25 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - 83

கார்த்திகா ஜித்  karthikajith@aol.com
கே: கணினி மன்னன் பில் கேட்ஸ் அவர்களின் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்வார் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: அவரைப் பற்றி பலர் பலவிதமாகச்  சொல்லலாம். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல முதலாளி. தன் ஊழியர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளும் அருமையான தோழர்.

நன்றாக வேலை செய்பவர்களுக்கு மைராசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அன்பளிப்பு ஊதியமாகக் கொடுக்கிறார். வேலை செய்பவர்களுடன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொளுங்களேன்.

இவரிடம் வேலை செய்தவர்களில் ஏறக்குறைய 12,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகி இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். 12,000 கோடீஸ்வரர்கள். மேல் விவரங்கள் http://en.wikipedia.org/wiki/Microsoft எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.

உயர் பதவியில் ஒருவர் எட்டு வருடங்கள் வேலை செய்தால் போதும். அவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்று கணக்குப் போட்டு வைத்து இருக்கிறார்கள். ஒருவரின் சராசரி ஆரம்பச் சம்பளம் மாதத்திற்கு 34,000 மலேசிய ரிங்கிட். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 1,100 ரிங்கிட்.

இப்போது சொல்லுங்கள் பில் கேட்ஸ் தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள் கிறாரா? மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுமையும் 100 அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் 89,000 பேர் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் தலைமையகத்தில் மட்டும் 74,923 பேர் வேலை செய்கிறார்கள். 76 விழுக்காட்டினர் ஆண்கள். ஆகப் பெரிய முக்கியப் பதவிகளில் தமிழர்கள் நால்வர் இருக்கிறார்கள். பில் கேட்ஸ் 2008ல் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அறப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

மைக்ராசாப்ட் தலையமகத்தில் இலவசமாகக் குளிர்பானங்கள் வழங்கப் படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மட்டும் 552 மில்லியன் குளிர்பான பாட்டில்களைக் குடித்து முடித்து இருக்கிறார்கள். ஒரு கொசுறு செய்தி. ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால், வயது காலை வாரி விட்டு விட்டது.


குமாரி.கனகாம்பரம், பாசிர் கூடாங், ஜொகூர்
கே: உலகின் முதல் கணினியின் பெயர் எனியாக். ஏன் அப்படி ஒரு பெயரை வைத்தார்கள்?
ப: கனகாம்பரம் மலர்களிலேயே ஓர் அற்புதமான மலர். எனக்கு மிகவும் பிடித்த மலர். அந்தப் பெயரை ஏன் வைத்தார்கள் என்று கேட்டால் நான் என்னம்மா சொல்வது. நீங்கள் கேட்டதும் ஒரு வகையில் நன்மைக்கே.

உங்களுக்காக இணையத்தில் போய் ஆராய்ச்சி செய்தேன். நிறைய தகவல்கள் கிடைத்தன. எனியாக் என்றால் Electronic Numerical Integrator And Calculator என்பதன் சுருக்கம். அதன் எடை முப்பது டன்கள். 1943ல் கண்டுபிடிக்கப் பட்டது. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் கணக்குகள் செய்ய அந்தக் கணினியைப் பயன் படுத்தினார்கள்.

அதை உருவாக்க இருபது மில்லியன் ரிங்கிட் செலவு செய்தார்கள். 1954ல் அதன் பாகங்கள் எல்லாம் கழற்றப் பட்டன. அமெரிக்காவில் உள்ள நான்கு அரும் பொருள் காட்சியகங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டன. 

அந்தப் பாகங்களைப் பார்ப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வருகிறார்ளாம்.  செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். அந்த மாதிரி எனியாக் இறந்தும் இருபது பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறதாம். எனியாக் வாழ்க!

பாலக்கிருஷ்னன்   balakrishnan91@gmail.com
கே: முன்பு நீங்கள் நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் பதில் கொடுப்பீர்கள். படிப்பதற்கு கலகலப்பாக இருக்கும். கொஞ்ச காலமாக அந்த நகைச் சுவையைக்  காணோம்?

ப: அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். தீபாவளிக்கு முதல் நாள் திருநெல்வேலி அல்வா வாங்கப் போறேன்னு போனது தான். திருநெல்வேலிக்குப் போனதா இல்லை திருப்பதிக்கு போனதா. ஒன்றும் தெரியவில்லை. வரும் போது வரட்டும்.

ஜோசப் தாஸ்  jsphdoss@yahoo.com
கே: Artificial Intelligence எனும் நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் கணினிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
ப: Artificial Intelligence என்றால் செயற்கை நுண்ணறிவு. நம்முடைய ஆறாவது அறிவைப் போல அறிவார்ந்த முடிவு செய்வதைத் தான் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். அதாவது மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் திறன்முறை.

எடுத்துக்காட்டாக, ஓர் உணவகத்திற்குப் போனதும் மனைவிக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது. மகளுக்கு அது பிடிக்கும் இது பிடிக்காது என்று நம் மூளை உடனடியாக முடிவு செய்கிறது அல்லவா. 

அந்த மாதிரி உணர்வு கலந்து சிந்திப்பதைத் தான் அப்படி சொல்கிறோம்.தொட்டிலில் தூங்கும் குழந்தை அழுதால் நம்முடைய கைப்பேசிக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் கணினிகளும் வந்துவிட்டன.

இவை தான் செயற்கை
நுண்ணறிவுக் கணினிகள். எதிர்காலத்தில் கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வரலாம்.

நம் வீட்டுக் கணினி நம்முடைய வீட்டில் நடக்கும் பிரச்னைகளை அடுத்து வீட்டுக் கணினிக்குச் சொல்லலாம். அந்த வீட்டுக் கணினி பக்கத்து வீட்டுக்குச் சொல்லலாம். இப்படியே செய்திகள் ஊர் பூராவும் பரவி கணினிகளுக்குள் வம்பு சண்டை வரலாம்.

உச்சக் கட்டமாக மனிதர்களுக்கு எதிராகக் கணினிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தொழில் சங்கத்தையே உருவாக்கலாம். கணினிக் குண்டர் கும்பல்கள் காளான்களைப் போல முளைக்கலாம். மனிதனுக்கும் கணினிகளுக்கும் இடையே உலகப் போர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

கற்பனை இல்லை. நடக்கப் போகிற
உண்மை. அதற்காகக் கவலைப் பட்டு சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்து உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது நடக்க ரொம்ப காலம் பிடிக்கும்.

மணிகண்டன்   manikandan9842@gmail.com
கே: Defragment எனும் கணினிச் சொல்லுக்குத் தமிழில் சுத்திகரிப்பு என்று சொல் கிறீர்கள். அது தவறான சொல் என்று நான் கருதுகிறேன். சரியான சொல் என்ன?
ப: Defragment எனும் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். கணினிச் சொற்களை மொழி பெயர்க்கிறேன் என்று சொல்லி விழியைப் பிடுங்குவதில் நமக்கு உடன்பாடு இல்லை.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்கிறேன்.  RAM என்றால் Random Access Memory. சிலர் தமிழில் சார்பிலாத் தெரிவு இருப்பு வளம் என்று அழைக்கிறார்கள். அந்தச் சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் கேட்பவருக்கு கணினியின் மீது இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விடும்.

அதற்கு தற்காலிக நினைவகம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். அதை அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டு விட்டனர். உலக இணையக் களஞ்சியமான விக்கிபீடியாவும் பயன்படுத்துகிறது.

தற்காலிக நினைவகம் என்றால் என்ன என்று சிலர் கேட்கலாம். கணினியில் நடைபெறும் வேலைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்  தற்காலிகமாக சேமித்து வைக்கும் சாதனத்திற்குப் பெயர் தற்காலிக நினைவகம். ஆங்கிலத்தில் RAM என்று அதற்குப் பெயர்.

ஆக, மொழி பெயர்ப்பு செய்யும் போது அந்தச் சொல்  எளிமையாக எல்லோராலும் உச்சரிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.  Defragmentation என்பதற்கு ஒருங்கமைப்பு  என்று பெயர் வைத்து இருக்கிறேன்.

வாசகர்கள் தங்கள் கருத்து களைச் சொல்லுங்கள். நல்ல சொல்லாக இருந்தால்
அதையே வைத்து விடுவோம்.


மணிகண்டன் ராமநாதன்  <manigandanramanathan@gmail.com>
கே: சார், இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் இணையத் தளங்களைச் சொல்வீர்களா?
ப: ஒரு சில இடங்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன. அவற்றுள் இந்த வாரம் மூன்று இடங்களின் பெயர்களைத் தருகிறேன். மற்றவை அடுத்த அடுத்த வாரங்களில் வெளி வரும்.
http://www.download3000.com/
http://www.soft32.com/
http://www.downloadatoz.com/
http://www.dl4all.com/

19 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 82




ஞானசேகரன், சுங்கைவே, பெட்டாலிங் ஜெயா
கே: நான் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவன். என்னுடைய நண்பரின் USB Pen Drive மூலமாக வைரஸ்கள் என் கணினியில் நுழைகின்றன. அவர் வைரஸ்கள் எதுவும் இல்லை என்று சொல்லித் தான் கொடுப்பார். ஆனால், வைரஸ்கள் இருக்கும். என்னுடைய கணினியின் உள்ளே வைரஸ்கள் நுழையாமல் இருக்க ஏதாவது நிரலி இருக்கிறதா? இப்போது தொட்டதற்கு எல்லாம் காசு கேட்கிறார்கள் சார். இலவசமாகக் கிடைக்கும் நிரலியாக இருந்தால் சொல்லுங்கள்.


ப: இணையத்தில் கணினியைத் தாக்கும் நச்சு அழிவிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. அது எப்போது வரும் யாரைத் தாக்கும் என்று எவருக்கும் தெரியாது. வைரஸ் என்பது ஒரு நச்சு. அந்த நச்சு வைரஸ்களைப் பரப்பி விடும் நிரலிக்குப் பெயர் நச்சு நிரலி.

அந்த நச்சு நிரலியையே அழிக்கும் ஒரு  தடுப்பு  நிரலிக்குப் பெயர் தான்  நச்சு நிரல் கொல்லி. ஆக, Anti Virus என்பதைத் தான் நச்சு நிரல் கொல்லி என்கிறோம். இந்தப் பதிலை எழுதிக் கொண்டு இருக்கும் போது என் மடிக்கணினியில் செய்தி வருகிறது. கடைசியாகக் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வைரஸ்கள். Trojan.SpyEye!, Trojan.Sefnit, Backdoor.Badpuck, Backdoor.Vinself, Trojan.Zbot.

ஒரு சின்ன புள்ளி விவரங்களைத் தருகிறேன். 1990 ஆம் ஆண்டு 200 வைரஸ்கள் இருந்தன. 2000 ஆம் ஆண்டில் 50,000 ஆக உயர்ந்தது. ஆகக் கடைசியாக 14.12.2010 திகதியில் அந்த எண்ணிக்கை 1,122,311 ஆக உயர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தில் நிம்மதியாக இணையத்தில் நுழைய முடியாது போலத் தெரிகிறது. கணினியைப் பற்றி கொஞ்சம் படித்து விட்டு சிலர் வைரஸ் நிரலிகளை எழுதித் தொலைக்கும் கேடு கெட்ட ஜென்மங்களாக மாறுகின்றார்கள்.

AVG,  Avira,  Avast,  Spybot Search & Destroy  போன்ற  இலவசமான  நச்சு நிரல் கொல்லிகளைப் பயன் படுத்தி உங்கள் கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீழ்க்காணும் இடங்களில் இலவசமான நச்சு நிரல் கொல்லிகள் கிடைக்கின்றன.

1. http://free.avg.com/us-en/homepage
2. http://www.avast.com/free-antivirus-download
3. http://www.avira.com/en/avira-free-antivirus
4. http://www.safer-networking.org/en/spybotsd/index.html
5. http://www.pctools.com/free-antivirus/


இவற்றுள் என்னுடைய தேர்வு PC Tools Antivirus நிரலி.

அடுத்து, உங்களுடைய USB Pen Drive மூலமாக கணினியை நச்சு நிரலி தாக்கி விட்டதாகச் சொல்கிறீர்கள். விரலிகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் நச்சு நிரலிகள் இருக்கின்றன. இந்த வைரஸ் நச்சு நிரலிகள் கணினிக்குள் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு ஊசி இருக்கிறது. இதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்வது நல்லது.

உங்கள் கணினியில் விரலியைச் செருகியதும் உடனே விரலிக்கு தடுப்பு ஊசி போடப் படும். தடுப்பு ஊசி போட்டு விட்டுத் தான் மறு வேலை. அதனால் கணினிக்கு மிகவும்  பாதுகாப்பு. அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் கீழே இருக்கிறது. இது ஓர் இலவச நிரலி. இதைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே சமயத்தில் போய்ப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அங்கு உள்ள பரிமாறிக் கணினி தடுமாறிப் போய் சேவைகளை நிறுத்தி வைக்கலாம். ஆக, பொறுமையைக் கையாளுங்கள். 
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html

மதியழகன் mathi038@gmail.com
கே: நம்முடைய ATM அட்டைகளில் MEPS என்று சின்னம் குறிக்கப் பட்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன? தயவு செய்து விளக்கப் படுத்துங்கள்.
ப:
MEPS என்றால் Malaysian Electronic Payment System. தமிழில் மலேசிய மின்னியல் பணம் வழங்கும் முறை என்று சொல்வார்கள்.  ஏ.டி.எம் அட்டைகளின் பின்புறம்  இந்தச் சின்னதைப் பார்க்க முடியும். ATM என்றால் Automated Teller Machine. தமிழில் தானியக்கப் பணம் வழங்கி. இதை வங்கி அட்டை என்றும் சொல்வார்கள். இந்த அட்டையில் மூன்று முக்கியப் பயன்பாடுகள் உள்ளன.


1. வங்கியில் இருந்து பணத்தைப் பெறுவது
2. இணையம் மூலமாகப் பொருட்களை வாங்குவது
3. சேமிப்பில் உள்ள பணத்தை அடமானமாகக் காட்டுவது

இந்த அட்டையைக் கொண்டு இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் ரொக்கப் பணத்தை உங்களால் பெற முடியும். இந்த நான்கு நாடுகளில் உள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் உங்களுடைய மலேசிய ஏ.டி.எம் அட்டையை சீனாவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள வங்கிகளில் சீன யுவான் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் உங்களுடைய கைப்பேசி எண்களுக்கு Topup எனும் முன்பணம் கட்டவும் முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும். 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்த முறையில் மலேசியாவின் 27 வங்கிகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆசியாவில் முதல் நாடாகவும் மலேசியா விளங்குகிறது. கூடுதலான விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.meps.com.my/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று பார்க்கவும்.

நந்தினி   milcah.nandani@yahoo.com
கே: தோசையைச் சுருட்டுவது போல மடக்கிச் சுருட்டிக் கொண்டு போகும் அளவிற்கு ஒரு மடிக்கணினி வந்து விட்டதாகச் சொல்கிறார்கள் சார். இது எந்த அளவுக்கு உண்மை? நம்ப முடியவில்லையே சார்.

ப:
ஆமாம் தாயே. என்னாலும் தான் நம்ப முடியவில்லை. இந்த மடிக்கணினி வெளி வந்ததும் நாம் கணினித் தொழில் துறையில் ஒரு படி மேலே ஏறி நிற்போம். Orkin Design எனும் ஜெர்மனிய நிறுவனம் கண்டு பிடித்து இருக்கிறது. செய்தித் தாளைப் படித்து முடித்ததும் சுருட்டிக் கைகளுக்கு இடையில் அக்குளில் வைத்துக் கொண்டு போவது... அது ஒரு காலம்.


ஆனால், மடிக்கணினிகள் அந்த இடத்திற்கு வந்து விட்டன.  http://www.techkumar.org/gadgets/roll-top-laptop.html எனும் இடத்தில் விவரங்கள் இருக்கின்றன. போய்ப் பாருங்கள். கணினி உலகம் எங்கேயோ போய்க்
கொண்டு இருக்கிறது. இந்த அதிசயத்தைத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

மதன முகிலன்   rmathanamuhilan@yahoo.com
கே: இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்து முடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்கும்? என் நண்பன் கின்னஸ் சாதனை செய்யப் போவதாகச் சொல்கிறான். அப்படி என்றால் யாரை அணுக வேண்டும்.


ப: யாரையும் அணுக வேண்டாம். நம்மை அணுகியதே போதும். இணையத்தில் உள்ள எல்லாத் தகவல்களையும் படித்து முடிக்க 57,000 ஆண்டுகள் பிடிக்கும். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டாமா? படுக்கப் போகும் போது மட்டும் ஒரு பத்து நிமிடம் படிக்கச் சொல்லுங்கள். அது போதும். சாதனை செய்து முடிக்க 8,219,088 வருடங்கள் பிடிக்கும். அப்புறம் பூமி இருக்கிற வரைக்கும் அந்தக் கின்னஸ் சாதனையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் நண்பருக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள். 

14 டிசம்பர் 2010

இமயம் கரைகிறது இதயம் உறைகிறது


உலகத்திலேயே உயரமான மலை. ஊழி ஊழி காலத்திற்கும் உன்னதமானக் கலை பேசும் ஓர் ஓவியம். மனுக்குலத்தின் மகிமை பாடும் இயற்கையின் புனிதப் பரிமாணம். அந்த வழியாகத் தான்  கங்கையும் ஓடுகின்றது. அழகு அழகாய் அமுத கானமும் பாடுகின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அன்னதானமும் செய்கின்றது.

இருந்தாலும் பாருங்கள். உலகத்தின் உயரமான சிகரத்தில் ஏற வேண்டும். அந்த ஏழடுக்குச் சீமையின் மேலே கால் பதிக்க வேண்டும். சரித்திரம்படைக்க வேண்டும் என்பது எல்லாம் பலருடைய கனவு.  பல இலட்சம் பேரின் இலட்சியம்.



போன வருடம் இதே நவம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்கள். ஆனால் அந்த மூவரும் திரும்பி வரவே இல்லை. பனி படர்ந்த இமயத்தின் உச்சியிலேயே மறைந்து போனார்கள். அவர்களின் நினைவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.

அந்தப் பனிமலையின் தலைவாசலில் புதைந்து கிடக்கும் மாயா ஜாலங்களைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. ஆக, மறைந்து கிடக்கும் சில மர்மமான உண்மைகளைச் சொல்ல வேண்டி இருக்கிறது.



1950 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 5070 பேர் இமய மலையில் ஏறி இருக்கிறார்கள். ஆனால், அதன் உச்சியை அடைந்தவர்கள் 3431 பேர் மட்டுமே. அவர்களில் 216 பேர் அங்கேயே இறந்து போனவர்கள். அந்தப் பட்டியலில் மேலே சொன்ன அந்த மூன்றுத் தமிழர்களும் அடங்குவர்.

அவர்களுடைய உடல்கள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் இன்னும் கிடக்கின்றன. அந்த உடல்கள் கெட்டுப் போகவில்லை. அவர்களைச் சுற்றி இருக்கும் அணிகலன்களும் அவர்களை விட்டு விலகிப் போகவில்லை. அந்தப் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும் போது நம்முடைய நெஞ்சம் எல்லாம் கசிகின்றது.



இமயத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் பனி கொட்டிக் கொண்டே இருக்கும். அதனால் அந்த 216 வீரர்களின் உடல்கள் சிதைவு பெறாமல் பக்குவப் படுத்தப் பட்ட நிலையில் இன்னும் அப்படியே இருக்கின்றன. இப்போது கூட ஏறுபவர்களும் இறங்குபவர்களும் அந்த உடல்களைப் பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள்.

தங்களுக்கும் இந்த நிலைமை வரலாம் என்பதால் அவர்களுடைய மனங்களும் மறுத்துப் போய் விடுகின்றன. அந்த உடல்களை யாரும் எடுத்து வர முயற்சி செய்யவில்லை என்று சொல்ல முடியாது. எடுத்து வர முடியாது என்பதே சரியான பதில். 

இமயத்தில் ஏறுவதற்கு முன்னால் நேபாள அரசாங்கம், மலை ஏறுபவர்களிடம் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்துப் போடச் சொல்கின்றது.



இமயத்தில் ஏறும் போதும் சரி  இறங்கும் போதும் சரி. ஒருவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் அவருடைய உடல் அங்கேயே விடப் படும். அந்த உடல் மீது யாரும் உரிமை பேசக் முடியாது.

காலா காலத்திற்கும் அந்தப் பூத உடல்கள் உயிர் இல்லாமல் அந்த இடத்திலேயே அப்படியே கிடக்கும். அதைக் கொண்டு வர யாரும் முயற்சி செய்யக் கூடாது. சட்டத்தைப் புரட்டக் கூடாது. சாணக்கியமும் பேசக் கூடாது. அரசாங்கத்தின் மீது குறை சொல்லக் கூடாது.



மலை உச்சியில் யாருக்காவது விபத்து ஏற்படலாம். நடக்க முடியாமல் போகலாம். அந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டால் முடிந்த வரை அவருக்கு உதவி செய்யுங்கள். முடியா விட்டால் அவரை அப்படியே விட்டு விட்டு வந்து விடுங்கள். அவரைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி உங்கள் உயிரைப் பணயம் வைக்கக் வேண்டாம்.

ஏன் இந்தக் கட்டளையைப் போடுகிறார்கள் என்பதற்கும் காரணம் உண்டு. நாலைந்து பேராகப் போகும் ஒரு குழுவில் யாருக்காவது ஒருவருக்கு மோசமான விபத்து ஏற்படலாம். அந்த மாதிரியான கட்டத்தில் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் மற்றவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.


ஆனால், அப்படி உதவி செய்யும் போது மற்றவர்களின் சக்தி வீணாகிறது. பிராண வாயு குறைகிறது. சொந்தமாகச் சிந்திக்கும் ஆற்றல் குன்றுகிறது.

உயிர் போகும் நிலை வருகிறது. ஆக, ஆபத்தான நிலையில் உள்ளவரை அவர் உயிரோடு இருக்கும் போது அப்படியே சாக விட்டு விட்டு வந்து விடுவார்கள். வேறு வழி இல்லை. அந்த வகையில் கணவனை விட்டு வந்த மனைவிகள் இருக்கிறார்கள். தகப்பன்களை விட்டு வந்த மகள்களும் இருக்கிறார்கள்.



இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அறிந்து வைத்து இருக்கும் நேபாள அரசு மலை ஏறிகளிடம் முன்கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்கிறது. அப்புறம்தான் மலையின் மீது ஏற விடுகிறது. 

சும்மா ஒன்றும் ஏறி விட முடியாது. முதலில் மலேசிய ரிங்கிட் மூன்று இலடசம் வரை கட்ட வேண்டும். பணம் கட்டிய பிறகு  குறைந்தது மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இப்படி காத்திருப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இமயமலையின் உயரம் 8848 மீட்டர்கள் அல்லது 29,029 அடிகள். உலகத்தின் உயரமான கட்டிடங்களில் கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களும் ஒன்று. அந்தக் கோபுரங்களைப் போல முப்பது கோபுரங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வையுங்கள். அவ்வளவு உயரத்தில் இமயம் இருக்கின்றது. இமயமலையை நேபாள மொழியில் சகர்மாதா என்று அழைக்கிறார்கள்.

1841 ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர் இந்தியாவின் தலைமை நில ஆய்வாளராக இருந்தார். அவர்தான் இமயமலை என்கின்ற ஒன்று இருப்பதை வெளி உலகத்திற்குச் சொன்னார். அவரின் நினைவாக இமயமலைக்கு Mount Everest என்றும் பெயர் வைத்தார்கள்.



இமயமலையில் பலப் பல அதிசயங்கள் நடந்து உள்ளன. 1924 ஆம் ஆண்டு ஜார்ஜ் மலரி என்பவரும் அன்டிரு ஐர்வீன் என்பவரும் தான் இமயமலையின் உச்சி வரை முதன் முதலில் ஏறினார்கள்.

ஆனால், அவர்கள் உச்சியை அடையவில்லை. 27 ஆயிரம் அடிகள் உயரத்தில்  வீசிய பனிப் புயலில் மறைந்து போனார்கள். அவர்களுடைய உடல்களை 1933 ஆம் ஆண்டுதான் கண்டுபிடித்தார்கள். அந்த ஜாம்பவான்களின் உடல்கள் இன்னும் பத்திரமாக அங்கேதான் இருக்கின்றன.




இப்படி சவால் விடும் இமயமலையை எப்படியாவது ஏறிப் பிடித்து விட வேண்டும் என்று பல வீரர்கள் பல முறைகள் முயற்சி செய்தனர். இமயம் அசையவே இல்லை. கடைசியில் 1953 ஆம் ஆண்டு சர் எட்மண்ட் ஹிலரி, டென்சிங் என்பவர்களிடம் சரண் அடைந்தது. இவர்கள் தான் இமயத்தின் உச்சியைத் தொட்ட முதல் மாமனிதர்கள்.

இமயமலையை ஏறுவதற்கு முன்னால் குறைந்தது ஒரு மாதம் அதன் அடிவாரத்தில் தங்க வேண்டும். நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டும். உடல் வலிமையை விட மன வலிமையே அதிகமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் இருபது கிலோ எடையை பல கிலோமீட்டர் உயரத்திற்குத் தூக்கிச் செல்ல வேண்டும்.




இருதய நோய், இனிப்பு நீர், ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக ஏறக் கூடாது. ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவர் மருத்துவராக இருக்க வேண்டும். இப்படி எல்லாம் தடைகள் உள்ளன.

இமயமலையை ஏறுவதற்கு நேபாள வழி, திபெத்திய வழி என்று இரு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். நேபாள வழி சற்று சுலபமான வழி. இந்த வழியைப் பயன் படுத்திதான் சர் எட்மன்ட் ஹிலரியும் டென்சிங் நார்கோவும் இமயத்தின் உச்சியை அடைந்தார்கள். பெரும்பாலும் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மலை ஏற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.




இந்தக் காலக் கட்டத்தில் பனிப் புயலின் சீற்றம் குறைவாக இருக்கும். உச்சியில் காற்று அழுத்தம் மிகவும் குறைவு. சாதாரணமாக மூச்சு விடுவதில் கூட மிக மிகச் சிரமம் ஏற்படும். அதனால் உயிர்க் காற்று எனும் பிராண வாயு கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன.

இதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த Reinhold Messner என்பவர் சாதனை படைத்தார். பிராண வாயு கலம் இல்லாமல் தன்னந்தனியாக ஏறினார். அபாரமான சாதனை.




இந்த ஆண்டு மே மாதம் Jordan Romero எனும் 13 வயது சிறுவன் இமய மலையில் ஏறி சாதனை படைத்தான். இன்னும் ஒன்று. Apa Sherpa எனும் நேபாளி இமய மலையை 20 முறை ஏறி சாதனை படைத்துள்ளார்.

அப்புறம் பாருங்கள். 76 வயதில் மின் பகடுர் சர்சான் எனும் முதியவர் 2008 மே மாதம் 25 ஆம் தேதி இமயமலையின் உச்சியை அடைந்தார்.




இப்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அனைத்துலக நெருக்குதல்கள் அதிகமாயின. அண்மையில் நேபாள அரசாங்கம் கொஞ்சம் இறங்கி வந்து இருக்கிறது. சொந்தச் செலவில் இறந்து போனவர்களின் உடல்களை உறவினர்கள் கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறது.

அதுவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அந்தச் சம்மதம் கிடைத்தது. ஆனால், எப்படிப் போய்த் தேடுவது. விமானம் தரை இறங்க முடியாது.




ஹெலிகாப்டர் போக முடியாது.பனிச் சூறாவளி வீசிக் கொண்டே இருக்கும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இதர மலை ஏறிகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏற மறுக்கிறார்கள்.

பெரும்பாலான இறப்புகள் உச்சியில் இருந்து கீழே இறங்கும் போது தான் நடை பெறு கின்றன. அதற்கு காரணம் 8000 மீட்டருக்கு மேலே உள்ள பகுதியை Death Zone அல்லது மரணப் படுக்கை என்று அழைக்கின்றார்கள். அங்கே காற்றின் அழுத்தம் மூன்றில் ஒரு பகுதி தான் இருக்கின்றது.




பனிப் புயலின் சீற்றமும் அதிகம். மலை ஏறிகளின் சக்தியும் குறைந்து போய் இருக்கும். எல்லா உடல்களும் 23,000 அடிகளுக்கு மேலே தான் இருக்கின்றன.


கோடிக் கோடியாகப் பணம் கொடுத்தாலும் யார் போவது. எப்படி தூக்கி வருவது. மலை ஏறுபவர்களுக்குத் தங்கள் சொந்த உடலைச் சுமந்து நடந்து கொண்டு வந்து சேர்க்கவே முடியவில்லை.




இதில் எப்படி இன்னோர் உடலைச் சுமந்து கொண்டு வருவது. அப்படி இருந்தும் பாருங்கள் இருபது முப்பது உடல்களைக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். 

இந்தக் கட்டத்தில் மலேசியத் தமிழர்கள் மகேந்திரன், மோகன் தாஸ் இருவரையும் நாம் மறந்து விடக் கூடாது. மக்கள் போற்றும் மாவீரர்கள்.




மலை ஏறுபவர்களின் வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லத் தோன்றுகிறதா. உண்மைதான். மலேசியாவில் உள்ள சில உயரமான மலைகளை ஏறிய அனுபவம் அடியேனுக்கும் இருக்கின்றது. அதனால் அப்படித் தோன்றுகிறது.

இமய மலையை ஏறிப் பார்க்க வேண்டும் எனும் ஆசை எனக்கு முன்பு இளம் வயதில் இருந்தது. அதற்காக குனோங் தகான், குனோங் கொர்பு, குனோங் லேடாங், குனோங் ராஜா போன்ற மலைகளில் ஏறிப் பயிற்சிகள் எடுத்ததும் உண்டு.

இப்போது அந்த ஆசைகளே இல்லை. வீட்டு மாடிப் படிகளை ஏறி இறங்கவே மூச்சு வாங்குகிறது. இதில் இமய மலை ஆசை இனி தேவையா என்று மனசு சொல்கிறது. சரிதானே.

என்ன யோசிக்கிறீர்கள். நீங்களும் ஏறலாம் என்று நினைக்கிறீர்களா. தாராளமாக. இப்போதே வாழ்த்துகள். எதற்கும் வீட்டில் சொல்லி விட்டு போங்கள்.

மலாக்காவைப் பற்றி விக்கிபீடியாவில்




எனும் கட்டுரைகளைச் சமர்பித்துள்ளேன். படித்து கருத்துகளைச் சொல்லுங்கள்.



12 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 81


 
மாலதி சுகுமாறன், சுங்கை பீலேக், சிலாங்கூர்
கே: கணினியில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவற்றை எடுத்துப் பேச போய் வருவதற்குள் என் வீட்டு வாண்டுகள் கணினியில் இருக்கும் வேலைகளைக் கெடுத்து வைத்து விடுகிறார்கள். கணினியை அடைத்து வைக்கத் தற்காலிகமாக வழி இருக்கிறதா?

ப:
பிள்ளைகள் இல்லாத வீடுகளும் இல்லை. கைப்பேசிகள் இல்லாத வீடுகளும் இல்லை. கணினியின் சுழலியை அப்படி இப்படி ஆட்டிக் கணினியை ஒரு வழி பண்ணி வைத்து விடுவார்கள். ஆனால், ஒன்றும் தெரியாதது மாதிரி இருப்பார்கள். சில சமயங்களில் என் பேரப் பிள்ளைகளும் அழகு அழகாய்க் கோலங்களும் போட்டு வைத்து இருப்பார்கள்.

கேட்டால் சும்மா செய்தேன் என்பார்கள். என்ன செய்வது. ஏசிவிட்டால் இரண்டு நாட்களுக்குப் பேச மாட்டார்கள். இதற்கு ஒரு வழி இருக்கிறது. Kids Key Lock எனும் ஒரு சின்ன நிரலி இருக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்யுங்கள். கணினியில் பதிப்பியுங்கள். அதில் Mouse Lock என்பதில் தேர்வு செய்து சுழலியை இயங்காமல் செய்து விடுங்கள். உங்களுடைய கடவுச் சொல்லைத் தட்டச்சு செய்தால் தான் சுழலி மறுபடி வேலை செய்யும்.

பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம்.

http://www.100dof.com/kidkeylock.html


இது ஓர் இலவசமான நிரலி. பதிவிறக்கம் செய்வதில் சிரமம் என்றால் என்னுடைய வலைத் தளத்திற்குச் செல்லுங்கள். சுலபமாக இருக்கும்.

இந்திரன் குமார்   <youngboy@gmail.com>
கே: சார் இது ஒரு முக்கியமான கேள்வி. நான் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்குத் தேவைப் படும் கணினி மென்பொருள் நிரலிகளை அமெரிக்காவில் இருந்து சிடி மூலமாக அனுப்பி வைப்பார்கள். சின்னச் சின்ன நிரலிகள். அவற்றை நான் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க முடியவில்லை. ஏன் என்றால் அவை .exe கோப்புகள். இந்த .exe கோப்புகளை எப்படி மின்னஞ்சலில் அனுப்புவது? தயவு செய்து உதவி செய்யுங்கள்.

ப: File என்றால் கோப்பு. Folder என்றால் கோப்பு உறை. ஒவ்வொரு கோப்பும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்தது. படங்களுக்கு .gif, .jpg, .jpeg, .png, .bmp எனும் கோப்புத் தொடர்கள் இருக்கும். File extension என்பதைத் தான் கோப்புத் தொடர்கள் என்று சொல்கிறோம். .wmv, .mpeg, .flv, .avi, 3gp போன்றவை ஓடும் படங்களைக் குறிக்கும். .txt என்பது சாதாரண எழுத்துகளைக் குறிக்கும்.

அதைப் போல .exe எனும் கோப்புத் தொடர் ஒரு நிரலி அல்லது ஒரு செயலியைக் குறிக்கும். பொதுவாக .exe கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்ப

விட மாட்டார்கள். அந்தக் கோப்பு ஒரு கணினி அழிவியாக இருக்கும் என்ற அச்சம் தான் காரணம். இந்த மின்னஞ்சல் சேவையை ஏமாற்ற ஒரு தில்லாலங்காடி வேலை செய்தால் அந்தக் கோப்பை அனுப்பி வைக்கலாம். சரி எப்படி. .exe என்பதை .txt ஆக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றும் போது ஓர் எச்சரிக்கை வரும். அதில் 'சரி' எனும் பொத்தானைத் தட்டவும். பின்னர் அந்தக் கோப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள். யார் அந்தக் கோப்பைப் பெறுகிறாரோ அவர் அந்தக் கோப்பின் தொடரை .exe என்று மறுபடியும் மாற்ற வேண்டும். அவரிடம் அதைச் சொல்லி விட வேண்டும். அவ்வளவுதான். பிரச்னை தீர்ந்ததா?

யோகேஸ்வரன் விஸ்வலிங்கம் selvam555@hotmail.com

கே: சார், என் மனதை மிகவும் பாதித்த ஒரு சின்னக் கதையை இணையத்தில் படித்தேன். அதை அனுப்புகிறேன். பிரசுரிக்க முடியுமா?

ப:
தம்பி, அந்தக் கதை என்னையும் பாதித்தது. படிப்பவர்கள் அனைவரையும் பாதிக்கும். கண்டிப்பாகப் பிரசுரிக்கிறேன். கதை இதுதான்.

ஒரு பையன் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலித்தான். அந்தப் பெண்ணுக்குப் பார்வை கிடையாது. ஆனால், இருவரும் மிகவும் ஆழமாக காதலித்தனர். ஒரு நாள் அந்தப் பெண் அவனிடம் 'என்னை விட்டுப் போய் விட மாட்டாயே' என்று கேட்டாள். அதற்கு அவன் 'என் உயிர் போனாலும் உன்னைக் கைவிட மாட்டேன். கண்டிப்பாய்க் கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்றான். நாட்கள் நகர்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு அவளுக்குப் பார்வை பெற கண் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவளுக்குப் பார்வையும் கிடைத்தது. ஆனால், அவளுக்கு ஓர் அதிர்ச்சி. அவளுடைய காதலனுக்கும் கண் பார்வை கிடையாது. ஒரு நாள் அவனிடம் வந்து 'உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள இஷ்டம் இல்லை' என்று சொன்னாள். 'ஏன்' என்று காதலன் கேட்டான். 'உனக்கு பார்வை இல்லை' என்று சொல்லி விட்டு நிற்காமல் நடந்தாள்.

அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சிறிது தூரம் சென்ற பிறகு கடைசியாக ஒன்று கூறினான். 'பெண்ணே! எனது கண்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்!' என்று. மாறி வரும் உலகில் இந்த மாதிரி மனம் மாறும் சில காதலிகளும் இருக்கிறார்கள்; மாற்றானைத் தேடிப் போகும் சில மனைவிகளும் இருக்கிறார்கள்.


முத்துக்குமரன், கிள்ளான்

கே: நான் விண்டோஸ் எக்ஸ்.பி பாவிக்கிறேன். அதில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை. மங்கலாக இருக்கின்றன. அதனால் அதிக நேரம் பார்த்தால் கண்கள் வலிக்கின்றன. தெளிவாகத் தெரிய வழி எதுவும் இருக்கிறதா?

ப: விண்டோஸ் விஸ்த்தா, விண்டோஸ் 7ல் இந்தப் பிரச்னை இருக்காது. விண்டோஸ் எக்ஸ்.பியில் மட்டும் எழுத்துக்கள் தெளிவு இல்லாமல் போகும் பிரச்னை இருக்கிறது. அது ஒரு சின்ன பிரச்னை. அதற்கு மைக்ராசாப்ட் நிறுவனம் தீர்வு கண்டு பிடித்து விட்டது. Clear Type Tuner Power Toy எனும் ஒரு சின்ன நிரலியைப் பயன் படுத்தினால் பிரச்னை தீரும். இந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிப்பு செய் யுங்கள்.

http://download.microsoft.com/download/b/7/0/b7019730-0fa3-47a9-a159-98b80c185aad/setup.exe எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கிறது.

பதிப்பு செய்யும் போது ஒரு வழிகாட்டி தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான வசதிகளைத் தேர்வு செய்யுங்கள். பதிப்பு செய்த பின்னர் கணினியின் எழுத்துக்கள் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும். கண்களை உறுத்தும் தோற்றம் இருக்காது. என்னுடைய http://ksmuthukrishnan.blogspot.com எனும் வலைத் தளத்திற்குப் போனால் நேரிடையாகப் பதிவிறக்கம் செய்யலாம்.


திருவாளர் எக்ஸ், கோலா குபு பாரு
கே: Dynamic இணையத் தளங்களை உருவாக்கும் கணினித் திறமைகள் உங்களிடம் நிறைய உள்ளன என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் அதையே கொஞ்சம் மாற்றி பாலியல் இணையத் தளங்களாக  உருவாக்கினால் நீங்கள் பெரிய பணக்காரர் ஆகலாமே. நீங்கள் தான் நடத்துகின்றீர்கள் என்று யாருக்கும் தெரியாதே. அரசாங்க அனுமதியும் தேவை இல்லையே. நானும் உதவிக்கு வருகிறேன். எப்படி சார் என் ஐடியா?    

ப:
ரொம்ப சூப்பரான ஐடியா. சும்மா சொல்லக் கூடாது. உங்களுக்கு உடம்பு பூராவும் மூளை. கணினியும் நீங்களும் கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்த பிறகு இந்த மாதிரி கேள்வி வந்தது இது தான் முதல் தடவை. பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்பது நியாயமான ஆசை. ஆனால் ஆபாச இணையத் தளங்களை உருவாக்கித் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மனிதத் தன்மையை அடகு வைக்கும் மட்டமான ஆசை அல்லவா.

Dynamic இணையத் தளம் என்றால் கடன் அட்டைகளைப் பயன் படுத்தும் இணையத் தளம் ஆகும். பணப் புழக்கம் கொண்ட இணையத் தளம். இந்த மாதிரியான ஓர் இணையத் தளம் தயாரிக்க எனக்கு மூன்று மாதங்கள் பிடிக்கும்.

இதுவரை 42 இணையத் தளங்களை உருவாக்கி இருக்கிறேன். அத்தனையும் கல்வி, இயற்கை, குடும்பம், சமூகத் துறைகளைச் சார்ந்தவை. நம்மிடம் கணினி அறிவும் இணையச் செல்வாக்கும் உண்டு. அவற்றை மூலதனமாகக் கொண்டு ஆபாச இணையத் தளங்களைத் தயாரிக்க முடியும்.  எப்போதோ இலட்சாதிபதி  ஆகி இருக்க முடியும். அப்படிப் பட்ட ஆசை நமக்கு வந்ததே இல்லை. வரவும் கூடாது.

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.'



கலைச்செல்வி, ஜாசின், மலாக்கா
கே: மைக்ராசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இயங்குதளத்தை வெளியிட்டு விட்டார்களாமே. உண்மையா?

ப:
விண்டோஸ் 7 இயங்குதளம் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு வெற்றியைத் தந்த மகிழ்ச்சியில் விண்டோஸ் 8 ஐத் தொடங்கி விட்டார்கள். இன்னும் வெளியிடவில்லை. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியீடு செய்வார்கள் என்று நினைக்கிறேன். விண்டோஸ் 7 இயங்குதளம் மைக்ராசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பு. விண்டோஸ் 8 இயங்குதளம் அவர்களுடைய எட்டாவது வெளியீடு.

இதுவரை வெளியான இயங்குதளங்களில் விண்டோஸ் 7 மிகச் சிறப்பான ஒன்று. அதைவிட மிகச் சிறப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 அமைய வேண்டும் என்று மைக்ராசாப்ட் நிறுவனம் விரும்புகிறது. அதற்காகப் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

05 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 80


சரவணக் குமார், ரவுப்
கே: அண்ணா, எங்கள் பகுதியில் அம்புலி மாமா இதழ் கிடைப்பது இல்லை. இணையத்தில் கிடைக்குமா?


ப: ஒரு காலத்தில் அம்புலி மாமா கதைகளைப் படிப்பதற்கு பைத்தியம் பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். அது ஒரு கனாக் காலம். இப்போது அந்த இதழைப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் இணையத்தில் வருகிறது. அதன் முகவரி: http://www.chandamama.com/lang/TAM/index.htm. இது ஓர் இலவசச் சேவை.


சந்தனா செல்வம், முனிச், ஜெர்மனி <santhana14@gmail.com>
கே: வணக்கம் சார், நீங்கள் 1977 ஆம் ஆண்டு பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் எனக்கு ஆங்கில மொழி ஆசிரியராக இருந்தீர்கள். நீங்கள் மறந்து இருப்பீர்கள்.  ஆனால், நாங்கள் உங்களை மறக்கவில்லை. நான் இப்போது ஜெர்மன் Deutche Welle தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணி புரிகிறேன். சார், இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பகுதியில்  தாங்களும் எழுதி வருகிறீர்கள் என்று கேள்விப் பட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ப:
33 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை இன்னும் மறக்காமல் இருக்கும் உங்களுக்கு நன்றிகள். தங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். ஞாபகம் வரவில்லை. விக்கிப்பீடியாவின் பதிப்பாசிரியர்கள் உலகம் முழுமையும் பரவி இருக்கின்றனர். அனைவரும் சிறந்த கல்வியாளர்கள். ஊதியம் வாங்காமல் உலக மக்களுக்காக உழைக்கின்றனர்.
http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா_(சுல்தான்)#
எனும் முகவரியில் பரமேஸ்வராவின் வரலாறு இருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/மலாக்கா

எனும் இடத்தில் மலாக்காவைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும். நீங்களும் ஒரு பதிப்பாளராக விரும்புகிறீர்களா. முடியும். முயற்சி செய்யுங்கள். நிறைய பேர் விக்கிப்பீடியாவின் பயனர்களாக மாற வேண்டும். அதுவே என்னுடைய ஆசை.

மோகன் தாஸ், தாமான் செம்பாக்கா, கூலிம், கெடா
கே: உங்களுக்கு நிறைய எஸ்.எம்.எஸ் வரும். அதில் ஏதாவது ஒரு காதல் எஸ்.எம்.எஸ் இருந்தால் சொல்லுங்கள். நல்ல எஸ்.எம்.எஸ் ஆக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் பயனாகவும்  இருக்க வேண்டும்.

ப:
கேட்கிறதோ காதல் எஸ்.எம்.எஸ். அப்புறம் அதில் போய் என்னய்யா நல்ல எஸ்.எம்.எஸ். கெட்ட எஸ்.எம்.எஸ். இதில் வேறு மற்றவர்களுக்குப் பயனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். தம்பி மோகன் தாஸ் அவர்களே! நமக்கு காதல் எஸ்.எம்.எஸ் எல்லாம் வருவது இல்லை. வந்தால் கம்பியூட்டர் எஸ்.எம்.எஸ். தான் வரும்.

உங்களுக்காக ஓர் எஸ்.எம்.எஸ். "காதல் ஒரு பட்டாம்பூச்சி, லேசாப் பிடிச்சா பறந்துடும், இறுக்கிப் பிடிச்சா இறந்துடும்!" சரியா. இன்னும் ஒன்று வருகிறது.  "காதல் என்பது ஒரு கழுதை. முன்னே போனால் முட்டும். பின்னே வந்தால் உதைக்கும்." நீங்கள் எந்தப் பக்கம் போகப் போகிறீர்கள்.

சுமித்ரா தேவி, தாமான் காயாபாரு, பாகன் டத்தோ
கே: நான் ஒரு பள்ளி மாணவி. உயர்நிலைப் பள்ளியில்  படிவம் ஐந்து படிக்கிறேன். வீட்டில் Streamyx அகல அலை வரிசை இணையச் சேவை உள்ளது. Facebook சமூக இணையத் தளத்தில் என்னைப் போன்ற படிக்கும் பெண்கள் தங்களுடைய முகவரி விவரங்களைத் தெரியப் படுத்தினால் ஆபத்து வருமா?

ப: அது என்ன ஆபத்து வருமா வராதா. ஆபத்து கள் ஆயிரக் கணக்கில்  வரும். இணையம் என்பது ஒரு மாயை உலகம். அங்கே நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எல்லா  சமயங்களிலும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மாணவிகளுக்கும் இளம் பெண்களுக்கும் சில முக்கியமான தகவல் குறிப்புகளைத் தருகிறேன். அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

1. அந்தரங்கமான தகவல்களைத் தயவு செய்து இணையத்தில்  பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களுடைய கைப்பேசி எண்கள், வீட்டு முகவரியை முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டாம். குடும்பத் தகவல்களைச் சொல்லவே கூடாது.

2. உங்களுடைய படத்தைப் பிரசுரிக்க அனுமதிக்க வேண்டாம். அவதார் எனும் நகல் படத்தைக் கொடுக்கவும்.

3. உங்களுக்குத் தெரியாதவரின் இனிமையான வேண்டுகோள்களை, கனிவான அழைப்புகளைப் புறக்கணியுங்கள்.  ஒருவர் இணையத்தில் அழகாகத் தோற்றம் அளிக்கலாம். சரம் சரமாய்க் கவிதைகள் பாடலாம். திருப்பிப் போட்டால் அது ஒரு கருநாகமாக இருக்கும். புரிகிறதா. அப்படியே பழக்கம் ஏற்பட்டு அவர் உங்களுக்கு அநாகரிகமான செய்திகள் எதையாவது அனுப்பினால் உடனடியாக அப்பா அம்மாவிடம் சொல்லி விடுங்கள். அவர்களிடம் மறைக்க வேண்டாம்.

4. அடுத்து  நல்ல ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டு அவர் உங்களைச் சந்திக்க விரும்பலாம். ஆள் நடமாட்டம் உள்ள பொதுவான இடத்தில் சந்திக்கவும். பெற்றோர்களில் யாரையாவது ஒருவரை உடன் அழைத்துச் செல்லவும். தனியாகச் செல்லவே வேண்டாம்.

5. பேஸ்புக், டிவிட்டர், மை ஸ்பேஸ்  போன்ற சமூக இணையத் தளங்களில் settings என்று சொல்லப்படும் தனிப்பட்ட அமைப்புகளில் "private" என்பதைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அனுமதி அளித்தவர்கள் மட்டுமே உங்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக்கும் படியாக இருக்க வேண்டும். எல்லாரும் பார்க்கும் படியாக இருக்கக் கூடாது.

6. படங்களைப் பிரசுரிக்க வேண்டும் என்றால் எந்தப் படங்களைப் பிரசுரிக்கலாம் என்பதை அப்பா அம்மா முடிவு செய்யட்டும். உங்கள் இஷ்டத்திற்கு தேர்வு செய்ய வேண்டாம். திருமணமாகிப் போகும் வரை உங்கள் பெற்றோர் தான் உங்களுக்குக்  காவலாளிகள்.

7. இத்தனை மணிக்கு இந்த இடத்தில் இருப்பேன்; இன்னது செய்து கொண்டிருப்பேன் என்று பகிங்கரமாக இணையத்தில்  சொல்லவே வேண்டாம்.

8. நீங்கள் சந்தேகப் படும் மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்.

9. முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள், ஊர் பேர் தெரியாதவர்களின் மின்னஞ்சல் அழைப்புகளைத் தவிர்க்கவும். அந்த மாதிரியான மின் அஞ்சல்களை உடனே அழித்து விடுங்கள்.

10. ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது  உங்களுடைய Password எனும் கடவுச்
சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.

11. உங்கள் தோழிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் இருந்தால் பகிங்கரமாக இணையத்தில் விவாதம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இன்றைக்கு உங்கள் தோழி. நாளைக்கு நீங்கள்.

12. இணையம் மூலமாகப் பணம் செலுத்த வேண்டும் என்றால் அப்பா அம்மாவின் அனுமதியை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவர்களின் கடன் அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

இணையத்தில் சாக்கடைச் சங்கதிகள் சரசம் பாடுகின்றன. பார்த்து நடந்து கொள்ளுங்கள். நான் சொன்னதை ஒரு தகப்பனின் புத்திமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போடுங்கள்.

திருமதி. இராசாத்தி, மந்தின்
கே: நான் விண்டோஸ் XP இயங்குதளத்தைப் பயன் படுத்துகிறேன். இந்த இயங்குதளம் நன்றாக வேலை செய்யும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், My Computer எனும் கோப்பு உறையைச் சொடுக்கினால் வெகு நேரம் காத்து இருக்க வேண்டி இருக்கிறது. žக்கிரமாகத் திறக்க வழி இருக்கிறதா?

ப: விண்டோஸ் இயங்குதளத்தில் கோளாறு எதுவும் இல்லை. கோப்புகளைத் திறக்கும் கணினி அமைப்பு settings முறையில் தான் கோளாறுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. My Computer எனும் கோப்பு உறையைச் சொடுக்கி திறந்து கொள்ளுங்கள். ஆக மேலே Tools இருக்கும். அதைச் சொடுக்குங்கள்.

அப்புறம் Folder Options >> View >> Files and Folders >> எனும் பட்டியல் வரும்.  அதில் Automatically search for network folders and printers என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதன் இடது புறத்தில் ஒரு தணிக்கைச் சதுரக் கட்டம் இருக்கும். அதில் சரி என்று இருக்கும் அடையாளத்தை நீக்கி விடுங்கள். அந்தச் சதுரக் கட்டம் காலியாக இருக்க வேண்டும். அதன் பின்னர் கோப்பு உறைகளைச் சொடுக்கினால் வேகமாகத் திறக்கும்.