18 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான் லுக்குட் 1900

1900-ஆம் ஆண்டுகளில் மலாயா தமிழர்கள். முதுகு எலும்பு முறிந்து; இடுப்பு எலும்பு நகர்ந்து; கழுத்து எலும்பு தகர்ந்து; கறுப்புத் தோல் கிழிந்து; வேட்டிக் கோவணங்களில் ஓட்டை விழுந்து; முக்கால் பீக்கள் மூட்டைகளைப் படகுகளில் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சி.

இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்பாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட வரலாற்றுத் தோரணங்கள். இடுப்போடு ஒட்டிய வேட்டி. மேலே சட்டை இல்லை. சப்பாத்து இல்லாத வெறும் கால்கள். இவர்களை ரசிக்க அப்போது நட்சத்திரங்கள் இல்லை. இப்போது நாம் ரசிக்கிறோம்.

மேலே காணப்படும் படம் 1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகளைப் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்வார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன இவர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டு; சொகுசாக வாழ்ந்து விட்டு வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாதத்தின் ஓர் இடைச் செருகல். வேதனை.

1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு பல வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

[1#]. In 1890 the most successful estates proved to be those where access was easy, in Selangor, areas around Klang and Kuala Lumpur, in Negeri Sembilan areas near the coastal village of Lukut, now Port Dickson, and in Perak in the area of Matang and Lower Perak.

[1#]. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் பிரதான  விளைச்சல். [#1]

[#1]. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் லுக்குட்,  லிங்கி காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். [#2]

[#2]. Formerly the company was known as the Linggi Coffee Company, and Liberian coffee was grown on the first properties acquired, but it was decided in 1900 to substitute the more profitable product, Para rubber.

1905-ஆம் ஆண்டு தான் அந்தக் குழுமத்தின் காபி, கிழங்கு, வாழைத் தோட்டங்கள் அனைத்தும் ரப்பர் தோட்டங்களாக மாறின.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

[3#]. Liberian coffee flourished in Malay States’ relatively low-altitude coffee farms from the 1870s through to the late 1890s.

[3#]. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

1900-ஆம் ஆண்டில் லுக்குட் நிறுவனத்தின் ரப்பர்  தோட்டங்கள்:

1. லுகுட் (Lukut)

2. மார்ஜோரி (Marjorie)

3. லிங்கி (Linggi)

4. உலு சவா (Ulu Sawah)

5. காஞ்சோங் (Kanchong)

இந்தத் தோட்டங்க சிரம்பான் நகரில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்து இருந்தன. லுக்குட் லிங்கி பகுதியில் இப்போது இருக்கும் தோட்டங்கள்:

Erin Estate,

Ladang Hew Mun,

Ladang Lukut,

Ladang Bonawe,

Ladang Siliau North,

Ladang Siliau,

Ladang Lukut,

Ladang Sungai Salak,

Ladang Parit Gila,

Ladang Sua Betong,

Ladang Bukit Belco,

Ladang Bukit Untong,

Ladang Port Dickson Lukut,

Ladang Port Dickson Lukut,

Ladang Bradwall,

Ladang Ranston,

Ladang Leigh,

Ladang Eng Aun,

Ladang Linggi Berhad,

Ladang Wilmor,

Ladang Bukit Palong,

Ladang New Ruthken,

Ladang Sua Betong,

Ladang Arunasalam,

Ladang Shiaw You,

Ladang Sungai Salak,

Ladang Perhentian Siput

மேலே காணப்படும் படம் 1900-ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகள் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

படத்தின் உரிமம்:  G.R. Lambert & C, Singapore.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.09.2020



மலாயா தமிழர்கள்: மாட்டு வண்டிகளில் போராட்டம் - 1870

1870-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயா காபி தோட்டங்களில் உற்பத்தியாகும் காபி பழங்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும்; முறையான சாலை வசதிகள் இல்லாத இடங்களிலும்; உயரமான காட்டுப் பகுதிகளிலும்; இரயில் பாதைகள் இல்லாத இடங்களிலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப் பட்டன.

மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். 1870 - 1900

முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. (Bullock carts were said to have been introduced by Indian traders during the Malacca Sultanate.)

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதும் திரவ ரப்பர் பாலையும் உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்: மரவெள்ளிக் கிழங்குகள். காலம்: 1870 - 1900.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் ஏனோ தானோ போக்கு வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்குள் சின்னச் சின்ன சண்டைகள் என்றால் அவற்றை உடனடியாக மறந்துவிட வேண்டும். இன உணர்வுடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.

Sources:

1. https://nationalarchives.gov.uk/

2. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

3. Drabble, J. H. 1973. Rubber in Malaya, 1876–1922: The Genesis of the Industry. Kuala Lumpur: Oxford University Press.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.09.2020




மலாயா தமிழர்கள்: சயாம் பர்மா மரண இரயில் பாதை

1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தாய்லாந்து, பர்மா மரண இரயில் பாதை முகாம்களில் இருந்த அமெரிக்கா; ஆஸ்திரேலியா; நியூஸிலாந்து; பிரிட்டன்; டச்சு நாட்டுப் போர்க் கைதிகள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களின் நாடுகள் விரைவாகவும் சிறப்பாகவும் செயல் பட்டன.

Kinsaiyok, Thailand. 19 October 1945. A group of Tamil (Indian) women at the village of Kinsaiyok, 
172 kilometres north of Nong Pladuk (also known as Non Pladuk),or 244 kilometres south of
Thanbyuzayat on the Burma-Thailand railway.
Source: The Australian War Memorial

ஆனால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அங்கேயே அப்படியே அனாதையாக கைவிடப் பட்டார்கள். பர்மா காடுகளில் நாதி இல்லாமல்; எங்கே போவது என்று தெரியாமல் சிக்கித் தவித்தார்கள். அவர்களை மலாயாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்கு உடனடியாக முயற்சிகள் செய்யப் படவில்லை. மலாயா அரசாங்கமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்தியா அரசாங்கமும் அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை.

இருந்தாலும் சில மாதங்கள் கழித்துக் கட்டம் கட்டமாக அவர்களை மீட்டுக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப் பட்டன. தாய்லாந்து அரசாங்கம் தான் தமிழர்களை அனுப்பி வைக்க முன்னெடுப்புச் செய்தது. அக்கறை எடுத்துத் தீவிரம் காட்டியது. அதன் பிறகுதான் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சொரணை தட்டியது. தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

Kinsaiyok, Thailand. 19 October 1945. At the village of Kinsaiyok.These children came forward with gifts of a rooster and cut flowers. This village had been raided by bandits two hours earlier and one Japanese prisoner of war (POW) had been wounded. Source: The Australian War Memorial

அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தமிழர்கள் பலர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு முக்கியமான விசயம்.

சில ஆயிரம் தமிழர்கள் திரும்பி வரவே இல்லை. தாய்லாந்து, பர்மாவிலேயே தங்கி விட்டார்கள். பெரும்பாலும் கால் கைகள் ஊனமாகிப் போன தமிழர்கள். தவிர மலாயாவில் இருந்த சொந்த பந்தங்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு திரும்பிவர மனம் இல்லாமல் போன தமிழர்கள்.

Kinsaiyok, Thailand. 20 October 1945. An Australian and a Dutch
officer from the Military History Team moving through the village.
They are followed by a Japanese prisoner and villagers.
Source: The Australian War Memorial

மலாயாவில் ஒட்டு மொத்தமாகக் குடும்பங்களை இழந்த தமிழர்கள். குடும்பத்தோடு சயாம் காட்டுக்குப் போய் அங்கே மனைவி மக்கள் எல்லோரையும் கூண்டோடு இழந்த தமிழர்கள்.

இப்படி திரும்பி வராமல் அங்கேயே தங்கிய மலாயா தமிழர்கள் சிலர் அங்குள்ள தாய்லாந்து, பர்மா பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். சிலர் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்தப் படத்திற்கு விளக்கம் தேவை இல்லை.

இவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தோசீனாவில் இருக்கிறார்கள். தேடிப் பிடிப்பதுதான் சிரமம். வியட்நாமில் இப்போது 9700 தமிழர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுகிறார்கள்.

இந்தப் பதிவில் காட்சிப் படுத்தப்படும் படங்கள் 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, தாய்லாந்து கின்சாயோக் (Kinsaiyok, Thailand) எனும் இடத்தில் எடுக்கப் பட்டவை. ஜப்பானியர் சரண் அடைந்த பின்னர், இரயில் பாதை போன தமிழர்கள் சிலர் கின்சாயோக் நகரில் தஞ்சம் அடைந்தார்கள்.

படத்தில் உள்ள தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்த போது அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் (Bruce Albert Reddaway). ஓர் ஆஸ்திரேலியர். அப்போது அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் வளர்த்த கோழிகளை அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.

இன்னொரு படம் மறுநாள் 20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஓர் ஆஸ்திரேலியரும்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் (Warmenhoven) என்பவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள் சென்றார்கள். கிராமவாசிகளில் நான்கைந்து தமிழர்களும் இருந்தார்கள்.

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

மரண இரயில் பாதை போடுவதற்குப் போன 100 தமிழர்களில் 65 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள். ஓர் இலட்சம் அல்லது ஒன்றரை இலடசம் மலாயா தமிழர்கள் இறந்து இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஏறக்குறைய 20,000 பேர் இருக்கலாம்.

அவர்களில் பெரும்பாலோர் வயது காரணமாக இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள். நடுக்காட்டில் நாதி இல்லாமல் தவித்த அந்த அப்பாவி மக்களை நினைத்துப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை ஆகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.09.2020

1. https://joshuaproject.net/people_groups/18211/VM

2. https://www.awm.gov.au/collection/C201189

3.https://astroulagam.com.my/lifestyle/article/115197/the-heartbreaking-truth-behind-malaysian-tamils-the-death-railway

4.https://anzacportal.dva.gov.au/wars-and-missions/burma-thailand-railway-and-hellfire-pass-1942-1943/locations/camps-near-hellfire-pass/kinsaiyok-camps
 

15 செப்டம்பர் 2020

இந்தோனேசியா புகையிலை தோட்டங்களில் தமிழர்கள் 1890

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் துரிதமான வளர்ச்சிக்கு தமிழர்களின் அர்ப்பணிப்புகள் மிக முக்கியமானவை. அவர்களின் அயராத உழைப்பினாலும் தன்னலமற்ற பங்களிப்புகளினாலும் பல நாடுகள் வளப்பம் கண்டு உள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் கரை தாண்டிய தமிழர்களின் சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அந்த நாடுகளின் வரலாறுகளில் அவர்களின் காலச் சுவடுகள் என்றைக்கும் மறக்க முடியாதவை. காலம் தோறும் கதைகள் சொல்லும் காலச் சுவடிகள்.

1890-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியாவின் வட பகுதியில் புகையிலை பயிரிடப் படுவதற்காகக் காடுகள் அழிக்கப் பட்டன. அந்தக் காடுகளை அழிப்பதற்கும்; அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தமிழர்கள் பயன்படுத்தப் பட்டார்கள்.

மாட்டு வண்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 1890-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில் தமிழர்கள் தலையில் ஒரு முண்டாசு; இடுப்பில் ஒரு வேட்டி. அவ்வளவுதான்.

சுட்டு எரிக்கும் வெயிலில் சட்டை போடாமல் வேலை செய்து இருக்கிறார்கள். காலம் காலமாக வெயிலில் வாடி வதங்கிய காரணத்தினால் தமிழர்களின் உடலும் கறுத்துப் போயின.

அழிக்கப்பட்ட காடுகள் பெரும்பாலும் சதுப்புநில பாசா காடுகள். அந்த இடங்களில் வேலை செய்வதற்கு உள்ளூர்வாசிகளான சுமத்திரா மலாய் மக்களும்; காரோஸ் (Karos) மக்களும் முழு அளவில் முன்வரவில்லை. பாத்தாக் (Batak) உள்ளூர்வாசிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போதும் ஆள் பற்றாக்குறை.

அதனால் ஜாவாவில் இருந்து ஜாவானியர்கள் கொண்டு வரப்பட்டார்கள். சீனாவில் இருந்தும் சீனத் தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இருப்பினும் ஆள் பற்றாக்குறை.

1900-ஆம் ஆண்டு இந்தோனேசியா புகையிலை தோட்டங்களில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 87,938. சீனர்கள் 80%. தமிழர்கள் 1,758 பேர்.

தமிழர்கள் நாகப்பட்டினம்; மெட்ராஸ்; காரைக்கால் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பின்னர் பினாங்கு, சிங்கப்பூரில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அழைத்து வரப்பட்டார்கள்.

படத்தின் தலைப்பு: Chopped forest and drainage canal under construction at a tobacco plantation

ஆண்டு:
1890 - 1905

உரிமை: நெதலார்ந்து Stafhell & Kleingrothe நிறுவனம். புகைப்படத்தை எடுத்தவர் பெயர் தெரியவில்லை. இப்போது இந்தப் படம்  Nationaal Museum van Wereldculturen, Amsterdam அரும்காட்சியகத்தில் உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.09.2020

சான்றுகள்:

1. Tamils in Sumatra 1890

2. http://www.tropenmuseum.nl/

3. https://theconversation.com/the-dark-history-of-slavery-and-racism-in-indonesia-during-the-dutch-colonial-period-141457


14 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: தைப்பிங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை 1902

மலாயாவின் முதலாவது இரயில் பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). 135 ஆண்டுகளுக்கு முன்னால் 1885-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அதன் பின்னர் 1890-ஆம் ஆண்டு தைப்பிங் நகரில் இருந்து ஈப்போவுக்கு இரயில் பாதை உருவாக்கும் திட்டம்.

1893-ஆம் ஆம் ஆண்டில் இருந்து 1895-ஆம் ஆண்டு வரையில் தைப்பிங் - புக்கிட் கந்தாங் (Bukit Gantang) இரயில்பாதை உருவாக்கம். 1896-ஆம் ஆண்டு புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் (Bukit Berapit) இரயில் பாதை உருவாக்கம். 1902-ஆம் ஆண்டு முடிவுற்றது. இந்தப் பாதையில் நான்கு சுரங்கப் பாதைகள். அதனால் ஆறு ஆண்டுகள் பிடித்தன.

The  railway track from Bukit Gantang to Taiping was built in 1902 and it began operation in 1903. There were four tunnels and a high bridge along Bukit Berapit.

இந்தப் புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை உருவாக்கும் போது சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நூற்றுக் கணக்கான தமிழர்களுக்கு கம்பிச் சடக்கு வேலை.

பல நூறு தமிழர்கள். மலாயாவின் மூத்த தமிழர்கள். மலாயா நாட்டில் முத்திரை பதித்த மூத்த நிலை தமிழர்கள். உதிர்ந்து போன முதல்நிலை முத்துகள்.

அவர்களில் பலர் அந்த இரயில் பாதைச் சிலிப்பர் கட்டைகளுக்கு அடியிலேயே சமாதி அடைந்தார்கள். சமாதியாகிய நிலையில் இன்றைய வரைக்கும் உறக்கம் கொள்கிறார்கள்.

நல்ல தூக்கம். தட்டி எழுப்பினாலும் அந்த இரயில் சடக்கு ஜீவன்கள் எழுந்து வர மாட்டார்கள். இதை எழுதும் போது கண்கள் பனிக்கின்றன. நினைத்துப் பார்ப்போம். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

படங்கள்:

1. National Archives, UK. Federated Malay States - Indian Labour at construction Bukit Gantang 1898 - 1902.

சான்றுகள்:

1. Sunderland, David, ed. (2014). "Fifty Years of Railways in Malaya". British Economic Development in South East Asia, 1880–1939, Volume 3. Routledge.

2. Malayan Railways 100 years 1885 - 1995

3. https://en.wikipedia.org/wiki/Bukit_Berapit_Rail_Tunnel

4.https://web.archive.org/web/20090423073934/http://www.pnm.my/yangpertama/Auto_Landasan.htm