31 ஜூலை 2021

இந்தோசீனா மகாராணியார்கள் ராஜலெட்சுமி ஜெயாதேவி

தமிழ் மலர் - 31.07.2021

பூனான் அரசு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டு மொத்த இந்தோசீனாவையும் ஆட்சி செய்த பழம்பெரும் பண்டைய அரசு. கம்போடியா; வியட்நாம்; லாவோஸ்; தாய்லாந்து; பர்மா; வட மலாயா; ஆகிய ஆறு நிலப் பரப்புகளையும் சம காலத்தில் கட்டிப் போட்டு ஆட்சி செய்த பெரிய ஓர் அரசு.

எப்பேர்ப்பட்ட அரசாக இருக்க வேண்டும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பூனான் அரசு ஒரு பல்லவத் தமிழர் அரசு. இந்து மதம் சார்ந்த அரசு. நினைவில் கொள்வோம். பூனான் அரசிற்கு மதிப்பு கொடுப்போம். மரியாதை செய்வோம்.

அந்த அரசை மாமன்னர்கள் மட்டும் ஆட்சி செய்யவில்லை. சில பல மகாராணியார்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

மகாராணியார் ஸ்ரீ மீரா,

மகாராணியார் சோமா,

மகாராணியார் ராஜலெட்சுமி,

மகாராணியார் ஜெயாதேவி,

மகாராணியார் சிசுவதி

எனும் அழகுப் பெயர்களில் அற்புதமான பெண்மணிகள். ஆச்சரியமாக இருக்கிறது.

இவர்களில் முதலாவதாக வருபவர் மகாராணியார் சோமா (Queen Soma). கெமர் மொழியில் நியாங் நியாக் (Neang Neak) என்று அழைக்கிறார்கள். இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 68 - 100. அதாவது 1950 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோசீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். கணவரின் பெயர் கவுந்தியா (Kaundinya I).

(Queen Soma was the ruler of the Kingdom of Funan and the first monarch of Cambodia.)

இந்தோனேசியாவில் தான் மகாராணியார்கள் ஆட்சி செய்தார்கள் என்றால் இந்தோசீனாவிலும் பெண்களின் ஆளுமைகள் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் உச்சம் பார்த்து இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் பெருமை இல்லை. ஆண்களுக்குப் பெருமையிலும் பெருமை. பெண்களுக்குப் பெருமை என்றால் அது ஆண்களுக்கும் பெருமை தானே.

பூவோடு சேர்ந்து நார் மணக்கிறது என்று சொல்ல வேண்டாம். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு ஒன்றாக நன்றாக மணக்கின்றன.

பூனான் அரசு, இந்தோசீனா மண்ணில் முதல் அரசு. இந்தோசீனா ஆளுமைகளில் முதன்மை அரசு. இந்தோசீனா கலாசாரங்களில் மூத்த அரசு. இந்தோசீனா நாடுகளில் முதிர்ந்த அரசு. அதுதான் புவி போற்றும் பூனான் அரசு. அதுவே இந்தோசீனாவில் பல்லவத் தமிழர்களின் தலையாய அரசு.

ஆனால் என்ன. பழைய அதே காம்போதி ராகம் தான். காலத்தின் கோலத்தினால் அந்தப் பேரரசு காணாமல் போய் விட்டது. கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடிய காலப் பிரளயத்தில் கரைந்து உடைந்து காணாமல் போய் விட்டது.

அரிச்சுவடி அடையாளங்கள் ஆங்காங்கே சின்னதாய்த் தெரிகின்றன. இருந்தாலும் பரவாயில்லை. முதல் மரியாதை செய்வோம். ஏன் என்றால் இந்த அரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர். பெயர் கவுந்தியா (Kaundinya). இவருக்கு உதவியாக இருந்தவர் அவரின் மனைவியார் சோமா மகாராணியார்.

பூனான் பெயரைப் பார்த்தால் சீனப் பெயர் மாதிரி இருக்கிறது. அப்புறம் எப்படி அதைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் என்று மலைக்க வேண்டாம். உண்மை அதுதான். பூனான் பேரரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் தான். தொடர்ந்து படியுங்கள்.

பூனான் பேரரசு 2100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் தோன்றிய ஒரு குட்டி அரசு. அப்படியே பல்கிப் பெருகி ஒரு பேரரசு ஆனது. இந்த அரசு தான் இந்தோசீனாவில் உருவான முதல் அரசு.

இந்த அரசு தோன்றுவதற்கு முன்பு மலாயா கிளாந்தான் மாநிலத்தில் பான் பான் (Pan Pan) எனும் ஓர் அரசு இருந்தது. இதுவும் ஒரு பல்லவர் அரசு தான். அந்தக் காலத்தில் வட மலாயா பகுதியில் இருந்த கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த அரசு. ஒரு சின்ன இடைச் செருகல்.

தென்கிழக்காசிய நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன. காலப் போக்கில் மற்ற மதங்களின் செல்வாக்கினால் அந்த மதம் அப்படியே சரிந்து போனது.

பூனான் அரசைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் பான் பான் அரசைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் பான் பான் அரசில் இருந்து போன கவுந்தியா என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்தார். இவருக்கு கவுந்தி முனிவர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. சரி.

முன்பு காலத்தில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

Pan Pan is a lost small Hindu Kingdom believed to have existed around the 3rd to 7th Century CE believed to have been located on the east coast of the Malay peninsula somewhere in Kelantan or Terengganu.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயா தீபகற்பத்தில் ஒரு பல்லவர் அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம் என்றுகூட சொல்லலாம். நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. பொய் சொல்லவும் தெரியாது.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன பல்லவர்களின் சுவடுகளை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் பல்லவ அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

பூனான் என்பதைச் சீன மொழியில் பூனோங் (Bunong) என்கிறார்கள். கெமர் மொழியில் நோகோர் புனோம் (Nokor Phnom). தாய்லாந்து மொழியில் பூனான் (Funan). வியட்நாமிய மொழியில் பூ நாம் (Phu Nam). மலை இராச்சியம் என்று பொருள்.

இருப்பினும் இந்திய மயமாக்கப்பட்ட அந்தப் பண்டைய பேரரசிற்கு புவியியலாளர்கள் வழங்கிய பெயர் பூனான். இதன் தலைநகரம் வியாதாபுரம் (Vyadhapura). ஆட்சிக் காலம் கி.பி. 50/68 – கி.பி. 550/627).

பயன்பாட்டு மொழிகள்: பழைய கெமர் மொழி; சமஸ்கிருதம்.

பயன்பாட்டு மதங்கள்: இந்து மதம்; பௌத்த மதம்; ஆன்ம வாதம் (Animism).

இதற்குப் பின்னர் வந்த அரசு: சென்லா அரசு (Chenla).

பூனான் பேரரசு, கி.மு. 100 ஆண்டுகளில், இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் (Mekong Delta); சீனா; இந்தோனேசியா; இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டு இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தப் பேரரசு இந்து மதத்தைத் தழுவி ஆட்சி செய்து வந்தது. இந்தப் பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்து உச்சம் பார்த்தன. பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.

4-ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 586-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டது. இரத்னபானு; இரத்னசிம்மா எனும் இரு சகோதரப் புத்த பிக்குகள் அதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய கம்போடிய அரசர் ஜெயவர்மன் விருப்பப் பட்டார். அதற்காக நாகசேனா எனும் இந்தியப் புத்த பிக்குவைச் சீனாவுக்கு அனுப்பி வைத்தார். ஆக அந்த வகையில் 450-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் பூனானில் பௌத்தம் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பூனான் பேரரசில் இந்து மதம் தலையாய மதமாக இருந்து இருந்தாலும், பௌத்த மதம் இரண்டாம் நிலை மதமாகவே இருந்து உள்ளது. கம்போடியா லாவோஸ் நாடுகளில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள் உறுதி படுத்துகின்றன.

அது மட்டும் அல்ல. பூனான் பேரரசு மன்னர்கள் சீனப் பேரரசருக்குப் பவளத்தில் வரையப்பட்ட சிவன் படங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.

கி.பி. 590-ஆம் ஆண்டில் கம்போடியாவைப் பவவர்மன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். தன் தம்பி சித்திரசேனன் என்பவரின் உதவியால் பூனான் அரசர் யுத்ரவர்மனைத் தோற்கடித்தார். இன்னும் ஒரு தகவல்.

கம்போடியாவை ஆட்சி செய்த பவவர்மன்; சித்திரசேனன் ஆகியோரின் கல்வெட்டுக்களும்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துப் பல்லவ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பலவகைகளில் ஒத்துப் போகின்றன.

பவவர்மன் ஒரு சிவபக்தர். அதனால் கம்போடியா நாட்டில் நான்கு சிவ ஆலயங்களைக் கட்டி இருக்கிறார். அது மட்டும் இல்லை. கம்போடியாவில் பல கோயில்களில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார். இந்து மதப் பாடல்களைப் பாடும் படி கட்டளை போட்டு இருக்கிறார்.

கம்போடியாவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பவவர்மனுக்குப் பின் வந்த அவருடைய தம்பி மகேந்திர வர்மனும் ஒரு சிவ பக்தர். சரி. பூனான் வரலாற்றுக்கு வருவோம்.

1942-ஆம் ஆண்டு தென் வியட்நாம், மீகோங் வடிநிலத்தில் ஒக்கியோ (Oc Eo) எனும் தொல்பொருள் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட காலத்தில் இந்த ஒக்கியோ நகரம் ஒரு பரபரப்பான துறைமுகமாக இருந்து இருக்கலாம்.

பூனான் பேரரசில் தென்னிந்திய பல்லவ வம்சாவழியினரின் தாக்கங்கள் அதிகமாகவே இருந்து உள்ளன. வியட்நாமில் கிடைக்கப் பெற்ற பல்லவ கிரந்த கல்வெட்டுகள் மூலமாக அந்தப் பல்லவத் தாக்கங்கள் உறுதி செய்யப் படுகின்றன.

பூனான் பேரரசு என்பது பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்படும் சுவர்ணபூமியாகக் கூட இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்; புனோம் பென் (Phnom Penh) அரச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வோங் சோதேரா (Dr Vong Sotheara) என்பவர், ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். கி.பி 633-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் “கெமர் பேரரசின் சுவர்ணபூமியின் பெரிய மன்னர் ஈசனவர்மன் (King Isanavarman). இவர் மகிமையும் துணிச்சலும் நிறைந்தவர். அவர் ராஜாதி ராஜன் ஆவார்.

அவர் சுவர்ணபூமியை எல்லையாகக் கொண்ட கடல் வரை ஆட்சி செய்கிறார். அண்டை நாடுகளில் உள்ள மன்னர்கள் இவரின் கட்டளைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. அந்த ஆவணங்களில் முக்கியமானது லியாங் புத்தகம் (Book of Liang).

இந்த லியாங் புத்தகம் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. பூனான் அஸ்திவாரக் கதையை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது. "கவுந்தியா என்பவர் ஜியா எனும் தென் நாட்டில் இருந்து வந்தார். (ஜியா என்பது பான் பான் பேரரசைக் குறிக்கிறது)

அவர் ஒரு கனவு கண்டார். காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வில் இருப்பதைக் கண்டார். அந்த வில்லை எடுத்துக் கொண்டு அவர் ஒரு கப்பலில் ஏறினார். வெகு தூரம் பயணம் செய்து ஓர் இடத்தில் தரை இறங்கினார். அது ஊர் பெயர் தெரியாத ஒரு நாடு.

அந்த நாட்டை சோமா (Queen Soma) எனும் மகாராணியார் ஆட்சி செய்து வந்தார். அந்த ராணியார் கப்பலையும் கவுந்தியாவையும் கைப்பற்ற விரும்பினார். முடியவில்லை. ஒரு போராட்டம்.

இருந்தாலும் கவுந்தியா போராடி வெற்றிப் பெற்றார். பின்னர் சோமா மகாராணியாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் சோமா மகாராணியார் அந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை கவுந்தியாவிடம் வழங்கினார் என்று லியாங் புத்தகம் கூறுகிறது. கவுந்தியாவின் மற்ற பெயர்கள்: கொண்டன்னா (Kondanna); கொண்டின்யா (Kondinya). பூனான் பேரரசை 18 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர்:

1. சோமா மகாராணியார் (Queen Soma)

2. கவுந்தியா (Kaundinya I)

3. ஸ்ரீ மீரா (Srei Meara)

4. சந்தனா (Candana) 

5. ஸ்ரீ இந்திரவர்மன் (Srei Indravarman)

6. கவுந்தியா ஜெயவர்மன் (Kaundinya Jayavarman)

7. ருத்ரவர்மன் (Rudravarman)

8. ராஜலெட்சுமி (Queen Kambuja-raja Lakshmi)

9. ஜெயாதேவி (Queen Jayadevi)

10. சிசுவதி (Sisowath Chamchakrapong)

இந்தப் பெண்ணரசிகளைப் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் தெளிவாக விளக்குகிறேன். இந்தப் பல்லவப் பெண்களின் ஆளுமை வரலாற்றில் இருந்து கரைந்து போய் இருக்கலாம். ஆனால் வரலாற்றில் இருந்து என்றும் மறையப் போவது இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.07.2021


சான்றுகள்:

1. Queen Soma was the ruler of the Kingdom of Funan and widely claimed as the first monarch of Cambodia - https://en.wikipedia.org/wiki/Queen_Soma

2. Jeldres, Julio A. (2 April 1999). "Cambodia's Monarchy: The search for the successor". The Phnom Penh Post.

3. The Constitution of the Kingdom of Cambodia" (PDF). World Intellectual Property Organization.

4. https://en.wikipedia.org/wiki/History_of_Laos#Funan_kingdom

5. Kaundinya, Preah Thaong, and the "Nagi Soma": Some Aspects of a Cambodian Legend



30 ஜூலை 2021

மலேசிய ஒப்பந்த மருத்துவர்களின் மனவேதனைகள்

தமிழ் மலர் - 29.07.2021

டாக்டர் கலைச்செல்வி. மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். சிறந்த மருத்துவ மாணவி. வெள்ளி விருது பெற்றவர். மலேசிய அரசாங்கத்தின் மூன்றாண்டுக் காலக் கட்டாயச் சேவையை முடித்தவர். தற்சமயம் பேராக் மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.


சில வேளைகளில் 48 மணி நேரம் தூங்கமால், ஐந்து கிலோ கவச அணிகளுடன் கோவிட் நோயாளிகளுடன் இடைவிடா போராட்டங்கள். இன்றும் தொடர்கின்றன.

தலையில் இருந்து உடல் முழுவதும் மூடிய நிலை. வியர்வையால் முகம் முழுக்கவும் ஈரமாகிக் கசிந்த நிலை. சுவாசிக்கும் காற்றால் முகக் கண்ணாடி மங்கலாகிய நிலை. நோயாளியைச் சரியாகப் பார்க்க முடியாத நிலை. களைப்பு, சோர்வு, அசதி, உடல் தளர்வு, மன உளைச்சல்.

இதில் கடந்த ஈராண்டுகளாக கோவிட் தாக்கத்தினால் நிலைமை மிக மோசம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பரபரப்பு. ஓடினார் ஓடினார். அர்ப்பணிப்பின் எல்லைக்கே ஓடினார்.

கடைசியில் ஓடி ஆடி ஓய்ந்து, ஒடிந்து போய் நிற்கிறார். உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கிப் போய் நிற்கிறார். இத்தனைக்கும் அவர் ஓர் ஒப்பந்தக் கால மருத்துவர்.

சேவை செய்யுங்கள். தியாகம் செய்யுங்கள். மருத்துவப் புனிதத்தைக் காப்பாற்றுங்கள் என்று அரசியல்வாதிகள் ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை மருந்துக்கும் நினைத்துப் பார்ப்பது இல்லை. மறந்து விடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் சிலருக்கு அவர்களின் சுயநல மகிழ்ச்சி மட்டுமே மிக மிக முக்கியம் என நினைக்கிறார்கள் போலும். என்ன நினைக்கிறார்கள்... உண்மையே அதுதான். தங்களின் குடும்ப மகிழ்ச்சி. தங்களின் சொந்த பந்த மகிழ்ச்சி. தங்களின் ஐந்தாம்படை ஜால்ராக்கள் மகிழ்ச்சி.

மக்களாவது மண்ணாங்கட்டியாவது. எக்கேடு கெட்டால் என்ன. வெளிநாட்டு அரசியல்வாதிகளைத் தான் சொல்கிறேன். நம்ப நாட்டு அரசியல்வாதிகள் புடம் போட்ட தங்கங்கள். குறை சொல்ல மனசு வருமா? சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும். அப்புறம் இன்னும் ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி.


நாலைந்து பெண்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு டுரியான் பழம் சாப்பிடுவது. நீச்சல் குளத்தில் தொப்பையைக் காட்டுவது. மகிழ்ச்சியான செய்தி தானே.

அப்புறம் ஒலிம்பிக் பார்க்க ஜப்பானுக்குப் போவது. பிள்ளைகளைப் படிக்க வைக்க ஐஸ்லாந்து போவது. செம்மறியாட்டுக் கூட்டத்தில் கண்ணாமூச்சி விளையாட மியூஸிலாந்து போவது; அதைப் படம் பிடித்து பேஸ்புக்கில் போடுவது. அப்புறம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொள்வது. தேவையா?

இவர்களையும் தாண்டிய நிலையில் எப்படி நாலு பெண்களைக் கல்யாணம் பண்ணுவது; எப்படி அவர்களுக்கு லோலாக்கு மாட்டுவது; எப்படி 25 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள்வது; எப்படி ஆராரோ ஆராரோ நீ யாரோ நான் யாரோ பாடுவது. உலக மகா ஆராய்ச்சிகள்.

நல்லவேளை. நோபல் பரிசை உருவாக்கிய அல்பிரட் நோபல் இப்போது இல்லை. இருந்து இருந்தால் தூக்குப் போடாமல் செத்துப் போய் இருப்பார். வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.


டாக்டர் கலைச்செல்வியைப் போல ஏறக்குறைய 30 ஆயிரம் மருத்துவர்கள் ஒப்பந்தக் கால மருத்துவர்களாக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் தமிழர்; மலாய்க்காரர்; சீனர்; சீக்கியர்; பாக்கிஸ்தானியர் எனும் பேதம் எதுவும் இல்லை. எல்லா இனங்களைச் சார்ந்த ஒப்பந்த மருத்துவர்களுமே பாதிப்பு.

நிரந்தர மருத்துவர்களைப் போல இவர்களுக்கு படிச்செலவு குறைவு. ஊதிய உயர்வு இல்லை. காப்புறுதி இல்லை. கடனுதவி இல்லை. மேல்படிப்பிற்கான நிதியுதவி இல்லை. பெண் மருத்துவர்களுக்கு மகப்பேறு விடுமுறை இல்லை. பதவி உயர்வு இல்லை. இப்படி எக்கச்சக்கமான இல்லைகள்.

சொந்தப் பணத்தில் கார் வாங்க வேண்டும். சொந்தப் பணத்தில் வீடு வாங்க வேண்டும். இவர்களின் நிலைமை பரிதாப நிலையைத் தாண்டி எங்கேயோ போய் கதவைத் தட்டுகிறது.

இந்த நேரத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி நினைவிற்கு வருகிறார். மன்னிக்கவும். ரோசாப்பூ ரோசம்மா. வயிற்றெரிச்சலில் வார்த்தைகளும் விவரம் தெரியாமல் விழுகின்றன. ஒரு தடவை சிகை அலங்காரத்திற்கு ஆயிரம் வெள்ளி கொடுத்தாராம். அடடடா... மக்களின் வியர்வை வரிப் பணத்தில் என்னே பெருமை. 


மலேசியாவில் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. மலேசியாவில் மட்டும் அல்ல. உலக அளவில் பேசப்படும் பிரச்சினையாகவும் மாறி வருகிறது.

’டைம்ஸ்’ தாளிகை; ‘வார்ல் ஸ்டிரீட் ஜார்னல்’ நாளிதழ்; ஆகியவை செய்தி வெளியிடும் அளவிற்குக் கவனத்தை ஈர்த்து உள்ளது.

அது என்ன ஒப்பந்த மருத்துவர்கள்; அவர்களுக்கு என்னதான் பிரச்சினை என பொதுமக்கள் பலரும் கேட்கத் தொடங்கி விட்டார்கள். மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு வேண்டும் என்றால் பழகிப் போன தகவலாக இருக்கலாம்.

ஆனால் சாமானிய மக்களுக்குக் சற்றே குழப்பமான தகவல். உண்மையிலேயே என்னதான் நடக்கிறது என்று ஆழமாய்த் தெரியாத தகவலாக இருக்கலாம். 


காலம் காலமாக வீடு கட்டுவதிலும், தோட்டம் போடுவதிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனும் சொல் வாசகம் வந்து போவதைப் பலரும் பார்த்து இருக்கலாம். கேட்டு இருக்கலாம்.

எண்ணெய்ப் பனை; ரப்பர் உற்பத்தி; கட்டுமானம்; போன்ற தொழில் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மற்ற மற்ற தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று ஒரு பகுதியினர் உள்ளார்கள்.

இருப்பினும் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களில்கூட ஒப்பந்தக் கால மருத்துவர்கள் இருக்கிறார்களா எனும் கேள்வி வரலாம். சரி. என்ன ஏது என்று பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரே வார்த்தையில் சொல்கிறேன். அண்மைய பத்தாண்டு காலத்தில் புதிதாகப் படித்து வந்த மலேசிய மருத்துவர்கள் அதிகமாகி விட்டனர். 

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களாக நிரந்தரமாக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதுதான் முதல் சிக்கல்.

முந்தைய காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை. அதனால் படித்து வந்தவர்களை எல்லாம் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அண்மைய காலத்தில் நிறைய மருத்துவர்கள் படித்து விட்டு ஆயிரக் கணக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

சமாளிப்பதற்கு அரசாங்கம் தடுமாறுகிறது. ஏற்றுக் கொள்வோம். ஆனால் வேறு கோணங்களிலும் பார்க்க வேண்டி உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்தது. 2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிதாகப் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் ஒப்பந்த மருத்துவர்களாகப் பணியில் அமர்த்தப் படுவார்கள் எனும் நடவடிக்கை. 


மருத்துவ மாணவர்கள் மூன்றாண்டு கட்டாயச் சேவைக்குப் பின்னர், தற்காலிகப் பணியாளர் தகுதிக்குள் சேர்க்கப் படுகிறார்கள். தற்காலிகப் பணி என்பதுதான் ஒப்பந்தப் பணி. ஒப்பந்த மருத்துவர்கள் பணி.

ஒப்பந்த மருத்துவர்கள் என்பவர்களை, அரசாங்கம் எந்த நேரத்திலும் பதவியில் இருந்து நீக்கலாம். தேவைப் பட்டால் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். முன்பு ஈராண்டு கட்டாயச் சேவை. இப்போது மூன்றாண்டு கட்டாயச் சேவை.

ஒப்பந்த மருத்துவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பற்றி நியாயமான வகையில் நாணயமாகக் கோரிக்கை வைத்தார்கள். அரசாங்கம் பிடித்தப் பிடியாக நின்றது.

நாளைக்குப் பார்க்கலாம். நாளைய தினம் கழித்துப் பார்க்கலாம் என்று நாட்கள்தான் தேய்ந்து போயின. ஒப்பந்த மருத்துவர்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.

கடைசியில் 2021 ஜுலை 26-ஆம் தேதி ’ஹர்தால்’ எனும் பெயரில் மலேசிய ஒப்பந்த மருத்துவர்கள், நேரடியாகவே அமைதிக் கண்டனத்தில் இறங்கி விட்டார்கள். கண்டன வேலை நிறுத்தம்.

அவர்களின் கொத்துக்குறி #HartalDoktorKontrak. நாடு முழுமைக்கும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் சேவை செய்து வரும் ஒப்பந்த மருத்துவர்கள், ஒரு மணிநேரம் கண்டன வேலை நிறுத்தம் செய்தார்கள்.


'ஹர்தால்' என்பது ஒரு குஜராத்தி சொல். பொதுமக்களின் எதிர்ப்பு அல்லது வேலைநிறுத்தம் என்பதற்கான சொல். இதை வழிநடத்திச் செல்லும் குழுவினர் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் 'ஒப்பந்த' மருத்துவர்களின் நிலையை 'நிரந்தரம்' என்று மாற்றவும் (Change 'contract' doctors status to 'permanent') என்று பதிவு செய்து உள்ளார்கள்.

சில பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சினையின் உச்சம். அதுவே மலேசியப் பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்களின் மன உளைச்சலின் உச்சம்.

தங்களின் மூத்த முன்னோடிகளை விட சரிசமம் இல்லாத வேலைவாய்ப்பு விதிகள். இவைதான் அவர்களை அந்த முடிவிற்குக் கொண்டு வந்தது.

உலகில் பல ஆயிரம் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் எவர் வேண்டும் என்றாலும் சேர்ந்து படிக்கலாம். பட்டம் பெறலாம். ஆனாலும் மலேசியாவைப் பொருத்த வரையில் ஒரு தீர்க்கமான விதிமுறையைப் பின்பற்றுகிறார்கள். 


மலேசிய அரசாங்கம் சில மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதி அனுமதி வழங்கி உள்ளது. அந்தத் ’தகுதி அனுமதி’ கொண்ட மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்களை மட்டுமே மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.
அப்படிப்பட்டவர்கள் மட்டுமே மலேசியாவில் மருத்துவர்களாகச் சேவை செய்ய முடியும். அதுவும் ஒரு விதிமுறை.

மருத்துவக் கல்லூரிகளில் இருந்து படித்துப் பட்டம் பெற்று வரும் மருத்துவ மாணவர்கள், மலேசியாவில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் மூன்று ஆண்டு காலத்திற்கு ஹவுஸ்மேன்ஷிப் (housemanship) பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப் படுகிறார்கள்.

மருத்துவர் ஒப்பந்த முறை என்பது தொடக்கத்தில் புதிதாக வரும் மருத்துவப் பட்டதாரிகளைச் சமாளிப்பதற்கான ஓர் இடைவெளியாக இருந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான புதிய மருத்துவர்கள்.

அதுவும் ஆயிரக் கணக்கில் வரத் தொடங்கி விட்டார்கள். அவர்களை உள்வாங்கி அரசாங்கச் சேவையில் இணைப்பதற்கு அரசாங்கம் தடுமாறுகிறது. இதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


தவிர ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஒரு நீண்டகாலக் கொள்கை என்று எதுவும் முறையாகத் திட்டமிடப் படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி வந்தன. ஆளாளுக்கு ஒரு திட்டம்.

அதனால் ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பதவிகளை வழங்காமல், அதற்குப் பதிலாக ஒப்பந்தங்களைத்தான் நீட்டித்து வந்தார்கள்.

2016-ஆம் ஆண்டிற்குப் பின்னர் புதிய முறை அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து 23,077 ஒப்பந்த மருத்துவர்கள் அரசு சேவைகளில் ஈர்க்கப் பட்டனர். அவர்களில் 3.47% அல்லது 789 நபர்களுக்கு மட்டுமே நிரந்தரப் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அரசாங்கத்திற்கு என்ன தடுமாற்றம் என்றும் தெரியவில்லை. என்றைக்கு நாடு சுதந்திரம் அடைந்ததோ அன்றைக்கே பேராண்மைச் சுரண்டல் வேலைகள் தொடங்கி விட்டன.

மண்ணின் வேந்தர்கள்; மலைக்காட்டுப் புதல்வர்கள்; மார்கண்டேயப் புத்திரர்கள் என்று சொல்லி தடுக்கி விழுகின்ற இடங்களில் எல்லாம் சலுகைகள். ஊட்டி ஊட்டி வளர்த்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

நாட்டின் செல்வங்கள் மில்லியன், பில்லியன் கணக்கில் மிரட்டல் சுரண்டல்களில் போய் விட்டன. இன்னும் ஓயவில்லை. தடி எடுத்தவர் எல்லாம் கோடீஸ்வரர்கள்.

அந்தச் சுரண்டல்களைத் தடுத்து நிறுத்தி 1 % மீட்டு எடுத்தாலே போதும். அந்த 30 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் முழுக்கவும் சம்பளம் கொடுக்கலாம். விடுங்கள்.

ஓநாய்கள் அழுவதை நிறுத்தப் போவதும் இல்லை. கிழச் சிங்கங்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றிச் சுற்றி வருவது நிற்கப் போவதும் இல்லை. நாட்டு மக்கள் வாங்கி வந்த வரம். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் மருத்துவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்:

நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கும் மருத்துவர்களை விட ஒப்பந்த மருத்துவர்கள் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர்.

ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிபுணத்துவம் பெறும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொதுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்பிற்கு நிரந்தரமான அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

தவிர விடுப்பு எடுத்து மேல்படிப்பு படிக்க ஒப்பந்த மருத்துவர்களுக்கு உரிமை இல்லை. அதனால் ஒப்பந்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள்.

மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றால் சொந்தப் பணத்தைப் போட வேண்டும். இதனால் பலர் தனியார் துறையைத் தேடிப் போகின்றனர். அல்லது வெளிநாட்டிற்குச் செல்கின்றனர்.

அடுத்து ஐந்தாண்டு பயிற்சி சேவைக்குப் பிறகு அவர்கள் வேலை இழக்கும் வாய்ப்பை எதிர் கொள்கின்றனர்.

பொது மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை மூன்று முக்கிய பிரிவுகளில் 35,216 மருத்துவ அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

யூ.டி. 41 பிரிவைச் சேர்ந்த 23,077 மருத்துவ அதிகாரிகள்.

யூ.ஜி. 41 பிரிவைச் சேர்ந்த 5,000 பல் மருத்துவ அதிகாரிகள்.

யூ.எப். 41 பிரிவைச் சேர்ந்த 7,139 மருந்தக அதிகாரிகள்.

நாடு முழுவதும் உள்ள 23,000 ஒப்பந்த மருத்துவர்கள் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் மறியலில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பால், பொது மருத்துவமனைகளில், நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

இந்த நிலைமை, ஏற்கனவே அதிகப் பணிச் சுமையை எதிர்கொண்ட மருத்துவ ஊழியர்களுக்குக் கடும் அழுத்தம் அளித்து வருவதால், அவர்களில் சிலர் தங்கள் பணியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளனர்.

அவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி, குறைந்தது 15 மருத்துவர்களாவது கடந்த இரண்டு வாரங்களில் தங்கள் சேவையை நிறுத்தி விட்டனர்.

கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்குப் பின்னால், விரக்தி மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகக் காரணம் கூறப் படுகிறது.

அரசாங்கச் செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக நிரந்தரப் பதவிகளில் பணி அமர்த்தப்படவில்லை என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் மக்கள் தொகை கூடுவதால் மருத்துவர்கள் எப்போதும் தேவைப் படுகிறார்கள்.

2021 ஜூலை 12-ம் தேதி, தேசியக் கூட்டணி அரசாங்கம் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. இருக்கிற நாற்காலியையே தற்காக்க நேரம் இல்லை. இதில் இன்னோர் இடைஞ்சல்.

முன்பு காலத்தில் ஒரு தெருவில் ஓர் இந்தியர் மருத்துவர், ஒரு சீனர் மருத்துவர், ஒரு மலாய்க்காரர் மருத்துவர் கிளினிக் வைத்து இருந்தால் முதல் தேடல் இந்தியர் மருத்துவருக்கு என்று கேள்விப்பட்டது உண்டு. அந்த அளவிற்கு நம்பிக்கை இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

இனவாதம்... மதவாதம்... எனும் பழைய வாதங்களில் இப்போது கொரோனா வாதம். இதில் இப்போது புதிதாக ஒப்பந்த மருத்துவர்களின் பிடிவாதம்.

அந்த வாதங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய கட்டத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கும் குத்தகை மருத்துவர்களை அரசு ஊழியர்களாக நிரந்தரமாக்குவதே சிறப்பு.

அதுவே இந்தக் கட்டத்தில் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நல்ல எண்ணத்தை உருவாக்கும்.

மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை அல்ல. புண்ணியம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.07.2021








 

27 ஜூலை 2021

கித்தா மரத்தின் நிர்வாண உண்மைகள் - 2

கித்தா காட்டுல காசும் பணமும் கொத்து கொத்தா காய்ச்சு தொங்கும்... மேட்டு மரத்தில ஒத்தை ஒத்தை வெள்ளியா தொங்கும்... பக்கத்து மரத்துல அஞ்சு அஞ்சு வெள்ளியா தொங்கும்... பாசா மரத்துல பத்து பத்து வெள்ளியா தொங்கும்... அத்தாப்பு காட்டு ஓரமா தான் பணம் கொட்டுற மரம் ரொம்பவா தெரியும்... தேடிப் புடிக்கிறது தான் உங்க சொக்கா புடிக்கிற சோலி...


பணம் காய்ச்சுற மரம் எல்லாம் மலாயா காட்டுல மட்டும் தான் இருக்கு... உலகத்துல வேற எங்கேயும் இல்ல... என்ன ஒன்னு... அந்த காசை எல்லாம் பொறுக்கி எடுக்கிறது தான் அம்புட்டு லெச்ச புடிச்ச வேலை...

சீனக்காரங்க சோம்பேறி பசங்க... பாசா காடுனா பயந்து ஓடுவானுங்க... மீனு சுட்டுத் திங்கிறவங்களுக்கு உடம்பு வளையாது...  நீங்க வாங்க... வருசம் பூரா காசை பாக்கலாம்... சொல்லி வச்சு ஒரே வருசத்துல... ஒரே வருசம் தான்... அப்புறம் கையில ரெண்டு காசோட திரும்பி வந்துடலாம்...

இந்த மாதிரி பேச்சை நம்பி மலாயாவுக்கு வந்தவர்கள் கடைசியில் வாளிகளைத் தலையில் தூக்கிச் சுமந்த கதை... ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத சோகக் கதை... படத்தைப் பாருங்கள்...

1900-ஆம் ஆண்டுகளில் நம்ப தமிழ்ப் பெண்கள்... அப்பிராணி ஊமைகளாய் வரிசை பிடித்து நிற்கிறார்கள்... நம் இனத்தை எப்படி எல்லாம் வேதனைப் படுத்தி இருக்கிறார்கள்... கடைசியில் கெலிங் எனும் கண்ராவிச் சொல்லில் கண்கலங்கித் தவிக்கிறோம். காயங்களின் வடுக்களில் வேதனையின் விசும்பல்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.07.2021


26 ஜூலை 2021

கிழக்கு மலேசியா சபாவில் பூமிபுத்ரா தமிழர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர், வியாபார நோக்கமாகவும், அரசு தொழில் சார்பாகவும் சபாவிற்குச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் சபாவிலேயே வாழ்ந்து, பின்னர் நிரந்தரவாசிகளாகி விட்டனர்.

மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள் சபா நிரந்தரவாசிகள் ஆவதில் பிரச்னை இல்லை. ஈராண்டுகள் கழித்து அவர்களுக்கு சபா குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி வழங்கப் படுகிறது.

Wong Pei Wen (32), S Vicneshvaran (34)
Source: https://themalaysianreserve.com/2020/08/18/marriage-of-cultures-can-spawn-unity/


ஒருவர் மலேசியக் குடிமகனாக இருந்தாலும், சபா, சரவாக் மாநிலங்களில் நிரந்தரமாகத் தங்குவதற்கு, மாநில அரசின் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.

அந்த வகையில், தமிழர்கள் பலர் கடசான், மூருட், பாஜாவ் பெண்களைத் திருமணம் செய்து வாழ்கின்றனர். இந்தப் பெண்களில் பலர் கிறிஸ்துவப் பெண்களாகும்.

ஒரு தமிழருக்கும் ஒரு கடசான் அல்லது பாஜாவ் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை, பூமிபுத்ரா தகுதியைப் பெறுகிறது. மலேசிய அரசியலமைப்பின் 160A (6)(a) சட்டப்பிரிவின் கீழ் அந்த விதி சொல்லப் படுகிறது.

(If one of the parents is a Muslim Malay or indigenous native of Sabah as stated in Article 160A (6)(a) Federal Constitution of Malaysia; thus his child is considered as a Bumiputra.)

R Balachandran,(61) his wife Lena Damon (53) and their granddaughter
Source: https://www.freemalaysiatoday.com/category/nation/2018/11/06/sharing-deepavali-joy-with-multiracial-family-friends-in-sabah/

தமிழர்கள் சிலர் சீனர் அல்லது கடசான் பாரம்பரியங்களுடன் ஐக்கியமாகி விட்டனர். அவர்களில் சிலர் பாஜாவ் பெண்களை மணந்து, இஸ்லாம் சமயத்திற்கு மாறி உள்ளனர்.

சபாவில் 12,600 இந்தியர்கள் உள்ளனர். தமிழர்கள் 3,200. இவர்களின் நலன்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் பெயர் சபா இந்தியர் சங்கம். இவர்களுக்கு ம.இ.கா. அரசியல் கட்சி உள்ளது. அதன் தலைவராக டாக்டர் வி. ஜோதி என்பவர் இருக்கிறார்.

1960-களில் மலேசியக் குடியேற்ற வாரியம், தீபகற்ப மலேசியாவில் இருந்து இந்தியத் தொழிலாளர்களைச் சபா ரப்பர் தோட்டங்களுக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழர்களின் எண்ணிக்கையும் கூடியது. 


இருப்பினும் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் பலர் திரும்பிச் சென்று விட்டனர். குறைவான எண்ணிகையில் மட்டுமே சிலர் தங்கினர். அப்படி தங்கியவர்கள் பின் நாட்களில் சபா பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் பூமிபுத்ரா தகுதியைப் பெற்று உள்ளனர்.

தீபாவளி, வைகாசி, தைப்பூசம் போன்ற திருவிழாக்களை இன்று வரை கொண்டாடுகின்றனர். வேறு சமயங்களுக்கு மாறிய தமிழர்கள் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, நோன்புப் பெருநாள் போன்ற திருநாட்களைக் கொண்டாடுகின்றனர்.

சபாவில் வாழும் தமிழர்களுக்காகத் தனிப்பட்ட இந்திய வானொலி நிகழ்ச்சிகள் இல்லை. தீபகற்ப மலேசியாவின் அலைவரிசகளையும் அவர்களால் அங்கே கேட்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு தனி ஓர் இந்திய ஒலிபரப்பு தேவை என்று சபா அரசாங்கத்திடம் தமிழர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

தமிழர்கள் எங்கே சென்றாலும் அங்கே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்த வகையில் சபாவிலும் ஒரு தனித்துவமான தமிழர்ச் சமுதாயம் உருவாக்கப்பட்டு உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.07.2021

சான்றுகள்:

1. One Indian man, who calls himself as Huang Poh Lo, proclaims in an advertising banner that he is The World’s Only Indian Chinese Calligrapher. - http://www.nst.com.my/life-times/showbiz/sunday-gaiety-1.178092

2. Ethnic Indians may be few in Sabah, but Deepavali is a 1Malaysia celebration. - http://insightsabah.gov.my/article/read/648/

3. The Sabah Indian Association

4. If one of the parents is a Muslim Malay or indigenous native of Sabah as stated in Article 160A (6)(a) Federal Constitution of Malaysia; thus child is considered as a Bumiputra. -

Notes: Wong Pei Wen (32), S Vicneshvaran (34)

Wong said she first met Vicneshvaran, who works as a finance executive, in 2007 when they were studying at Universiti Tenaga Nasional.

When they decided to get married four years ago, her family, especially her mother, was among the first to oppose.

“Having lived in Dungun (Terengganu), my family hardly mingled with Indians, so they had this idea that all Indian men drink and beat their wives.

“At one point, they thought Vic (Vicneshvaran) had put a charm on me and made me go toa temple to get rid of it. I was given a potion to drink and Vic told me to drink it daily as he wanted to see if it worked…obviously, it didn’t work and I ended up marrying him!” she said, laughing.

Wong’s parents boycotted their wedding, but they relented and visited her and her husband after the birth of their daughter two years ago.

Wong said she and her husband respect each other’s traditions and even have their own Chinese New Year reunion dinner, as well as celebrate the Mid-Autumn Festival and Winter Solstice festivals together.

“I remember my first Ponggal (Tamil harvest festival) with Vic…I attempted to cook the traditional Indian sweetened rice, but it came out like porridge instead,” she said. es-can-spawn-unity/

Notes: R Balachandran, Lena Damon

Born and raised in Kuala Lumpur, businessman R Balachandran, 57, moved to Sabah almost 30 years ago for work.

Life was lonely at first as Balachandran, or Bala as he prefers to be known, tried to adapt to his new surroundings and make new friends. It was even worse during festive celebrations like Deepavali.

But things changed after he married a local Kadazan woman. With five children and a granddaughter, Bala now revels in the celebration of Deepavali.

The family’s single-storey yellow brick house in a village in Penampang, about 7km from here, is decked out with colourful decorations and a canvas tent awaits the arrival of guests.

“I have never gone back to my hometown for Deepavali since I got married. The first few years celebrating Deepavali here were quite terrible. I was lonely because at the time, Deepavali was not a public holiday and I felt left out.

“However, when Yong Teck Lee became chief minister, he declared it a public holiday in Sabah and celebrating the occasion became a lot merrier, not just for me but for all Indians here. That’s a good thing he did for our community,” Bala said.

Bala said he now looks forward to spending time with friends and family on Deepavali day.

“My wife is a great cook. She can cook Indian dishes very well, much better than I can. So she will be the one cooking for our guests.

“We are expecting about 50 guests, mostly her family and also some close friends. Mainly Kadazans and Chinese,” he said, adding that last year, they hosted about 300 guests.

His wife, Lena Damon, 49, said she learned to cook her husband’s favourite dishes from her mother-in-law and some of his relatives.

“We went to India some years ago and stayed there for 10 days. That’s where I learned how to cook most of the dishes like mutton curry, chicken… luckily, my husband is not a vegetarian,” she said with a chuckle.

Bala’s wife is a Catholic and so are four of their children. Only his eldest son is a Hindu like he is.

Despite the different religions, the family gets along just fine as both sides respect each other’s beliefs.

In fact, Bala’s altar and Lena’s Catholic home altar are set up next to each other, separated only by a thin wall.

“We don’t discuss religion. This is Sabah, so that is not a problem. Even those who have converted to other religions still go to the temple. I think because the temple is where you meet others in the community,” he said.



25 ஜூலை 2021

ரந்தாவ் லின்சம் தோட்டத் தமிழர்கள் கண்ணீர் வரலாறு - 1870

தமிழ் மலர் - 25.07.2021

1870-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் தோட்டம் (Linsum Estate); மலாயாவிலேயே மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் வரலாறு படைத்து உள்ளது.

முதன்முதலில் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்தார்கள். லாபகரமாக அமையவில்லை. அதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பரின் பக்கம் மாற்றிப் பார்த்தார்கள்.


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ஆண்டுகளைக் கவனியுங்கள்.

காபி ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு மரவெள்ளி, சர்க்கரைவல்லி உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன. அந்தத் தோட்டங்களில் மலாயா தமிழர்கள் தான் வேலை செய்து இருக்கிறார்கள்.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.


மலாயாவைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதிச் சென்ற வரலாற்று நூல்களில் ரந்தாவ், லிங்கி, லுக்குட், போர்டிக்சன் பற்றி அதிகமாகவே எழுதி இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய படகுகள்; கப்பல்கள்; சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்குச் செல்லும் போது லிங்கி, லுக்குட், போர்டிக்சன் படகுத் துறைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

லிங்கி முகத்துவாரம் அதிக அலைகள் இல்லாத இடமாக இருந்து உள்ளது. பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; அதன் பின்னர் வந்த டீசல் கப்பல்கள்; அணைவதற்கு லிங்கி லுக்குட் பகுதிகள் பாதுகாப்பான படகுத் துறைகளாக விளங்கி உள்ளன. ஒரு செருகல்.


முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டதும் திரவ ரப்பர் பாலையும்; உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் படம் எடுத்து இருக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து அந்தப் படங்களை மீட்டு எடுத்து உள்ளேன். 


அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் மலாயா தமிழர்களைப் பற்றிய அரிய வரலாற்றுப் படங்கள் வைரலாகி வருவதைப் பார்த்து இருக்கலாம். அவற்றில் பெரும்பாலான படங்களை அடியேன் மீட்டு எடுத்த படங்கள். பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் நமக்கு மேலும் ஒரு படம் கிடைத்து உள்ளது. அபூர்வமான வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம், நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்கள் மரவெள்ளிக் கிழங்குகள். காலவெளி: 1870 - 1900. அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது.

முதுகு எலும்பு முறிந்த தமிழர்கள்; இடுப்பு எலும்பு நகர்ந்த தமிழர்கள்; கழுத்து எலும்பு தகர்ந்த தமிழர்கள்; கறுப்புத் தோல் கிழிந்த தமிழர்கள். இடுப்போடு ஒட்டிய வேட்டி. மேலே சட்டை இல்லை. சப்பாத்து இல்லாத வெறும் கால்கள்.

வேட்டிக் கோவணங்களில் ஓட்டை விழுந்து; விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் நடந்து; முக்கால் பீக்கள் மூட்டைகளைச் சுமக்கும் காட்சி. 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

நல்ல வேளை. இவர்களை வைத்துப் படம் பிடித்து; காணொலி தயாரித்து; மித்ராவிடம் பேரம் பேசி; பணம் சம்பாதிக்கும் தமிழ்ப் பெருமகனார்கள் அப்போது இல்லாமல் போய் விட்டார்கள்.

அஞ்சு கிலோ அரிசி. இரண்டு கிலோ சீனி. ஒரு கிலோ உப்பு. ஒரு போத்தல் சமையல் எண்ணெய். பத்து பாக்கெட் மெகி மீ. அம்புட்டுத்தான். பத்து வீட்டுக்குக் கொடுத்து; இருபது படங்கள் எடுத்து; முப்பது வாட்ஸ் அப் குழுக்களில் போட்டு; பெருமை பேசும் கொரோனா காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போதாத காலம். விடுங்கள்.

ஆனால் உண்மையாக வெளிச்சம் விளம்பரம் இல்லாமல்; அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல்; சொந்தக் காசைப் போட்டு உதவி செய்யும் நல்ல நல்ல மனிதர்களும் நம்முடன் பயணிக்கின்றார்கள். புடம் போட்ட தங்கங்கள். இவர்களுக்கு முதல் மரியாதை. 


வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் ’என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள்’ என்று செல்பி எடுத்துப் போடும் முகக் கவரிகளுக்கு இரண்டாம் மரியாதை. மன்னிக்கவும்.

1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்திற்கு வருகிறேன். காபி மரவெள்ளி மூட்டைகளைப் படகுகள் மூலமாகப் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து நிற்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடி செய்வதும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர். அதற்கு முன்னர் 1840-ஆம் ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு 2000 பேர் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் முன்பாக 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இந்த உண்மையைச் சொல்வதற்கு பிரான்சிஸ் லைட் இப்போது இல்லை. ஆழ்ந்த உறக்கம். தட்டி எழுப்ப வேண்டும். அப்படியே அவர் எழுந்து வந்தாலும் அவரைப் பாதி வழியிலேயே மறித்து மண்டையைக் கழுவி விடுவார்கள்.

உலகின் மூத்த குடிமக்களின் மூத்தத் தலைவர் என்று புகழாரம் சூட்டி, அங்கேயே வரலாற்றை மாற்றி விடுவார்கள். உலகில் பல இடங்களில் நடக்கும் கோல்மால் குளறுபடிகளைத் தான் சொல்ல வருகிறேன். சிலருக்கு கோப தாபங்கள் வரலாம். பொறுப்பு நான் அல்ல. பிரான்சிஸ் லைட்.

1870-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. இருப்பினும் 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் பக்கத்து பக்கத்து தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் முதன்மையான  விளைச்சல்.

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள் தான் மலாயா தமிழர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன அந்த மலாயா தமிழர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டுக் கொண்டு; சொகுசாக வாழ்ந்து கொண்டு; வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாதத்தின் ஓர் இடைச் செருகல். மனம் கலங்குகிறது. வேதனை.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் இனியும் ஏனோ தானோ போக்குகள் வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்கு இப்போது மிக முக்கியம் காசு பணம் அல்ல. மிக முக்கியம் சொத்து சுகம் அல்ல. ஒன்றே ஒன்றுதான். ஒற்றுமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.07.2021

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10
London. Date: 1898. Publisher: Swan Sonnenschein

3. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

4. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

5. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: நன்றி வாழ்த்துகள் ஐயா. அற்புதம். நல்ல ஆழமான கருத்துக் கொண்ட பதிவு.

"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கு ஏற்ப மிக மிக நேர்மையாக உழைத்த நம் முன்னோர்களுக்கு இன்றைய ஆட்சி கொடுக்கும் பட்டம் "வந்தேறிகள்"...

இந்த மண்ணில் உரமாகக் கிடக்கும் நமது மூதாதையர்களின் மதிக்கத் தெரியாத மூடர்களிடையே சிக்கித் தவிக்கிறோம். வாய்த்ததும் சரியில்லை. நம்மை அனாதையாகத் தவிக்க விட்டு விட்டான்.

வந்தவரும் அதி சுயநலப் போக்கில் நம்மை ஆட்டிப் படைக்கிறான். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

கரு. ராஜா: கட்டுரையைப் படித்தேன். அருமை ஐயா. நீங்கள் மட்டும் இல்லை என்றால் ஏப்பம் விட்டுவிடுவார்கள். நீங்கள் புள்ளி விவரத்தோடு சொல்வதற்கு நன்றி ஐயா. பாராட்டுக்கள்.

வெங்கடேசன்: சோகமான தகவல்






 

24 ஜூலை 2021

1870-ஆம் ஆண்டு ரந்தாவ் லுக்குட் தமிழர்கள் கண்ணீர் வரலாறு

இடுப்போடு இழுத்துக் கட்டிய வேட்டி. அந்த வேட்டிக் கோவணத்தில் ஒட்டுப் போட்ட ஓட்டைகள். உடம்போடு ஒட்டிக் கொண்ட ஒரு பொட்டுத்துணி. சப்பாத்து இல்லாமல் ஒடிந்து விழும் ஒல்லிக் கால்கள். தலையில் முக்கால் பீக்கள் மரவெள்ளி மூட்டை. விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் மூட்டைகளைச் சுமக்கும் கண்ணீர்க் காட்சி.

அவர்கள்தான் முதுகு எலும்பு முறிந்த லுக்குட் தமிழர்கள். இடுப்பு எலும்பு நகர்ந்த லிங்கி தமிழர்கள். கழுத்து எலும்பு தகர்ந்த லின்சம் தமிழர்கள். கறுப்புத் தோல் கிழிந்த ரந்தாவ் தமிழர்கள்.
 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து வரலாற்றுப் படங்களை மீட்டு எடுத்து வருகிறோம். 


அந்த வகையில் அண்மையில் நமக்கு ஒரு படம் கிடைத்து உள்ளது. ஒரு வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டப் படகு துறை. காலவெளி: 1870 - 1900. பொருள்கள்: மரவெள்ளிக் கிழங்குகள்.

அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது. இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்பாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட வரலாற்றுத் தோரணங்கள்.

அந்தப் படம் 1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில், படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு அந்த மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன இவர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டு; சொகுசாக வாழ்ந்து விட்டு வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாத மதவாதத்தின்  இடைச் செருகல். வேதனை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.07.2021

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10 London. Date: 1898. Publisher: Swan Sonnenschein


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு அந்த வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

[1#]. In 1890 the most successful estates proved to be those where access was easy, in Selangor, areas around Klang and Kuala Lumpur, in Negeri Sembilan areas near the coastal village of Lukut, now Port Dickson, and in Perak in the area of Matang and Lower Perak.

[1#]. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் பிரதான  விளைச்சல். [#1]

[#1]. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் லுக்குட்,  லிங்கி காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். [#2]

[#2]. Formerly the company was known as the Linggi Coffee Company, and Liberian coffee was grown on the first properties acquired, but it was decided in 1900 to substitute the more profitable product, Para rubber.

1905-ஆம் ஆண்டு தான் அந்தக் குழுமத்தின் காபி, கிழங்கு, வாழைத் தோட்டங்கள் அனைத்தும் ரப்பர் தோட்டங்களாக மாறின.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

[3#]. Liberian coffee flourished in Malay States’ relatively low-altitude coffee farms from the 1870s through to the late 1890s.

[3#]. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

1900-ஆம் ஆண்டில் லுக்குட் நிறுவனத்தின் ரப்பர்  தோட்டங்கள்:

1. லுகுட் (Lukut)

2. மார்ஜோரி (Marjorie)

3. லிங்கி (Linggi)

4. உலு சவா (Ulu Sawah)

5. காஞ்சோங் (Kanchong)

இந்தத் தோட்டங்க சிரம்பான் நகரில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்து இருந்தன. லுக்குட் லிங்கி பகுதியில் இப்போது இருக்கும் தோட்டங்கள்:

Erin Estate,

Ladang Hew Mun,

Ladang Lukut,

Ladang Bonawe,

Ladang Siliau North,

Ladang Siliau,

Ladang Lukut,

Ladang Sungai Salak,

Ladang Parit Gila,

Ladang Sua Betong,

Ladang Bukit Belco,

Ladang Bukit Untong,

Ladang Port Dickson Lukut,

Ladang Port Dickson Lukut,

Ladang Bradwall,

Ladang Ranston,

Ladang Leigh,

Ladang Eng Aun,

Ladang Linggi Berhad,

Ladang Wilmor,

Ladang Bukit Palong,

Ladang New Ruthken,

Ladang Sua Betong,

Ladang Arunasalam,

Ladang Shiaw You,

Ladang Sungai Salak,

Ladang Perhentian Siput

மேலே காணப்படும் படம் 1900-ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகள் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.



 

22 ஜூலை 2021

கொரோனா இறப்பு: ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு. உண்மையா?

தமிழ் மலர்  - 19.07.2021

கொரோனா கொரோனா என்று உலகமே கொதித்துப் போய் நிற்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் கொரோனா வைரஸ். இந்தப் பக்கம் பார்த்தால் டெல்டா வைரஸ். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் தென்னாபிரிக்கா வைரஸ். ஆக எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா கோவிட் கொக்கரிப்புகள்கள்.

அலைகள் ஓய்வது இல்லை. மலைகள் சாய்வது இல்லை. அது அந்தக் காலத்துப் பொன்மொழி. கொரோனா ஓய்வதும் இல்லை. கோவிட் சாய்வதும் இல்லை. இது இந்தக் காலத்துப் பொன்மொழி. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அலைகள் ஆழமான கடலில் ஆர்ப்பரிக்கின்றன. கொரோனா மனித உடலில் கொக்கரிக்கின்றன. அலைகளைக் கடல் விடுவது இல்லை. அதைப் போல கொரோனா மனிதர்களை விடுவதாகவும் இல்லை.

எப்படி அலைகள் ஓய்வது இல்லையோ; அதே போல கொரோனாவும் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கப் போவதும் இல்லை.

இருந்தாலும் கொரோனாவின் ஆட்டம் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும். அதுவும் விரைவில் வரும். எதிர்பார்ப்போம்.

கொரோனாவினால் ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட குறைவு என்றும்; சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும்; புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் எனும் உண்மை தெரிய வருகிறது.

உயிர் வாழும் முறை என்று வரும் போது பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத் தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.

கறுப்பு மரணம் என அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu); சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’ தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன.

இதில் ஸ்பானிஷ் (Spanish Flu) காய்ச்சலுக்கு ஸ்பானிஷ் ஈ (Spanish Fly) என்று பெயர் வைத்த உலக மகா அமைச்சர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் சுகாதார அமைச்சருக்கு இதுகூட தெரியவில்லை என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போதைய உலக மக்களில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110 வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே தட்டுத் தடுமாறி 100 வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

இந்தப் பக்கம் இல்லாத கூத்துகள் பண்ணிக் கொண்டு இருக்கும், ஒரு மெகா மனிதரையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மனித மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் (evolutionary growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு இருக்கின்றன. பரிணாமத்தைப் பொறுத்த வரையில் அது லேசான மாற்றம்.

பரிணாமம் என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம். உயிருடன் வாழும் ஓர் உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம்.

அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது. அது தான் பரிணாமம்.

உயிரினங்களில் பல கோடிக் கோடி இனங்கள் உள்ளன. அந்த உயிரினங்களில் படிப்படியாக, மரபு வழியாக, அடுத்த பரம்பரைக்கு மாற்றங்கள் கொண்டு போகப் படுகின்றன. கடத்தப் படுகின்றன என்று சொன்னால் சரியாக இருக்கும்.

காலம் செல்லச் செல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து போக, உயிரினங்களின் மரபணுக்களில் வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள் மாறுபட்டுக் கொண்டே போகும். அது தான் பரிணாமம்.

தனி ஓர் உயிர்ப் பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பரிணாமம் அல்ல. தனி ஓர் உயிர் தன்னம் தனியாகப் பரிணாமம் அடைவது இல்லை. ஓர் உயிரினத்தைச் சார்ந்த ஒரு கூட்டமே பரிணாமம் அடையும்.

ஆண்களின் மரபணுக்கள் ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்குக் கொஞ்சம் கூடுதலாக உயரத்தையும் கொடுக்கிறது. இது பல இலட்சம் பல கோடி ஆண்டுகளாக நடந்த பரிணாமம்.

பரிணாமம் பற்றி மேலும் கொஞ்சம் கூடுதலான தகவல். மிக மிக எளிதாக விளக்கி இருக்கிறேன்.  பரிணாமங்களில் இரு வகை உள்ளன.

1. நுண் ப‌ரிணாமம் (microevolution)

2. பெரும் ப‌ரிணாம‌ம் (macroevolution)

நுண் ப‌ரிணாமம் என்பது ஒரே ஓர் உயிரின‌க் கூட்ட‌த்திற்குள் (within a particular species) நடக்கும் மரபியல் மாற்ற‌ங்க‌ள். பெரும் ப‌ரிணாம‌ம் என்பது ஓர் உயிரின‌க் கூட்ட‌த்தையும் தாண்டி நிலையில் மற்ற உயிரினங்களிலும் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ள் ஏற்படுத்துவது ஆகும் (above the level of species).

அதாவது ஓர் இனத்தில் இருந்து இன்னோர் இனத்தில் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ளை உருவாக்குவது ஆகும்.

பொதுவாகவே ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் பெண்களைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்; கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள். சவாலே சமாளி என்று சமாளிக்கும் தன்மையில் ரொம்பவுமே சவால்கள்.

குகைகளில் வாழும் காலத்தில் குடும்பத்தைக் கொடிய விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அங்கே ஒரு போராட்டம். உணவு தேடிப் போகும் போது காட்டு விலங்குகளிடம் இருந்து உயிர் தப்பிக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

எதிரிக் குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களைத் தற்காக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை, ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை தூக்கி இருக்கிறது.

அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே கூடுதலான வலிமை மாற்றங்கள். ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான பலம் வந்ததற்கு அதுதான் காரணம். புரியும் என்று நினைக்கிறேன். சரி.

தலைப்பிற்கு வருவோம். கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். இந்தக் கட்டத்தில் ஆண்கள் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்களை ஆராதனை செய்யும் ஆண்கள் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

முதல் காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன் செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக மனத் துணிச்சல் கொண்டவர்கள்.

ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.

இரண்டாவது காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம். பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும் ஒரு பொதுவான கருத்து.

மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம் (Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம் (more aggressive immune system).

அதனால் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் பெண்களிடம் அதிகமாக உள்ளது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி பெண்களுக்கு அதிகம். அடடடா… நான் ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று ஆண்கள் சிலர் யோசிக்கலாம். டூ லேட்.

ஆனாலும் பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம். இது பெண்களுக்கு ஒரு பின்னடைவு.

ஆக பெண்களே எச்சரிக்கை. அட்ரா சக்கை நாங்க ஆண்களை மிஞ்சிட்டோம் என்று சொல்லி ரொம்பவும் பெருமை வேண்டாமே.

முடக்கு வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis}; கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன் சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள் பெண்களுக்கு அதிகம்.

ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு.

பொதுவாகவே உலகம் எங்கும் உள்ள ஆண்கள், பெண்களை விட குறுகிய காலமே உயிர் வாழ்கிறார்கள். அது ஏன் என்று பொதுமக்களிடம் கேட்கப் பட்டது. அதற்குப் பலவாறான பதில்கள்.

ஆண்கள் பெரிய பெரிய ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள். ஆண்கள் குடிக்கிறார்கள். அதிகமாகப் புகைக்கிறார்கள்.

ஆனால் அது ஒரு பெரிய காரணம் அல்ல. புதிய ஆராய்ச்சிகளில் ஓர் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். குரோமோசோம் தொடர்புடைய காரணங்கள்.

குரோமோசோம் (Chromosome) என்றால் என்ன? மனித உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் மையத்திலும் ஒரு கரு உள்ளது. அந்தக் கருவுக்குள் இருக்கும் மரபணு கட்டமைப்பு தான் குரோமோசோம்கள்.

கண் நிறம்; இரத்த வகை; உடல் அமைப்பு; ஒருவரின் பண்பு; சிந்திக்கும் திறன் போன்றவற்றைத் தீர்மானிக்கும் மகா தன்மைகள் மரபணுக்களிடம் உள்ளன. அந்த மரபணுக்களின் ஒருகூறு தான் குரோமோசோம்கள்.

மனிதரின் செல் 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டு இயங்குகிறது. அதில் ஒரு ஜோடிக்கு எக்ஸ் - ஒய் (X - Y) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் தான் ஒரு நபர் ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கின்றன. இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் ஆணிடம் மட்டுமே உள்ளன. பெண்களிடம் இல்லை.

ஒரு பெண்ணுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள். இரண்டுமே எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்கள். அதே சமயத்தில் ஓர் ஆணுக்கு வெவேறான இரு குரோமோசோம்கள் உள்ளன.

ஒரு குரோமோசோம்: பெயர் எக்ஸ் (X). மற்றும் ஒரு குரோமோசோம். அதன் பெயர் ஒய் Y. இரண்டையும் சேர்த்து எக்ஸ் - ஒய் (X - Y) குரோமோசோம்கள் என்று சொல்வார்கள்.

சுருங்கச் சொன்னால் ஆண்களின் மரபு அணுக்களில் ஒரே வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosome (XY). பெண்களின் மரபு அணுக்களில் இரு வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosomes (XX). சரிங்களா.

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்த பின்னர் அந்த ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கரு முட்டையில் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கிறது. அதே ஆணின் ஒய் குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கிறது.

ஆக ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் ஓர் ஆணின் குரோமோசோம்கள் தான் முடிவு செய்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.

அந்த ஆய்வின் மூலமாக ஆண்களைவிட பெண்கள் 15-இல் இருந்து 25 ஆண்டுகளாகக் கூடுதலாக வாழ முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பெண்களின் ஆயுட்காலம் கூடுதலாக இருப்பதற்கு மேலும் ஒரு காரணம். பெரும்பாலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இருந்து இந்தக் காலம் வரை வீட்டிற்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டி விடுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஐம்பது ஆண்டு காலமாகத் தானே பெண்கள் வெளியே வந்து ஆண்களுக்கு நிகராகப் பெரிய பெரிய பதவிகளை வகிக்கிறார்கள்.

முன்பு காலத்தில் பெண்களை ஆண்கள் அடக்கி வைத்து இருந்தார்கள். ஆணாதிக்கம் என்று சொல்வார்களே அதுதான். பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களின் உடலை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களின் காலா காலத்து இயல்பு.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய் வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.

இந்த மாதிரியான காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின் உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.

ஏன் என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனத்திற்கு இழப்பு என்றால் அது பெண் இனத்தையும் பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை. அப்போது 100%. இப்போது ஒரு கேள்விக்குறி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2021