14 பிப்ரவரி 2019

கோவில் கோயில் எது சரி

சிலர் கோவில் என்று சொல்கிறார்கள். சிலர் “கோயில்” என்று சொல்கிறார்கள். விக்கிப்பீடியாவில் கோயில் எனும் சொல்லே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கோயில் எனும் சொல்லே அதிகம்.

அதிகமான தமிழ் மக்களும் கோயில் எனும் சொல்லையே பயன்படுத்துகின்றனர். ஆலயம் எனும் மற்றொரு சொல்லையும் பயன்படுத்துகின்றனர். நான் படித்த வரையில் ஆலயம் எனும் சொல்லைக் கம்பர் பயன்படுத்தவில்லை.

சிலர் *கோ* என்றால் *இறைவன்*, தலைவன். *இல்* என்றால் இல்லம், இருக்குமிடம். கோ+இல் = கோயில் என்பதுதான் சரி என்கின்றனர்.

மேலோட்டமான பார்வைக்கு இது சரி என்றே தோன்றும். ஆனால் இலக்கண விதி எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

இலக்கணப் பயன்பாட்டு வழி கோவில் என்பதே சரி. ஆனால் "கோயில்" என்கிற சொல்லும் நெடுங்காலமாய் நம்முடைய இலக்கியத்தில் இருந்து வருகிறது. தமிழ் மக்களின் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே கோயில் என்பது ஏற்கக்கூடிய பிழை என்று கூறலாம்.

தமிழில் *உடம்படுமெய்* என்று ஓர் இலக்கணப் பிரிவு உள்ளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வந்தால் அந்த இரண்டு உயிர்களையும் இணைத்திட *ய்*, *வ்* எனும் இரண்டு மெய்யெழுத்துகள் வரும்.

அதாவது *கோ* என்பது ஓர் எழுத்து. அந்த எழுத்தைப் பிரித்தால் (க்+ஓ) வருகிறது. *கோ* என்பதற்குப் பின்னால் *இல்* வருகிறது. (கோயில்/கோவில்)

*கோ* என்பதில் எனும் உயிர் எழுத்தும்; *இல் என்பதில் ** எனும் உயிர் எழுத்தும் இணைகின்றன. ஆகவே அந்த இடத்தில் *வ்* எனும் மெய்யெழுத்து தோன்றும். தோன்ற வேண்டும். புரியுதுங்களா.

ஆகவே *கோ*+*வ்*+*இல்* = கோவில் என்பதே சரி. கோயில் எனும் போது *கோ*+*ய்+*இல்* = கோயில் என்று *ய் உடம்படு மெய்யாக வந்து உள்ளது.

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். முதற்சொல்லின் முடிவு *இ*, *ஈ*, *ஐ* ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் *ய்* என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.

நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது. அதையும் பார்க்க வேண்டும். *இ, ஈ, ஐ வழி யவ்வும்; ஏனை உயிர் வழி வவ்வும்* என்கிறது. *ஏ* எனும் எழுத்திற்கு முன் இந்த இருமையும் உடம்படு மெய் என்றாகும் என்கிறது.

என்ன மண்டை குழம்புகிறதா. எனக்கும் குழப்பம் வந்து போய்விட்டது. நீங்களும் குழம்ப வேண்டாமா. என் தாய்மொழி தமிழ் என்றால் அது ஒரு செம்மொழி. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் இதை எல்லாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டாமா. 

கோவில் என்பதில் ஓகாரம் இருப்பதால் *வ்* உடன்படு மெய்தான் வர வேண்டும். என்ன செய்வது. தமிழ் மக்களின் வழக்கத்திலும் பழக்கத்திலும் கோயில் எனும் சொல் அதிகமாகவே இடம் பெற்று விட்டது.

அதை ஏற்றுக் கொள்ளும் பிழையாகவே ஏற்றுக் கொள்வோம். என்ன செய்வது. நானும் கோயில் எனும் சொல்லைத் தான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். பழக்க தோசம் யாரை விட்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2019

2 கருத்துகள்: