07 நவம்பர் 2020

அனார்கலி சலீம் காதல் அழகான காதல்

தமிழ் மலர் - 05.11.2020

காதல் ஒரு ஆகாயம் அது
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம் அது
வீழாமல் இல்லையடி

நல்ல அழகான காதல் வரிகள். அந்தக் காதல் வரிகளின் குடும்பத்தில் பல்வகை காதல் ரகங்கள். அமரக் காதல், ஆத்மீகக் காதல், இந்திரக் காதல், இனிக்கும் காதல், வலிக்கும் காதல், ஜொலிக்கும் காதல். இப்படி ஏகப்பட்ட தெய்வீகக் காதல்கள். இவை அந்தக் காலத்து அத்திமேட்டுக் காதல்கள்.

இந்தக் காலத்துக் காதல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் அசின் பிசின் காதல்கள். ஊரைவிட்டு ஓடிப் போகலாமா காதல். பிள்ளையைப் பெற்றுக் கொண்டு கல்யாணம் பண்ணிக்கலாமா காதல். புருசனைப் போட்டுத் தள்ளும் காதல். இவை எல்லாம் மார்டன் மின்மினி ஜொல்லுவாய்க் காதல்கள். நாமும் தலை எழுத்தே என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்தக் காதல் என்றைக்கு வரும் எப்படி வரும். எவருக்குமே தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கம் யார் தலைவைத்துப் படுக்கப் போகிறார்கள். சரி.

இந்தக் காதல் விசயத்தில் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே அது இமயத்தின் சிகரத்தையே உரசிப் பார்த்த ஒரு காந்தர்வக் காதல். சும்மா சொல்லக் கூடாது. சொக்கமான தங்கத்தையும் விலை பேசிய காதல். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

என்னடா வரலாற்றுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று காதல் பக்கம் வந்து விட்டானே என்று நினைக்க வேண்டாம்.

அன்றாடம் தயிர்ச் சாதம் சாப்பிட்டு சலித்துப் போய் கொஞ்சம் வெங்காயத் தோசை சாப்பிடலாமே என்கிற சின்ன ஆசை. வேறு ஒன்றும் இல்லீங்க. உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கட்டுரைகளுக்கு இரண்டு மூன்று நாள்கள் லீவு கொடுக்கலாமே. சரிங்களா.

சலீம் அனார்கலி காதல் உணர்வுகளில் பாச நேசமான சறுக்கல்கள். கொஞ்ச நஞ்சம் இருக்கவே செய்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. படியுங்கள். இரகசியம் தெரியும். அந்த ஜீவன்களின் சப்தநாடிகள் துடிக்கட்டும். கொஞ்ச நேரம் ஆர்ப்பரித்து விட்டுப் போகட்டும்.

எது எப்படி இருந்தாலும் ஐநூறு வருடங்களுக்குப் பிறகும் சலீம் அனார்கலி பற்றி நாம் பேசுகின்றோமே; அது தானே பெரிய விசயம்.

இப்படியும் சிலர் சொல்கிறார்கள். அதாவது சலீம் அனார்கலி காதல் என்பது ஒரு கற்பனையான புனைவுக் கதை. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது ஓர் உண்மையான நினைவுகளின் சகாப்தம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அதைப் பற்றி சிலர் தவறாகவும் சொல்கிறார்கள். அனார்கலி எனும் பெயரில் யாரும் இல்லை. அனார்கலி என்பது கவிஞன் ஒருவனின் கற்பனையில் உருவான கதாபாத்திரம். எழுதியவன் ஓர் உருதுக் கவிஞன். இடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு கற்பனையில் மூழ்கி இருந்தான்.

ஒரு கல்லறையைப் பார்த்தான். அங்கே அனார்கலி எனும் ஒரு நடன மாது இங்கே உறங்குகின்றாள் எனும் வாசகத்தையும் பார்த்தான். மெய்மறந்து அந்த வாசகங்களை ரசித்தான்.

அப்படியே ஒரு காதல் கதையையும் எழுதி விட்டான். இப்படியும் ஒரு சில வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. சொல்லி விட்டுப் போகட்டும். அது எந்த அளவுக்கு உண்மை. அதை ஆராய்ந்து பார்ப்பது தான் இப்போதைக்கு இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

எங்கே போனாலும் சரி; என்ன பேசினாலும் சரி; உண்மை இதுதான். சலீம் அனார்கலி என்பது காதலின் எல்லாப் பரிமாணங்களையும் பிழிந்து எடுத்த ஓர் உண்மையான ஒரு கவிதா காவியம். காதல் காவியம். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சலீம் அனார்கலி ஒரு சோகமான வரலாற்றுக்  காவியம். வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்ட ஓர் உண்மையான காதல் காவியம்.

தாஜ்மகால். தெரியும் தானே. அதைக் கட்டியது. ஷாஜகான்  தெரியும் தானே. அந்த  ஷாஜகானின் அப்பா தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன் சலீம். என்ன யோசிக்கிறீர்கள். தொடர்ந்து படியுங்கள்.

சின்ன வயதிலேயே காட்டுக்கு அனுப்பப் பட்டவர் சலீம். பத்து ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தவர். அரியணை ஏறும் போது சலீம் என்கிற பெயர் ஜகாங்கீர் (Jahangir) என்று மாற்றம் கண்டது.

மொகலாயப் பேரரசில் ஜகாங்கீர் என்கிற பெயர் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

காடு நாடு; கத்தி கப்படா என்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இருந்த சலீம் அரண்மனைக்குத் திரும்பினார். அவருக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தார்கள்.

நாடகம் நாட்டியம் என்று எல்லாமே ரொம்பவும் தடபுடலாக நடந்தன. அப்போது விருந்து வரவேற்பு அலங்கார வளைவில் ஒரு பெண் ஒரு பெண் ஓர் உயிர்ச் சிலையாக நிற்க வைக்கப் பட்டாள். சுத்தமாக அழகில் சுத்தமான ஓர் உயிர் ஓவியம். அந்த ஓவியத்திற்குப் பதினான்கு வயது இருக்கும். பெயர் நாதிரா. நடன அரங்கில் அவளும் நடனம் ஆடினாள்.

இந்த நாதிரா என்பவள் அக்பரின் அந்தர்ப்புரத்துப் பெண். சுருக்கமாகச் சொன்னால் ஒரு நடனமாது. அக்பரின் வைப்பாட்டிகளில் ஒருத்தி.

அக்பர் (Abul-Fath Jalal ud-din Muhammad Akbar) என்பவரைப் பற்றி பெரிய பெரிய கதைகளை எல்லாம் நாம் படித்து இருக்கிறோம்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் இவரும் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்து மறைந்து போய் இருக்கிறார். இவருக்கு 185 மனைவிகள். இந்த உண்மையை நம்புவீர்களா. ஏற்றுக் கொள்ளுங்கள்.

சான்றுகள்:

1.Burke, S. M. (1989). Akbar, the greatest Mogul. Munshiram Manoharlal Publishers. p. 142.)

2. https://angel1900.wordpress.com/2014/02/18/akbars-first-50-wives/)

ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஒரு மனைவியைப் போய்ப் பார்ப்பாராம். மற்ற நேரங்களில் மற்ற மற்ற அந்தர்ப்புரத்து வேலைகள் நிறையவே இருந்து இருக்கின்றன. இன்னும் ஓர் ஆயிரம் பெண்கள் வேலைக்காரிகளாக இருந்து இருக்கிறார்கள்.

நம்ப முடியவில்லை. என்ன செய்வது. நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்து ராசாக்கள் பெண்கள் விசயத்தில் ரொம்பவும் தெளிவாக இருந்து இருக்கிறார்கள்.

பாவம் இப்போது வாழ்கிற ஆண்களைப் பாருங்கள். ஒரு இஞ்ச் நகர்ந்தாலும் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டிய நிலைமை. நான் சொல்லவில்லை. புந்தோங் பொன்னுசாமியின் புலம்புல்.

இம்சையைத் தாங்க முடியலடா சாமி என்று சிலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று காணாமலும் போகிறார்களாம். இது பசார் மாலாம் பக்கிரிசாமியின் புலம்பல்.

இதில் நூற்றுக் கணக்கான பெண்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் பேர் போட்டார்களோ தெரியலீங்க. ரொம்ப கவலையாக இருக்குது. யோசிச்சு யோசிச்சு மயக்கமே மரி. இது பெரிய மார்க்கெட் பக்ககிரிசாமியின் புலம்பல்.
ஊர்க் கதை நமக்கு வேண்டாங்க. நம்ப கதையே பெரிய கதை. விடுங்கள். அனார்கலி கதைக்கு வருவோம்.

இந்தச் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே இது ஒரு நல்ல காதல் காவியம். சோக ரசம் சொட்டும் ஒரு காதல் கதை. இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு காதல் தோல்வி இனி யாருக்கும் வரக் கூடாது. அமைதியாகப் படியுங்கள்.

அதற்கு முன்னர் ஒரு சின்ன செருகல். சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது. பார்த்தவுடன் காதல் என்று சொன்னால் சிலர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். பிடிவாதம் பிடிப்பார்கள். அது எல்லாம் தப்புங்க.

காதல் எந்த நேரத்திலும் வரலாம். எந்த இடத்திலும் வரலாம். எவர் மீதும் வரலாம். எப்படி வேண்டும் என்றாலும் வரலாம். வர வேண்டிய நேரத்தில் வந்தே ஆகும்.

வரும் ஆனால் வராது என்று மட்டும் சொல்ல முடியாது. அப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரால் கூட தப்பிக்க முடியாமல் போனதே. என்ன சொல்கிறீர்கள். சரி விடுங்கள்.

அம்பிகாபதி அமராவதி;

அக்பர் ஜோதா;

லைலா  மஜ்னு;

ஹீர் ராஞ்ஜா;

ஷிரீன் பரகாத்;

ஷாஜகான் மும்தாஸ்;

விக்டோரியா ஆல்பர்ட்;

டிரிஸ்டன் சோல்ட்;

நெப்போலியன் ஜோஸ்பின்;

பாரீஸ் ஹெலன்;

கிளியோபட்ரா மார்க் ஆண்டனி;

இது ஒரு பெரிய காதல் பட்டியல். நீண்டு கொண்டே போகும்.

இவர்களை ஆதிவகைக் காதலர்கள் (Archetype Lovers) என்று சொல்வார்கள். ரோமியோ ஜூலியட் காதலை விடுங்கள். அது ஆங்கிலேய மகாகவி செக்ஸ்பியர் (William Shakespeare) கற்பனையில் எழுதியது.

Bly, Mary (2001). "The Legacy of Juliet's Desire in Comedies of the Early 1600s". In Alexander, Margaret M. S; Wells, Stanley. Shakespeare and Sexuality. Cambridge University Press. pp. 52–71

காதல் காவியப் பட்டியலில் சலீம் அனார்கலி காதல் கதையைச் சேர்த்தால் சலீம் அனார்கலிக்குத் தான் முதல் மரியாதை செய்ய வேண்டும்.

அனார்கலி என்பது ஓர் உருது மொழிச் சொல். ஷாமுகி (Shahmukhi) என்று பெயர். மாதுளம் மலர் என்று பொருள். அனார்கலியின் உண்மையான பெயர் நாதிரா பேகம் (Nadira Begum - Sharf-un-Nissa).

இவருக்கு இன்னும் ஒரு பெயர் இருக்கிறது. சர்ப் உன் நிசா. இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்மணி. அனார்கலியின் அப்பாவின் பெயர் நூர் கான் ஆர்குன். (Noor Khan Argun).

அக்பர் இந்தியாவை ஆட்சி செய்த போது அனார்கலியின் குடும்பம் இந்தியா பஞ்சாப்பைச் சேர்ந்த லாகூர் எனும் இடத்திற்குப் புலம் பெயர்ந்தது. பஞ்சாப் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது.

https://www.dawn.com/news/694833/legend-anarkali-myth-mystery-and-history - Legend: Anarkali: myth, mystery and history

அந்தக் கட்டத்தில் மொகலாயப் பேரரசு ஒட்டு மொத்த இந்தியாவையே ஆட்சி செய்து வந்தது. போர், வாள், இரத்தம். இதற்கு இடையில் இளைப்பாற ஓர் ஆகான அரண்மனை. பக்கத்தில் சொகுசாக ஓர் அந்தர்ப்புரம். அங்கே மது மாது மதி மயங்கும் நடனங்கள்.

இது தான் அப்போதைய மொகலாயப் பேரரசர்கள் சிலரின் வாழ்க்கை. அப்படியாக அமைத்துக் கொண்டார்கள். இந்தப் பட்டியலில் அவுரங்கசிப் மன்னரைச் சேர்க்க வேண்டாம். அவர் தனித்து நிற்கும்  தனிக்காட்டு ராஜா.

ஜெய்ப்பூர் ராஜபுத்திர இனத்தை சார்ந்த ஹர்கா பாய் என்பவரை அக்பர் மணம் செய்து கொண்டார். ஹர்காவின் மற்றொரு பெயர் ஜோதா (Jodha Bai - Ruqayya Sultan Begum).

இவர்களுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தான் சலீம். ஏற்கனவே பிறந்தவர்கள் இருவர். சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள்.  

அதற்கு முன்னர் அக்பரின் அதிகாரப்பூர்வமான மனைவிமார்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.

1. சலிமா சுல்தான் பேகம் (Salima Sultan Begum)

2. மரியம் சமானி (Mariam-uz-Zamani)

3. கிஸ்மியா (Qismiyah Banu Begum)

4. பிபி சாட் (Bibi Daulat Shad)

5. ராட்சியா (Raziya Sultan Begum)

6. ராஜ்குமாரி (Rajkumari Rukmawati Baiji Lal)

7. பானுமதி (Baiji Lal Bhanumati Kanwari)

8. பைஜி (Baiji Lal Raj Kanwari)

9. மகா ராஜகுமாரி (Maharajkumari Nathi Bai)

10. தாரா சகிபா (Tara Begum Sahiba)

11. தவுதி (Tauti Begum)

12. மன்போதி (Rajkumari Manbhaoti)

ஆக தவமாய் தவம் இருந்து பெற்ற மகனுக்கு சலீம் என்று பெயர் வைக்கிறார்கள். மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசு. அந்தர்ப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கின்றார்.

பத்து பன்னிரண்டு வயதிலேயே பற்பல கேளிக்கைகளில் ஒன்றரக் கலந்தும் போகின்றார். இந்த விசயம் அக்பரை வேதனைப் படுத்துகிறது. சலீமை எப்படியாவது திருத்த வேண்டும் என்று நினைத்துக் காட்டுக்கு அனுப்புகிறார். அதன் பின்னர் தான் சலீமின் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.11.2020





 

மலேசியாவில் 6800 பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு

தமிழ் மலர் 05.11.2020 


06 நவம்பர் 2020

மலாயா தமிழர்கள்: பெர்மாத்தாங் தோட்டம் பந்திங் 1882

1882-ஆம் ஆண்டில் சிலாங்கூர் பந்திங், ஜூக்ரா, பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் இது ஒரு வாழைத் தோட்டம். பின்னர் ஆமணக்கு (castor); காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.

Selangor, Banting, Jugra Permatang Estate was established in 1882. At first it was a banana plantation. Then castor; Coffee plantation. It then became a coconut plantation. Tamil people were brought in from India as indentured labourers to this estate.

இந்தத் தோட்டம் ஜுக்ரா நகரத்தில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது. இந்தத் தோட்டத்தில் ஓர் அதிசயம் என்னவென்றால் அந்தத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழர்கள் சொந்தமாகவே தங்களின் வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவி இருந்தன.

The Permatang coconut estate, situated seven miles from Jugra town, has several interesting and distinctive features. The coolies are not housed in "lines," as is usual on estates in the Federated Malay States, but in houses built by themselves to their own design and scattered over the property.

ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்தமாகக் காய்கறித் தோட்டம். தோட்டப் பால் பண்ணையை நிர்வாகி அறிமுகம் செய்தார். தோட்டத்தில் 35 பசுமாடுகள். பால் மற்றும் வெண்ணெய் விற்பனை நல்ல லாபத்தை அளித்தது. இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 785 ஏக்கர். இதில் 300 ஏக்கர் தென்னை மரங்கள்.

Each house has its own patch of garden. The manager has introduced dairy farming, and the sale of milk and butter from his thirty-five head of cattle yields a profit after paying all expenses. The estate is 785 acres in extent, 300 acres of which have been planted with coconuts.

1906-ஆம் ஆண்டில் 17,000 தென்னை மரங்கள். 7335 தேங்காய்கள். 1907-ஆம் ஆண்டில் 150,000 தேங்காய்கள் கிடைத்தன.

Indian arrivals to Malaya since 1844

There are altogether 17,000 coconut-trees, and the produce from those in bearing in 1906 was 7,335 nuts; the estimated yield for 1907 was 150,000 nuts. The nuts are made into copra on the estate, and the product is sold in Singapore.

1900-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் நிர்வாகி மன்ரோ (R. W. Munro). 1864-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். 1895-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். இவர் வருவதற்கு முன்னர் பல நிர்வாகிகள் பணி செய்து உள்ளனர். நிர்வாகி மன்ரோ, சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காபி பயிர்த் தொழில் ஈடுபட்டார். இந்தத் தோட்டம் Morib Coconut Estates Syndicate நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.

A picture speaks more than 1000 words

Mr. R. W. Munro, the manager, was born in 1864, came to the Federated Malay States in 1895, and spent years in coffee-planting in Negeri Sambilan and Selangor. Many managers have worked before he came. R. W. Munro has managed the Permatang estate since 1900s. The proprietary company, the Morib Coconut Estates Syndicate.

இதை எல்லாம் பார்த்த பிறகு மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்ல முடியுமா. வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.11.2020

சான்றுகள்:


1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 492.

2. http://www.biship.com/fleetlists/fleet1880-1889.htm

3. http://seasiavisions.library.cornell.edu/catalog/

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

5. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)

 

இலங்கை தமிழர்களின் வாயில்லா வலிகள்

தமிழ் மலர் - 04.11.2020

இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் இடிமின்னலாய் இன்னல்கள் நிறைந்த காலம். ஒடுக்கு முறைகள் பலவந்தமாய்த் திணிக்கப்பட்ட காலம். ஒட்டு மொத்தமாய் அடிமைகளைப் போல வாழ்க்கைப்பட்ட காலம். இரண்டு கால் ஜீவன்களின் வாயில்லா வலிகள் பேசிய காலம்.

மற்ற மற்ற இலங்கைச் சமூகத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் போது, இப்போதைய மலையகத் தமிழர்களின் வாழ்வியல் அமைப்பு, மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் புகைச்சல் மண்டிய காலம் என்று சொல்லலாம்.

அந்த நிலைமை சிங்களப் பேராண்மையில் மேலும் மோசமாகி விட்டது. பொல்லா இனவாதப் பேய்களின் அனர்த்தக் காலம் என்றுகூடச் சொல்லலாம்.

அது ஒரு வகையான புலம்பெயர்வின் பின்னடைவு. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. மலையகத் தமிழர்களின் தமிழக உறவுகள் எல்லாம் பெரும்பாலும் துண்டிக்கப் பட்டன.

தமிழகத்தில் அவர்களுக்குச் சொந்தமான நில புலன்கள், தோட்டம் துரவுகள், வரப்பு வயல்காடுகள், வீடு கிணறுகள் என எல்லாவற்றையும் இழந்த ஒரு பரிதவிப்பு. ஒரு தாயின் பிள்ளை ஏக்கத்தின் மறு அவதரிப்பு போலும்.

150 ஆண்டு காலத்திற்குத் தொடர்புகள் இல்லாமல் போனால் எப்படிங்க. அவர்களுடைய சொந்தங்கள் யார்; பந்தங்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாமல் போனது.

அப்படியே தேடிப் போனாலும் யார் எவர் என்று அடையாளம் தெரியாது. கிராமத்துக் கிணற்றுக்குள் செத்துக் கிடக்கும் உண்மையும் எட்டிப் பார்க்காது. அப்புறம் எப்படிங்க.

நதி மூலம் அடிபட்டுப் போனது. ரிஷி மூலம் இடிபட்டுப் போனது. சரியான உறவுப் பாலங்கள் இல்லை. சான்றுகளும் இல்லை. அதனால் பூர்வீகச் சொத்துகள் மீது உரிமை கொண்டாட முடியாமல் போனது. சரி.

இன்னும் ஒரு விசயம். சிலோன் டீ. தெரியும் தானே. உலகளாவிய நிலையில் சிலோன் தேயிலையைப் புகழ்பெறச் செய்தது இந்த மலையகத் தமிழர்கள் தான். வேறு யாரும் இல்லை. உலகமே ஏற்றுக் கொள்கிறது. அடுத்து இன்னும் ஒரு மிக மிக முக்கியமான விசயத்திற்கு வருகிறோம்.

1948-ஆம் ஆண்டு. இலங்கைக்குச் சுதந்திரம். ஆங்கிலேயர்களும் இளிச்சவாயத் தமிழர்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்து பை பை சொல்லி; ஆளை விடுங்கடா சாமி என்று இறக்கை கட்டி பறந்தே போனார்கள்.

அப்புறம் என்ன. இரண்டாம் இடத்தில் ராகு என்கிற ஆங்கிலேயம். எட்டாம் இடத்தில் கேது என்கிற சிங்களம். பத்தாம் இடத்தில் சனி என்கிற குடியுரிமைச் சட்டம். அந்தக் குருபெயர்ச்சியில் மலையகத் தமிழர்களுக்குப் பயங்கரமான ஜலதோசம்.

குடியுரிமைத் தகுதியை நிரூபிக்க முடியவில்லை. அதுவே பல இலட்சம் மலையகத் தமிழர்களுக்கு தலை போகிற விசயம். அதனால் அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

அதோடு அவர்களுக்குக் குடியுரிமை இல்லாமல் போனது. ஓட்டுப் போடும் தகுதியும் இல்லாமல் போனது. வீட்டு அடுப்படியில் கிடந்த தட்டு தாம்பாளம் கிண்ணி கெடாரம் தான் அப்போதைக்கு சேர்த்து வைத்த சொத்து சுகம். குடியுரிமை அடையாளம்.

பின்னர் 1950-ஆம் ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள். முடிவில் இடியும் மின்னலும் கலந்த இம்சையான முழக்கங்கள். இலட்சக் கணக்கான தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என இலங்கை அரசாங்கத்தின் தடாலடி முடிவு.

ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர்கள் பாதிப்பு. இந்தக் கட்டத்தில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஓர் அமைதி உடன்படிக்கைக்கு வழி வகுத்தார்.

ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பெயர் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம். தமிழர்களில் பாதி பேருக்கு இலங்கைக் குடியரிமை வழங்கப்பட்டது. மீதிப் பாதிப் பேரை இந்தியா ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது.

அதிலும் ஓர் இழுபறி நிலை. அந்த ஸ்ரீமாவோ - சாஸ்திரி திட்டமும் சரிபட்டு வரவில்லை. ஏன் தெரியுங்களா. இந்தக் கட்டத்தில், அதாவது 1980-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒரு பதற்றமான நிலை.

இலங்கை விடுதலைப் புலிகளின் மீது உலக மக்களின் பார்வை திசை திரும்பிய காலக் கட்டம். முறுக்கு மீசை தமிழர்கள் எந்த நேரத்திலும் மீசையை முறுக்கலாம் எனும் அச்சப் பார்வை.

இந்த மாதிரியான ஒரு நிலைமையில் இந்தியாவுக்கே திரும்பிப் போய் விடலாம் என்று தமிழர்கள் சிலரும் பலரும் முடிவு செய்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்று சொல்ல முடியாது.

ஏன் தெரியுங்களா. இங்கே மலேசியாவில் மே 13 துர்நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி. அந்தச் சமயத்தில் தமிழர்கள் பலர் தங்களின் மலேசியக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு தாயகம் கிளம்பினார்கள். என்னாச்சு. அதையும் நினைவில் கொள்வோம்.

இப்படி இருக்கையில் இந்தியாவும் ஒரு புதிய குடிநுழைவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இலங்கையில் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

மலையகத் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். மகிழ்ச்சியில் உச்சம் பார்த்தார்கள். ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. குடிநுழைவுச் சட்டத்தை அமல் படுத்துவதில் ஆயிரம் நடைமுறைச் சிக்கல்கள்.

அந்த புரோட்டோகால் இந்த புரோட்டோகால் என்று சொல்லி, பாதி பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காமலேயே போனது. எல்லாம் இந்தியாக்கார இட்லி சாம்பார் ஆரியச் சிப்பாய்கள் தான். தமிழர்களின் மிச்சம் மீதி நம்பிக்கையும் அதோடு அடிபட்டுப் போனது.

ஆக இந்தியாவுக்குத் திரும்பி வந்த மலையகத் தமிழர்களில் ஐந்து ஆறு இலட்சம் பேர் இன்றைக்கும் நாடு அற்ற அனாதைகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள். எங்கே. அதே அந்த இந்தியாவில்தான்.

இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளில் சிலர் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். மலையகத் தமிழர்களில் ஐந்து ஆறு இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

நாடு விட்டு நாடு போய் நட்டாற்றில் விடப்பட்ட தமிழர்கள் திரும்பி தாயகம் வந்தார்கள். வந்தும் நாடற்றவர்களாகவே வாழ்கின்ரார்கள். அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எங்கேயாவது நடக்குமா. தெரியவில்லை. ஆயிரம் கர்ம ராசாக்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. நித்தியானந்தாவைக் கேட்டால் நோ சூடு. நோ சொரணை என்று சொல்லி ஜன்னலைத் திறந்து வைத்து தென்றலாய்த் தவழ்ந்து செல்வார்.

ஆக அங்கே மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அந்தப் பிரச்சினையை நாமும் இங்கே நம்முடைய பார்வையில் பார்க்க வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்.

குடியுரிமை என்பது வாழ்க்கைப் பிரச்சினை. உயிருக்கும் மேலானது. பத்து நாளைக்கு சோறு இல்லை என்றாலும் பரவாயில்லை. பச்சைத் தண்ணீரைக் குடித்து பத்து நாட்களுக்கு பேர் போட்டு விடலாம்.

ஆனால் குடியுரிமை இல்லாமல் மட்டும் ஒருநாளும் வாழவே கூடாதுங்க. அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் தெளிவாக இருக்க வேண்டும். சொல்றதைச் சொல்லிட்டேன். சரி.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், அவிசாவளை (Awissawella) துணை மாவட்டம். அங்கே புவக்பிட்டியா (Puwakpitiya) பெரும் கிராமம். அங்கே வாழும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தமிழர்கள் அதிகமாய வாழும் இடம் அவிசாவளை. இலங்கையில் மிக வறுமையான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் பெரிய பெரிய ரப்பர் தோட்டங்கள் உள்ளன. பெரிய அளவில் ரப்பர் உற்பத்தி செய்யப் படுகிறது.

1880-ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இப்போது அவர்களின் ஐந்தாம் ஆறாம் தலைமுறை வழித் தோன்றல்கள் தான் அங்கு வாழ்கின்றார்கள். இலங்கையில் மிகவும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டியலில் இவர்களுக்கும் இடம் உண்டு.

அங்கு இரண்டு பெரிய தோட்டங்கள் உள்ளன. 650 குடும்பங்களைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு லயன் வீடுகள். இந்த லயன் வீடுகளில் இடிக்கப் பிடிக்க பொடி அறைகள்.

தொழிலாளர்களின் வீடுகளுக்கான பாதைகள் நல்ல நிலையில் இல்லை. சேறும் சகதியும் அடிக்கடி கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடும்.

ஒரு சில தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து சிறிய நிலத் துண்டுகளைப் பெற்று இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்கிறார்கள். கிடைக்கும் பணத்தில் சின்னச் சின்ன வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இலங்கை ரப்பர் தோட்டத் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 280 ரூபாய் சம்பளம். 2.50 அமெரிக்க டாலர். மாதத்தில் 24 நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 325 முதல் 350 மரங்கள் வரை சீவ வேண்டும். குறைந்தது 10 கிலோ ரப்பர் பால் சேகரிக்க வேண்டும். எடை குறைந்தால் சம்பளம் வெட்டப்படும்.

முன்பு தாய்மார்கள் குழந்தை பெறுவதற்கு முன்னர் ஆறு மாதங்ளுக்கும்; குழந்தை பிறந்த பின்னர் ஆறு மாதங்களுக்கும் ஒரு மாதத்திற்கு இரண்டு பொட்டலங்கள் 'திரிபோசா' (சத்துணவு மாவு) வழங்கப் பட்டது.

இப்போது குழந்தை பெறுவதற்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கும்; பிறந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கும் மட்டுமே வழங்கப் படுகிறது.

தொழிலாளர்களில் பலருக்கு அடையாள அட்டைகள் இல்லை. வெளியூர் பயணங்கள் செய்ய முடியாது. அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தால் எளிதில் கிடைப்பதும் இல்லை. பற்பல தடைகள். பற்பல சால்சாப்புகள்.

அங்கு வாழும் தமிழர்களுக்குப் பெரும்பாலும் எல்லாமே தடை. தடை. தடை. ஒரே வார்த்தையில் தோட்டத் துரைமார்கள் தோட்டத் தொழிலாளர்களை ரொம்பவும் மோசமாக நடத்துகிறார்கள்.

ஆறுமுகம் என்னும் தொழிலாளி சொல்கிறார். "நான் ஓய்வு பெற்றுட்டேன். என் மனைவிக்கு உதவி செய்ய மரம் வெட்ட போகிறேன். எனது மனைவியின் சம்பளத்துடன் மட்டும் ஜீவிப்பது மிகவும் கடினம். நாங்கள் கடனில் இருக்கிறோம். எங்களால் ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் இறைச்சி அல்லது மீன் உண்ண முடியும். ரொம்ப சிரமம்"

"இந்த நாட்களில் தமிழ் மக்களால் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. நாங்கள் தமிழர்கள் என்பதால் இராணுவமும் போலிசும் எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றன."

இந்த தோட்டங்களில் ஒன்றில் கூட ஆஸ்பத்திரி கிடையாது. அவிஸ்ஸாவளை ஆஸ்பத்திரியே அருகில் உள்ளது. அதற்கும் அவர்கள் பிரதான வீதிக்கு வந்து மேலும் 6 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். குடிதண்ணீரும் சுகாதார வசதிகளும் குறைவு.

மலாயா கித்தா காடுகளில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்களோ; எப்படி அடக்கி வாசிக்கப் பட்டார்களோ; அதே நிலைமைதான் அங்கேயும் நிலவுகிறது.

தாய் மண்ணிற்கும் திரும்பிப் போக முடியவில்லை. தங்கி இருக்கும் மண்ணிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதுதான் இலங்கை மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைமை. என் மனம் வலிக்கிறது. என் கண்கள் பனிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.11.2020

 

05 நவம்பர் 2020

மலாக்காவில் தவிக்கும் இந்தியர் குடும்பம்

தமிழ் மலர்  - 04.11.2020

மலாக்காவில் உணவின்றி, வீடின்றி, ஆவணங்களின்றி வாழும் இந்தியக் குடும்பத்துக்குச் சீனர் கோவில் வீடானது. அக்கம் பக்கத்துச் சீனர்களின் உணவு அவர்களின் பசியை ஆற்றியது.

இந்தக் கொடுமை மலாக்கா மாநிலத்தில், தஞ்சோங் கிளிங், பகுதியில் வாழ்ந்து வரும் இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்து உள்ளது.

முனியம்மா சுப்ரமணியம் (வயது 56) தம்முடைய கடைசிக் காலத்தை நோயாளி கணவருடனும், மருமகள், பேரப் பிள்ளைகள் ஆகியோருடனும் அந்த சீனக் கோவிலில் கழித்து வருகிறார்.

அந்த இடமும் தற்காலிகம் தான். கிடைப்பதை உண்டு காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறார் முனியம்மா.

முனியம்மாவின் இந்தக் கதையைக் கேள்விப்பட்டு, அவர்களின் கொடுமையான சூழ்நிலையை நேரில் கண்டு, அவர்களுக்கு அடிப்படை உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், மலாக்கா ஊஜோங் பாசிர் சமூக நல மன்றத்தின் தோற்றுநரும் முன்னாள் இராணுவ வீரருமான உலகநாதன் முத்தையா.

முனியம்மா குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலையைக் காணொளியில் பதிவு செய்து, மலேசிய மக்களுக்குத் தெரியப் படுத்தியதன் காரணம் அவர்களுக்கு மக்களிடம் இருந்து உதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக.

தற்போது அவர்களுக்கு உடனடித் தேவை ஒரு வீடு. வீட்டுக்குத் தேவையான தளவாடப் பொருட்கள், மற்றும் உணவுப் பொருட்கள். பொது மக்கள் கொடுக்கும் நிதியுதவி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

நோயாளி கணவர், போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்ட மகன். மகனின் பிள்ளைகள், மருமகள், மகள் விட்டுச் சென்ற பிள்ளைகள் அனைவருக்கும் முதலில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை இரு வருடங்களுக்கு கண்காணித்து, அவர்களின் தற்போதுள்ள சிக்கலான வாழ்க்கை முறையைச் சீரான வழிக்குக் கொண்டு வருவது முதல் முயற்சியாகும்.

உதவி கோருபவரிடம் முறையான ஆவணங்கள்; வங்கிக் கணக்கு இல்லாததால் உதவிப் பணத்தை நான் வழி நடத்தும் இயக்கத்தின் வழி அவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். இது போன்ற பல உதவிகளை நான் செய்து உள்ளேன்.

ஆனால் இதுதான் முதல் முறை இயக்கத்தின் வங்கிக் கணக்கைக் கொடுத்து உள்ளேன் என்றார் உலகநாதன்.

காணொளிப் பதிவேற்றத்திற்குப் பிறகு முனியம்மாவைப் பார்த்து விசாரிக்க பலர் வந்து போகின்றனர். மலாக்கா மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எம்.எஸ். மகாதேவனும் வருகை தந்திருந்தார்.

முனியம்மா மற்றும் அவருடைய பேரக் குழந்தைகளுக்கு அடையாள ஆவணங்கள் இல்லை. இந்தக் குடும்பத்திற்கு ஆவணங்களைப் பெற்றுத் தர உதவினால் அதுவே பேருபகாரம் என்றார் உலகநாதன்.

சீனக் கோவிலில் 1 1/2 மாதங்ளாகத் தங்கி இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன் தங்கி இருந்த வீட்டின் வாடகையைக் கட்ட முடியாமல் துரத்தப் பட்டேன். சீனர்கள் கோயிலில் இடம் கொடுத்து சாப்பிட உணவையும் கொடுத்தனர்.

என் பிள்ளைகளுக்கு நான் சிரமத்தைத் தர விரும்பவில்லை. அவர்கள் நலமாக இருக்கட்டும். நான் என்னால் முடிந்தவரை சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு நேர்ந்த இந்த வாழ்க்கை எந்த அம்மாவுக்கும் வந்து விடக் கூடாது என்று கூறி முனியம்மா கண் கலங்கினார்.

மண், தூசுகள், தூய்மையின்மை காரணமாக, பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் கால், விரல் இடுக்கு, பாதம் ஆகியப் பகுதிகளில் சொறி சிரங்கு போல் கொப்புளங்கள் தோன்றி இருக்கின்றன.

அவர்களுக்கு மருத்துவ உதவியைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உலகநாதன் தெரிவித்தார்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இளமைப் பருவம் தொட்டு எனக்குள் வளர்ந்தது.” சமூகநல இயக்கத்தின் வழி தம்மால் முடிந்த உதவிகளை மனித நேய அடிப்படையில் செய்து வருகிறேன் என்றார்.

27 வருடங்கள் இராணுவத்தில் இருந்து நம் தேசத்துக்குப் பணிபுரிந்த இவரின் கைகள், இன்று ஏழைகளுக்காக செய்து வரும் சேவையைப் பாராட்டி மக்கள் பேசுகின்றனர்.