15 நவம்பர் 2020

மொரீஷியஸ் படைகளுக்கு தலைமை தாங்கிய தமிழர் உச்சமுடி

 தமிழ் மலர் - 12.11.2020

கரை ஒதுங்கும் சிப்பிகள். நுரை உமிழும் அலைகள். வானம் தொடும் நீலங்கள். அலை பாயும் நீர்க்குமிழிகள். அசத்தல் ஆழ்க்கடல் பிம்பங்கள். கவிதைகள் பாடி கரை சேரும் கடல் காவியங்கள். துள்ளித் தாவும் வெள்ளி மீன்களின் நீல நயனங்கள். அனைத்தும் அழகின் ஆராதனைகள். அனைத்தும் ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிப் பிளந்து மறையும் நான்மணியின் நளினங்கள். அவற்றின் மறுபக்கமே மொரீஷியஸ் என்கிற பூலோகச் சொர்க்கம்.

அத்தனையும் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த அழகுச் சீதனங்கள். அத்தனையும் ஏழ்கடல் தேவதைகளின் எழில்மிகுச் சொப்பனங்கள். மொரீஷியஸ் தீவைப் படைத்த ஆண்டவன் அதே வடிவத்தில் சொர்க்கத்தையும் படைத்தான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மைதான்.

மொரீஷியஸ் எனும் நிலத் தேவதையைக் காணாத கண்களாய் என் நினைவுகளும் சிறை போகின்றன. போதும் என்று நினைக்கிறேன். மொரீஷியஸ் தீவின் தமிழர்கள் வரலாற்றுக்கு வருவோம்.

1810-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு பெரிய போர். நீயா நானா என்கிற போர். இந்தப் போரின் இரண்டு தரப்பிலும் தமிழர்கள் போர் வீரர்கள் சரி சமமாக நின்று போர் செய்தார்கள்.

இந்தப் போரில் ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. ஆங்கிலேயர்களின் படைகளுக்கு ஒரு தமிழர் தளபதியாக இருந்தார். பெயர் உச்சமுடி. அவர்தான் பிரிட்டிஷ் படைக்குத் தலைமையும் தாங்கினார். நம்ப முடியவில்லை தானே. என்னாலும் நம்ப முடியவில்லை. அதற்கு முன் பழைய வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரீஷியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். 1735-ஆம் ஆண்டு மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு செல்லப் பட்டார்கள். சின்னச் சின்னக் கப்பல்கள் கட்டுவது; கட்டடங்கள் கட்டுவது; உள்கட்டமைப்புகள். அதற்காகத் தமிழர்கள் சென்றார்கள்.

அவர்கள் போர்ட் லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப் பட்டார்கள். இருந்தாலும் அங்கே வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. கொஞ்சம் நஞ்சமாய் மனித உரிமைகள்; அவற்றில் மிச்சம் மீதியாய் மனிதநேயப் பார்வைகள். பெரிய விசயம்.

அதற்கு முன்னர் அங்கே அதிகமாகவே மனித உரிமை அத்துமீறல்கள். அங்கே இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் ஆடுமாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிக்கப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்வோம்.
தமிழர்களை மட்டும் பேசிவிட்டு ஆப்பிரிக்கர்களை அப்படியே ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் வாயில்லா இரண்டு கால் ஜீவன்களாய் வாழ்ந்தவர்கள் தானே. அவர்களும் மனிதர்கள் தானே.

1735-ஆம் ஆண்டில் இருந்து 1746-ஆம் ஆண்டு வரை மாஹே டி லா போர்டோனாய்ஸ் (Mahé de La Bourdonnais) எனும் பிரெஞ்சுக்காரர் மொரீஷியஸ் தீவின் கவர்னராக இருந்தார்.

இவர் தான் காடு மேடாகக் கிடந்த மொரீஷியஸ் தீவை ஒரு நாடாக உருவாக்கிக் காட்டுவதில் முன்னணி வகித்தவர். இவருக்குத் தமிழர்கள் பெரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள்.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கிழக்குப் பகுதியில் மலபாரிகள் கேம்ப் எனும் ஓர் இடம். அங்கே தான் தமிழர்கள் பெரும்பாலோர் வாழ்ந்து வந்தார்கள். அதற்குப் பிரெஞ்சு மொழியில் கேம்ப் டெஸ் மலபார்ஸ் (Camp des Malabars).

1810-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவில் ஆங்கிலோ பிரெஞ்சுப் போர். அதாவது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த ஒரு போர். மொரீஷியஸ் தீவை ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர், அந்தப் பக்கமாய்ப் போய் வந்து கொண்டு இருந்த ஆங்கிலேயக் கப்பல்களைத் தாக்கினார். ஆங்கிலேயர்கள் சும்மா விடுவார்களா.

இதாண்டா சான்ஸ் என்று மொரீஷியஸ் தீவை அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் மேலே பிரான்ஸில் நெப்போலியனின் ஆட்சி. இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள்; இந்த இரண்டு தரப்பிலும் தமிழர்கள் போர் வீரர்களாக இருந்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களே தமிழர்களைச் சுட்டுக் கொண்டார்கள்.

வேறு வழியும் இல்லை. ஒரு பக்கம் ஆங்கிலேயப் போர் வீரர்கள். ஆங்கிலேயப் படைகளுக்கு உதவியாகத் தமிழர்ப் போர் வீரர்கள். இன்னொரு பக்கம் பிரெஞ்சுப் போர் வீரர்கள். பிரெஞ்சுப் படைகளுக்கு உதவியாகத் தமிழர்ப் போர் வீரர்கள். எந்தப் படையில் இருந்தாலும் விசுவாசம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா.

Mauritius Grand Port War

ஆங்கிலேயர்கள் தங்களின் படைக்கு உச்சமுடி எனும் ஒரு தமிழரைத் தளபதியாக்கி உச்சம் பார்த்தார்கள். அவர்தான் ஆங்கிலேயப் படையை வழிநடத்திச் சென்றார். பெரிய அதிசயம். அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது மற்றொரு வரலாறு.

இருந்தாலும் ஸ்ரீ உச்சமுடியின் பெயரை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக அபேர்கோம்பி எனும் ஆங்கிலேயரின் பெயரை முன்வைத்து பெரிதுபடுத்தினார்கள். அப்போது மொரீஷியஸ் தீவில் 9000 இந்தியச் சிப்பாய்கள் இருந்தார்கள். பெரும்பாலோர் தமிழர்கள்.

1810-ஆம் ஆண்டில் இந்தியச் சிப்பாய்கள் இந்தியாவில் இருந்து மொரீஷியஸ் தீவிற்கு வந்தார்கள். அதில் தமிழர்களின் காலாட் படையும் இருந்தது. அந்தத் தமிழர்ப் படைக்கு ஸ்ரீ உச்சமுடி தளபதியாக இருந்தார். (Battle of Grand Port on 20–27 August 1810)

முதல் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்தாலும் அபேர்கோம்பியின் (Sir Albemarle Bertie)  பெயரை நியாயப்படுத்த மொரீஷியஸில் ஒரு கிராமத்திற்கு அபேர்கோம்பி என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவது போரில் தான் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள் அந்தப் போருக்கு சாமுவேல் பைம் (Sir Samuel Pym) எனும் ஆங்கிலேயத் தளபதி தலைமை தாங்கினார்.

ஆனால் அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் அபேர்கோம்பி எனும் பெயருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. அதனால் அபேர்கோம்பி எனும் கிராமத்தை உச்சிமுடி கிராமம் என்றும் லாபிரிக்கிரி கிராமம் என்றும் அழைத்தார்கள். இன்றும் லாபிரிக்கிரி என்றுதான் அழைக்கப் படுகிறது.

உண்மையில் தமிழர்ப் படை, வங்காளப் படை, பம்பாய் படை இல்லாமல் ஆங்கிலேயர்கள் அந்தப் போரில் ஜெயித்து இருக்க முடியாது.

தமிழர்கள் என்றால் விசுவாசத்தின் மறுபக்கம். கை நனைத்த இடத்தில் கை கொடுக்கும் வழக்கம். அது தமிழர்களின் பாரம்பரியப் பழக்கம். இருந்தாலும் அந்த நல்லதுக்கும் சமயங்களில் நல்ல பெயர் கிடைப்பது இல்லையே. என்ன சொல்ல வருகிறேன் என்றால் அப்படி விசுவாசமாக இருந்ததால் தான் இந்தப் பக்கம் வந்தேறிகள் எனும் பட்டயம் கிடைத்து இருக்கிறது. விடுங்கள்.   

அதன் பின்னர் மொரீஷியஸ் தீவில் ஆங்கிலேயர் ஆட்சி. 1829 முதல் 1830 வரை நூற்றுக் கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து மொரிசியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள். 1830-ஆம் ஆண்டு வரையில் முதற்கட்டக் குடியேற்றம். ஒரு செருகல்.

தமிழர்களின் புலம் பெயர்வுகளை ஆய்வு செய்யும் போது மிகச் சரியாகவும் மிக நேர்த்தியாகவும் ஆய்வு செய்வது அவசியம். நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கு அவை சிறப்பான ஆவணமாகப் போய்ச் சேர வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் விட்டுச் செல்லும் காணிக்கையாக அமைய வேண்டும்.

மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டு தொடங்கியது. 1843-ஆம் ஆண்டு மட்டும் 14,634 தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். 1845-ஆம் ஆண்டு தொடங்கி 1849-ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து குடிபெயர்வு எதுவும் நடக்கவில்லை.

1843-ஆம் ஆண்டு தொடங்கி 1852-ஆம் ஆண்டு வரை 30,334 பேர் குடிபெயர்ந்தனர். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டங்களில் கசக்கிப் பிழியப் பட்டார்கள். வருடத்தையும் கவனியுங்கள். முகவர்களின் ஆசை வார்த்தைகளில் பலர் ஏமாற்றப் பட்டார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பேர் மொரீஷியஸ் தீவிற்கு குடியேறி இருக்கிறார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொரீஷியஸ் தீவில் தமிழ் மக்கள் தங்களின் பழைய நிலையையும் பழைய செல்வாக்கையும் பழைய பண்புகளையும் ஓரளவிற்கு இழந்து விட்டார்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மொரீஷியஸ் தீவில் நடந்த ஒரு நிகழ்ச்சி. தமிழ் எங்கள் உயிர் என்று உன்னதம் பேசிய ஒரு நிகழ்ச்சி. உலகத் தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்த நிகழ்ச்சி.

2004 அக்டோபர் 30-ஆம் தேதி மொரீஷியஸ் மத்திய வங்கி புதிய பணத்தாள்களை வெளியிட்டது. ஈராயிரம், ஆயிரம், ஐந்நூறு, இருநூறு, நூறு, ஐம்பது, இருபத்தைந்து ரூபாய் என மதிப்பு கொண்ட பணத்தாள்களின் வெளியீடு.

அந்தத் தாள்களில் முறையே சிவசாகர் ராம் குலாம், ஜார்ல்ஸ் காய்தான் டூவால், விஷ்ணு தயாளு, அப்துல் ரசாக் முகமது, ரெங்கநாதன் சீனிவாசன், ஜோசப் மவுரிஸ் பட்டுராவ், ஜீன் ஆச்சூவான் ஆகிய பிரபலங்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.

முன்பு காலத்தில் மொரீஷியஸ் பணத் தாள்களில் ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய வழக்க முறைமை. முதன்முதலில் பணத் தாள்களை வெளியிடும் போது தமிழை இரண்டாவது இடத்தில் வைத்து வெளியீடு செய்தார்கள்.

மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் குடியேற்றம்; அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள்; அவர்களின் ஒத்துழைப்புகள்; சேவை மனப்பான்மைகள் ஆகியவற்றுக்கு முன்னாள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த வகையில் பணத்தாள்களில் இரண்டாம் நிலையைக் கொடுத்து மொரீஷியஸ் தமிழர்களுக்குச் சிறப்பு செய்துவிட்டுப் போனார்கள்.

ஆனால் புதிதாக வெளியிடப்பட்ட பணத் தாள்களில் ஒரு வில்லங்கம். தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குப் போனது. இரண்டாம் இடத்திற்கு இந்தி வந்தது. சும்மா விடுவார்களா தமிழர்கள். கொதித்துப் போனார்கள்,

”எங்களை என்ன இளிச்சவாயன்கள் என்றா நினைத்துக் கொண்டீர்கள். இந்த நாட்டின் ஆணி வேரே தமிழர்கள் தான். எங்களின் தாய்மொழிக்கு முறையாகக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். இல்லையா நடக்கிறதே வேறு என்று ஆர்ப்பரித்தார்கள். அடுத்தக் கட்டமாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.

மொரீஷியஸ் மத்திய வங்கி தமிழுக்குத் தீங்கு செய்து விட்டது என்று சொல்லி மொரீஷியஸ் தமிழ்க் குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டன. ஆங்காங்கே எதிர்ப்புக் கூட்டங்கள். ஆங்காங்கே பேரணிகள்.

புதிய பணத் தாள்களில் இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்க வேண்டும். அந்த இடத்தில் இந்தி மொழி வந்து இருக்கிறது. தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குப் போய் இருக்கிறது. நாங்கள் விட மாட்டோம். எங்கள் தமிழுக்கு கிடைத்து வந்த மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மொரீஷியஸ் தமிழர்கள் உறுதியாக இருந்தார்கள்.

போர்ட் லூய் தலைநகரத்தில் உள்ள மீனாட்சியம்மன் ஆலயத்தில் தமிழர்களின் முதல் அவசரக் கூட்டம். அடுத்து மோக்கா நகரில் முதல் கண்டனக் கூட்டம். அதில் எண்ணாயிரம் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

அந்தக் கண்டனக் கூட்டத்திற்கு மொரீஷியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரம் பிள்ளை தலைமை தாங்கினார். இரு தமிழர் அமைச்சர்கள்; எதிர்க்கட்சியில் இருந்த இரு தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

கோயிலில் கூடிய மக்களின் கூட்டம் பின்னர் ஒரு பெரிய பேரணியாக மாறியது. அந்தப் பேரணி மோக்கா நகரில் இருந்து பிளாஸா அரங்கத்திற்குச் சென்றது. பிளாஸா அரங்கில் தமிழர்க் குடியேற்றத்தின் அடையாளமாக ஒரு கற்சிலைச் சின்னம் உள்ளது. அதற்குச் *சிலம்புச் சிலை* என்று பெயர். அது தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்.

அங்கு சென்ற பேரணி மத்திய வங்கி ஆளுநர் மித்ராஜிட் தனேஸ்வர் மாராயின் உருவப் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. பதின்மூன்று நாட்கள் கழித்து இரண்டாவது பேரணி. *தமிழ் மனசாட்சி* என்கிற குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் போர்ட் லூயி தலைநகரத்தில் ஒன்று கூடினார்கள்.

தமிழ்ப் பெண்மணி தியாகி அஞ்சலை குப்பன் சிலைக்குச் சென்றார்கள். மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். அந்தப் பேரணியில் மற்ற இனக் குழுக்களின் தலைவர்களும் மற்ற இன மக்களும் கலந்து கொண்டார்கள். பின்னர் அந்தப் பேரணி மத்திய வங்கிக்குச் சென்றது. அங்கே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தது.

பின்னர் *மொரீஷியஸ் தமிழ்க் கழகம்* களம் இறங்கியது. ரோசில் நகரத்தில் ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. மொரீஷியஸ் தீவின் பல்வேறு இடங்களில் இருந்து ஆண்களும் பெண்களுமாய்க் கூடினார்கள். கையில் மஞ்சள் கொடிகளை ஏந்தி அமைதிப் போராட்டம் செய்தார்கள். இந்தக் கதை நாளையும் பயணிக்கின்றது.

https://ksmuthukrishnan.blogspot.com/2020/11/blog-post_13.html

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.11.2020



பெண்கள் மனுக்குலத்தின் அழகுச் சீதனங்கள்

பெண்கள் ஆண்களுக்கு இறைவன் அருளிய அழகிய சீதனங்கள். குடும்பம் எனும் குளத்தில், அந்தச் சீதனங்கள் ஒளிரும் வரையில் அந்தக் குளத்திற்கும் அழகு. அந்தச் சீதனத்திற்கும் அழகு.

ஒரு வீட்டில் ஒரு பெண் துலங்குகிறாள் என்றால் அங்கே ஒரு மரியாதை ஏற்படுகிறது. மதிப்பு உண்டாகிறது. பெருமையும் மலர்கிறது.

பெண் இருக்கும் வரையில் ஓர் ஆணுக்குப் பெருமை. அவள் இல்லை என்றால் அந்த ஆணின் வாழ்க்கை பொலிவு குன்றுகிறது. சுவையும் குன்றுகிறது.

அவளைச் சுகமான பொருளாகப் பார்க்காமல் ஒரு தேவதையின் அவதாரமாகப் பார்ப்போம். வாழ்வியல் யுகத்திற்கான வரப்பிரசாதமாய்ப் பார்ப்போம். அந்த அழகு ஜீவன்களில் சில அசடுகளும் முசுடுகளும் இருக்கவே செய்யும். களைய முயற்சி செய்வோம்.


பெண்கள் வாழும் இல்லத்தை ஒரு கோயிலுக்கு உவமானமாகச் சொல்வது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம்.

உற்றார் மற்றார் மதிப்பு குறைந்தும் போகலாம். அக்கம் பக்கத்தார் பார்வையும் வாடிப் போகலாம்.

இந்த நாளிலும் எந்த நாளிலும் மனுக்குலத்தின் அந்த அழகுச் சீதனங்களைப் போற்றுவோம். பெருமைப் படுவோம். கைக்கூப்புவோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.11.2020




13 நவம்பர் 2020

நஜீப்: இந்தியர்களுக்கான வரைவுத் திட்டம் தொடர வேண்டும்

தமிழ் மலர் - 12.11.2020

தேசிய முன்னணி ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்கான வரைவுத் திட்டம் (Malaysian Indian Blue Print) திட்டத்தைப் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தொடர வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் உள்ள இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தத் திட்டம் மிக அவசியம் என நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அவர் பேசினார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது இந்தத் திட்டம் கைவிடப் பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய, சீனச் சமூகங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை என்றார் அவர்.

ஆகையால் இந்திய, சீன சமூகங்களுக்கான ஒதுக்கீடுகளை நடப்பு அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என தேசிய முன்னணி முன்னாள் தலைவருமான அவர் சொன்னார்.

நிதி ஒதுக்கீட்டில் அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டால் தான், தங்கள் நலன் பேணும் ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டத்தை மக்கள் பார்ப்பார்கள் என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.



12 நவம்பர் 2020

மொரீஷியஸ் தமிழர்கள் கட்டிய போர்ட் லூயிஸ் துறைமுகம்

தமிழ் மலர் - 11.11.2020

1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரீஷியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். லா சிரீன் (La Sirene) என்ற கப்பலில் ஏறக்குறைய 275 தமிழர்கள் மொரீஷியஸ் தீவில் தரை இறங்கினார்கள். தமிழ் இளைஞர்கள் 108 பேர். நடுத்தர வயதினர் 95 பேர்.

வருடத்தைக் கவனியுங்கள். இன்று நேற்று நடந்தது அல்ல. 291 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அந்த நாட்டிற்கு தமிழர்கள் பாய்மரக் கப்பல்களில் போய் இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளில் இப்போது ஏறக்குறைய 55000 மக்கள் வாழ்கிறார்கள். பத்துப் பதினைந்தாவது தலைமுறைத் தமிழர்கள்.

அதற்கு முன்னர் ஒரு சின்ன தகவல். கி.பி 1500-ஆம் ஆண்டுகளில் இந்தத் தீவை போர்த்துகீசியர்கள் தான் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்தக் காலத்திலேயே போர்த்துகீசியர்கள் உலகம் பூராவும் சுற்றி பல நூறு தீவைகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அப்படித்தான் 1511-ஆம் ஆண்டில் மலாக்காவிற்கும் வந்தார்கள். கோட்டைகள் கட்டிக் கோலோச்சி இருக்கிறார்கள்.

மலாக்கா பண்டார் ஹீலிர் பகுதியில் ஒரு போர்த்துகீசியக் குடியிருப்பு உள்ளது. அதன் பெயர் கம்போங் செயின்ட் ஜான் அல்லது கம்போங் போர்த்துகீஸ் (Kampung St. John, Kampung Portugis). அங்கு வாழும் போர்த்துகீசிய இனத்தவரை கிறிஸ்தாங் (Kristang) என்கிறார்கள். போர்த்துகீசியத்தில் உள்ளூர் இனக் கலவை.

மக்கள் தொகை ஏறக்குறைய 1500. குடும்பங்கள் 116. குடியேற்றம் நடந்து  500 ஆண்டுகளாகி விட்டன. இன்னும் அவர்கள் பெண்டாத்தாங் பார்வையில் தான் பார்க்கப் படுகிறார்கள். சரி.

மொரீஷியஸ் தீவிற்கு வருவோம். போர்த்துகீசியர்களுக்குப் பின்னர் நூறு ஆண்டுகள் கழித்து டச்சுக்காரர்கள் அந்தத் தீவிற்கு வந்தார்கள். பிறகு 1715-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். துறைமுகம் கட்டுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டது.

அதனால் மொசாம்பிக் மற்றும் சான்சிபார் நாடுகளில் இருந்து ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டு போகப் பட்டார்கள். 1735-ஆம் ஆண்டில் 49,000 அடிமைகள் இருந்தார்கள். இதில் இந்தியர்களையும் (தமிழர்களையும்) சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாண்டிச்சேரி தமிழ்நாட்டில் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்களின் முதல் பார்வை தமிழர்கள் மீது தான் பாய்ந்தது. 1729-ஆம் ஆண்டில் தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள்.

மலாயாவுக்குத் தமிழர்கள் 1786-ஆம் ஆண்டில் பினாங்கில் பிரான்சிஸ் லைட் ஆளுமையின் போது வந்தார்கள். அதற்கு முன்னதாக 60 ஆண்டுகள் முன்பாகவே தமிழர்கள் மொரீஷியஸ் தீவில் குடியேறி விட்டார்கள். சரி.

நல்லபடியாகத் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டது. துறைமுகத்தின் பெயர் போர்ட் லூயிஸ். அதாவது ஆப்பிரிக்காவில் தமிழர்கள் கட்டிய பிரெஞ்சுத் துறைமுகம். இந்தத் துறைமுகம் இன்றும் தமிழர்களின் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இருக்கிறது.

மொரீஷியஸ் பற்றிய அடிப்படையான தகவல்கள். மலேசியாவில் இருந்து 5,560 கி.மீ. தொலைவில், இந்தியப் பெரும் கடலில் மொரீஷியஸ் தீவு அமைந்து உள்ளது. பரப்பளவு 2100 சதுர கி.மீ. பினாங்கு தீவைப் போல இரு மடங்குகள்.

எண்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மொரீஷியஸ் கடl பகுதிக்குள் இருந்த எரிமலைகள் வெடித்தன. அதிர்வுகளினால் ஆழ்க்கடல் நிலப் பகுதிகள் மேல் எழுந்து வந்தன. அவை தான் இப்போதைய மொரீஷியஸ் தீவு.

மொரீஷியஸ் தீவைச் சுற்றிலும் 49 குட்டி குட்டித் தீவுகள். ரோட்ரிக்ஸ், செயிண்ட் பிராண்டோன், அகாலேகா ஆகியவை மிக முக்கியமானவை.

ரோட்ரிக்ஸ் (Rodrigues) தீவு 110 சதுர கி.மீ. பரப்பளவு. மொரிசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது.

அகாலேகா (Agalega) தீவு 26 சதுர கி.மீ. பரப்பளவு. வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது.

செயிண்ட் பிராண்டோன் (St. Brandon) தீவு 2 சதுர கி.மீ. பரப்பளவு. தென் மேற்கே 400 கி.மீ தொலைவில் உள்ளது.

மொரீஷியஸ் தீவில் ஒன்பது மாவட்டங்கள். 2019-ஆம் ஆண்டு மக்கள் தொகை 1,265,475 பேர். ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம். 639,644 பேர் பெண்கள். 626,341 பேர் ஆண்கள். கூடுதலாக 13,303 பெண்கள். இது 2019 ஜூலை மாதப் புள்ளி விவரங்கள்.

மொரீஷியஸ் தீவுக்கு 370 ஆண்டுகள் குடியேற்ற வரலாறு. டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என மூவின ஐரோப்பியர்கள் அந்தத் தீவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். 1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவு சுதந்திரம் பெற்றது.

மொரீஷியஸ் ஒரு விவசாய நாடு. கரும்பையும் தேயிலையையும் நம்பி வாழ்கிறது. சுற்றுலா துறை ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும் 2000-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளிடம் ஏமாற்று வேலைகள்; கூடுதல் கட்டண வசூலிப்புகள்; இரட்டை விலைகள் போன்ற பிரச்சினைகள். அதனால் சுற்றுப் பயணிகளின் வருகையும் குறைந்து போனது. இப்போது சீர் செய்யப்பட்டு வருகிறது.

சுற்றுலா துறையில் ஆப்பிரிக்க அளவில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. உலகத்திலேயே அழகிய கடற்கரை கொண்ட இடம் எனும் விருதை மூன்ற முறை பெற்று இருக்கிறது. அங்கு ஓர் அழகிய எரிமலை இருக்கிறது.

அதன் பெயர் லே மோர்னே பிரபாண்ட் (Le Morne Brabant). யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகாரம் பெற்று உள்ளது.

மொரீஷியஸ் தீவில் பல இனங்கள். இந்தியர்கள், கிரியோல்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்க அடிமைகள். மொழிகள் என்றால் (கிரியோல் 86.5%); (போஜ்புரி 5.3%); (பிரெஞ்சு 4.1%); (ஆங்கிலம், சீனம், தமிழ் 1.4%) மொழிகள். தமிழர்களில் பெரும்பாலோர் கிரியோல் மொழி பேசுகிறார்கள். தமிழ் மொழி மிகக் குறைவு. இப்போது அண்மியில் தான் தமிழ் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.


மொரீஷியஸ் ஆப்பிரிக்கப் பெண்மணி

அங்கே அப்படி ஒரு பல இனச் சமுதாயம் உருவாகி விட்டது. நவீனக் காலத்தில் இன்னும் ஓர் அதிசயம். என்னவென்றால் அங்கே 66 மொழிகள் பேசப் படுகின்றன. உண்மையிலேயே அதிசயம் தான். எப்படி இத்தனை மொழிகள் வந்தன என்றும் கேட்கலாம்.

அந்தக் காலத்தில் கிழக்கிந்திய நாடுகளில் இருந்து மேற்கிந்திய நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த மொரீஷியஸ் தீவைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். எல்லாம் பாய்மரக் கப்பல்கள் தான். முன்பு காலத்தில் மொரீஷியஸ் தீவு பலருக்கும் தெரியாமல் தனிகாட்டு ராஜாவாக இருந்தது. போர்த்துகீசியர்கள் கண்டுபிடித்ததும் மாமியார் மாமன் மச்சான் வீடாக மாறிப் போனது.

ஒரு கப்பலில் வருபவர்களில் நாலைந்து பேர் மொரீஷியஸ் தீவிற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்களாம். இப்படியே பல ஆயிரம் பேர். அப்படியே ஓடி ஒளிந்து; அங்கே இருந்த ஆப்பிரிக்கப் பெண்களைக் கல்யாணம் பண்ணி; அப்படியே ஒரு கிரியோல் இனத்தையும் உருவாக்கி விட்டார்கள். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம்.

சன்னம் சன்னமாய் உள்ளூர் மக்களோடு இணைந்து கொண்டார்கள். வாழ்ந்தும் வருகிறார்கள். கிரியோல் என்றால் ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், ஐரோப்பியர்கள் கலந்ததால் உருவான ஒரு புதிய கலப்பினச் சமுதாயம். அவர்கள் பேசுவது மொரீஷியன் கிரியோல் எனும் மொழி.

இந்த மொழி பிரெஞ்சு இலக்கண அமைப்பைக் கொண்டது. ஆப்பிரிக்க மொழிச் சொற்களையும் உள்ளடக்கியது. சரி. இப்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.

தமிழர்கள் ஏன் மொரீஷியஸ் தீவுகளுக்குப் குடிபெயர்ந்தார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போம். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள. அவர்களை இரு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

முதல் வகை: வாணிகப் புலம் பெயர்வு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே உலக நாடுகளில் குடியேறிய தமிழர்கள். இந்தப் புலம் பெயர்வு 15-ஆம் நூற்றாண்டு வரை நடந்தது.

இரண்டாவது வகை: 18 - 19-ஆம் நூற்றாண்டுகளில் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் கரும்பு காபித் தோட்டங்களுக்குக் கூலிகளாய் கொண்டு செல்லப் பட்ட தமிழர்கள். இந்த இரண்டாம் வகை குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்று தான் மொரீஷியஸ் தீவு.

தமிழ்நாட்டில் என்ன நடந்தது. வரலாறு என்ன சொல்கிறது. அதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும். 17-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நாயக்கர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்த காலக் கட்டம். பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். அடுத்ததாக ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.

அந்தக் கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆற்காட்டு நவாபுகளின் ஆளுமை. வந்தவர்களும் சரி; இருந்தவர்களும் சரி; அனைவருமே தங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது தமிழ் நாட்டில் 72 பாளையக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமல் சண்டைகள். அதில் மாட்டிக் கொண்டவர்கள் பாவம் ஏழை விவசாய மக்கள் தான்.

அதையும் தாண்டிய நிலையில் ஏழ்மையில் வறுமை. சாதியில் கொடுமைகள். நிலப்பிரபுத் தனத்தில் அதிகாரங்கள். ஜமீன்தாரர்களின் அடாவடித்தனங்கள். வட்டிக்காரர்களின் வட்டி குட்டி போடும் அட்டகாசங்கள். சுண்டல் சுவையில் சுரண்டல்கள். கூலி வேலையில் கொத்தடிமைகள். அரிச்சுவடிகள் பார்த்த அடிமைத்தனங்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போய் பஞ்சம் பட்டினிச் சாவுகள். தாங்க முடியாமல் ஆளை விடுங்கடா சாமிங்களோ என்று தமிழர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற தமிழக மாவட்டங்களில் இருந்தவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப் பட்டார்கள். அந்த வகையில் ஆயிரக் கணக்கான விவசாயத் தமிழர்கள் பஞ்சம் பிழைக்க மற்ற மற்ற நாடுகளில் குடியேறினார்கள்.

மொரீஷியஸ் தீவில் தமிழர்களின் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது கட்டம்: ஒப்பந்தக் கூலி முறையில் (Indentured Labourers) தமிழர்களைக் கொண்டு போனது.

இரண்டாவது கட்டம்: மொரீஷியஸ் தீவில் கட்டடங்களைக் கட்டுவது; சாலைகள் நிர்மாணிப்பு வேலைகள். கைவினைத் தொழில்களில் தேர்ச்சி பெற்ற தமிழர்களைக் குடியேற்றுவது.

மூன்றாவது கட்டம்: யாருடைய தலையீடும் இல்லாமல் சொந்தமாகக் குடியேறியத் தமிழர்கள். இவர்கள் வியாபாரம் வணிகம் செய்வதற்காக அங்கே போனவர்கள்.

1728-ஆம் ஆண்டு பியரி பெனோயிட் டுமாஸ் (Pierre Benoit Dumas) என்பவர் மொரீஷியஸ் தீவின் ஆளுநராகப் பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே பாண்டிச்சேரியில் பணிபுரிந்தவர். இந்த மனிதர்தான் மொரீஷியஸ் தீவில் குடியேற்ற 275 தமிழர்களை முதன் முதலாகத் தேர்ந்து எடுத்தார். அவர்களில் 8 வயது சிறுவர்களில் இருந்து 18 வயது இளைஞர்கள் வரை 108 பேர். கைவினைத் திறன் பெற்றவர்கள் 95 பேர்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ஆப்பிரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீஷியஸ் தீவிற்கு வந்த முதலாவது பிற இனத்தவர் யார் என்றால் அவர்கள் தான் இந்தியாவின் இந்தியர்கள். அவர்களில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலையாயத் தலைமகன்கள்..

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.11.2020

சான்றுகள்:

1. Macdonald, Fiona; et al. Mauritius: Peoples of Africa. pp. 340–341.

2. Bahadur, Gaiutra (2014). Coolie Woman: The Odyssey of Indenture. The University of Chicago.

3. Tamil-Speaking Union Act – 2008 (PDF). Ministry of Arts and Culture, Mauritius.

4. Country Profile: Mauritius, Seychelles, Economist Intelligence Unit, 2001, p. 8
 

டி.வி.3 அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும்

தமிழ் மலர் - 11.11.2020

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் தாயார் ஒரு கள்ளக்குடியேறி என அறிவித்து விட்டு அதற்காக மன்னிப்புக் கோரிய டி.வி.3-இன் போக்கு கண்டிக்கப்பட வேண்டும்.


மன்னிப்புக் கேட்டு விட்டால், செய்த தவறுக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்று அர்த்தமா? தவறான செய்தியை வெளியிட்ட இந்தப் பொறுப்பாளர்கள் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் பொறுப்பாளர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்வார்கள்.

இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்று மலேசியப் பிரதமருக்குத் தெரியாதா? அவர் ஏன் இதைப் பற்றி இன்னும் தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை?
காஷ்மீர், பிரான்ஸ், ஸக்கீர் நாயக் போன்ற விசயங்களிலும் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். இதில் இந்தப் பிரச்சினை வேறு.

நம்நாட்டு அரசியல் வாதிகள் ஏன் பிறநாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகின்றனர் என்று தெரியவில்லை. தங்களை ஒரு ஹீரோ எனக் காட்டிக் கொள்ள இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்களா?

இப்படி தவறாக எடுக்கும் ஆயுதம் நம் நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்பதை இவர்கள் அறிவார்களா என தைப்பிங்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஏ.முனுசாமி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.