06 ஜனவரி 2022

மலேசியாவில் 527 தமிழ்ப்பள்ளிகள்; 80569 மாணவர்கள்; 8638 ஆசிரியர்கள்

1900-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் துன்பம் நிறைந்தவை. துயரங்கள் நிறைந்த துயரியல் காவியங்கள். நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டன.


தமிழர்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே நகரக் கூடாது. வெளியே போனால் தமிழர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும்.

அப்புறம் பின்நாட்களில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கடைச் சரக்குகளுக்குத் தெரியாமலா இருக்கும். நல்லா தெரிந்து நல்லா ‘பிளேன்’ போட்டுத்தான் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். ஆறாம் வகுப்பு அறிவு போதும். அதற்கு மேல் கூடுதலான படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் முதலாளிகளுக்கு ஆபத்து.


அதுதான் வெள்ளைக்காரர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் என்ன? மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசு பார்த்து நாற்பது காசாகப் பெருக்க வேண்டும். கல்லாவை நிரப்ப வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கையில் சொகுசாக வாழ வேண்டும்.

பொதுவாகவே அப்போது இருந்த பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இயங்கி வந்தன. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் எடுபிடிகளாகவே இருந்தார்கள். மன்னிக்கவும்.


உண்மையைத் தான் எழுதுகிறோம். அப்போதைய தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. அப்படிப்பட்டச் சூழ்நிலை. அதனால் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு குறைந்தும் போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியைத் ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார். தம்புசாமி பிள்ளையின் பெயர் வைக்கப்பட்டது.


1905-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப்பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. பினாங்கு மாநிலத்தைப் பொருத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும், 28 ஆண்டுகளுக்குப் பின்னர், 1958-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி மூடப்பட்டது.

1937-ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில பள்ளிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 1913-ஆம் ஆண்டில் கிள்ளான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிகள். மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை:


1920-ஆம் ஆண்டில் 122.
1925-ஆம் ஆண்டில் 235.
1930-ஆம் ஆண்டில் 333
1938-ஆம் ஆண்டில் 524.
1942-ஆம் ஆண்டில் 644
1943-ஆம் ஆண்டில் 292
1950-ஆம் ஆண்டில் 888
1960-ஆம் ஆண்டில் 662
2018-ஆம் ஆண்டில் 525
2021-ஆம் ஆண்டில் 527

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஆசிரியர்கள் 8,638 பேர்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்


2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள்:

*ஜொகூர்* மாநிலத்தில் 70 தமிழ்ப் பள்ளிகள். 12,335 மாணவர்கள். 1,145 ஆசிரியர்கள்.

*கெடா* மாநிலத்தில் 60 தமிழ்ப் பள்ளிகள். 7,518 மாணவர்கள். 899 ஆசிரியர்கள்.

*கிளாந்தான்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 36 மாணவர்கள். 9 ஆசிரியர்கள்.

*மலாக்கா* மாநிலத்தில் 21 தமிழ்ப் பள்ளிகள். 2,375 மாணவர்கள். 332 ஆசிரியர்கள்.

*நெகிரி செம்பிலான்* மாநிலத்தில் 61 தமிழ்ப் பள்ளிகள். 8,648 மாணவர்கள். 1097 ஆசிரியர்கள்.

*பகாங்* மாநிலத்தில் 37 தமிழ்ப் பள்ளிகள். 2,599 மாணவர்கள். 422 ஆசிரியர்கள்.

*பேராக்* மாநிலத்தில் 134 தமிழ்ப் பள்ளிகள். 11,645 மாணவர்கள். 1679 ஆசிரியர்கள்.

*பெர்லிஸ்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 72 மாணவர்கள். 11 ஆசிரியர்கள்.

*பினாங்கு* மாநிலத்தில் 29 தமிழ்ப் பள்ளிகள். 5,397 மாணவர்கள். 554 ஆசிரியர்கள்.

*சிலாங்கூர்* மாநிலத்தில் 97 தமிழ்ப் பள்ளிகள். 26,506 மாணவர்கள். 2,155 ஆசிரியர்கள்.

*கோலாலம்பூர்* மாநகரத்தில் 15 தமிழ்ப் பள்ளிகள். 3,443 மாணவர்கள். 335 ஆசிரியர்கள்.

*திரங்கானு, சபா, சரவாக்* மாநிலங்களிலும்; *லாபுவான்; புத்திராஜெயா* கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.


கல்விச் சட்டங்களின் பார்வையில் இதுவரையிலும் நான்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

மூன்றாவது ரசாக் அறிக்கை (Razak Report).

நான்காவது ரகுமான் தாலிப் அறிக்கை (Rahman Talib Report).

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் மட்டுமே இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட வேண்டும்.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாகவும் இருந்து வருகிறது. இயங்கி வருகிறது.

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.


கல்வி தொடர்பில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. முன்னாள் மலாயா தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்து இருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி. ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது.

தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இங்கே ’மாதிரி’ எனும் சொல் வருவதைக் கவனியுங்கள். சரி. இந்த ரசாக் அறிக்கையில் ஓர் இறுதி குறிப்பு உள்ளது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ரசாக் அறிக்கை 1956-இன் பரிந்துரையில் சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்பது தான் இறுதி குறிப்பு ஆகும். இதில் ஒளிவு மறைவு தேவை இல்லை. ரசாக் அறிக்கையை முழுமையாகப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.

முன்னாள் பிரதமர் நஜிப் 2012 செப்டம்பர் 11-ஆம் தேதி மலேசிய கல்வி பெருந்திட்டம் (2013 - 2015) எனும் ஒரு முன்னறிக்கையை வெளியிட்டார். பலருக்கும் தெரிந்த செய்தி.

அந்தத் திட்டம் மூலமாக நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது; கல்வியின் வழி தேசிய ஒற்றுமையை வளர்ப்பது; இந்த இரு நோக்கங்களைக் கொண்டதாக அறிவிக்கப் பட்டது.

அந்தக் கல்வி பெருந் திட்ட முன்னறிக்கையில் ஒரு முக்கிய அம்சம். சீன, தமிழ்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெருந்திட்ட அறிக்கையிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் அதைப் பற்றி எழுதுவதில் அச்சம் வேண்டாமே.

பெருந்திட்ட முன்னறிக்கை என்ன கூறுகிறது?

(Executive Summary E-7) - Range of schooling options are creating ethnically homogeneous environments.

2000-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 92 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 47 விழுக்காடு.

2011-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 96 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 56 விழுக்காடு.

இதில் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தேசிய ஒற்றுமைக்குள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம். இந்த அடிப்படையில் தான், தாய்மொழிக் கல்வியை எதிர்ப்பவர்கள் சொல்லி வரலாம்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தேச ஒற்றுமையைப் பாதிக்கலாம் என்பது அவர்களுக்குக் கவலை அளிக்கும் விசயமாகவும் இருக்கலாம். சரி.

பி.டி.என். (Biro Tata Negara) எனும் ஒரு தனிப்பட்ட துறையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தத் துறை இன ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளை நடத்துவதாகப் புகார்கள் வந்தன.

இந்த பி.டி.என். பயிற்சியின் விளைவு தான் இந்திய, சீன மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களால் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப் படுவதற்கு வழி வகுப்பதாக அரசல் புரசலானக் கசிவுகள்.

பி.டி.என். பயிற்சியின் விளைவுகளைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் புரிந்து கொண்டது. அதானால் பி.டி.என். பயிற்சிகளில் அந்த மாநில அரசு பணியாளர்களும் சரி; பள்ளி, கல்லூரி மாணவர்களும் சரி; கலந்து கொள்வதற்கு தடை விதித்தது. இந்த விசயம் பலருக்கும் தெரியாதது.

ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன. சரிபட்டு வராது.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுவது என்பது அல்வா கேசரி கிண்டும் அடுக்களைச் சமாசாரம் அல்ல. சட்டம், சடங்கு, சம்பிரதாயம், சனாதனம், சான்று என்று எவ்வளவோ இருக்கின்றன.

ஆக மலேசிய அரசியலமைப்பை அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியல் பார்வையில் சத்தியம் வெல்லும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது ஒரு தேச நிந்தனையாகும்.

இந்தக் கட்டத்தில் இந்த நாட்டின் வளப்பத்திற்காக மலேசிய இந்தியர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நினைவு கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றி மலேசிய அரசியல் அமைப்பில் என்ன சொல்லப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்குப் போராட வேண்டியது என்னுடைய கடமை. அனைவரின் கடமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.01.2022

சான்றுகள்:

1. A Short History of Tamil Schools in Malaya/ Malaysia - https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. First Tamil class was held in 1816 at the Penang Free School, founded by Reverend R.S. Hutchings, Colonial Chaplain of the Anglican Church. Formal Tamil schools were opened in the Straits Settlements by Christian missionary bodies in the first half of the 19th century.

 

1 கருத்து:

  1. https://nambikkai.com.my/detail/11951 - மலேசியாவுக்கு இந்தியா / தமிழநாடு மந்திரிகள் வந்தாலே பதவி பாரி[போகிறது . தலைப்பில் கட்டுரை எழுதுங்கள்

    பதிலளிநீக்கு