09 செப்டம்பர் 2019

அமேசான் காட்டில் அதிசயம் - 2

தமிழ் மலர் - 09.09.2019

காடுகளைப் பற்றி அதிக அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பெண் ஜூலியன் கோபக்கே. வயது 17. உதவிக்கு என்று யாருமே இல்லை. அதுவும் இது நடப்பது எல்லாம் நட்டு நடு வனாந்திர அமேசான் காட்டில். எப்படி போராட்டம் செய்து இருப்பாள். உயிருக்காக எப்படி போராடி  இருப்பாள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 



விபத்து நடப்பதற்கு முன்னர் ஓராண்டுக்கு முன்னால்
நம்ப வீட்டுப் பிள்ளைக்கு அந்த மாதிரி ஒன்று நடந்து இருந்தால் நமக்கு எப்படி இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இதை எழுதும் போது என் மனசு ரொம்பவும் வலிக்கிறது.

ஜூலியன் கோபக்கே ஒரு ஜெர்மனிய பெண். இருந்தாலும் தென் அமெரிக்கா பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் பிறந்தவர். தாய் தகப்பன் இருவருமே உயர்க்கல்வி படித்தவர்கள். விலங்கியல் துறையில் நிபுணர்கள். இருவரும் பெரு நாட்டில் பணி செய்து வந்தார்கள்.



தமிழ் மலர் - 09.09.2019
தாயாரும் மகளும் வெளியூரில் இருந்தார்கள். தகப்பனாருடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக விமானம் ஏறி இருக்கிறார்கள். வரும் வழியில்தான் அந்த விபத்து.

வானத்தில் இருந்து விழும் போது ஏன் அவள் ஒரு செங்கல்லைப் போல அல்லது ஒரு கூழாங்கல்லைப் போல விழவில்லை. இதுவும் ஒரு புரியாத புதிர்.

தரையில் ஒரு சில உடல்கள் இருக்கைகளுடன் மண்ணுக்குள் மூன்று அடி ஆழம் வரை பாய்ந்து போய் இருக்கின்றன. அப்படி என்றால் எவ்வளவு வேகத்தில் அந்த உடல்கள் பூமியை நோக்கி வந்து இருக்க வேண்டும். 



Wings of Hope - TV documentary film explores the story of Juliane Koepcke. 
அதே அந்த ஜூலியன் கோபக்கே
ஓர் உடல் பூமிக்குள் மூன்று அடி ஆழத்திற்குள் போய் இருக்கிறது என்றால் என்ன வேகத்தில் தாக்கம் இருந்து இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால் ஜுலியனுக்கு அப்படி ஒன்றும் ஏற்படவில்லை. ஜூலியன் உயிர் தப்பியதற்கு நான்கு காரணங்கள் சொல்லப் படுகின்றன.

முதல் காரணம்: வானத்தில் இடி மின்னல்கள் இருந்த போது புயல் காற்றும் இருந்தது. இந்தப் புயல் காற்றின் மேல் இழுப்பு ஒரு காரணம். புரிகிறதா. கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

புவியீர்ப்பு ஜூலியனைக் கீழே இழுக்க, புயல் காற்று அவளை மேலே இழுத்து இருக்கலாம். புவியீர்ப்பு சக்திக்கும் புயல் காற்றுக்கும் இடையே போராட்டம். இயற்கையின் போராட்டம் நடந்து இருக்கலாம். அதனால் பூமியை நோக்கி பாயும் வேகம் குறைந்து இருக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் ஜூலியன் மயக்க நிலையில் இருந்து இருக்கிறாள் என்பதையும் நினைவில் கொள்வோம். சரி.

அமேசான் காட்டு விஷத் தவளை

இரண்டாவது காரணம்: மூன்று இருக்கைகள் கொண்ட ஓர் இணைப்பு இருக்கையில் அமர்ந்து ஜூலியன் பயணம் செய்து இருக்கிறாள். விபத்து நடந்ததும் ஜூலியனின் இணைப்பு இருக்கை மட்டும் தனியாகக் கழன்று இருக்க வேண்டும்.

புயல் காற்றின் சீற்றத்தில் காற்றாடியைப் போல சுற்றிச் சுற்றி வேகமாகச் சுழன்று இருக்க வேண்டும். சுற்றியவாறு ஜூலியனின் இணைப்பு இருக்கை மட்டும் தனியாகத் தரையைத் தொட்டு இருக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்: கீழே தரையில் காட்டு மரங்கள் அடர்த்தியாகப் பின்னிப் பிணைந்து இருந்து இருக்கின்றன. அதனால் ஜூலியன் விழும் போது அவளுடைய இருக்கைக்கு பஞ்சு மெத்தையைப் போன்ற ஓர் இலகு மென் தன்மையைக் காட்டு மரங்கள் கொடுத்து இருக்கலாம். சரி.

நான்காவது காரணம்: காட்டு மரங்களின் மீது ஜூலியன் விழும் போது அவளின் அடிப் பாகத்தில் (பின்பாகத்தில்) இருக்கை இருந்து இருக்கிறது. அதனால் மரக் கிளைகளில் வந்து மோதும் போது ஒரு படகைப் போல மெதுவாக வந்து விழுந்து இருக்கலாம். வேகமாக விழுந்து இருந்தால் உடல் சிதறிப் போய் இருக்கும். 



அமேசான் சிறுத்தை
இன்னும் ஒரு விசயம். ஜூலியன் இரண்டு மைல் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறாள். இரண்டு மைல் உயரம்… சும்மா இல்லீங்க. கொஞ்ச நஞ்ச உயரம் இல்லை. அதை னாம் மறந்துவிடக் கூடாது.

இதை விதி எழுதிச் சென்ற ஓர் அதிர்ஷ்டம் என்று சொல்வதா. இல்லை விதி அவசரமாக எழுதிய அவசரக் கிறுக்கல் என்று சொல்வதா. என்ன நினைக்கிறீர்கள். என்னைக் கேட்டால் எனக்குத் தலைச்சுற்றல் வந்து ரொம்ப நேரமாச்சு. இரண்டு மைல் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பி இருக்கிறாள் என்றால் சும்மாவா… சாதாரண விசயமா.

நம்ப வீடுகளில் தடுக்கி கீழே விழுந்து காலையும் கையையும் உடைத்துக் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது இரண்டு மைல் உயரத்தில் இருந்து விழுந்ததைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. 



தமிழ் மலர் - 09.09.2019
சாவது என்றால் எப்படியும் செத்துப் போய் இருக்கலாம் இல்லையா. சாவு வருகிறது என்றால் அது எப்படியும் வரலாம். விளக்கைப் பிடித்துக் கொண்டு  வீட்டுக் கதவைத் தட்டி விட்டுத்தான் வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

லான்சா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று ஜுலியனின் தந்தையார் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அந்த விமான நிறுவனத்திற்கு நல்ல பெயர் இல்லை. இதற்கும் முதல் ஆண்டு ஒரு விபத்து. 99 பேர் பலி. இருந்தாலும் வேறு விமானச் சேவைகள் இல்லை. டிக்கெட்டுகள் வேறு வாங்கியாகி விட்டது, வேறுவழி இல்லாமல் பயணிக்க வேண்டிய நிலைமை.

விபத்து நடந்த பின்னர் தேடல் பணிகள். விபத்து நடந்த இடத்தில் தேடி இருக்கிறார்கள். விமானத்தின் பெரிய பெரிய பாகங்கள் எங்கே கிடந்தனவோ அங்கேதான் முழுமூச்சாகத் தேடி இருக்கிறார்கள்.


சிலரின் உடல் பாகங்கள் கிடைத்தன. பலரின் உடல்கள் கிடைக்கவில்லை. ஜூலியனின் தாயாரின் உடலும் கிடைக்கவில்லை.

ஆனால் அவருடைய முதுகெலும்பு உடைந்து பதினான்கு நாட்கள் காட்டிலேயே உயிரோடு இருந்து இருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது.

ஜூலியன் பறந்து கீழே விழுந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் வரவே இல்லை. அவள் வெகு தொலைவில் விழுந்து இருக்கிறாள். அதனால் அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. ஜூலியன் உயிர் தப்பியதும் முதலில் தன் தாயாரையும் உயிர் பிழைத்தவர்களையும் தேடி இருக்கிறாள்.

விமானத்தின் பாகங்கள் கிடந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் ஜுலியன் விழுந்து விட்டதால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தில் தன் பக்கத்தில் அமர்ந்து பயணித்த தன் தாயாரை முதலில் தேடி இருக்கிறாள். உஹும்… கண்டுபிடிக்க முடியவில்லை.




அதிர்ஷ்டவசமாக ஒரு மிட்டாய் பொட்டலம் கிடைத்து இருக்கிறது. நான்கு நாட்களுக்குத் தாக்குப் பிடித்தது.

அது முடிந்ததும் சாப்பாட்டுக்குத் திண்டாட்டம். தொடர்ந்தால் போல அடை மழை. ஒவ்வொரு நாளும் பல முறைகள் மழை. இரவில் கடும் குளிர். போர்வை, துணி, மேலாடைகள் எதுவுமே இல்லை.

அவள் அணிந்து இருந்ததோ மினி ஸ்கர்ட். தொடைக்கு கீழே அட்டைகளின் இரத்த வேட்டை. மலைக் காட்டுக் கொசுக்களின் அட்டகாசமான அழிச்சாடல்கள். நான்காவது நாள் பிணம் தின்னிக் கழுகுகளின் நரபலி நாட்டியங்கள். இவற்றை எல்லாம் சமாளித்து இருக்கிறாள். தைரியமான ஒரு மனிதப் பிஞ்சு. தரையில் நிறைய விஷப் பாம்புகள். காய்ந்து போன இலைகளுக்கு நடுவில் பாம்புகளின் உருமறைப்பு (camouflage). பத்திரமான நடக்க வேண்டிய சூழ்நிலை.

ஐந்தாவது நாள் ஜுலியனின் கண்களில் ஓர் ஓடை தென்பட்டது. அந்த ஓடை நிச்சயமாக ஒரு பெரிய ஆற்றில் போய்ச் சேரும் என்பதை ஜுலியன் உணர்ந்து கொண்டாள். அந்த ஓடை ஓரத்திலேயே நடந்து போய் இருக்கிறாள்.

அமேசான் காட்டு ஓடைகளில் உயிர்க் கொல்லி பிரான்ஹா (Piranha) மீன்கள் எப்ப எப்ப என்று அலைமோதிக் கொண்டு இருக்கும். கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரான்ஹா மீன்கள் ஆற்றின் நடுப் பகுதியில் இருப்பது இல்லை. ஆற்று ஓரங்களில்தான் இருக்கும். 




அதனால் ஓடையின் நடுப் பகுதியிலேயே நடந்தும் மிதந்தும் போய் இருக்கிறாள்.

இதில் ஆற்றுத் திருக்கை மீன்களின் திருவிளையாடல்கள். கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துக் கால்களின் சதைகளைச் சாப்பிட்டு இருக்கின்றன. பாவம் அவற்றுக்கும் பசியின் கொடுமை. இங்கே இவளுக்கும் பசி. ஆற்று நீரையே குடித்துக் குடித்து பசியைப் போக்கி இருக்கிறாள்.

ஒரு தடவை ஒரு தவளையைப் பிடித்துச் சாப்பிடலாம் என்று நினைத்து இருக்கிறாள். முதலில் பார்த்த தவளை கலர் கலராக இருந்து இருக்கிறது. உண்மையிலேயே அது ஒரு விஷத் தவளை. சந்தேகப்பட்டு அதைச் சாப்பிடவில்லை. நல்லவேளை.

இப்படியே பத்து நாட்கள் சாப்பாட்டிற்கும் உயிருக்கும் போராடி இருக்கிறாள். பத்தாவது நாள் காட்டு மரங்களை வெட்ட வருபவர்கள் தங்கும் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தாள். அந்த வீடு ஆற்று ஓரத்தில் இருந்தது. ஆற்றில் ஒரு படகு.

படகில் ஒரு டின்னில் கொஞ்சம் பெட்ரோல் எண்ணெய் இருந்தது. வலது கை புஜத்தில் ஏற்பட்ட காயத்தில் எண்ணெயை ஊற்றி புழுக்களை வெளியே எடுத்தாள். மொத்தம் 33 புழுக்கள். ஒவ்வொன்றும் ஒரு செண்டிமீட்டர் நீளம். யப்பா…

படகை எடுத்துப் பயணிக்க ஜூலியன் விரும்பவில்லை. அடுத்தவர் பொருள். பொழுது வேறு சாய்ந்து விட்டது. இருளுக்கு வேறு இருமல் வந்துவிட்டது. அதனால் குடிசையிலேயே அன்றிரவு தூங்கினாள். 



ஜுலியன் காப்பாற்றப்பட்ட போது
மறுநாள் காலையில் காட்டு மரத் தொழிலாளர்கள் அவளைக் கண்டுபிடித்து படகில் ஏற்றி பக்கத்துக் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதற்கும் மறுநாள் அந்தக் கிராமத்தில் இருந்த ஒருவர் ஜூலியனைத் தொலைதூரத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஒரு குட்டி விமானத்தின் மூலமாக…

மருத்துவமனையில் சில நாட்கள். அதற்குள் ஜுலியனின் தந்தை அவளைத் தேடி மருத்துவமனைக்கே வந்து விட்டார். மறுபடியும் இயல்பான மனித நாகரிகம். அதன் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் அவளை  அழைத்துச் சென்றார். 1972 ஜனவரி 12-ஆம் தேதி ஜுலியனின் தாயார் மரியாவின் உடல் கண்டெடுக்கப் பட்டது.

உலகமே ஜுலியனை வியந்து பார்த்தது. பத்திரிகையாளர்கள் அடிக்கடி வந்து குசலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இப்போது ஜுலியனின் கதை பழைய கதை. பலரும் மறந்து விட்டார்கள்.

அதன் பின்னர் ஜூலியன் ஜெர்மனிக்கே திரும்பிச் சென்று சிகிச்சை பெற்றார். அங்கேயே தன் மேல் படிப்பைத் தொடர்ந்தார். 1980-ஆம் ஆண்டு, உயிரியல் துறையில் வௌவால்களைப் பற்றி (mammalogy) ஆய்வு செய்தார். லுட்விக் மெக்ஸ்மில்லன் பல்கலைக்கழகத்தில் (Ludwig-Maximilian University ) டாக்டர் பட்டம் பெற்றார். அவருடன் படித்தவரைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லை.

1987-ஆம் ஆண்டு மீண்டும் பெரு நாட்டிற்கே திரும்பி வந்தார். அமேசான் காட்டு வௌவால்களைப் பற்றி ஆய்வுகள் செய்தார்.



காப்பாற்றப்பட்ட சில நாட்களில்
இவரைப் பற்றி 1975-ஆம் ஆண்டு  ’மிராக்கல் ஸ்டில் ஹேப்பன்’ (Miracles Still Happen) எனும் ஓர் ஆங்கிலத் திரைப்படம் வெளியானது. 2011-ஆம் ஆண்டில் ‘வானத்தில் இருந்து நான் விழுந்த போது’ எனும் நூலை எழுதி வெளியிட்டார்.  அந்த நூலுக்கு கொரின் இலக்கிய விருது (Corine Literature Prize) கிடைத்தது.

அமேசான் காட்டு வௌவால்களைப் பற்றி ஆய்வுகள் செய்ததற்காக பெரு அரசாங்கம் அவருக்கு உயரிய அரசு விருதை (Order of Merit for Distinguished Services in the degree of Grand Officer) வழங்கிச் சிறப்பு செய்தது. இப்போது அவருக்கு வயது 64.

அந்தரத்திலே மந்திரம் படித்த அந்தப் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவருடைய வாழ்க்கையில் எல்லைக் கோடு போட்ட விதி, கடைசி நேரத்தில் அழகான கோலத்தைப் போட்டு விட்டதே.

இருந்தாலும் ஆண்டவனின் தலையீடு இல்லாமல் ஒன்றும் நடந்து இருக்காது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது எல்லாம் ஒரு கொடுப்பனை என்று தாராளமாகச் சொல்லலாம்.

அதிர்ஷ்டக் காற்று எங்கே இருந்து வரும்… எப்படி வரும் என்பது எவருக்கும் தெரியாது. வர வேண்டிய நேரத்தில் வரும். சமயத்தில் இடி மின்னல் வழியாக் கூடக வரலாம். சொல்ல முடியாதுங்க. இருந்தாலும் ஜுலியன் விசயத்தில் அதிர்ஷ்டக் காற்று விமானத்தில் ஏறி டிக்கெட் வாங்காமல் வந்து இருக்கிறது.

(முற்றும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக