14 பிப்ரவரி 2019

கோவில் கோயில் எது சரி

சிலர் கோவில் என்று சொல்கிறார்கள். சிலர் “கோயில்” என்று சொல்கிறார்கள். விக்கிப்பீடியாவில் கோயில் எனும் சொல்லே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கோயில் எனும் சொல்லே அதிகம்.

அதிகமான தமிழ் மக்களும் கோயில் எனும் சொல்லையே பயன்படுத்துகின்றனர். ஆலயம் எனும் மற்றொரு சொல்லையும் பயன்படுத்துகின்றனர். நான் படித்த வரையில் ஆலயம் எனும் சொல்லைக் கம்பர் பயன்படுத்தவில்லை.

சிலர் *கோ* என்றால் *இறைவன்*, தலைவன். *இல்* என்றால் இல்லம், இருக்குமிடம். கோ+இல் = கோயில் என்பதுதான் சரி என்கின்றனர்.

மேலோட்டமான பார்வைக்கு இது சரி என்றே தோன்றும். ஆனால் இலக்கண விதி எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

இலக்கணப் பயன்பாட்டு வழி கோவில் என்பதே சரி. ஆனால் "கோயில்" என்கிற சொல்லும் நெடுங்காலமாய் நம்முடைய இலக்கியத்தில் இருந்து வருகிறது. தமிழ் மக்களின் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே கோயில் என்பது ஏற்கக்கூடிய பிழை என்று கூறலாம்.

தமிழில் *உடம்படுமெய்* என்று ஓர் இலக்கணப் பிரிவு உள்ளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வந்தால் அந்த இரண்டு உயிர்களையும் இணைத்திட *ய்*, *வ்* எனும் இரண்டு மெய்யெழுத்துகள் வரும்.

அதாவது *கோ* என்பது ஓர் எழுத்து. அந்த எழுத்தைப் பிரித்தால் (க்+ஓ) வருகிறது. *கோ* என்பதற்குப் பின்னால் *இல்* வருகிறது. (கோயில்/கோவில்)

*கோ* என்பதில் எனும் உயிர் எழுத்தும்; *இல் என்பதில் ** எனும் உயிர் எழுத்தும் இணைகின்றன. ஆகவே அந்த இடத்தில் *வ்* எனும் மெய்யெழுத்து தோன்றும். தோன்ற வேண்டும். புரியுதுங்களா.

ஆகவே *கோ*+*வ்*+*இல்* = கோவில் என்பதே சரி. கோயில் எனும் போது *கோ*+*ய்+*இல்* = கோயில் என்று *ய் உடம்படு மெய்யாக வந்து உள்ளது.

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். முதற்சொல்லின் முடிவு *இ*, *ஈ*, *ஐ* ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் *ய்* என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.

நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது. அதையும் பார்க்க வேண்டும். *இ, ஈ, ஐ வழி யவ்வும்; ஏனை உயிர் வழி வவ்வும்* என்கிறது. *ஏ* எனும் எழுத்திற்கு முன் இந்த இருமையும் உடம்படு மெய் என்றாகும் என்கிறது.

என்ன மண்டை குழம்புகிறதா. எனக்கும் குழப்பம் வந்து போய்விட்டது. நீங்களும் குழம்ப வேண்டாமா. என் தாய்மொழி தமிழ் என்றால் அது ஒரு செம்மொழி. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் இதை எல்லாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டாமா. 

கோவில் என்பதில் ஓகாரம் இருப்பதால் *வ்* உடன்படு மெய்தான் வர வேண்டும். என்ன செய்வது. தமிழ் மக்களின் வழக்கத்திலும் பழக்கத்திலும் கோயில் எனும் சொல் அதிகமாகவே இடம் பெற்று விட்டது.

அதை ஏற்றுக் கொள்ளும் பிழையாகவே ஏற்றுக் கொள்வோம். என்ன செய்வது. நானும் கோயில் எனும் சொல்லைத் தான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். பழக்க தோசம் யாரை விட்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2019

காணொலியா காணொளியா

காணொளி எனும் சொல்லைப் பலரும் பயன்படுத்தினாலும் அது பொருத்தமான சொல் அல்ல என்பது என் கருத்து. காணொளி என்பதை இயற்பியல் நோக்கில் பார்த்தால் அங்கே வேறு மாதிரியாகப் பொருள் படுகிறது.

காணொளி என்றால் காணக்கூடிய ஒளி எனும் பொருள்.

காணொளி என்பது ஒளி அலைகளின் வரிசையில் நம் கண்களால் காணக் கூடிய ஒரு தொகுதி மட்டுமே ஆகும். இதை ஆங்கிலத்தில் visible spectrrum என்கிறார்கள். spectrrum என்றால் ஒளி அலை வரிசை.

ஆக காணொளி என்றால் visible spectrum. ஆகவே வீடியோ என்பதற்கு *நிகழ்படம்* என்பதே பொருத்தமான சொல். முன்பு சொன்னார்கள். பயன்படுத்தினார்கள்.

ஆனால் அண்மைய காலங்களில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் காணொலி எனும் சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

ஒரு சிலர் காணொலி என்பதைவிட *ஒளியொலி* என்பதே சிறப்பான சொல் என்றும் கருத்துகள் சொன்னார்கள்.

*வீடியோ* என்பதற்கு நிகழ்படம் என்பதே முன்னர் பொருத்தமான சொல். நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போலவே ஒரு திரையில் காட்டும் *அசைப்படம்*.

*ஒளிதம்* என்றால் நிகழ்படம். அதாவது காணொலி. ஆங்கிலத்தில் video. காணொலி எனும் சொல் தான் அண்மைய காலங்களில் மிகப் பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

opto; optic; optical; எனும் சொற்கள் ஒளியைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள். ஆக காணொளி (visible light) என்றால் காணக் கூடியது என்று பொருள். ஆனால் இங்கே ஒன்றை இயற்பியல் ரீதியாக ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஒளி என்பது பொருள் நீட்சி பெற்றது. அதாவது ஒளி என்பது காணும் ஒளிகளை மீறிய அலைநீளங்கள் கொண்டவை ஆகும். அவை ஒருவகையில் மின்காந்த அலைகள்.

எடுத்துகாட்டு: optical fiber = ஒளிநார்.

ஆனால் ஒளிநாரின் ஊடாகச் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி நிறமாலைக்கு அப்பால் பட்டவை. அதை நினைவில் கொள்ளுங்கள்.

அகச் சிவப்புக் கதிர் எனும் Infra Red Rays என்பவை அலைநீளங்கள் கொண்டவை. அதாவது காணொளி மாதிரி அலைநீளங்கள் கொண்டவை. அதனால் தான் ஒளிநார் என்கிறோம்.

ஆக இங்கு காணொளி என்பதை visibile light எனும் பொருளில் பார்க்கிறோம். அதனால் தான் நிகழ்படம் (video) என்பதற்குப் பதிலாகக் காணொளி எனும் சொல்லைப் பயன்படுத்தி வந்தோம், புரியும் என்று நினைக்கிறேன்.

காண் எனும் (காட்சியும்); ஒலி எனும் (சத்தமும்) ஒரே சமயத்தில் இணைந்து வருவதால் காணொலி ஆகிறது.

காண் என்றால் பார்க்கும் அல்லது பார்ப்பது என்று பொருள். ஒளி என்றால் வெளிச்சம். ஆக காணொளி என்றால் வெளிச்சத்தை மட்டும் பார்ப்பதாகும். அதாவது ஊமையான ஒளி. அது சரியான சொல் ஆகாது.

காணொலி என்று சொல்லில் ஒளியும் வருகிறது. ஒலியும் வருகிறது. ஆக காணொலி என்பதே சரியான சொல். அந்தச் சொல்லை ஏற்பவர்கள் ஏற்கட்டும். ஏற்காதவர்கள் பழையதிலேயே இருக்கட்டும். அது அவர்களின் விருப்பம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காணொலி எனும் சொல் சரியான சொல் என ஏற்றுக் கொண்டு உள்ளன. தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிடும் பள்ளிப் பாடநூல்களில் காணொலி எனும் சொல்லைக் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். விக்கிப்பீடியாவும் காணொலி எனும் சொல்லையே பயன்படுத்துகிறது. நன்றி.

12 பிப்ரவரி 2019

சாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள்

சாலிகிராம் என்றால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் அம்மோனைட் ஓடுகள். இந்த ஓடுகள் எப்படி நேபாளத்திற்குப் போயின.
Image result for shaligram

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தது என்பதுதான் புவியியல் உண்மை.

(Shaligrams are Ammonoid fossils of the Devonian - Cretaceous period which existed from 400 to 66 million years ago. )

இந்தியக் கண்டத்தின் நில அடுக்கு மேல் நோக்கி நகர்ந்து ஆசிய நில அடுக்குடன் மோதியதால் இமயமலை உருவானது. இந்த நிலத் தகடுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செண்டி மீட்டர் முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்த உயிரினங்களின் எலும்புக் கூடுகளும் நேபாளப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இமயமலை அடிவாரத்தில் திமிங்கிலத்தின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image result for shaligram

இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் தனித்தனி நிலத் தகடுகள். இந்தியா மட்டும் தனி ஒரு தகட்டில் உட்கார்ந்து இருக்கிறது.

ஆசியத் தகட்டை இந்தியத் தகடுதான் முதலில் மோதுகிறது. அந்த மாதிரியான ஒரு மோதலில், ஓர் அழுத்தத்தில் உருவானதே இமயமலையாகும்.

உலகத்திலேயே உயரமான அந்த மலை இன்னும் உயர்ந்து கொண்டு போகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு சில அங்குலம் உயர்கிறது. இமயமலை உயர்வதற்கு, இந்திய, ஆசியத் தகடுகள் மோதிக் கொள்வதுதான் மூல காரணம்.

பூமியின் மேல்பகுதியில் உள்ள நில அடுக்குகளை 'டெக்டானிக் பிளேட்ஸ்' (Tectonic Plates) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

இந்த அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச் செல்லும் போது நில அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வைத் தான் நிலநடுக்கம் என்கிறோம்.

Image result for shaligram

மத்திய ஆசியாவில் அமைந்து இருப்பது யூரேசியன் டெக்டொனிக் பிளேட் (Eurasian Tectonic Plate) எனும் நிலத் தகடு. அதைக் கண்டத்தட்டு என்றும் சொல்லலாம்.

அதற்கு கீழ்ப் புறமாக இருப்பது இந்திய டெக்டொனிக் பிளேட் (Indian Tectonic Plate). இந்த இரண்டு தட்டுகளும் பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டே இருக்கின்றன. அந்த உரசலின் விளைவாகத் தான் இமயமலைத் தொடர் உருவானது.

சாலிகிராம் கடல்வாழ் உயிரினங்களில் அம்மோனைட் ஓடுகள் இந்த மாதிரி நிலத் தகடுகளின் நகர்வுகளினால் தான் 3500 கிலோ மீட்டர்கள் தாண்டி நேபாளத்திற்கு வந்து சேர்ந்தன.

09 பிப்ரவரி 2019

தமிழரை ஏமாற்றும் தமிழர்கள்

இன்று 09.02.2019 மாலை ஆறு மணி போல நடைப்பயிற்சிக்குப் போய் இருந்தேன். திரும்பும் போது ஒரு தள்ளுவண்டியில் ஒரு தமிழரின் மீ கோரேங் விற்பனை. ஒரு வாரமாகக் கடை போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே எனக்கு ஒரே ஒருநாள் அறிமுகம். ஒரு முறை வாங்கி இருக்கிறேன். ஓர் ஆள் சாப்பிடும் அளவிற்கு மீ கோரேங். ஒரு பாக்கெட்டின் விலை 5 ரிங்கிட்.

உண்மையான் விலையில் பார்த்தால் பொருட்களின் அடக்க விலை ஒன்றரை வெள்ளிக்கு மேல் தாண்டிப் போகாது.

இன்றைக்கு மாலையில் அவரைப் பார்த்தேன். ’நாலு வெள்ளிக்கு போடுங்க தம்பி’ என்றேன். உடனே அவர் ’நாலு வெள்ளிக்கு எல்லாம் இல்ல. கட்டுப்படி ஆகாது. அஞ்சு வெள்ளி’ என்றார்.

அதற்கு நான் ’என்னிடம் நாலு வெள்ளிதான் இப்ப இருக்கு. நாலு வெள்ளிக்கே போடுங்க தம்பி’ என்றேன்.

’நாலு வெள்ளிக்கு எல்லாம் முடியாதுங்க’ என்று கராராகச் சொல்லி விட்டார். ’

இல்ல தம்பி... நான் காசு எடுத்து வரல... நாலு வெள்ளிக்கே போடுங்க... ஒரு ஆள் சாப்பிடத் தானே’ என்றேன்.

அதற்கு அவர் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பேசியில் மூழ்கிவிட்டார். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவரும் தமிழர். நானும் தமிழர். அவருக்கு வயது 40-ஐ தாண்டிப் போகாது. நான் அவருக்கு ஓர் அப்பா வயதில் இருக்கிறேன்.

ஒரு வெள்ளியில் என்ன வந்திடப் போகிறது. கொஞ்சம் இரக்கம் காட்டி இருக்கலாமே. அட... வயதுக்கு மரியாதை வேண்டாங்க. ஒரு தமிழருக்கு ஒரு தமிழர் மரியாதை கொடுத்து இருக்கலாமே.

பொருளின் விலை ஐந்து வெள்ளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என் கையில் நான்கு வெள்ளி தானே இருக்கிறது. அந்த நான்கு வெள்ளிக்கே கொடுக்கலாமே. அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

எத்தனைப் பேருக்கு எவ்வளவோ கொடுத்து உதவி செய்து இருக்கிறேன். திரும்பிக் கேட்டதாக என் நினைவில் இல்லை. தானம் செய்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்த்தால் அது எங்கேயோ போய் நிற்கும். நடந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பக்கத்துச் சீனரின் மளிகைக் கடைக்குச் சென்றேன்.

ஒரு கிலோ மீ; ஐந்து முட்டைகள்; ஒரு பாக்கெட் மீன் உருண்டைகள்; கொஞ்சம் தாவ்கே; மூன்று பச்சை மிளகாய் விலை 5 ரிங்கிட் 20 சென். கையில் இருந்த நான்கு வெள்ளியைக் கொடுத்து மிச்சத்தை நாளைக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

கடையில் வாங்கிய பொருட்களைக் கொண்டு நான்கு முறை மீ கோரேங் பிரட்டிச் சாப்பிடலாம்.

என் மனதின் ஓரத்தில் ரொம்பவுமே வேதனை. ஒரு தமிழர் வியாபாரம் செய்கிறாரே... அவருக்கு ஆதரவு கொடுப்போமே எனும் ஒரு தமிழர் உணர்வில்தான் ஒரு தமிழரைத் தேடிப் போனேன். ஆனால் இப்படிப்பட்ட தமிழராக இருப்பார் என்று நினைக்கவே இல்லை.

இனிமேல் இந்த மாதிரி தமிழர்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்வதே புண்ணியம் என்று அப்போதே முடிவு செய்தேன். இவர் மட்டும் அல்ல.

இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். எங்கேயோ அத்தி பூத்தால் போல ஒரு சில நல்ல மனங்கள் இருக்கவே செய்கின்றன.

கடையில் போய் வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். அதுவே என் பணிவான அன்பான வேண்டுகோள்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

22 டிசம்பர் 2018

பிரபஞ்சன்


பிரபஞ்சன் (பிறப்பு: ஏப்ரல் 27, 1945 - மறைவு: டிசம்பர் 21, 2018). தமிழ் எழுத்தாளர்; விமர்சகர். இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.

1995-ஆம் ஆண்டு அவரின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. இந்தப் புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப் பட்டது.

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர். தன்  வாழ்க்கையைத் தஞ்சாவூரில் ஓர் ஆசிரியராகத் தொடங்கியவர்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தவர். 



இவரது முதல் சிறுகதை *என்ன உலகமடா*. பரணி என்ற பத்திரிக்கையில் 1961-இல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதி உள்ளார்.

இவரின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், சுவிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரின் நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் உள்ளது. 



இவரின் சிறுகதைத் தொகுப்பான *நேற்று மனிதர்கள்* பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாக்கப் பட்டுள்ளது. இவரின் மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அவர் சொல்கிறார். சென்னையில் நான் தங்கி இருக்காத வீதிகளே இல்லை. அதன் எல்லா பேட்டைகளும் எனக்குத் தெரியும். அத்தனை பேட்டைகளும் என்னை அறியும்; நான் அதில் வாழ்ந்த மனிதர்களை அறிவேன்.

பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கையின் 55-வது ஆண்டு விழா சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில் ஓர் இலக்கியத் திருவிழாவாக நடந்தேறியது. 



பிரபஞ்சனுக்கு தமிழ் இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள், சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து திரட்டிய ரூ.10 இலட்சம் நிதியும் அளிக்கப் பட்டது. நடிகர் சிவகுமார் அந்தத் தொகையை ஒரு தாம்பூலத்தில் ஏந்தி வழங்கினார்.

“பிரபஞ்சன் பணத்தைச் செலவழிக்கிற வேகம் எனக்குத் தெரியும். அந்த வேகத்துக்கு இந்த பத்து இலட்சம் ரூபாய் எம்மாத்திரம். ஒரு மாதமோ... ரெண்டு மாதமோ. எனினும் இந்தப் பணத்தை அவர் தாராளமாகச் செலவு செய்யலாம். இன்னும் அவருக்குப் பணம் திரட்டித்தர நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்கிறார். “பிரபஞ்சன் சென்னைக்கு வந்தததற்குக் காரணம்... இலக்கியத் தாகம் என்று நினைப்போம். அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அதைவிட ஒரு முக்கியக் காரணம் அவர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத்தான் சென்னைக்கு வந்தார். 



கவிஞர் கங்கைகொண்டான் இயக்கத்தில் ஒரு கதையும் தயாரானது. அந்தக் கதையின் ஹீரோ பிரபஞ்சன். ஆனால் அந்தக் கதை படமாகவே இல்லை. சினிமாவுக்குத் திறமைசாலிகளைவிட வெற்றிகளே முக்கியம். சினிமாவைப் பொறுத்தவரை பிரபஞ்சனுக்கு அது கிடைக்கவே இல்லை’’ என்கிறார்.

பிரபஞ்சனின் ‘ஆண்கள் பெண்கள்’ நாவலில் ஒரு பெண் தேவாலயத்தில் இயேசுவிடம் வேண்டுவாள்... ‘கடவுளே... நான் குளிக்க மறைவாக ஒரு இடம் வேண்டும்’ என்று. அந்த வரி அவரோடு எப்போதும் பயணித்துக் கொண்டே இருந்தது. 



அந்த வரிதான் அவரைக் கம்யூனிஸ்டு ஆக்கியது. அந்த இயக்கத்துக்குள் அவரைத் தள்ளியது. அந்த ஒரு வரியில் பிரபஞ்சனின் மொத்த வாழ்க்கையும், எழுத்துலகமும் இருக்கிறது

*விருதுகள்*

சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)

பாரதிய பாஷா பரிஷத் விருது

கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி

இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்

சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா

நேற்று மனிதர்கள் - தமிழக அரசின் பரிசு

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை கடுமையாக பாதிப்பு அடைந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்த நிலையில் நேற்று (21.12.2018) காலை 11:30 மணிக்கு காலமானார். பிரபஞ்சனின் மறைவுக்குப் பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகத் தமிழர் இனம் ஒரு தமிழ்ச் சகாப்தத்தை இழந்து விட்டது.