28 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 11

தமிழ்மலர் - 28.11.2018 - புதன்கிழமை

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலை என்பது அந்தக் கலைகளில் இல்லாத ஒரு கலை. 1எம்.டி.பி. நிறுவனத்திற்குத் தண்ணீர் காட்டி நனையாமலேயே குளிப்பாட்டிய கலை. 1எம்.டி.பி. நிறுவனத்தின் அரிய பெரிய தில்லுமுல்லுச் சாதனைகளைப் பார்த்த பின்னர் நரிக் குளியல் எனும் ஒரு கலையை உருவாக்க வேண்டும் என்பது என் பணிவான கருத்து. 




அறுபத்து ஐந்தாவது கலையாக அந்தக் கலைக்குத் தகுதி உயர்த்திச் சிறப்புச் செய்ய வேண்டும். காலம் எல்லாம் மலேசிய மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டும் என்று அடியேன் சிபாரிசு செய்கிறேன்.

பட்டப் பகலில் கொள்ளை அடிப்பது ஒரு கலை. அர்த்த ராத்திரியில் கொள்ளை அடிப்பதும் ஒரு கலை. இருந்தாலும் மலேசியாவின் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே 1எம்.டி.பி. நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது. 

கொல்லைப் புறமாக வந்து கொள்ளை அடிப்பது தான் பிரதான நோக்கமாகவும் இருந்து இருக்கிறது. அப்படித்தான் ஒருவர் சொல்கிறார்.

அந்த நிறுவனத்திற்கு ஆரத்தி எடுத்த பெரும் புள்ளிகள் எல்லாம் எவ்வளவு சீக்கிரத்தில் கோடீஸ்வரர்கள் ஆக முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும்; கொள்ளை அடித்தப் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய் செட்டில் ஆக வேண்டும். அது தான் 1எம்.டி.பி.யின் இலக்கு.




அப்படி ஓர் அலிபாபா மாஸ்டர் பிளேன் போட்டுத் தான் 1எம்.டி.பி.யின் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். அதற்குத் தலைமை வகித்தவர் மலேசியாவின் முன்னாள் நம்பர் ஓன் அதிகாரி. உதவியாக இருந்தவர் தீராத விளையாட்டு பிள்ளை ஜோலோ. அந்தப் பரங்கி மூஞ்சி ஜோலோவுக்குப் பக்கவாத்தியம் வாசித்தவர் ரோச்சாப்பூ ரோசம்மா.

அதுதான் அந்தத் திட்டத்தை உருவாக்கியவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. அதுதான் நடந்தும் இருக்கிறது. பெட்ரோ சவூதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சேவியர் அண்டிரு ஜுஸ்தோ சொல்கிறார்.

JOINT VENTURE - PetroSaudi International Ltd (PetroSaudi) and 1Malaysia Development Berhad (1MDB)

ஜாயிண்ட் வெஞ்சர் என்றால் கூட்டுத் திட்டம். இரு தரப்பினர் இணைந்து ஒரு முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குவது. அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. கிடைக்கின்ற பணத்தை இரு தரப்பும் பகிர்ந்து கொள்வது. இது எல்லா நாடுகளிலும் நடக்கிறது. அனைத்துலகச் சட்டத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது.

ஆனால் 1எம்.டி.பி. நிறுவனத்தில் அப்படி எல்லாம் இல்லை. கிடைத்த பணத்தை எல்லாம் சுருட்டி சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார்கள். அதுதான் அவர்கள் செய்த ஜாயிண்ட் வெஞ்சர்.




கூட்டுத் திட்டம் என்று சொல்லிக் கூட்டுக் களவாணித் திட்டத்தை அரங்கேற்றம் செய்து இருக்கிறார்கள். முதலீடு செய்த பணத்தைப் போட்ட இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு நகர்த்துவது; அங்கே இருந்து அல்வாத் துண்டுகளாகப் பிரித்துக் கொள்வது. 

அப்படியே அந்தப் பணத்தை வேறொரு வங்கியில் போடுவது; அங்கே இருந்து இன்னும் ஒரு வங்கிக்கு மாற்றுவது; அந்த வங்கியில் இருந்து சொந்தக் கணக்கில் போட்டுக் கொள்வது. அப்படியே மாற்றி மாறிக் கடைசியில் மலேசிய மக்களை எல்லாம் எமாந்த சோணகிரிகளாக மாற்றி இருக்கிறார்கள்.

மலேசியாவின் அப்பாவி மக்களும்; அன்றாடக் காய்ச்சிகளும் அந்தத் திட்டத்தினால் ரொம்பவுமே பாதிக்கப் பட்டுப் போனார்கள். அந்தக் கூட்டுச் சதித் திட்டதினால் ஏற்பட்ட கடனையும் அந்தக் கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டியையும் 2039-ஆம் ஆண்டு வரை மலேசிய மக்கள் கட்ட வேண்டும்.

அதாவது இன்னும் இருபது ஆண்டுகளுக்கு மலேசிய மக்கள் உழைத்து உழைத்து அந்தக் கடனைக் கட்ட வேண்டும். இன்றைக்குப் பிறந்த குழந்தை; அது வளர்ந்து படித்து ஓட்டுப் போடும் வயது வரும் வரையில் 1எம்.டி.பி. கடனை அடைக்க வேண்டும்.

இப்போது வாழும் அப்பா அம்மாக்கள் போய் விடுவார்கள். அரசியல்வாதிகள் போய் விடுவார்கள். ஆனால் மாட்டிக் கொண்டது இன்றைய இளைஞர்கள். பள்ளிக்கூடம் போகும் பால் வடியும் முகங்கள். 

 

இவர்கள் தான் அந்தக் கடனைக் கட்ட வேண்டும். பணத்தைக் கொள்ளை அடித்தவர்களும் போய் விடுவார்கள். ஆனால் கொள்ளை அடித்த பணத்தின் வாரிசுகளாகக் கொள்ளைக் கும்பலின் வாரிசுகள் இருப்பார்கள்.

மலேசிய மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மலேசிய மக்களுக்கே திரும்பி வந்து கிடைக்க வேண்டும். அந்தப் பணத்தை வரி கட்டியவர்களின் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும். 

சேவியர் அண்டிரு ஜுஸ்தோ என்பவர் ஒரு சுவிஷ் நாட்டுக்காரர். மலேசியாவின் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே 1எம்.டி.பி. நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது என்று ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்.

அந்த உண்மையை எந்த நீதிமன்றத்திலும் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்கிறார். 1எம்.டி.பி. நிறுவனத்தின் ரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டவர். அதனால் தாய்லாந்து சிறையில் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.

1எம்.டி.பி. பிரச்சினையில் ஜுஸ்தோ மிக முக்கியமான வி.ஐ.பி. இவர் தான் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் ஆசிரியை கிளேர் ரியூகாசல் பிரவுன் என்பவருக்கு 1எம்.டி.பி. ரகசியங்களைச் சொன்னவர். 

 

ஜுஸ்தோ தான் நஜிப் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் பணம் போடப் பட்ட இரகசியத்தைக் கசிய விட்டவர். ஜுஸ்தோ இல்லை என்றால் 1எம்.டி.பி.யின் திருகுதாளங்கள் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்காது.

ஆனால் அந்த விசயத்தைப் பெரிது படுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டியது சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம். இன்றைய காலக் கட்டத்தில் 1எம்.டி.பி. முறைகேடுகள் பலரால் பகிரங்கமாகப் பேசப் படுகின்றன. எழுதப் படுகின்றன. 

ஆனால் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். அதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஜுஸ்தோவும்  கிளேர் ரியூகாசல் பிரவுனும் இல்லாமல் இருந்து இருந்தால் 1எம்.டி.பி. விவகாரம் இந்த அளவிற்குப் பெரிதாக தெரிய வந்து இருக்காது. ஆர்டிக் பனித் துருவத்தில் காணாமல் போன பனிக்கரடி மாதிரி காணாமல் போய் இருக்கும். பனிச்சுவடு இல்லாமல் கரைந்து போய் இருக்கும்.

பெட்ரோ சவூதி நிறுவனத்தில் சேவியர் அண்டிரு ஜுஸ்தோ ஓர் உயர்நிலை அதிகாரியாக வேலை செய்தவர். கணினித் தொழில்நுட்பத் துறையில் வல்லுநர். பெட்ரோ சவூதி நிறுவனத்தின் கணினித் தொழில்நுட்பத் துறையைக் கண்காணிக்கும் பொறுப்பு இவரிடம் வழங்கப் பட்டது.

அரேபிய வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஒரு குட்டி நாடு. தலைநகரம் அபு தாபி. இதை ஐக்கிய அரபு அமீரகம் என்றும் அழைப்பார்கள். இந்த நாட்டில் பெட்ரோ சவூதி எனும் முதலீட்டு நிறுவனம் இயங்கி வந்தது. 




மலேசியாவின் 1எம்.டி.பி. நிறுவனம் அபு தாபியில் இருந்த அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்தது. அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் பெட்ரோ சவூதி.

1எம்.டி.பி. நிறுவனத்தின் பெட்ரோ சவூதியின் உறவுகள் ஆறே மாதத்தில் ஒரு முடிவிற்கு வந்தன. அதாவது ஒப்பந்தம் முறிந்து போனது. அந்த ஆறு மாதத்திற்குள் பற்பல குளறுபடிகள். அதற்குக் காரணமாக இருந்தவர் ஜோக்கர் ஜோலோ.

பெட்ரோ சவூதியில் முதலீடு செய்யப்பட்ட பணமும்; அதன் மூலம் கிடைத்த வருமானமும் முறைப்படி மலேசியாவுக்கு வந்து இருக்க வேண்டும். அல்லது 1எம்.டி.பி. நிறுவனம் வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 




இந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி சேவியர் அண்டிரு ஜுஸ்தோவைப் பேட்டி கண்டது. அந்தப் பேட்டியில் அவர் சொன்னார். 1எம்.டி.பி. நிறுவனத்திற்கும் பெட்ரோ சவூதி நிறுவனத்திற்கும் 2009 செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது பெட்ரோ சவூதி நிறுவனம் பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இன்றைக்கு நாளைக்கோ என்று ஊசலாடிக் கொண்டு இருந்த நிறுவனம்.

தாரேக் ஒபாயிட் என்பவர் உருவாக்கிய நிறுவனம். ஜுஸ்தோவும் தாரேக் ஒபாயிட்டும் நண்பர்கள். பெட்ரோ சவூதிக்கு சொத்து இருந்தது என்றால் ஒரே ஒரு சொத்துதான் இருந்தது. அதனுடைய பெயர் தான் அதனுடைய சொத்து.

சவூதி என்கிற பெயர் சவூதி அரசாங்கத்தைக் குறிப்பிடும் சொல்லாக இருந்தது. சவூதி அரேபியா அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள். 




அதுதான் இல்லை. பெயர் தான் சவூதி. மற்றபடி அது ஒரு தனியார் நிறுவனம் பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. அது தான் பெட்ரோ சவூதிக்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட்.

பெட்ரோ சவூதி நிறுவனம் 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். 2009-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்தின் பணம் பெட்ரோ சவூதிக்குப் போகும் வரையில் பெட்ரோ சவூதி ஓர் அன்னக் காவடி நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும்.

But from 2006 until the 1MDB money went into PetroSaudi account, it was almost a non-existence company.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரம் ஜெனிவா. ஜுஸ்தோ ஓர் அறை எடுத்து வேலை செய்து கொண்டு இருந்தார். அந்த அறையில் ஒரு மேசையைப் போட்டு; பெட்ரோ சவூதிக்கு ஓர் இடம் ஒதுக்கப் பட்டது. பகுதி நேரமாக ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த அறைக்கான வாடகையை ஜுஸ்தோ தான் கட்டி வந்தார். 




பெட்ரோ சவூதிக்கு தலைமையகம் சவூதி அரேபியா. அங்கேயும் ஒருவர் தான் வேலை செய்தார். வருகிற தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசுவது தான் அவருடைய வேலை. மற்றபடி கணக்கு வழக்கு எழுதுகிற வேலை எல்லாம் எதுவும் இல்லை. கணக்கு இருந்தால் தானே எழுதுவதற்கு!

1எம்.டி.பி. நிறுவனம் பணத்தை முதலீடு செய்த பின்னர் தான் பெட்ரோ சவூதி கம்பெனிக்கே உயிர் கிடைத்தது. 1எம்.டி.பி. நிறுவனத்துடன் பெட்ரோ சவூதி ஒப்பந்தம் செய்து கொண்ட போது ஜுஸ்தோ அங்கு அப்போது இல்லை. 

அந்தச் சமயத்தில் ஜுஸ்தோ தன் மனைவியுடன் தாய்லாந்தில் இருந்தார். அங்கே ஒரு தங்கும் விடுதியைக் கட்டுவதற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டு இருந்தார்.

ஒப்பந்தம் நடந்து முடிந்த சில மாதங்களில் பெட்ரோ சவூதியின் நிறுவனர் தாரேக் ஒபாயிட்டிடம் இருந்து ஜுஸ்தோவிற்கு ஓர் அழைப்பு வந்தது. லண்டனுக்குப் போய் அங்கே உள்ள பெட்ரோ சவூதி அலுவலகத்தில் வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டார். 

அப்போது 1எம்.டி.பி. நிறுவனத்தின் கோடிக் கணக்கான பணம் லண்டனில் புரண்டு கொண்டு இருந்தது. 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோ சவூதியில் ஜுஸ்தோ வேலைக்குச் சேர்ந்தார்.

பெட்ரோ சவூதியில் நூறு கோடி ரிங்கிட்டை 1எம்.டி.பி. நிறுவனம் முதலில் முதலீடு செய்தது. ஆனால் பெட்ரோ சவூதியால் முதலீடு செய்ய முடியவில்லை. இங்கே தான் ஆபீஸிற்கே வாடகை கட்ட முடியாமல் டிங்கிரி டிக்கான் அடிக்குதே. இந்த இலட்சணத்தில் கோடிக் கணக்கில் முதலீடுகள் செய்வதா? நடக்கிற காரியமா?

கூட்டுத் திட்டம் என்றால் என்ன. நான் கொஞ்சம் பணம் போடுகிறேன். நீயும் கொஞ்சம் போடு. அது தான் கூட்டுத் திட்டம். அது தான் கூட்டு ஒப்பந்தம். 

 

1எம்.டி.பி. நிறுவனம் நூறு கோடி ரிங்கிட்டை முதலீடு செய்ததும் அந்தப் பணத்தைத் துருக்மனிஸ்தான் நாட்டில் இருக்கும் எண்ணைய் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்று பெட்ரோ சவூதி அறிவித்தது. இதுதான் நரியை நனையாமல் குளிப்பாட்டுகிற கதை. நல்லா கேட்டுக்குங்கோ.

2019-ஆம் ஆண்டில் பிப்ரவரி வந்து போய் ஆகஸ்டு மாதமும் வந்தது. ஒரு எண்ணெய்க் கம்பெனியும் இல்லை. ஒரு ஒல்லிபிச்சான் கம்பெனியும் இல்லை. அட பெயருக்கு ஒரு அவட்டா கம்பெனிகூட இல்லைங்க. எல்லாமே ஜோலோ பின்னால் இருந்து சாவி கொடுத்த ஜிங்கு ஜிக்கான் ஆட்டங்கள்.

ஆனாலும் 1எம்.டி.பி. பணம் தொடர்ந்து முதலீடு செய்யப் பட்டு வந்தது. ஊர் பேர் ஆள் அட்ரஸ் இல்லாத முதலீடுகள். ஜோக்கர் ஜோலோ மலேசிய மக்களின் பணத்தை நன்றாகவே நனைத்துக் காயப் போட்டுக் கொண்டு இருந்தார். 

அந்தப் பணத்தில் மில்லியன் கணக்கில் எடுத்து பிளேபாய் ஆட்டங்களைத் தொடங்கினார். அமெரிக்கக் குறத்தி கெளுத்திகளுடன் சேர்ந்து கொண்டு ராத்த்திரி பூரா ஆட்டம் பாட்டங்கள். யாருடய பணம்? உங்க பணம். எங்க பணம். மலேசிய மக்களுடைய பணம். நாம் கட்டின வரிப் பணம்.

கோடிக் கோடியான 1எம்.டி.பி. பணம் லண்டனில் இருந்து கரிபியன் கடலில் இருக்கும் கேய்மென் தீவுகளுக்குப் போனது. பிறகு அங்கே இருந்து சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குப் போனது. அங்கே இருந்து லக்சம்பெர்க் நாட்டுக்குப் போனது. பின்னர் அங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போனது. 

அங்கே இருந்து சிங்கப்பூருக்குப் போனது. அப்புறம் கோலாலம்பூருக்கு வந்தது. அப்படியே மலேசியாவின் நம்பர் ஓன் அதிகாரியின் வங்கிக் கணக்கிலும் பதுங்கிக் கொண்டது. அப்படியே ரோச்சாப்பூ ரோசம்மாவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியது. நாளைக்கும் கண் சிமிட்டல்கள்…

(தொடரும்)



மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக