14 பிப்ரவரி 2019

சூரியனில் தங்கம் எரிகிறது


ஒரே ஒரு விநாடி நேரத்தில் சூரியன் 4,000,000 டன்கள் எடை கொண்ட ஹைட்ரோஜன் காற்றை எரிக்கிறது. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் நான்கு மில்லியன் டன்கள் ஹைட்ரோஜன் எனும் நீரகக் காற்று. அதாவது ஒரு விநாடிக்கு நான்கு மில்லியன் டன்கள். இப்படி ஒவ்வொரு விநாடிக்கும் நான்கு மில்லியன் டன்கள் ஹைட்ரோஜன் எரிக்கப் படுகின்றது..

அப்படி என்றால் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு? ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு? ஒரு மாதத்திற்கு எவ்வளவு? ஒரு வருடத்திற்கு எவ்வளவு? சூரியனின் இப்போதைய வயது 600 கோடி ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் எவ்வளவு சக்தி தேவைப்பட்டு இருக்கும். எவ்வளவு ஹைட்ரோஜன் எரிக்கப்பட்டு இருக்கும்.

கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்கு எரிக்கப்படும் சக்தி அதனிடம் உண்டு. ஆக எவ்வளவு எரிசக்தி தேவைப்படும். எங்கே இருந்து இவ்வளவு சக்தி வருகிறது? தலை சுற்றுகிறதா.

சில சமயங்களில் மெகா சீரியல்களைத் தொடர்ந்து மூச்சு விடாமல் பார்த்தாலும் இப்படித்தான் தலைச் சுற்றல் வருமாம். நான் சொல்லவில்லை. ஆப்பிரிக்கா சோமாலியாவில் பேசிக் கொள்கிறார்கள்.

ஆக அது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இந்தச் சூரியனின் கணக்கைப் போடும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சுற்றல் வரலாம். பரவாயில்லை. சமாளித்துக் கொள்ளுங்கள்.

சூரியனின் நட்ட நடுவில் அதன் வெப்ப அளவு ஒரு மில்லியன் செல்சியஸ். நம் வீட்டில் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம் இல்லையா. அது 100 பாகை செல்சியஸ் வெப்ப அளவில் கொதிக்கிறது. அதைப் போல சூரியனின் நடு மையத்தில் ஒரு மில்லியன் செல்சியஸ் வெப்பத்தில் ஹைட்ரோஜன் காற்று கொதிக்கிறது.

அப்படி கொதிக்கும் போது அது ஹீலியம் காற்றாக மாறுகிறது. சூரியனின் நடு மையத்தில் இப்படிக் கொதித்து வெளியாகும் வெப்ப அணுக்கள் சூரியனின் மேல்பகுதிக்கு வந்து சேர ஓர் இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. பாருங்கள்.

வெளியே வந்த ஹைட்ரோஜன் ஒளியாக மாறியதும். அது நம்ப பூமியை எட்டே எட்டு நிமிடங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் உள்ளுக்குள் இருந்து வெளியே வர மட்டும் ஒரு இலட்சம் ஆண்டுகள் பிடிக்கின்றது. அதாவது நடு மையத்தில் இருந்து மேலே வெளியே வருவதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள். புரிகிறதா.

ஆக இப்போது நம்முடைய உடலில் படுகிறதே சூரிய வெளிச்சம் இது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி விட்டது. அது நடுவில் இருந்து மேலே வந்து சேருவதற்கு அவ்வளவு காலம் பிடிக்கிறது.

ஆனால் மேலே வந்ததும் அதாவது மேல்பரப்பை வந்து அடைந்ததும் நம்முடைய பூமிக்கு வந்து சேர ஏறக்குறைய எட்டு நிமிடங்கள் பிடிக்கின்றன. புரியும் என்று நினைக்கிறேன்.

இன்னும் 600 கோடி ஆண்டுகள் எரிவதற்கு சூரியனிடம் போதுமான சக்தி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படி என்றால் சூரியன் எப்பேர்ப் பட்டதாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விவரங்களைக் கணக்குப் போட்டுச் சொன்ன அல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) எனும் அறிவியல் மேதை எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் எலும்புகளைப் பொறுக்கி எடுத்து அந்த எலும்புகள் மனித எலும்புகளா இல்லை மிருகத்தின் எலும்புகளா என்று சுலபத்தில் கண்டுபிடித்து விடுகிறார்கள். எத்தனை வயது இருக்கும் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். அந்த எலும்பு ஆணின் எலும்பா இல்லை பெண்ணின் எலும்பா என்பதையும் சொல்லி விடுகிறார்கள்.

அறிவியல் எங்கோ போய்விட்டது என்று நாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். நியாயமான பெருமை. அதே சமயத்தில் பூமியின் வயது என்ன சூரியனின் வயது என்ன சந்திரனின் வயது என்ன என்று கணக் கச்சிதமாக சொல்கிறார்களே அது எப்படி என்று நினைத்துப் பார்த்து பெருமைப் படலாமே!

சூரியனில் ஒரே விநாடியில் 20 ஆயிரம் டன் தங்கம் எரிக்கப் படுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. இல்லை உங்களால் ஏற்றுக் கொள்ளத்தான் முடிகிறதா. உண்மைதாங்க. ஒரு விநாடிக்கு 20 ஆயிரம் டன் தங்கம். சூரியனில் எரிக்கப்படுகிறது. என்ன செய்வது. மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள். ஆக இத்தனைக் கோடி வருடங்களாக எவ்வளவு தங்கம் எரிந்து போய் இருக்கும்.

சரி. எரிந்தது எரிந்ததாக இருக்கட்டும். இப்போதைக்கு எவ்வளவு தங்கம் மிச்சம் இருக்கும். அதையாவது கணக்குப் பண்ணிப் பார்ப்போம். காசா பணமா. சும்மா ஒரு கற்பனை கணக்குதான். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

நம்ப பூமி இருக்கிறதே இந்த மாதிரி ஒரு நூறு பூமியை ஒன்றாகச் சேர்த்து ஒரு  கொள்ளுக் கட்டை மாதிரி பிடித்து வைத்தால் எப்படி இருக்கும். அந்த அளவுக்குச் சொக்கத் தங்கம் இன்னும் அங்கே சூரியனில் இருக்கிறது. ஆனால் என்ன அந்தத் தங்கம் சூடோடு சூடாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதுதான் மனசிற்கு வேதனையாக இருக்கிறது.

தங்கம் எரிந்து கொண்டு இருக்கிறது என்பது ரொம்பவும் கவலையாக இருக்கிறது இல்லையா. எப்படிப் போய் எடுப்பது. ஓர் ஐடியா சொல்லுங்களேன். ராக்கெட்டில் போய் தங்க வாயுக்களை பெரிய பெரிய டாங்கிகளில் உறிஞ்சி எடுத்து வரலாம் என்று மட்டும் சொல்ல வேண்டாம்.

அப்படி ஒரு வாய்ப்பும் வசதியும் இருந்தால் பூமியில் ஒரு மனுசன்கூட இருக்க மாட்டான். பக்கத்து வீட்டில் கடன் வாங்கியாவது சூரியனுக்குப் பறந்து கொண்டு இருப்பார்கள். சும்மா ஒரு கற்பனைதான்.

சூரியன் பூமியில் இருந்து 149,597,870 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நம்முடைய பூமியைப் போல 333,400 பூமிகளைச் சேர்த்து சூரியனுக்குள் அடக்கி விடலாம். இந்தப் பூமி எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

நம்முடைய பூமி நமக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இந்தப் பூமியைப் போல மூன்று இலட்சம் பூமிகள் என்றால் வேறு என்ன சொல்ல இருக்கிறது. அவ்வளவு பெரியது நம்ப சூரியன்.

தங்கம் எடுக்க சூரியனுக்குப் போவதாக இருந்தால் செய்தி அனுப்புங்கள். கிடைக்கிற தங்கத்தில் பாதிக்குப் பாதி. கமிசன் கூடுதலாக வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை.

கோவில் கோயில் எது சரி

சிலர் கோவில் என்று சொல்கிறார்கள். சிலர் “கோயில்” என்று சொல்கிறார்கள். விக்கிப்பீடியாவில் கோயில் எனும் சொல்லே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கோயில் எனும் சொல்லே அதிகம்.

அதிகமான தமிழ் மக்களும் கோயில் எனும் சொல்லையே பயன்படுத்துகின்றனர். ஆலயம் எனும் மற்றொரு சொல்லையும் பயன்படுத்துகின்றனர். நான் படித்த வரையில் ஆலயம் எனும் சொல்லைக் கம்பர் பயன்படுத்தவில்லை.

சிலர் *கோ* என்றால் *இறைவன்*, தலைவன். *இல்* என்றால் இல்லம், இருக்குமிடம். கோ+இல் = கோயில் என்பதுதான் சரி என்கின்றனர்.

மேலோட்டமான பார்வைக்கு இது சரி என்றே தோன்றும். ஆனால் இலக்கண விதி எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

இலக்கணப் பயன்பாட்டு வழி கோவில் என்பதே சரி. ஆனால் "கோயில்" என்கிற சொல்லும் நெடுங்காலமாய் நம்முடைய இலக்கியத்தில் இருந்து வருகிறது. தமிழ் மக்களின் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே கோயில் என்பது ஏற்கக்கூடிய பிழை என்று கூறலாம்.

தமிழில் *உடம்படுமெய்* என்று ஓர் இலக்கணப் பிரிவு உள்ளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வந்தால் அந்த இரண்டு உயிர்களையும் இணைத்திட *ய்*, *வ்* எனும் இரண்டு மெய்யெழுத்துகள் வரும்.

அதாவது *கோ* என்பது ஓர் எழுத்து. அந்த எழுத்தைப் பிரித்தால் (க்+ஓ) வருகிறது. *கோ* என்பதற்குப் பின்னால் *இல்* வருகிறது. (கோயில்/கோவில்)

*கோ* என்பதில் எனும் உயிர் எழுத்தும்; *இல் என்பதில் ** எனும் உயிர் எழுத்தும் இணைகின்றன. ஆகவே அந்த இடத்தில் *வ்* எனும் மெய்யெழுத்து தோன்றும். தோன்ற வேண்டும். புரியுதுங்களா.

ஆகவே *கோ*+*வ்*+*இல்* = கோவில் என்பதே சரி. கோயில் எனும் போது *கோ*+*ய்+*இல்* = கோயில் என்று *ய் உடம்படு மெய்யாக வந்து உள்ளது.

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். முதற்சொல்லின் முடிவு *இ*, *ஈ*, *ஐ* ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் *ய்* என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.

நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது. அதையும் பார்க்க வேண்டும். *இ, ஈ, ஐ வழி யவ்வும்; ஏனை உயிர் வழி வவ்வும்* என்கிறது. *ஏ* எனும் எழுத்திற்கு முன் இந்த இருமையும் உடம்படு மெய் என்றாகும் என்கிறது.

என்ன மண்டை குழம்புகிறதா. எனக்கும் குழப்பம் வந்து போய்விட்டது. நீங்களும் குழம்ப வேண்டாமா. என் தாய்மொழி தமிழ் என்றால் அது ஒரு செம்மொழி. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் இதை எல்லாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டாமா. 

கோவில் என்பதில் ஓகாரம் இருப்பதால் *வ்* உடன்படு மெய்தான் வர வேண்டும். என்ன செய்வது. தமிழ் மக்களின் வழக்கத்திலும் பழக்கத்திலும் கோயில் எனும் சொல் அதிகமாகவே இடம் பெற்று விட்டது.

அதை ஏற்றுக் கொள்ளும் பிழையாகவே ஏற்றுக் கொள்வோம். என்ன செய்வது. நானும் கோயில் எனும் சொல்லைத் தான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். பழக்க தோசம் யாரை விட்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2019

காணொலியா காணொளியா

காணொளி எனும் சொல்லைப் பலரும் பயன்படுத்தினாலும் அது பொருத்தமான சொல் அல்ல என்பது என் கருத்து. காணொளி என்பதை இயற்பியல் நோக்கில் பார்த்தால் அங்கே வேறு மாதிரியாகப் பொருள் படுகிறது.

காணொளி என்றால் காணக்கூடிய ஒளி எனும் பொருள்.

காணொளி என்பது ஒளி அலைகளின் வரிசையில் நம் கண்களால் காணக் கூடிய ஒரு தொகுதி மட்டுமே ஆகும். இதை ஆங்கிலத்தில் visible spectrrum என்கிறார்கள். spectrrum என்றால் ஒளி அலை வரிசை.

ஆக காணொளி என்றால் visible spectrum. ஆகவே வீடியோ என்பதற்கு *நிகழ்படம்* என்பதே பொருத்தமான சொல். முன்பு சொன்னார்கள். பயன்படுத்தினார்கள்.

ஆனால் அண்மைய காலங்களில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் காணொலி எனும் சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

ஒரு சிலர் காணொலி என்பதைவிட *ஒளியொலி* என்பதே சிறப்பான சொல் என்றும் கருத்துகள் சொன்னார்கள்.

*வீடியோ* என்பதற்கு நிகழ்படம் என்பதே முன்னர் பொருத்தமான சொல். நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போலவே ஒரு திரையில் காட்டும் *அசைப்படம்*.

*ஒளிதம்* என்றால் நிகழ்படம். அதாவது காணொலி. ஆங்கிலத்தில் video. காணொலி எனும் சொல் தான் அண்மைய காலங்களில் மிகப் பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

opto; optic; optical; எனும் சொற்கள் ஒளியைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள். ஆக காணொளி (visible light) என்றால் காணக் கூடியது என்று பொருள். ஆனால் இங்கே ஒன்றை இயற்பியல் ரீதியாக ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஒளி என்பது பொருள் நீட்சி பெற்றது. அதாவது ஒளி என்பது காணும் ஒளிகளை மீறிய அலைநீளங்கள் கொண்டவை ஆகும். அவை ஒருவகையில் மின்காந்த அலைகள்.

எடுத்துகாட்டு: optical fiber = ஒளிநார்.

ஆனால் ஒளிநாரின் ஊடாகச் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி நிறமாலைக்கு அப்பால் பட்டவை. அதை நினைவில் கொள்ளுங்கள்.

அகச் சிவப்புக் கதிர் எனும் Infra Red Rays என்பவை அலைநீளங்கள் கொண்டவை. அதாவது காணொளி மாதிரி அலைநீளங்கள் கொண்டவை. அதனால் தான் ஒளிநார் என்கிறோம்.

ஆக இங்கு காணொளி என்பதை visibile light எனும் பொருளில் பார்க்கிறோம். அதனால் தான் நிகழ்படம் (video) என்பதற்குப் பதிலாகக் காணொளி எனும் சொல்லைப் பயன்படுத்தி வந்தோம், புரியும் என்று நினைக்கிறேன்.

காண் எனும் (காட்சியும்); ஒலி எனும் (சத்தமும்) ஒரே சமயத்தில் இணைந்து வருவதால் காணொலி ஆகிறது.

காண் என்றால் பார்க்கும் அல்லது பார்ப்பது என்று பொருள். ஒளி என்றால் வெளிச்சம். ஆக காணொளி என்றால் வெளிச்சத்தை மட்டும் பார்ப்பதாகும். அதாவது ஊமையான ஒளி. அது சரியான சொல் ஆகாது.

காணொலி என்று சொல்லில் ஒளியும் வருகிறது. ஒலியும் வருகிறது. ஆக காணொலி என்பதே சரியான சொல். அந்தச் சொல்லை ஏற்பவர்கள் ஏற்கட்டும். ஏற்காதவர்கள் பழையதிலேயே இருக்கட்டும். அது அவர்களின் விருப்பம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காணொலி எனும் சொல் சரியான சொல் என ஏற்றுக் கொண்டு உள்ளன. தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிடும் பள்ளிப் பாடநூல்களில் காணொலி எனும் சொல்லைக் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். விக்கிப்பீடியாவும் காணொலி எனும் சொல்லையே பயன்படுத்துகிறது. நன்றி.

12 பிப்ரவரி 2019

சாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள்

சாலிகிராம் என்றால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் அம்மோனைட் ஓடுகள். இந்த ஓடுகள் எப்படி நேபாளத்திற்குப் போயின.
Image result for shaligram

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தது என்பதுதான் புவியியல் உண்மை.

(Shaligrams are Ammonoid fossils of the Devonian - Cretaceous period which existed from 400 to 66 million years ago. )

இந்தியக் கண்டத்தின் நில அடுக்கு மேல் நோக்கி நகர்ந்து ஆசிய நில அடுக்குடன் மோதியதால் இமயமலை உருவானது. இந்த நிலத் தகடுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செண்டி மீட்டர் முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்த உயிரினங்களின் எலும்புக் கூடுகளும் நேபாளப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இமயமலை அடிவாரத்தில் திமிங்கிலத்தின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image result for shaligram

இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் தனித்தனி நிலத் தகடுகள். இந்தியா மட்டும் தனி ஒரு தகட்டில் உட்கார்ந்து இருக்கிறது.

ஆசியத் தகட்டை இந்தியத் தகடுதான் முதலில் மோதுகிறது. அந்த மாதிரியான ஒரு மோதலில், ஓர் அழுத்தத்தில் உருவானதே இமயமலையாகும்.

உலகத்திலேயே உயரமான அந்த மலை இன்னும் உயர்ந்து கொண்டு போகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு சில அங்குலம் உயர்கிறது. இமயமலை உயர்வதற்கு, இந்திய, ஆசியத் தகடுகள் மோதிக் கொள்வதுதான் மூல காரணம்.

பூமியின் மேல்பகுதியில் உள்ள நில அடுக்குகளை 'டெக்டானிக் பிளேட்ஸ்' (Tectonic Plates) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

இந்த அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச் செல்லும் போது நில அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வைத் தான் நிலநடுக்கம் என்கிறோம்.

Image result for shaligram

மத்திய ஆசியாவில் அமைந்து இருப்பது யூரேசியன் டெக்டொனிக் பிளேட் (Eurasian Tectonic Plate) எனும் நிலத் தகடு. அதைக் கண்டத்தட்டு என்றும் சொல்லலாம்.

அதற்கு கீழ்ப் புறமாக இருப்பது இந்திய டெக்டொனிக் பிளேட் (Indian Tectonic Plate). இந்த இரண்டு தட்டுகளும் பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டே இருக்கின்றன. அந்த உரசலின் விளைவாகத் தான் இமயமலைத் தொடர் உருவானது.

சாலிகிராம் கடல்வாழ் உயிரினங்களில் அம்மோனைட் ஓடுகள் இந்த மாதிரி நிலத் தகடுகளின் நகர்வுகளினால் தான் 3500 கிலோ மீட்டர்கள் தாண்டி நேபாளத்திற்கு வந்து சேர்ந்தன.

09 பிப்ரவரி 2019

தமிழரை ஏமாற்றும் தமிழர்கள்

இன்று 09.02.2019 மாலை ஆறு மணி போல நடைப்பயிற்சிக்குப் போய் இருந்தேன். திரும்பும் போது ஒரு தள்ளுவண்டியில் ஒரு தமிழரின் மீ கோரேங் விற்பனை. ஒரு வாரமாகக் கடை போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே எனக்கு ஒரே ஒருநாள் அறிமுகம். ஒரு முறை வாங்கி இருக்கிறேன். ஓர் ஆள் சாப்பிடும் அளவிற்கு மீ கோரேங். ஒரு பாக்கெட்டின் விலை 5 ரிங்கிட்.

உண்மையான் விலையில் பார்த்தால் பொருட்களின் அடக்க விலை ஒன்றரை வெள்ளிக்கு மேல் தாண்டிப் போகாது.

இன்றைக்கு மாலையில் அவரைப் பார்த்தேன். ’நாலு வெள்ளிக்கு போடுங்க தம்பி’ என்றேன். உடனே அவர் ’நாலு வெள்ளிக்கு எல்லாம் இல்ல. கட்டுப்படி ஆகாது. அஞ்சு வெள்ளி’ என்றார்.

அதற்கு நான் ’என்னிடம் நாலு வெள்ளிதான் இப்ப இருக்கு. நாலு வெள்ளிக்கே போடுங்க தம்பி’ என்றேன்.

’நாலு வெள்ளிக்கு எல்லாம் முடியாதுங்க’ என்று கராராகச் சொல்லி விட்டார். ’

இல்ல தம்பி... நான் காசு எடுத்து வரல... நாலு வெள்ளிக்கே போடுங்க... ஒரு ஆள் சாப்பிடத் தானே’ என்றேன்.

அதற்கு அவர் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பேசியில் மூழ்கிவிட்டார். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவரும் தமிழர். நானும் தமிழர். அவருக்கு வயது 40-ஐ தாண்டிப் போகாது. நான் அவருக்கு ஓர் அப்பா வயதில் இருக்கிறேன்.

ஒரு வெள்ளியில் என்ன வந்திடப் போகிறது. கொஞ்சம் இரக்கம் காட்டி இருக்கலாமே. அட... வயதுக்கு மரியாதை வேண்டாங்க. ஒரு தமிழருக்கு ஒரு தமிழர் மரியாதை கொடுத்து இருக்கலாமே.

பொருளின் விலை ஐந்து வெள்ளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என் கையில் நான்கு வெள்ளி தானே இருக்கிறது. அந்த நான்கு வெள்ளிக்கே கொடுக்கலாமே. அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

எத்தனைப் பேருக்கு எவ்வளவோ கொடுத்து உதவி செய்து இருக்கிறேன். திரும்பிக் கேட்டதாக என் நினைவில் இல்லை. தானம் செய்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்த்தால் அது எங்கேயோ போய் நிற்கும். நடந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பக்கத்துச் சீனரின் மளிகைக் கடைக்குச் சென்றேன்.

ஒரு கிலோ மீ; ஐந்து முட்டைகள்; ஒரு பாக்கெட் மீன் உருண்டைகள்; கொஞ்சம் தாவ்கே; மூன்று பச்சை மிளகாய் விலை 5 ரிங்கிட் 20 சென். கையில் இருந்த நான்கு வெள்ளியைக் கொடுத்து மிச்சத்தை நாளைக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

கடையில் வாங்கிய பொருட்களைக் கொண்டு நான்கு முறை மீ கோரேங் பிரட்டிச் சாப்பிடலாம்.

என் மனதின் ஓரத்தில் ரொம்பவுமே வேதனை. ஒரு தமிழர் வியாபாரம் செய்கிறாரே... அவருக்கு ஆதரவு கொடுப்போமே எனும் ஒரு தமிழர் உணர்வில்தான் ஒரு தமிழரைத் தேடிப் போனேன். ஆனால் இப்படிப்பட்ட தமிழராக இருப்பார் என்று நினைக்கவே இல்லை.

இனிமேல் இந்த மாதிரி தமிழர்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்வதே புண்ணியம் என்று அப்போதே முடிவு செய்தேன். இவர் மட்டும் அல்ல.

இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். எங்கேயோ அத்தி பூத்தால் போல ஒரு சில நல்ல மனங்கள் இருக்கவே செய்கின்றன.

கடையில் போய் வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். அதுவே என் பணிவான அன்பான வேண்டுகோள்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்