05 ஜூலை 2021

வாழிய வாழியவே சாரா கலைவாணி

தமிழ் மலர் - 05.07.2021

2018-ஆம் ஆண்டு வரையில் நிர்வாகத் துறை அதிகாரி. சில வணிக நிறுவனங்களுக்கு கருத்துரைஞர். சில பல அதிகாரிகளைச் சந்தித்து நிர்வாகத் துறை பற்றி விளக்கம் கொடுத்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை. இனிதான வாழ்க்கை. இனிதான பயணங்கள்.

2019-ஆம் ஆண்டு இறுதியில் அவருக்கு 29 வயது. வலிமிகு ஓர் அதிர்ச்சி. கால் முடக்குவாதம். நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டார். தனிமை வாழ்க்கை. மிகவும் சிரமப்பட்டார். உதவி கிடைக்கவில்லை.


தங்கி இருக்கும் அறைக்கு வாடகைப் பணம் தர வேண்டும். நடக்க முடியாத நிலையிலும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருந்துகள் வாங்க வேண்டும். அவற்றுக்குப் பணம் இல்லாமல் தவித்தார். இந்தக் கட்டத்தில் சில நல்ல உள்ளங்களும் இருந்தன. இயன்ற வரையில் பொருள் உதவி செய்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிக்கும் பணம் சிகிச்சைக்கும் மருந்துகளுக்குமே கரைந்து விடும். இதில் கூடுதலாக வீட்டு வாடகை. ஒவ்வொரு நாளைக்கும் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும். அதற்கும் செலவு. இன்னொரு புறம் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய பொருட்களுக்கான செலவு.


அப்போது அவர் கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு இருந்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையத்திற்குச் சென்று வர வேண்டும். வாரத்திற்கு இருமுறை சிகிச்சை. அதற்கான போக்குவரத்துச் செலவு.

அங்கே இங்கே இருந்து கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணம் செலவானதும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போகும் நிலை. கையில் காசு இல்லாமல் பல நாட்கள் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். இதை அவரே சொல்லி இருக்கிறார்.

கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டு இருக்கிறார். அந்தப் பக்கம் மருத்துவமனை; இந்தப் பக்கம் வீடு என்று அலைந்து திரிந்து இருக்கிறார். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம் எல்லாம் போக்குவரத்திற்கும்; மருந்து வாங்குவதற்கும் செல்வழிந்து போனது.
மலேசிய பொது நல அமைச்சின் (Jabatan Kebajikan Masyarakat Malaysia) உதவி கேட்டு இருக்கிறார். இன்னும் கிடைக்கவில்லை. நிலுவையில் உள்ளது. 
 
கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். முன்பு நிராகரிக்கப் பட்டது. அண்மையில் மறுபரிசீலனை செய்யப் படுவதாகத் தகவல். கிடைப்பதும் கிடைக்காததும் கிடைக்கும் வரையில் எவருக்கும் தெரியாத மர்மம்.


ஒரு நாள் பொழுது; கொஞ்சம் நிம்மதியுடன் பயணிக்க வீடு என்று ஓர் இடம் இல்லை. வீடு வேண்டாம். இளைப்பாறுவதற்கு; ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு; உறங்குவதற்கு ஓர் அறை இல்லையே. என்ன செய்வார்? பாவம்.

வாடகை கட்ட முடியாத நிலை. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டப்படும் நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப் பட்டு உள்ளார். ஒரு சிலர் இவரை அடித்தும் இருக்கிறார்கள். என்ன காரணமோ. வேதனையாக உள்ளது. சில தடவை உடல் ரீதியான வற்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளார்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தவிக்கும் ஒரு கேள்விக் குறியான வாழ்க்கை. தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை (Borderline Personality Disorder).

உடல் ஆளுமைக் கோளாறு என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் நினைக்கும் அல்லது உணரும் தன்மைகளைப் பாதிக்கும் நோய். அன்றாட எதார்த்த வாழ்க்கையைச் செயல் படுத்துவதில் பற்பல சிக்கல்களை ஏற்படுத்தும் நோய்.


இப்படி பற்பல சிக்கல்களில் பயணித்த; பயணிக்கும் ஓர் அழகிய பெண்மணியார்தான் சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32.

அழகு அறிவு ஐஸ்வரியம் அத்தனைக்கும் அழகு சேர்த்த பெண்மணி. நடை ஒப்பனையில் வடிவழகி (மாடலிங்). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நல்ல ஒரு பதவியில் வாழ்ந்து பார்த்தவர்.

மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். உண்மைதானே. அந்த வகையில் கலைவாணிக்கும் சின்ன வயதில் பெரிய வேதனைகள்.  

கால் முடக்குவாதம் (Rheumatoid Arthritis Disorder); ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம். இதன் விளைவாக உயிர் போகும் வலி வர்லாம்.


இதில் முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்பது ஒரு வகையான் மூட்டு வீக்கம். சன்னம் சன்னமாய் அதிக வலியைக் கொடுக்கும். ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூட்டுகளின் புறணிக்குள் கிருமிகள் தாக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.

இந்தக் கட்டத்தில் எபிட் லியூ (Preacher Ustaz Ebit Lew) எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் (Pertubuhan Kasih Umat Malaysia) மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி ஏற்கனவே தங்கி இருந்த அம்பாங் அறையின் மாத வாடகை நிலுவைகள். அவை தீர்க்கப்பட ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்.

கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் வாடகை அறை கிடைப்பது சிரமமாக இருந்தது. வாடகையும் அதிகம். அதனால் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி வாடகைக்கு ஒரு அறையைத் தேடினார்கள். 


ஏன் என்றால் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையம் அங்குதானே உள்ளது. போக்குவரத்துச் செலவு மிச்சப் படலாம். அந்த வகையில் ஓர் அறை கிடைத்து உள்ளது.

சாரா கலைவானியின் பிரச்சினை வெளியே தெரிய வந்ததும் பொதுமக்கள் உதவ முன்வந்துள்ளனர். 
 
அவருக்கான உடைகள்; உணவு போன்ற பிற அடிப்படைத் தேவைகளுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவரின் பொழுது போக்கிற்காக சமய போதகர் எபிட் லியூ ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி அன்பளிப்புச் செய்து உள்ளார். வாழ்க மனிதநேயம்.

எபிட் லியூ போன்றவர்கள் இந்த நாட்டிற்கும் இந்த மண்னிற்கும் மிகவும் தேவை! இனம், நிறம், மதம் பார்க்காமல் மனிதர்களுக்கு உதவும் மனிதநேயக் கரங்கள். அன்புடன் அடுத்த தலைமுறைகளை வார்க்கும் அன்பு வெளிச்சங்கள்.


சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தும் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். வீடு இல்லை. அவருடைய அறையில் இருந்து ’ஆன் லைன்’ மூலமாக வேலை செய்வது. கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம். நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் எதன் மீதும்  ஆசை வைப்பதைத் தவிர்ப்போம். எதுவும் நிரந்தரம் இல்லை. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்போம்.

செய்தி அறிந்து மனம் மிகவும் பாதித்து விட்டது. எப்படியாவது உதவி செய்ய வேண்டும். சாரா கலைவாணி பூபாலன் நம்முடன் இந்தக் கொரோனா கோவிட் காலத்தில் பயணிக்கும் பெண்மணியார்.

கோலாசிலாங்கூரைச் சேர்ந்த அன்பர் ராதா என்பவர் மலேசியம் புலனத்தில் ஒரு பதிவைப் பதிவு செய்து இருந்தார். மனதைப் புரட்டிப் போட்டது.


இது தான் மனித வாழ்க்கை. இவர் நன்றாக இருந்த காலத்தில் இவரைச் சுற்றிலும் சுற்றதார், நண்பர்கள். இவர் நலம் தவறியதால் காணாமல் போய் விட்டார்கள். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களும் கூடவா இல்லை. மிக வேதனை.

கோவிட் காலத்தில் நலத்தோடு இருப்பவர்களே சிரமப் படும் போது, இவர் நிலையை நினைக்கும் போது மனம் அழுகிறது. இப்படி ஒரு நிலை இனி யாருக்கும் கொடுக்காதே இறைவா!

இவருக்கு உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் உதவி செய்யலாம். 


Sarah Pupalan
RHB Bank 16803800069368


மின்னஞ்சல்: sarahpupalaninsurvivalmood@yahoo.com

சான்றுகள்:

1. Ebit Lew offers much-needed shelter to homeless senior citizen and woman with disabilities - https://www.malaymail.com/news/life/2021/05/19/ebit-lew-offers-much-needed-shelter-to-homeless-senior-citizen-and-woman-wi/1975345

2. Preacher Ustaz Ebit Lew - https://www.facebook.com/ebitlewofficialpage/

3. Sarah Kalaivani Pupalan -
https://malaysiam-tamil.blogspot.com/2021/07/blog-post_26.html

4. https://gempak.com/intrend/segala-benda-tiada-yang-kebetulan-tak-sengaja-dan-sengaja-itu-semua-allah-dah-aturkan-pertemukan-ustaz-ebit-lew-50792

பின்னூட்டங்கள்

[10:54 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: வணக்கம் ஐயா. தங்களின் இக் கட்டுரை கண் கலங்க வைத்தது. மிக்க நன்றி. அவருக்கு நாம் என்ன செய்யலாம் சொல்லுங்க

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: ரவாங்கில் ஒரு நண்பர் வீடு உள்ளது அவர் அங்கு தங்கி கொள்ளலாம். வாடகை வேண்டாம்

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: முடிந்தால் கேட்டு சொல்லுங்கள் ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நல்ல மனம் வாழ்க. பெட்டாலிங் ஜெயாவில் ஓர் அறை பார்த்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவரைப் பற்றிய கட்டுரை நாளைய தமிழ் மலர் நாளிதழில் வெளிவருகிறது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக