03 ஜனவரி 2022

டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அறவாரியம் புத்தகப் போட்டி 2021

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் அனைத்துலகப் புத்தகப்போட்டி. இதில் உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் பரிசீலிக்கப்படும்.


விதிமுறைகள்

1. போட்டியின் பெயர்: டான் ஸ்ரீ கே.ஆர். சோமா அனைத்துலகப் புத்தகப்பரிசு.

2. நோக்கம்: அ. அனைத்துலக மற்றும் மலேசிய நிலையில் தரமான புத்தகங்கள் வெளிவர ஊக்குவித்தல்

ஆ. இந்தப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

இ. படைக்கப்படும் நூல்களில் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைக்கும் சிறந்த நூலாக அமைதல் வேண்டும்

3. பரிசுத் தொகைகள்

அ. பரிசுத் தொகை - அனைத்துலக நிலையில் - US $ 10,000

ஆ. பரிசுத் தொகை - மலேசியப் பிரிவில் - RM 10,000

4. படைப்பு

அ. துறை: நாவல், வரலாறு, ஆய்வு, தனி ஒருவரின் சிறுகதைத் தொகுப்பு, தனி ஒருவரின் கவிதைத் தொகுப்பு

ஆ. மொழி – தமிழ்

இ. மொழித் தரம் – தமிழ் மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருத்தல் அவசியம்.

ஈ. படைப்புத் திறன் – அந்தந்த துறைகளுக்கு உரிய கலைக் கூறுகள், உத்திகள் ஆகியவற்றுடன் பண்பாட்டு வரம்புக்கும் உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

உ. விளைபயன் – தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகு பயன் விளைத்தல்.

((i) மொழி இலக்கியம் கலை பண்பாடு போன்றவை

(ii) கல்வி, அறிவியல், சமூகவியல்

(iii) மனித அக மேம்பாடு, வாழ்வியல் நெறி போன்றவை

(iv) இதர மேம்பாட்டுக் கூறுகள்

5. நூலின் பங்கேற்புத் தகுதி

(i) சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.

(ii) கல்வித் தகுதி கருதி உருவாக்கப்படும் ஆய்வேடு ஏற்றுக் கொள்ளப் படாது.

(iii) வாழ்க்கை வரலாற்று நூல்களில், படைப்பாளரின் சொந்த வரலாற்று நூல் ஏற்றுக் கொள்ளப்படாது.

(iv) குறிப்பிட்ட நோக்கத்திற்காக இடுபணியாகச் செய்யப்படும் ஆய்வு சார்ந்த நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

(v) பொது நல நோக்கங்களுக்கு அப்பால் பட்டவையாக எழுதப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப் படாது.

(vi) அனைத்து நூல்களும் ISBN பதிவு பெற்றிருக்க வேண்டும்

(vii) ஏற்கனவே வெளிவந்து இந்தப் போட்டிக்காக திருத்தி, மறு பதிப்பு செய்து அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

6. நூலின்அமைப்பு

(i) அளவு – 14 செ.மீ. 21 செ.மீ. அளவுக்கு குறையாதது

(ii) பக்கங்கள் – 200 பக்கங்களுக்கு குறையாதது

(iii) எழுத்துரு – 12 புள்ளிக்கும் மிகாதது (வாசிப்புத் தகுதி)

(iv) பதிப்புத்தரம் – ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.

7. படைப்பாளர்

(i) அறவாரியப் பொறுப்பாளர்களும் பணியாளர்களும் அவர்தம் குடும்பத்தின் நேரடி உறுப்பினர்களும் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

(ii) குறிப்பிட்ட ஆய்வு ஆண்டிற்குரிய நடுவர்களது குடும்பங்களின் நேரடி உறுப்பினர்கள் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

8. பங்கேற்பு

(i) படைப்பாளரோ அல்லது நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தாரோ நூல்களைப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.

(ii) ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

(iii) பங்கேற்கும் நூலாசிரியர் / பதிப்பகத்தார் போட்டிக்கு 5 படிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

(iv) நூல்கள், போட்டி அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டு (2016-2017) கால வரம்புக்கு உட்பட்ட முதற் பதிப்பாக இருத்தல் வேண்டும்.

(v) பங்கேற்புக்கு, முறையாக நிறைவு செய்யப்பட்ட நுழைவுப் படிவம் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

(vi) பங்கேற்புக்கு உரிய நுழைவுப் படிவத்தை (http;//tansrisomabookaward.com.my) என்ற வாரிய அகப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

(vii) நூல்கள் அனுப்பப் பட்டதற்கான சான்று, அவை வந்து சேர்ந்ததற்கான சான்றாகாது. முடிவு நாளுக்குள் வந்தடைந்த நூல்கள் மட்டுமே பங்கேற்புக்குத் தகுதி பெறும்.

(viii) பங்கேற்புக்கான நுழைவுப் படிவமும் நூல்களும் வந்து அடைந்ததற்கான சான்றுக் கடிதம் பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும்.

(ix) தெரிவு செய்யப் பட்டவர்களுக்கு மட்டுமே போட்டி முடிவு குறித்து அறிவிக்கப்படும்.

(x) அறவாரியத்தின் அகப் பக்கத்திலும் ஊடகங்களிலும் போட்டி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்.

9. பங்கு பெறும் நூல்களின் மதிப்பீடு

(i) போட்டிக்குத் தகுதி பெறும் ஒவ்வொரு நூலும் தனிப்பட்ட 3 நடுவர்களால் ஆய்வு செய்யப்படும்.

(ii) நடுவர்களின் தனிப்பட்ட முடிவுகள், அறவாரியப் பேராளர்கள் அடங்கிய தெரிவுக் குழுவால் ஓருங்கிணைக்கப்பட்டு, பரிசுக்குரிய நூல் தேர்வு செய்யப்படும்.

(iii) பங்கு பெறும் ஒவ்வொரு நூலுக்கும் கீழ்க்காணும் மூன்று கோணங்களில், மேற் கூறப்பட்ட 4-ஆம் விதிமுறை சார்ந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அ. மொழித்தரம் - 4 ஆ & இ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்

ஆ. படைப்புத்திறன் - 4 உ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

இ. விளைபயன் - 4 உ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்

(iv) மதிப்பெண்கள்

அ. படைப்புத்திறன் - 50 %

ஆ. மொழித்தரம் - 25 %

இ. விளைபயன் - 25 %

10. பங்கேற்கும் நூல்களின் பதிப்புக் காலம்

(i) பரிசுக்கான ஆய்வும் தெரிவும் ஈராண்டுகளுக்கு உரியது.

(ii) போட்டிக்கு உரிய இரண்டாவது ஆண்டின் டிசம்பர் மாதத்தில் போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

(iii) போட்டிக்கு உரிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மார்ச்சு 31-ஆம் நாளுக்குள் அனுப்பப் படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

(iv) இரண்டாம் ஆண்டின் இறுதிக்குள் பரிசு முடிவு, பரிசளிப்பு நாள், இடம் போன்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.

11. நடுவர்கள்

(i) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், அறவாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு நடுவர்களாக நியமிக்கப் படுவர்.

(ii) போட்டிப் பரிசு பற்றிய நடுவர்களின் முடிவே இறுதியானது.

12. பரிசளிப்பு

(i) பரிசு பெற்றவர்களுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் அல்லது டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியத் தலைவர், இருவரில் ஒருவர் பரிசுகளை வழங்குவார்.

(ii) அனைத்துலகப் போட்டியிலும், மலேசியப் போட்டியிலும் வெற்றியாளர்களுக்கு ஒரே மாதிரியான பதக்கமும் நினைவுச் சின்னமும் வழங்கப்படும்.

(iii) அனைத்துலகப் பரிசு பெறுபவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர் அல்லது முறையான உதவியாளர் ஒருவருக்கும் பரிசளிப்பு நிகழும் இடத்திற்கு இரு வழி வானூர்திப் போக்குவரத்தும் தங்குமிட வசதியும் வழங்கப்படும்.

(iv) பரிசு பெறுபவர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமது படைப்பைப் பற்றி 10 நிமிடங்கள் உரை நிகழ்த்துவார்

(v) பரிசு முடிவு செய்யப்பட்ட பின் நூலுக்கு உரியவரோ அவரைப் பிரதிநிதிக்கும் சட்ட ரீதியான வாரிசோ, அப்பரிசினைப் பெறத் தகுதி உடையராவார்.

(vi) வெற்றி பெறும் படைப்பாளர்கள் பரிசு பெறு முன், தங்களது நூலின் 30 பிரதிகளை அறவாரியத்திற்கு வழங்க வேண்டும்.

13. விதிகளுக்கு விளக்கமும் மாற்றமும்

(i) விளக்கம்

இந்த நிலை விதிகளில் நேரடியாகக் குறிப்பிடப் படாத அல்லது போதிய விளக்கமளிக்கப் படாத சூழல் அல்லது சிக்கல் தோன்றும் நிலையில், அது குறித்து அறவாரியம் எடுக்கும் நிலைப்பாடே இறுதியானது.

(ii) மாற்றம்

அ. தேவையென்று கருதப்படும் போது, இந்த நிலை விதிகளில் புதியவற்றைச் சேர்க்கவோ இருக்கும் ஒன்றைத் திருத்தவோ, நீக்கவோ அறவாரியத்துக்கு உரிமையுண்டு.

ஆ. எனினும் அறவாரியத்தால் குறைந்த பட்சம் மூவரைக் கொண்டு அமைக்கப்படும பணிக் குழுவின் ஆய்வுக்கும், பரிந்துரைக்கும் ஏற்பவே மாற்றங்கள் செய்யப்படும்.

14. எல்லா படைப்புகளும் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப் படவேண்டும்.

15. Download Form : http://tansrisoma.nlfcs.com.my/EntryForm.pdf

டத்தோ பா. சகாதேவன் PJN, SSA, PPT, ANS,
நிர்வாக இயக்குனர்,
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம்,
10 வது மாடி,
விஸ்மா துன் சம்பந்தன்,
த.பெ.எண் 12133 50768
கோலாலம்பூர்.

DATUK B.SAHADEVAN PJN, SSA, PPT, ANS,
Managing Director,
NATIONAL LAND FINANCE COOPERATIVE SOPCIETY,
Tan Sri K.R.Soma Language & Literary Foundation 10th Floor,
Wisma Tun Sambanthan,
P.O.Box 12133+ 50768.
Kuala Lumpur.

தொலைபேசி; 603 2273 1250

தொலைநகல்; 603 2273 0826

மின்னஞ்சல் முகவரி:

kpselvam@tansrikrsomabookaward.com

parvathi@tansrikrsomabookaward.com





 

18 டிசம்பர் 2021

கட்டடம் - கட்டிடம் - எது சரி?

பலருக்கும் இந்தக் குழப்பம். கட்டிடம் என்று சிலர் எழுதுகிறார்கள். கட்டடம் என்று சிலர் எழுதுகிறார்கள். இரண்டில் எது சரி?


இந்தச் சொற்களின் கட்டுமானங்களைப் பார்க்க வேண்டும். முதலில் *கட்டிடம்* என்ற சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *இடம்* = *கட்டிடம்*

கட்டு இடம் என்பது ஒரு கட்டளைப் பொருள். வினைத் தொகை கொண்ட பொருளைத் தருகிறது. கட்டுவதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டு இடம் என்பது கட்டிய இடம்; அல்லது கட்டுகின்ற இடம்; அல்லது கட்டும் இடம். இங்கே இறந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருகின்றன. ஆகவே *கட்டிடம்* என்பது ஒரு வினைத் தொகையாய் நிற்கிறது.

கட்டிய இடம் என்பதன் மூலம் 'கட்டுமானம் எழுப்பப் படுவதற்குக் காரணமாக உள்ள இடம்' என்று பொருள் படுகிறது.

ஒரு கட்டுமானம் தோன்றுவதற்கு உரிய ஓர் இடத்தை அல்லது ஒரு வீட்டை அல்லது ஒரு மனையை கட்டு இடம் = *கட்டிடம்* என்று அந்தச் சொல் குறிக்கின்றது.

ஆக, இது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் ஒரு கட்டுமான அமைப்பைக் குறிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அடுத்து *கட்டடம்* எனும் சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *அடம்* = *கட்டடம்*

இந்த இடத்தில் *அடம்* என்பது தொழில் பெயர் விகுதிகளில் ஒன்றாகும். கட்டளைப் பொருள் தரும் வினை வேர்ச் சொல்லுடன் ஈற்றில் (இறுதியில்) ஒரு விகுதி சேர்ந்தால் தொழில் பெயர் உருவாகிறது.

இதைத்தான் விகுதி பெற்ற தொழில் பெயர் என்கிறோம். ஆக *அடம்* என்பது ஒரு தொழில் பெயரின் விகுதி.

*கட்டடம்* என்பது கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிக்கிறது. ஆக, கட்டடம் என்பதே கட்டுமானத்திற்கு மிகப் பொருத்தமான சொல் என்பது தெளிவாகிறது.

எடுத்துக்காட்டாக *ஒற்றடம்*. இதைப் பிரித்துப் பாருங்கள். ஒற்று + அடம் = *ஒற்றடம்*.  

ஆகவே, *கட்டடம்* என்பது கட்டுமானத்தைக் குறிப்பது.

*கட்டிடம்* என்பது கட்டுமானத்திற்கான இடத்தைக் குறிப்பது.

இலக்கணப்படி *கட்டடம்* என்பதே சரி.

பள்ளிக்கூடக் கட்டடம்; மருத்துவமனைக் கட்டடம்; ஈப்போவில் உள்ள கட்டடம் என்று எழுதுவதே சரி. மாடி மாடியாக நிற்கிறதே அதுதான் கட்டடம். சும்மா வெறும் தரையாகக் கிடக்கும் இடம் கட்டிடம். அதாவது ஒரு கட்டடம் கட்டப் படுவதற்காக உள்ள இடம். அல்லது ஒரு கட்டடம் கட்டப்பட்டு இருக்கும் இடம்.

*கட்டடம்* என்பதே சரி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2021





 

12 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி (2021)

சிலாங்கூரில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி ரி.ம. 5 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் ரி.ம. 505,000.00 வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளுக்கு கணிசமான நிதியுதவியை சிலாங்கூர் மாநில அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

2008-ஆம் ஆண்டுக்கு முன்னர் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி கேட்டு; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, மத்திய அரசு என்று கெஞ்சி கையேந்தி பிச்சை எடுத்த காலமாக இருந்தது. வேதனையான காலம்.

ஆனால் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திக்கு பின்னர் தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.

ஆம். முதலில் சிலாங்கூரில் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் விடிவு காலம் பிறந்தது.

பல ஆண்டுகளாக நிதியிதவி இல்லாமல் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திக்கு விடிவு காலம் பிறந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 285,000.00 கொடுத்தது.

2010-ஆம் ஆண்டில் எப்பிங்காம் தமிழ்ப் பள்ளியின் யு.பி.எஸ்.ஆர். தேர்ச்சி  விகிதம் 28%. ஆனால் 2012-ஆம் ஆண்டில் 55%-ஆக உயர்வு கண்டது.

மேலும் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு 2012ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 85,000.00 நிதியுதவி செய்தது. இந்த நிதியைக் கொண்டு தான் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் கணினி வகுப்பறையில் 40 கணினிகள் பொருத்தப் பட்டன. மேலும் இந்த கணினி வகுப்பறை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் தொடர்ந்து முறையாக வழி நடத்தப் படுகிறது.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் பொது வசதி முன்னேற்றத்திலும் கல்வி முன்னேற்றத்திலும்  சிலாங்கூர் மாநில அரசின் தொண்டு அளப்பரியது.

இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.


04 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; சிலாங்கூர் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 97 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 26,506 மாணவர்கள் கல்வி பயின்றனர். 2,155 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

கிள்ளான் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,487 மாணவர்கள் பயில்கிறார்கள். 491 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.







10 அக்டோபர் 2021

பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட 73 இந்திய விடுதலை தியாகிகள்

பினாங்கு நாட்டிற்கு 73 இந்திய விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் நாடு கடத்தி உள்ளார்கள்.

புரட்சி அணித் தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை (தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப் பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப் பட்டனர்.


இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டு இருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இந்தக் கடல் பயணத்த்தின் போது அடைந்த துயர் அவலமானது.

இவர்களுள் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்று அடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கள் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.

போராட்ட தியாகிகளின் பெயர்கள்.

1) வேங்கன் பெரிய உடையத்தேவர் - (சிவகங்கை மாமன்னர்)

2) துரைசாமி (மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்)

3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்

4) ஜெகநாத ஐயன் - இராமநாதபுரம்

5) பாண்டியப்ப தேவன் - கருமாத்தூர்

6) சடையமான் - கருமாத்தூர்

7) கோசிசாமி தேவர் - கருமாத்தூர்

8 தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி

9) குமாரத்தேவன் - முள்ளூர்

10) பாண்டியன் - பதியான்புத்தூர்

11) முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்

12) சாமி - மணக்காடு

13) ராமசாமி

14) எட்டப்ப தேவர் - நான்குநேரி

15) பாண்டிய நாயக்கர் - கோம்பை

16) மண்டைத் தேவர்

17) மலையேழ்மந்தன்

18) வீரபாண்டிய தேவர்

19) கருப்ப தேவர்

20) சுப்ரமணியம்

21) மாடசாமி

22) பெருமாள்

23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்)

24) தேவி நாயக்கர்

25) முத்துக்கருப்ப தேவர்

26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்)

27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்)

28) அழகிய நம்பி

29) ஒய்யக்கொண்ட தேவர்

30) சிவனுத்தேவர்

31) காணி ஆழ்வார்

32) மூப்பு உடையான்

33) கொண்டவன்

34) வீரபத்திரன் - நான்குநேரி

35) சிலம்பன் - நான்குநேரி

36) பேயன் - நான்குநேரி

37) ராமசாமி - நான்குநேரி

38) இருளப்பன் - நான்குநேரி

39) மாடசாமி - நான்குநேரி

40) வீரபாண்டியன்

41) வெங்கட்டராயன் - நான்குநேரி

42) உடையார்

43) முத்துராக்கு - நான்குநேரி

44) முத்துராக்கு - ஆனைக்கொல்லம்

45) சொக்கதலைவர் - நான்குநேரி
 
46) இருளப்ப தேவர் - நான்குநேரி

47) மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி

48) சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன் பட்டி

49) மல்லைய நாயக்கன் - இலாம்பட்டி

50) சல்வமோனிய நாயக் - கட்ட நாயக்கன்பட்டி

51) தோமச்சி நாயக்

52) சுளுவமோனியா நாயக் - ஆடினூர்

53) இராமசாமி - குளத்தூர் பாலிகர் பேரன்

54) பிச்சாண்டி நாயக் - எருவுபோபரம்

55) தளவாய் கல்லுமடம்

56) சின்ன மாடன் - பசுவந்தனை

57) வைடியம் மூர்த்தி - கந்தீஸ்வரம்

58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)

59) சுளுவமணியம்

60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) - தூத்துக்குடி போராட்ட தளபதி

61) கிருஷ்ணமா நாயக்

62) வாயுளன் - குளத்தூர்

63) மிளனன் - அறச்சேரி

64) வைல முத்து - கங்கராயகுறிச்சி

65) ராமன் - சுவளி

66) பாலையா நாயக் - நாஞ்சி நாட்டு சூரன்குடி

67) குமரன்

68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்

69) இராமன்

70) அல்லேக சொக்கு

71) சேக் உசேன்

72) அப்பாவு நாயக்

73) குப்பன்னா பிள்ளை

தனது தாய் மண்ணைவிட்டு அண்டை நாட்டிற்க்கு நாடு கடத்துவது என்பது மரணத்தைக் காட்டிலும் மிகவும் வேதனையானது.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்க்கை இழந்த சீர்மிகு சின்ன மறவர் நாட்டின் (மாமன்னன் வேங்கன் பெரிய உடையாத் தேவர்) மற்றும் மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 தியாகிகளையும் இந்த நாடும் நாட்டு மக்களும் மறந்து விட்டனர்.

ஆனால் என்றாவது ஒரு நாள் அவர்களது தியாகத்தை நாடு அறியும்!(மலேசியம்)