக்,

நான்காவது இடத்தில் டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா,

ஐந்தாவது இடத்தில் எம்.குலசேகரன்,

ஆறாவது இடத்தில் அஸ்மின் அலி,

ஏழாவது இடத்தில் லிம் குவான் எங்,

எட்டாவது இடத்தில் துன் மகாதீர்,

ஒன்பதாவது இடத்தில் டாக்டர் வான் அஸிஸா,

பத்தாவது இடத்தில் டாக்டர் ஸுல்கிப்ளி அமாட்

இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

உண்மைகளைச் சுட்டு எரிக்கும் சுடும் உண்மைகள்

தமிழ் மலர் - 23.11.2019

சிலாங்கூர் மாநிலத்தில் அனைவரின் பார்வையையும் ஈர்க்கும் பள்ளி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் சிறப்பாகக் காணப் படுகின்றன.

அதற்கு மூலகாரணமாகப் பல நல்லுள்ளங்களும் நன்கொடையாளர்களும் விளங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பள்ளியின் வாரியத் தலைவரும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமாகிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன்.



அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி கட்டடத்தில் பள்ளியின் பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு மேல் ’ஓம்ஸ் ப. தியாகராஜன் அறிவகம்’ என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைத் தத்தெடுத்து இன்று அந்தப் பள்ளியின் பல்வேறு உருமாற்றங்களுக்கு வித்திட்டவர் இவர் என்றால் அது மிகையாது.

ஆனால் நேற்று ஒரு தமிழ் நாளேட்டில் அதன் ஆசிரியர் எழுதிய ’சுடும் உண்மைகள்’ பகுதியில் தமிழ்ப் பள்ளிகளின் மேன்மைகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. 



அதில் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று இருந்தது. அந்தப் புகைப்படத்தில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி கட்டடத்தில் பொறிக்கப்பட்டு இருந்த ’ஓம்ஸ் ப. தியாகராஜன் அறிவகம் என்ற பெயர் மறைக்கப்பட்டு இருந்தது.

ஒரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஒருவர் பிரதிபலன் பாராது வித்தாக இருந்து உள்ளார் என்றால் அதை இந்திய சமுதாயம் மட்டுமின்றி தமிழ் ஊடகங்களும் கட்டாயம் வரவேற்க வேண்டும்.

இனியாவது இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு உண்மையை உண்மையாய் எழுதச் சுடும் உண்மைகளின் உண்மை ஆசிரியர் துணிய வேண்டும். 
























–மோகனதாஸ்
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்





மித்ரா நிதியை முழுமையாகப் பயன்படுத்தியது

தமிழ் மலர் - 23.11.2019

2019-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ்  தமது தலைமையிலான மலேசிய இந்திய உருமாற்று பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார்.



9 கோடியே 93 லட்சம் வெள்ளி  சம்பந்தப்பட்ட 205 சமூக மேம்பாட்டு திட்டங்கள் அங்கீகரிக்கப் பட்டதாகப் பிரதமர் துறையின்  ஒற்றுமை, சமூக நலனுக்குப் பொறுப்பு வகிக்கும் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில்  கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வெ.10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் 9 கோடியே 93 லட்சம் வெள்ளிக்கான நடவடிக்கை திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் வேதமூர்த்தி கூறினார்.

இதர அரசாங்க நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரால் ஐந்து கட்ட மதிப்பீட்டு செயல் திட்டத்தின் மூலம் 205 சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான செலுத்தப்படும் தொகையை இது உள்ளடக்கி உள்ளது.

இதுவரை கல்வி, பயிற்சி, பொருளாதாரம், வேலை திட்டம்,  சமூக நலன் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், சமூக அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இவை அமைந்துள்ளன. மித்ரா உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப அனைத்து திட்டங்களும் குறைந்த வருமானம் பெறும்  பி-40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட நபருக்கு உதவும் இலக்கைக் கொண்டு உள்ளது.

இவ்வாண்டு மித்ராவுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளதோடு அனைத்து திட்டங்களுக்கான ஆவணங்களும் தொகையைச் செலுத்துவதற்குப் பொறுப்பான தரப்பினருக்குச் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

எழில் கொஞ்சும் கேமரன் மலை - 3

தமிழ் மலர் - 23.11.2019

வில்லியம் கேமரன் என்பவர் கேமரன் மலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது இறைவன் எழுதி வைத்த சாசனம். உன்னை விட்டால் யாரும் இல்லை என்று இறைவன் அனுப்பி வைத்த ஒரு கலா விருச்சகம்.



ஆங்கிலேயர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது கேமரன் மலை என்பது அவர்களுக்கு ஒரு சொர்க்கபுரி. மலாயாவின் வெப்பத்திற்கும் வெப்பக் காற்றுக்கும் ஒரு குளிர் நிவாரணியாக விளங்கியது.

ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் ஆங்கிலேயர்கள் கேமரன் மலைக்கு ஓடிச் செல்வது ஒரு வழக்கமாகிப் போனது. திரும்பி வர மனசு இல்லாமல் சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.

ஆங்கிலேயர்கள் பலர் இங்கிலாந்து ரக பங்களாக்களையும்; ஸ்காட்டிஷ் ரக மாளிகைகளையும் கட்டினார்கள். அவை இன்றும் கேமரன் மலையில் ஒய்யாரமாய்க் காட்சி தருகின்றன. பார்க்கும் போதே அழகின் அவதாரங்களாய்த் தனித்து நின்று தத்துவம் பேசுவதையும் காண முடிகின்றது.




ரோஜா செடிகளை வளர்ப்பது. ஸ்ட்ராபெரி பழச் செடிகளை வளர்ப்பது. கேமரன் மலை போ தேநீர் குடிப்பது. அப்படியே ஒன்று கூடுதல். இப்படித் தான் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முன்பு காலத்தில் ஓடிக் கொண்டு இருந்து இருக்கிறது.

இடையில் 1960-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் அல்லி தர்பார். அதனால் தானா ராத்தாவில் ஒரு பெரிய பிரிட்டிஷ் இராணுவப் படையே முகாம் போட்டு இருந்தது.

அங்கே அப்போது ஓர் இராணுவ மருத்துவமனையும் இருந்தது. இப்போது இல்லை. கத்தோலிக்கப் பள்ளியாக மாற்றம் கண்டது. செயல் படுகிறதா என்று தெரியவில்லை.

அந்த வகையில் கேமரன் மலை ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த மதிப்பில்லா சீதனம். 



மலேசியாவில் மேலும் சில மலைசார் ஓய்வுத் தளங்கள் உள்ளன. ஆனாலும் கேமரன் மலைக்கு ஈடு இணையாகக் கோலோச்ச முடியாது என்பதே என் கருத்து.

முன்பு எல்லாம் கேமரன் மலையைத் தமிழர்கள் பசுமலை என்று பாசமாகச் சொல்லுவார்கள். ஆனால் அண்மையில், அந்நியர்களின் படை எடுப்பினால் அந்தப் பாசம் குறைந்து விட்டது. சரி. கேமரன் மலைத் தேயிலைத் தோட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

கேமரன் மலையில் தேயிலைத் தோட்டங்கள் உருவான கதை. கேமரன் மலையின்  தொடக்கக் காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எங்கு இருந்து கொண்டு வரப் பட்டார்கள் எனும் தகவல்கள் குறைவாகவே உள்ளன.

இருப்பினும் கேமரன் மலையைச் சேர்ந்த குமாரவேல் முத்து என்பவர் சில தகவல்களைக் கூறுகிறார்.

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலையில் கவிதை வேள் கா.பெருமாள் எனும் கவிஞர் இருந்தார். அவர் போ தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வியலை வானொலி வழியாக அடிக்கடிச் சொல்லி வந்தார். சங்கமணி வார இதழிலும் எழுதி வந்தார். 



1920 முதல் 1950-ஆம் ஆண்டு வரை தமிழ் நாடு நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்கள் கேமரன் மலைக்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

வெள்ளைக்கார முதலாளிகள் தமிழ் பேசும் தரகர்களைத் தேடிப் பிடித்தார்கள். அவர்கள் மூலமாகத் தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். தமிழகத்துத் தமிழர்களின் அயரா உழைப்பினால் போ தோட்டம்; மற்றும் ஏழு எட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன.

இப்போது மூன்று பெரிய தோட்டங்கள் மட்டுமே உள்ளன. சின்னச் சின்னத் தோட்டங்கள் உள்ளன. இவை சீனர்களும் தமிழர்களும் உருவாக்கியத் தோட்டங்கள்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வேலை செய்தனர். ஆனால் இப்போது பாருங்கள். ஒரு பத்து பதினைந்து தமிழ் குடும்பங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.

இன்று கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், பூந்தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்திலும் வங்களாதேசிகள், நேப்பாளிகள், இந்தோனேசியர்கள், மியன்மாரிகள், இந்தியர்கள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள் வேலை செய்கின்றனர்.



அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அத்துடன் அந்நியர்கள் நிலத்தை வாடகைக்கு எடுத்து சொந்த விவசாயமும் செய்கிறார்கள். பலர் மினி மார்க்கெட், முடி திருத்தகம், உணவகம், தங்கும் விடுதி போன்ற பல் வகை வர்த்தகங்களிலும் ஈடுபடுகிறார்கள். கணிசமான வருமானத்தை ஈட்டி வசதியுடன் வாழ்கிறார்கள்.

மலேசியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத வேலை வர்த்தக வாய்ப்புக்கள் கேமரன் மலையில் கொட்டிக் கிடக்கின்றன!

கேமரன் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளை அந்நிய நாட்டவர்கள் பயன்படுத்தத் தெரிந்து கொண்டு உள்ளனர். நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் மலேசிய இந்தியர்கள் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அக்கறை காட்டுவது இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனை என்று குமாரவேல் முத்து ஆதங்கம் கொள்கிறார்.

ஒன்று மட்டும் உண்மை. கேமரன் மலையில் வாழும் மலேசிய இந்தியர்கள் உழைப்பதில் எறும்புகள். சேமிப்பதில் கரும்புகள். அவர்களுக்கு அந்த மலையில் தனி ஒரு  சிறப்பான இடம் உண்டு.

விவசாயம், கடை வர்த்தகம், தங்கும் விடுதி, சொத்து முதலீடு, மற்றும் பிள்ளைகளின் உயர்க் கல்வி போன்ற எல்லாவற்றிலும் சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை இந்தியர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 



உழைக்கப் பிறந்து உழைப்பால் வாழ்ந்து காட்டிய இனம் தமிழர் இனம். அந்த இனம் கேமரன் மலையில் உச்சம் பார்க்கிறது. மகிழ்ச்சி அளிக்கின்றது. வாழ்த்துவோம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. என்னதான் கேமரன் மலையின் காடுகளைச் சன்னம் சன்னமாய் அழித்துக் கொண்டு வந்தாலும், அந்த மலையில் இன்னும் 71 விழுக்காடு காடுகள் பத்திரமாக உள்ளன. பகாங் வனவிலாகாவின் புள்ளி விவரங்கள் பேசுகின்றன.

விவசாயம் வர்த்தகம் என்று சொல்லி அந்தக் காடுகளை மேலும் அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மலேசியர்களின் கடமை ஆகும்.

போ தோட்டம் என்பது மலேசியாவிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டம். தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரியது என்று தாராளமாகச் சொல்லலாம். 1929-ஆம் ஆண்டு ஜான் அர்ச்பால்ட் ரசல் (John Archibald Russell) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட தோட்டம். இன்னும் சரியாகச் சொன்னால் 23 ஏப்ரல் 1929-ஆம் தேதி உருவானது.

ஜான் ரசல் இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு ஏழு வயதிலேயே வந்தவர். 1890-ஆம் ஆண்டிலேயே மலாயாவுக்கு வந்து விட்டார். வருசத்தைப் பாருங்கள். கோலாலம்பூரில் பற்பல வேலைகள் செய்தவர்.

அவருடைய 44-ஆவது வயதில் ரப்பர், நிலக்கரி (பத்து ஆராங்), கட்டுமானம் (ரவாங்), செங்கல் தயாரிப்பு (பிரிக்பீல்ட்ஸ்) போன்ற வணிகத் துறைகளில் ஈடுபட்டார். 1927-ஆம் ஆண்டு உலகளாவிய நிலையில் பொருளாதார மந்த நிலை. அதனால் தேயிலை பயிரிடும் தொழில் ஈடுபட்டார்.



கேமரன் மலையில் அவருக்கு 4000 ஏக்கர் நிலத்தை ஆங்கிலேய மலாயா அரசாங்கம் வாடகைக்கு கொடுத்தது. இவருக்கு இலங்கை தேயிலைத் துறை முன்னோடி ஏ.பி.மிலின் (A.B. Milne) உதவியாக இருந்தார்.

ஒரே ஒரு நீராவி உருளை இயந்திரம். சில தொழிலாளர்கள். சுமை தூக்க சில கோவேறு கழுதைகள். இவர்களை வைத்துக் கொண்டு 5000 அடி உயரத்தில் இருந்த காடுகளைப் பொன் விளையும் தேயிலைப் பூமியாக மாற்றிக் காட்டினார்கள். அதற்கு போ தோட்டம் என்று பெயர் வைத்தார்கள்.

தமிழ் நாடு நாமக்கல் வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொண்டு வரப் பட்டார்கள். கேமரன் மலையில் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.

மலேசியாவில் அதுதான் முதல் தேயிலைத் தோட்டம். 1929-ஆம் ஆண்டு உருவானத் தோட்டம்.

1932-ஆம் ஆண்டு ஜான் ரசலுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் திரிஸ்டன் ரசல் (Tristan Beauchamp Russell). மகன் பிறந்த மறு ஆண்டு மூத்தவர் தந்தையார் ஜான் ரசல் காலமானார். அப்போது அவருக்கு வயது 50.



மகன் திரிஸ்டன் ரசல் 1969-ஆம் ஆண்டு போ தோட்டத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். அன்றில் இருந்து அவர் தான் போ தோட்டங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றி வருகிறார்.

போ தோட்டம் ஓர் ஆண்டிற்கு நான்கு மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. அதாவது ஒரு நாளைக்கு ஆறு மில்லியன் தேநீர் கப் அளவிற்கு தேயிலை உற்பத்தி.

மீண்டும் சொல்கிறேன். ஒரு நாளைக்கு ஆறு மில்லியன் தேநீர் கப் அளவிற்கு தேயிலை உற்பத்தி. பிருமாண்டமான உற்பத்தி. மலேசியாவில் 50 விழுக்காட்டினர் கேமரன் மலையின் போ தேயிலையைப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நம் தமிழர்களின் பங்கு தான் முதன்மை வகித்தது. இப்போது அந்த இடத்தை வங்காளதேசிகள் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

உண்மையிலேயே கேமரன் மலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை இங்கிலாந்து மக்களுக்காகத் தான் முதலில் உற்பத்திச் செய்யப் பட்டது. மலாயாவிலும் விற்பனை செய்யலாமே என்று ஒரு திட்டம் உருவானது. ஆக மலாயா வாழ் மக்களுக்காக டைகர் டீ (Tiger Tea) என்றும் போ டீ (Boh Tea) என்றும் இரு வகை தேயிலைகள் விற்பனைக்கு வந்தன.

2016-ஆம் ஆண்டில் போ நிறுவனத்திற்கு நான்கு தோட்டங்கள். 1. ஹாபூ தோட்டம் (Habu). இது தான் தலைச்சன் பிள்ளை. 2. பெர்லி தேயிலை தோட்டம் (Fairlie Tea Garden). 3. சுங்கை பாலாஸ் தோட்டம் (Sungai Palas Tea Garden). 4. புக்கிட் சீடிம் தோட்டம் (Bukit Cheeding, Selangor). 



உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் காடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் விரட்டி அடித்துத் துரத்தி விட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த சிறுத்தைப் புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து விட்டார்கள். துள்ளி விளையாடிய புள்ளிமான்கள், சருகுமான்களை எல்லாம் ‘அட்ரஸ்’ இல்லாமல், அவற்றின் முகவரிகளைக் கிழித்து எறிந்து விட்டார்கள். அடுத்து மனிதர்கள்தான் பாக்கி. அவர்களையும் அந்நியர்கள் புரோட்டா ரொட்டி போட்டு விடலாம். சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் கேமரன்மலை போய்க் கொண்டு இருக்கிறது. மன்னிக்கவும்.

கேமரன் மலை இந்தியர்கள் ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாகச் செய்தும் வருகிறார்கள். பாராட்டுவோம்.

பகாங் மாநில அரசும் இயற்கைப் பாதுகாப்புகளுக்காக நிறைய மானியங்களை ஒதுக்கி இருக்கிறது. வெள்ளம் வந்து கேமரன்மலை வீட்டு வாசல் கதவுகளைத் தட்டிய பிறகு இனிமேல் காடுகளை அழிக்கக் கூடாது என்று தடாலடியான சட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறது. பாராட்டுகள்!

இயற்கையைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்று ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ இயக்கத்தின் முன்னோடியான சிம்மாதிரி கூறுகிறார்.



கேமரன்மலையைப் பாதுகாக்கச் சொல்லி இவரும் பத்திரிகைகளுக்கு நிறைய செய்திகளை அனுப்பி வருகின்றார். விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிம்மாதிரி, குமாரவேல் முத்து, அம்மச்சியப்பன், வேலு போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அடுத்து… சர் வில்லியம் கேமரன் கண்டுபிடித்த அந்த மலைக்கு கேமரன் மலை என்று அவருடைய பெயரையே வைப்பார்கள் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

அதே சமயத்தில் தான் கண்டுபிடித்தக் காடுகள் இந்த மாதிரி அழிக்கப்படும். அந்தக் காடுகளில் திடீர் வெள்ளம் வரும். தமிழர்கள் வருவார்கள். பக்கம் பக்கமாய் எழுதுவார்கள் என்று சர் வில்லியம் கேமரனும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். பாவம் சர் வில்லியம் கேமரன். இருந்தாலும் அவர் நினைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நல் உள்ளங்களுக்கு மறுபடியும் நன்றிகள்.



யானை மீது ஏறிப் போய் கஷ்டப்பட்டு கேமரன் மலையைக் கண்டுபிடித்த வில்லியம் கேமரனை நினைத்துப் பார்க்கையில் ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

கேமரன்மலை காலா காலத்திற்கும் போற்றிப் புகழ வேண்டிய ஓர் அட்சய பாத்திரம். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் வாரி இறைத்த ஒரு செங்கமலச் சாத்திரம். அந்த வகையில் கேமரன்மலை மீண்டும் புதுப் பொலிவுடன் பார் புகழச் சிகரம் பார்க்க வேண்டும். கேமரன்மலைத் தமிழர்கள் மேலும் சிறப்பாக விளங்க வேண்டும் வான்புகழ் உச்சம் பெற வேண்டும். வணிகச் சாதனைகள் செய்ய வேண்டும். வாழ்த்துகிறோம்.

(முற்றும்)

22 நவம்பர் 2019

மலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம்

UPSR தேர்விலும் சரி; SRP தேர்விலும் சரி; SPM தேர்விலும் சரி; STPM தேர்விலும் சரி; A வாங்கிய மாணவர்களை மட்டும் தூக்கி வைத்து ஆலாபனை செய்யும் கலாசாரத்தில் ஒரு மாற்றுப் பார்வை தேவை. ஒரு சில புள்ளிகளில் A கிடைக்காமல் B கிடைத்து இருக்கலாம். C கிடைத்து இருக்கலாம். D அல்லது E கிடைத்து இருக்கலாம்.


ஒரு சில புள்ளிகளில் A கிடைக்காமல் போன மாணவர்களின் மனசு என்ன பாடுபடும். அதை நாம் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். A வாங்கிய மாணவர்களை மட்டும் தூக்கி வைத்து ஆராதனை செய்யும் போது, மற்ற B, C, D, E வாங்கிய மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும். அதையும் நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

குறைவான புள்ளிகள் எடுத்த மாணவர்களின் மனநிலை, அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். எதிர்காலத்தில் கல்வியின் மீது ஒரு வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தி விடலாம்.

இருப்பினும் A வாங்கிய மாணவர்களுக்குக் கிடைத்த புகழாரத்தினால் B C D வாங்கிய மாணவர்களுக்கு ஓர் உந்துதல் கிடைக்கலாம் என்று சிலர் சமாதானம் சொல்லலாம்.

உண்மையிலேயே சின்னஞ் சிறிய மனங்கள் ரொம்பவுமே வேதனைப்படும் என்பது பலருக்கும் தெரிவது இல்லை. உணர்வதும் இல்லை. பற்றாக்குறைக்குப் பெற்றோர்களின் வசை பாடல்கள். உற்றார் உறவினரின் கேலிக் கிண்டல்கள்.

ஆகவே A கிடைத்த மாணவர்களை ஆலாபனை செய்வோம். அதே வேளையில் மற்ற மற்ற மாணவர்களையும் தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுப்போம்.

A கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. ’அடுத்த முறை கூடுதலாக முயற்சி செய் வெற்றி பெறுவாய்’ என்று ஆறுதல் சொல்ல வேண்டும். அரவணைக்க வேண்டும். அன்பாக ஈர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் A கிடைக்காத மாணவர்களுக்கு நாம் வழங்கும் அபூர்வ லேகியம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
21.11.2019



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Saravana Gugen: சமுதாயத்தில் பேச மறந்த விசயம் ஐயா... எல்லா மாணவர்களும் கல்வியால் உயர்வது இல்லை. சிலர் தனித் திறனில் சிறந்து விளங்குவர். அத்தகைய மாணவர்களுக்குப் பள்ளிக்கூடமும் ஒரு அனுபவசாலையே தவிர, பாடசாலை அல்ல.


Muthukrishnan Ipoh: நீங்கள் சொல்வதும் சரி...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: வாழ்க்கையில் அதிகமானோரின் உயர்வுக்கு கல்வி தான் அடிப்படையாக இருக்கிறது... உடன் பட்டறிவும் இணைகிறது.


Periasamy Ramasamy: சிறந்த அடைவு நிலை பெற்ற மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை பாராட்டுகிறேன், சிறந்த அடைவு நிலை விகிதாச்சாரத்தில் நமது பள்ளிகள் அதிகப் புள்ளிகள் பெற்றது பற்றியும் மகிழ்ச்சியே.

ஆயினும், இன்றைய யு.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. ஆகவே இந்த விகிதாச்சார புள்ளியைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து..

அடுத்தடுத்த சவால்களாக எதிர்கொள்ள வேண்டிய இடைநிலை, உயர்நிலை பள்ளித தேர்வுகளில் நமது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுகிறதே என்பதுதான் பெரும் உறுத்தல்.


Saravana Gugen >>> Periasamy Ramasamy: இதில் நம் மாணவர்கள் பெற்றோர்களின் மெத்தன போக்கு ஒருபுறம் இருக்க, இனவாத கல்விமுறையும் மறுக்க முடியாத நிதர்சனம்.


Muthukrishnan Ipoh: உண்மை... தேர்வு எழுதிய நம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு... அதனால் விகிதாசாரம் உயர்ந்து இருக்கிறது...


Muthukrishnan Ipoh: பெற்றோர்களின் மெத்தன போக்கு இருக்கவே செய்கிறது....


Periasamy Ramasamy >>> Saravana Gugen: 60 ஆண்டுகளாக இருந்த ஆட்சி முறையில், கல்விக் கொள்கையில், வணிபத் துறையில், அரசு பணி வாய்ப்புகளில் இப்படி எல்லாத் துறைகளிலும் இனவாதம் என்றோ துளிர் விட தொடங்கி விட்டது. தற்போது விஸ்வரூபம் பெற்று வருகிறது.


Saravana Gugen >>> Periasamy Ramasamy: ஆளுங்கட்சியே இந்த இனவாதத்தை நீரூற்றி வளர்க்கிறது. நாமும் வெளிப்படையாகவே இனவாதிகளுக்குச் சவால் விடலாம்.


Periasamy Ramasamy: உண்மைதான் ஐயா. தமிழ் மாணவர்களின் UPSR அடைவுநிலை கண்டு மகிழ்ச்சி. இந்தத் தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியைத் தொடர வேண்டும். இடைநிலை, உயர்நிலை பள்ளித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும். இன்று UPSR தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் பின் நாளில் உயர்க்கல்வி பயிலும் வாய்ப்பைத் தரும் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதே என் அவா.


Muthukrishnan Ipoh: /// இடைநிலை, உயர்நிலை பள்ளி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும் /// இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.


Sathya Raman: தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்கள் பிள்ளைகளைச் சோ்ப்பதன் மூலமே நாம் முழுமையாக வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியை ஏற்க முடியும்.


Muthukrishnan Ipoh: மலேசியத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பதை ஓர் இனக் கடமையாகக் கருத வேண்டும்.


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வணக்கம் சார். அதுதான் பலரின் எதிர்பார்ப்பும்கூட. நம் பக்கம் பலமாக,உறுதியான நிலைகள் இருக்குமானால் நாக்கு மேல் பல்லைப் போட்டு நம் தமிழ் மொழியையும், தமிழ்பள்ளிகளையும் இழித்துப் பேசி இடர்களை ஏற்படுத்தும் எத்தர்களுக்கும் நாம் சரியான பாடம் புகட்ட முடியும். அதற்கு நம் தமிழ் பள்ளிகளை நம்மவர்கள் முழுமையாக ஆதரித்து, அரவணைக்க முன் வரவேண்டும்.


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: உண்மைதான் சகோதரி.... நல்லவேளை... ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போகும் போது ஒரு கல்விச் சட்டத்தை விட்டுச் சென்றார்கள். 152-ஆவது சட்டம். தாய்மொழிப் பள்ளிகளைத் தொல்லை செய்ய வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்று இருக்கிறார்கள்... அந்தச் சட்டம் தான் நமக்கு ஒரு தற்காப்பு அரணாக இருக்கிறது...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: அந்த சட்டத்தையும் எப்படி எல்லாம் தகர்க்கலாம் என்று சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஆராய்வார்கள் சார் . இன்றைய சூழலில் எதுவும் சாத்தியமே. எதுவாயினும் அன்று ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்விச் சட்டமே இன்று வரை தாய்மொழிப் பள்ளிகளைப் பாதுகாத்து, பத்திரமாக நம் வசம் வைத்திருக்க, வாய்ப்பாக அமைந்ததற்கு அவர்களுக்கு நாம் நன்றிகடன் பட்டிருக்கிறோம் சார். அந்தச் சட்டம் மட்டும் இல்லை என்றால்????


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: சட்டத்தில் சில சறுக்கலகள் இருக்கின்றன.... ரசாக் திட்டத்தில்... பரிந்துரை எனும் பேரில் ஒரு ’செக் பாயிண்ட்’ இருக்கிறது. பலருக்குத் தெரியும். ஆனால் அமைதியாக இருக்கிறார்கள். தாய்மொழிப் பள்ளிகளைத் தேசிய பள்ளிகளாக மாற்ற கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நாடாளுமன்றம்... சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்... போகிற போக்கைப் பார்த்தால்... செய்தாலும் செய்வார்கள் போல அச்சமாக இருக்கிறது....


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வெறுமனே வாய்சவடாலில் தாய்மொழி பள்ளிகளை மூடவும், ஒழிக்கவும் பேசியவர்கள் சட்டத்தின் உதவியை நாடி தோற்றுப் போன ஆத்திரம் ஆக்ரோஷமாக மாறக்கூடும். அவர்களும் ஓயாமல் அடுத்தடுத்து காய்களை நகர்த்தவும் சாத்தியமே அதிகம் சார்.. சீனர் சகோதரர்கள் போல் நம்மிடம் ஒற்றுமையும் குறைவே சார்????


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: தங்களைப் போன்று இன மொழிப் பற்று உள்ளவர்கள் இருக்கும் வரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி நிலைத்து வீர வசனம் பேசும்... நன்றிங்க...


M R Tanasegaran Rengasamy:
சிறந்த தேர்ச்சி பெற்ற பிள்ளைகளைப் போற்றும் வேளையில், சற்று மிதமான தேர்வைப் பெற்ற மாணவர்களை அலட்சியப் படுத்திவிடலாகாது. அவர்கள் பால் அதிக அக்கறை காட்டுவது அவசியம். அத்தகைய மாணவர்களும் பிரகாசிப்பார்கள். பின் தங்கியவர்களாக அவர்களைப் புறக்கணித்து விடலாகாது. தூண்டாமணி விளக்கிற்கும் தூண்டுகோள் தேவை.


Muthukrishnan Ipoh: வெற்றி பெற்ற மாணவர்களைச் சிகரத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடடுவதும்... பி, சி, டி, தகுதிகள் பெற்ற மாணவர்களைக் கண்டும் காணாமல் போகும் போக்கைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய கருத்தில் தூண்டாமணி விளக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு... நன்றிங்க தனா...


Sathya Raman: வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி பெற்ற மனிதரெல்லாம் வெற்றி காணபதில்லை என்ற சந்திரபாபு அப்போதே தத்துவமாக சாத்வீகமாக பாடி இருக்கிறார். நம் தமிழர்களுக்கு இந்த "ஏ" வில் அப்படி என்ன மோகமோ, பாசமோ தெரியவில்லை. இவ்வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூற விரும்பகிறேன்.

ஒரு அரசாங்க மருத்துவ மனைக்கு உடல் நலக் குறைவு காரணமாக சென்று மருத்துவர் அறைக்கு முன்பு அமர்ந்திருந்தேன். அந்தச் சமயம் மருத்துவர் படிப்பை முடித்து முறையாக அரசாங்க மருத்துவமனையில் "ஹவுஸ்மன்"எனப்படும் 2 வருட பயிற்சியை மேற்கொண்டு இருந்த மருத்துவ மாணவர்கள் பலர் இரண்டு இரண்டு பேராக அங்கே பணியில் அமர்ந்திருக்கும் மருத்துவர் அறைக்குள் உள்ளே சென்று விட்ட நிலையில் ஓரே ஓர் இந்திய மருத்துவ மாணவி மட்டும் பயந்து கொண்டே கையை பிசைந்து கொண்டும், தயங்கிக் கொண்டும் மருத்துவர் அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றிருந்தார்.

அவர் கண்களில் தெரிந்த கலக்கம், கால்களில் தெரிந்த உதறல் ஏற்கனவே ஐந்தாண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் அந்தப்பெண் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருப்பதாகவே தோன்றியது. நானும் மருத்துவரை கண்டுவிட்டு வந்த பிறகும் அவர் ஓரே இடத்தில் எந்நேரத்திலும் அழுதுவிடும் நிலையில் இருந்தார்.

நம்முடைய சமுதாயத்தில் மருத்துவப் படிப்பை மட்டுமே உயர்வாகவும் மேன்மையாகவும் நினைத்து தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்களே முடிவு செய்வதால் விருப்பமில்லாத துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் பிள்ளைகள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள். அதே போல்தான் இந்த "ஏ"க்கள் மட்டுமே ஒரு மாணவரை மாளிகை வாசலுக்கு வழி காட்டுவதில்லை .இதற்கு நம் முன்னோர்கள் பலர் சாட்சி.


Muthukrishnan Ipoh: அனுபவம் சார்ந்த ஓர் அருமையான பதிவு... நல்ல கருத்துகளுடன் நல்ல ஓர் அனுபவப் பதிவு... நன்றிங்க....


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நன்றிங்க சார்


Ramala Pillai: ஆரம்ப நிலைகளில் சிறந்த புள்ளிகள் பெற்ற பிள்ளைகள் பிற்காலங்களில் பின் தங்கி விடுவதும், சிறந்த அடைவு நிலைகளைப் பெறாத பிள்ளைகள் பிற்காலங்களில் சிறந்த மாணவர்களாக வருவதும் பெற்றோரின் முனைப்பில் உள்ளது. ஒரு வகுப்பில் 40 பிள்ளைகளுக்கு தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் பங்களிப்பை விட தான் பெற்ற பிள்ளைகளுக்கு பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லி ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


Muthukrishnan Ipoh: அருமையான சிந்தனை... அழகிய பதிவு.... //// தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் பங்களிப்பை விட தான் பெற்ற பிள்ளைகளுக்கு பக்குவமான முறையில் எடுத்துச்சொல்லி ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை /// சிறப்பு....


Alex Mark II: அருமையான meaningful பதிவு... good job.


Augustine Chinnappan Muthriar: Arumai arumaiyana paathu paaardah kuudathu


Viwegananthan Krishnasamy: Well said aiyya


Letchumanan Nadason: சரியான நேரத்தில் சரியானப் பதிவு.


Ammini Ayavoo: சரிதான் ஐயா


Mani Roy: எல்லா கண் மணிகளுக்கும் என் மனதார வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும் .


Doraisamy Lakshamanan: தமிழ்ப்பள்ளி மட்டுமல்ல. மலாய் மற்றும் சீனப் பள்ளியில் படித்தவரே யானாலும் மலேசிய இந்தியராக இருந்தால் அவர்களை அதிக ஊதியம் பெறுபவர்களாக உருவாக்கும் முயற்சியில் ஐயா திரு சி. பசுபதி அவர்களுக்குப் பக்கபலமாக ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் திரளுவோம். தோல்வியுற்ற ஒரு மாணவர்கூட வீணாகி விடாமல் தொழில்துறைக்கல்வி கற்பிக்க அடிப்படைக் கல்வியான கணிதம் விஞ்ஞானப் பாடங்களை இப்போதே கற்பிக்க அனைத்துத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களும் மித்ராவோடு கலந்து பேசி... வேண்டிய உதவிகளை கல்லூரிக்கும் மாணவர் மாணவியர்களுக்கும் மனிதவளத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்வோம்!


Doraisamy Lakshamanan: நாம் எத்தனை பேர் இந்த UPSR தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காகச் சிந்தித்தாலும் மைஸ்கிள் கல்லூரியை நிறுவிய ஐயா திரு சி. பசுபதி அவர்களுக்குத் தான் அதிக ஆர்வமும் அனுபவமும் அக்கறையும் உள்ளவராகையால் நம் அரசும் நம் மக்களும் அவரிடம் இப்பொறுப்பினை ஒப்படைப்போம்!

மலேசியச் சிறைச்சாலைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமானால் தேர்வில் தோல்வி அடைந்த இந்திய மாணவர்-மாணவியர்களை மைஸ்கிள் வழி சரியான வழித்தடத்தில் சேர்த்துவிட மைஸ்கிள் கல்லூரிக்கு உதவுவோம்!


Doraisamy Lakshamanan:
மலேசிய இந்திய சமுதாயமே ஒன்றுதிரண்டு யுபிஎஸ்ஆரில் தோல்வியுற்ற மாணவர்மாணவியர்களை மைஸ்கில் தொழில் கல்லூரியில் கல்வியைத் தொடர இப்போதே அடித்தளமிடுவோம்!


Kannan Kannan: நான் ஆனந்தமாய் இருக்கிறேன்... வாழ்த்துக்கள் சிறந்த ஆசிரியர்கள்... என் வாழ்த்துக்கள்


Vanjithevan Somasanma: 100% ஒப்புக் கொள்கிறேன்!


ஓம் நம சிவாய: உண்மை
 

Teventiran: Teven Unmai


Sangapillai Sangapillai: Unmai sagothara... ellraiim kondadovom


Krishnan ATawar: good job