05 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 34

(மலேசிய நண்பன் - 15.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

லெ.மதியழகன், தாமான் மாஸ், கம்பார்  mathi038@gmail.com

கே: On Screen Keyboard என்றால் என்ன? அதை இயக்குவதற்குத் தனியாக ஏதாவது நிரலி எனும் Program வேண்டுமா?

ப:
ஒவ்வோர் எழுத்தையும் தட்டித் தட்டி அச்சு செய்வதைத் தட்டச்சு என்கிறோம். அதற்குப் பயன் படுத்தப்படும் சாதனத்தின் பெயர் தட்டச்சுப் பலகை. Key Board என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். இதில் A லிருந்து Z வரையிலான எழுத்துகள் இருக்கும். 1 லிருந்து 9 வரையிலான எண்கள் இருக்கும். மற்ற மற்றச் சின்னங்களும் இருக்கும். இந்தத் தட்டச்சுப் பலகை கணினிக்கு வெளியே முன்புறமாக இருக்கும். சரி. இதே மாதிரி ஒரு தட்டச்சுப் பலகை கணினிக்கு உள்ளேயும் இருக்கிறது. அதைப் பலர் பார்த்து இருக்க முடியாது.  அதன் பெயர் On Screen Keyboard.

கணினிக்குள் பதித்து வைக்கப் பட்டிருக்கிறது. அதை இயக்குவதற்குத் தனியாக நிரலிகள் எதுவும் தேவை இல்லை. எப்படி இயக்குவது? Start எனும் பொத்தானைத் தட்டி விடுங்கள். Run எனும் பகுதி ஆகக் கீழே வரும். தெரிகிறதா. அதில் osk என்று தட்டச்சு செய்யுங்கள். அவ்வளவுதான். கணினித் திரையில் ஓர் அழகான தட்டச்சுப் பலகை வந்து உட்கார்ந்து கொள்ளும். On Screen Keyboard என்பதன் சுருக்கம்தான் இந்த osk. தட்டச்சுப் பலகையைச் சுழலியைக் கொண்டு இயக்கிக் கொள்ளலாம். வெளியே இருக்கும் தட்டச்சுப் பலகை திடீரென்று வேலை செய்ய வில்லை என்றால் கவலை பட வேண்டாம். கணினிக்கு உள்ளே இருக்கும் இந்தத் திரை விசைப் பலகையைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

சுப.வீர பாண்டியன்  subavee@gmail.com

கே: கணினியின் மூலமாகக் கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று என் நண்பர் சவால் விடுகிறார். இல்லை என்று நான் சொல்கிறேன். முதலில் ஐம்பது ரிங்கிட் பந்தயமாக இருந்தது. கடைசியில் RM200 ரிங்கிட்டிற்கு வந்துவிட்டது. விட்டால் ஏற்றி விடுவார் போல இருக்கிறது. அப்படித்தான் அடித்துச் சொல்கிறார். உங்கள் பதிலில்  RM200 ரிங்கிட் ஊசலாடுகிறது? எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா.

ப:
உங்கள் நண்பர் பந்தயத் தொகையை ஏற்றி விடுகிறார் என்றால் அவர் பக்கம் நியாயம் இருக்கிறது. இதில் வேறு உங்களுக்கு உதவி செய்யச் சொல்கிறீர்கள்.

நன்றாக யோசித்துப் பார்ப்போம். எப்படி ஒரு கணினியால் கொசுக்களைப் போய் விரட்டி அடிக்க முடியும். கணினியார் அவருக்கு என்ன மனிதனைப் போல கால் கை இருக்கிறதா. இல்லை ஆடு மாடுகளைப் போல வால்தான் இருக்கிறதா. ஒன்றுமே இல்லை. செதுக்கி வைத்தப் சிலையைப் போல ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். சகோதரர் கணினியார் இருக்கிறாரே அவர் ரொம்பவும் நல்லவர்.

ஆக, அப்படி இருக்கும் போது அப்புறம் எப்படி கணினியார் போய் கொசுக்களை எல்லாம் விரட்டி அடிக்க முடியும். நண்பர் சொன்னது தப்பு. நண்பரிடம் இருந்து காசை வாங்கி இரண்டு பேரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அங்கே தான் தப்பு நடக்கிறது. உங்கள் நண்பர் சொல்வதுதான் சரி! கணினிக்கு கொசுக்களை விரட்டி அடிக்கும் திறமை உள்ளது. உண்மைதான். ரொம்ப பேருக்கு இந்த விஷயம் தெரியாது. சத்தத்தை Hertz எனும் அளவைக் கொண்டு அளக்கிறார்கள். இந்த ஹெர்ட்ஸ் அளவில் 16,000 Hertz க்குள் மேலே இருந்தால்தான் மனிதர்களின் காதுகளால் கேட்க முடியும்.

அதற்கும் கீழே போனால் நமக்கு கேட்காது. ஆனால் ஈ, எறும்பு, கொசு, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் போன்ற  சின்ன ஜ“வராசிகளால் மட்டுமே கேட்க முடியும். அந்தச் சத்தம் அவற்றுக்கு காது வலியை உண்டாக்கும். அதனால் அந்த மாதிரியான  சின்னச் சின்ன ஜ“வன்கள் சத்தம் வரும் பக்கம் போவதைத் தவிர்க்கும். ஆக, அப்படிப் பட்ட ஓர் ஒலியை நம்ப வீட்டுக் கணினியால் உருவாக்க முடியும். அதைக் கேட்டதும் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்.

கொசுக்கள் இல்லையே என்று அந்த நேரத்தில் நிம்மதிதான். இருந்தாலும், கணினியை நிறுத்தியதும் மறுபடி கொசுக்கள் வந்து விடும். சரியா. Sarunyou Punyaratabundhu எனும் தாய்லாந்துகாரர் கண்டுபிடித்திருக்கிறார். பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பாருங்கள். நான் பயன் படுத்திப் பார்த்தேன். ஒரே ஒரு தைரியமான கொசு மட்டும் பதுங்கிப் பதுங்கி வந்தது. நிஜமாக வந்தது. அப்புறம் கடிக்காமல் போனது.

www.allmosquitos.com/soft/SEA_antimosquitoes_xp_2.zip
www.allmosquitos.com/anti-mosquito-software/anti-mosquito-sound.html

எனும் இடத்தில் இந்த நிரலி கிடைக்கும்.


குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: நான் என் கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்துவேன். காலையிலிருந்து மாலை வர அணைப்பதில்லை. இது கணினிக்கு நல்லதா? இதனால் கணினிக்கு ஆபத்து உண்டா?

ப:
கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண் டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். ஒவ்வொரு முறையும் இந்த அதிர்ச்சி உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்கின்றன. இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை அடைத்துக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

04 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 33

(மலேசிய நண்பன் - 08.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் மலேசியா நண்பன் நாளிதழில் ‘கணினியும் நீங்களும்’ கேள்வி பதில் அங்கத்தில் அடியேன்  அளிக்கும் பதில்கள் இணையத்திலும் இடம் பெறும்.  முதலில் பழைய பகுதிகளை பதிவு ஏற்றம் செய்து விடுகிறேன்.



விஜயன் சுப்பிரமணியம்  svijiyan@yahoo.com
கே: இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழி எது?

ப:
சந்தேகம் இல்லாமல் ஆங்கிலம்தான். அடுத்ததாக ஜெர்மன் மொழி வருகிறது. அதற்கு அடுத்து ஜப்பானிய மொழி. அடுத்து பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்து கீசியம், டச்சு மொழிகள் வருகின்றன. 14வது இடத்தில் மலாய் மொழி வருகிறது. தமிழ் மொழி எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

எம்.பிரபு, பெந்தோங் (குறும் செய்தி 1.11.2009)
கே: கணினி கேள்வி-பதில் அங்கம் வந்த பிறகு எங்கள்  வீட்டில் மலேசிய நண்பன் நாளிதழுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டு விட்டது. உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எங்கள் பெந்தோங் நகரில் கணினி பயிற்சி வகுப்பை நடத்த முடியுமா?


ப: அழைப்புக்கு நன்றி. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரவுப் நகருக்குப் போகும் போது உங்களுடைய பெந்தோங் நகரைக் கடந்து சென்றேன். அமைதியான ஊர். ஆர்ப்பாட்டம் இல்லாத மக்கள். அதிகமாக இந்தியர்களின் நடமாட்டம். பல வரலாறுகளைப் படைத்த சிறப்புகள். அந்த ஊரில் ஒரு கணினிப் பயிற்சி வகுப்பை நடத்தச் சொல்கிறீர்கள்.

அதற்கு முன்னர் ஒரு சின்னக் கொசுறுச் செய்தி. பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் வெகு விரைவில் பேராக் மாநில தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு கணினிப் பட்டறையை நடத்த உள்ளது. தேதி விவரம் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் எறும்புகளை மிஞ்சிப் போகும் அளவுக்கு செயலாளர் சித.நாராயணன் ரொம்ப ரொம்ப 'பிசி'யாக இருக்கிறார். தலைவர் இராமலிங்கம், ஜி.பி.செல்வம், சகோதரரி கமலாட்சி ஆறுமுகம் மனசு வைத்தால் žக்கிரமாகப் பட்டறையை நடத்தலாம். அதன் பின்னர் கணினிப் பயிற்சி வகுப்பைப் பெந்தோங்கில் நடத்தவும் ஏற்பாடு செய்வோம்.

திருமதி.விமலாதேவி, பெட்டாலிங் ஜெயா
கே: இப்போது உள்ள குழந்தை கள் கணினி மூலமாக தமிழில் நன்றாக 'டைப்' செய் கிறார்களாமே. பார்த்தீர்களா?

ப:
ஓ... நன்றாக. அண்மையில் ஒரு பத்து வயது சிறுமி தமிழில் தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அருகில் போய் எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறார் என்று கேட்டேன். 'ரொம்ப ஈசி அங்கிள். பர்ஸ்ட் 'அல்ட்'டை தட்டணும். தென் யு பிரஸ் நம்பர் 2. தமிழ் வில் கம். இட் ஈஸ் வெரி ஈஸ’ அங்கிள்' என்றார். இது போதும். காலா காலத்திற்கும் தமிழ் மொழிக்கு இருமல் வந்து மிளகு  ரசம் கேட்கும்.

ஆர்.ஜெயமோகன், சாலாக் திங்கி
கே: Folder என்பதைக் கோப்பு என்கிறோம். இதை மற்றவர் படிக்க முடியாதபடி அல்லது திறக்க முடியாதவாறு பாதுகாக்க முடியுமா?

ப:
முடியும். எந்த ஒரு கோப்புக்கும் Password எனும் சங்கேதச் சொல்லைக் கொடுத்து பாதுகாக்க முடியும். மற்றவர்களால் திறந்து படிக்க முடியாது. அந்தக் கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யவும். அப்புறம் Sharing >> Make this Folder Private >> Apply >> Create Password >> Ok. அதன் பின்னர் அந்தக் கோப்பை மற்றவர் யாரும் திறக்க முடியாது.

ஆர்.சற்குணம், பாங்கி (SMS - குறும் செய்தி 5.11.2009)

கே: சார். கணினியைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். கணினியைப் பற்றி படித்து கண்டிப்பாகப் பட்டங்கள் வாங்கி இருக்க வேண்டுமே. உங்களை எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா.

ப:
ரொம்பங்க... ரொம்ப வாங்கியிருக்கிறேன். பேரப் பிள்ளைகள் தீபாவளிக்கு வந்து அவற்றில் இரண்டு மூன்று பட்டங்களைப் மடக்கிப் போட்டுக் கிழித்தும் விட்டார்கள். என்ன செய்வது.  மிச்ச சொச்சம் இருக்கிறது. நன்றாகக் காற்று அடிக்கிற காலத்தில் பறக்க விட்டுக்  கொள்ளலாம் என்று இருக்கிறோம். நான் எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா. எல்லாம் சரி. மற்றவர்களுக்குப் பயன் படும் படியான கேள்விகளாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லீங்களா. சரியா.

தமிழரசு  tamila139@gmail.com
கே: இணையக் கலைக் களஞ்சியமான Wikipedia வைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொல்லுங்கள்.

ப:
அருமையான கேள்வி. இணையத்திலே ஒரு கலைக் களஞ்சியம் இருக்கிறது. அதன் பெயர் விக்கிபிடியா. உலகில் உள்ள 267 மொழிகளில் செயல் பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Interpedia எனும் இடத்தில் இருக்கிறது. இதற்கு எழுதுபவர்கள் எல்லாம் வாசகர்கள்தான். அவர்களே எழுதி அவர்களே திருத்திக் கொள் கிறார்கள்.

உலகத்திலேயே மாபெரும் கலைக் களஞ்சியம் இதுதான். 1993 ல் Interpedia எனும் பெயரில் தொடங்கப் பட்டது.1999ல் விக்கிபிடியா உருவாக்க வேண்டும் எனும் கருத்தைச் சொன்னவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர். இருந்தாலும் Nupedia எனும் பெயரில் தொடங்கியது. தன்னார்வத் தொண்டர்களும் எழுத்தாளர்களும் உதவிக்கு வந்தனர். 15.1.2001ல் அசல் விக்கிபிடியா வந்தது. Wiki என்பது ஹவாய் மொழிச் சொல். விரைவு என்று அர்த்தம்.

இதில் 30 இலட்சம் கட்டுரைகள் உள்ளன. இதன் பின்னணியில் ஆயிரக் கணக்கானவர்களின் அயரா உழைப்பு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் கட்டுரைகள் எழுதி வெளியிடலாம். 2003ல் தமிழ் மொழிக் கட்டுரைகள் வந்தன. மயூரநாதன், நிரோஜன், சந்திரவதனா போன்றவர்கள் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் மட்டும் மொத்தம் 3245 கட்டுரைகள் உள்ளன. www.ta.wikipedia எனும் இணைய முகவரியில் தமிழ் மொழி உலா வருகிறது. ஆக, இப்போதைக்கு விக்கிபிடியாவில் 174 கோடி சொற்கள் உள்ளன.

(தங்களுடைய கணினிகளைப் பழுது பார்த்துக் கொடுக்கும்படி பலர் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். கைப்பேசி 012-5838171 எண்களுக்கு அழைத்து உறுதி செய்து     கொள்ளுங்கள். பழுது பார்க்க ஏற்பாடுகள் செய்யப் படும்.)


கணினியும் நீங்களும் - பகுதி 32

(மலேசிய நண்பன் - 08.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மூர்த்தி பிரகாஷ்  ilayaprakash@gmail.com

கே: நான் இலங்கையில் இருந்து வந்து வேலை செய்கிறேன். தமிழில் இலகுவாக தட்டச்சு செய்வதற்கு ஏற்ற மென்பொருள் மற்றும் விசைப் பலகை ஜொகூர் பாருவில் கிடைக்குமா? தமிழ் யுனிகோட் பற்றி விளக்கவும். இலங்கையில் இருந்து வந்து மூன்று வருடங்களில் கணினி மறந்து போய் விட்டது. மீண்டும் கணினி பற்றிய உங்களுடைய கேள்வி-பதில் அங்கம் ஊடாக ஆர்வத்தைத் தூண்டியமைக்கு நன்றி. புதிய மடிக்கணினி மற்றும் இணையத் தொடர்பிலிருந்து உங்களுக்கு அனுப்பும் முதல் மின்னஞ்சல் இது.

ப:
உங்களுடைய கடிதத்தைப் படித்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் இருந்து இங்கே வந்து வேலை செய்து மடிக்கணினியை வாங்கிப் பயன் படுத்துகிறீர்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். தமிழில் தட்டச்சு செய்ய தனிப்பட்ட விசைப் பலகை எதுவும் தேவை இல்லை. சாதாரணமாக எல்லா விசைப் பலகையிலும் தமிழில் தட்டச்சு செய்யலாம். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் இலவசமாகத் தமிழ் நிரலி கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த நிரலியைப் பயன் படுத்தி யுனி கோட் முறையில் தட்டச்சு செய்யலாம். முரசு அஞ்சலில் எப்படி தட்டச்சு செய் கிறீகளோ அதே மாதிரிதான்.

Unicode என்றால் என்ன என்று கேட்டிருந்தீர்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல் கிறேன். 1990 களில் சாமான்ய மனிதர்கள் எல்லாரும் கணினியைப் பயன் படுத்தக் கூடிய காலக் கட்டம் வந்தது. அப்போது தமிழில் தட்டச்சு செய்ய ஒரு நேர்த்தியான மென்பொருள் அல்லது தமிழ் நிரலி உருவாக்கப் படவில்லை.

தமிழின் மீது இருந்த தாக்கத்தால் தமிழ் மென் பொருளாளர்கள் தனித் தனியாக நிரலிகளைத் தயாரித்து கொடுத்தார்கள். சிலர் இலவசமாகக் கொடுத்தார்கள். சிலர் காசிற்கு விற்றார்கள். அதனால் நூற்றுக் கணக்கான Fonts எனும் எழுத்துருகள் புழக்கத்திற்கு வந்தன.

அவரங்கல், கம்பன், மதுரம், மயிலை, அக்ஸார், தேனீ, வைகை, சூரியன், இளங்கோ, வானவில், ஜனனி, கோமதி, நந்தினி, ஆத்வின், பரணி, பூபாளம், ஹ’ந்தோலம், கல்கி, மலையமருதம், பரணர், சங்கம், சத்யம், சிந்து, தர்மினி, உதம்பா, விகடன், அபிராமி, அலையரசி, அமுதம், பாமிணி, கீரவாணி, குறுஞ்சி, முல்லை, பல்லாடம், ரத்னகிரி, சஹானா, சரஸ்வதி, சிந்து பைரவி, இணைமதி, இணைக்கதிர், கலப்பை, கலைஞர், அண்ணா, அவ்வையார், கண்ணா, சாய் சாய், ஆண்டாள், அருள்மதி, பாரா, சாய் இந்திரா, ஸ்ரீ, துணைவன், தென்னேரி, அபோகி, அணங்கு, ஆனந்தா, ஈழநாடு, கம்மாஸ், கதன குதூகலம், லத்தங்கி, நீதிமதி, ரஞ்சனி, சாவேரி...  இன்னும் வேண்டுமா. அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் மிகப் புகழ் பெற்றது முரசு அஞ்சலின் இணைமதி. உலகம் பூராவும் இதற்கு தனி மதிப்பு உண்டு.

இந்த மாதிரி பற்பல எழுத்துரு முறைக்குப் பதிலாக ஒரே ஓர் எழுத்து முறை இருந்தால் நன்றாக இருக்குமே என்று தமிழ் ஆர்வலர்கள் ஆசைப் பட்டார்கள். அந்த வகையில் உருவானதுதான் யுனிகோட் முறைமை. இந்த முறைமைக்கு தனியாக எழுத்துருகளைப் பதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினி வாங்கும் போதே அதற்குள் லதா, ரவி, சுருதி, மங்கள் போன்ற இந்திய எழுத்துருகள் இருக்கின்றன.

உலகம் முழுமையும் உள்ள எல்லா கணினிகளிலும் இந்தத் தமிழ் எழுத்துருகள் உள்ளன. ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் உள்ள கணினியிலும் சரி. அமேசான் காட்டில் உள்ள கணினியிலும் சரி. ஆர்க்டிக் பனித் துருவத்தில் உள்ள கணினியிலும் சரி. இந்தத் தமிழ் எழுத்துருகள் உள்ளன. மலேசியாவிலிருந்து யுனிகோட் முறையில் தமிழில் தட்டச்சு செய்தால் அதை உலகத்தில் உள்ள எல்லா கணினிகளும் தமிழில் படிக்கும். கவலைப் பட வேண்டியதே இல்லை. இதுதான் அந்த யுனிகோட் முறை. புரிகிறதா.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர், மலேசியா, மவுரித்தியஸ் போன்ற நாடுகள் அதிகாரப் பூர்வமாகப் பயன் படுத்தி வருகின்றன. ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் Institute of Indology and Tamil Studies எனும் தமிழ்ப் பிரிவு இருக்கிறது. அங்கே தான் தமிழ் யுனிகோட் முறைக்கு முதன் முறையாக அடிக்கல் நாட்டப் பட்டது. INFITT - International Tamil Internet Conference என்பதைத் தமிழில் அனைத்துலக தமிழ் இணைய மாநாடு என்று சொல்லலாம். இதுவரை எட்டு மாநாடுகள் நடைபெற்று உள்ளன.

இவற்றுக்கு எல்லாம் மூலகர்த்தாவாக இருப்பவர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் என்பவர். கை எடுத்து கும்பிடப்பட வேண்டிய மனிதர். இவர் இருப்பதால் தான் ஜெர் மனி -கோலோன் பல்கலைக் கழகத்தில் இன்னும் தமிழ் வாழ்கிறது. விளம்பரம் இல்லாத மனிதர். அவருடைய படம் வந்திருக்கிறது. பாருங்கள்.

திருமதி. என்.வள்ளி, ஜொகூர் பாரு (குறும் செய்தி 1.11.2009)

கே: நான் தனித்து வாழும் தாய். ஒரு மகன் அடுத்த வருடம் எஸ்.பி.எம் படிக்கப் போகிறான். நல்ல படிப்பறிவு. ஒரு கணினி வாங்கிக் கொடுக்க ஆசை. எனக்கு குறைந்த வருமானம். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளேன். கணினியைப் பற்றி எனக்கு போதிய அளவு தெரியாது. எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்?

ப:
உங்கள் குறும் செய்தியைப் படித்து மனம் நெகிழ்ந்து போனேன். தனித்து வாழும் தாய்மார்கள் அனைவருக்கும் இந்த மாதிரி உணர்வுகள் இருந்தால் எவ்வளவு நல்லது. கோயிலுக்குப் போய் புண்ணியம் தேடிக் கொள்வதை விட இந்த மாதிரியான எண்ணம் கொண்டவர்களுக்கு உதவி செய்வது இன்னும் பெரிய தீர்க்க ஆயுசு. இன்னும் ஒரு விஷயம். இந்த மாதிரியானவர்களுக்கு உதவி செய்ய வருபவர்களுக்கு வக்கிரமம் இல்லாத மனசு வேண்டும். அதையும் சொல்லி விடுகிறேன்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தனித்து வாழும் தாய்மார்களுக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறது. கணினி வாங்கிக் கொடுப்பதில் சில நல்ல சலுகைகளையும் வழங்குகிறது. வறுமைக் கோட்டைத் தாண்டியவர்களுக்கு இலவசமாகவும் கொடுக்கிறது. அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். என்ன கணினி வாங்கலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன்னர் மேற்சொன்ன அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது நலம் பயக்கும் என்பது என் கருத்து.

Dell நிறுவனத்தின் கணினிகளை நம்பி வாங்கலாம். இரண்டு வருடங்களுக்கு உத்தரவாதம் தருகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகம். விவரம் தெரிந்த வர்களிடம் கேட்டுப் பாருங்கள். நான் ஈப்போவில் இருக்கிறேன். அங்கே வந்து உங்களுக்கு கணினி வாங்க உதவி செய்ய முடியாது. மன்னிக்கவும். இருந்தாலும் ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷரீர் சமாட் அற்புதமான மனிதர். அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். நல்ல ஆதரவான பதில் கிடைக்கும். உங்களுடைய உயர்வான உள்ளத்திற்கு என்னுடைய தாழ்மையான வாழ்த்துகள்.


எம்.பிரபு, பெந்தோங் (குறும் செய்தி 1.11.2009)

கே:கணினி கேள்வி-பதில் அங்கம் வந்த பிறகு என் வீட்டில் மலேசிய நண்பன் நாளிதழுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டு விட்டது. நல்ல பதில்களைச் சொல்கிறீர்கள். தெளிவாக இருக்கிறது. சுலபமாக புரிந்து கொள்ளவும் முடிகிறது. உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எங்கள் பெந்தோங் நகரில் இரண்டு நாட்களுக்கு கணினி பயிற்சி வகுப்பை நடத்த முடியுமா. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இங்கே பெந்தோங்கில் கணினி ரிப்பேர் செய்ய அதிகமாக கட்டணம் கேட்கிறார்கள். அப்படியே காசு கொடுத்தாலும் கணினி கெட்டுப் போகிறது. சமயங்களில் டமான்சாராவுக்கு எடுத்து வர வேண்டி இருக்கிறது.

ப:
வீடு தோறும் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நலம் பயக்கும். அழைப்புக்கு நன்றி. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரவுப் நகருக்குப் போகும் போது உங்களுடைய பெந்தோங் நகரைக் கடந்து சென்றேன். அமைதியான ஊர். ஆர்ப்பாட்டம் இல்லாத மக்கள். அதிகமாக இந்தியர்களின் நடமாட்டம். பல வரலாறுகளைப் படைத்த சிறப்புகள். அந்த ஊரில் ஒரு கணினிப் பயிற்சி வகுப்பை நடத்தச் சொல்கிறீர்கள். நன்றி. நடத்துவோம்.

அதற்கு முன்னர் ஒரு சின்னக் கொசுறு. பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் வெகு விரைவில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு கணினிப் பட்டறையை நடத்த உள்ளது. தேதி விவரம் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் எறும்புகளை மிஞ்சிப் போகும் அளவுக்கு சுறுசுறுப்புடன் இருக்கிறார் செயலாளர் சித.நாராயணன். ரொம்ப ரொம்ப 'பிசி'. தம்பி ஜி.பி.செல்வம், சகோதரரி கமலாட்சி ஆறுமுகம் போன்றவர்கள் மனசு வைத்தால் žக்கிரமாகப் பட்டறையை நடத்தலாம். பார்த்தால் கேட்டுப் பாருங்களேன். அதன் பின்னர் வேண்டுமானால் கணினிப் பயிற்சி வகுப்பை பெந்தோங்கில் வைத்துக் கொள்ளலாம்.

பவானி இளங்கோவன், கடாரம் (குறுஞ்செய்தி 31.10.2009)

கே: நான் உங்கள் தீவிர வாசகி. சார், உங்களின் நகைச்சுவையான பதில்கள் எல்லாம் சூப்பர். நீண்ட நாட்களாக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். சொல்லி விட்டேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. உங்களின் இந்த அரிய சேவை தொடர வேண்டும்.

ப:
என்னங்க...பவானி. கேள்வி கேட்பீர்கள் என்று நினைத்தேன். இப்படி நன்றிச் செய்தி யோடு முடித்துக் கொண்டீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. ஆக, என் சார்பிலும் நன்றி. நன்றி.

அர்ச்சனா வீர மோகன், தெலுக் மெர்பாவ், சிப்பாங்

கே: PC என்பதை CPU என்கிறார்கள். சரியா. உங்கள் விளக்கம் என்ன?

ப:
நானும் கேட்டது உண்டு. PC என்றால் Personal Computer. அதாவது தனிக் கணினி அல்லது சொந்தக் கணினி. CPU என்றால் Central Processing Unit. அதாவது மையகச் செயலாக்கச் சாதனம். கணினிக்குள் இந்தச்  செயலாக்கச் சாதனம் ஒரு சாதனம் மட்டும் தான். ஆக, இரண்டும் வேறு வேறு. கணினியை மொத்தமாக PC என்று சொல்லுங்கள். தப்பில்லை. ஆனால் அதை CPU என்று சொல்வது தப்பு.

தாயின் வயிற்றுக்குள் தான் சிசு இருக்கிறது. சிசுவுக்குள்ளே தாய் இல்லை. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மாதா பிதா குரு தெய்வம் என்று ஒளவையார் சொன்னார். அவர் ஏன் இப்படி சொல்ல வந்தார். அதாவது மாதாவும் பிதாவும் தான் உனக்கு குரு. அவர்கள்தான் உனக்கு தெய்வம். அதனால் மாதா பிதா - குரு தெய்வம் என்றார். ஆனால், என்ன நடக்கிறது.

காலப் போக்கில் ஒளவையாரின் நோக்கம் அடிபட்டுப் போனது இல்லையா. அந்த மாதிரிதான் எல்லாமே. இதை எல்லாம் கேட்டு ஒளவைப் பாட்டி மேலே உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம். தெரியவில்லை.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மின்னஞ்சல் முகவரி:
ksmuthukrishnan@gmail.com
கைப்பேசி: 012-5838 171

கணினியும் நீங்களும் - பகுதி 31

(மலேசிய நண்பன் - 27.09.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)


ஜோ கிம்  jokim69@yahoo.com.my

கே: என்னுடைய கணினியைத் திறக்க முடியவில்லை. கணினியைத் திறந்ததும் எப்போதும் வரும் சின்ன விளக்கு வெளிச்சம் வரவில்லை. என்ன பிரச்னை?


ப: என் கணக்குப் படி உங்களுடைய மின் வழங்கி கெட்டுப் போயிருக்கலாம். மின் வழங்கி வேலை செய்தால் கணினிக்கு கண்டிப்பாக வெளிச்சம் வரும். அந்த வெளிச்சம் வரவில்லை என்பதால் Power Supply எனும் மின் வழங்கியில் பிரச்னை என்பது தெளி வாகிறது. நீங்கள் ஈப்போ பகுதியில் இருந்தால் பரவாயில்லை. கணினியைப் பழுது பார்த்து கொடுத்து விடுவேன். அருகில் உள்ள கணினி பழுது பார்க்கும் கடையில் கேட்டுப் பாருங்கள். விவரம் சொல்வார்கள்.

எம்.வனஜா  vanajahm@gmail.com

கே: என் பெயர் வனஜா. வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புகிறேன். சில இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அவர்களுடைய இணையத்தளம் அல்லது அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் உண்மையானதா இல்லை போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

ப: மின்னஞ்சல்களின் உண்மைத் தனத்தைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். இருந்தாலும் கீழே காணும் இணையத் தளங்களுக்குப் போய்ப் பாருங்கள். தேவையான தகவல்கள் கிடைக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டணம் எதையும் முதலில் அனுப்ப வேண்டாம்.

இணையத் தளங்களின் அசல் தன்மையை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். வேலைத் தேடி தருகிறேன் ஆளைத் தேடித் தருகிறேன் என்று சொல்லும் ஜெகதாலப் புரட்டர்கள் எல்லாம் இணையத்தில் உள்ளனர். கவனம். கவனம்.

http://www.snopes.com/
http://www.thescambaiter.com/
http://www.hoax-slayer.com/


வெ.கலைப்பித்தன், தாமான் மகாவலி, குவாந்தான்

கே: உம்முடைய கணினி கேள்வி-பதில்களில் நையாண்டியும் நக்கலும் கலந்து ஏன் எழுதித் தொலைக்கிறீர். நிறுத்தித் தொலைக்கவும். ரொம்ப படித்து விட்ட மேனரிஷம் வேண்டாம்?

ப: சொன்னதற்கு நன்றி. அதற்காக ஒரு கதை சொல்கிறேன். சில ஆடுகளும் மாடுகளும் ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஓர் ஆடு மட்டும் மேயாமல் விசனமாக இருந்தது. ஏன் என்று பக்கத்தில் உள்ள மாடு கேட்டது.

உலகத்திலேயே மிக மோசமான காய் எதுவாக இருக்கும் என்று ரொம்ப நாளாய் ஆராய்ச்சி செய்கிறேன். சரியான பதில் தெரியவில்லை என்று ஆடு சொன்னது. உடனே மாடு சொன்னது 'அட வீணாப் போன ஆடே... இதுகூடவா தெரியவில்லை. உலகத்திலேயே மிக மோசமான காய் எது தெரியுமா. அதான் அந்த கத்தரிக்காய்' என்றது. ஏன் என்று ஆடு கேட்டது.

'கடவுளுக்கே கத்திரிக்காயைப் பிடிக்கவில்லை. அதனால்தான் அதன் தலையில் ஆணியை அடித்து வைத்து இங்கே அனுப்பி இருக்கிறார்' என்று கத்திரிக்காயின் தலையில் இருந்த காம்பைக் காட்டியதாம் மாடு. தெரியாதைத் தெரிந்த மாதிரி சொல்வது தப்பு. தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு நகைச்சுவையாகச் சொல்வதில் நன்மை இருக்கிறது. எதார்த்தமாக எழுதுவதை நக்கல் என்று சொல்வது உங்கள் கருத்து. தயிர் சாதத்தில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருப்பது நல்லது என்று சொல்வது என் கருத்து.

எஸ்.பி.பாலக்கிருஷ்னன்,  oum9100@yahoo.com.sg

கே: விண்டோஸ் 7 வந்துவிட்டது. கணினி உலகமே அமர்க்களமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன சார்?


ப: ஆத்துக்கு வந்தவள் சோத்துக்கு சாயம் அடிக்கிறாள் என்பது மாமியார்களின் காலா காலத்துப் பல்லவி. அதனால் அனுபல்லவி என்ன என்று தெரியாது. என் கருத்தைச்   சொல்வதால் சகோதரர் பில் கேட்ஸ் நிச்சயமாகச் சந்தோஷப் பட மாட்டார்.

இதுவரை வந்த விண்டோஸ் செயலிகளில் மிக மிக அருமையானது பழைய விண்டோஸ் XPதான். அந்தச் செயலியை இலகுவாகப் பயன் படுத்தலாம். அதைச் செயல் படுத்த அதிக செலவும் இல்லை. எதையாவது செய்து எப்படியாவது காசைப் பார்க்க வேண்டும் என்பது பில் கேட்ஸ’ன் இரத்தத்தில் ஊறிய இலட்சியம். அதனால் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார். தொட்டதிற்கு எல்லாம் சிணுங்கிக் கொள்ளும் விண்டோஸ் விஸ்த்தாவினால் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு நல்ல பெயரை விட கெட்ட பெயர்தான் அதிகம்.

இப்போது விண்டோஸ் 7ஐ கொண்டு வந்திருக்கிறார். கனடாவில் உள்ள என் நண்பர்கள் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். கஞ்சி சூடாக இருக்கிறது. ஆற விட்டுப் பார்ப்போம். இருபது முப்பதாயிரம் தமிழர்களை வைத்து விண்டோஸ் 7ஐ சகோதரர் பில் கேட்ஸ் உருவாக்கி இருக்கிறார். 140 தமிழர்களைக் கோடீஸ்வரர்களாக ஆக்கியும் விட்டிருக்கிறார். அதுவரை அவரைப் பாராட்டுவோம்.


மணிக்கண்டன் வேணுகோபால்  manikandan@gmail.com

கே: இணையத்தின் மூலமாக கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கிறார்களே. எப்படி? எந்த இடத்தில் தேடினால் சரியான ஜோடி கிடைக்கும்? அதற்கு பணம் கட்ட வேண்டுமா?


ப: நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ரொம்ப அவசரம் போல தெரிகிறது.  அவசரம் வேண்டாம். இணையம் இருக்கிறதே அது ஒரு பெரிய கடல். அதில் அழகான குட்டி குட்டி மீன்களும் இருக்கின்றன. ஆளை முழுங்கும் அட்டகாசமான சுரா மீன்களும் இருக்கின்றன. அங்கே நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.

அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கலாம். விற்கலாம். என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும். என்ன மாதிரியான பெண் வேண்டும்.  கல்யாணத் தரகர் வேலை செய்யும் இணையத் தளங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. Google தேடல் இயந்த்திற்குப் போய் Indian Matrimony என்று தட்டிப் பாருங்கள். நிறைய இணையத் தளங்கள் வரும். நல்லதாகப் பார்த்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சும்மா உங்கள் பெயர் முகவரியைக் கொடுத்தால் போதும். ஆனால், எல்லாம் உண்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. உங்களைக் கல்யாணம் செய்கிறார்களா இல்லை உங்கள் பணத்தைக் கல்யாணம் செய்கிறார்களா என்பது பிறகு தெரிய வரும்.

இந்த விஷயத்தில் ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றிய முதலைகளும் இருக்கிறார்கள். இணையம் மூலமாக காதலித்து கல்யாணம் செய்து நன்றாகக் குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். கல்யாணம் செய்து மூன்றே நாட்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். எதையும் நன்றாக யோசித்துச் செய்யுங்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.

இல.சதாசிவம், கிளன்மேரி, பத்து தீகா

கே: என் வயது 45. நான் கோலாலம்பூர்-சிங்கப்பூர் விரைவு பஸ் ஓட்டுகிறேன். கணினியைப் பயன் படுத்தத் தெரியாது. என் பிள்ளைகளுக்குத் தெரியும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு சொல்லித் தர முடியுமா? ஒரு வாரத்திற்கு லீவு போட்டு வருகிறேன். எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருகிறேன். அய்யா உதவி செய்யுங்கள். உங்களை மலை போல நினைக்கிறேன்.


ப: இதில் வெட்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் ஆர்வத்தைச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு தகப்பனாரின் நியாயமான ஆசைகளைப் பிள்ளைகள் நிறைவெற்றி வைப்பார்கள். கணினி பயிற்சிகள் எதையும் நான் கொடுப்பது இல்லை. அதனால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.

சி.ஜெயபாலன், சுபாங் ஜெயா

கே: Corel Draw X4 எனும் வரைகலை நிரலியை என்ன விலைக்கு விற்கிறார்கள்?


ப: கோரல் டிரா எனும் வரைகலை நிரலி ஓர் அற்புதமான நிரலி. சகல வரைகலை அம்சங்களும் அதில் இருக்கிறது. அதன் விலை RM 1639. ஒரு கணினியை விட இந்த நிரலியின் விலை அதிகம். அதற்கு தகுந்த மாதிரி அதன் சிறப்புகள் அமைகின்றன. தலைநகர் இம்பி பிலாசா, லாவ் யாட் போன்ற இடங்களில் கிடைக்கும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மின்னஞ்சல் முகவரி:
ksmuthukrishnan@gmail.com
கைப்பேசி: 012-5838 171

கணினியும் நீங்களும் - பகுதி 30

ஜி. ராமன்  graman@tm.com.my

கே: இணையத்தில் வெளிவரும் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்குமா?

ப: அரிச்சந்திரன் காலத்தில் கைப்பேசி, கணினி எதுவும் இல்லை. அதனால் அவர்கள் காலத்தில் எவருக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. கைப்பேசி இருந்திருந்தால் பொய் பேச கற்றுக் கொண்டிருப்பார்கள். அரிச்சந்திர புராணமும் நமக்கு கிடைத்திருக்காது. கணினியைப் பயன் படுத்து பவர்களைவிட கைப்பேசிகளைப் பயன் படுத்து பவர்கள்தான் அதிகம் பொய் பேசுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இணையத்தில் வெளிவரும் செய்திகளில் 90 விழுக்காடு உண்மை. மற்றவை பொய் அல்லது கட்டுக் கதைகள். ஆக, கணினியும் கைப்பேசியும் பொய் பேசத் தெரியாத வாயில்லா ஜ“வன்கள். அவற்றைப் பயன் படுத்தும் மனிதர்கள் தான் அவற்றிற்குப் பொய் பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அகஸ்டின் சின்னப்பன் முத்ரியார்  augustin@malaysiaairlines.com

கே: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு ஏற்றவாறு Mouseஐ மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். எப்படி சார்?

ப: நீண்ட நாட்களாகக் கேள்விகள் கேட்டு வருகிறீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. Mouse எனும் சுழலியை இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். எல்லா சுழலிகளுக்கும் இரண்டு பொத்தான்கள் இருக்கும். Left Click என்றால் இடது சொடுக்கு. Right Click என்றால் வலது சொடுக்கு. இது உலகம் முழுமையும் பயன் படுத்தப் படும் முறை. இந்தச் சுழலியை விசைப் பலகைக்கு வலது பக்கமாக வைத்துக் கொள்வோம். விசைப் பலகை என்றால் Key Board. இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சுழலியை விசைப் பலகைக்கு இடது பக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

இதில் இந்தப் பொத்தான்களின் செயல் பாடுகளை மாற்ற வேண்டும். சரி, எப்படி செய்வது. Start >> Control Panel >> Mouse >> Buttons >> Switch Primary and Secondary Buttons என்பதைச் சொடுக்கி விட்டு வெளியே வாருங்கள். அப்புறம் சுழலியின் செயல் பாடுகள் எல்லாம் மாறிப் போயிருக்கும். Left Click என்பது வலது சொடுக்காக மாறி இருக்கும். Right Click என்பது இடது சொடுக்காக மாறி இருக்கும். பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால், அதே இடத்திற்குப் போய் Deselect செய்து விடுங்கள்.

கீதா குமாரி  geethakumari34@gmail.com

கே: புதிதாகக் கணினியை வாங்கும் போது Dual Core Processor உள்ள கணினியைப் பார்த்து வாங்குவது நல்லது என்று சொல்கிறார்கள். இந்த 'டுவல் கோர் புரசசர்' என்றால் என்ன? அதன் பயன் என்ன?

ப: Processor என்பது கணினியைச் செயல் படுத்தும் ஒரு சாதனம். இதைச் 'செயலி' என்றும் சொல்லலாம். இங்கே இருந்துதான் கணினிக்கு கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது. என்ன என்ன வேலைகளை எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று ஆணை இடப் படுகிறது. 

இந்தச் சாதனம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் செயல் படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கணினியும் வேகமாகச் செயல் படும். 2007 ஆண்டு வரை எல்லா கணினிகளிலும் ஒரே ஒரு செயலிதான் இருந்தது. அதாவது ஒரே ஒரு Processor தான் இருந்து வந்தது. அதன் பின்னர் இண்டல் நிறுவனம் Dual Core Processor எனும் செயலியை அறிமுகம் செய்தது. இரண்டு செயலிகள் ஒரே கணினிக்குள் இருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் வேலை செய்யும்.

கணினியின் எல்லா வேலைகளையும் இரண்டும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளும். கணினியின் திறன் பல மடங்கு கூடுகிறது. அதனால் கணினியும் வேகமாக வேலை செய்கிறது. நாம் கணினிக்கு கொடுக்கும் எந்த வேலையையும் மிக மிக எளிதாகச் செய்தும் கொடுத்து விடுகிறது. இப்பொழுது வரும் கணினிகளில் இந்த 'டுவல் கோர் புரசசர்' முறை இருக்கிறது.

தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. இந்தச் செயலிகளில் இன்னோர் அதிசயமும் நடந்து கொண்டிருக்கிறது. AMD எனும் நிறுவனம் Triple Core Processor எனும் புதியச் செயலியைக் கண்டு பிடித்திருக்கிறது. படு பயங்கரமான வேகத்தில் வேலை செய்கிறதாம். அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.


ஜ“வ கலிய பெருமாள் jeevaria@yahoo.com

கே: நான் எந்த நிரலியையும் கணினிக்குள் பதிவு செய்தாலும் You must have Administrator rights to install on this computer. Please log in to an account with Administrator rights and run this installation again என்று வருகிறது. பெரிய தலைவலியாக இருக்கிறது சார். இதை எப்படி தீர்ப்பது?

ப: கணினியைப் பொருத்தவரையில் Administrator என்பவர்தான் அதற்கு அதன் ஏகோபித்தத் தலைவர். Administrator என்றால் நிர்வாகி அல்லது நடத்துனர். கணினியில் எந்தத் தடையும் இல்லாமல் போகலாம் வரலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதிக உரிமைகளைக் கொண்டவர் இந்த நிர்வாகி.

புதிய நிரலிகளைப் பதிப்பிக்கும் போது பதிப்பவருக்கு நிர்வாக உரிமைகள் இருக்கின்றனவா என்று கனினி கண்காணிக்கும். பதிப்பவருக்கு உரிமை இல்லை என்றால் நீங்கள் சொன்ன அந்த எச்சரிக்கை வரும். பொதுவாக, இந்தச் செயலாக்கம் கணினிக்குள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். சரி. இதை எப்படி மாற்றுவது.

விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்தினால் இப்படி செய்யுங்கள். கணினியை Restart செய்யுங்கள். கணினி செயல்பட ஆரம்பிக்கும் போது F8 என்ற பொத்தானைத் தட்டுங்கள். ஒரு பட்டியல் வரும். அதில் Safe Mode என்பதைத் தட்டுங்கள். உள்ளே நுழையும் போது Administrator எனும் கணக்கில் நுழையுங்கள். Start >> Run >> என்பதில் 'Control userpasswords2' என்று தட்டச்சு சேயுங்கள்.

அங்கே ஒரு புதிய முகப்பு வரும். அதில் உங்கள் Administrative Account ஐ சொடுக்கி விடுங்கள். அப்புறம் Reset Password எனும் பொத்தானைத் தட்டி விடுங்கள். புதிய சங்கேதச் சொல்லை தட்டச்சு செய்து விட்டு வெளியே வாருங்கள். கணினியை அடைத்துவிட்டு மறுபடி இயக்கி விடுங்கள். அவ்வளவுதான் பிரச்னை தீர்ந்தது.

கே.எஸ்.பெருமாள்  ksperumal@gmail.com

கே: விண்டோஸ் வந்த வரலாற்றைச் சொல்ல முடியுமா?

ப: இப்போது விண்டோஸ் 7 வந்துவிட்டது. அதற்கு முன்னர் என்ன என்ன விண்டோஸ் வந்தன என்பதைப் பாருங்கள்
  • 1983-விண்டோஸ்
  • 1985-விண்டோஸ் 1
  • 1987-விண்டோஸ் 2
  • 1990-விண்டோஸ் 3
  • 1991-விண்டோஸ் மல்டி மிடியா
  • 1992-விண்டோஸ் 3.1
  • 1993-விண்டோஸ் NT 3.1
  • 1994-விண்டோஸ் Work Groups 3.11
  • 1995-விண்டோஸ் 95
  • 1996-விண்டோஸ் NT 4
  • 1997-விண்டோஸ் CE 2
  • 1998-விண்டோஸ் 98
  • 1999-விண்டோஸ் CE 2.1
  • 2000-விண்டோஸ் 2000
  • 2000-விண்டோஸ் Millenium
  • 2001-விண்டோஸ் XP
  • 2003-விண்டோஸ் Server
  • 2006-விண்டோஸ் Vista
  • 2009-விண்டோஸ் 7
  • 2011-விண்டோஸ் 8
  •  2015-விண்டோஸ் 10


மங்களம் மணியரசு  mansya91@gmail.com

கே: விண்டோஸ் ரிஜிஸ்டரி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். இணையத்தில் பல தளங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தெளிவாக இல்லை. ஒரு நல்ல இடத்தைச் சொல்லுங்கள்.

ப: Windows Registry பற்றி பேசுகிறீர்கள். கணினியின் உயிர் நாடியில் கையை வைத்து பேசுகிறீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். கணினியின் இந்த உயிர்ப் பேழைக்குள் போய் ஒரே ஓர் எழுத்தைத் தவறாக மாற்றினலும் எல்லாம் குட்டிச் சுவராகி விடும். கணினி நிலைகுத்திப் போகும். கணினி கசாப்புக் கடைக்கு வழி கேட்கும். கணினியைப் பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். உச்சந்தலையில் ஒன்பது கிலோ இரும்பைப் போட்டு அடித்தால், பாவம் அந்தத் தலைதான் என்ன செய்யும்.

அந்த மாதிரிதான் நிலைமை இங்கே. ஆக, கணினியைப் பற்றி கரைத்துக் குடித்திருந்தால் தவிர விண்டோஸ் ரிஜிஸ்டரியின்  உள்ளே நுழைய வேண்டாம். என்ன செய்வது. ஆசைப் படுகிறீர்கள். www.winguides.com/registry எனும் இணையத் தளத்தில் தகவல்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்.

தவிர www.majorgeeks.com/download.php?det=539 எனும் தளத்தில் நல்ல தகவல்கள் உள்ளன. ரிஜிஸ்டரியில் கை வைக்கும் முன் அதை ஓர் இடத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பிரச்னை ஏதும் வந்தால் அங்கே இருந்து கோப்புகளை மீட்டுக் கொள்ளலாம். மீண்டும் எச்சரிக்கிறேன். பத்திரம்!

கிருபா சங்கர், பொந்தியான், ஜொகூர்

கே: மனிதனால் செய்ய முடியாததைக் கணினியால் செய்ய முடிகிறது. கணினி மனிதனை மிஞ்சி விடுமா?

ப: அது எல்லாம் சும்மா பேச்சு. மனிதனுக்குக் கட்டுப் பட்டதுதான் கணினி. அவன் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள். அந்த மாதிரி மனிதன் இல்லை என்றால் வெளியே போய் எந்த ஒரு புல்லையும் கணினியால் பிடுங்க முடியாது. ஆக, கணினியை இயக்குவது ஆட்டுவது எல்லாம் மனித மூளைதான். Artifical Intelligence System எனும் செயற்கை மூளைத் திறனைக் கணினிக்குப் பயன் படுத்தி வருகிறார்கள்.

மனிதனைப் போன்று உணர்ச்சி பூர்வமாக சிந்திக்கும் திறமை கிடைக்கலாம். இருந்தாலும் மனிதனுடைய நிலைமைக்கு வர முடியாது என்பது என் கருத்து. சரி. இன்னொரு விஷயம். கணினியில் CON என்று தட்டச்சு செய்து ஒரு கோப்பு (Folder) உருவாக்கிப் பாருங்கள். முடிகிறதா. முடியாது. ஏன் தெரியுமா? மன்னிக்கவும். அது எனக்கும் தெரியாது.