11 பிப்ரவரி 2011

பாதை மாறிய பழமொழிகள்

சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்று ஒரு பழமொழி இருக்கிறது. கேள்வி பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே இது ஒரு பழமொழியாக இருக்குமா என்று கூட சந்தேகமாக இருக்கின்றது. ஒட்டு மொத்த பெண்மைக்கும் இழுக்குச் சேர்க்கும் மொழி. தவறிப் பிறந்த தப்பான  மொழி.

உலகத்தில் உள்ள எல்லா இந்தியப் பெண்களுமே சேலை கட்டினார்கள். கட்டுகிறார்கள். கட்டி வருகிறார்கள். எதிர்காலத்தில் கட்டியும் வருவார்கள். அது ஒரு பாரம்பரிய பண்பாடு.

நம்முடைய பாட்டி சேலை கட்டினார். அம்மா சேலை கட்டினார். மனைவி சேலை கட்டுகிறார். அப்புறம் நமக்குப் பிறந்த மகளும் சேலை கட்டுகிறார். ஏன் பேத்தியும் சேலை கட்டுகிறார்.  ஆக, சேலை கட்டிய இவர்களை எல்லாம் நம்பக் கூடாது என்று சொன்னால் அது எப்படி சரியாக வரும். சொல்லுங்கள்.

அந்தப் பழமொழியின் படி பார்த்தால் சேலை கட்டும் பெண்ணை நம்பக் கூடாது. ஆனால், ஜ“ன்ஸ் போட்ட பெண்ணை நம்பலாம். சிலுவார் போட்ட பெண்ணை நம்பலாம். சுடிதார் போட்ட பெண்ணை நம்பலாம். மெக்சி போட்ட பெண்ணை நம்பலாம். சரிதானே. அந்தப் பழமொழியைத் தூக்கி  நாடு கடத்த வேண்டும் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். 

பழமொழி என்னவோ சரிதான். இருந்தாலும் பழமொழியின் அர்த்தத்தை எடுத்துக் கொண்ட விதம் இருக்கிறதே அங்கே தான் தப்பு நடக்கிறது. ஆக, அதைப் பாதை மாறிய பழமொழிகளின் பட்டியலில் சேர்க்கலாம்.

'சேலை கட்டும்' என்பதைப் பிரித்தால் 'சேல் + ஐ அகட்டும்' என்று வரும். இதில் 'ஐ' எனும் எழுத்தும் 'அ' எனும் எழுத்தும் மறைந்து நிற்கும் மாயைகள். சேல் என்றால் கண் விழி. அகட்டும் என்றால் அலைய விடும் என்று அர்த்தம்.

அதாவது அடிக்கடி கண்விழிகளை அப்படி இப்படி அலை பாய விடும் பெண்ணை நம்பாதே. அந்த மாதிரி ஓர் எண்ணத்துடன் சொல்லப்பட்ட பழமொழி.  ஆனால் என்ன ஆயிற்று. அதை  அநியாயமாக திருப்பிப் போட்டு கழிசடையாக ஆக்கி விட்டார்கள். சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே என்பதுதான் சரி.

அண்மையில் நான் தமிழ் நாட்டில் தர்மபுரி, பூதனல்லி கிராமத்திற்குப்  போய் இருந்தேன். அது என்னுடைய மூதாதையர்கள் பிறந்த சல்லிக் கிராமம்.  அங்கே இந்தப் பழமொழியைப்  பற்றி விசாரித்தேன்.

ஒரு முதியவர் விளக்கம் சொன்னார். நம் வீட்டிற்கு கூலி வேலை செய்ய சில பெண்கள் வருவார்கள். திரும்பிப் போகும் போது அவர்கள் கட்டி இருக்கும் சேலையைக் கவனிக்க வேண்டும்.


அவர்களின் சேலை அகன்று இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் வீட்டில் இருக்கின்ற வெள்ளி வெண்கலச் சாமான்களை மறைத்து எடுத்துப் போய் விடுவார்கள். அதற்காகத் தான் அந்தப் பழமொழி வந்தது என்றார். அது அவருடைய கருத்து.

தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான பழமொழிகள் உள்ளன. காலப் போக்கில் அவற்றின் அர்த்தங்கள் சிதைந்து போய் விட்டன. அந்த வகையில் அன்றாட வழக்கில் நாம் பயன்படுத்தும் பழமொழிகளில் பல பாதை தவறிப் போய் பாதாளத்தில்  விழுந்து விட்டன.


இன்னொரு பழமொழி வருகிறது. மருமகள்கள் சிலருக்குப் பிடித்த பழமொழியாகக் கூட இருக்கலாம். சிலரைத் தான் சொல்கிறேன். எல்லாரையும் சொல்லவில்லை.

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள் எனும் பழமொழி. ஒரு மாமியார் எப்படி ஐயா கழுதையாக  ஆக முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மாமியார் கழுதை ஆகிறார் என்றால் அவருடைய புருஷன் என்ன ஆவான். அவருடைய மகன் என்ன ஆவான். அவனைக் கட்டி இருக்கிற பெண் என்ன ஆவாள். அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தை கள் என்ன ஆவார்கள்.

ஆக மொத்தம் எல்லாருமே கழுதை ஆகி விடுவார்கள் இல்லையா. அடுப்பில் அரிசி வேகாது. அப்புறம் வீட்டில் ஒரு கழுதை கூட்டமே இருக்கும். கடுதாசி காகிதங்கள் தான் சாப்பாடு. சரிதானே. எதையும் சொவதற்கு முன்னால் கொஞ்சம் யோசிக்க முடியும்.


கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு என்று வைரமுத்து சொல்கிறார் என்றும் சொல்லலாம். தப்பில்லை. நன்றாக ஆராய்ந்து பாருங்கள். எங்கேயோ தப்பு நடந்து இருப்பது தெரிய வரும். இந்த இடத்தில் கயிதை எனும் சொல்  கழுதையாக மாறி போய் இருக்கிறது. அவ்வளவுதான்.

கயிதை என்றால் ஊமத்தங்காய். வர வர மாமியார் கயிதை போல் ஆனாள் என்பதே சரி. சரியா. இந்தக் கயிதை எனும் சொல்லும் தமிழ்ச் சொல் வழக்கில் இருந்து மறைந்து விட்டது.

ஊமத்தம் பூ ஆரம்பத்தில் பார்க்க ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும். கடைசியில் அது காயாக மாறும். அப்புறம் அதன் தோல் முழுவதும் முள்ளாகி விடும். ஊமத்தங்காய் கடுமையான விஷம் கொண்டது. சில மாமியார்களும் இப்படித் தான் மாறிப் போவார்கள் என்பதைக் குறிக்க அந்தப் பழமொழியைச் சொன்னார்கள்.

ஆனால் என்ன ஆனது. எந்த மருமகளோ தெரியவில்லை. மாமியாரைப் பிடிக்காமல் கயிதை என்பதை கழுதையாக மாற்றிப் போட்டு கவிதை பாடி இருக்கிறார். ஓர் உலக மகா பிரச்னை உருவாகி  இருக்கிறது.

அடுத்து ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி எனும் பழமொழி வருகிறது. ஐந்து என்பதை ஐந்து பெண் பிள்ளைகளைக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 

அப்படி என்றால் என்ன பதினாறு பிள்ளைகளையா பெற்று வாழச் சொல்கிறார்கள். இல்லையே. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பிறகு அதில் என்ன ஐயா பெரிய வாழ்வு, சின்ன வாழ்வு வேண்டிக் கிடக்கிறது.

இருக்கின்ற இரண்டு மூன்றை வைத்துக் கொண்டே சமாளிக்க முடியாமல் அவனவன் தடுமாறிக் கொண்டு இருக்கிறான்.  இதில் பதினாறு ரொம்ப முக்கியம். போதும்டா  சாமி. ஆக, ஐந்து என்பது இங்கே பிள்ளைகளைச் சொல்லவில்லை.

ஐந்து விதமான விஷயங்களைச் சொல்கிறார்கள். 1.ஆடம்பரமாய் வாழும் தாய் 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன் 3.ஒழுக்கம் தவறும் மனைவி 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதைச் சொல்லவே அந்தப் பழமொழி வந்தது. 

ஆவதும் பெண்ணலே அழிவதும் பெண்ணாலே எனும் பழமொழி இருக்கிறதே இதில் இரு விஷயங்கள் மிக நயனமாக மிக நளினமாக மறைக்கப் பட்டுள்ளன. இது ஒரு வஞ்சகமான பழமொழி என்று கூட சொல்லலாம்.

ஒரு நாய்க்கும் ஒரு மனிதனுக்கும் கல்யாணம். சேலை கட்டிய நாய்.

' நல்லது ஆவதும் பெண்ணாலே கெட்டது அழிவதும் பெண்ணாலே ' என்று இருந்த பழமொழியை ஆவதும் பெண்ணலே அழிவதும் பெண்ணாலே என்று சுருக்கி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

இந்தப் பழமொழி பெண்களை அதிகமாகப் பாதிக்கவில்லை. இந்திய புராணங்கள், இதிகாசங்களில் அசுரர்களைப் பற்றி படித்து இருப்பீர்கள். இந்த அசுரர்களுக்கு வாழ்வு அளித்தது பெண் தெய்வங்கள். அவர்களை அழித்ததும் பெண் தெய்வங்கள் தான்.  அந்த வகையில் இந்தப் பழமொழி வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் என்பது இன்னும் ஒரு  பழமொழி. ஊரான் பிள்ளை என்றால் ஊரில் உள்ள பிள்ளைகள் என்று அர்த்தம் ஆகாது. உங்களுடைய மனைவியைத் தான் ஊரான் பிள்ளை என்று சொல்ல வருகிறார்கள்.

மனைவி வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும் போது அந்த மனைவியைக் கணவன் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அவள் விருப்பப் படும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவளுடைய வயிற்றில் வளரும் உங்கள் பிள்ளை நன்றாக ஆரோக்கியமாகப் பிறக்கும் என்று சொல்ல வந்தார்கள். ஆனால், அந்தப் பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு ஊரான் பிள்ளை என்றால் ஊரில் உள்ள பிள்ளைகள் என்று தவறாகச் சொல்கிறார்கள்.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட மாதிரி எனும் ஒரு பழமொழி வருகிறது. இந்த இடத்தில் ஒரு மனைவி தன் புருஷனை விட்டு விட்டு அரசனைத் தேடிக் கொண்டு போவதாகப் பழமொழியின் அர்த்தம் போகிறது. அதன் அர்த்தம் அது இல்லீங்க. அரசன் என்றால் இங்கே அரச மரத்தைக் குறிக்கிறது.

அரச மரத்தின் காற்றை ஒரு பெண் சுவாசித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள நோய்கள் தீரும். குழந்தைப் பேறும் கிடைக்கும் என்பது சித்த வைத்தியத்தில் சொல்லப் படுகிறது. ஆக, பிள்ளை வேண்டும் என்பதற்காக புருஷனைக் கண்டு கொள்ளாமல் ஒருத்தி அரச மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறாள்.

வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். புருஷனைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் என்ன ஆகும். 'போடி உங்க அம்மா வீட்டுக்கு' என்று புருஷன்காரன் சொல்லுவானா சொல்ல மாட்டானா.

இப்போது சொல்லுங்கள். புருஷனுக்கும் பெண்சாதிக்கும் சண்டை வருமா வராதா. வரும் ஆனால் வராது என்று மட்டும் தயவு செய்து சொல்லி விட வேண்டாம். கண்டிப்பாக வரும்.

களவும் கற்று மற எனும் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது திருடுவதையும் நல்ல படியாகக் கற்றுக் கொண்டு அப்புறம் அதை மறந்து விடு என்று அந்த பழமொழி சொல்ல வருகிறது. திருடுவதைக் கற்றுக் கொண்ட ஒருவன் எப்படி ஐயா தன் தொழிலை மறப்பான்.

களவும் கற்று மற என்பது தவறு. களவும் கத்தும் மற என்பதுதான் சரியான பழமொழி. களவு என்றால் திருடு. கத்து என்றால் கயமை அல்லது பொய் பேசுவது. ஆக, திருடுவதையும் பொய் பேசுவதையும் மறந்து விடு என்று தான் அந்தப் பழமொழி சொல்ல வருகிறது. 'கத்தும்' என்ற சொல் 'கற்றும்' என்று மாறிப் போனது. பழமொழியும் தலைகீழாகிப் போனது.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் எனும் பழமொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்தப் பழமொழியின் படி பார்த்தால் இரண்டாயிரம் பேரைக் கொன்றால் தான் ஒருவன் முழு வைத்தியன் ஆவான் போல இருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரமாகக் கொல்பவனாக இருந்தால் அவன் எப்படி ஐயா வைத்தியன் ஆக முடியும்.

அந்தப் பழமொழியின் உண்மையான வடிவம் இதுதான். ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் என்று தான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் தாவரங்களின் வேர்களைக் கொண்டு தான் வைத்தியம் செய்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அதனால் பல ஆயிரம் வேர்களை ஒருவன் பார்த்து அறிய வேண்டும். அப்போதுதான் அவன் முழு வைத்தியன் ஆக முடியும் என்று பழமொழி சொல்ல வருகிறது. கடைசியாக, ஒரு பழமொழி வருகிறது.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா எனும் பழமொழி. மண்ணால் ஆன குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்று தான் பலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஆற்றில் நீர் வற்றிப் போகும் போது சின்ன சின்ன மணல் மேடுகளைப் பார்க்கலாம். அந்த மேடுகளைத் தான் குதிர்கள் என்று சொல்வார்கள்.

ஒருமையில் சொன்னால் குதிர். ஆக, அந்தக் குதிர்களை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. அது ஆபத்தில் கொண்டு போய் விடும். மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று தான் பழமொழி இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது. குதிர் எனும் சொல் குதிரையாக மாறிப் போய் விட்டது. மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று பழமொழி வர வேண்டும்.

5 கருத்துகள்:

  1. உங்கள் எழுத்தில் நகச்சுவையை ரசிக்கமுடிகிறது.நன்றாக பதில் எழுதுகிறீர்கள். அதுவும் ஒரு கலைதான்.
    கேள்விக்கான பதில்கள் அளிக்க உங்களின் தேடல் முயற்சியைப் பாராட்டுகிறேன். வளர்க.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதில்களில் நகைச்சுவையை ரசிக்கமுடிகிறது. வினாக்களுக்கான பதில்கலளைத் தேடும் முயற்சி பாராட்டத்தக்கது.
    கோ.புண்ணியவான்

    பதிலளிநீக்கு
  3. unngal pala poligalin villakkam miga nandru.migavum nandri

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா30/3/11, PM 7:32

    உங்கள் எழுத்தில் நகச்சுவையை ரசிக்கமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் பதிவு மிகவும் அருமை..
    மற்றும், எனக்கு ஒரு சந்தேகம்.. கழுதை கெட்டா குட்டி சுவரு... இந்த பழமொழிக்கு அர்த்தம் செல்லுங்கள்..

    பதிலளிநீக்கு