17 பிப்ரவரி 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழ் மலர் - 15.02.2021

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்மேகும் செம்மைகள். எளிய எளிமைக் கூறுகள். வாழ்த்துகிறோம் தமிழ் மறவன் பாலன் முனியாண்டி.

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள். மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

மலேசியத் தமிழர் இனத்திற்கு யார் யார் சேவை செய்கிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டியது நம் கடமை. அதே வேளையில் இங்கே மலேசியாவில் இப்போதைய தமிழர்ச் சேவையாளர்களைப் போற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். புரியும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருக்கிற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஒரு செருகல்.

நாம் இங்கே எப்படி எல்லாம் அழுத்தப்பட்டு அமுக்கப்பட்டு வருகிறோம். மேலே எழுந்து வர முடியாமல் தத்தளித்துத் தவித்துக் கொண்டு இருக்கிறோம். தொட்டதற்கு எல்லாம் நம் தமிழர்களைச் சீண்டுவது ஓர் இனத்திற்கு ஒரு பெரிய புழைப்பா போச்சு.

எதற்கு எடுத்தாலும் வந்தேறிகள். உங்க ஊருக்கே திரும்பிப் போங்க எனும் கூப்பாடுகள். முன்பு எல்லாம் இப்படி இல்லீங்க. கொஞ்ச நாளாகத்தான் இந்த மாதிரியான ஆலாபனைகள். இடையில் ஒரு மெகா மனிதர் வந்தார். நல்லாவே சாம்பிராணி போட்டார். நல்லவே புகைச்சல்.

அவர் வந்த பூர்வீகத்தை மறைக்க இந்த நாட்டின் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கி விட்டார். கட்டுரையில் இருந்து தாண்டிப் போவதாக நினைக்கலாம். இல்லீங்க. வயிற்றெரிச்சல். என் இனத்தின் மீதான ஒரு பற்று. அவ்வளவுதான்.
 
நாட்டில் நடக்கிற சில பல கோலமால்களைக் கொஞ்ச நேரத்திற்கு விட்டுத் தள்ளுங்கள். அவற்றை எல்லாம் தாண்டி நம் நாட்டில் ஒரு சில அருமைத் தமிழர்கள் நல்ல சேவைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

பினாங்கில் பலரும் அறிந்த தமிழ்ச் சேவையாளர் பேராசிரியர் இராமசாமி. எல்லோருக்கும் தெரியும். மாநிலத்தின் துணை முதல்வர். தமிழ் மன்றத்தின் தலைமகன். தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராகமாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்கள். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் என்று பற்பல நாடுகளில் பற்பல அச்சுறுத்தல்கள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைக் கலாசாரம்; தமிழர்களின் பண்பாடு; ஆகியவற்றுக்கு பற்பல அச்சுறுத்தல்கள்.

அந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்களில் பேராசிரியர் இராமசாமி அவர்களும் ஒருவர். அவரின் குரல் ஒலிப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.

அவரின் நற்சேவைகளுக்கு பக்க பலமாக அமைந்து உறுதுணைச் சேவைகள் செய்து வரும் அமைப்பு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம். இது ஓர் அரசு சாரா இயக்கம். பினாங்கை அடித்தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கத்தின் தலைவர் தான் பாலன் முனியாண்டி.

இந்த இயக்கம் பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி-40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணி பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை. அவர்களின் இலக்கு கல்வி; பொருளாதாரம்; தலைமைத்துவம். இருந்தோம் போனோம் என்பது முக்கியம் அல்ல. இருக்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். அதையும் நினைவு கூர்வோம்.

செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பெருநடையைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிது கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி என்பவர் பினாங்கில் நல்ல ஒரு சமூகச் சேவகர்களில் ஒருவராகப் பார்க்கப் படுகிறார். தனக்கென வாழ்லாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களுக்குச் சேவை செய்வதைப் பரிதாகப் பார்க்கலாமே.

செபராங் பிறை செங்காட் தோட்டத்தில் பிறந்து பத்து காவான் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படித்தவர். பின்னர் உயர்க் கல்வியைச் செபராங் பிறை; பினாங்கு உயர்க் கல்விக் கழகங்களில் தொடர்ந்தவர். தற்சமயம் பினாங்கு தாசேக் குளுகோர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இளமைக் காலத்தில் அவருக்குப் பொது வாழ்க்கையில் அதிகமான ஈடுபாடுகள் இல்லை. இந்தக் கட்டத்தில் இவரின் சகோதரர் மாரியப்பன் அவரைப் பொது வாழ்க்கைக்குள் கொண்டு வந்தார். தாசெக் குளுகோர் மணிமன்றத்தில் ஒரு செயலவை உறுப்பினராகக் காலடி எடுத்து வைத்தார். பின்னர் அதே மன்றத்தில் செயலாளர்; தலைவர் பதவிகள்.

அதன் பின்னர் பொது வாழ்க்கை ஈடுபாடுகள். மக்கள் முரசு கோவி தியாகராஜன் அவர்களின் ஆதரவில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் உருவாக்கம் கண்டது. இடையில் டாக்டர் முரளி என்பவரின் ஆதரவு. மலாக்கா ஜெ.பி, வீராசாமியின் ஆதரவு. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரவின் குமார். யூ.யூ.எம். (UUM) பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத் துறையில் பட்டம் பெற்று தனியார் துறையில் வேலை செய்து வருகின்றார். மகள் அன்பழகி மலாயா பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு துறையில் பயின்று வருகிறார். இளைய மகன் உதயகுமார் இடைநிலை பள்ளியில் 4-ஆம் படிவம் பயல்கின்றார்.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ எப்படி எப்படியோ புகழ்ந்து எப்படி எப்படி எல்லாமோ அழைக்கிறோம்.

அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். போகிறார்கள். ஆனால், தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்றவர்கள் தான், நற்சேவையாளர் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள். வாழ்ந்தும் காட்டுகின்றார்கள்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்ற நல்ல சேவையாளர்கள் செய்து வருவது நல்ல புண்ணியமான சேவைகள். அந்த மாதிரியான மனிதர்கள் சிலரால் தான் மழையும் பெய்கிறது. பூமியும் செழித்து வளர்கிறது. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.02.2021



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக