12 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 43

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். (மலேசிய நண்பன் - 27.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
ராஜன் ராஜன்   rjn_rajen@yahoo.com
கே: பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பினேன். போய்ச் சேரவில்லை. நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானது தானா? உறுதி செய்யுங்கள்.

ப: அண்ணன் பில் கேட்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அதுவரை உங்களைப்  பாராட்ட வேண்டும். அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்கிறீர்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி bgates@microsoft.com  என்பதைச் சரியாக எழுதினீர்களா. அவரிடம் பணம் கேட்டால் சில சமயங்களில் கிடைக்கும். அவர் முன்பு போல இல்லை. எல்லாவற்றையும் பார்த்து செய்கிறார். மற்றபடி அவருடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள நாள் ஒன்றுக்கு நூறு பேர் விண்ணப்பம் செய்கிறார்களாம். அவர்களில் நீங்கள் ஒருவரா என்று தெரிய வில்லை. பராவாயில்லை. அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்.
கௌசல்யா, ஜொகூர் பாரு  (குறும் செய்தி 21.10.2009)

கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிக்கிறோம். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறோம். எங்கள் மகளுக்கு தேவைப் படும். உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து கள்.

ப:
நீண்ட கடிதம். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். பழுத்த மரம் கல்லடி படுகிறது என்பார்கள். யாரும் மரத்தை சும்மா அடிக்கவில்லை. பழத்தைத் தான் அடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். விட்டு விடுங்கள். நல்லதைப் பார்ப்போம். நல்லதைப் பேசுவோம். 

நீங்கள் இந்தக் குறும்  செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. திட்டவில்லை என்பதற்காக முதல் மரியாதை. பதில் கிடைக்காதவர்கள்  பொறுத்துக் கொள்ளுங்கள்.

திருமதி.செல்வமணி, ஜாலான் பாராட், பெட்டாலிங் ஜெயா

கே: Cannot delete file: Access is denied. Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use எனும் எச்சரிக்கை என் கணினியில் வந்து கொண்டே இருக்கிறது. பெரும் தொல்லையாக இருக்கிறது. என்ன செய்வது? உதவி செய்யுங்கள். பெரும் புண்ணியமாக இருக்கும்.

ப:
கணினி பயன் படுத்துபவர்களுக்கு இது ஒரு தொல்லைக் கொடுக்கும் எச்சரிக்கை. முக்கிய கோப்புகளைத் திறக்கும் போது இந்தப் பிரச்னை வந்தால் மிகவும் சிரமம். கவலைப் படாதீர்கள். யாம் இருக்க பயம் ஏன்? அதற்கு வழி இருக்கிறது. http://ccollomb.free.fr/unlocker/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று UNLOCKER எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதைக் கணினிக்குள் Install எனும் பதிப்பு செய்யவும். அதன் பிறகு அந்த எச்சரிக்கை கணினியின் ஆயுசு பூராவும்  வராது.

அருண் செல்வராஜா  arjunselvaraja@ymail.com
கே: இணையத்தை முழுமையாக அழிக்க முடியுமா அல்லது தடை செய்ய முடியுமா?

ப:
முடியவே முடியாது. உலகின் மிகப் பெரிய தேடல் இயந்திரமான Google ஐ நிறுத்த சீனா என்ன என்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இப்போது அந்த இரண்டிற்கும் ஒரு பயங்கரமான பனிப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தை பல அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கங்கள் கூட்டாக நிர்வாகம் செய்கின்றன. இணையத்தில் நகல் பராமரிப்பு என்று உள்ளது. ஒருவருடைய சேவையைத் தடை செய்தால் அதே சேவை வேறு ஓர் இடத்தில் இருந்து தொடங்கும். உலகத்தில் முக்கால் வாசி நில நடுக்கம் ஏற்பட்டாலும் இணையத்தை அழிக்க முடியாது.

இளமதி மரியா, Selayang, Kuala Lumpur
கே: Win RAR, Win Zip போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் நிரலி உள்ளதா?

ப:
கோப்புகளைச் சுருக்கி விரிக்க உதவும் நிரலிதான் 'ஜிப்' நிரலி. Win RAR, Win Zip போன்றவை நல்ல 'ஜிப்' நிரலிகள். இருந்தாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டும். 7Zip எனும் நிரலி ஒன்று இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும். http://www.7zip.org எனும் இடத்தில் கிடைக்கிறது.
  
குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வர வர பயன்படுத்த வெறுப்பாக இருக்கிறது. கணினியை On  செய்து விட்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வரும் வரையில் திரையில் எதுவும் வராது. நான் பயன்படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?


ப: இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. சரி, எப்படி இருப்பினும் உடனடியாகச் செய்யக்கூடிய நிவாரணங்களைச் சொல்கிறேன். தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.  Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

வி.முருகையா, அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு
கே: ஒரு கணினிக்கு Hard Disc முக்கியமா Processor முக்கியமா?

ப:
ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை முக்கியமா பெண்பிள்ளை முக்கியமா என்று கேட்பது போல இருக்கிறது. இரண்டுமே முக்கியம். Processor எனும் செயலர் அல்லது மையச் செயலகம் ஒரு கணினிக்கு மூளையைப் போன்றது. மூளை இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலத்தான் கணினிக்குச் செயலரும். இருந்தாலும் தகவல்களைச் சேகரித்து வைக்க ஒரு வங்கி வேண்டுமே. அந்த வங்கிதான் தட்டகம். வேண்டும் என்கிற நேரத்தில் செயலர் தன் வேலைக்காரர்களை அனுப்பி, தனக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்துவிடுவார். சும்மா சொல்லக்கூடாது. தட்டகமும் ஓடி ஓடித் தகவல்களை விரட்டி விரட்டிப் பிடிப்பார். அதுவும் ஒரே ஒரு வினாடியில் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும். ஆக, பாரபட்சம் காட்டக்கூடாது. செயலர் இல்லை என்றால் தட்டகம் இல்லை. தட்டகம் இல்லை என்றால் செயலர் இல்லை.  

குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?

ப:
தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம். அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள். அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?

ப:
கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக  மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM120.  AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 42

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும்.

(மலேசிய நண்பன் - 20.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட், ஜொகூர்

கே: சென்ற வாரம் ஒரு வாசகர்
'This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting' என்பதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டு இருந்தார். WGA என்பதை எப்படி கணினியில் இருந்து நீக்குவது என்று நீங்கள் பதில் கொடுத்தீர்கள். காப்புரிமைச் சட்டத்தை மீறுவது போலத் தெரிகிறது? அந்த மாதிரி செய்யலாமா.

ப: நல்ல கேள்வி. காப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் அசல் விண்டோஸ் செயலியை வாங்கி அதை நகல் எடுப்பது குற்றம். விற்பது குற்றம். வைத்து இருப்பதும் குற்றம்.

ஆனால், சாந்தரூபணி என்பவர்  மருத்துவம் படிக்கும் மாணவி. காசு கொடுத்து விண்டோஸ் அசல் செயலியை வாங்கி இருக்கிறார். அதைத் தன் கணினியில் பதித்த பிறகு அது போலியானது என்று தவறுதலாக எச்சரிக்கை செய்யப் பட்டு இருக்கிறார். இந்த இடத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்யத் தான் வழி சொன்னேன் ஒழிய எலியைப் புலியாக்கும் ரகசியம் எதையும் சொல்ல வில்லையே.

இருந்தாலும் பாருங்கள். எலியைப் பிடிக்கப் போய் உங்களைத் தான் பிலி அடித்து விட்டது. எதற்கும் சகோதரர் பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இருக்கிறேன். bgates@microsoft.com. பாராட்டுப் பத்திரமும் பண முடிச்சும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

குமரன், பீடோர், பேராக்  (குறும் செய்தி 23.10.2009)
கே: சார், வணக்கம். Maxis Broadband பயன் படுத்துகிறேன். Dlm pc x blh guna. Sum pc cn sum cant. Y its hppn. Help pls. 10q?

ப:
தாங்கள் Maxis Broadband எனும் 'மாக்சிஸ் விரிவு அலை' இணையச் சேவையைப் பயன் படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மற்றவை எனக்குத் தெரியாத வேறு உலகத்து மொழியில் எழுதி இருக்கிறீர்கள். எந்த மொழி என்று சொல்லுங்கள். அந்த மொழியை முதலில் படித்து முடித்து விடுகிறேன். அப்புறம் பதில் கொடுக்கிறேன்.

சின்னக்கண்ணன்   sanjay_dila@yahoo.com
கே: என்னுடைய கைப்பேசியில் தமிழ் எழுத்துகளை வரவழைக்க முடியுமா? முடியாதா?

ப:
அது என்ன முடியுமா? முடியாதா? தம்பி சின்னக்கண்ணன், முடியாது என்று சொல்லவே கூடாது. அது எனக்குப் பிடிக்காத விஷயம். முடியும் ஆனால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சரியா. கைப்பேசியை எடுங்கள். Settings >> Phone Settings >> Language >> Select >> தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். இப்போது வெளியே வாருங்கள். எல்லாம் தமிழிலேயே இருக்கும். மறுபடியும் மாற்ற வேண்டும் என்றால் அதே இடத்திற்குப் போய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு நன்றி சொல்லுங்களேன்.


ஊர் பேர் இல்லை.   (குறும் செய்தி 1.11.2009)
கே: கணினியின் CPU வில் GHz என்று வருகிறது. அப்படி என்றால் அதன் வேகமா?

ப:
ஒரு வீட்டுக்கு சும்மா விருந்தாளியாகப் போகிறீர்கள். வீட்டுக்காரர் கதவைத் திறந்ததும் நேராக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.சோபாவில் உட்காருகிறீர்கள். தொலைக் காட்சியைத் திறக்கிறீர்கள். ரிமோட் வேலை செய்ய வில்லை என்று புகார் செய் கிறீர்கள். இந்த மாதிரி நடந்து கொள்ளலாமா. உங்கள் பெயர் என்ன. எந்த ஊரில் இருக்கிறீர்கள். இதைச் சொல்லிவிட்டு தானே கேள்வி கேட்க வேண்டும். அது தானே முறை.

CPU  என்றால் Central Processing Unit. தமிழில் மையச் செயலகம் என்கிறோம். GHz என்றால் Giga Hertz. மையச் செயலகம் எவ்வளவு வேகத்தில் தகவலைப் பரிமாறுகிறது என்பதை Hertz அளவில் கணக்கு எடுக்கிறார்கள். சில கணினிகள் 1.6 GHz வேகத்தில் தகவலைப் பரிமாறிக் கொள்ளும். சில 3.5 GHz வரை போகும். விலையும் அதிகம்.


இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங், பேராக்
கே: SUNFOS என்றால் என்ன? அது ஒரு செயலியா?

ப:
SUN JAVAதான் நிரலி. நீங்கள் சொல்லும் SUNFOS இருக்கிறதே அது ஒரு தனியார் நிறுவனம். SUNFOS ENTERPRISE என்பது முழுப் பெயர். ஈப்போ, புந்தோங்கில் இருக்கிறது. இவர்கள் தொலைக்காட்சி, வானொலி, CD Player எனும் குறுவட்டு இயக்கி, Amplifier எனும் இடையகப் பெருக்கி போன்றவற்றைப் பழுது பார்க்கிறார்கள். ஆர்.பிரகாஷ் எனும் இளைஞர் நடத்தி வருகிறார். உதவி தேவைப் படுபவர்கள் 012-3502653 எனும் எண்களுக்கு அழைக்கலாம். நம்முடைய இளைஞர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும்.


மஞ்சள் வெயில்   manja_veyil14@gmail.com
கே: சார், நீங்கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக இணையத் தளம் செய்து கொடுக்கிறீர்களாமே. உண்மையா?

ப:
ஆமாம். நம்முடைய பொழுது போக்கே இணையத் தளங்கள் தயாரிப்பது. போன வருடம் மட்டும் ஐந்து பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன். எந்தக் கட்டணத்தையும் கேட்கவில்லை. இருந்தாலும் சில கசப்பான அனுபவங்கள். அந்த இலவசச் சேவையை மாற்றிக் கொண்டேன். எல்லாமே இலவசமாகப் போனால் அதில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது இல்லையா.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இணையத் தளங்கள் தயாரிக்க விரும்புகிறவர்கள் 012-5838171 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசலாம். அது எல்லாம் சரி. உங்கள் பெயர் என்ன உண்மையிலேயே மஞ்சள் வெயில் தானா. நல்ல அழகான பெயர். அந்தக் காலத்து 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாட்டு ஞாபகம் வருகிறது.

அன்பரசன், செங்காட் ஆசா, தஞ்சோங் மாலிம், பேராக்
கே: சார், என் கைப்பேசியில் ஆங்கில அகராதியை வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். முடியுமா?

ப:
மறுபடியும் முடியுமா முடியாதா வந்து இருக்கிறது. முதலில் http://www.getjar.com/products/10603/Dictionary எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். அடுத்து உங்கள் கைப் பேசியின் வகையைத் தேர்வு செய்யுங்கள். வகை என்றால் Model. பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி கணினிக்குள் சேமித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கைப்பேசிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

(Do you like this article. Please press the Thamilish and Ulavu voting buttons. Thanks.)

10 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 41

(மலேசிய நண்பன் - 13.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)


குமாரி.சாந்தரூபனி, ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா.

கே: சார், என்னுடைய கணினியில் This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. எப்படி நிறுத்துவது? விண்டோஸ் XP போடுவதற்கு என்னிடம் RM 360 வாங்கி விட்டார்கள். ஆனால், நான் பயன் படுத்தும் விண்டோஸ் போலியானது என்று என் சக தோழி சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. சரியாக சாப்பிட தூங்க முடியவில்லை. நான் மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மகளுக்குச் செய்யும் உதவியாக நினைத்துக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள்.


ப: உங்களுடைய மனவேதனை எனக்குப் புரிகிறது. ஒரு சின்ன விஷயத்திற்குப் போய் சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை என்று சொல்வது எல்லாம் நன்றாக இல்லை. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு டாக்டர் என்பதை மறந்து விடக் கூடாது. மற்றபடி கணினியை விற்றவர் உங்களை ஏமாற்றி இருக்கலாம். அல்லது அசல் விண்டோஸ் நிரலி எண்களை மற்றவருக்கு கொடுத்து இருக்கலாம். அதை மைக்ராசாப்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்ட பிறகு அதே நிரலியை உங்களிடம் கடைக்காரர் கொடுத்து நம்ப வைத்திருக்கலாம். என் மனதில் பட்ட விஷயம். சரி. யார் பக்கம் நியாயம் இருக்கிறது. தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

கணினியை Restart செய்யுங்கள். கணினி திறக்கும் போது F8 பொத்தானைத் தட்டுங்கள். அதில் Safe Mode என்பதைத் தட்டுங்கள். உள்ளே நுழைந்து ஆகக் கீழே இருக்கும் Run என்பதைச் சொடுக்குங்கள். regedit.exe என்று தட்டச்சு செய்யுங்கள். wgalogon எனும் கோப்பு இருக்கும். அதை அழித்து விடுங்கள். முடிந்ததா. இப்போது கணினியை அடைத்துவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். எல்லாம் சரியாக நடந்து இருக்கும். முடிந்தால் C drive ல் windows கோப்புக்கு போய் wga எனும் கோப்பையும் அழித்து விடுங்கள். சகோதரர் பில் கேட்ஸ் ஏழைகளுக்குச் சொன்ன ரகசியங்கள். இது தற்காலிகமானது. எப்படி இருந்தாலும் நீங்கள் மறுபடியும் புதிதாக ஒரு விண்டோஸ் செயலியை வாங்க வேண்டி இருக்கும். இனிமேல் நம்பிக்கையான இடங்களில் கணினியைக் கொண்டு போய் கொடுங்கள். பணத்திற்கு ஆசைப் படும் மோசக்காரர்களைப் பற்றி வெளியே சொல்லுங்கள்.

வசந்தமோகன் vasanth67@gmail.com

கே: இலவசமாக வாழ்த்து அட்டைகள் எந்த இணையத் தளத்தில் கிடைக்கும்? இலவச மின் வாழ்த்துகளைத் தயாரிக்க மென்பொருள் கிடைக்குமா? காதல் தினத்தன்று என் காதலிகளுக்கு மின் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும். உதவி செய்யுங்கள் சார்.


ப: காதலிகள் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள். எதற்கும் பார்த்துச் செய்யுங்கள். நிறைய காதலிகளுக்கு வாழ்த்து களை அனுப்பி கடைசியில் நீங்கள் ஒரு வாயில்லா ஜீவனாக மாறக் கூடாது.

Google தேடல் இயந்திரத்தில் போய் 'Lovers e-greetings' என்று தட்டுங்கள். ' ' எனும் தனிப்பட்ட குறிகள் இருக்க வேண்டும். மின் அட்டைகள் சரம் சரமாய்க் கொட்டும். காதல் தினத்தன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். புண்ணியம் சேருங்கள். ஏழைகளை உங்கள் வாழ்வின் காதலர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையும் வசந்தம் ஆகும். உங்களுக்காக மின் வாழ்த்து மென் பொருளைத் தேடப் போனேன். 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' என்று பழைய பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. என்னுடைய இரண்டு வயது பேத்தி தாத்தா தாத்தா என்று அழைத்ததும்  அந்தக் கனவுகள் எல்லாம் கலைந்து விட்டன.

அர்ச்சனா முனுசாமி  archana.munusamy@yahoo.com

கே: சார், நீங்கள் அண்மையில் படித்த சுவையான இணையச் செய்தி எதுவும் இருக்கிறதா?

ப: அடுத்த கேள்வியைப் படிக்கவும்.


முகிலன் ராஜமோகன்   mugilan_rajamohan@yahoo.com

கே: அமைதிக்கு அன்னை திரேசா. அகிம்சைக்கு அண்ணல் காந்தி. அதிரடிக்கு அண்ணன் பில் கேட்ஸ். பொருத்தமாக இருக்குதானே.

ப: கணினி மன்னன் பில் கேட்ஸ் உங்களுக்கு அண்ணனாக இருக்கலாம். ஆனால் அவர் எனக்கு உடன் பிறவாச் சகோதரர். இது நல்லா இருக்குதானே.


கார்த்திகாஜித், மாசாய், ஜொகூர்    karthikajith@aol.com

கே: கைப்பேசிக்கும் I-Phone க்கும் உள்ள வித்தியாசம் என்ன? I-Phone க்கு தமிழில் என்ன பெயர்?


ப: கைப்பேசியில் அழைப்புகளை அனுப்பலாம். அழைப்புகளைப் பெறலாம். சில கைப்பேசிகளில் படங்களைப் பிடிக்கலாம். I-Phone என்பது அதற்கும் மேலே ஒரு படி போய் வேலை செய்கிறது. Internet Phone என்பதுதான் I-Phone ஆக மாறியது. இதை அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிள் Apple நிறுவனம் 2007 ல் கண்டு பிடித்தது. இதில் விண்டோஸ் போன்ற ஆப்பிள் அடிப்படைச் செயலி, இணையம், மின்னஞ்சல் வசதி, Media Player எனும் ஊடக இயக்கி, Video எனும் நிழல் படம், Screen Saver எனும் திரைக் காப்பு, RAM எனும் நினைவகம், Wi Fi தொடர்பு, LAN எனும் உள்ளகப் பிணையம், Chatting எனும் இணைய அரட்டை, தட்டச்சு, CPU எனும் மையகச் செயலகம் என்று நிறையப் பயன் பாடுகள் உள்ளன. கடினமான அறிவியல் கணக்குகளைச் செய்யலாம். தமிழில் கைக்கணினி அல்லது இணையக் கைப்பேசி என்றும் அழைக்கலாம். இந்த இரண்டுமே அடியேன் உருவாக்கியச் சொற்கள். வேறு பொருத்தமான சொற்கள் இருந்தால் சொல்லுங்கள்.


வெங்கடேஷ் ராவ், கோலாலம்பூர்

கே: என்னுடைய கணினியில் NTLDR is missing எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது?


ப: NTLDR என்றால் New Technology Loader என்று அர்த்தம். விண்டோஸ் செயலி செயல் பட ஆரம்பிக்கும் போது இந்தக் கோப்பு தேவை. சின்னச் சின்ன ஆரம்பக் கட்டச் செயலிகள் அதன் உள்ளே இருக்கும். அந்தக் கோப்பு இல்லாமல் கணினி தன் வேலையைச் செய்ய முடியாது. ஆக, அந்தக் கோப்பு பழுது அடைந்து இருந்தால் மேற்சொன்ன எச்சரிக்கை வரும். கணினியைத் திறக்க முடியாது. சரி. எப்படி நிவர்த்தி செய்யலாம். வழி இருக்கிறது. ஆனால், சற்று சிக்கலானது. கணினியைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் அவ்வளவு சுலபத்தில் சரி செய்ய முடியாது.

http://www.quickonlinetips.com/archives/2005/12/ntldr-is-missing-press-any-key-to-restart/

எனும் இடத்தில் விவரங்களைச் சொல்கிறார்கள். படித்துப் பாருங்கள். கணினியைப் பழுது பார்ப்பவரிடம் உங்கள் கணினியை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை வரும். கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். கணினிகளைப் பழுது பார்த்துக்
கொடுக்கும்படி எனக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும் ஜொகூர் பாரு, பினாங்கு, குவாந்தான், கிள்ளான் போன்ற இடங்கள்தான். தொலை தூர இடங்கள். ஈப்போவாக இருந்தால் கண்டிப்பாக என் சேவை கிடைக்கும்.


கௌசல்யா, ஜொகூர் பாரு

கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிப்பேன். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறேன். என் மகளுக்கு தேவைப் படும். ஆனால், உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்களைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில் பயன் அளிக்கிறது. மிக்க நன்றி. மேலும் தொடர என் வாழ்த்துகள்.


ப: உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு ரொம்பவும் நன்றி. பழுத்த மரம் கல்லடி படுகிறது என்றால் யாரும் மரத்தை அடிக்கவில்லை. பழத்திற்கு ஆசைப் பட்டு கல்லையும் கம்பையும் விட்டு பழத்தை தான் அடிக்கிறார்கள். இதை எல்லாம் பெரிசாக நினைக்கக் கூடாது. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம்.

இன்னொரு விஷயம். நீங்கள் இந்தக் குறும் செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. மன்னிக்கவும். ஒரு நூறு பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

09 ஏப்ரல் 2010

ஜெயவர்மன் சூரியவர்மன் - வரலாற்றுக் கட்டுரை


ஜெயவர்மன் சூரியவர்மன்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

இந்தக் கட்டுரை இன்னும் மலேசியா நாளிதழ்களில் வரவில்லை. நானும் அனுப்பவில்லை. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நானும் என் மனைவியும் கம்போடியா போய் வந்தோம். அது தொடர்பான படங்களை http://ksmuthukrishnan-pix.blogspot.com/2009_09_01_archive.html  எனும் இடத்தில் பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் இருப்பவர் என் மனைவி ருக்குமணி. மலேசியாவில் ஒரு நல்ல எழுத்தாளர். இவரைப்பற்றிய விவரங்கள் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் இருக்கிறது. அதன் முகவரி:
 http://ta.wikipedia.org/wiki/ருக்குமணி_முத்துக்கிருஷ்ணன்

உலக அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். எட்டு என்பதுதான் சரி. காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த எட்டாவது அதிசயம்  1860ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப் பட்டது. Henri Mahout என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.  ஒரு தாவர ஆராய்ச்சியாளர். கம்போடியக் காடுகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் தேடிக் கொண்டு போனார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஆல மர வேர்கள் வலை பின்னிய ஒரு சிவன் ஆலயத்தில் தடுக்கி விழுந்தார். அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான  கோட்டைகள்.

பார்க்கிற இடம் எல்லாம் கோயில்கள் குளங்கள். நீர் பூக்கும்  தாமரைத் தடாகங்கள். சரம் சரமாய்ச் சலங்கைகளை வார்த்துச்  சுதி பாடும் கருங்கல் சிலைகள்.  தில்லை அம்பலத்தின் திவ்யச் சுந்தரங்கள்.  அற்புதச் சிற்பங்கள். அழகு பார்க்கும் ஆயிரம் கால் மண்டபங்கள். 

சொர்க்க லோகத்தைக் காட்டும் சொப்பனச் ஜீவன்கள்


சிற்ப சாஸ்திரங்களின் படி கிழக்கு மேற்கு கோபுரங்கள். வெளிப் பிரகாரத்தில் கருங்கல் தள வரிசைகள். அவை எல்லாம் சொர்க்க லோகத்தையே திறந்து காட்டும் சொப்பனச் ஜீவன்கள். புராண இதிகாசங்களை அழகழகாய் அபிநயம் பிடிக்கும் ஆலாபனைகள். மனிதர் கிரங்கிப் போனார்.

அவை எல்லாம் பல நூறு ஆண்டுகள் கம்போடியக் காடுகளில்  மர்மமாய் மாயமாய் மௌன ராகம் பாடிக்கொண்டிருந்த கலைக் காவியங்கள். கலா ஓவியங்கள். உலக அதிசயங்களின் ஒட்டு மொத்தப் பேழைகள். இப்படி ஓர் அதிசயம் இருப்பதை உலகத்திற்குச் சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. 1930 ஆம் ஆண்டுகளில் அந்த அதிசயத்தைப் பற்றிய தீவிர ஆய்வுகளில் இறங்கினார்கள்.

Airborne Synthetic Aperture ராடார் அதி நவீன கருவிகளைப் பயன் படுத்தி எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் ராமர் பாலம் சர்ச்சை    தெரியும் தானே. உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியைத் தான் பயன் படுத்தினார்கள். அதன் முடிவு என்ன. ஊர் வம்பு வரும். வேண்டாமே.

அலை அலையான கலா ரகசியங்கள்


இதற்கு அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம் பெரிதும் உதவியது. அப்புறம்  நேராகப் போய் படம் எடுத்தார்கள். அந்தப் படங்களைப்  பார்த்து உலகமே வியந்து போனது. அவை எல்லாம் உண்மையாக இருக்குமா  என்று அனைத்துலகப் பட்டி மன்றங்கள் வேறு நடத்தினார்கள்.

நான் பார்த்ததைச் சொல்கிறேன். காடுகள் நெடுகிலும் அற்புதமான லீலா விநோதச் சிலைகள். அலை அலையான வெளி  மதில்கள். நடன மோகனத் தாரகைகளின் நவரச நாட்டியங்கள். சாகும் வரை சலைக்காமல் பார்க்க வேண்டிய சித்திரா இழை பாடுகள். மூச்சு நிற்கும் போதும் கூட மூச்சு விடாமல் பார்க்க வேண்டிய மனோ ரஞ்சிதங்கள். மூச்சு போன பிறகும் கூட மூன்றாம் பிறையைப் போல சரசமாடும் சர்வ லோக அப்சரங்கள்.

அத்தனையும் அப்சரங்கள். அவற்றை அப்சாரா என்று கம்போடியர்கள் அழைக்கிறார்கள்.  என்னே கலா அதிசயங்கள். ஒளி வீசிக் கொண்டு இருக்கும் ஊர்வசிகள் ரம்பைகள். ஊர்வலம் போகும் சொப்பனச் சுந்தரிகள். போதும். இதற்கு மேல் கேட்க  வேண்டாம். மற்றதை நீங்களே போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த அதிசயத்தைக் கம்போடிய மக்களே முதலில் நம்பவில்லை. மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. வேறு உலகத்தில் இருந்து மகா மெகா மனிதர்கள் வந்தார்களாம். கோயில்களைக் கட்டினார்களாம். குளங்களைத் தோண்டினார்களாம். சிலைகளைச் செதுக்கினார்களாம். ஆலமரங்களை நட்டார்களாம். 

அப்புறம் தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பறந்து விட்டார்களாம். எல்லாரும் கை எடுத்துக் கும்பிட்டு அழுதார்களாம். சீரியஸாகச் சீரியல்களைப் பார்த்தால் பேரிளம் பெண்களின் விசும்பல் சத்தம் கேட்கும் இல்லையா. அந்த மாதிரி ஏதாகிலும் நடந்து இருக்கலாம்.

ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள்

கம்போடியர்கள் இப்போது அதை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். பார்க்க வருபவர்களிடம் ஆண்டுக்கு எழுநூறு கோடி ரிங்கிட்டிற்கு டிக்கெட் விற்று சந்தோஷப் படுகிறார்கள். அந்த உலக அதிசயம்தான் அங்கோர் வாட்.

இந்த அதிசயத்தின் பின்னால் நீண்ட நெடிய  வரலாறே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அங்கோர் வாட் ஆலயங்களைக் கட்டிய ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைச் சொல்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது நம்முடைய ஆசை.

கட்டுரையை எழுதுவதற்காக அண்மையில்  கம்போடியா நாட்டின் அங்கோர் வாட்டிற்கே போய் வந்தேன். என்னுடன் வந்தவர்களைப் பற்றிய விவரங்களைப்  பிறகு சொல்கிறேன்.

முதலில் அங்கோர் வாட் வரலாற்றை ஆரம்பத்திலிருந்தே சொல்ல வேண்டும். அப்போதுதான் ஜெயவர்மன் சூரியவர்மன் கதையும் உங்களுக்குப்  புரியும். சரியா.

கி.பி.100ஆம் ஆண்டுகளில் அதாவது 1900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.    தென் கிழக்கு ஆசியா மாபெரும் வணிகத் தளமாக, வாணிபக் கேந்திரமாக விளங்கியது. வடக்கே சீனாவில் இருந்து பட்டுத் துணிகள் வந்தன. பாரசீகத்தில் இருந்து பலசரக்குகள் வந்தன. இந்தியாவில் இருந்து இந்து-புத்த மதச் சித்தாந்தங்கள் வந்தன. இதில் இந்தியர்களும் சீனர்களும்தான்  அதிகமாக வந்தனர்.

புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம்

சரி. அப்படி வியாபாரம் செய்ய வந்தவர்கள் தங்களுடைய கலைகளையும் கலாசாரங்களையும் கொண்டு வந்தனர். அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்கள் அந்தக் கலா மரபுகளுக்குள் கவர்ந்து இழுக்கப்பட்டனர்.

அங்கு வாழ்ந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம். அதனால் வித்தியாசமான வியூகங்கள். வித்தியாசமான அணுகு முறைகள். 

இதில் இந்தியர்களின் கலை, சமயம், சட்ட ஒழுங்கு முறைகள், அரசியல் சாணக்கியம், எழுத்து, இலக்கியம் போன்றவை பூர்வீகக் குடிமக்களை வெகுவாகப் பாதித்து விட்டன. பாதிப்பு என்றால் இங்கே ஈர்ப்பு என்று அர்த்தம்.

அந்த வகையில் இந்திய இனங்களைச் சார்ந்தவர்கள் சின்னச் சின்ன நிலப் பிரபுகளாக  மாறினார்கள். அவர்கள் தனித் தனியாகச் சின்னச் சின்ன நகரங்களை உருவாக்கினார்கள். அந்த நகரங்களுக்குள் கோட்டைகளைக் கட்டினார்கள். அந்தக் கோட்டைகளுக்குச் சுவர்கள், மதில்கள், பாதுகாப்பு அரண்கள். அதற்குள் பூர்வீக மக்களின் அடிமைத்தனச் சேவைகள்.

நாளடைவில் ஆளுமையும் அதிகாரமும் பெருகின. ஆசைகளும் மல்கின. ஒரு சில படிகள் மேலே போனர்கள். தங்களைக் குறுநில மன்னர்களாக, நிலப் பிரபுகளாக  மாற்றிக் கொண்டார்கள். அப்புறம் என்ன. மண்ணாசைக்குப் பின்னால் பெண் ஆசையும் கலைக் கட்டியது. இயற்கையான மனித இயல்புகள்தானே.

Funan என்பது பூநாண்

தொட்ட குறை விட்ட குறையாகப் பொன் ஆசையும் ஒட்டிக் கொண்டது. அவருடைய நிலத்தை இவர் பிடுங்குவதும், இவருடைய மனைவி மக்களை மற்றவர்  இழுத்துச் செல்வதும் சகஜமாகிப் போனது.  இவை எல்லாம் என்ன நேற்று இன்று நடக்கிற விஷயமா. காலாகாலத்திற்கும் அரிச்சுவடி ஆகிப் போன கலைகள் தானே. அது ஆரம்பக் கட்டம். ஒரு சாம்ராஜ்யம் உருவாகின்ற காலக் கட்டம்.

கம்போடியாவுக்கு வட மேற்கில் இருப்பது வியட்நாம். இந்த வியட்நாமில் கி.பி.300 ஆவது ஆண்டுகளில் பலம் வாய்ந்த ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவாகியது.

அந்தச் சாம்ராஜ்யத்தின் பெயர் பூனான்.  அது  செழிப்பும் கொழிப்புமாகப் புகழின் உச்சியில் வளர்ந்து கொண்டிருந்தது.  Funan என்பது என்னவோ சீனச் சொல் மாதிரி இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். அது ஒரு சமஸ்கிருதச்  சொல். இருந்தாலும் பூனான் என்றால் சீன மொழியில் மலை என்று பொருள்.

காலப் போக்கில் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, பர்மா, மலாயாவின் வட பகுதிகள் எல்லாம் பூனான் ஆட்சியின் கீழ் வந்தன. பூனான் ஓர் இந்திய சாம்ராஜ்யம். நம்ப முடிகிறதா.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்றால்  நம்ப முடிகிறதா. இவற்றை எல்லாம் எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. அவர்கள் விட்டு விட்டுப் போகாமல் இருந்தால் வரலாறு இப்போது வேறு மாதிரியாக இருக்கும் இல்லையா.

கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர்


கம்பு எனும் பிராமணர்தான் பூனான் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68)  என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Ruler_of_Cambodia எனும் இணையத் தளத்தில் இந்த விவரங்கள் உள்ளன. ஆனால், விரிவாக இல்லை. கம்பு எனும் கவுந்தன்யா கம்போடியாவுக்கு வந்தார். நிலங்களை வாங்கிப் போட்டார். சில ஆண்டுகளில் நிலப் பிரபுவாக மாறினார்.

அங்கே உள்ள பூர்வீகப் பெண்ணைக் கல்யாணம் செய்தார். அவளுடைய  பெயர் Saoma எனும் மீரா. பின்னர் கம்புவின்  நிலபுலன்கள் எல்லாம் கிராமங்களாக மாறின. அப்புறம் கிராமங்கள் மாவட்டமாக மாறியது. மாவட்டங்கள் ஒரு சாம்ராஜ்யமாகவே மாறியது. இப்படித் தான் பூனான் சாம்ராஜ்யம் உருவானது. சரியா.

கம்பு என்பவரின் பெயரில் இருந்துதான் கம்புஜா எனும் நாட்டின் பெயரும் உருவானது. கம்போடியாவின் இப்போதைய பெயர் கம்புஜா. அப்படியா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விஷயம் என்னவோ புதிசு. இருந்தாலும்  வரலாறு இருக்கிறதே அது ரொம்பவும் பழசு. அவருக்குப் பின் பல அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். முந்நூறு ஆண்டுகளுக்குச் சரியான வரலாற்று விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததைத் தருகிறேன்.

கி.பி.100 லிருந்து கி.பி.434 வரை எட்டு அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். Hun Panhuang, Fan Shih-Man, Fan Chin-Sheng, Fan Siyun, Tian Chu Chantan எனும் பெயர்களில் சீன அரசர்களும் இருந்து இருக்கிறார்கள். கி.பி.434 க்குப்  பின் வந்தவர்கள்.

ஸ்ரீஇந்திரவர்மன் (கி.பி.434- கி.பி.435)
கவுந்தன்யா ஜெயவர்மன் (கி.பி.484- கி.பி.514)
ருத்ரவர்மன் (கி.பி.514- கி.பி.550)
பவகவர்மன் (கி.பி.550- கி.பி.600)
மோகேந்திர வர்மன் (கி.பி.600- கி.பி.616)
ஈசனவர்மன் (கி.பி.616- கி.பி.635)
பவகவர்மன் I (கி.பி.639- கி.பி.657)
ஜெயவர்மன் 1 (கி.பி.657- கி.பி.681) 
ஜெயாதேவி (கி.பி.681- கி.பி.713)

இது இப்படி இருக்க,  பூனான் சாம்ராஜ்யத்திற்கு வடக்கே செந்திலா எனும் ஒரு குட்டி சாம்ராஜ்யமும் இருந்தது. இந்தச் செந்திலா குட்டி சாம்ராஜ்யமும் பூனான் ஆளுமையின் கீழேதான் இருந்தது. கி.பி.600 ஆம் ஆண்டுகளில் நம்முடைய பூனான் ஆட்சியில் குளறுபடிகள் நிகழ்ந்தன. ஆட்சியும் ஆட்டம் கண்டது.

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டது செந்திலா குட்டி அரசு. பூனானின் வடக்குப் பகுதியைக் கலவரம் செய்து  பிடித்துக்  கொண்டது. கீழே தாய்லாந்தில் இருந்த Mon பூர்வீக மக்கள் சும்மா இருப்பார்களா. அவர்களும் தங்கள் பங்கிற்கு தென் பகுதியைப் பிடித்துக் கொண்டனர்.


சைலேந்திரா மன்னர்கள் 

இந்த 'மோன்' அரசுதான் இப்போதைய தாய்லாந்து. செந்திலா அரசு இருக்கிறதே அது இப்போதைய கம்போடியா. காலம் ஓடியது. செந்திலா அரசும் எஞ்சி மிஞ்சி இருந்த மற்ற எல்லா பூனான் நிலத்தையும் அடித்துப் பிடித்துக் கொண்டது.
செந்திலா அரசர்கள் கி.பி.706 லிருந்து கி.பி. 802 வரை இந்திய மன்னர்களின் பூனான் அரசை ஆட்சி செய்தார்கள்.

செந்திலா ஆட்சிக்கு வந்ததும் பூனான் பரம்பரையைச் சேர்ந்த இளவரசர்கள் கண் காணாத இடங்களுக்கு போய் மறைந்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் நம்முடைய அங்கோர் வாட் கதாநாயகன் ஜெயவர்மன் II. இவர் ஜாவா தீவில் நாடோடியாய் வாழ்ந்தார். அப்போது ஜாவாவை சைலேந்திரா சாம்ராஜ்யம் ஆட்சி செய்து வந்தது. பலம் வாய்ந்த அரசு. சைலேந்திரா மன்னர்கள்  ஜெயவர்மன் II ஐ நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சைலேந்திரா அரசு ஜாவா தீவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசு சுமத்திராவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசும் சைலேந்திர அரசும் நல்ல உறவுகளூடன் வாழ்ந்தவை. இந்தோனேசியாவை மொத்தமாக இந்தியர்கள் ஆட்சி செய்து வந்த காலம் என்றும் சொல்லலாம்.

இந்தக் காலத்தில் தான் Borobudur 'போராபுடுர்'  எனும் புத்த நினைவுக் கோட்டையும் கட்டப் பட்டது. கட்டியவர்கள் சைலேந்திரர்கள். இந்த 'போராபுடுர்' இருக்கிறதே இது தான் உலகிலேயே இப்போதைக்கு மிகப் பெரிய புத்த நினைவு ஆலயக் கோட்டை.

இந்தக் காலக் கட்டத்தில் மேலே செந்திலா ஆட்சியில் பிரச்னை புகையத் தொடங்கியது.. உள்நாட்டுப் போர். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் செந்திலா அரசு இரண்டாக உடைந்து போனது.

பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை. ஒரு நல்ல நாள் பார்த்து ஜெயவர்மன் II கம்போடியாவுக்கு வந்தார். சும்மா வரவில்லை. ஜாவாவிலிருந்து ஒரு பெரிய படையைக் கொண்டு வந்தார்.

வந்தது கி.பி. 790 ஆம் ஆண்டு. கம்போடியாவைக் கைப்பற்றியது கி.பி.802ல். 25 ஆண்டுகள் தொடர்ந்து கடல் போர். இந்த ஜெயவர்மன் II தான் கம்போடியாவின் தலை எழுத்தையே மாற்றிப் போட்டவர்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இந்தியப் போர் நடந்தது பலருக்குத் தெரியவே தெரியாது.

இந்த ஜெயவர்மன் தான் கம்போடியாவை அந்தக் காலத்தில் வல்லரசாக மாற்றியவர். தாய்லாந்தைத் தலை குனிய வைத்தவர். சீனாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தங்களின் எதிரியான செந்திலா ஆட்சியை அடியோடு துடைத்து ஒழித்தவர்.

சிவன் விஷ்ணு ஆலயங்கள்

கம்போடியா நாட்டை விரிவு படுத்தி ஹரிஹரலயா எனும் மாபெரும் நகரத்தையும் உருவாக்கினார். லிங்கத்தை வழி படுதல், சிவா, விஷ்ணு தெய்வங்களை வழி படுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தவரும் இவரே. அவர் செய்த இன்னும் ஒரு பெரிய காரியம்  யசோதபுரம் எனும் தலைநகரை உருவாக்கியது. ரவுலஸ் கோட்டைகளைக் கட்டியது.

ஆனால், உலக அதிசயமான அங்கோர் வாட்டை இவர் கட்ட வில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். அவர்தான் கட்டியதாகப் பலர் இன்னும் நினைத்து வருகிறார்கள்.  இவர் நிறைய சிவன் ஆலயங்களைக் கட்டினார். விஷ்ணு ஆலயங்களைக் கட்டினார். உண்மைதான். இவருடைய பெயரால் சியாம் ரியாப் நகரில் இன்றும் ஒரு பெரிய மருத்துவமனை இயங்கி வருகிறது. 

கி.பி. 850ல் ஜெயவர்மன் II இறந்து போனார். அவருக்குப் பின் ஜெயவர்மன் III என்பவர்  வந்தார். இவர் பல மலை ஆலயங்களைக் கட்டினார். அதன் பின்னர், இந்திரவர்மன் I வந்தார். இவரும் கி.பி. 879ல் பிரியா கோ ஆலயத்தையும், கி.பி. 881ல் பாகோங் ஆலயத்தையும் கட்டினார்.

அடுத்து வந்த யசோவர்மன் I கி.பி.893ல் அங்கோர் பகுதிக்கு தன் தலைநகரத்தை மாற்றினார். முதல் ஆலயக் கோயிலையும் அங்கேதான் கட்டினார்.

அடுத்து வந்த ஹர்ஷவர்மன் 1 என்பவர் பிரசாத் கார்வண் எனும் கோயில்களைக் கட்டினார்.

அடுத்து ஜெயவர்மன் IV வந்தார். இவர் பங்கிற்கு இவரும் பல அரண்மனைகளைக் கட்டினார். தெப்பக் குளங்கள் கட்டப் பட்டன. அதற்கு அடுத்து சூரியவர்மன் II என்பவர் வந்தார். இவர்தான் அங்கோர் வாட் அதிசயத்தைக் கட்டியவர். தென் கிழக்கு ஆசியாவைக் கம்போடியாவின் கீழ்   கொண்டு வந்தவர் இவர்தான். முதலில் தாய்லாந்து விழுந்தது. அடுத்து வியட்நாம் விழுந்தது.

பைத்தியம் பிடித்த மனிதர்கள்

அவர் கட்டிய கோயில்களைப் போய்ப் பாருங்கள். இப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்களே. பைத்தியம் பிடித்த மனிதர்கள் என்று நினைக்கத் தோன்றும். மூலைக்கு மூலை கோயில்கள். பார்க்கும் இடம் எல்லாம் கல் தூண்கள். மொத்தம் 2000 கோயில்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வருடம் சுற்றினாலும் பார்த்து முடிக்க முடியாது.

அதோடு அந்தக் கோட்டைகளையும் கோயில்களையும் எண்ணிப் பார்க்கவும் முடியாது.   ஏனென்றால் பார்க்கும் இடம் எல்லாம் கோயில்களாகத் தான் இருக்கும். எப்படி எண்ணுவது. இடது பக்கம் திரும்பினால் கண்ணுக்கு எட்டிய வரை கோயில்கள். வலது பக்கம் பார்த்தால் அதே மாதிரிதான். மொத்தம் பதினாறு சதுர கிலோமீட்டர் அளவுக்கு கோயில்கள், குளங்கள், ஏரிகள், தாமரைத் தடாகங்கள். முன்னூறு நானூறு வருடங்களுக்கு ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அங்கோர் வாட்டின் உள்ளே நுழைந்ததுமே நமக்குள் ஒரு பயம் வந்துவிடுகிறது. அது என்ன பயமோ தெரியவில்லை. ஆனால், எனக்கும் வந்தது.  ஒரு மாதிரியான பயம். இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு கட்டி இருக்கிறார்களே. எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள். எப்படி கட்டி இருப்பார்கள். என்ன மாதிரியான அறிவியல் அறிவு அவர்களிடம் இருந்து இருக்கும். அவர்களும் நம்மைப் போன்ற இந்தியர்கள்தானே. இந்த மாதிரியான எண்ணங்கள் வந்தன

ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகு இந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும்  கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.

இவர் இறந்த பிறகு கம்போடியா பலகீனமாகிப் போனது. கம்போடியா என்கிற நாடு சியாம் ஆட்சியின் கீழ் வந்தது. சில ஆண்டுகளில் சியாம் ஆட்சியும் சிதைந்தும் போனது. அப்புறம் பலப் பல மாற்றங்கள், பலப் பல அரசியல் திருப்பங்கள்  ஏற்பட்டன. இப்போது இந்த அங்கோர் வாட்டை உலகச் சுற்றுப் பயணிகளிடம் அடகு வைத்துக் கொண்டு கம்போடியா தன் வறுமையைத் துடைத்து வருகிறது. இது தான் விஷயம்.

இப்போது இருக்கின்ற உலக அதிசயங்களில் சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடுகள், தாஜ் மகால் தவிர அடுத்த நிலையில் இருக்கும் அதிசயம் இந்த அங்கோர் வாட் தான். ஐந்தாவதாக ஜாவாவில் உள்ள பொரபடுர் கோயில்கள் வருகின்றன. என்னுடன் வந்து எனக்கு பல வகைகளில் உதவி செய்தவர்கள் என் மனைவி ருக்குமணி. மைத்துனர்கள் சந்திரன், குணா. தங்கை நிர்மலா சந்திரன். அவர்களுக்கு நன்றி.

07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 40

 அர்சுன் செல்வராஜா  arjunselvaraja@ymail.com
கே: 'நாளும் ஒரு கீரை' என்று ஓர் இணையத் தளம் இருப்பதாக என் நண்பர் சொன்னார். நான் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் தேடிப் பார்த்துச் சொல்லுங்கள்.

ப: நானும் தேடிப் பார்த்தேன். அப்படி ஓர் இணையத் தளம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கீரைகளைப் பற்றிய இணையத் தளங்கள் தமிழில் நிறைய உள்ளன. www.ruraldoctors.blogspot.com எனும் வலைப்பூ நல்ல தகவல்களைத் தருகிறது.

கீரைகளின் அடிப்படை மருத்துவ முறைகள்; எந்தக் கீரைகள் எந்த நோய்களைத் தீர்க்கும்; குழந்தைகள் எந்தக் கீரைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இரத்தச் சோகை நோய் வந்தால் அவர்களுக்கு பேய் பிடித்து விட்டது என்ற எண்ணங்கள். சமூகத்தின் தவறான நம்பிக்கைகள் இந்த வலைப் பூவில் சுட்டிக் காட்டப் படுகின்றன.


ஹேமாவதனன், தைப்பிங், பேராக்    hemavath7@gmail.com
கே: விண்டோஸ் 7 என்று ஏன் ஏழாம் எண்ணில் பெயர் வைத்தார்கள். வேறு பெயர் கிடைக்கவில்லையா?

ப: அண்ணன் பில் கேட்ஸ் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் வந்து கேட்கிறீர்கள். நம் தமிழர்களிடம் கேட்டிருந்தால் போதும். ஸ்ரேய்ஸா, நயன்ஸா, அசின்ஸா எனும் உலகம் போற்றும் நல்ல நல்ல பெயர்களைக் கொடுத்து இருப்பார்கள். என்ன செய்வது. விஸ்த்தா எனும் பெயரைக் கொடுத்து விட்டார்கள். விண்டோஸ் விஸ்த்தாவைப் பயன் படுத்தியவர்கள் பலர் அதைத் தூக்கி எறிந்து விட்டு எக்ஸ்.பிக்கு புலம் பெயர்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் விண்டோஸ் என்கிற பெயரையே விட்டு விடலாமா என்று கூட மைக்ராசப்ட் தலைவர்கள் நினைத்தார்களாம். இதுவரை மைக்ராசாப்ட் நிறுவனம் தயாரித்தச் செயலிகளில் விண்டோஸ் 7 என்பது ஏழாவது சிஸ்டம். System - சிஸ்டம் என்றால் கணினியை இயக்கும் அடிப்படைச் செயலி. விண்டோஸ் 7 என்பது ஏழாவதுச் செயலி.

அதனால் அதற்கு விண்டோஸ் 7 என்றே பெயர் வைத்து விட்டார்கள். பெயர் இல்லாமல் 7 என்கிற எண் வருகிறது பார்த்தீர்களா. இந்த விண்டோஸ் 7 இப்போது உலக மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. விஸ்த்தாவின் களங்கத்தை நிவர்த்தியும் செய்து வருகிறது.  


இரா.கணேஷ், சுங்கை பூலோ, சிலாங்கூர்    ganes_9918@yahoo.com
கே: ஒவ்வொரு கணினிக்கும் IP Address  இணைய முகவரி இருப்பதாகச் சொல்கிறீர்கள். அது எங்கே இருக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது?


ப:
நல்ல கேள்வி. Start >> Run >> என்ற இடத்திற்குப் போய் ipconfig என்று தட்டச்சு
செய்யுங்கள். அப்புறம் Enter பொத்தானைத் தட்டுங்கள். உங்கள் கணினியின் தனிப்பட்ட இணைய முகவரி கிடைத்து விடும். இந்த முகவரியை வைத்து தான் ஒருவர் செய்யும் இணையக் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக, கொரியாவில் உள்ள ஒரு வங்கியை ஏமாற்றி இணையம் மூலமாக ஒருவர் கொள்ளை அடித்தார் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்று வித்தை கொஞ்ச நாளில் தெரிந்து விடும். வங்கியை ஏமாற்றப் பயன் படுத்தப் பட்ட கணினி எங்கே இருந்து வந்தது என்பதைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

அதற்கு இந்த இணைய முகவரி தேவைப் படுகிறது. இந்த இணைய முகவரியையே மாற்றக் கூடிய கில்லாடித்தனமான நிரலிகள் கூட இருக்கின்றன. பிரான்ஸ’ல் உள்ள நண்பர் எனக்கு ஒன்றை அனுப்பி இருந்தார்.


அதை வைத்துக் கொண்டு நம் கணினியின் முகவரியை மாற்றி விடலாம். மலேசியாவில் இருந்து கொண்டு சீனாவின் முகவரியைக் கொடுத்து கடிதம் அனுப்பலாம். அந்தக் கில்லாடித்தன நிரலி வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம். வேண்டும் என்றால் கேளுங்கள். இடத்தைச் சொல்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யக் கூடாது. இணைய உலகில் பல அதிசயங்கள் உள்ளன.

அ.சிட்டிபன், சிலியாவ், நெகிரி செம்பிலான்
கே: Power Point பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் 'virtual memory being too low' என்று கணினித்திரையில் எச்சரிக்கை செய்தி வருகிறது. என்ன  செய்வது?


ப:
Adobe Photoshop பயன்படுத்துபவர்களுக்கும் அடிக்கடி இந்த மாதிரி அறிவிப்பு வரும். பயப்பட வேண்டாம். உங்களுடைய கணினியில் தற்காலிக நினைவகம்  இருக்கும். அதற்கு பெயர் RAM எனும் நினைவி. SDRAM, DDR1, DDR2 என்கிறார்களே அதுதான். அதன் கொள்ளளவு சக்தி குறைவாகிப் போனால் மேற்     சொன்ன எச்சரிக்கை வரும். பொதுவாக 512MB நினைவி இருந்தால் இந்தப் பிரச்னை வராது.

Virtual Memory என்றால் ஒரு மாயை நினைவு. கணினித்திரையின் முகப்பில் பல சின்னங்களைப் பார்க்கலாம். அதில் My Computer சின்னத்தின் மீது  சுழலியின் வலது பொத்தானைச் சொடுக்குங்கள் (Right Click). சுழலி என்றால் Mouse. அதில் Properties என்பதைச் சொடுக்குங்கள். System Properties என்று வரும். அடுத்து Advanced Tab என்பதைச் சொடுக்குங்கள். Performance எனும் பகுதியில் Settings   பொத்தானைத் தட்டுங்கள். அங்கே Performance Options எனும் தொகுதி இருக்கும். அதில் Advanced Tab ஐச் சொடுக்கினால் Virtual Memory எனும் பிரிவு வந்துவிடும். நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது Custom என்பதைச் சொடுக்க வேண்டும். அதில் 1000MB என்று டைப் செய்யுங்கள். உங்கள் Hard Disc எனும் வன்தட்டின் கொள் ளளவு அதிகமாக இருந்தால் 1500MB வரை போகலாம். உங்கள் பிரச்னை தீர்ந்தது.