27 ஜூன் 2021

அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்

கரை ஒதுங்கும் சிப்பிகள். நுரை உமிழும் அலைகள். வானம் தொடும் நீலங்கள். அலை பாயும் நீர்க்குமிழிகள். கரை சேரும் கடல் பச்சைகள். வெள்ளி மீன்களின் நயனங்கள். அனைத்தும் ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிப் பிளந்து மறையும் நளினங்கள். அனைத்தும் அழகின் ஆராதனைகள். அனைத்தும் அசத்தல் ஆழ்க்கடல் பிம்பங்கள். அவற்றின் மறுபக்கமே மொரிசியஸ் என்கிற பூலோகச் சொர்க்கம்.


அத்தனையும் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்தவை. அத்தனையும் எழில்மிகுச் சொப்பனங்கள். மொரிசியஸ் தீவைப் படைத்து விட்ட இறைவன் அதே வடிவத்தில் சொர்க்கத்தையும் படைத்தான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மைதான். அந்தப் பூலோகச் சொர்க்கத்தில் தான் அஞ்சலை குப்பன் எனும் ஒரு தமிழச்சியின் வீர வரலாறும் வருகிறது.

அஞ்சலை குப்பன்; மொரிசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரிசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர். மொரிசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரிசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடிச் சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.


மொரிசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டு பார்புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். தொடர்ந்து படியுங்கள்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுங்களா. இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. ரொம்ப வேண்டாம். தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும்.

இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவி டுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.


மொரிசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரிசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.

மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரிசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரிசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. சரி.


மொரிசியஸ் (Mauritius) ஒரு சின்ன நாடு. ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு தீவு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.

இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. 2016 ஜூலை மாதக் கணக்குபடி மொரீஷியஸ் தீவின் மக்கள் தொகை 1,262,132.

மொரிசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டீஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். 


இருப்பினும் இவர்களில் 54,000 பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்கின்றனர். இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுகின்றனர்.

1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரிசியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். 1735-ஆம் ஆண்டு மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு செல்லப் பட்டார்கள். சின்னச் சின்னக் கப்பல்கள் கட்டுவது; கட்டடங்கள் கட்டுவது; அதற்காகத் தமிழர்கள் சென்றார்கள்.

அவர்கள் போர்ட் லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப் பட்டார்கள். இவர்கள் இதற்கு முன் அங்கே வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. கொஞ்சம் நஞ்சமாய் மனித உரிமைகள்; அவற்றில் மிச்சம் மீதியாய் மனிதநேயப் பார்வைகள்.

அதற்கு முன்னர் அங்கே இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் ஆடுமாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிக்கப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்வோம். தமிழர்களை மட்டும் பேசிவிட்டு ஆப்பிரிக்கர்களை ஒதுக்கிவிட முடியாது. 


அவர்களும் வாயில்லா இரண்டு கால் ஜீவன்களாய் வாழ்ந்தவர்கள் தானே. தோட்டத் தொழிலாளர்களில் தமிழர்களுடன், ஆப்பிரிக்கர் மற்றும் பீகாரிகளும் பெரும் அளவில் இருந்தனர்.

1829 முதல் 1830 வரை நூற்றுக் கணக்கான தமிழர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து மொரிசியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள்.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.

நவீன மொரிசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரிசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார்.

தன் பாட்டியின் மூலம் தொழிலாளர்களின் தொடர் இன்னல்களை அறிந்தவர். அவற்றுக்குத் தீர்வு காண போராட்டக் களத்தில் குதித்தவர். பெண்களின் விடுதலைக்காகவும் போராடியவர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்வைத்தவர்.

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.

அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி, பெல்லி வ்யூ ஹரேல் (Belle Vue Harel) சர்க்கரை தோட்டத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தம் தொடங்கியது. அந்த வேலை நிறுத்தம் பல நாட்கள் நீடித்தது.

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மனநிறைவான ஊதியம் கிடைக்கவில்லை. நல்ல சூழலில் தங்கும் வீட்டு வசதிகளும் இல்லை. இவற்றுக்காகத் தொழிலாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். நெருக்குதல்களையும் கொடுத்து வந்தார்கள்.

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்த விசயமாச்சே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா.

இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நாலு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயாத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. எல்லாம் ஒன்னுதான்.

பெல்லி வ்யூ ஹரேல் கரும்புத் தோட்டத்தில், அன்றைய தினம் தொழிலாளர்களை உளவு பார்க்க வந்த காவலர் ஒருவர் தாக்கப் பட்டார். அந்தக் காரணத்தின் அடிப்படையில் காவல்துறை கடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அந்தக் கலவரத்தில் நால்வர் உயிர் இழந்தார்கள். அஞ்சலை குப்பனைத் தவிர்த்து மேலும் மூவர். கிருஷ்ணசாமி முனுசாமி (Kistnasamy Mooneesamy); முனுசாமி முனியன் (Moonsamy Moonien; மருதை பானப்பன் (Marday Panapen). ஐந்து பேருக்கு படுகாயங்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பெல்லி வியூ ஹாரேல் படுகொலை (Belle Vue Harel massacre) என்று வர்ணிக்கிறார்கள்.

அஞ்சலை இறக்கும் போது அவருக்கு வயது 32. நிறைமாத கர்ப்பிணி. முதல் பிரசவத்திற்கு முன்னரே பலியானார்.

1968-ஆம் ஆண்டு மொரிசியஸ் சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர், 1995-ஆம் ஆண்டில் அஞ்சலை குப்பனுக்குச் சிலை வைக்கப் பட்டது. அப்போதைய மொரிசியஸ் பிரதமர் சர் அனரூட் ஜுக்நாத் (Sir Anerood Jugnauth) திறப்பு விழா செய்தார். சிலயின் உயரம் ஒன்றரை மீட்டர். இரண்டரை டன் எடை. ஹரோல்ட் கெந்தில் (Harold Gentil) எனும் சிற்பி செதுக்கிய சிலை.

தவிர அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).

அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள்.

பள்ளிப் பாட நூலகளில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.

2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரிசியப் பாலின சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரபூர்வமாக அஞ்சலி குப்பன் கெளரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும் அவருடைய வரலாறு இடம் பெற்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.06.2021

சான்றுகள்:

1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/

பின்னூட்டங்கள்:

கரு.ராஜா, சுங்கை பூலோ: இந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. இந்த நாட்டிலிருந்து மொரிசியசுக்கு பல குப்பனும் சுப்பனும் சுற்றுலா போய் வந்து சுற்றுலா கட்டுரை எழுதியதை அடியேன் படித்து இருக்கிறேன்.

பத்திரிகை நிருபர்கள் கூட மொரிசியசுக்கு சுற்றுலா போய் வந்து பயணக் கட்டுரைகள் எழுதியதை நான் படித்து இருக்கிறேன். எந்தச் சுப்பனும் தமிழச்சி அஞ்சலை குப்பன் பற்றிய தகவலை எழுதவில்லை. ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

ஒரு தமிழச்சியை இந்தக் கேடு கெட்ட வெள்ளைக்காரப் பசங்க அநியாயமா சுட்டு கொலை செய்து இருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் சுற்றுலா போகிற நம்ம தம்பிங்க மேலோட்டமாகச் சுற்றி திரிந்துவிட்டு வந்து இங்கே வந்ததும் ஆகா... ஓகோ... என்று எதையாவது எழுதி பத்திரிகையில் போட்டு விடவேண்டியது. இப்படிப்பட்ட விசயங்கள் இவர்கள் கண்களுக்கு தென்படதோ. கட்டுரை அருமை நண்பா. வாழ்த்துகள்.

பெருமாள், கோலாலம்பூர்: எனக்கு மொரிசியசில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஏற்கனவே இந்தக் கட்டுரை விபரங்களைச் சொல்லி அஞ்சலை குப்பன் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

மலேசியா வரும் போது நான் தான் அவரை விமான நிலையம் வரை அனுப்பி வருவேன். அங்குள்ள எரிமலை வெடித்த லார்வா, இன்று வரை வைத்துள்ளதாகவும் கூறினார்.

அந்த தீவு, சுற்றுலா, மீன்பிடி தொழிலுக்கு பேர் பொனதாகவும் கூறியுள்ளார். சாலைகளில் போலீசாரைக் காண்பது அரிதாம். எல்லா வழி தடங்களிலும் CCTV மறைகாணி மயமாம். சம்மன் வீடு தேடி வருமாம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் >>>> கரு.ராஜா, சுங்கை பூலோ: நன்றிங்க ராஜா. சுற்றுலா போகும் பத்திரிகையாளர்கள் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை ஆழமாகப் பார்க்க வேண்டும். இலவசமாக டிக்கெட் கிடைத்தால் வரலாறும் மறக்கப் படலாம் என்பது பரவலான கருத்து.

பனையபுரம் அதியமான்: வியப்பாகவும், பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.


தேவி சர: சிறப்பு 👍🏻👌👏👏👏

பெருமாள், கோலாலம்பூர்: அஞ்சலை குப்பன் வரலாறு மிகவும் சோகமானதாகவே வர்ணிக்கப் படுகிறது. ஏதோ ஒரு சினிமாவை பார்த்தது போல் உள்ளது.

இம்மாதிரியான வரலாற்றுகளை எதிர்கால வாரிசுகளுக்குச் சொல்லிச் செல்வோம் 😢 நன்றி தலைவரே.

டாக்டர் சுபாஷினி: அருமையான பதிவு. தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு இதழில் இந்தக் கட்டுரையை இணைத்துக் கொள்கிறோம். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: நமது தலைவரின்  கைவண்ணம் பார் எங்கும் பரவட்டும் 🌹🙏👌




26 ஜூன் 2021

மலேசியாவில் தமிழர்கள் பெனும்பாங்?

தமிழ் மலர் - 26.06.2021

இரசம் செய்த இரசவாதம்

தமிழர்களின் பாரம்பரியச் சமையல் உணவுகளில் முக்கியமானது இரசம். ஒரு வகையான திரவ உணவுப் பொருள். தமிழர்களின் சமையல் வாழ்வில் அவர்களுடன் ஊறி ஒன்றித்துப் போன ஒரு சமையல் உறவு. 16-ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கியதாகக் கலைகளஞ்சியங்கள் சொல்கின்றன.

ஆனால் தமிழர் இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இரசம் அவர்களுடன் பயணித்து வந்து இருக்கலாம். ஓர் ஐயாயிரம் ஆண்டு காலமாகத் தமிழர்கள் இரசத்துடன் ஒன்றித்து விட்டார்கள். அந்த வகையில் தமிழர்களையும் இரசத்தையும் பிரிக்க முடியாது. பிரிக்கவே முடியாது. அப்படி ஓர் ஐக்கியம்.


உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும்; வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் உணவில் ரசம் சேர்த்துக் கொள்ளப் படுகிறது. இரசம்; ரசம் இரண்டு ஒன்றுதான். தமிழர்களின் சொல் வழக்கு மொழியில் ரசம். எழுத்து மொழியில் இரசம்.

மிளகு இரசம்; சீரக ரசம்; பருப்பு இரசம்; மைசூர் ரசம்; திப்பிலி இரசம்; எலுமிச்சை இரசம்; தக்காளி இரசம்; வேப்பம்பூ இரசம்; அள்ளிப் பருப்பு ரசம்; இப்படி இரச வகைகள் உள்ளன. இந்த இரசம் அண்மையில் ஓர் இரசவாதத்தை உண்டாக்கி விட்டு விட்டது.

இரசம் பற்றிய ஒரு நிமிடக் காணொலி. நூர் சோபியா ஜொஹாரி (Nor Sufia Johari) என்கிற பெண்மணி டிக் டாக் ஊடகத்தில் ஒரு காணொலியைப் பதிவு செய்து இருக்கிறார்.


அந்தப் பதிவில் ஒரு பிரச்சினை. உரிமை கொள்ளும் பாணியில் சொல்லாடல்கள். அதாவது பாரம்பரிய இந்திய ரசம் அவர் சார்ந்த இனத்திற்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார். அதனால் பற்பல வாக்குவாதங்கள். பற்பல குற்றச்சாட்டுகள். அதன் தொடர்ச்சியில், அந்தப் பெண்மணி மலேசியா வாழ் தமிழர்களைப் ‘பெனும்பாங்’ (Penumpang) என்று சொல்லியும் இருக்கிறார்.

அந்தக் காணொலி பதிவானதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் (Netizens) தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள். டி.எச்.ராகா புகழ் பங்கி சங்கரும் தம் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.

சிலரும் பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பி இருக்கிறார்கள். சிலருக்குச் செவிப்பறைகள் நைந்து கிழிந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. புரியும் என்று நினைக்கிறேன். ஒட்டு மொத்த இந்தியர்களையும் ‘பெனும்பாங்’ என்று சொன்னால் சும்மா விடுவார்களா. உடனே அந்தப் பெண்மணி மன்னிப்பு கேட்டு அந்தப் பதிவை அழித்து விட்டார்.


அந்தக் காணொலி இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு விட்டாலும், அது விட்டுச் சென்ற ஆழமான வருடல் வடுக்களை அழிக்க முடியவில்லை. அழிப்பதும் சிரமமே. காயம் ஆறுவதற்குள் இன்னொருவர் வந்து கீறி கிளறி விட்டுச் செல்வார். அப்புறம் ஓர் ஊடகச் சண்டை. அப்படியே மறந்து போகும் நேரத்தில் இன்னொரு குளவி வந்து கொட்டிவிட்டுப் போகும்.

அந்தக் கானொலியில் அந்தப் பெண்மணி சொல்கிறார்: இரசத்தில் மலாய்க்காரர்களுக்கு என ஓர் இரச வகை உள்ளது. அதை அவர் குறிபிட்டதாகவும்; அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாகவும் சொல்கிறார்.


சீனர்களுக்கு இரசம் இருக்கிறது. இந்தியர்களுக்கு ரசம் இருக்கிறது. அதைப் போல மலாய்க்காரர்களுக்கும் ரசம் இருக்கிறது (Malay-style Rasam). அதைத்தான் நான் சொன்னேன் என்று தற்காத்துப் பேசினார். ஆனால், அதற்கு முன்னர் ரசம் அவர்களின் பாரம்பரிய உணவு என்றும் சொல்லி இருக்கிறார். அதனால் இவ்வளவு பெரிய இடர்பாடுகள்.

அந்தக் காணொலி தொடர்பாக ஊடகப் பயனர்களிடையே வாக்குவாதங்கள் வரும் போது தமிழர்களையும் இந்தியர்களையும் ஒட்டு மொத்தமாக ‘நீங்கள் எல்லாம் பெனும்பாங்’; ஒழுங்காக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஒரே ஒரு கேள்வி. இந்த நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சிலர் தங்களின் பூர்வீகம் இந்தோனேசியா என்று ஒப்புக் கொள்கிறார்கள். தங்களின் மூதாதையர் அங்கு இருந்து வந்தார்கள் என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதில் முன்னாள் பிரதமர்கள்; துணைப் பிரதமர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். மேடைகளில் சொல்லியும் இருக்கிறார்கள். அவர்கள் மேடையில் பேசிய சான்றுகள் உள்ளன. ஆக சரியான வலுவான சான்றுகளை வைத்துக் கொண்டு தான் இந்தக் கட்டுரை தயாரிக்கப் பட்டது. சரி.

இந்த நாட்டிற்கு தமிழர்கள் குடியேறிய பின்னர் தான் ’அவர்கள்’ வந்து இருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தமிழர்கள் 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே மலாயாவுக்கு வந்து விட்டார்கள். இந்தோனேசியாவில் இருந்து குடியேறியவர்கள் 1900-ஆம் ஆண்டுகளில் குடியேறி இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள். இவர்களில் யாருங்க பெனும்பாங்?

தொட்டதுக்கு எல்லாம் பெண்டத்தாங்; ஆச்சு பூச்சு என்றால் பெனும்பாங். நினைத்த நேரத்திற்கு நினைத்த இடங்களில் ருத்ர தாண்டவங்கள். மன்னிக்கவும். பெண்டத்தாங் என்கிற வக்கிரத் தாண்டவங்கள். என்னங்க இது. இவர்கள் மட்டும் என்னவாம். சிரிப்பாக இருக்கிறது. பேசுவதில் கொஞ்சம் அர்த்தத்தோடு பேச வேண்டாமா. படுத்துக் கொண்டே அடுத்தவரை உமிழ்ந்தால் என்ன நடக்கும்?


பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் பேச மாட்டார்கள். எதைப் பேசக் கூடாதோ அதைத்தான் பேசுவார்கள். எப்படி பேசினால் எதைப் பேசினால் மற்றவர்கள் காயப் படுவார்கள் என்று நினைக்கிறார்களோ அதைத் தான் பேசுவார்கள். அத்தனையும் அர்த்தம் இல்லாத குப்பைகள்.

மலேசியாவில் வசிக்கும் இந்திய ஊடகப் பயனர்கள் இது போன்ற விசயங்களில் சண்டை போடக் கூடாது என்றும் மற்றும் ஒரு காணொலியில், நூர் சோபியா நினைவு படுத்துகிறார்.

அவர் சொன்னது: “நீங்கள் இங்கே பெனும்பாங். தயவுசெய்து ஒழுங்காக வாழுங்கள்.” (“So, where are you staying now? You are staying in Malaysia. Don’t start fights here. You are staying here as ‘penumpang’ right? Then stay properly”)

பின்னர் ஒரு மன்னிப்பு காணொலி செய்து இருந்தார். அதில் மலேசியாவில் உள்ள எல்லா இந்தியர்களையும் சொல்லவில்லை. தன் மீது பாய்ச்சல் காட்டியவர்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொன்னேன் என்றார்.


அந்தக் காணொலியில் அவர் பேசியது: அனைத்து இந்துக்களுக்கும் என் இந்திய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்துக்களையும் இந்திய சமூகத்தையும் அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என் தற்செயலான தவறுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என் தவறை ஒப்புக் கொள்கிறேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” என்று அவர் பகிர்ந்து உள்ளார்.

அவர் மன்னிப்பு காணொலியைப் பதிவு செய்யும் போது அவருக்கு அருகில் அவரின் இந்தியர் நண்பர்கள் இருந்து இருக்கிறார்கள். சரி.

மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. நம் நாட்டின் இந்தத் தனித்துவமான அடையாளத்தில் நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில், தவறான முறையில் நாக்கை நழுவ விட்டால், கண்டிப்பாகப் பிரச்சினைகள் வந்து சேரும்.


இனங்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுகின்ற நுட்பமான சமநிலையில் சறுக்கல்கள் ஏற்படலாம். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். கோபத்தில் ஏசிவிட்டு வருத்தப் படுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் செவிப்பறைகள் கிழிந்து போகலாம். முதுகு வீங்கிப் போகலாம். அந்தப் பெண்மணியைச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்.

மலேசியா எனும் மலைநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பெனும்பாங் எனும் வந்தேறிகளா? மற்ற நாடு தெரியாமல் வாழ்ந்துவிட்ட மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிற்குப் புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு குடி வந்தவர்கள் வந்தேறிகளா?


என்னைக் கேட்டால் இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே வளர்ந்து, இந்த நாட்டிலேயே இறந்து போனவர்களை வந்தேறிகள் என்று சொல்வதில் நியாயமே இல்லை.

மலேசிய நாட்டில் யாருங்க வந்தேறிகள்? மலேசியா என்பது பச்சைப் பசும்தரை படர்ந்த நாடு. பொன்னும் மணியும் புதைந்து கிடக்கும் பொன்மணி நாடு. ஒரு புண்ணிய பூமி. ஒரு புண்ணியத் தளம். ஒரு புண்ணிய மண்.

அங்கே பல்லின மக்களின் கடின உழைப்பு. பல்லினச் சமுதாயத்தின் பகல் இரவு பாரா அர்ப்பணிப்பு. உயர்வோம் உயர்ந்து காட்டுவோம் என்கிற ஒசத்தியான உணர்வு. அதில் அவர்களின் வியர்வை. அவர்களின் இரத்தம். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம். அதுதான் மலேசியா.


அப்படிப்பட்ட ஓர் அழகிய மண்ணிலே வந்தேறி எனும் சொல் வழக்குச் சொல்லாகி வருகிறது. திரும்பிப் போ என்கிற கூப்பாடு நீண்டு நெடிந்து ஒடிந்து போகிறது. தமிழ்ப்பள்ளிகளை மூடுங்கள் எனும் ஒப்பாரிகள். வெட்கம் நிறைந்த வேதனைகள்.

இந்த வந்தேறி எனும் சொல்லுக்கு இந்த நாட்டிலே முதன்முதலாகச் சூடம் சாம்பிராணி போட்ட பெருமை யாருக்குச் சேரும் தெரியுங்களா. சாட்சாத் ஓன் பின் ஜாபார். அவருக்கு முதற்கண் முதல் மரியாதை. அவர் பயன்படுத்திய அந்தச் சொல் இன்றும் சுனாமி அலைகளாய் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகின்றன.

1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை அவர் பயன்படுத்தினார். அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரகுமான் பயன்படுத்தி இருக்கிறார். யார் நம்ப தேசத் தந்தை துங்கு தான். இதைச் சொல்லும் போது பலருக்கும் வேதனையாக இருக்கலாம். எனக்கு அது பழசாகி விட்டது. விடுங்கள்.


அதன் பின்னர் மகாதீர் முகமது பயன்படுத்தினார். இப்போது ரொம்பவே பயன்படுத்துகிறார். பழக்கத் தோசமாகி விட்டது.

எங்கு இருந்து வந்தோம் என்பதை மறந்து பந்தம் பார்க்கும் இடத்தில் சிலர் பாவம் தேடிக் கொள்வது வரலாறு பார்க்காத அதிசயமா. தனிநபர் யாரையும் சொல்லவில்லை. வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன். அம்புட்டுத்தான்.

பெரிய தலைவருக்குப் பின்னர்... அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற மற்ற குட்டிக் குடித் தலைவர்கள் எல்லாம் வாய்க்கரிசி போடுகிற மாதிரி வசை பாடத் தொடங்கி விட்டார்கள். பசார் மாலாம் இரவுச் சந்தையில் கூட பெண்டத்தாங்; பெனும்பாங் எனும் சொற்கள் பழைய சொற்களாகி விட்டன. அந்த அளவுக்கு அந்தச் சொல் ரொம்பவும் மலிவாகி விட்டது.

இப்படிச் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டிற்கு அள்ளிவிட்டுக் கொண்டு போகிறார்கள்.


அவர்களும் வந்தேறிகள் என்பதை பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவிற்குக்கூட தெரியும். ரொம்ப வேண்டாம். இந்த மண்ணில் ஊர்ந்து போகிறதே புழு பூச்சிகள்... அவற்றுக்குக்கூட அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியும்.

ஆனால் இவர்கள் என்னவோ வானத்தில் இருந்து குதித்து வந்த வான்கோழி மாதிரியும் மண்ணுக்குள் இருந்து முளைத்த வந்த முள்ளங்கி மாதிரியும் மற்றவர்களைப் பார்த்து பெனும்பாங் பெண்டத்தாங் என்கிறார்கள்.  

முன்னாள் பிரதமர் நஜிப் சார் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார். தாம் இந்தோனேசியா, சுலாவாசித் தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் நாட்டின் பிரதமராக இருந்தார்.

நல்ல மனிதராக இருந்தவர். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு இப்போது ரொம்பவுமே வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர். என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது.

அதே மாதிரி கண்டவர்கள் பதிவிடும் குப்பைகளினால் மலேசியத் தமிழர்கள் பலர் வேதனைப் படுகிறார்கள். குப்பை என்று தூக்கிப் போட்டாலும் குப்பைக் கழிவுகளின் நாற்றம் குறையவில்லை.

சான்றுகள்:

1. Woman Calls Indians “Penumpang” In TikTok Video After “Rasam” Backlash, She Later Apologises -  https://thesmartlocal.com/malaysia/woman-calls-indians-penumpang/

2. https://worldofbuzz.com/msian-apologises-for-calling-indians-penumpang-after-receiving-backlash-for-her-rasam-recipe/ - M’sian Apologises For Calling Indians ‘Penumpang’ After Receiving Backlash For Her Rasam Recipe

3. Challenges to the Rights of Malaysians of Indian Descent; Karmveer Singh - https://www.e-ir.info/2013/02/06/challenges-to-the-rights-of-malaysians-of-indian-descent/

4. Malaysia’s Indians face growing racial hostility; Asia Times - https://asiatimes.com/2019/06/malaysias-indians-face-growing-racial-hostility/

 பின்னூட்டங்கள்

மாசிலான்: பேரன்புடையீர்! வணக்கம். நலம். நலமே விளைக. வரலாற்று ஆசிரியர் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே! தமிழ் மலரில் தங்களின் தொடர் கட்டுரைகளைப் படித்து வருபவர்களில் நானும் ஒருவன்.

அந்த வகையில் இன்றைய 26.06.2021 தமிழ் மலரில் வந்தேறிகள் பற்றியும் நம் மிளகுச்சார் சமையல் பற்றியும் ஒரு மலாய் மாது பேசியதையும் படித்தேன். அருமையான விளக்கம். நன்றி ஐயா.

தங்களுக்கே உரிய நடையிலும் உண்மையை நகைச்சுவை வடிவிலும், நமக்கு மட்டுமே தெரிய வேண்டிய செய்திகளையும் அழகாக எழுதி வருவதை அறிந்து மகிழ்கிறேன். நல்லது ஐயா.

இனி நான் சொல்லும் செய்திகள், செய்தித் தாளில் எழுதுவதற்கு அல்ல; எதிர்காலத்தில் நம்மின பாதுகாப்புக்காக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்தாக வேண்டும்.

என்னைவிட தங்களுக்கே இவற்றைப் பற்றிய உண்மை நன்கு தெரியும். வந்தேறிகள் என்பது நாமல்ல என்பது தங்களின் கட்டுரையே சான்று. சொல்கின்றவர்கள் தான் வந்தேறிகள் என்பது தெளிவு.

மலாயா நாட்டை நலப் படுத்தவும், வளப் படுத்தவும் வெள்ளைக்காரர்களால் ஆயிரக் கணக்கான மைல்களை கடந்து தென்னிந்தியாவில் இருந்து ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் முதலிய கப்பல்களில் தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள் என்பதே உண்மை.

இதனை எப்படி வந்தேறிகள் என்று சொல்ல முடியும்? இந்த ஒரே செய்தியில் இச்சொல் அடிப்பட்டுப் போய் விடுகிறது அல்லவா?

மாண்புமிகு நம் அமைச்சர் துன் சம்பந்தன் அவர்கள் இந்நாடு மூன்று இனத்துக்கும் உரிய நாடு - வாழும் நாடு என்றுதான் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டார் என்கின்றனர்.

அப்படி என்றால் அரசு வேலையில் இருந்து மற்ற அனைத்துத் துறைகளிலும் நாம் ஓரங்கட்டப் படுகிறோம் அல்லது புறக்கணிக்கப் படுகிறோம்.

துன் சம்பந்தன் நான் அறிந்த வரை ஒருநாள் மட்டும் இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து உள்ளார். அவ்வாறானால் ஒரே இனத்துக்கு உரிய நாடல்ல இது; மூவினத்திற்கும் உரிய நாடே!

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துன் சம்பந்தன் அவர்கள் நம் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக ஆக்கியிருக்கலாம். குடியுரிமைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். தோட்ட மக்களுக்கே தோட்ட நிலங்களை சொத்துடைமை ஆக்கியிருக்கலாம்.

அமைச்சர் பொறுப்பும் ம.இ.கா. தேசியத் தலைவர் பொறுப்பும் வைத்திருந்தும் தோட்டத் துண்டாடலைத் தடுத்திருக்கலாம். ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டதின் உண்மைதான் என்ன?

இனி எவ்வளவு காலத்துக்கு இந்த இனவாத அரசியல்வாதிகளின் இன மத வெறிகளுக்கிடையே வாழப் போகிறோம்? நம் பிள்ளைகள் எதிர்காலம்? பேரப் பிள்ளைகள் எதிர்காலம்?

ஒட்டுமொத்த நம் இனத்தின் எதிர்காலம்? தெரிந்த நாம் எவ்வளவு காலத்துக்கு வாழப் போகிறோம்? எந்தக் கட்சியும் நம்மை பாதுகாக்காது.

எல்லாம் சுயநல புலிகள்.அதுவும் பசுத்தோல் போர்த்திய புலிகள்? பூனைகள் என்றாலும் தகும். எவரையும் நம்புகிற மாதிரி இல்லை. எனவே எனக்கு தெரிந்த ஒரே வழிதான் உண்டு.

இந்த நாட்டில் நமக்குள்ள உரிமைகளுடன் வாழ நம்முடைய பங்கினை விழுக்காட்டினைக் கேட்டுப் பெற்றாக வேண்டும். ஆங்கிலேயன் தானே நம்மை கொண்டு வந்தான். போகும் போது கூடவே நம்மையும் கொண்டு போயிருக்க வேண்டும்.

இங்கு விட்டவன் தோட்டங்களையாவது சொத்துடைமையாக்கி இருக்க வேண்டும். சில நாடுகளில் தமிழர்களுக்கு நடந்தது போல் நமக்கும் வரலாம். ஆக என்ன செய்ய போகிறோம்?

ஆதலால் இந்த நாட்டின் வழக்கறிஞர்கள் மூலமாக நமக்குள்ள உரிமைகளை பிரிட்டனிடம் முறையிட்டாக வேண்டும்; கோரிக்கை ‌வைத்தாக வேண்டும். அவர்களே வந்து தலையிட்டு தீர்த்து வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இந்தச் செய்தியை முதலில் சிந்தித்துப் பாருங்கள்.

நாடாண்ட தமிழர்களுக்கு நாடில்லை. தமிழகம்கூட வடவர்களின் நாடாகி வருகிறது. நாம் அதைக் கேட்கவில்லை. உழைத்தான். அந்த உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கூட சரியாக வரவில்லை.

ஆனால் உழைத்தான்; உயிர் தியாகங்களும் செய்தான். அவன் உரிமைகளுடன் வாழக்கூட தகுதி இல்லையா? மற்றவை தங்களின் ஆய்வுக்கே விடுகிறேன்.
நன்றி வணக்கம்.

அன்புடன் மாசிலன்.

கொட்டக் கொட்ட குனிகிறவனும் மடையன்.
குனியகுனிய கொட்டுகிறவனும் மடையன் என்பது பழமொழி.

முதலில் நாம் வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேச முயல வேண்டும். பின் அவர்களின் ஆலோசனையில் செயல் படுவோம். காலம் சுருங்கி விட்டது ஐயா?  நம் தலைமுறையினரின் எதிர்காலமே முகாமை!

அணையும் விளக்கான நாம் சுடர் விடும் விளக்குக்குத் துணையாவது செய்வோம்! நன்றி ஐயா!

Sathya Raman: வணக்கம் சார். இனியும் இந்த பென்டாத்தாங், பெனும்பாங் என்று சொல்பவர்களைப் பற்றி நாம் கண்டு கொள்ளவே கூடாது. இந்த நாட்டில் நாம் நிறைய ஏமாந்து இருக்கிறோம். அந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்வோம்.

உலகில் நல்லது அறிவு. கெட்டது அறியாமை. நம்மிடம் இருக்கும் அறிவைக் கொண்டு அறியாமையால் நம்மை அவமானம் படுத்தும் அறிவிலிகளைத் துவசம் செய்வோம்.

புத்தி உள்ளவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளலாம். அது இல்லாதவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள். நாமே புத்தி உள்ளவர்கள் சார்.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman:
நீங்க சொல்வதிலும் ஓரளவுக்கு உண்மை உள்ளது. ஆனால் ஒன்னும்மா சத்யா. கண்டு கொள்ளாமல் விட்டுப் போனால் அவர்களுக்கு குளிர் விட்டுப் போகும். கண்டிக்கவும் தண்டிக்கவும் குரல் கொடுக்கவும் ஆள் இருக்கிறார்கள் எனும் போது கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.

ஒரு காலத்தில் அண்ணன் தம்பி போல பழகியவர்கள். இப்போது பாரும்மா. முளைச்சு மூனு இலை வரவில்லை. அதற்குள் என்னம்மா பேசுதுங்க. தொடர்ந்து கண்டித்து வர வேண்டும். இது என் கருத்து.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman:  தங்களின் கருத்துகள் வலைத்தளத்தில் நிரந்தரமாய்ப் பதிவாகி உள்ளன. மணி மணியான கருத்துகள். நமக்குப் பிறகு நம் சந்ததியினர் அந்தக் கருத்துகளைப் பார்ப்பார்கள். படிப்பார்கள். நம்முடைய நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.இத்தகைய அறிவார்ந்த எழுச்சிமிகு கருத்துகள் பேஸ்புக் ஊடகத்துடன் கரைந்து விடக் கூடாது. நிலைத்து நிற்க வேண்டும்.

Kala Balasubramaniam: 100%

Nagappan Arumugam: அரண்மனை கோழி இட்ட முட்டை அம்மிக் கல்லை உடைக்குமாம்! புரிந்து கொண்டால் சரி!

Muthukrishnan Ipoh >>>> Nagappan Arumugam: நல்லாவே புரியுது சார்...

Kanagaravi Kala: Ungal munnaal maanavi endra muraiyil en nandrigal. Vaazhga nalamudhan.

Muthukrishnan Ipoh >>>> Kanagaravi Kala: நன்றிம்மா. எந்தப் பள்ளி என்று சொல்லலாமே. நாலைந்து பள்ளிக்கூடங்களில் பல நூறு மாணவர்களுக்குப் படித்துக் கொடுத்து இருக்கிறேன். எந்த ஆண்டு எந்தப் பள்ளி என்று சொல்லும்மா.

M Krisnan Achari: வணக்கம் ஐயா.. உண்மையை உரக்கக் கூறினீர்கள். நன்றி. வாழ்க வளமுடன் !!!

Muthukrishnan Ipoh >>>> M Krisnan Achari: சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியாக வேண்டும் ஐயா...

Sheila Mohan: மிகவும் சிறப்பான கட்டுரை... நம் பாரம்பரிய உணவை தங்களது என்றும் அதை கேட்கப் போனால் நம்மை பெண்டாத்தாங் என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாகி விட்டது.

நம்மைச் சொல்வதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. நல்ல பதிவு. நன்றிங்க சார்..

Rama Rani >>>> Sheila Mohan very nice memorie with proff

Muthukrishnan Ipoh >>>> Sheila Mohan: நன்றிம்மா. பொறுமைக்கும் ஓர் அளவுதான். மித மிஞ்சிப் போய் கண்டதைப் பேசியும் பதிவு செய்வதும் மனசிற்கு வேதனையாக உள்ளது. ஏதாவது எதிர்த்துக் கேட்டால் பெண்டத்தாங், பெனும்பாங்... என்னம்மா இது. முடிந்த வரையில் கண்டிக்க வேண்டியது நம் பொறுப்பு. கருத்துகளுக்கு மீண்டும் நன்றி.

Ravi Purushothaman: அவர்கள் tuan... என்ன வேண்டுனானாலும் பேசலாம். செய்யலாம். நாம் வாய் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்... ஏனெனில் Pendidikan Moral-இல் மட்டுமே nilai toleransi போதிக்கப் படுகின்றது!!!

Muthukrishnan Ipoh >>>> Ravi Purushothaman; விட்டுக் கொடுத்துக் கொடுத்துக் கொண்டே போக முடியாது. விட்டுக் கொடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. நாம் தவறாக எதையும் எழுதவில்லை ஐயா. எங்களைச் சீண்ட வேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.

Parameswari Doraisamy: நம்மை சீண்டிப் பார்த்து கேவலப் படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். தலைவர்களும் வாய் மூடி மௌனம் சாதிக்கிறார்கள். அவர்களின் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில்...

Muthukrishnan Ipoh >>>> Parameswari Doraisamy: எதற்கும் ஓர் அளவு உண்டு. அதை அவர்கள் உணர வேண்டும்.

Vejayakumaran: Thank U

Muthukrishnan Ipoh >>>> Vejayakumaran: வாழ்த்துகள்

Sarkunavathi Panchanathan: வாழ்த்துகள்

Rsmaniam Subra வாழ்த்துகள்

Selvarajoo Rajoo: எந்தவொரு உருப்படியான வரலாற்று அடையாளங்களும் இல்லாமல் அரசியல் வலிமையை பயன்படுத்தி அடுத்தவர்களின் அடையாளங்களை கொள்ளை அடிப்பது தொழில். என்ன செய்வது. அரசு தண்டிப்பதும் இல்லை கண்டிப்பதும் இல்லை. அந்த ஆணவத்தில்தான்...

Sathya Raman: வணக்கம் சார். "எறிந்த அம்பு திரும்பாது. கறந்த பால் காம்பு ஏறாது. அதே போல்தான் ஒருவர் வாயில் இருந்து வந்து விழும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளை மறந்து, மன்னித்து விடக்கூடாது.

நம்மவர்களை இழித்து, பழித்து இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு தன்நிலையும் தங்களது வரலாறையும் அறியாமல், புரியாமல் மற்றவர்களைப் புண்படுத்தி பார்ப்பார்களோ இந்தப் பண்பற்றவர்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லா சமூக வலைத் தளங்களிலும் அந்த மலாய் பெண் ரசத்தைப் பற்றிய காணொளியில் வாந்தி எடுத்த விதத்தையும், வித்தையைப் பலரும் பார்த்தது தான்.

அதற்கு கூலியாக நம்ம பிள்ளைகளும் செம்மையாகத் தக்க பதிலடி கொடுத்தே வைத்தார்கள். திருடர்களிடம்தான் தெனாவெட்டும் அதிகம்.

வெட்டுக் கத்தியை விட கத்தி பேசுபவர்கள் ஆபத்தானவர்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அதற்கு தகுந்தாற் போல் அதே பாணியில் பதிலடி கொடுக்க இன்று விசயம் தெரிந்த பலரும் புறப்பட்டு விட்டார்கள்.

இன்று எங்கு, எவருக்கு சின்னதாய் ஒரு சீண்டல் நடந்தாலும் அடுத்த கணமே சம்பந்தப் பட்டவர்களைச் சதிராடி, சல்லடையாய் தகர்தெடுக்க இதே இந்த நவீன தொழில் நுட்ப கருவிகளும் கனகச் சிதமாய் காரியம் ஆற்ற உதவுகிறது.

உண்மையை விட அதற்கான விளக்கங்கள் தேவையானது. தங்களின் இந்த நீண்டப் பதிவும் அதைத் தக்க வைத்து விட்டது. நன்றிங்க சார்.

இந்த நாட்டில் உண்மையான வந்தேறிகளுக்கு இப்போது எல்லாம் தங்களின் நிழலைக் கண்டே பயம். அதனால்தான் இப்படி அடிக்கடி பீதியில் பினாத்துகிறார்கள்.

அதனால்தான் உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பென்டாத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டுகிறார்கள்.

இத்தகைய சொற்களை நாமும் கேட்டுக் கேட்டு புறந்தள்ளி விட்டு இருக்கிறோம். இந்த நாட்டில் நாம் யார் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும் ஆற்றாமையால், அகம்பாவத்தால் ஆடிப் பார்க்கிறார்கள்.

"குருனை அரிசியும் கழுத்தறுத்தான் கருவாடும்" தலைப்பு எப்படி சார் இருக்கிறது? ஒரு நாவலுக்கு ஏற்ற தலைப்பு தானே?

தோட்டங்களில் நாம் சொந்தமாக காய்கறிகளைப் பயிரிட்டு சமைத்து உண்டு வந்த வேளையில் இன்று சொகுசு பேசும் சோம்பேறிகளின் அன்றைய உணவே அதுதானே?

இந்த வேதாந்தத்தை மறந்து விட்டவர்கள் இன்று இந்த நாடே தங்களுடையது என்று சித்தார்த்தம் பேசுகிறார்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. அப்படித்தான் நாமும் இந்த நாட்டில்.

"தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது" என்ற நம்பிக்கையோடு வரும் காலத்தை கடந்து செல்வோம் சார். இவ்வேளையில் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சில வரிகள்

"சின்ன நூல் கண்டுகளா, நம்மை சிறைப்படுத்துவது"? தன்மானப் பாறைகளான நம்மை இந்த நூல் கண்டுகளால் முடிச்சுக்கூட போட முடியாது.

Kody Sivasubramaniam >>>> Sathya Raman தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது. 👌

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: நான் நினைப்பதை நினைத்ததை அப்படியே கொட்டி இருக்கிறீர்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது. தங்களின் இந்தக் கருத்துகள் வலைத்தளத்தில் பதிவாகின்றன. நன்றிம்மா.

Alex Mark II: We the Tamil people's have our own history in our country Malaysia.

Muthukrishnan Ipoh >>>> Alex Mark II: தங்களின் தமிழ் உணர்வுகளுக்கு சிரம் தாழ்த்துகிறோம்.

Alex Mark II: Muthukrishnan Ipoh mikka nanri sir, vaalga valamudan.

Banu Linda >>>> மலேசிய தமிழனின் வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான்.

Sathya Raman >>>> Banu Linda நாம் வாழ மட்டுமே பிறந்தோம் பானு. மற்றவர்களின் மடத் தனமான, மட்டகரமான பேச்சைக் கேட்டுக் கேட்டு சாக அல்ல...

Kody Sivasubramaniam:
கிலிங் என்ற வார்த்தையில் நம்மை கேலிக்கு உள்ளாக்கும் போதே நாம் சுதாரித்து இருக்க வேண்டும்? முன்பு ஒரு தலைவர் நம்மை ஏன் pendatang என்று ஊடகம் வழியாக உரைத்தார் என்று விளங்க வில்லை.

இப்பொழுது இருக்கும் நம் இந்தியத் தலைவர்களும் இம் மாதிரியான கானொளிகளுக்கு என்ன தீர்வு காணபடும் என்றும் புரிய வில்லை?

காடுகளை அழித்து ரப்பர் பாலை காட்டி... இப்படி ஒரு மலேசியா எனும் நாடு இருக்கிறது என்று தோற்றுவித்து காட்டிய ஒரு மாபெரும் இனத்தை சமுகத்தை தரைக் குறைவாக பேசுவதையும்... சட்டமும் ஒழுங்கும்.... வீண்... Cash is King... காலம் நேரமும் வெறுமனே...

Murugan Raiapan: நாம எப்போதும் மலைதான் சார்... சாக்கடைகளும் அரைவேக்காடு அல்ல முழுவேக்காடுகளும் இப்படியே தான் பேசிக் கொண்டே காலத்தை ஓட்டுதுங்க. (கிடக்குதுங்க குப்பைகள்) தங்களுடைய வரலாற்று வேட்டை மென்மேலும் தோடர வாழ்த்துக்கள் ஐயா 🙏



23 ஜூன் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி

தமிழ் மலர்  - 23.06.2021

படிக்காத மேதை படத்தில் ஒரு பாடல் காவியம்: ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு ராஜா. அதே போல பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு கூடல் ஓவியம்: ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி. கங்கார் தமிழ்ப்பள்ளி எனும் தமிழ்க் காவியம். மலேசியத் தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் ஓவியம்.

மொழி காப்பவன் இனம் காப்பான். எப்படிப்பட்ட பொன் வாசகம். இந்த வாசகத்தை முன்னொட்டுச் சொற்களாக முன்னெடுத்து கங்கார் தமிழ்ப்பள்ளி பயணித்து வருகின்றது.


ஒரு தமிழ்க் கலசத்தில் மணிமணியான மாணவர்கள். மகுடம் சூட்டும் மதி மதியான ஆசிரியர்கள்; இனிதான பணியாளர்கள். உதயசூரியன் போல ஒரு தலைமையாசிரியர். உதயக்குமார். எளிமையில் பொறுமை கண்டு தமிழ்ச் சேவைகளில் உச்சம் பார்க்கும் நல்ல ஒரு தமிழ் மகனார்.

இவர்களை எல்லாம் தாண்டிய நிலையில் சிறப்பான பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்; செயற்குழு உறுப்பினர்கள்; பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்; பெற்றோர்கள்; பெர்லிஸ் தமிழ் மக்கள். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து கங்கார் தமிழ்ப்பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள். வாழ்த்துகிறோம்.


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். அந்த மாதிரி பெர்லிஸ் மாநிலத்தில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழர்ச் செயல்பாடுகளில் தனித்துவம் காண்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விசயம்.

கங்கார் தமிழ்ப்பள்ளி (SJKT Kangar), பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஜாலான் பாடாங் காத்தோங் (Jalan Padang Katong) எனும் சாலையில் அமைந்து உள்ளது.


மலேசிய நாட்டின் கடைசி எல்லைப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கும் கங்கார் தமிழ்ப்பள்ளி; பெர்லிஸ் மாநிலத்திலும் ஒரே தமிழ்ப் பள்ளி. 1936-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கிளந்தான் மாநிலத்திலும் இதே போல ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று சொல்லுவார்களே அந்த மாதிரிதான். பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி என்று மாற்றம் கண்டுள்ளது.


1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர்ப் பற்றாக்குறை. பத்து ஆண்டுகள் இடைவெளி. மாணவர் எண்ணிக்கை ’பட்’ என்று குறைந்து போனது.

அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இப்போதைய பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. சரி. பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வருவோம்.


கங்கார் தமிழ்ப்பள்ளியில் இருந்து எட்டிப் பார்த்தால் அந்தப் பக்கம் தாய்லாந்து நாடு. அவ்வளவு நெருக்கத்தில் அந்தப் பள்ளி அழகாய் அமர்ந்து அழகு தமிழ் பேசிக் கொண்டு இருக்கிறது. பொடி நடமாய் நடந்து போய் சயாம் நாட்டுக்குப் பொருட்களை வாங்கி வந்து விடலாம் என்று சொல்லக் கேள்வி.

1930-ஆம் ஆண்டுகளில் கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்தும்; பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தில் இருந்தும் தமிழர்கள் சிலர் அங்கே போய் இருக்கிறார்கள். துணிமணிகள்; மளிகைப் பொருட்கள் வணிகம் செய்வதற்காகக் கங்கார் நகருக்குச் சென்று இருக்கிறார்கள்.


அதற்கு முன்னர் தமிழர்கள் பலரும் அங்கு பல வகையான வேலைகள் செய்து இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளின் கல்வி நலன் கருதி ஒரு பலகை வீட்டில் தமிழ்ப்பள்ளி முதன்முதலாக அமைக்கப்பட்டது.

இந்தப் பள்ளி அமைவதற்கு ஆலம் வேராக அமைந்தவர் டாக்டர் சிவ சம்பந்தன் (DATO DR. R. SIVASAMBANDAN). 1930-ஆம் ஆண்டுகளில் கங்கார் பொது மருத்துவமனைக்கு ஒரு மருத்துவராக வந்தவர்.


தமிழர்கள், தமிழரினம் என்பதில் ஆர்வம் காட்டியவர். கங்கார் பகுதியிலும்; பொதுவாகப் பெர்லிஸ் மாநிலத்திலும் தமிழர்களின் மக்கள் தொகை குறைவு. அவர்களை ஒன்று படுத்த வேண்டும் எனும் குறிக்கோளுடன் பயணித்தவர் டாக்டர் சிவ சம்பந்தன்.

அந்த வகையில் கங்கார் தமிழ்ப்பள்ளி அமைவதற்கும் காரணமாக இருந்தார். காங்கார் நகரில் ஜாலான் பெஞ்சாரா சாலையில் கங்கார் தமிழ்ப்பள்ளி முதலில் அமைக்கப் பட்டது.


அதன் பின்னர் பெர்லிஸ் வாழ் இந்தியர்களுக்காக, குறிப்பாகத் தமிழர்களுக்காக பெர்லிஸ் இந்தியர் சங்கத்தையும் உருவாக்கித் தருவதில் முனைப்பு காட்டி இருக்கிறார்.

அந்தக் காலக் கட்டத்தில் பெர்லிஸ் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆளுநகராக இருந்தவர் இடன் ஓபோ (Hden Obo). அவரின் துணையுடன் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தைத் தோற்றுவித்தார். சரி.


2003-ஆம் ஆண்டில் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டிடம் கட்டித் தரப்பட்டது. அப்போது அந்தப் பள்ளியில் 72 மாணவர்கள் பயின்றார்கள். 14 ஆசிரியர்களுடன் 4 பள்ளி அலுவலக ஊழியர்களும் பணியாற்றினார்கள்.

2003-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 136. (பெண்கள்: 75; ஆண்கள் 61). ஆசிரியர்களின் எண்ணிக்கை 12.


இப்போது இந்தப் பள்ளியில் 88 மாணவர்கள் பயில்கிறார்கள். 12 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இப்பள்ளியில் ஒரு பாலர் பள்ளியும் இயங்கி வருகிறது. மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்தப் பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாகும்.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியா; ஜாகர்த்தா மாநகரில் அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம், கணினிப் போட்டி (Youth International Science Fair (YISF) 2021) நடைபெற்றது. அந்தப் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.


23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் இந்த அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றது பெர்லிஸ் மாநிலத்தின் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து உள்ளது. அந்த அனைத்துலகப் போட்டியில் பெருமை சேர்த்த மாணவர்கள் லாரா அன்சிலியா செல்வராஜ்; ஹெரன் ராஷ் ஜெய ராஷ்; குஜென் சந்திரஹான்; ருத்ரா மணிவண்ணன்.


இந்த மாணவர்கள் மட்டும் அல்ல. மேலும் சில மாணவர்களும் வெள்ளி தங்கப் பதக்கங்கள் பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவர்களின் வெற்றிக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் கங்கார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள்; பெற்றோர்கள்; பள்ளியின் பணியாளர்கள்; முன்னாள் மாணவர் சங்கத்தின் மாணவர்கள்; பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்.


இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அன்பர்கள் தான் இந்தப் பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி நலன்களிலும் தீவிரமான அக்கறை செலுத்தி வருகின்றார்கள்.

நான் சொல்லவில்லை. பள்ளியின் பெற்றோர்களே சொல்கிறார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் உதயக்குமார், முன்னாள் மாணவர்களை வெகுவாகப் பாராட்டுகிறார். முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு ஒரு சபாஷ். 


தவிர கங்கார் தமிழ்ப்பள்ளி வேறு பல அனைத்துலகப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளது.

பெர்லிஸ் மாநிலத்தில் ஒரே தமிழ்ப்பள்ளியாக இருப்பதால் 20 கி.மீ. தொலைவில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். மழைக் காலங்களில் பற்பல சிரமங்களையும் எதிர்நோக்குகிறார்கள். மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வருவதையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு மலேசிய ஹினோ வாகன விற்பனை நிறுவனம் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு ஓர் இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒரு பேருந்தை இலவசமாக வழங்கி உள்ளது.


25 மாணவர்கள் அமர்ந்து செல்ல வசதி கொண்ட அந்தப் பேருந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களிடம் வழங்கப் பட்டது.

இந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து கங்கார் தமிழப்பள்ளி ஓர் உருமாற்றுத் தமிழப்பள்ளியாக மாற்றம் காண்கிறது எனும் செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தலைமையாசிரியர் உதயகுமார்; பள்ளி ஆசிரியர்கள்; முன்னாள் மாணவர்கள்; இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் பள்ளி புதிய உத்வேகத்தில் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்து கொண்டு வருகிறது.


அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் பற்பல சாதனைகளைச் செய்து வருகிறார்கள். மலேசியாவில் உள்ள மற்ற மொழிப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாகவும் செயல் படுகிறார்கள்.

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடிவிடுங்கள் என்று மலேசிய அரசியல்வாதிகள் சிலர் சொல்வது வழக்கமாகி வருகிறது. ஆனாலும் தமிழ்ப் பள்ளிகளை மூட விட மாட்டோம் என்று மலேசியத் தமிழர்களும் போராடி வருகிறார்கள்.


மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; உற்சாகமானத் தூண்டுதல்கள் போன்றவை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

அதே வேளையில் அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி வருகிறது.

இத்தகைய மாற்றங்களைக் கங்கார் தமிழ்ப்பள்ளியிலும் காண முடிகிறது. தமிழ் மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நம் இரு கண்கள். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.06.2021



 

22 ஜூன் 2021

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி

தமிழ் மலர் - 22.06.2021

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்ட பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியா? அல்லது கோலாலம்பூரில் தோற்றுவிக்கப் பட்ட சன் பெங் தமிழ்ப்பள்ளியா?

பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளி என்பது ஓர் ஆங்கிலப்பள்ளி. அந்தப் பள்ளியில் 1816-ஆம் ஆண்டில் முதல் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அந்த வகையில் அந்தப் பள்ளி முதல் தமிழ்ப்பள்ளி என்று வரலாறு படைக்கிறது.

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி கோலாலம்பூரில் தோற்றுவிக்கப் பட்ட சன் பெங் தமிழ்ப்பள்ளி என்று அண்மைய காலங்களில் கணிப்புகளும் கருத்துகளும் காணொலி வடிவத்தில் மலேசிய ஊடகங்களில் பரவலாகி வருகின்றன.

பலரும் பார்த்து இருக்கலாம். உண்மையிலேயே பலருக்கும் பெருமை. சன் பெங் தமிழ்ப்பள்ளி எனும் உயிரோட்டமான ஒரு கல்விக் கலசம் கண்முன் தெரிகிறதே என்று பெருமை கொள்வோம். சரித்திரம் படைக்கும் சன் பெங் தமிழ்ப்பள்ளிக்கு முதலில் நம்முடைய வாழ்த்துகள். கைகூப்புகிறேன்.

இது தொடர்பாகப் பொதுமக்கள் பலரும் பல வகையான கருத்துகளை முன்வைக்கின்றனர். போதுமான சான்றுகள் இல்லாமல் கருத்துகள் சொல்லக் கூடாது என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.

என்னைக் கேட்டால், எந்தப் பள்ளி முதல் தமிழ்ப் பள்ளியாக அமைந்தாலும் அது மலாயாத் தமிழர்களுக்குத் தான் பெருமை. அந்த வகையில் ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை. இரண்டுமே தமிழரின் கண்கள். எந்தக் கண் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

எது எப்படி இருந்தாலும்; சன் பெங் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் மிகப் பழைமையான பள்ளிகளில் ஒன்றாகும். அதன் வரலாற்றைத் தற்காக்க வேண்டியது மலேசியாவில் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும். தமிழ்ப்பள்ளிக்கு ஓர் இழுக்கு என்றால் பெற்ற தாயே தடுத்தாலும் விட மாட்டோம். தமிழ் எங்கள் உயிர்.

சன் பெங் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளியாக அமைந்தால் அதைவிட பெருமை வேறு எதுவுமே இருக்காது. சரி. வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் போது அந்தப் பள்ளி 1795-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. காணொலியைத் தயாரித்தவர் உறுதிபடுத்துகிறார். அவருடைய பெயரை அவர் வெளியிடவில்லை. இருப்பினும் அவருக்கு நன்றி.

அதற்கு முன்னர் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பினாங்கு பிரி ஸ்கூல் பற்றிய சில தகவல்கள்.

பினாங்கு பிரி ஸ்கூல் என்பது ஒரு வழக்குப் பெயர்ச் சொல். வழக்கமாகக் காலம் காலமாக அழைக்கும் சொல். அந்தச் சொல்லைத் தமிழ்ப்படுத்தி பினாங்கு இலவசப் பள்ளி என்று அழைப்பது சரியன்று. பினாங்கு பிரி ஸ்கூல் என்றே அழைக்க வேண்டும்.

செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி; செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி; மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி; மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி; ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி; ஈப்போ மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி; செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி; இவை போன்றவை வழக்குப் பெயர்ச் சொற்கள். முன்னொட்டு பெயருடன் அப்படியே அழைக்க வேண்டும். மாற்றம் செய்வது முறையன்று.

1816-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் திகதி மலேசியாவின் முதல் பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்டதற்கான போதுமான சான்றுகள் உள்ளன. தொடக்கத்தில் அது ஓர் ஆங்கிலப்பள்ளி.

அதன் பெயர் பினாங்கு பிரி ஸ்கூல் (Penang Free School). மலேசியாவில் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலேயே அதுதான் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆகும்.

அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் தான் மலேசியாவின் முதல் தமிழ் வகுப்பும் தொடங்கப் பெற்றது. அப்போது பள்ளியின் தலைவராக இருந்தவர் ஆர்.எஸ். ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings). இவர்தான் மலாயாவில் தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த பிதாமகனார்.

தொடக்கக் காலங்களில், அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர்ப் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு வாடகை வீட்டில் தனிப்பட்ட முறையில் கல்வி போதிக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளுக்குத் தனியார் வகுப்புகள் எனும் பெயரில் பினாங்கில் இரகசியமாக நடைபெற்றன. லண்டனில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டார்கள். ஆங்கிலேயர்களின் குழந்தைகள். அதனால் ஆங்கிலேய ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப் பட்டார்கள்.

எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை மக்களின் குழந்தைகள் ஓரங்கட்டப் பட்டார்கள்.

கிழக்கில் உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் மேற்கில் மறைய வேண்டும் என்று வீர வசனம் பேசிய ஆங்கிலேயர்களின் ஓர் உலக மகா தத்துவம் என்ன தெரியுங்களா. வரித்துவிடு பிரித்துவிடு (Divide and Rule).

ஆயக் கலைகள் 63 என்று சொல்வார்கள். ஆங்கிலேயர்களின் இந்தக் கலையையும் சேர்த்து 64 என்று மாற்றி விடலாம். பிரச்சினை இல்லை. கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆக அதன் காரணமாக அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது.

இருப்பினும் அந்தப் பினாங்கு பிரி ஸ்கூல் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத குழந்தைகளும் இருக்கவே செய்தார்கள். அந்த மாதிரியான ஏழைக் குழந்தைகள் கல்விக் கேள்விகளில் இருந்து புறக்கணிக்கப் பட்டார்கள்.

அந்த மாதிரியான ஒரு கல்விச் சூழல் அப்போது நிலவியது. அப்போது ஆர்.எஸ். ஹட்சிங்ஸ் எனும் மத போதகர் தான் ஓர் அருமையான மாற்றுக் கருத்தைக் கொண்டு வந்தார்.

அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களின் தாய் மொழியிலேயே அவர்களுக்குப் போதிக்கலாமே எனும் மாற்றுக் கருத்து.

அதன் மறுவடிவமே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் ஒரு தமிழ் வகுப்பு. அப்படியே மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பிறந்த கதையும் வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு தமிழ்ப்பள்ளித் தொடங்குவதற்கு அன்றைய அரசாங்கத்திடம் இருந்து அனுமதியும் கிடைத்தது.

இதில் குறிப்பிடத் தக்க விசயம் என்ன தெரியுங்களா. தமிழ்ப்பள்ளியில் பயின்ற அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்கு ஆங்கிலமும் போதிக்கப் பட்டது. அந்த வகையில்  உள்ளூர் சமய போதகரைக் கொண்டு தமிழ் மொழி போதிக்கப் பட்டது.

ஆங்கிலேயர்களின் மூலமாக ஆங்கில மொழி போதிக்கப் பட்டது. அத்துடன் குழந்தைகளின் தாய்மொழிக் கல்வியுடன் தொழில் கல்வியும் போதிக்கப் பட்டது. உள்ளூர் தமிழாசிரியர்கள்; தமிழ் வித்துவான்கள் மூலமாகத் தமிழ் மொழி போதிக்கப் பட்டது.

1816 அக்டோபர் 21-ஆம் திகதி, முதன் முதலாக பினாங்கு லவ் லேன் (Love Lane) சாலையில், மாதம் 50 மலாயா டாலர் வாடகையில் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது. அதே ஆங்கிலப் பள்ளியில் தமிழ் வகுப்பும் மலாய் வகுப்பும் ஒரு சேர நடத்தப் பட்டன. தமிழ் வகுப்பில் முதலில் 25 மாணவர்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டது.

தமிழ் வகுப்பு தொடங்கிய மறு ஆண்டு 1817 அக்டோபர் 18-ஆம் தேதி பினாங்கு பிரி ஸ்கூல், ஒட்டு மொத்தமாக வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் கண்டது. லவ் லேன் சாலையில் இருந்து பார்குவார் சாலைக்கு (Farquhar Street) மாற்றம்.

அதனால் புதிய இடத்தில் தமிழ் மாணவர்களுக்குப் பாற்றாக் குறை ஏற்பட்டது. தமிழ் மாணவர்களால் லவ் லேன் சாலையில் இருந்து பார்குவார் சாலைக்குச் செல்ல முடியவில்லை.

இருப்பினும் பார்குவார் சாலையில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்தன. முன்பு லவ் லேன் சாலையில் இருந்த பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் 25 மாணவர்கள் தமிழ் பயின்றார்கள். ஆனால் பார்குவார் சாலையில் அமைந்த பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள் பயின்றார்கள்.

அந்த மூன்று மாணவர்களைக் கொண்டு சில மாதங்கள் பார்குவார் சாலையில் தமிழ் வகுப்புகள் நடைபெற்றன. அதன் பின்னர் தமிழ் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. வேறு வழி இல்லாமல் பள்ளி திறக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மூடுவிழா கண்டது.

அதன் பின்னர் பினாங்கு பிரி ஸ்கூல் மேலும் ஓர் இடத்திற்கு மாற்றம் கண்டது. 1927-ஆம் ஆண்டு பினாங்கு கிரீன் லேன் சாலைக்கு (Green Lane) மாற்றப் பட்டது. அந்தச் சாலையின் இப்போதைய புதிய பெயர் ஜாலான் மஸ்ஜித் நெகிரி (Jalan Masjid Negeri).

இப்போது அந்தத் தமிழ்ப்பள்ளி அங்கே அதே அந்த இடத்தில் தான் இருக்கிறது. அதாவது இருக்கிறது ஆனால் இல்லாமல் போய் விட்டது. மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி (தமிழ்வகுப்பு) தோன்றிய இடத்தில் இப்போது பினாங்கு மாநிலத்தின் அருங்காட்சியம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவல் மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது.

சரி. ஊடகங்களில் பரவலாகி வரும் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி சன் பெங் தமிழ்ப்பள்ளி எனும் காணொலி விசயத்திற்கு வருவோம். அந்தக் காணொலியைத் தயாரித்த அன்பர் சொல்கிறார்:

சன் பெங் தமிழ்ப்பள்ளி 1795-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி உருவாக்கப் பட்டது. அப்படி என்றால் எத்தனை ஆண்டுகள். பினாங்கில் தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சன் பெங் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டு விட்டது.

சன் பெங் தமிழ்ப்பள்ளியைத் தோற்றுவித்தவர் ஜோநாதன் சோலையார் (ஜெகநாதன் சோலையார்). இது மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற சான்று.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 225 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அதற்கு முன்னர் மற்ற எந்தப் பள்ளிகளும் இல்லை. எல்லோரும் சிங்கப்பூரை நம்பிக் கொண்டு இருந்தார்கள். மற்றப் பள்ளிகளுக்கு ஆணித்தரமான சான்றுகள் இல்லை.

ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு சரியான போதுமான சான்றுகள் உள்ளன. மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்திற்கு சான்றுகள் கிடைத்து உள்ளன.

115 ஆண்டுகளுக்கு முன்னால், 1905-ஆம் ஆண்டில் உருவான ஒரு கல்லூரியைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 225 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். என்ன நியாயம்.

நாம் நம்முடைய வரலாற்றில் எவ்வளவோ விசயங்களைக் கவனிக்காமல் விட்டு விட்டோம். அவை காணாமல் போய் விட்டன. காணாமல் போய் வருகின்றன. அவர் மேலும் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

நம்முடைய தமிழ்ப்பள்ளிகள் கடந்த 225 ஆண்டுகளாக இந்த நாட்டில் இருக்கின்றன என்றால் தமிழர்கள் இந்த நாட்டிற்கு எப்போது வந்தார்கள்? நியாயமான கேள்வி. சரி. இப்போது நான் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்.

சன் பெங் தமிழ்ப்பள்ளியைத் தோற்றுவித்தவர் ஜோநாதன் சோலையார் (ஜெகநாதன் சோலையார்). அது மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற சான்று. அதை நாம் மறுக்கவில்லை. மகிழ்ச்சி கொள்கிறோம்.

காணொலி தயாரித்தவரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தின் சான்றுகளைப் படம் பிடித்து ஊடகங்கள் மூலமாக தெரிவியுங்கள். பலரின் சந்தேகங்கள் தீரும். மாற்றுக் கேள்விகள் கேட்பவர்களும் அமைதி கொள்வார்கள். சரி.

1834-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரி ஸ்கூல் (Singapore Free School) பள்ளியில், ஒரு பிரிவாக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் 1839-ஆம் மூடப்பட்டது.

1850-ஆம் ஆண்டில் மலாக்காவில் முதல் ஆங்கிலேய தமிழ்ப்பள்ளி (Anglo Tamil School, Tranquerah, Malacca); மலாக்கா, திரேங்கேரா சாலையில் நிறுவப்பட்டது. அதுவே மலேசிய நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும். அதற்கு முன்னர் உள்ளவை தமிழ் வகுப்புகள்.

மலேசியாவில் முதல் தமிழ்ப்பள்ளி மலாக்காவில் 1850-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது எனும் தகவலுடன் இந்தக் கட்டுரையை முடிவிற்கு கொண்டு வருகிறேன்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.06.2021

சான்றுகள்:

1.https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2.http://planipolis.iiep.unesco.org/sites/planipolis/files/ressources/malaysia_education_act_1996.pdf

3.http://Yayasan%20Strategik%20Sosialhttp://www.yss98.com/03_service/2004/news/disp_ar.php?file=03040101-20040705-0102.htm

4.https://kheru2006.webs.com/a_development_of_education_system_in_malaysia_pre_independence.htm


21 ஜூன் 2021

கம்பார் போர்

தமிழ் மலர் - 07.06.2021

கம்பார் மலை அடிவாரத்தில்
கரைந்து போன 750 மனித உயிர்கள்


1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி. பசிபிக் பெருங்கடலில் ஹவாய்த் தீவு (Hawaii). அங்கே அமெரிக்கக் கப்பல் படை தளம். பெயர் பேர்ல் துறைமுகம். காதும் காதும் வைத்த மாதிரி 353 குட்டிக் குட்டி ஜப்பானியர் விமானங்கள் வருகின்றன. இராத்திரியோடு இராத்திரியாகக் கணக்கு வழக்கு இல்லாமல் அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்கின்றன. அதுவே இரண்டாம் உலகப் போருக்கு ஒரு பீடிகை.

அமெரிக்கப் படையின் நான்கு பெரிய கப்பல்கள்; 3 ஆயுதம் தாங்கிய சிறு கப்பல்கள் (cruisers); 217 விமானங்கள்; 3 நீர்மூழ்கி கப்பல்கள் அழிக்கப் பட்டன. 2402 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 1282 பேர் காயம் அடைந்தனர். ஜப்பானியருக்குச் குறைந்த சேதம். 69 ஜப்பானிய வீரர்கள் கொல்லப் பட்டனர். இதைப் பேர்ல் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbor Attack) என்று சொல்வார்கள்.


இவ்வளவு நடந்த பின்னர் அமெரிக்கா சும்மா இருக்குமா. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை. தெரியும் தானே. இரண்டாம் உலகப் போர்க் களத்தில் அமெரிக்கா  குதித்தது.

இந்தப் போர் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்காணா இடத்தில் நடந்தது. இங்கே மலாயா அடிவாசலில் அதே காலக் கட்டத்தில் ஒரு போர். ஜப்பானியருக்கும் மலாயா மக்களுக்கும் இடையே நடந்த போர். அதுதான் கம்பார் போர்.

அங்கே நடந்த மாதிரி கப்பல்கள் எல்லாம் இங்கே கம்பாரில் மூழ்கடிக்கப் படவில்லை. ஆனால் ஈய லம்பங்களில் போர் வீரர்கள்தான் மூழ்கடிக்கப் பட்டார்கள். பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே அமெரிக்கர்கள். இங்கே மலாயா இராணுவத்தினர்.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

ஆக கம்பார் போர் (Battle of Kampar) என்பது மலாயாவைக் கிடுகிடுக்க வைத்த போர்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்தக் கம்பார் போரைப் பற்றி இப்போதைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. இது ஒரு வரலாற்றுப் பதிவு. பத்திரப்படுத்தி வையுங்கள்.

1941-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரையில், ஜப்பானியர் மலாயாவை ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சியில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதில் கம்பார் போரும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

கம்பார் போர் 1941 டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 1942 ஜனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 1300 பிரித்தானிய கூட்டுப் படை வீரர்களும் (11th Indian Infantry Division) 9000 ஜப்பானியப் படை வீரர்களும் (Japanese 5th Division) ஈடுபட்டனர். ஜப்பானியர் 200 கவச வாகனங்கள்; 100 பீரங்கிகளைப் பயன்படுத்தினார்கள்.

தீபகற்ப மலேசியாவின் வடக்கே இருந்து இடியும் மின்னலுமாக இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான். ஜப்பானியர் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு.

கூட்டுப் படையினர் இப்படியொரு பெரிய எதிர்ப்பைக் கொடுப்பார்கள் என்று ஜப்பானியப் படையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜப்பானியர் தங்களின் விமானங்களைக் கொண்டு கூட்டுப் படையினரைத் தாக்கினார்கள். இருப்பினும் கூட்டுப் படையினரின் கம்பார் தற்காப்பு அரணைத் தாண்டி அவர்களால் போக முடியவில்லை.


ஒரு செருகல். கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பழைய பெயர் மம்பாங் டி அவான் (Mambang Di Awan). 1894 மார்ச் 13-ஆம் தேதி மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது. கம்பார் எனும் பெயர் வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன.

சீனக் கண்டனீஸ் மொழியில் காம் பாவ் என்றால் விலை உயர்ந்த தங்கம் என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப் பட்டதால் சீனர்கள் காம் பாவ் என்று அழைத்து இருக்கலாம். காம் பாவ் எனும் சொல் மருவிக் கம்பார் ஆனது என்று ஒரு சாரார் கருத்துச் சொல்கின்றனர்.

கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் காணப் படுகின்றன. சரி. கம்பார் போருக்கு வருவோம்.

ஜப்பானியருக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.


ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)


மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் ஜப்பானியரின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. புசு புசு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். ஜித்ராவில் முதல் போர் நடந்தது. அதன் பின்னர் குரோ; அலோர் ஸ்டார்; குரூண்; ஈப்போ ஆகிய இடங்களில் போர்களும் சண்டைகளும் நடந்து உள்ளன.

ஜப்பானியர் படையின் 5-ஆவது பிரிவுக்கு, தக்குரோ மாட்சுயி (Takuro Matsui) என்பவர் தலைமை தாங்கினார். அதில் 41-ஆவது காலாட்படை பிரிவு (சுமார் 4,000 வீரர்கள்). இந்தப் பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சபுரோ கவாமுரா (Major General Saburo Kawamura) என்பவர் தலைமை தாங்கினார். கம்பார் குன்றில் தற்காப்பில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையைத் தகர்ப்பது அவர்களின் இலக்கு.

1941 டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கம்பாரில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையை, ஜெராம், கோப்பேங் பகுதிகளில் இருந்து வந்த ஜப்பானியப் படையினர் சுற்றி வளைத்தார்கள். முதல் அரணாகக் கூர்காப் படைப் பிரிவு இருந்தது. கூர்காப் படையினர் கம்பார் குன்றின் அடிவாரத்தில் மறைந்து இருந்தனர்.

இதைக் கண்டறிந்த ஜப்பானியர் அங்கு குவியத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் கூட்டுப் படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. ஜப்பானியருக்கு விமானங்களின் உதவி இருந்தது. உணவுப் பொருட்களும் ஆயுதங்களும் விமானங்கள் மூலமாகப் போடப் பட்டன.

முதலில் ஜப்பானிய உயிரிழப்புகள் கடுமையாக இருந்தன. பெருகி வரும் உயிரிழப்புகளுக்கு ஈடாக புதிய ஜப்பானிய வீரர்கள் கொண்டு வரப் பட்டார்கள். கம்பார் குன்றின் (Kampar Hill); தாம்சன் முகட்டில் (Thompson Ridge) தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கடும் சண்டை. இந்தத் தாக்குதலில் 34 இந்திய வீரர்கள் இறந்தனர்.


கம்பாரில் பிரிட்டிஷ் கூட்டுப் படையின் தற்காப்பு அரண் பலமாக இருந்ததால் ஜப்பானியர்களால் எளிதில் ஊடுருவ முடியவில்லை. அதனால் தெலுக் இந்தான் பகுதியில் இருந்து ஜப்பானியத் துணைப் படை உதவிக்கு வரவழைக்கப் பட்டது.

ஜப்பானியரின் ஆக மூத்தத் தளபதி ஜெனரல் யமாஷித்தா (General Yamashita). அவரே களம் இறங்கினார். கம்பார் போருக்குக் கட்டளைகள் போட்டார்.

இந்தக் கட்டத்தில் தெலுக் இந்தான்; ஊத்தான் மெலிந்தாங்; பேராக் ஆற்றுப் பகுதிகள் ஜப்பானியரிடம் விழுந்து விட்டன. கம்பாரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

இந்தப் பக்கம் கம்பாரில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆயுதப் பற்றாக்குறை உருவானது. இந்தக் கட்டத்தில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர்-ஜெனரல் பாரிஸ் போர்க் களத்தில் இருந்து பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தார். அதனால் கம்பாரில் இருந்த படைகள் சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்கின.

ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடிய அனைத்து இந்தியக் காலாட் படைகளுக்கும் பிரிட்டிஷ் தளபதி மேஜர்-ஜெனரல் பாரிஸ் என்பவர் தலைமை தாங்கினார் (Major-General Paris - Commander of the 12th Indian Infantry Brigade). இவருக்கு உதவியாக ஒவ்வொரு காலாட் படைக்கும் துணைத் தளபதிகள் இருந்தார்கள்.

1941 டிசம்பர் 30 தொடங்கி 1942 ஜனவரி 2 வரையில் நான்கு நாட்களுக்கு, பிரிட்டிஷ் கூட்டுப் படையினர், ஜப்பானியர்த் தாக்குதல்களை எதிர்த்துப் போராட முடிந்தது. ஜப்பானியர் மீது பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடிந்தது.

அதனால் ஜப்பானிய 41-ஆவது காலாட்படை வலுவிழந்து போனது. பின்னர் சிங்கப்பூர் மீதான படையெடுப்பில்கூட பங்கேற்க முடியாமலேயே போனது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் கூட்டுப் படையினருக்கு 150 உயிரிழப்புகள். ஜப்பானியருக்கு 500 உயிரிழப்புகள். ஆனால் உண்மையான ஜப்பானிய உயிரிழப்புகளை அதிகாரப்பூர்வமாக ஜப்பானிய அரசாங்கம் வெளியிடவில்லை.

மலாயா மீது ஜப்பானியர் படையெடுத்ததில் கம்பார் போரில் தான் ஜப்பானியருக்குக் கடுமையான தோல்வி. இந்தப் போரில் கூட்டுப் படைகளுக்கு வெற்றி.


இருந்த போதிலும், போதுமான படை ஆயுத உதவிகள் கிடைக்கவில்லை. அதனால் சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்த்துப் போர் செய்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்க முடியாது.

கம்பார் போர் ஓர் இரத்தக் களறிக் கூடம் என்றும் வர்ணிக்கப் படுகிறது. அங்கே ஓர் இரத்த ஆறே ஓடி இருக்கிறது. தீபகற்ப மலேசியாவின் வடக்கில் இருந்து இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் போர் தான்.

கம்பார் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். 1999-ஆம் ஆண்டு, கம்பார் போர் நடந்த இடத்தை ஒரு வரலாற்றுத் தளமாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.


மலாயாவில் ஜப்பானியர்களின் ஆட்சி மறக்க முடியாத ஒரு வரலாற்றுக் கொடுமை. 69 நாட்களில் மலாயாவை வளைத்துப் போட்டது ஒரு மண்ணாசைக் கொடுமை. அந்த இரு கொடுமைகளிலும் பெரும் கொடுமை என்பது பல்லாயிரம் மலாயாத் தமிழர்களின் முகவரிகளைத் தொலைக்கச் செய்த கொடுமைதான் கொடுமையிலும் கொடுமை. சயாம் மரணப் பாதைக் கொடுமையைச் சொல்கிறேன்.

அடுத்தக் கட்டுரையில் துரோலாக்; சிலிம் ரிவர்; ஆகிய இரு இடங்களில் நடந்த போரைப் பற்றி தெரிந்து கொள்வோம். சிலிம் ரிவர் அரண் உடைந்து போனதால் தான் தஞ்சோங் மாலிம் விழுந்தது. கோலாகுபுபாரு விழுந்தது. பத்தாங் காலி விழுந்தது. இப்படியே வரிசையாகப் பல நகரங்கள் விழுந்தன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2021

சான்றுகள்:

1.  Remembering the Battle of Kampar: The Forgotten Heroes of The British Battalion. (http://www.nmbva.co.uk/remembering_the_battle_of_kampar.htm).

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992).

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. The Battles of Kampar by Chye Kooi Loong.