09 செப்டம்பர் 2019

ஜப்பான் காலத்தில் தமிழர் அஞ்சல்தலை

1942-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படையெடுத்து வந்தார்கள். நாட்டைப் பிடிக்க வந்தவர்கள் அந்த நாட்டுத் தமிழரைச் சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு தமிழர்களுக்குப் பெருமை செய்து இருக்கிறார்கள். இந்தத் தகவல் மலேசியாவில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
 

ஜப்பான் நாடு மலாயாவில் இருந்து 5000 கி.மீ. தொலைவில் உள்ளது. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி ஜப்பானியர்கள் மலாயா, கிளந்தான், கோத்தாபாரு நகரில் தரை இறங்கினார்கள். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி ஒட்டு மொத்த மலாயாவையும் கைப்பற்றினார்கள். 69 நாட்கள் தான். சிங்கப்பூர் தீவும் வீழ்ந்தது.
 
மலாயாவைக் கைப்பற்றிய கையோடு ஆங்கிலேய வெளியீடுகள் அனைத்தையும் சுவடுகள் இல்லாமல் அழித்தார்கள். ஆங்கிலப் பள்ளிகளை மூடினார்கள். ஆங்கிலத் திரைப் படங்களுக்குத் தடை விதித்தார்கள்.
 

அதன் பின்னர் 1942-ஆம் ஆண்டு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை நடத்தினார்கள். மலாயா, சிங்கப்பூரைச் சித்தரிக்கும் ஐந்து வடிவங்கள் தேர்வு செய்யப் பட்டன. அவற்றில் இரு அஞ்சல் தலைகள் மலாயா தமிழர் ரப்பர் மரம் சீவும் படங்கள். 
 
1942-ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் 3 சென் அஞ்சல் தலை வெளியிடப் பட்டது. 1943-ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1 சென் அஞ்சல் தலை வெளியிடப் பட்டது. அஞ்சல் தலைகள் கோலாலம்பூரில் அச்சிடப் பட்டன. அதுவே ஜப்பான் காலத்தில் மலாயா நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.
 

எங்கு இருந்தோ வந்த ஜப்பான்காரர்கள், மலாயா தமிழர்களுக்கு மரியாதை செய்தது பெருமையாக உள்ளது. அதே சமயத்தில் தமிழ்ப் பள்ளிகளை மூடுங்கள் என்று இப்போதைய அரசியல்வாதிகள் சிலர் சொல்வது வேதனையாக உள்ளது.

சான்றுகள்:

1. https://www.malaysiadesignarchive.org/1942-japanese-occup…/…

2. https://commons.wikimedia.org/…/File:Stamp_Malaya_Japan_occ…

3. http://kayatana.com/index.php?main_page=index&cPath=84_773




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக