28 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 79

(விக்கிபீடியாவில் மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன். படித்துப்  பாருங்கள். உங்களுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.)
இணைய முகவரி:
http://ta.wikipedia.org/wiki/மலாக்கா
http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா_(சுல்தான்)

http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்


ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: அண்மையில் என் தோழியின் தந்தையார் இரண்டு பழைய கணினிகளை வீட்டுக்கு கொண்டு வந்தார். அந்தக் கணினிகள் இலவசமாகக் கிடைத்தவை என்று சொன்னார். அவருக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது. கடைசியில் அவருடைய நண்பர் RM 1560 க்கு இவரிடம் விற்று இருக்கிறார். ஒரு கணினி AMD Athlon 1050, 64 Ram, 20 GB வன் தட்டு; மற்றொன்று Intel Celeron 2.0, 64 Ram, 20 GB வன் தட்டு. அவர் அதிகமாக விலை கொடுத்து வாங்கி இருக்கலாம் என்று வேதனையாக இருக்கிறது. அவற்றில் கள்ள விண்டோஸ் செயலியைப் பதித்து இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்தக் கணினிகள்

ப: அதிகம் விலை கொடுத்து வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இந்த மாதிரியான கணினிகளை யாரும் பயன் படுத்துவது இல்லையே என்பது தான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. அவை பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்தக் கணினிகள். கணினி உலகில் இருந்து கரைந்து போன கணினிகள்.

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். இந்தப் பழைய கணினிகளைச் சும்மா கொடுத்தால் கூட வேண்டாம் என்று சிலர் சொல்லும் அளவுக்கு அவை மிகப் பழமையானவை. உங்கள் தோழியின் தந்தையார் ஏமாற்றப் பட்டிருக்கிறார். கணினிகளைத் திருப்பிக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி வரச் சொல்லுங்கள்.

விற்றவர் பிரச்னை கொடுத்தால் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏமாற்றியதாகப் புகார் செய்யுங்கள். அல்லது 1-800-887-800 எனும் எண்களுக்கு அழையுங்கள். கள்ளத் தனமான  விண்டோஸ் செயலியைப் பதித்து ஏமாற்றி உள்ளதாகப்  புகார் செய்யுங்கள். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

ஆஷா ராணி <ahsha145@yahoo.com>
கே: சார், வணக்கம். தமிழ் எழுத்துக்களில் TAM என்றும் TAB என்றும் இருக்கின்றன. இரண்டும் வேறு வகையைச் சேர்ந்தவையா. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. தெளிவு படுத்துங்கள்.

ப:
நல்ல கேள்வி. TAM என்றால் Tamil Mono-lingual என்று பொருள். தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டு இயங்குவது. ஆங்கில எழுத்துக்களைப் பயன் படுத்த முடியாது. TAB என்றால் Tamil Bilingual என்று பொருள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற முடியும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற முடியும்.

தமிழில் ஒரு கட்டுரை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இடையில் ஆங்கிலச் சொல் ஒன்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்றால் எழுத்துருக்கள் TAB முறையில் இருக்க வேண்டும். TAM முறையில் இருந்தால் ஆங்கில எழுத்துக்கள் வரா.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கத் தான் Unicode முறை அமலுக்கு வந்துள்ளது. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள லதா, சுருதி, மங்கல், கௌதமி, கார்த்திகா போன்ற எழுத்துருக்களைப் பார்த்து இருப்பீர்கள். அவை  யூனிகோடு முறையைச் சேர்ந்தவை. எதிர்காலத்தில் கணினி உலகில் எல்லாத் தமிழர்களும் இந்த யூனிகோடு முறையைத் தான் பயன் படுத்த வேண்டும்.

ஜெய்சங்கர் <jai_sankar@rocketmail.com>
கே: சூரிய ஒளியில் இயங்கக் கூடிய கணினித் தட்டசுப் பலகை (Key Board) வந்து விட்டதாக அமெரிக்காவில் உள்ள என் நண்பர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை சார்?

ப:
உங்கள் நண்பர் சொல்வது உண்மை. அதில் இன்னும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரிய ஒளியில் இயங்கும் அந்தத் தட்டசுப் பலகைக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது கம்பித் தொடர்புகள் இல்லாமல் இயங்கும் ஆற்றலைப் பெற்றது. அதாவது Solar Wireless Keyboard.

அந்தத் தட்டசுப் பலகையை சூரிய ஒளியில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிற்குள் வைத்து இருந்தாலும் போதும். சூரிய ஒளியைக் கிரகித்து தனது மின்கலத்தில் சக்தியைச் சேமித்துக் கொள்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லோஜிடெக் நிறுவனம் கண்டுபிடித்து இருக்கிறது. மலேசியாவின் பெரிய நகரங்களில் கிடைக்கின்றன.

விலை தான் கொஞ்சம் அதிகம். மலேசிய ரிங்கிட் 250. மனசு வைத்தால் வாங்கலாம். ஒரு சின்னக் கணக்கு போடுங்களேன். ஒரு தடவை குடும்பத்தோடு வெளியே போய்ச் சாப்பிட்டால் நூறு ரிங்கிட் வருகிறது. இரண்டு தடவை போனால் 200 ரிங்கிட். அப்புறம் பெட்ரோல், டோல், டிப்ஸ், அது இது என்று வந்து சேர்ந்து விடும் இல்லையா. இரண்டு தடவை போகாமல் இருந்தால் ஒரு கம்பியில்லா சூரிய ஒளி தட்டச்சு பலகையை வாங்கி விடலாம்.

எல்லாம் சரி. சூரிய ஒளியில் இயங்கும் மடிக்கணினிகளும் விற்பனைக்கு வந்து விட்டன. அது தெரியுமா உங்களுக்கு. Solar Powered Computers என்று சொல்கிறார்கள். அந்தக் கணினிகளுக்கு மின்சாரம் தேவை இல்லை. கணினி உலகம் எங்கேயோ போய் விட்டது ஐயா. விரட்டிப் பிடியுங்கள்.

மகாதேவன் வி.கே.  <mthevan31@gmail.com>
கே: நம்முடைய படத்தை ஒரு விளம்பரப் படமாக மாற்றும் ஒரு நிரலி இணையத்தில் இருப்பதாகக் கேள்வி பட்டேன். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

ப:
நீங்கள் சொல்வது Photo Funia எனும் இணையத் தளதைச்  சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது ஓர் இலவசச் சேவை நிறுவனம். உங்களுடைய படத்தைப் பதிவேற்றம் செய்தால் போதும். ஒரு பெரிய கட்டிடத்தில் உங்கள் படம் பெரிதாகத் தொங்கிக் கொண்டிருப்பது போல இன்னொரு படத்தை உருவாக்கித் தருவார்கள். இரண்டு இளம் பெண்கள் அந்தப் படத்தை மாட்டுவது போலவும்  பதாகையைச் செய்து கொடுப்பார்கள்.

அருமையான தொழிநுட்ப இணையத் தளம். http://www.photofunia.com/ எனும் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 300 வகையான விளம்பரப் படங்கள் உள்ளன. எதைத் தேர்ந்து எடுப்பது எதை விட்டு வைப்பது என்று உங்களுக்கே தலை சுற்றி விடும். என்னுடைய வலைத்  தளத்தில் இருந்து அந்த இணையத் தளத்திற்கு  நேரிடையாகத் தொடர்பு கொள்ள முடியும்.

21 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 78

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 21.11.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)

எம்.அன்பரசன், ஈப்போ (குறும் செய்தி 22.09.2010)
கே: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணி புரிகிறேன். என் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் கணினியைப் பயன் படுத்துகிறேன். திடீரென்று கடவுச் சொல்லை மறந்து விட்டேன். கடவுச் சொல் எதுவும் கொடுக்காமல் எந்த ஒரு கணினியிலும் நுழைய முடியும் என்கிற இரகசியம் உங்களுக்குத் தெரியும் என்று என் நண்பர் சொல்லி இருக்கிறார். எப்படி என்பதை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். தயவு செய்து உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.

ப: உங்கள் அவசரம் புரிகிறது சார். உதவி செய்வதில் தப்பு இல்லை. இருந்தாலும் நேற்று வரை ஞாபகத்தில் இருந்த கடவுச் சொல் எப்படி பொழுது விடிந்ததும் மறந்து போகும்.

அந்த அளவுக்கு ஞாபக மறதி வரக் கூடாது பாருங்கள் சார். அதுவும் ஓர் அலுவலகத்தில் ஒரு முக்கியமான பதவியில் இருக்கிறீர்கள். இன்றைக்கு ஓர் இம்மிக் கடவுச் சொல்லை மறக்கின்றீர்கள். நாளைக்கு உங்கள் மனைவி மக்களை மறக்க் மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.

தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் அலுவலகத்தில் பணி புரியும் மற்றவர்களின் கணினிகளுக்குள் நுழைவதற்கு நீங்கள் ஒரு மகாபெரும் திட்டத்தில் இறங்கி இருக்கலாம் என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா
(குறும் செய்தி 14.08.2010)
கே: சார், என்னுடைய பேரக் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டுகள் என்றால் ரொம்ப பிடிக்கும். எத்தனை சி.டிக்கள் வாங்கினாலும் புதுமையானதாகக் கேட்கிறார்கள். குழந்தைகள் பயன் படுத்தக் கூடியவையாக இருக்க வேண்டியது என்பது முக்கியம். இதன் வழி பல பெற்றோர்கள் நன்மை அடைய முடியும். அதனால், உங்கள் உதவியைக் கேட்கிறேன்.

ப: குழந்தை களுக்கு இலவசமாக விளையாட்டுகளைக் கொடுக்கும் இளையத் தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சில இணையத்தளங்களின் முகவரிகளைத் தருகிறேன்.

இலவசம் என்பதால் கண்ட கண்ட விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவற்றில் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

www.mininova.org
http://sharereactor.com
www.brothersoft.com


கீழே காணும் இணைய முகவரியில்  மீன் பிடிப்பது சம்பந்தமான ஒரு விளையாட்டு இருக்கிறது. அருமையான விளையாட்டு. என்னுடைய இணைய வலைக்குச் சென்றால் நேரடியாக அங்கே இருந்து தொடர்பு கிடைக்கும்.

http://hotfile.com/dl/77042994/8e8ed12/Angeln_Simulation_Portable.rar.html

இன்னொரு விளையாட்டு

http://hotfile.com/dl/81844005/533b271/B17_Gunner.rar.html
எனும் இடத்தில் இருக்கிறது. இது போர் விமானத்தில் பறந்தவாறு எதிரிகளின் விமானங்களைச் சுடும் விளையாட்டு. Regular Download என்பதைச் சொடுக்கி விட்டு ஒரு நிமிடம் காத்திருங்கள். பதிவிறக்கம் செய்ய சிரமம் என்றால் என் இணையத் தளத்திற்குச் சென்றால் சுலபமாக இருக்கும்.

சந்திரலேகா த/பெ சந்திரமோகன், தைப்பிங்
கே: நான் ஒரு தமிழ்ப் பள்ளியில் படிவம் ஆறு படிக்கும் மாணவி. உங்களுடைய கேள்வி பதில்களை வாரம் தவறாமல் படித்து வருகிறேன். கணினியில் ஓர் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். எனக்கு தமிழ்-ஆங்கில மின் அகராதி வேண்டும். கணினியில் பதித்துக் கொண்டு பாடங்களைச் செய்யலாம்.

ப: அன்புள்ள சந்திரலேகா, உங்களுடைய நீண்ட மின்னஞ்சல் கடிதம் என் மனதைத் தொட்டு விட்டது. கடிதத்தைத் தமிழிலேயே பிழை இல்லாமல் தட்டச்சும் செய்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய கணினித் திறமை மென்மேலும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்களுக்காக ஒரு தமிழ்-ஆங்கில மின் அகராதியைத் தேர்வு செய்து உள்ளேன். கீழ்காணும் இடத்தில் அந்த மின் அகராதி இலவசமாகக் கிடைக்கிறது. போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/

எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய அலைபேசிக்கு அழையுங்கள்.

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா
கே: தமிழில் Key Board மென்பொருள் மலாக்காவில் எங்கே கிடைக்கும்?

ப: கோலாலம்பூரில் கூட கிடைக்காது என்று நினைக்கிறேன். மலாக்காவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. விசாரித்துப் பாருங்கள். இன்னும் ஒரு விஷயம். இப்போது தமிழில் கணினித் தட்டச்சு பலகை வெளி வருவது மிகவும் இல்லை.

ஏனென்றால், இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. Phonetics எனும் 'ஒலியியல் முறை'யைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம். அஞ்சல் முரசை எப்படி பயன் படுத்துகிறீர்களோ அதே மாதிரி.

தனியாகத் தமிழ்த் தட்டச்சுப் பலகையை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் 'ஒலியியல் விசைப் பலகைகள்' ஆகும்.

http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html

எனும் இடத்தில் மின் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு On Screen Keyboard.

அப்படி என்றால்  தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம்.  தமிழில் 'திரை விசைப் பலகை'  என்று சொல்லலாம். அது சரி. பெட்டாலிங் ஜெயாவில் இருந்து கொண்டு ஏன் மலாக்காவில் கிடைக்குமா என்று கேட்கிறீர்கள்.

வெங்கடாசலம் <vengada.salam@yahoo.com>
கே: PDF கோப்புகளை Doc கோப்புகளாக மாற்ற ஏதாவது நிரலி இலவசமாகக் கிடைக்குமா?

ப: PDF என்றால் Portable Document Format. தமிழில் தளம் சாரா ஆவண முறைமைக் கோப்பு என்று அழைக்கலாம். ஒரு கணினியில் உள்ள சில ஆவணங்களைப் படங்களாக மாற்றி அடுத்த கணினியில் பயன் படுத்தும் முறைமைக்குப் பெயர் தான் பி.டி.எப். முறைமை.

வேறு எந்தக் கணினியிலும் அந்த ஆவணம் படத் தொகுப்பாகத் தான் தெரியும். இந்த முறைமையில் உள்ள ஆவணங்களை வேறு ஒரு முறைமைக்கும் மாற்றலாம். அதாவது Document, HTML, Power Point போன்ற முறைமைகளுக்கு மாற்ற முடியும்.

அப்படி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்று தனியாக ஒரு சிறப்பு நிரல் தேவை. இந்த நிரலிகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறார்கள். இருந்தாலும்

http://www.tukanas.com/softwares/filesconverter.exe


எனும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.


முகமது அப்துல்லா <m.abdullah36@yahoo.co.in>
கே: நம்முடைய கைப்பேசியில் உள்ள பேட்டரி தீர்ந்து விடுகிறது. அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும். பேட்டரி சார்ஜர் கைவசம் இல்லாத போது என்ன செய்வது?

ப: கைப்பேசியின் மின்கலத்திற்கு புது ஊட்டம் (Recharge) செய்ய மறந்து போய் வெளி இடங்களுக்குச் செல்வது பலருக்கு வாடிக்கையான விஷயம். அந்த மாதிரியான கட்டத்தில் பேட்டரி எல்லாம் தீர்ந்து போய் கைப்பேசியே சொந்தமாக அணைத்துக் கொள்ளும் நிலைமை கூட வரலாம்.

இந்த இக்கட்டான நேரத்தில் *3370# எனும் எண்களைச் சொடுக்கி விடுங்கள். ஒரு சில விநாடிகளில் உங்கள் மினகலத்தின் சக்தி 50 விழுக்காடு அதிகரித்து நிற்கும்.

அப்புறம் நீங்கள் ஒரு பத்து பதினைந்து அழைப்புகள் வரை அழைக்க முடியும். சரியா. இந்த சூட்சமம் நோக்கியா கைப்பேசிகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

சுரேஜ் தேவ்  <h2_o@rocketmail.com>
கே: கணினியை அடிக்கடி On, Off செய்வதால் அதன் ஆயுள் காலம் குறையும் என்று சொல்கிறார்கள். உண்மையா?


ப: கணினியை On செய்வது என்றால் மின்சாரப் பொத்தானைச் சொடுக்கி அதற்கு மின்சாரம் கொடுப்பது. Off  என்றால் கணினிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்து விடுவது.

இதைப் பற்றி சென்னையில் இருக்கும் கணினி அறிஞர்கள் சிலரிடம் இதைப் பற்றி விசாரித்தேன். அவர்களிடம் இரண்டு விதமான கருத்து கள் உள்ளன.

ஒவ்வொரு முறையும் கணினிக்கு மின் இணைப்பைக் கொடுக்கும் போது அதற்கு Thermal Shock எனும் வெப்ப அதிர்வு ஏற்படுகிறது. நல்ல தூக்கத்தில் இருக்கும் ஒருவரைத் திடீரென்று அடித்துத் தட்டி எழுப்பினால் எப்படி இருக்கும். அந்த மாதிரியான கதைதான் இங்கேயும்.

அதனால் கணினிக்குள் இருக்கும் தாய்ப் பலகையின் சிப்புகள் கெட்டுப் போகலாம். Hard Disk எனும் வன் தட்டு மின் அதிர்வால் கெட்டுப் போகலாம். இது ஒரு சில அறிஞர்களின் கருத்து.

இன்னொரு தரப்பினர் இப்படி சொல்கிறார்கள். கணினியின் மின் இணைப்பை நிறுத்தாமல் விட்டால் வன் தட்டு சுழன்று கொண்டே இருக்கும். அதனால் வன் தட்டு கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். சரி.

என்னுடைய கருத்து இது தான். அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்கு கணினியில் வேலை எதுவும் இல்லை என்றால் கணினியை அடைத்து விடுவது நல்லது.

இன்னும் ஒரு மணி நேரத்தில் வேலை இருக்கிறது என்றால் கணினியை அடைக்க வேண்டாம். Monitor எனும் கணினித் திரையை மட்டும் அடைத்து விடுங்கள்.

14 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 77

(21.11.2010 ஞாயிற்றுக் கிழமை கேள்வி பதில்களை காலை 10.00 மணிக்கு மேல் பார்க்கலாம்) 
 

இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங்
கே: கணினியை வைரஸ் தாக்கிவிட்டது என்கிறார்களே, வைரஸ் என்றால் என்ன?


ப: கணினி வைரஸ் என்பது கணினியைத் தாக்கும் ஒரு நச்சு நிரலி. கணினித் துறையில் தேர்ச்சிப் பெற்ற நிபுணர்களால் எழுதப் படும் சின்னச் சின்ன நிரலிகள். இந்த நிரலிகளை விஷமத் தனத்திற்காக அல்லது விளையாட்டிற்காக எழுதுவார்கள்.

இந்த நச்சு நிரலி ஒரு கணினிக்குள் நுழைந்ததும் கணினி முழுமையும் பரவி சேதம் விளைவிக்கும். ஒவ்வொரு வைரஸ் நச்சு நிரலிக்கும் தனித் தனியாக சில எழுத்துக் கோவைகள் இருக்கும். அவற்றுக்குப் பெயர் Strings. இதை Signatures என்பார்கள்.

இதுதான் நச்சு நிரலியின் கையெழுத்து. இந்தக் கையெழுத்தை வைத்துதான் ஒரு நச்சு நிரலியின் தலை எழுத்து நிர்ணயம் செய்யப் படுகிறது. Vital Information Resources Under Siege என்பதன் சுருக்கமே Virus.

1960 ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவம். கணினி அறிஞர்கள் கணினியை இயக்குவதற்கான அடிப்படை நிரலிகளை எழுதிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக ஒரு நிரலியைக் கண்டுபிடித்தார்கள். தானாகவே மாறும் தன்மை கொண்ட நிரலி. அதற்கு Self Altering Automata என்றும் பெயர் வைத்தார்கள்.

1980 ஆம் ஆண்டில் அந்த நிரலி ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு வெளியாகி விஷமிகளின் கைகளில் சிக்கியது. அதுவே இப்போது வைரஸ் எனும் பெயரில் கணினி உலகைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது.

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட்.
கே: நம்முடைய கணினியின் Operating System எனும் இயங்கு தளத்தை 'சி' எனும் கணினி மொழியில் எழுதி இருக்கிறார்களாம். உண்மையா? முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி எது?
ப: நாம் ஒரு தமிழரைப் பார்த்தால் தமிழில் பேசுகிறோம். சீனச் சகோதரரைப் பார்த்தால் நம்முடைய மலேசிய மொழியைப் பயன் படுத்துகிறோம்.


ஒரு வெள்ளைக்காரரைப் பார்த்தால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இல்லையா. அந்த மாதிரி கணினிக்குத் தெரிந்த மொழி ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் Machine Language.

கணினி புரிந்து கொண்டு செயல் படுகின்ற மொழி. அந்த மாதிரியான மொழிகளில் C, C++, C#, Java, Pascal, Cobra என்று ஒரு நூறு மொழிகள் உள்ளன. இவற்றில் எல்லாம் மிகவும் வலிமையான மொழி C மொழி ஆகும்.

விண்டோஸ் இயங்குதளம் அந்த மொழியில் தான் எழுதப் பட்டு இருக்கிறது. மிகவும் பிரமாதமான மொழி. அந்த மொழியை படிப்பதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த மொழி ஜாவா. அதைப் படிக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன.

சரி. முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி Fortran. ஐ.பி.எம் நிறுவனம் 1957 ஆம் ஆண்டில் உருவாக்கியது. FORmula TRANslation என்பதன் சுருக்கம். கணித அறிவியல் பணிகளுக்கு இந்த மொழி பயன் படுத்தப் படுகிறது.

ஒரு கல்லூரி மாணவி, ஜோகூர்

கே: நான் உங்களிடம் PHP கணினி மொழி பற்றிய கேள்வியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் ஒரு கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று யாரோ கேட்ட கேள்வியை நான் கேட்டதாகப் பத்திரிகையில் போட்டு இருக்கிறீர்கள். ஒரு கல்லூரியில் கணினித் துறையில் படிக்கும் மாணவிக்கு 'பார்மேட்' செய்யத் தெரியாதா? என்னுடன் படிப்பவர்கள் இது கூடவா எனக்குத் தெரியவில்லை என்று நினைக்க மாட்டார்களா?
ப: அப்படியா. மடிக்கணினியை Format செய்வது என்பது கணினி சம்பந்தமான ஒரு நல்ல கேள்வி. எல்லாருக்கும் பயன்படும் கேள்வி. அந்தக் கேள்வி உங்களுடைய கணினித் திறமையைச் சிறுமை படுத்தி விட்டதாகச் சொல்கிறீர்கள். நீண்ட வசை மொழிகளை வேறு எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி.


உங்களுக்கு ஒன்று தெரியுமா. உலகத்திலேயே மிகச் சிறந்த சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி Mr.Bean. அந்த மிஸ்டர் பீனின் மனைவி சுனேத்ரா ஓர் இந்தியர்.

ஓர் இந்தியரைக் கல்யாணம் செய்து கொண்டதால் மிஸ்டர் பீன் என்கின்ற ரோவான் அட்கின்சனை ஆங்கிலேயர்கள் தவறாக நினைக்கவில்லையே.

அதனால் மிஸ்டர் பீனின் கலைத் திறைமை சிறுமைப் பட்டுப் போகவில்லையே. பார்க்கும் பார்வைகள் வேறு. பாவனைகளும் வேறு.

கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' உலவியை Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. சரி. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த நரிப் பிழம்பின் சாதனைகளைக் கண்டிப்பாக இங்கே சொல்ல வேண்டும்.


இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த உலவி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸக்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த

நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத் தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள். ஆக, வேகமாகவும் பாது காப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவம் அமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல் படுகிறது.

தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி. அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன.

http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.

11 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 76

(அன்பு வாசகர்களே, உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. சென்ற அக்டோபர் மாதம் தென்னிந்தியா சுற்றுலா போய் இருந்தேன். கொடைக்கானல், இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இணைய வசதிகள் உள்ளன. இருப்பினும், மலேசிய நண்பன் நாளிதழ் ஆசிரியருடன் இணையத் தொடர்பு கொள்வதில்தான் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. அதனால், இரண்டு வாரங்களுக்கு கேள்வி-பதில் அங்கம் இடம் பெறவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.)

ஜி.இராமன் graman@tm.com.my
கே: சில பெற்றொர்கள் Streamyx இணையத் தொடர்பைப் பொருத்திக் கொள்வதால் பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் பயப்படுகிறார்கள். இதைத் தடுக்க வழி இருக்கிறதா?

ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இருந்தாலும், பிள்ளைகள் பார்க்கக் கூடாத படங்களைப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் ஒரு வகையில் பெற்றோர்களே.

பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு இவர்கள் பார்க்க வேண்டிய படங்களைப் பார்த்து முடித்து, அந்தப்
படங்களுக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யும் போது சேவலும் கூவி விடுகிறது.

அரக்கப் பரக்க படுக்கப் போகும் போது
சி.டி.யை மறந்து விடுகிறார்கள். மறுநாள் பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் அந்தப் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பழியை எதிர்வீட்டு எல்லம்மா மீதும் பக்கத்து வீட்டு பார்வதியின் மீதும் போட்டு தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வார்கள். உள்ளங் கையில் புண்ணை வைத்துக் கொண்டு கண்ணாடி மீது குறை சொல்வது தப்பு.
http://www.sofotex.com/downloads/d94055.html
எனும் இணையத் தளத்திற்குப் போய் Parental Control Flter எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.


எஸ்.பி.பாலகிருஷ்ணன்   oum9100@yahoo.com.sg
கே: என்னிடம் அசல் விண்டோஸ் XP இருக்கிறது. கண்னியை விற்றவர் அதை என்னிடம் கொடுத்தார். இப்பொழுது கணினியை இயக்கியதும் This copy of window is not genuine என்று வருகிறது. அப்படி என்றால் என்னுடைய விண்டோஸ் செயலி போலியானதா?

ப: நல்ல கேள்வி. உங்களுடைய விண்டோஸ் XP உண்மையானதுதான். அதில் கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம். இருந்தாலும் என்ன நடந்திருக்கலாம். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. என்ன தவறு என்பது எனக்குத் தெரியும். அந்தத் தவறை இங்கே சொன்னால் எனக்குதான் பிரச்னை.

என் நண்பருக்கும் இந்த மாதிரி நடந்திருக்கிறது. உங்களிடம் கணினியை விற்றவர் அசல் விண்டோஸைப் பயன் படுத்தவில்லை என்பதை
அவரிடமே போய் புகார் செய்யுங்கள். பிரச்னையைப் பதற்றம் இல்லாமல் சொல்லுங்கள். தீர்த்து வைப்பார்.

அவர் பிடிவாதம் செய்தால், அதற்கும் வழி
இருக்கிறது. சமாதானமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்க்கலாம். சிங்கப்பூரில் இந்த மாதிரியான சிக்கலகள் குறைவு. வேதனையாக இருக்கிறது.

Raju Murali   <raju_pollathavan@yahoo.com>
கே: சார், வணக்கம். நான் ஒரு கல்லூரி மாணவன். எனக்குத் தமிழ் மொழியின் மீது மிகவும் பிரியம். எனக்கு சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம், மற்றும் பல நிறைந்த இணையத் தளம் வேண்டும். சார், உதவி செய்யுங்கள்.

ப: உங்களுடைய மின்னஞ்சலில் நீங்கள் ஒரு பொல்லாதவன் என்று பதிவு செய்து இருக்கிறீர்கள். உண்மையிலேயே பொல்லாதவரா. இருந்தாலும் தமிழ் மொழி யின் மீது ஏற்பட்டுள்ளஇணக்கத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். http://www.tamilnation.org/literature/anthologies.htm எனும் இணையத் தளத்திற்குப் போய் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி முத்துக் குளியுங்கள்.

அங்கே இருந்து பார்த்தால் தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல் தெரியும். வாழ்த்துகள்.

வனஜா முத்து, ஜாலான் செராஸ், கோலாலம்பூர்
கே: எனக்கு சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுகள் வேண்டும். அதிகமான விலையில் விற்கிறார்கள். வாங்கிக் கொடுக்க சிரமமாக இருக்கிறது. உங்களுடைய உதவி தேவை சார்?

ப:
இல்லாதவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வதே நம்முடைய நோக்கம், நம்முடைய இலட்சியம். இந்த வாரம் ஒரு புதிய விளையாட்டின்
இடத்தைத் தருகிறேன். ஒவ்வொரு வாரமும் ஓர் இடம். சரியா. இந்தத் இணையத் தளம் பசிபிக் மாக்கடலில் மேற்கு சமோவா தீவில் இருக்கிறது.

உலகில் உள்ள விளையாட்டுகள், படங்கள், செயலிகள் எல்லாவற்றையும் கோடிக்கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

ஏழை நாடுகளுக்கு இலவசமாகக் கொடுப்பதே இவர்களுடைய வேலை. அவர்களுடைய கணக்கு ஏழைகள், ஏழை நாடுகள். அவ்வளவுதான். பாலித் தீவிற்குப் போயிருந்த போது தெரிய வந்தது. http://rapidshare.com/files/254436672/Tropix_DL.exe எனும் தளத்திற்குப் போய் Free User என்பதைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள் ளுங்கள். இதைத் தயாரித்தவர்கள் செலவு செய்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர்களுக்கு கிடைத்த வருமானம் 36 மில்லியன் டாலர்கள். 1800 மடங்கு பணம் பார்த்து விட்டார்கள். இப்பொழுது இலவசமாகக் கிடைக்கிறது.

ஆர்.ஜெகநாதன், சிம்பாங் அம்பாட், தைப்பிங்
கே: Computer எனும் சொல் எப்படி உருவானது? அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ப:
Compute எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் Computer எனும் சொல். Compute என்றால் கணக்கிடுதல் என்று பொருள். அந்தச்
சொல்லில் இருந்து வந்ததைத் தமிழில் கணினி என்கிறோம்.

கணினி என்பது தூய்மையான தமிழ்ச் சொல். இந்தக் 'கம்பியூட்டர்' எனும் சொல்லுக்கு வேறு மாதிரியாகவும் விளக்கம் கொடுக்கிறர்கள். Computer எனும் சொல்லின் ஒவ்வோர் எழுத்தையும் பிரித்து அதற்கு விளக்கம் இப்படித் தரப் படுகிறது. 
Commonly Operated Machine Particularly Used for The Education and Research.

பொ.செல்லத்தேவன், பத்துக்கேவ்ஸ், கோலாலம்பூர்
கே: 16 Bit, 32 Bit, 64 Bit Operating System என்கிறார்களே அப்படி என்றால் என்ன? எதை வைத்து இந்த எண்களைக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்?
ப: Operating System என்றால் ஒரு கணினியை இயக்குகின்ற முறைமை. கணினியை இயக்குவதற்கு பல நிரலிகள் இருக்கலாம். இருந்தாலும் ஆகப் பெரிய இயக்க முறைமைக்குத் தான் Operating System என்று பெயர். Windows Operating System அவற்றுள் ஒன்று. இந்த இயக்க முறைமைதான் ஒரு கணினியைச் செயல் பட வைக்கும் தலையாய இயக்கம். சுருக்கமாகத் தமிழில் இயங்குதளம் என்கிறோம்.

இந்த இயக்க முறைமை இல்லை என்றால் கணினி இயங்காது. இந்த இயக்க முறைமையில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல்கள் பரிமாறப் படுகின்றன அல்லது எவ்வளவு வேகத்தில் அலசப் படுகின்றன என்பதை இந்த 16, 32, 64 எண்கள் குறிக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த கணினிகள் 16 Bit அளவில் இயங்கின. பத்து வருடங்களுக்கு முன்னால் வந்தவை 32 Bit அளவில் இயங்கின. இப்போது வரும் கணினிகள் 64 Bit அளவில் இயங்குகின்றன. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் ஒரு மில்லியன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆற்றலை இப்போது வரும் கணினிகள் பெற்று உள்ளன. நிரலி என்பது வேறு. கணினி இயக்க முறைமை என்பது வேறு.

வி.எஸ்.வி.வெங்கடாசலம்  <venkatnelah@gmail.com>கே: சார், என்னுடைய கைப்பேசியில் (Handphone) ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன்படுத்த ஆசைப் படுகிறேன். இணையத்திலிருந்து அந்த அகராதியைப் பதிவிறக்கம் செய்து கைப்பேசியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கைப்பேசியில் தான், கணினியில் அல்ல. என் நண்பர் சொல்கிறார். கணினியைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியும், கைப்பேசி விஷயங்கள் அதிகம் தெரியாது என்று. உங்களால் முடியும் என்று நான் பந்தயம் கட்டி இருக்கிறேன். உங்கள் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார்?
ப:
கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன் படுத்த முடியும். அது ஒன்றும் பெரிய வர்ம சாஸ்திரம் அல்ல. இந்த மாதிரியான சின்ன
விஷயங்களுக்கு எல்லாம் பந்தயம் கட்ட வேண்டாம். ஆரோக்கியம் அல்ல.

http://www.freelang.net/dictionary/tamil.php எனும் இணையத்தளத்திற்குப் போங்கள். ரமேஷ் கௌரி ராகவன் என்பவர் ஓர் அருமையான செயலியை உருவாக்கிக் கொடுத் திருக்கிறார். அவருக்கு முதலில் நன்றி சொல்வோம்.

இந்த அகராதியைக் கணினிக்குள் பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள். அப்புறம் கைப்பேசிக்குள் பதிவேற்றம் செய்யலாம். அதன் பின்னர் உங்கள் கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகர வரிசை புன்னகை பூக்கும்.

சில கைப்பேசிகளில் அந்த அகர வரிசையை 3GP முறைமைக்கு மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம். 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

பிரச்னை இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்கள். மிகவும் சிரமமாக இருந்தால் என் கைப்பேசி 012-5838717 க்கு அழைக்கலாம். தமிழ் எழுத்துருகள் (Fonts), விளையாட்டுகள், ஆவணங்கள் என்று நிறைய இலவசமாகக் கொடுக்கிறார்கள். இணையத்தில் இலட்சக்கணக்கானவர் தமிழுக்காகப் பல வகைகளில் உதவி செய்கிறார்கள்.

சிவனேஸ் ஈஸ்வரி sivanes1526@gmail.comகே: சார், வணக்கம். இணையத்தின் மூலமாக வேலை செய்வது பற்றி இன்று காலை கைப்பேசியில் பேசினேன். அதற்கு நீங்களும் உங்கள் மகன் ஸ்ரீ முருகமுதன் அவர்களும் நல்ல பதில்களைக் கொடுத்தீர்கள். நன்றி. Yayasan Kemajuan Sosial Malaysia எனும் அற நிறுவனத்தில் சில மாதங்கள் Tele Working பற்றி படித்தேன். சொந்தமாக வேலையைத் தேடிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார்கள். இணையத்தில் வேலைத் தேடி தரும் நிறுவனங்கள் எத்தனையோ உள்ளன. இருந்தாலும் இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து உதவி செய்யுங்கள்.
ப:
நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டு சில வாரங்களாகி விட்டன. Tele Working என்பதை தொலைநிலைப் பணி என்று தமிழில் சொல்லலாம்
அல்லது இணைய வழி வேலை என்றும் சொல்லலாம். இப்போது உலகமே பொருளாதார வகையில் ஒரு மந்தமான நிலையில் இருக்கிறது.

மலேசியப் பிரதமரிடம் பல்கலைக்கழகப் படிப்பு உதவி பெறும் குமாரி.காஞ்சனா


உலகமே அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதால் ஏற்படும் ஒரு இக்கட்டான நிலைமை. எல்லாம் ஜார்ஜ் புஷ் முன்பு பண்ணிய வேலை. ஒரு சில மாதங்கள் பொறுத்து தொலைநிலைப் பணிகளில் ஈடுபடுவது நல்லது என்று நான் நினக்கிறேன். இருப்பினும்

http://www.typeinternational.com/
http://www.online-dataentry.com/
http://my.88db.com/


எனும் இடங்களுக்குப் போய் முயற்சி செய்து பாருங்கள். உறுதியாக எதையும் சொல்ல முடியாது. உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுகள்.

10 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 75




சரவணன் சற்குணன், தம்பின்
கே: கணினி மூலமாக மின்சாரம், தண்நீர், அஸ்ட்ரோ, இண்டா வாட்டர் சேவைக் கட்டணங்களைக் கட்டுவது தேவை இல்லாத தலைவலிகள் என்று சிலர் புலம்புகிறார்கள். உங்கள் கருத்து என்ன?
மலேசியா அஸ்ட்ரோ நிறுவனத்தின் சின்னம். மலேசியக் கோடீஸ்வரர் திரு.அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிறுவனம்

ப: வீட்டில் இருக்கும் மனைவி ஆசை ஆசையாகச் செய்து கொடுக்கும் இட்லி தோசை இருக்கிறதே அது சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பாருங்கள், பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பார்வதி அம்மாள் கடையில் சுட்டுத் தரும் இட்லி தோசை மட்டும் ரொம்பவும் பிடிக்கும். ரொம்பவும் ருசியாக இருக்குமாம். இது எல்லாம் ஒரு நினைப்பு. அந்த நினைப்புதாங்க  பிழைப்பையே கெடுக்கிறது. மனைவியின் அருமை போகப் போகத்தான் தெரியும். அப்படித் தாங்க எல்லாம்.

உலகமே கணினி மயமாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கணினி இல்லை என்றால் மனுக்குலம் இயங்காது எனும் ஒரு நிலைமை ஏற்படப் போகிறது. உண்மையிலும் உண்மை.

அதற்குள் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன கணினி, தேவையில்லாத ஒரு பிரச்னை என்று நீங்கள் நினைத்தால், பின்னர் பிரச்னை உங்களுக்குத்தான்.

ஏனென்றால், கணினி இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. அப்போது நீங்கள் நிச்சயம் பின் தள்ளப்படுவீர்கள். அப்புறம் உங்கள் சந்ததியினர் உங்களை மதிப்புக் குறைவுடன் பார்க்கலாம்.

உலகளாவிய ஞான சூன்யமாகப் பார்த்தாலும் பார்க்கலாம். அந்த மாதிரியான நிலைமை வந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் கணினியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். படித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.

ஆசிராவரணி, தாமான் இண்டா, தெலுக் இந்தான்
கே: கணினி மனிதனின் அறிவை மிஞ்சி விடுமா?
எதிர்கால மடிக்கணினி

ப: நல்ல கேள்வி. மனிதனைப் போல கணினியால் சிந்திக்க முடியாது. நல்லது கெட்டது சரி பிழை என்று எதுவுமே அதற்கு தெரியாது. தன்னை உருவாக்கியது யார் என்றும் தெரியாது. ஆனால், மனிதன் சொல்லும் கட்டளைகளை நொடிப் பொழுதில் செய்து விடுகிறது. மனிதன் சொன்னால்தான் அது கேட்கும். செய்யும்.

சொன்னதைச் செய்யக்கூடியது. அவ்வளவுதான்! சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதனின் கட்டளைகளை நிறைவேற்றும் போது மனிதனையே அது மிஞ்சிவிடுகிறது. இருப்பினும் அதன் வேகம் இருக்கிறதே அது மனித மூளையின் வேகத்தையே தாண்டிவிடுகிறது. அபாரமான வேகம்.

அண்மையில் Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தக் விஷயத்தில் கணினி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றத் தொடங்கி விடும். அப்புறம் என்ன.

கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வந்துவிடும். அடுத்து வீட்டு கணினியை இந்த வீட்டிக் கணினி குறை சொல்லும். இந்த வீட்டுக் கணினி எதிர்வீட்டுக் கணினியை வம்புக்கு இழுக்கும்.

மெகா சீரியல்கள் பார்ப்பதில் கணினிகளுக்குள் வாய்ச்சண்டை வரலாம்.   அடடா... கவலைப்பட வேண்டாம். இதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும். நடக்கப் போகிறது என்னவோ உண்மை. பொறுத்து இருங்கள். வேடிக்கையைப் பார்க்கலாம்!

ஜெயக்குமார் சிவபாலன், பத்தாங் பெர்சுந்தை
கே: கணினியைப் பயன் படுத்திக் கெட்டுப் போனால் அதைப் பழுது பார்க்க நிறைய காசு செலவு ஆகிறது. கணினி கெட்டுப் போகாமல் இருக்க வழி இருக்கிறதா?
கணினியைப் பாதுகாக்க வேண்டும்தான். அதற்காக மருத்துவரைக் கூப்பிட்டு அதன் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எல்லாம் சோதனை செய்யவது...

ப: வானொலி, தொலைக்காட்சி, கைத்தொலைப்பேசி, சலவைச் சாதனம், கார் போன்றவை நம் வாழ்க்கையில் அத்தியாவசியச் சாதனங்கள். அவை எப்படி இயங்குகின்றன என்பது பலருக்குத் தெரியாது. இருந்தாலும் அவை நம் வாழ்வில் ஒன்றாய்க் கலந்து விட்டன.

இந்தச் சாதனங்கள் பழுது அடைந்து போனால், பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் செல் கிறோம். žர் செய்து கொள்கிறோம். அதே போலதான் கணினியும். கணினியைத் தவறாகப் பயன்படுத்திக் கெட்டுப் போனால் பெரிய தொல்லை என்று பலர் தயக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

கெட்டுப் போன கிட்னியை வெட்டி வீசிவிட்டு வேறு ஒன்றை வைத்துக் கொள்வது நடைமுறைக்கு வந்துவிட்டது இல்லையா. ஆக, வீட்டிலிருக்கும் வளர்ப்புப் பிள்ளையாகக் கணினியை நினைக்க வேண்டும்.

கெட்டுப் போகாத பொருள் எதுதான் இல்லை. சொல்லுங்கள். எல்லாமே  ஒரு நாள் பழுதாகிவிடும். சந்தையில் விற்கும் கண்ட கண்ட பவுடர்களைப் பூசி நம்முடைய உடலை நாம் அழகு பார்க்கவில்லையா.

போற்றிப் போற்றி பார்க்கும் இந்த உடலும் ஒரு நாளைக்குப் பழுதாகி மண்ணுக்குப் போகிறதுதானே.

அதற்கு ஏதாவது ஒன்று வந்துவிட்டால் டாக்டரைப் போய்ப் பார்க்கவில்லையா.  அதைப் போல கணினியும் ஒரு நாள் பழுதாகும். žர் செய்ய வேண்டும். அவ்வளவுதான். அப்படி நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்க வேண்டும்.

முதலில் கணினி கெட்டுப் போனால் எனும் அச்சத்தைத் தூக்கி வீச வேண்டும். வந்தது வரட்டும் எனும் நம்பிக்கை வரட்டும். இப்பொழுது வரும் கணினிகள் சுலபத்தில் கெட்டுப் போகாதவை.

உள்ளே தூசி புகுந்தால் தும்மலும் வராது. வெளியே தண்நீர் பட்டால் காய்ச்சலும் வராது. சரியா. கணினிகள் மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமாகிக் கொண்டு வருகின்றன.

பத்மாவதி, ஆர்.ஆர்.ஐ, சுங்கை பூலோ
கே: கணினியில் 'மூர் விதி' என்று இருக்கிறதாம். அப்படி என்றால் என்ன?
இவர்தான் கணினி வித்துவான் கோர்டன் மூர்

ப: மூர் விதி என்பதை ஆங்கிலத்தில் Moore's Law என்கிறார்கள். Intel கணினி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் Gordon E. Moore என்பவர் ஒருவர். இவர் 1965 ஆம் ஆண்டில் கணினிகளைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார்.

ஒவ்வோர் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை கணினியின் ஆற்றல், செயல் பாட்டுத் திறன்  இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதே சமயத்தில் அதன் தயாரிப்பு விலை இரண்டு மடங்காகக் குறையும். இதுதான் அவர் சொன்ன தீர்க்கதரிசனச் சொற்கள்.

இதை மூர்ஸ் கோட்பாடு என்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர் சொன்னது என்னவோ அது சரியாகவே நடந்து வருகிறது. கணினி உலகில் இப்படி ஓர் அதிசயம் நடக்கும் என்று முன்னறிந்து சொல்லி விட்டார்.

அவர் வியூகம் செய்தது போல கணினியின் ஆற்றல், திறன், சக்தி, வேகம், நம்பிகை எல்லாமே  படுபயங்கரமாகக் கூடிவிட்டது. அதற்கு ஏற்றவாறு அதன் விலையும் அளவுக்கு அதிகமாகக் குறைந்தும் விட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 35 கோடி ரிங்கிட்டிற்கு விலை போன வன்தட்டு இன்று முன்னூறு வெள்ளிக்கு விற்கப் படுகிறது. இது எங்கு போய் முடியுமோ தெரிய வில்லை.

இந்த நிலைமை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் ஆருடம் சொல்கிறார்கள். எதற்கும் ஓர் இல்லை இருக்கும் இல்லையா. Infinity எனும் இல்லாமை நிலைமை வர முடியாது.

உங்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் கணினியின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரிங்கிட் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். இதே கணினி பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் அதன் விலை RM8,000 ஆக இருந்திருக்கும்.

இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் விலை ஐம்பது ரிங்கிட்டிற்கும் கீழே குறைந்து போயிருக்கும். போதுமா! அதற்குள் கணினியின் திறமை எங்கேயோ போயிருக்கும். நீங்களும் நானும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

இப்போதுள்ள கணினிகள் இன்னும் பத்து ஆண்டுகளில் பத்து காசுப் பொருள் ஆகிவிடும். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளக் கூட மாட்டார்கள். அப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக வரும். நினைவில் வைத்துக் கொள்வோம்.

குமாரி லெட்சுமி வீரராகு, சித்தியவான் (குறும் செய்தி 3.10.2010)
கே: Hard Disk என்பதை வன்தட்டு என்கிறோம். முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட வன்தட்டுகளைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்கள்?
வன்  தட்டின் உட்பாகம்

ப: நம் கணினியில் உள்ள வன்தட்டில் தான் செய்திகள் படங்கள் தகவல்கள் எல்லாமே பதிவு செய்யப் படுகின்றன. இங்குதான் கணினியின் Operating System அமர்ந்து கொண்டு கணினியை இயக்குகிறது. 1956ல் தான் வன்தட்டைக் கண்டுபிடித்தார்கள். IBM நிறுவனம் கண்டுபிடித்தது.

அதன் கொள்அளவு 5 MB. இங்கே கொள் அளவு என்றால் Space. வன் தட்டின் பெயர் RAMAC 305. இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்கும். அவ்வளவு பெரியது.  அப்போதைக்கு அது பெரிய விஷயம். அதன் விலை 50,000 அமெரிக்க டாலர்கள்.

இப்போது நாம் 1 Terra Byte வன்தட்டுகளைப் பயன் படுத்துகிறோம். இது அப்போது இருந்திருந்தால் இதன் விலை என்ன தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 35 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது பினாங்கு பாலத்தைப் பாதி கட்டி முடித்து விடலாம்.


கொள் அளவு விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
1000(TB) Tera Bytes = 1 Peta Byte(PB)
1000(PB) Peta Bytes = 1 Exa Byte(EB)

இப்போது நாம் 2010 ஆண்டில் 'பெத்தா பைட்'டில் இருக்கிறோம்.


கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
பயர் பாக்ஸ் - உலகின் தலை சிறந்த உலவி

ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' ஐ Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. இந்த நரிப் பிழம்பின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும். இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த நிரலி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸ”க்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத்தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள்.

ஆக, வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல்படுகிறது.

இந்த உலவி தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன. http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.