31 ஜனவரி 2011

மலேசியத் தமிழர்களும் இணையமும்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சென்ற 23.01.2011 ஆம் திகதியில் கோலாலம்பூரில் மலேசிய இணைய விழாவை நடத்தியது.  அதில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரை. 

மலேசியத் தமிழர்களும் தமிழ் இணையமும்

இது தான் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு.

1950-60 ஆம் ஆண்டுகளில் தான் கணினிப் பயன்பாடு மலாயாவில் துளிர் விடத் தொடங்கியது. அதற்கு முன்னர் கணினி எனும் ஓர் அரிய சாதனம் இருக்கின்றது என்று மலாயா வாழ் மக்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கு ஓர் உயரிய சாசனம் இருக்கின்றது என்பது மட்டும் அவர்களுக்கு அப்போதைக்குத் தெரியாது.

நாளிதழ்களின் வழியாகக் கணினியின் உருவப் படங்களைப் பார்த்தனர். வானொலியின் மூலமாகக் கணினியைப் பற்றிய செய்திகளைக் கேட்டனர். அவ்வளவுதான். வானொலியின் இளைய சகோதரர் என்று செல்லமாக அழைக்கப் படும் தொலைக் காட்சி பிறக்காத காலத்தில் மலாயாவில் மக்கள் வாழ்ந்த காலம் அது. 

1960 ஆம் ஆண்டுகளில் இணையம்

1963 ஆம் ஆண்டில் மலாயா எனும் நாடு மலேசியா ஆனது. ஆகவே, மலாயா வாழ் மக்களை மலேசியர்கள் என்றே குறிப்பிடுகிறேன்.

1960 ஆம் ஆண்டுகளில் தான் இணையம் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப் பட்டது. அப்போது அது மலேசிய மண்வாசனையை அறிந்திராத காலம். 1950 களில் வெறும் கணினிப் பெட்டிகள் மட்டுமே மலேசியாவுக்கு வந்தன. அதுவும் அத்திப் பூத்தால் போல எங்கோ ஒன்று இரண்டு பெட்டிகள் இருக்கும்.

அதைப் பார்ப்பதற்குக் கூட்டம் கூடி நிற்கும். கணினியை நேரில் பார்ப்பது என்பது ஒரு சிம்ம சொப்பனம். கிராமத்துக்காரன் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தது போல பார்ப்பவர்களின் பார்வையும் வேடிக்கையாக இருந்தது.

Sime Darby, Dunlop, Gutherie, Kluang Rubber, Golden Hope, Socfin போன்றவை தான் முதன்முதலில் மலாயாவில் கணினிகளைப் பயன் படுத்திய தலையாய நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஐ.பி.எம். ரகக் கணினிகளைப் பயன்படுத்தின. உலகில் முதன்முதலில் உருவாக்கப் பட்டவை ஐ.பி.எம் கணினிகளே. அடுத்து வந்தவை ஆப்பிள் கணினிகள்.

மலேசியாவில் கணினிகளின் முதல் பயன்பாடு

1970 ஆம் ஆண்டுகளில் கணினியை அரசாங்க அமைச்சுகளில் நிதி அமைச்சுதான் முதலில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சுங்கை பூலோவில் இருந்த ரப்பர் ஆய்வுக் கழகம் கணினி உலகில் காலடி எடுத்து வைத்தது. பின்னர், கணினிப் பயன்பாட்டில் ஒரு முன்னோடியாகவும் விளங்கியது.

அடுத்து செர்டாங் விவசாயக் கல்லூரி கணினிகளைப் பயன் படுத்தத் தொடங்கியது. மலாயாப் பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்றவை கணினிப் பயன்பாடுகளில் அடுத்தடுத்து தீவிரம் காட்டின.

அந்தக் காலக் கட்டத்தில் வெளி வந்தக் கணினிகளின் விலை மிக மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதனால் பொது மக்கள் தனிப்பட்ட முறையில் கணினிகளை வாங்கிப் பயன் படுத்துவதில் தயக்கம் காட்டினர். மண்ணைத் தாண்டி விண்ணில் வீடு கட்டுவது போன்ற ஒரு மயக்கத்திலும் வாழ்ந்தனர்.

அப்போது ஒரு கணினியின் விலை 20 ஆயிரம் ரிங்கிட். இப்போதைய மதிப்பின் படி இரண்டு இலட்சம். சராசரி ஊழியர் ஒருவரின் ஒரு நாள் சம்பளம் அப்போதைக்கு மூன்று ரிங்கிட். ஆக, வசதி படைத்தவர்கள் மட்டுமே கணினிகளை வாங்க முடிந்தது.

மலேசியத் தமிழர் நினைத்துப் பார்க்க முடியாத சாதனம்

பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கணினியை வாங்கியவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ஒரு படி மேலே ஏறிப் போனவர்களும் உண்டு. சொந்த பந்தங்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கணினியை வாங்கிப் போட்ட சில சொப்பன ஜீவராசிகளும் வாழ்ந்து இருக்கிறார்கள். மன்னிக்கவும். வரலாறு அப்படி சொல்கின்றது.

சாதாரண கணக்கு வழக்குகளைச் செய்வதற்காக மட்டுமே அப்போதைய கணினிகள் பயன் பட்டன என்பது வேறு விஷயம். அந்தக் காலத்தில் கணினி என்பது ஒரு சாதாரண மலேசியத் தமிழர் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிசயமானச் சாதனம். ஓர் அபூர்வமான கருவி. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மட்டுமே பயன்படுத்த முடிந்த ஓர் அற்புதமான விளக்கு என்று கூட பலர் கனவு கண்டதும் உண்டு. உவமைக்காகச் சொல்கின்றேன். அது ஒரு கனாக் காலம்.

இப்போது காலம் தலைகீழாக ரொம்பவும் மாறிப் போய் விட்டது. கணினி என்றால் முதலில் ஒரு தமிழனைக் கூப்பிடு என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் கணினித் துறையில் மிகச் சிறந்து விளங்குகின்றனர். உயரிய இலக்குகளில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கணினி வளர்ச்சிக்கு சுதி சேர்க்கின்றனர். கணினி உலகத்தையே தமிழர்கள் தங்கள் உள்ளம் கைக்குள் கொண்டு வந்து விட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு கணினி ஓர் இலட்சம் ரிங்கிட்

ஓர் இலட்சம் ரிங்கிட்டிற்கு விற்கப் பட்ட அப்போதைய கணினி இப்போது ஆயிரம் ரிங்கிட்டிற்கு விற்கப் படுகிறது. ஆற்றலும் பல ஆயிரம் மடங்கு பெருகி விட்டது. அப்போது ஆயிரம் கணினிகள் சேர்ந்து செய்யும் ஒரு வேலையை இப்போதைய ஒரு சாதாரண மேசைக் கணினி செய்து முடித்து விடுகிறது. அதுவும் கண் இமைக்கும் நேரத்தில்.

சகோதர சகோதரிகளே, உலகளாவிய ஓர் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. உலகக் கணினி மன்னன் பில் கேட்ஸ் தமிழர்களைத் தேடி தமிழ் நாட்டிற்குக் கப்பல் ஏறி வரும் அளவுக்கு நிலைமை இப்போது ரொம்பவும் மாறிப் போய் விட்டது.

அவரிடம் பணிபுரிந்த பல ஆயிரம் பேர் பணக்காரர்களாக மாறி விட்டனர். செல்வச் சீமான்களாகத் தத்தம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டு உள்ளனர். அதில்  பலர் கோடீஸ்வரர்களாகப் பதவி உயர்வும் பெற்று உள்ளனர்.

அது மட்டும் அல்ல. அவர்கள் ’போர்ப்ஸ்’ சஞ்சிகையின் உலகப் பணக்காரர் பட்டியலிலும் இடம் பிடித்தும் உள்ளனர். மலேசியாவில் இருந்து போய் இருக்கும் தமிழர்கள் இருபது பேர் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் இன்னும் பணி புரிகின்றனர். ஆக, உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றிப் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

மலேசியாவில் பத்து பேர் பயன்படுத்திய இணையம்

சரி. 1990 ஆம் ஆண்டுகளில்தான் உலக அளவில் கணினிகளின் பயன்பாடு பரவலானது. இன்னும் ஓர் அதிசயமான செய்தி. 1992 ஆம் ஆண்டு மலேசியாவில் பத்தே பத்து பேர் தான் இணையத்தைப் பயன் படுத்தி இருக்கின்றனர். அதுவும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமே அந்தப் பயன்பாடு இருந்து வந்து இருக்கிறது.

சங்கரன் இராமநாதன்[1] என்பவர் மலேசியர்கள் பலருக்குத் தெரிந்த ஒரு மாபெரும் கல்வியாளர். அவர் செய்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் இந்த உண்மையைச் சொல்லி இருக்கிறார்.

இணையம் இப்படி நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. அந்த இணையத்தை இப்போது பாருங்கள். மனிதக் கற்பனைக்கு எட்ட முடியாத ஓர் உன்னதமான இடத்திற்குப் போய் விட்டது. கொடி கட்டிப் பறந்த வண்ணம் வெண்சாமரம் கேட்கின்றது.

உலக இணைய அரங்கில் மலேசியாவிற்கு 24-வது இடம்

உலக நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வரிசையில் மலேசியா 24 ஆவது இடத்தில் இருக்கிறது. இணையப் பயன்பாட்டில் ஆசியாவில் ஆறாவது இடத்தையும் ஆசியான் நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்து நிற்கிறது. பிருமாண்டமான வளர்ச்சி.

மலேசியாவின் மக்கள் தொகை 26 மில்லியன். இவர்களில் 17 மில்லியன் 16,902,600 பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது 16,902,600 பேர். [1.1]




சிங்கப்பூரின் மக்கள் தொகை 5 மில்லியன். இவர்களில் 3.6 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது 3,658,400 பேர்.

இந்தியாவின் மக்கள் தொகை 1173 மில்லியன். இவர்களில் 81 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறனர். அதாவது 81,000,000 பேர்.

சீனாவின் மக்கள் தொகை 1331 மில்லியன். இவர்களில் 420 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறனர். அதாவது 420,000,000 பேர். [2]


இவை 2010 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள். கூகிள் தேடல் இயந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்கள். 

மலேசியாவில் ஆறு இலட்சம் இந்திய இணையப் பயனர்கள்

மலேசியா வாழ் இந்தியர்களில் ஏறக்குறைய 600,000 பேர் மட்டுமே இணையப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். இதற்கு மலேசியாவில் இந்தியர்களின் மக்கள் தொகை குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். [3]


இருந்தாலும், இப்போதும் கூட பாருங்கள்.  தைப்பூசத் திருநாளில் நம் இந்தியர்கள் கூடும் கூட்டத்தைப் பார்த்துப் பெருமிதம் அடைகிறோம். நம்முடைய இனத்தவரின் எண்ணிக்கை மிக மிக உயர்வாக இருப்பதாக ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. அது ஒரு நியாயமான மாயை தான்.

கணினியைப் பயன்படுத்துவதிலும் இணையத்தைப் பயன்படுத்துவதிலும் அப்படி ஒரு பெருமிதம் ஏற்பட வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான விருப்பமும் கூட! பத்துமலையில் கூடும் பக்தர்கள் வெள்ளத்தைப் போல இந்தியர்கள் PC Fair, PC Expo போன்ற கணினிக் கண்காட்சிகளுக்குப் படை எடுக்க மாட்டார்களா என்பது ஓர் ஆதங்கம். ஒரு தமிழரின் மனதிற்குள் ஆர்ப்பரிக்கும் நமைச்சல்.

பல கணினிக் கண்காட்சிகளுக்குச் சென்று இருக்கிறேன். கௌரவ விருந்தினராக அழைக்கப் பட்டும் இருக்கிறேன். அங்கே எல்லாம் தமிழர்கள் வருவது குறைவு. வருகிறார்கள். வருவது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எண்ணிக்கையில் மிகவும் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். சீனர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்.

கணினிக் கண்காட்சி விழாக்கள்

அப்படியே வந்தாலும் இளைஞர்களாக இருப்பார்கள். கணினிகளைப் பார்த்த மாதிரியும் இருக்கும். காதல் செய்தது மாதிரியும் இருக்கும். என்னுடைய வயதுக் காரர்கள் யாராவது வர மாட்டார்களா என்று நான் பலமுறை ஏங்கியது உண்டு. ஏக்கம் என்றால் இங்கே வேறு மாதிரியான ஏக்கம் அல்ல. தயவு செய்து தப்பாக நினைத்து விட வேண்டாம். சம வயது ஏக்கம் தான்.

அடுத்த தலைமுறையில் இணையம் மலேசிய இந்தியர்களிடையே பற்பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஒரு பொதுவான கருத்து. இங்கே மாற்றங்கள் என்பது இந்தியர்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்படப் போகும் மாற்றங்களைச் சொல்கிறேன். கணினி உலகம் எட்டாத உயரத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. அதை விரட்டிப் பிடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நமக்கு என்ன எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று தெரிந்து இருப்பது நல்லதுதான். ஆனால், என்ன எல்லாம் தெரியாமல் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது நல்லது அல்ல.

காலம் மாறுகிறது. ஞாலமும் மாறுகிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் தெரியாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.

மலேசியாவில் இந்தியர்களின் பங்கு எட்டு விழுக்காடு

மலேசியாவில் 100 பேரில் 55.8 பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது 2008 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள். இதில் இந்தியர்களின் பங்கு எட்டு என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. 2009 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்து இருந்தது. மகிழ்ச்சி தரும் செய்தி. [4]



இணையத்தில் அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் எனும் ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது. கடன் அட்டைகளைக் கொண்டு நமக்கு வேண்டியதை இணையத்தின் வழியாக வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய வீட்டுச் சேவைக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்குப் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். அவசரத்திற்குப் பணத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இணையப் பண பரிமாற்ற முறை உலகளாவிய நிலையில் மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. இதில் மலேசியத் தமிழர்களில் எத்தனை விழுக்காட்டினர் ஈடுபாடு காட்டுகின்றனர். அந்த விவரங்கள் நமக்கு இன்னும் சரியாகக்  கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். வீட்டில் இணைய வசதிகள் இருந்தால் தானே இணையப் பண பரிமாற்ற முறையைப் பற்றி பேச முடியும்.

இணையத் தேடலில் மலேசியா 11 ஆவது இடம்

ஆனால், இணையத்தைப் பயன்படுத்தி அரசாங்கத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் மலேசியத் தமிழர்கள் முனைப்புக் காட்டுகின்றனர் என்பது அண்மைய தகவல். இதில் மலாய், சீனச் சகோதரர்களைக் காட்டிலும் தமிழர்கள் மிஞ்சி நிற்கின்றனர். இந்த இணையத் தேடலில் ஒட்டு மொத்த உலக அரங்கில் 11 ஆவது இடம் மலேசியர்களுக்குக் கிடைத்து உள்ளது.

இணையப் பயன்பாட்டில் மலேசியத் தமிழர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். முழுமையாக ஈடுபட வேண்டும் என்று துடிப்பு காட்டுகின்றன. உண்மைதான். ஆனால், இணையச் சேவையை வழங்கும் மலேசிய நிறுவனங்கள் அதிகமானக் கட்டணத்தை வசூல் செய்கின்றனவே. அதற்கு என்ன செய்வது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலேசியாவில் இணையச் சேவையின் கட்டணம் மிகவும் உயர்வு என்றே சொல்ல வேண்டும். இப்படி நான் சொல்லவில்லை. இணையச் சேவையைப் பயன்படுத்தும் எல்லோருமே சொல்கிறார்கள். வேதனைப் படுகிறார்கள்.

மாதத்திற்கு  ஆகக் குறைந்த பட்சக் கட்டணம் 60 லிருந்து 100 ரிங்கிட். ஆக, வருடத்திற்கு ஆயிரம் ரிங்கிட். ஒரு சராசரி மலேசியனுக்கு ஒரு மாதத்திற்கு 100 ரிங்கிட் என்பது கையைக் கடிக்கிற விஷயம்.

ஆசியான் நாடுகளை எடுத்துக் கொள்வோம். இணையச் சேவையின் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. முதல் நிலையில் மியன்மார் நிற்கிறது. அந்த நாட்டை விடுங்கள். அங்கே என்ன நடக்கிறது என்பது தான் அனைவரும் அறிந்த விஷயம் ஆயிற்றே. சொல்லத் தேவை இல்லை.

தமிழ்நாட்டில் இணையச் சேவைக் கட்டணம் குறைவு

கம்போடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஏழ்மையான நாடு. அங்கே இணையச் சேவையின் கட்டணம் நம் நாட்டை விட குறைவாக இருக்கிறதே. அதே போலத் தான் இந்தோனேசியாவின் பாலித் தீவிலும் குறைவான கட்டணம் வசூல் செய்கிறார்கள்.


இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலேசியாவை விட தமிழ்நாட்டில் இணையச் சேவைக்கான கட்டணம் குறைவு. இணைய மையங்களைச் சொல்லவில்லை. தனியார் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வழங்கும் இணையச் சேவைக்கான கட்டணத்தைச் சொல்கிறேன்.

மலேசியாவை 2020க்குள் ஒரு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் விவேகமான இலக்கு.

ஆக, அப்படி இருக்கும் போது, இணையச் சேவை வழங்குவதில் பயனர்களிடம் அதிக பட்சக் கட்டணம் வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லையே. வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப நாடு எனும் இலக்கை அடைவதில் தடங்கல் ஏற்படும் என்று சொல்வதிலும் தப்பு இல்லையே.


மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் அலி சல்மான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் இந்த உண்மை சொல்லப் படுகிறது. [5]

மின்னஞ்சல் அனுப்பவதில் மலேசியத் தமிழர்கள் தயக்கம்

அடுத்து ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறேன். இணையம் மூலமாக மின்னஞ்சல் அனுப்பவதிலும் மலேசியத் தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வீட்டில் இணையச் சேவை இருந்தால், தங்களுடைய பிள்ளைகள் பார்க்கக் கூடாதப் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போவார்கள் என்கிற அச்சம் அவர்களிடம் மேக மூட்டங்களாய்ப் மேலோங்கி நிற்கிறது. அதனால் தங்கள் வீடுகளில் இணையச் சேவையை இணைப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

இப்போது மட்டும் என்ன. ஒரு பக்கம் அணை போடும் போது இன்னொரு பக்கம் அது உடைத்துக் கொண்டு போகிறது அல்லவா. பத்திரமாகப் பாதுகாக்கும் அரணைப் போடும் போது தான் வெள்ளம் பெயர்ந்து கொண்டு வந்து போய் உடைக்கிறது. ஆக அந்த மாதிரி, பிள்ளைகளில் பலர் வாங்கிச் சாப்பிடக் கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு போய் இணைய கேளிக்கை மையங்களில் இரைத்து வருகின்றனர்.

இணையத்தில் தேவையற்ற சலனச் செய்திகள்

இப்படி நான் சொல்லவில்லை. Survey Research Malaysia ஆய்வுகள் சொல்கின்றன. இருபது வயதுகளில் தெரிந்து கொள்ள வேண்டியதைப் பன்னிரண்டு வயதுகளில் தெரிந்து கொண்டு வருகின்றனர். திசை மாறிப் போகும் பறவைகளைச் சரியான திசைக்குத் திருப்ப வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

ஆக, அந்த மாதிரியான அச்சம் மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் இல்லை. மலேசியர்கள் அனைவருக்குமே அந்தக் காய்ச்சல் அடிக்கிறது. ஏன் உலகம் முழுமையுமே அந்தக் காய்ச்சல். அதற்காக இணையத்தைப் பயன் படுத்தாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள்.

தேவையற்ற சலனச் செய்திகள், சபலச் சங்கதிகள் இணையத்தில் கோடிக் கணக்கில் குட்டிப் போட்டு வாரிசுகளை எடுத்து வைத்து இருக்கின்றன. அந்தக் கக்கல் கழிசல்கள் எல்லாம் ஊழி ஊழி காலத்திற்கும் குட்டிகளைப் போடும். பேரன் பேத்திகளை எடுக்கும். அவர்களுக்குக் காப்புறுதி, காப்புரிமை எல்லாம் எடுத்தும் வைக்கும்.

ஆக, மனிதன் சாகும் வரை பார்த்து முடிக்க முடியாத அட்டகாசமானப் படங்கள் அங்கே இப்போது சர்வ லோக ராமாயணங்களைப் பாடிக் கொண்டு இருக்கின்றன. அதற்காக இணையத்தைப் பயன்படுத்துவதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வது என்பது இருக்கிறதே அது நடக்கிற காரியம் இல்லை.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகள்

ஆனால், அதைத் தடுக்க பல தடுப்பு முறைகள் உள்ளன. Parental Control, Family Safety Filter, Kids Care, Kids Safety, Internet Safety, Net Nanny, My Child Safety என்று ஆயிரக் கணக்கான நிரலிகள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. இலவசமாகவும் கிடைக்கின்றன.


அவற்றில் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாமே. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கலாமே. குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு உத்தரவாதம் கொடுக்கலாமே. [6]

மலேசியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 28.4 விழுக்காட்டினருக்குச் சொந்தமான வலைப்பதிவுகள் உள்ளன. மேலும் 39.6 விழுக்காட்டினர் வலைப்பதிவுகள் உருவாக்கிக் கொள்ள ஆர்வமும் தெரிவித்து உள்ளனர்.

மலேசியாவில் எத்தனைத் தமிழர்கள் வலைபதிவுகளை வைத்துள்ளனர்; அவர்கள் எதைப் பற்றி அதிகமாகப் பதிவுகள் செய்கின்றனர் எனும் ஓர் ஆய்வு செய்யப் பட வேண்டும். அவர்களை ஊக்குவிக்க என்ன என்ன செய்யலாம் எனும் திட்டங்களை முறைப்படி வகுக்க வேண்டும்.


மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் சங்கம்

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரையும் ஒன்று இணைக்கும் ஒரு கழகம் உருவாக்கப் பட வேண்டும் என்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை. சுப.நற்குணன் எனும் நாடறிந்த வலைப்பதிவர் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவில் வலைப்பதிவர்களை ஒன்று சேர்த்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். பட்டறைகளையும் நடத்தி வருகிறார். அவருடைய சொந்தச் செல்விலேயே இதை எல்லாம் செய்து வருகிறார் என்பதையும் அறிந்தேன்.

Malaysian Tamil Bloggers எனும் ஒரு பேச்சரங்கம் ‘பேஸ்புக்’ எனும் சமூக இணையத் தளத்தில் உருவாக்கப் பட்டது. அதற்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் கழகம் உருவாக்கப் படுமானால் அந்தக் கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் செயல் படுவது நல்லது. வலைப் பதிவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த வண்ணம் இருக்க வேண்டும்.

உலகில் 146 மில்லியன் வலைப்பதிவர்கள்

பத்திரிகையில், வார இதழ்களில் எழுதுபவர்கள் மட்டும் எழுத்தாளர்கள் அல்ல. இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள் தான் எனும் ஓர் அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.    

உலகில் 146 மில்லியன் வலைப்பதிவர்கள் உள்ளனர். இவர்களில் 84 விழுக்காட்டினர் பெண்கள். மற்ற 16 விழுக்காட்டினர் மட்டுமே ஆண்கள் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. மலேசியாவில் இரண்டு மில்லியன் வலைப் பதிவர்கள் உள்ளனர். அதாவது இணையத்தைப் பயன் படுத்துபவர்களில் 12 விழுக்காட்டினர் வலைப் பதிவர்கள். இவர்களில் தமிழ் வலைப் பதிவர்கள் ஏறக்குறைய 1500 லிருந்து 2000 பேர் வரை மட்டுமே இருக்க முடியும். நமக்குச் சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் தான் தொடர்ந்தால் போல தங்கள் படைப்புகளை நிரந்தரமாக இணையத்தில் பதிவு செய்கின்றனர்.

அனாதையாக விடப்படும் வலைப்பதிவுகள்

சில மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அப்படியே அனாதையாகவும் ஆதரவற்ற நிலையிலும் விடப் பட்டு கிடக்கின்றன. அவ்வாறு தொடர்ந்து வலைப் பதிவுகளில் எழுதி வருபவர்களில் ஒரு சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறேன். எல்லோருடைய பெயர்களையும் தொகுக்க முடியவில்லை.

அக்கினி
அப்பண்ணா 
திருமூர்த்தி சுப்பிரமணியம்
அகஸ்தியா மூர்த்தி
தமிழ்மாறன்
பாலகோபாலன் நம்பியார்  
அப்துல் சலிகான்
சுபாசினி
புவனேஸ்வரி
அனந்தன்
சித்தன்
மோகன் சுப்ரமணியம்
ஆனந்தன் நிதி
சித்திரப் பாவை
சுரேசு காளியப்பன்
இல.வாசுதேவன்
கே.பாலமுருகன்
சி.ம.இளந்தமிழ்
எம்.கே. சுந்தரம்
விகடகவி
ஜோசப் செபாஸ்டியன்
கு.தீபன்
கோவி.மதிவரன்
குமாரி. உசா
குமாரி அருள்மொழி
ஆதி
ரமணி ராஜகோபால்
குமாரி சுகாந்தினி
தமிழரண்
மனோகரன் கிருஷ்ணன்
கென்
பரதன்
பீட்டர் ஜான்சன்
சதீசு
குமாரி துர்கா
குமாரி அனுராதா
ச‌ந்துரு
இராசா
ஆய்தன்
சுப.நற்குணன்
விக்னேஸ்வரன்
சிவனேஸ்
சுராஜ் சந்தோஷ்
வினோத்குமார்
என்.வி சுப்பாராவ்
சுரேஷ்
குமரன் மாரிமுத்து
இரவீந்திரன் கே.பால்
தமிழ்மாறன்
தமிழ் செல்வன்
பிரான்சிஸ் சைமன்
தமிழினியன்
குமரவேல்
தோழி
தர்மதாசன்
முகிலன்
தேசிகன்
து.பவனேசுவரி
சேகர்
குமாரி சுசீலா நாகப்பன்
ந.பச்சைபாலன்
மணிமொழி 
ஏ.தேவராஜன்
ம.நவீன்
யுவராஜன்
இளங்குமரன்
மதியழகன்
குமரவேல்
குமாரி வியா
மலேசிய மு.வேலன்
இர.திருச்செல்வம்,
மணியரசன் முனியாண்டி
மன்னர் மன்னன்
பெ.இராஜேந்திரன்
கிருஷ்ணமூர்த்தி
மனோகரன்
சதீஷ் குமார்
தமிழ்ச்செல்வன்
மஹாத்மன்
பா..சிவம்
டாக்டர் மா.சண்முகசிவா
முபாரக் அலி
ஏ.எஸ் பிரான்சிஸ்
சுபாசினி திரெம்மல்
மேஜர் முனுசாமி
யோகி
கமலாதேவி அரவிந்தன்

மற்றும் பலரின் பெயர்கள் விடுபட்டுப் போய் இருக்கலாம். [7]



சுப.நற்குணன்

மலேசிய வலைப்பதிவு உலகில் முடிசூடா மன்னனாக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல. அவர்தான் சுப.நற்குணன். எண்ணற்ற வலைப்பதிவுகளை எண்ணற்றக் களஞ்சியத் தகவல்களுடன் நடத்தி வருகிறார். விக்கிபீடியாவின் ஆசிரியர்களில் ஒருவர். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கத்தை உருவாக்கியும் வருகிறார். அவருடைய முயற்சிகள் வெற்றி பெற நம்முடைய வாழ்த்துகள்.

திருத்தமிழ் என்பது அவருடைய வலைப்பதிவு. ஒரு கருத்தை மேலோட்டமாக பார்க்காமல், மேலும் மேலும் ஆராய்ந்து, ஆய்ந்து அதன் ஊற்றுக் கண்ணைத் தோண்டுகிறது இந்த வலைப்பதிவு. தெளிவான ஊற்று நீரைப்போல எழுதி வருகிறார் சுப.நற்குணன். [8]


மலேசியாவில் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவைத் தொடங்கிய பெருமை குளுவாங்கைச் சேர்ந்த வாசுதேவன் அவர்களைச் சாரும். இவர் 2004 ஆம் ஆண்டில் வலைப்பதிவைத் தொடங்கினார். விவேகம் எனும் வலைப்பதிவை நடத்தி வருகிறார். [9]


மலேசியாவின் முதல் தமிழ் வலைப்பதிவு

வாசுதேவன் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். 2004-ஆம் ஆண்டு தொடங்கி பல மலேசிய மாநிலங்களில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளில் வலைப்பூ பயிலரங்குகளை நடத்தியுள்ளார். உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டியான ‘தமிழ்மணம் அவரை நட்சத்திரப் பதிவராகக் கௌரவித்தது.

முத்தெழிலன். உலகம் போற்றும் முரசு அஞ்சலை உருவாக்கியவர். உலகத் தமிழ் மொழிக்கு இணை மதியையும் இணைக் கதிரையும் வழங்கியவர். தமிழில் யூனிகோடு முறையை அமல் படுத்த அல்லும் பகலும் உழைத்தவர். உலக இணையச் சம்மேளனத்தை உருவாக்கியத் தமிழ்ப் பற்றாளர்களில் ஒருவர். அரிசிக்கும் சீனிக்கும் விளம்பரம் தேவை இல்லை என்று சொல்வார்கள். அதே போல இவருக்கு விளம்பரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். [10]


அடுத்து, மலேசியத் தமிழ் இணைய உலகின் இனிய நண்பர். தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல ஓர் இலக்கியகர்த்தா. அவர் ஒரு  நாவலாசிரியர், திறனாய்வாளர், ஊடகவியலர், மின்தமிழ் படைப்பாளி, ரெ.கா என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப் படும் பேராசிரியர் ரெ.கார்த்திகேசு. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நெடுநாளைய உறுப்பினர். பல பதவிகள் வகித்தவர், இன்று வரை தொடர்ந்து ஆதரவு தந்து பல மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்த உதவி செய்து வருகிறார். மலேசியாவிலிருந்து ரெ.கா அஞ்சல் எனும் இணையத் தளத்தை நடத்தி வருகிறார். [11]


அகத்தியர் மடலாடும் குழு

டாக்டர் ஜெயபாரதி இணையத்தில் நன்கு அறியப்பட்டவர். "அகத்தியர்" என்னும் மடலாடும் குழுவை அமைத்து நடத்தி வருகிறார். தமிழ் உலகம் அறிந்த அறிஞர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். [12]


தமிழ்க்குயில் டாக்டர் கலியபெருமாள் அவர்களும் ஓர் இணையத்தளம் வைத்து இருக்கிறார். அவரைப் பற்றிய முழு விவரங்களும் http://kkaliaperumal.tripod.com/ எனும் இணையத் தளத்தில் கிடைக்கும். ஆனால், அனைத்தும் ஆங்கில மொழியில் உள்ளன.

மலேசியாவில் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக, அவர்களில் சிறந்த வலைப் பதிவர்களைத் தேர்வு செய்து விருது வழங்க  ம.இ.கா. 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. நல்ல ஆரோக்கியமான முடிவு. அந்த முயற்சிக்கு மீண்டும் உயிர்ப்பு கொடுத்தால் மலேசியாவில் தமிழ் வலைப்பதிவுகள் சீரும் சிறப்பும் பெறும். தமிழ்மொழியின் செம்மொழித் தன்மையும் உயர்வு பெறும். 

இந்தக் கட்டத்தில் கிள்ளான் குமரன் மாரிமுத்து எனும் வலைப் பதிவரைப் பற்றி சொல்ல வேண்டும். இவர் நாட்டின் தலைசிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். எனக்கு வலைப்பதிவுகளின் தாக்கத்தை ஏற்படுத்தியவர். [11.1]  1978 ஆம் ஆண்டு கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் என்னுடைய மாணவராக இருந்தவர். ’மாடப்புறா’ வலைப்பதிவை நடத்தி வருகிறார்.


கோப்பெங் விக்னேஸ்வரன் என்பவரும் நாட்டின் தலைசிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். ஒரு புத்தகப் புழு. அவர் எழுத்துகளில் அருமையான கருத்து முத்துகள் சிதறிக் கிடக்கும். அவருடையது ’வாழ்க்கைப் பயணம்’ எனும் வலைப்பதிவு. [11.2]


மலேசியாவின் சில முக்கியமான தமிழ் வலைப் பதிவுகள், இணையத் தளங்களின் பெயர்கள்:


பெயர்
இணைய முகவரி
1
.நம்பி நனவுகள்
2
அகிலன்
3
அஞ்சடி
4
அரங்கேற்றம்
5
அரண் பிரசன்னா
6
அரிச்சுவடி
7
அருட்பெரும் ஜோதி
8
ஆய்தன்
9
இராசா முகமது  ரஃபீடா
10
இராமக்கிருஷ்ணன்
11
இளந்தமிழன்
12
இளன்
13
உயிர்!
14
உரிமைப் போர்
15
என் உலகம்
16
என் எண்ணங்கள்
17
என் பயணம்
18
என்.வி.சுப்பராவ்
19
எஸ்.பி.எம்.இலக்கியம்
20
ஓலைச்சுவடி
21
கணைகள்
22
கயல்விழி
23
கருத்து மேடை
24
கருத்து மேடை
25
கவிச்சோலை
26
கவித்தமிழ்
27
காலச் சிறகுகள்
28
கிருஷ்ணா
29
கே.பாலமுருகன்
30
சித்தன் வழி
31
சிந்தனைப் பதிவுகள்
32
சில்லென்று ஒருமலேசியா
33
சுவர்ணபூமி
34
செம்மண் தூரிகை
35
தமிழ் ஆசிரியர்
36
தமிழ் ஆலயம்
37
தமிழ் இயக்கம்
38
தமிழ் ஊசி
39
தமிழ் எழுத்துச் சீர்மை
40
தமிழ் மணம் (DAP)
41
தமிழ் மருதம்
42
தமிழ் மலர்
43
தமிழ் வயல்
44
தமிழ்க் கவசம்
45
தமிழ்க் கவிதை
46
தமிழ்ச் சீர்மை
47
தமிழ்ச் சுவை
48
தமிழ்ப் பூங்கா
49
தமிழியல் ஆய்வுக்களம்
50
தமிழினியன்
51
தமிழுயிர்
52
தமிழோடு தமிழாக
53
தமிழோடு நேசம்
54
தாய்மொழி
55
திருநெறி
56
திருமன்றில்
57
தேசிகன்
58
தேடுபவன்
59
தேமதுர தமிழோசை
60
தொடரும் நினைவுகள்
61
ந.பச்சைபாலன்
62
நளபாகம்
63
நாச்சியார்
64
நினைவெல்லாம்
65
நீலவிழி
66
பாலமுருகன் கவிதைகள்
67
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
68
புனிதா
69
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
70
மலேசியத் தமிழ் எழுத்துலகம்
71
மலேசியத் தமிழர் நிலைமை
72
மலேசியத் தமிழன்
73
மலேசியத் திராவிடர் கழகம்
74
மலேசியாவிலிருந்து ரெ.கா
75
மனவளம்
76
மனிதம்
77
மனோவியம்
78
மாடப்புறா
79
முடிவிலானின் எழுத்துகள்
80
மெல்லினம்
81
மை பிரண்டு
82
யுவராஜன்
83
ரமணி ராஜகோபால்
84
ராட்டினம்
85
ராஜபாட்டை
86
வல்லினம்
87
வளமை
88
வாழ்க்கைச் சித்திரம்
89
வாழ்க்கைப் பயணம்
90
விழிப்படலங்கள்
91
விழியன்
92
வெட்டிப்பயல்
93
வேதா
94
வேய்ங்குழல்
95
ஷியாம்




கிருஷ்ணா ராஜ் மோகன்

‘மலேசியத் தமிழ் எழுத்துலகம்’ எனும் இணையத்தளத்தை கிருஷ்ணா ராஜ் மோகன் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் முதன்முதலில் உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தத் தளம் இப்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வலைத் தளமாக மறுசீரமைப்புச் செய்யப் பட்டுள்ளது. அரும் முயற்சி எடுத்துக் கொண்ட கிருஷ்ணா ராஜ் மோகனுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். நன்றிகள் கிருஷ்ணா ராஜ் மோகன்.

மலேசியத் திராவிடர் கழகம் தனக்கென்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் செயல் படத் தொடங்கி உள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அமைக்க அடிகோலிய ஈழத்துத் தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தலைமைப் பதிவாகக் கொண்டு தனது கன்னி முயற்சியைத் தொடங்கி உள்ளது. [13]


அடுத்து பல்லூடகங்களைப் பற்றிப் பார்ப்போம். இன்றைய நாளில் உலகம் முழுமையும் 15 தமிழ் நாளிதழ்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. [14] அவற்றில் மலேசியாவில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள் மட்டும் மூன்று. தமிழ் நேசன், மக்கள் ஓசை, மலேசிய நண்பன். இந்த நாளிதழ்கள் மூன்றுமே சொந்தமாக இணையத் தளங்களை வைத்துள்ளன.



பராமரிப்பு இலக்கணத்தில் சற்றே சறுக்கல்கள்

ஒரே ஒரு நாளிதழைத் தவிர மற்றவை பராமரிப்பு இலக்கணத்தில் சற்றே சறுக்கல்களைக் கண்டு வருகின்றன என்று ஓர் ஆய்வாளர் சொல்கிறார். அது அவருடைய கருத்து. நம்முடைய கருத்து வேறு மாதிரியாக வருகின்றது.

முதலில் மலேசிய நாளிதழ்களின் இணைய முயற்சிகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லுவோம். குறைகளைப் பெரிது படுத்தாமல் நிறைவுகளைப் பார்ப்போம்.

தமிழில் இணையச் செய்திகளைச் சந்தா செலுத்திப் படிக்கும் அளவிற்கு நம்முடைய வாசகர்களின் இணைய விழிப்புணர்வுகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை என்பதே நம்முடைய கருத்து. அதனால் பராமரிப்பு இலக்கணத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

இணையத்தை நம்பி வாழும் இணைய நாளிதழ்கள்

இணையத் தளங்களை நடத்தும் தமிழ் நாளிதழ்கள் இணையம் மூலமாகப் பொது மக்களைச் சந்தாதாரர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா என்பது ஒரு பெரிய கேள்வி. மலேசியாவில் நம் இனத்தவரின் எண்ணிக்கையை முதலில் பார்க்க வேண்டும். அதில் எத்தனைப் பேர் காசு கொடுத்து தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தோசை சுடுவதற்கே மாவு இல்லை. அப்புறம் ஏன்  சாப்பிடுவதற்குச் சாம்பார் இல்லையே என்று கவலைப் பட வேண்டும்?  

முழுக்க முழுக்க இணையத்தை நம்பியே வாழும் இணைய நாளிதழ்களான Indian Malaysian Online, Malaysia Kini, Malaysia Insider, Malaysian Today, Malaysian Mirror, Free Media, Merdeka Review, Free Malaysia Today, The Edge போன்றவற்றில் ‘மலேசியகினி’ எனும் இணைய நாளிதழ் மட்டுமே தமிழில் ‘மலேசிய இன்று’ [15] எனும் தமிழ்ப் பகுதியை இன்றும் வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழின் எழுத்துக்கள் உணர்வாகட்டும். கருத்துக்கள் வித்தாகட்டும்.


Free Malaysia Today எனும் இணைய நாளிதழ் தன்னுடைய தமிழ்ப் பகுதியை அண்மையில் நிறுத்திக் கொண்டது.

மலையாள மொழியில் இணைய நாளிதழ்

மலையாள மொழியில் Manorama Online எனும் இணைய நாளிதழ் மலேசியாவில் வெளி வந்து கொண்டு இருக்கிறது. மலையாளிகள் ஒரு சிறுபான்மைச் சகோதரர்கள். இருந்தாலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட ஓர் இணைய நாளிதழ் இருப்பது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

Indian Malaysian Online எனும் மலேசிய இந்திய இணைய நாளிதழ் 25 உலக மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழில் மட்டும் வழங்கவில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி. கவனத்தில் படும் செய்தி.

இணைய நாளிதழ்களை நடத்துவது என்பது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. எடுத்தேன், எழுதினேன், படுத்தேன், கனவு கண்டேன் என்கிற கதை இல்லை. மலேசிய நாட்டில் ஆங்கில மொழி படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களிடையே கணினியைப் பயன் படுத்துபவர்களும் அதிகம். அதில் இணையத்தை இணைத்துக் கொள்பவர்களும் அதிகம்.

இருந்தாலும் அவர்களை நம்பி திறக்கப்பட்ட பல ஆங்கில இணைய நாளிதழ்கள் பல மூட்டைக் கட்டிக் கொண்டு காசி ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்து விட்டன. அப்படி இருக்கும் போது தமிழ் நாளிதழ்களிடம் இருந்து இணைய நாளிதழ்ச் சேவையை எதிர்ப்பார்ப்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.    

ஆனந்த பைரவி ராகத்துடன் திறப்பு விழா

நம் நாட்டில் Nut Graph எனும் ஓர் இணைய நாளிதழ் ஆனந்த பைரவி ராகத்துடன் திறப்பு விழா செய்தது. மலேசியாவில் நல்ல அனுபவம் பெற்ற பத்திரிகையாளர்களைக் கொண்டு பணிகளைத் தொடங்கியது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா.  சில மாதங்களில் காம்போதி ராகத்துடன் மூடு விழா செய்தது. வேதனையான விஷயம்.

மறுபடியும் சென்ற ஜனவரி 10 ஆம் தேதி மீண்டும் உயிர்ப் பெற்று வந்துள்ளது. ஆனால், நாளிதழாக அல்ல. வாராந்திரச் செய்தித் தாளாக. [16] அதுவும் எத்தனை நாளைக்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் திரிகிறார்கள். ஆங்கில ஊடகங்களிலும் நவரசமான வயிற்றெரிச்சல்கள் உள்ளன. அவற்றுக்கு விலாசம் இல்லை.


ஓர் இணைய நாளிதழை நடத்த நாள் ஒன்றுக்கு RM 3500 தேவைப் படுகிறது. மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து ஒரு இலட்சம் ரிங்கிட் வரை தேவை. தமிழ் நாளிதழ்கள் அவ்வளவு பணத்தைச் செலவு செய்து இணைய நாளிதழை நடத்த முடியுமா?

வணக்கம் மலேசியா

இந்தக் கட்டத்தில் ’வணக்கம் மலேசியா’ [17] இணைய நாளிதழை நாம் மறந்து விடக் கூடாது. சமூகம், வணிகம், தொழில்நுட்பம், சினிமா,



விளையாட்டு, கல்வி, அறிவியல் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகளைச் சிறப்பான முறையில் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறது. கை எடுத்துக் கும்பிடப்பட வேண்டிய இணைய நாளிதழ். ஆதரவு கொடுப்போம். வாய்ப்பு கிடைத்தால் இந்த இணையத் தளத்திற்குச் செல்ல மறந்து விடாதீர்கள். மிகவும் அருமையான இணையச் செய்தித் தாள்.

செம்பருத்தி

முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சிக் குரலாக விளங்கும் ‘செம்பருத்தி’ [18] இணைய நாளிதழை மறந்து விட முடியுமா.



உரிமைக்காகப் போராடும்  தமிழர்களின் எழுச்சிக் குரலாக விளங்குகின்றது. சிறுபான்மை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவது. அந்தச் சிறுபான்மை மக்கள் யார் என்று உங்களுக்கும் தெரியும். பல இன்னல்கள்  வந்த போதும் தமிழ் மக்களுக்காகத் தன்னுடைய  பணியை 12 வருடங்கள் இடை விடாமல்  செய்து வருகிறது.

மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்றுள்ளது. செம்பருத்தி தனது பணியினை விரிவுபடுத்தும் வகையில் இணையத் தளத்தையும் ஆரம்பித்துள்ளது. சுடச் சுடச் செய்திகளைத் தந்து படிப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது.

வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம்

வானம் வசப்படுமே எனும் சொல் அடை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களுக்குப் பொருந்தும். மலேசியத் தமிழ் இணைய உலகில் சிறப்புக்குரிய சேவைகளைச் செய்து வருகிறார்.

கால் ஊன்றிய மலாயா மண்ணில் தமிழை வேரூன்ற வைத்து, பிழைக்க வந்த பூமியில் தமிழையும் தழைக்கச் செய்திட்ட,
மலேசியத் தமிழர்களின் இலக்கியத்தை,
அந்த இலக்கியத்தினூடே இழைந்தோடும் வாழ்க்கையை… என்று


வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம் [19]
எனும் இணையத் தொடரில் பயணம் செய்கின்றார். அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பத்திரங்கள். எழுத்துலகச் சித்திரங்கள்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களே உங்கள் எழுத்துகளை அறிமுகம் செய்யுங்கள் என்று ஓர் இணையத்தளம் உங்களை எல்லாம் அழைக்கின்றது. இப்படி ஓர் இணையத்தளம் இருப்பது பலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது. அறிமுகம் அதிகம் இல்லாத ஓர் அருமையான தமிழ்த் தளம். மலேசியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களை அகர வரிசையில் பட்டியலிட்டு அடையாளம் காட்டுகிறது. உலகப் படைப்பாளிகளை இணைக்கும் தளம்.[19.1]


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள நூல்களின் விவரங்கள் அடங்கிய இணையத் தளம் விருபா. உலகின் 25 நாடுகளில் வாழும் 1331 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் இந்தத் தளத்தில் கிடைக்கப் பெறுகின்றன. செம்மையான பராமரிப்புகள் பரவி நிற்கும் அருமையான இணையத் தளம். [19.2]


அடுத்து, ’நூலகம் எனும் இணையத் தளம். இலங்கையில் இருந்து வெளி வருகிறது. உலகம் முழுமையும் பரந்து கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களின் அறிவுச் சேகரங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் கிடைக்கும் ஓர் அறப்பணியில் ஈடுபட்டுள்ளது. போற்றுதலுக்கு உரிய தன்னார்வ முயற்சி. இலாப நோக்கம் அற்ற நல்ல ஒரு தமிழ்த் தொண்டு. ஆக மொத்தம் 6891 தமிழ் நூல்கள் மின்னூல்களாக வடிவம் ஆக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான நூல்களைப் பதிவிறக்கம் செய்யலாம். [19.3] நம் நாட்டின் என்.செல்வராஜா, .ஜெயபாலன் ஆகிய இருவரும் இணைந்து எழுதியமலேசியத் தமிழ் இலக்கியம் எனும் ஆய்வு நூல் 2003 ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. ஒரு பசுமையான படைப்பு. இலவசமாக இங்கே கிடைப்பது ஓர் ஆச்சரியமான செய்தி.


அடுத்து,மலேசியத் தமிழர் தந்த அருந்தமிழ்ச் சொற்கள். மலேசியாவின் தோட்டப்புறத் தமிழ் மக்களின் வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஓர் இணையத் தளம். ஒட்டுப் பால், கோட்டுப் பால், கட்டிப்பால், ஒட்டுக்கன்று, தவரணை போன்ற சொற்களைக் கேட்டு எத்தனையோ மாமாங்கங்கள் ஆகின்றன. பழமையான ரீங்காரங்கள் புதுமையான சிருங்காரங்கள். இந்தத் தளத்திற்குப் போனதும் என் மனதில் பசுமையான தோட்டப்புற நினைவுகள் வந்து ரொம்பவும் தொல்லை செய்து விட்டன.  தயவு செய்து இந்தத் தளத்தைப் போய்ப் பாருங்கள்[19.4]

மலேசிய வார, மாத இதழ்கள்
மலேசிய வார, மாத இதழ்களும் இணையத்தில் தமிழ்ச் சேவைகளைச் செய்து வருகின்றன. மயில் உமா பதிப்பகம், குயில் ஜெயபக்தி, நயனம், தென்றல், இளந்தளிர் போன்றவை தமிழில் இணையச் சேவைகளை நல்ல முறையில் இன்றைய நாள் வரை நலமாக நடத்தி வருகின்றன.

அஸ்ட்ரோ ஒளிபரப்பு, மின்னல் எப்.எம், டி.எச்.ஆர் ராகா போன்றவற்றின் இணையச் சேவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது. அவை முற்றிலும் கேளிக்கை அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் அவை தமிழ் மொழிக்குச் செய்து வரும் சிறப்புகளைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். தில்லாலங்கடி பாடல்கள் ஒருபுறம் இருக்கட்டும். திக்கெட்டும் பரவும் செய்திகளும் தகவல்களும் இருக்கின்றனவே… ஆஹா… இமயத்தின் சிகரத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வட்டார அளவிலும் மாநில அளவிலும் இணையத் தளங்களையும் வலைப் பதிவுகளையும் உருவாக்கிச் செயல் பட்டு வருகின்றனர். அவற்றின் விவரங்கள்:

1
பொன் பாவலர் மன்றம்
2
பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்
3
மகராஜியின் செய்தி
4
தமிழர் வணிகம்
5
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்
6
மலேசியத் திராவிடர் கழகம்


பொதுவாக, மலேசியத் தமிழர்களிடையே இணையப் பயன்பாடு ஒரு சிறப்பான இலக்கை இன்னும் அடையவில்லை. இணையப் பாதுகாப்பு அம்சங்கள், சேவைத் தொடர்பான தடங்கல்கள், கணினியையும் தொலைபேசியையும் பராமரிக்க வேண்டிய சுமைகள் போன்றவை அவர்களுக்குப் பலகீனங்களாக அமைகின்றன. மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மலேசியர்களுக்குமே அவை தடை போடும் அணைக் கற்கள்.


TM Net, Maxis, Digi, Celcom, Redtone, YES, Wimax, Jaring போன்றவை மலேசியாவில் இணையச் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் ஆகும். [20] இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின் படி மலேசியாவில் 695,000 பேர் சந்தா செலுத்தி இணையச் சேவைகளைப் பெற்று வருகின்றனர். இவர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் எனும் விவரங்கள் எதுவும் கொடுக்கப்பட வில்லை.


கணினி யுகத்தில் தலைமுறை இடைவெளி

கடைசியாக ஒரு முக்கியமான தகவல். தலைமுறை இடைவெளி என்பதை ஆங்கிலத்தில் Generation Gap என்று அழைப்பார்கள். இந்தத் தலைமுறை இடைவெளி கணினி யுகத்தில் இளைஞர்களையும் முதியவர்களையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. இணைய உலகில் இளைஞர்கள் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கின்றனர். முதியத் தலைமுறையினர் எழுத்துகளின் சிகரத்தில் வாழ்ந்தாலும் இணைய உலகில் தடுமாறிப் போய் நிற்கின்றனர்.

கணினி என்று சொன்னதுமே கலங்கிப் போய்க் கவலை கொள்கின்றனர். கணினி தங்களுக்குத் தேவை இல்லை என்றும் நினைக்கின்றனர். தங்களுடைய எழுத்துகளைப் பேனா பேப்பரில் எழுதி முடித்தாலே போதும் என்று நினைப்பதை அவர்கள் சன்னம் சன்னமாக மாற்ற வேண்டும். கணினியைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்ப காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது இது ஏன் வந்து தொலைத்தது. இதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வயதை ஒரு காரணம் காட்டி சாக்குப் போக்குச் சொல்வதும் தப்பு.

உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். என்னுடைய 50 ஆவது வயதில் தான் பிள்ளைகளிடம் இருந்து கணினி வித்தைகளைக் கற்றுக் கொண்டேன். பத்தே பத்து ஆண்டுகளில் அனைத்துலக நிலையில் பல கணினித் தேர்வுகளை எழுதினேன். தேர்ச்சியும் பெற்றேன். சில பட்டங்களையும் பெற்றேன்.

சுழலியை எப்படி நகர்த்துவது

இதற்கு எல்லாம் காரணம் யார்? என் பிள்ளைகள் தான். தெரியாததை அவர்களிடம் இருந்து கூச்சம் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். அவர்களிடம் இருந்து ஏச்சுகள் பேச்சுகள் பல முறை வாங்கி இருக்கிறேன். ஆனால், மனம் தளரவில்லை. தலைமுறை இடைவெளியை இறுக்கிப் பிடித்து நெரிக்க முடிந்தது.

சுழலியை எப்படி நகர்த்துவது என்று என் மகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லிக் கொடுத்தார். அதுதான் கணினியில் என்னுடைய முதல் பாடம். அந்தப் பாடத்தை ஒரு தெய்வீகக் கீதமாக எடுத்துக் கொண்டேன். இப்போது பத்து பேருக்கு முன்னால் கணினியைப் பற்றிய வரலாற்றையே பேச வைத்து இருக்கிறது. பிள்ளைகளுக்கே இப்போது கணினித் துறையின் ஆலோசகராக இருக்கின்றேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தலைமுறை இடைவெளி என்ன ஆனது சொல்லுங்கள், சகோதர சகோதரிகளே.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்குகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்குகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அண்மையில், பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு லூமுட் தெலுக் பாத்தேக்கில் இரண்டு நாள் கணினிப் பயிலரங்கை நடத்தினேன். அது ஓர் இனிமையான அனுபவம்.

அதைப் போல தேசிய அளவிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கணினிப் பயிலரங்குகளை நடத்த வேண்டும். அதனால் பல எழுத்தாளர்கள் நன்மை அடைய வேண்டும். கணினித் துறையில் அவர்கள் நன்றாகச் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கின்றேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஊழி ஊழி காலத்திற்கும் அடியேன் கடமைப் பட்டவன். ஏன் என்றால் நான் ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளன். நன்றி.

References:
[2] http://www.internetworldstats.com/asia.htm#my
Malaysia Internet and Telecommunications
Internet usage, population, telecom information for Malaysia.

Notations
[1]Dr. Sankaran Ramanathan is an internationally recognized Asian communications scholar and trainer. After serving at Universiti Teknologi MARA (UiTM) for 30 years, he served for 5 years as Head, Special Projects, Asian Media Information and Communications Centre (AMIC), Nanyang Technological University, Singapore.


25 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 86

உதயக்குமார் <uthayakumar15@gmail.com>
கே: வணக்கம் சார். Virtual PC என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன? சற்று விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
வணக்கம் உதயக் குமார் அவர்களே. ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும் வாசகர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துகள். ஓர் அருமையான கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.
Virtual PC என்பதை மாயைக் கணினி என்று அழைக்கிறார்கள். கணினிக்கு உள்ளேயே ஒரு மாயமான உலகில் இயங்கும் இன்னும் ஒரு கணினியைத் தான் 'விர்ட்சுவல் பிசி' என்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக, உங்கள் கணினியில் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதிப்பு செய்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், அதே கணினிக்குள் மற்றும் ஒரு விண்டோஸ் XP இயங்குதளத்தை இயங்கச் செய்வதைத் தான் மாயைக் கணினி என்கிறோம். விண்டோஸ் XP போல வேறு விண்டோஸ் இயங்குதளத்தையும் இயக்கச் செய்யலாம்.

ஒரே கணினித் திரையில் இரண்டு இயங்குதளங்கள் இயங்குவதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.


பார்க்கும் போது அது ஓர் அதிசயமாக இருக்கும். எப்படி இந்த மாதிரி ஓர் அதிசயம் என்று யோசிக்கலாம். என்னுடைய மடிக்கணினியை எடுத்துக் கொள்ளுங்களேன். மடிக்கணினித் திரையின் ஒரு பாதியில் விண்டோஸ் 7 வேலை செய்து கொண்டிருக்கும்.


இன்னொரு பாதியில் விண்டோஸ் XP வேலை செய்து கொண்டிருக்கும். உங்களுடைய இந்தக் கேள்விக்கான பதிலை விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன்.

முரசு அஞ்சல் விண்டோஸ் XP யில் நன்றாக வேலை செய்கிறது. அதனால் விண்டோஸ் XP யில் முரசு அஞ்சல் இயங்குகிறது.

மடிக்கணினித் திரையின் வலது பக்கத்தில் தமிழில் விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன். வாசகர்களின் மின்னஞ்சல் கடிதங்களை விண்டோஸ் 7 ல் திரையின் இடது பக்கத்தில் படிக்கிறேன்.

அவற்றுக்கான இணையத் தகவல்களையும் விண்டோஸ் 7 ல் தான் தேடுகிறேன். ஆக, ஒரே சமயத்தில் இரண்டு இயங்குதளங்கள் ஒரே கணினியில் இயங்குகின்றன. விண்டோஸ் 7 என்பது மனைவி என்றால் விண்டோஸ் XP என்பது பத்து வருஷக் காதலி.

இன்னும் ஒரு விஷயம். மாயைக் கணினி இயக்க வேண்டும் என்றால் உங்களுடைய கணினி அதிக ஆற்றல் உள்ளதாக இருக்க வேண்டும்.

ராஜேந்திரா வின்னாசி, கங்கார், பெர்லிஸ்

கே: உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துகள். எல்லா சுகங்களும் செல்வங்களும் பெற்று நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தை பிறந்தால் வலி பிறக்கும்.
ப: உங்களுக்கும் வாழ்த்துகள். நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல், குறும் செய்திகள் அனுப்பி உள்ளனர். எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.


நீங்கள் வலி பிறக்கும் என்கிறீர்கள். பரவாயில்லை. அன்பு மிகுதியால் வழி தவறி வலி வந்துவிட்டது.

வேகமும் விவேகமும் தூய்மையும் உழைப்பும் மலேசியத் தமிழர்கள் வாழ்வில் வேரில் முளைத்த வியர்வைப் பூக்கள் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.


அப்துல் சலிகான் முகமது கனி <masaligan@gmail.com>
கே: பழம் பெரும் நபர்களால் நாம் அறிந்து கொள்ள அவர்களின் பெயர்களைத் தட்டச்சு செய்து தேடினால், விக்கிபீடியாவில் விவரம் அறிகிறோம். அவர்களை யார் பதிவு செய்து வைப்பது? நாமும் அவ்வாறு செய்ய முடியுமா?
ப: விக்கிபீடியா என்பது உலக இணையக் கலைக் களஞ்சியம். உலக மக்களால் உலக மக்களுக்காக உருவாக்கப் பட்ட கலைக்களஞ்சியம்.

விக்கி என்றால் ஹவாய் மொழியில் விரைவு என்று பொருள். நீங்கள் அந்தக் கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்து கொண்டு உங்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்யலாம்.


தொடக்கத்தில் உங்கள் படைப்புகளைக் கலைக்களஞ்சிய ஆசிரியர்கள் கவனித்து திருத்தி வெளியிடுவார்கள். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பிழை என்று எதுவும் இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு நீங்கள் தன்னிச்சையாக எழுதி வெளியிடலாம்.

அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதுவரை அவர்களுடைய பாதுகாப்பில் உங்களுடைய எழுத்துகள் பிரசுரிக்கப் படும்.
விக்கிபீடியா பதிப்பாளர்களில் அடியேனும் ஒருவன்.

அண்மையில் நான் எழுதியது பரமேஸ்வராவைப் பற்றியது.

http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா
எனும் முகவரியில் படிக்கலாம்.


கடவுள் பாதி  puruma86@gmail.com
கே: அண்மையில் என் நண்பரிடம் இருந்து ஒரு நோக்கியா கைப்பேசி வாங்கினேன். அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது என்ற விவரங்களை எப்படி கண்டு பிடிப்பது?

ப: வணக்கம் கடவுள் பாதி. #92702689# என்று கைப்பேசியில் தட்டுங்கள். அதன் பரம்பரை வரலாறு அக்குவேர் ஆணி வேராகத் தெரியும். அது எல்லாம் சரி.

எப்படி ஐயா இந்த மாதிரியான பெயர்களை வைத்துக் கொள்ள முடிகிறது. மிச்சம் மிருகம் பாதி என்ன ஆனது ஐயா. தெரிந்து கொள்ள ஆசை.


மனோ ரஞ்சன் <prabu5509@yahoo.com>
கே: ஐயா, ஒவ்வோரு வாரமும் உங்களுடைய கணினி கேள்வி பதில்களைப் படிக்கக் காத்திருப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய கேள்வி இதுதான். MP4 இசைக் கோப்புகளை MP3 வடிவத்திற்கு மாற்ற முடியுமா. ஒரு நல்ல மென்பொருள் இலவசமாகக் கிடைக்குமா? உதவி செய்யுங்கள் சார்.


ப: MP என்பது பொதுவாக பயன்படுத்தப் படும் ஒலி அல்லது ஒளி முறைமை. MP3 ஒலி முறைமை வந்த பிறகு கனி உலகில் ஒரு பெரிய புரட்சியே ஏற்பட்டது.


சாதாரணமாக ஒரு பாடலை MP முறைமையில் உருவாக்கினால் 40MB வரும். MB என்பது Mega Bytes என்பதைக் குறிக்கும் கொள் அளவு.
MP3 முறைமையில் அதே பாடலை 4MB க்குள் கொண்டு வந்துவிடலாம். கொள் அளவு அதாவது space  சிக்கனமாகிறது.
இந்த MP3 முறைமைக்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் தமிழ்க் கணினி வல்லுநர்கள் என்று பெருமையாகச் சொல்லலாம். கணினி உலகம் என்று
சொன்னாலே அங்கே இந்தியர்கள்தான் 'பளிச்' என்று தெரிகிறார்கள்.

MP3 முறைமை மிகவும் எளிமையானது. இலகுவானது. இப்போதைக்கு இந்த முறைமையில் இதுவரை பிரசித்தி பெற்று விளங்கும் பாடல் அமரர் கிளிவ் ரிச்சர்ட்டின் 'யங் ஒன்ஸ்'.



சரி. உங்களுக்கு இந்தச் செயலி எனும் Program இலவசமாக, அதாவது கள்ளத் தனமாகக் கிடைக்கும் இடம் தெரிந்தாக வேண்டும். அப்படித்தானே!


தம்பி மனோ, வாசகர்களுக்காக உதவி செய்யலாம். அதற்காக, அமலாக்க அதிகாரிகள் வந்து நம்மை  அள்ளிக் கொண்டு போகும் அளவுக்கு நம்முடைய நிலைமை மோசமாகி விடக் கூடாது பாருங்கள்.

அதனால் என்ன சொல்கிறேன் என்றால், கொஞ்சம் காசு கொடுத்து அசல் மென்பொருளை வாங்கிக் கொள்ளுங்கள். நானும் கொஞ்சம் நிம்மதியாகப் பெயர் போடலாம். பிரச்னை வராது. சரியா. 

கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் Law Yat Plaza, Imbi Plaza வில் தேடினால் அந்தச் செயலி கிடைக்கும்.


விக்னேஸ், ஈப்போ - viji nesh <sweetnesh.116@gmail.com>
கே: கணினியைச் சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் Mouse கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுகிறது?

ப: என்ன செய்வது. கஷ்டப்பட்டு வேலை செய்தால் கண்டிப்பாக யாருக்கும் தூக்கம் வரும். இல்லையா. ஆனால், இங்கே வேறு மாதிரியான தூக்கம். நீங்கள் Wireless Mouse எனும் கம்பியில்லாச் சுழலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். சில கட்டத்தில் சுழலியைத் தட்டி எழுப்ப வேண்டியிருக்கும். அப்படித்தானே. இருந்தாலும் பரவாயில்லை.


கம்பியில்லாச் சுழலியைத் தூங்கச் செய்திடும் செயல்பாடு கணினிக்குள் இருக்கிறது. கணினியில் நாம் எந்த வேலையையும் எட்டு நிமிடங்களுக்கு மேல் செய்யாமல் இருந்தால், கம்பியில்லாச் சுழலி கொட்டாவி விட்டு தூங்கிவிடும்.

இதற்கு காரணம், சுழலியின் உள்ளே இருக்கும் மின்கலச் சக்தியைக் கனி மிச்சப் படுத்தும் தன்மை. அதன் வேலையை அது செய்கிறது.

இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சுழலியை லேசாக நகர்த்துங்கள். இல்லை என்றால் Control Panel > Mouse > Device Settings போய் சரி செய்து கொள்ளுங்கள்.

09 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 85


ராஜு முரளி  <raju_pollathavan@yahoo.com>
கே: கணினித் துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் தான் மேல் நாட்டு கணினி நிறுவனங்கள் அவர்களைத் தேடி வருகின்றன என்பது சரியா?
ப: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உலகத்திலேயே கணினித் துறையில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள்தான் இந்தியர்கள். கணிதத் துறையின் மூலகர்த்தாக்கள். சுழியம், ஒன்று, இரண்டு எனும் எண்களைக் கண்டுபிடித்தவர்கள்.
பிரமகுப்தா
கி.பி.598ல் குஜாராத் மாநிலத்தில் வாழ்ந்த பிரமகுப்தா என்பவர்தான் சுழியம் எனும் எண்ணைக் கண்டுபிடித்தார். அந்த எண் கி.பி.700ல் கம்போடியாவில் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது அண்மைய தகவல்.


http://wiki.answers.com/Q/Who_invented_the_number_system 
எனும் இடத்தில் விவரங்கள் கிடைக்கும்.


மற்ற எண்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டு விட்டன. அவை அரபு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. அங்கிருந்து எகிப்து நாட்டிற்குப் போய் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்தன.

கணிதம் என்பது இந்தியர்களின் இரத்தத்தில் ஊறிய இதிகாச நயனம். இயற்கை அள்ளிக் கொடுத்த சுதிவாச நாணயம். அதில் திராவிடர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்.

திராவிடர்களின் பாரம்பரிய கணிதப் புலமை இன்று வரை குறையவில்லை. இந்தப் புலமை யைக் கண்டு  சகோதரர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வருகிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 21,000 பேரை வேலைக்குச் சேர்க்கிறார்.

சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். பல கோடீஸ்வரர்களையும் உருவாக்கி வருகிறார். மேல் விவரங்களுக்கு - http://www.fathersofmathematics.com/  எனும் இணையத் தளத்திற்குச் செல்லவும்.

அசோக் முகிலன்  ashok.mugilan@gmail.com
கே: சிறுவர்கள் சின்ன வயதிலேயே கணினியை இயக்கக் கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், பெரியவர்களால் முடியவில்லை. ஏன்?

ப: கற்றுக்கொள்ளும் ஆற்றல் வயது ஆக ஆகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், அக்கறை வேண்டும். ஓர் ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு பிடிவாத குணம் இருக்க வேண்டும்.

நம்ம காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது இது ஏன் வந்து தொலைத்தது. இதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வயதை ஒரு காரணம் காட்டி சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. சரியா.

இன்னும் ஒரு விஷயம். இணையத்தை இருபத்து நான்கு மணி திறந்து விட்டால் படிக்கிற பிள்ளைகள் என்ன செய்வார்கள். அதை விட்டு விட்டு என் பிள்ளைகள் படிக்கவில்லை.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து கண்டதைக் கெட்டதைப் பார்த்துக் கெட்டுப் போகிறான் என்று பழி போடுவது நல்ல காரணமாக இருக்கிறதா. சொல்லுங்கள். இதில் உங்கள் பிள்ளைகள் கண்ட கண்ட சால்சாப்புகளைச் சொல்லலாம்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தில் வலம் வருவதில் பாது காப்புத் திரையைப் போடுங்கள். நீங்கள் இருபது வயதில் தெரிந்து கொண்டதை இப்போது உள்ள பிள்ளைகள் பத்து வயதில் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. உங்களுக்கு முன்னால் நல்லதைப் பார்க்கும் பிள்ளைகள், நீங்கள் கொஞ்சம் மறைந்ததும் மிச்சம் மீதியைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பதினாறு வயது வரை அவர்களைக் கட்டுப் படுத்துங்கள். அதன் பிறகு பாலியல் தொடர்பான இணையப் பக்கங்களைப் பார்ப்பதில் உள்ள பிரச்னைகளைச் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்வார்கள். http://www.megaupload.com/?d=GK7X43EN எனும் இடத்தில் குழந்தை கள் பாதுகாப்பு நிரலி இருக்கிறது.

அதைப் பதிவு இறக்கம் செய்து கணினியில் பதிப்பு செய்யுங்கள். அப்புறம் உங்கள் குழந்தை கள் பாலியல் (Video) காணொளிகளைப் பார்க்க முடியாது. கடவுச் சொல் வைத்து இருக்கும் உங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. அதற்காக நீங்கள் கட்சி மாற வேண்டாம். அப்புறம் வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகி விடும்.

ஓம் முருகா oum9160@yahoo.com.sg
கே: சென்ற வாரம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மைக்ராசாப்ட் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனல், வயது காலை வாரி விட்டது என்று பதில் கொடுத்து இருந்தீர்கள். அந்த அளவிற்கு நீங்கள் அமெரிக்காவினால் வேண்டப் படாதவரா அல்லது மற்றவர்கள் பார்த்துப் படித்து மெச்ச வேண்டும் என்பதற்காக இப்படி பதில் கொடுத்தீர்களா?

ப: ஓம் முருகா! மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி பதில் கொடுத்தேன். அதுதான் பாருங்கள். உங்களுக்கு மட்டும் அந்த உண்மை தெரிந்து இருக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

செய்திகளைப் படித்தால் இப்படித் தான் நன்றாகக் கவனமாகப் படிக்க வேண்டும். அடுத்து பல இலட்சம் வாசகர்களுக்குப் பயன் படும்படியான  ஒரு நல்ல கேள்வியைக் கேட்டதற்குப் பாராட்டுகள். 



செல்வக்குமரன், தாமான் அண்டாலாஸ், கிள்ளான்
கே: சார், 4G கைப்பேசிகள் இப்போது தான் வந்து இருக்கின்றன. அதற்குள் 5G கைப்பேசிகள் வரப் போகின்றன  என்று கேள்விப் பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை சார்?


ப: நீங்கள் கேள்வி பட்டது உண்மை. மேல் நாட்டு அறிஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. 5G கைப்பேசிகளையும்  கண்டுபிடித்து விட்டார்கள். இந்தக் கைப்பேசிகளைப் பயன் படுத்தி லேசர் ஒளிகளின் மூலம் இரும்பை வெட்ட முடியும் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. திருடர்களுக்கு லாட்டரி அடித்தது மாதிரி ஆகி விடுமே.

அடுத்து, கணினிகள் செய்யும் வேலைகளை இந்தக் கைப் பேசிகள் எடுத்துக் கொள்ளும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். சென்னையில் ஒருவர் ஒரு தியேட்டரில் படம் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தப் படத்தை அப்படியே அதே சமயத்தில் அசகு பிசகு இல்லாமல் தெளிவாக மலேசியாவில் இங்கே நேரடியாகப் பார்க்க முடியும்.  அது மட்டும் அல்ல. 5G கைப்பேசி ஒரு முழு தமிழ்ப் படத்தை ஐந்து நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விடும் ஆற்றல் கொண்டது.

அடுத்து, 5G கைப்பேசிகளில் வாசம் வரும். உங்கள் மனைவி என்ன வாசனைச் சவர்க்காரம் போட்டுக் குளித்தார் என்பதையும் சொல்லி விடும். அப்புறம் என்ன? இப்போதே ஆர்டர் செய்து விடுங்கள். 2013 ஆம் ஆண்டில் இந்த 5G கைப்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. எதற்கும் தயாராக இருங்கள். உலகம் உள்ளம் கைக்குள் அடக்கமாகி வருகிறது.

இன்னும் ஒரு வேடிக்கை. ஜப்பான் 6G கைப்பேசி ஆய்வுகளில் இறங்கியுள்ளது. இந்தக் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு ஆள் இல்லாமல் கார்களை ஓட்ட முடியும் என்கிறார்கள்.

காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கைப் பேசி வழியாக கட்டளைகளை மட்டும் போட்டால் போதும். இடது பக்கம் மெதுவாகத் திரும்பு. வலது பக்கம் வெட்டு. லேசாகப் பிரேக் வை. காரை நிறுத்து. கதவைத் திறந்து விடு. இந்த மாதிரிச் சின்னக் கட்டளைகள்.

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. தண்நீரில் போட்டாலும் மூழ்காத 7G கைப்பேசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை.

யாருக்காவது தங்களுடைய பணத்தைத் தண்நீரில் போட வேண்டும் என்கிற ஆசை இருந்தால் சொல்லுங்கள். தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால் போட்ட பணம் திரும்பி வருமா வராதா. வரும் ஆனால் வராது.

03 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 84

தாமிதாரா, பாங்கி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: நான் பலமுறை குறும் செய்தி அனுப்பியும் என்னுடைய கேள்விகள் இடம் பெற வில்லை. என் நண்பர்களின் கேள்விகள் வருகின்றன. ஏன்?


ப:
அன்புள்ள தாமிதாரா, நீங்கள் ஓர் ஆணா இல்லை பெண்ணா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் குமாரி அல்லது திருமதி என்று குறிப்பிடுங்கள். பயப் பட வேண்டாம். நான் உங்களைக் கடத்திக் கொண்டு போய் விட மாட்டேன்.

ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன். கணினிகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வாசகர்கள் பலர் கேள்விகளைக் கேட்கிறார்கள்.


என்னால் இயன்றவரை கைப்பேசி வழியாகத் தீர்த்து வைக்கிறேன். இது ஓர் இலவசச் சேவை. இருந்தாலும் முடிந்த வரை குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்பதைத் தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் ஒருவர் மட்டும் குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்டால் பரவாயில்லை.  ஆனால், ஒரு நாளைக்கு குறைந்தது 15 குறும் செய்திகள், 10 கைப்பேசி அழைப்புகள், 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.


என் நிலையையும்  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவசரமாக இருந்தால் உதவிகள் செய்யலாம். செய்தும் வருகிறேன்.

அதற்காக இரவு 12 மணிக்கு அழைத்துக் காணாமல் போன கைப்பேசியைக் கண்டுபிடித்து தருமாறு கேட்க வேண்டாம். 'காலையில் கூப்பிடலாம் என்று நினைத்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது' என்று தயவு செய்து சமாதானம் சொல்ல வேண்டாம்.

ஒரே குறும்செய்தியைப் பத்து தடவைகள் அனுப்பி ஒருவருடைய பொறுமையைச் சோதிப்பதில் நியாயம் இருக்கிறதா. சொல்லுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ksmuthukrishnan@gmail.com கேள்விகளை அங்கே அனுப்பி விடுங்கள்.

ஒரு பல்கலைக்கழக மாணவி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: சார், நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அண்மையில் 2G Spectrum என்றால் என்ன என்பதைப் பற்றி வீட்டில் நானும் என் தங்கையும் விவாதித்துக் கொண்டு இருந்தோம். அதைப் பார்த்த எங்கள் அப்பா அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். தேவை இல்லை என்று கட்டளை போடுகிறார். அப்படி என்ன பெரிய இடத்து விவகாரம். வர வர அவர் எங்களை அடிக்கடி தேவை இல்லாமல் கட்டுப் படுத்துகிறார். பேசுவதில் கூட சுதந்திரம் இல்லையா. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. உங்கள் கருத்தைச் சொல்லவும்.

ப: நல்லது. நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி. நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டிய வயது. இந்த வயதில் எந்தப் பெண் பிள்ளைக்கும் தன் தகப்பனைத் தவிர மற்றவர்கள் கட்டளைகளைப் போடுவது பிடிக்கவே பிடிக்காது. இது நான் அறிந்த உண்மை. உங்கள் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

ஆனால், உங்கள் விஷயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அவருக்கே சலிப்பு ஏற்படும் வகையில் விவாதம் இருந்து இருக்கலாம் என்று என் உள் மனம் சொல்கின்றது.

தகப்பனாருடைய கைகளைப் பற்றி கூட்டிச் செல்லும் போது மகளுடைய இரத்த பாசம் பேசுகின்றது. மகளுடைய வாழ்க்கை இலக்கணங்கள் தடுமாறும் போது தகப்பனுடைய இதய பாசம்  பேசுகின்றது. 

இந்த நெளிவு சுழிவுகளினால் ஒரு தகப்பன் - மகள் உறவு நலிந்து போய் விடுமா. சொல்லுங்கள்.

தகப்பன் - மகள் உறவு என்பது ஒரு ஜென்மாந்திர உறவு. கட்டியவன் வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறி  நின்று ஏங்கித் தவிக்கும் ஒரு புனிதமான உறவு.  அப்படிப் பட்ட உறவைக் கொச்சைப் படுத்த நினைப்பது நன்றாக இல்லை. ரொம்பவும் தப்பு மகளே.

உங்களுடைய அப்பாவின் பேச்சைக் கேளுங்கள். அவரை மீறி எதையும் செய்ய வேண்டாம். எந்தத் தகப்பனும் தன் மகள் கெட்டுப் போக வழி சொல்லவே மாட்டான். இது சத்தியமான உண்மை.

நீங்கள் எழுதும் எழுத்து இருக்கிறதே அது உங்களுடைய  வெறும் கையெழுத்து.  ஆனால், உங்கள் தகப்பன் எழுதிய எழுத்து இருக்கிறதே அது உங்கள் தலை எழுத்தையே மாற்றிப் போடும் கையெழுத்து. 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆக, இப்போதைக்கு படிப்பை ஒழுங்காகப் படித்து முடியுங்கள். அடுத்த வரும் கேள்விகள் உங்களுக்காக வருகின்றன.

சங்கேஸ்வரன், ஜாலான் தீமா, ஈப்போ
கே: 4G வரப் போகிறது. அப்படி இருக்கும் போது 2G விவகாரம் பற்றி ஏன் எல்லோரும் மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பழையதைப் பற்றி பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை என்பது கருத்து.

ப: அது சரி. வீடு பற்றிக் கொண்டு  எரிகிறது. அடுப்பு எரிக்க நெருப்பு கேட்பது போல இருக்கிறது உங்கள் கருத்து. என் கருத்தைச் சொல்லலாம் அல்லவா. அந்தப் பணத்தை எல்லாம் எடுத்து ஆறு கோடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் 32,500 கிடைத்து இருக்குமே.

இப்போது சொல்லுங்கள். அலட்டிக் கொள்ளாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள். எனக்கு என்னவோ நீங்கள் தான் புரிந்து கொள்ளாமல் அலட்டிக் கொள்வது போல தெரிகிறது.

சண்பகப்பிரியா, தாமான் உத்தாமா, மாசாய்
கே: 0G கைப்பேசிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா சார்?
ப:
பேசி வைத்தால் போல இந்த வாரம் கைப்பேசிக் கேள்விகளாக வருகின்றன. கைப்பேசிகளில் 0G, 1G, 2G, 2.5G, 2.75G, 3G, 4G தலைமுறைகள் உள்ளன. G என்றால் Generation. தமிழில் தலைமுறை என்று சொல்கிறோம். 

0G என்பது ஆக மூத்தத் தலைமுறை.
முதன்முதலில் வெளிவந்த கம்பியில்லாத் தந்தி கைப்பேசிகள். இவை 1940-50 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. அதன் எடை 40 - 60 கிலோகிராம். முதுகில் கட்டித் தூக்கிச் செல்ல வேண்டும்.

அதை எரிக்சன் நிறுவனம் கண்டுபிடித்தது. ஆக, கைப்பேசிகளின் தந்தை யார் என்றால் எரிக்சன் கைப்பேசி தான். பின்னர் சோனி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்ததால் சோனி எரிக்சன் என்று பெயர் வந்தது.

கைப்பேசிகளின் தந்தையையே ஓரம் கட்டி விட்டு நோக்கியா இப்போது முதன் நிலையில் நிற்கிறது. இது வரை உலகம் முழுமையும் 460 கோடி கைப்பேசிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் 120 கோடி நோக்கியா கைப்பேசிகள்.

1G என்றால் முதலாம் தலைமுறைக் கைப்பேசிகள். இவை 1940ஆம் ஆண்டுகளில் வெளி வந்தன. இந்த வகையான கைப்பேசிகளைக் கொண்டு பேச மட்டுமே முடியும். SMS எனும் குறும் செய்தி அனுப்ப முடியாது.

2G கைப்பேசிகள் 1990 ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிவந்தன. இவற்றைக் கொண்டு குறும் செய்தி அனுப்பலாம். அழைப்பவர்களின் எண்களைப் பார்க்கலாம்.

2.5G கைப்பேசிகள் மூலம் மின்னஞ்சல், இணையச் சேவைகளைப் பெற முடியும். 3GP படங்களைப் பார்க்க முடியும்.

3G கைப்பேசிகள் 2003ஆம் ஆண்டில் வெளிவந்தன. அகன்ற அலைவரிசையின் (Broadband) வேகம் அதிகரிக்கப் பட்டது.

4G கைப்பேசிகள் இந்த 2010 ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியானது. இதில் அதி வேக அகன்ற அலை வரிசை இணையச் சேவை இருக்கிறது.

அதிக வரையறை (High Definition) காணொளிப் படங்களைப் பார்க்க முடியும். நேரடி நேரலை (Live Streaming) எனும் முறையும் இருக்கிறது.

4G முறையின் வழியாக உலகத்தின் எந்த மூலையில் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் நேரலை நிகழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேச முடியும்.

கையில் உள்ள எலும்புகளை எக்ஸ்ரே எடுக்க முடியும். சந்திர மண்டலத்தில் ஒருவர் இருந்தால் அவருடன் பேச முடியும்.

வீட்டில் நடக்கின்ற விஷயங்களைத் துப்பறியும் காமிரா மூலமாக ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கைப்பேசியில் பார்க்க முடியும். மனைவி

சீரியஸாக துணி தைக்கிறாளா இல்லை சீரியல் பார்க்கிறாளா என்பது தெரிந்து விடும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்றாம் உலகப் போர் வர வாய்ப்புகள் வரிசை பிடித்து நிற்கின்றன. பத்திரம்.

4G ஐக் கொண்டு தொலைதூரத்தில் இருந்து கணினியை இயக்க முடியும். சாவி போடாமல் கார்களின் கதவுகளைத் திறக்க முடியும். வீட்டில் நெருப்பு பிடித்து விட்டால், திருடர்கள் நுழைந்து விட்டால் எச்சரிக்கை ஒலிகள் வரும்.

இன்னும் நிறையப் பயன் பாடுகள் உள்ளன. தொழில்நுட்பம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.