26 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 9

தமிழ்மலர் - 26.11.2018 - திங்கட்கிழமை

ஒரு பொய்யை ஒன்பது பேரிடம் ஒன்பது நாளைக்குத் தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். பத்தாவது நாள் அந்த பொய் பழைய ஜிகினா மாதிரி பல்லைக் காட்டிச் சிரிக்கும். அதற்குப் பெயர் தான் கோயபல்ஸ் பொய். 




அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அந்த மாதிரி ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்தப் பொய்யும் ஒரு நாளைக்கு மெய் போல நகரும். ஆனால் அந்தப் பொய் மாயைக்கு ஆயுசு குறைவு. ஒரு கட்டத்தில் அதுவாகவே செத்துப் போகும்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் எனும் கூற்றுக்கு நிதர்சனமாகவே வாழ்ந்து காட்டியவர் உலக மகா ஹிட்லரின் ஆத்மார்த்த நண்பர் கோயபல்ஸ். ஹிட்லரின் பொய்களை உண்மையாக்கிக் காட்டியவர். பொய் மந்தைகளின் கூட்டத்தில் அட்டகாசப் புளுகனாக வாழ்ந்தவர்.

இவரைப் போல 1எம்.டி.பி. நிறுவனத்திலும் இருந்தார்கள். ஆனால் 1எம்.டி.பி. அருள் கந்தா அப்படி அல்ல. பொய் பேசத் தெரியாதவர் என்று சொல்ல மாட்டேன். 1எம்.டி.பி.யைக் காப்பாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லி வசமாக மாட்டிக் கொண்டவர். 




ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். அந்தப் பொய்யை மறைக்க மற்றும் ஒரு பொய். இப்படி பொய்களின் மேல் பொய்களைச் சொல்லிச் சொல்லியே பெயரைக் கெடுத்துக் கொண்டார். பாவம் அவர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டு இருக்கும் போது அந்த டைட்டானிக் கப்பலைவிட வேறு ஒரு பெரிய கப்பல் வந்து இருந்தால் இரண்டாயிரம் மூவாயிரம் பேரைக் காப்பாற்றி இருக்கலாம். குட்டிக் குட்டி மீன்பிடிப் படகுகளை வைத்துக் கொண்டு காப்பாற்ற முடியாமல் போனது தான் வரலாறு. அந்த மாதிரி தான் 1எம்.டி.பி.யிலும் நடந்தது.

1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாகப் பதவியை ஏற்ற அருள் கந்தாவினால் 1எம்.டி.பி.யைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அருள் கந்தா பதவி ஏற்பதற்கு முன்னர் 1எம்.டி.பி.யில் சொல்லில் மாளா குழப்படிகள். எக்கச்சக்கமான குழறுபடிகள். மோசமாக இருந்த நிலைமையை இவர் போய் மேலும் மோசமாக்கி விட்டார். காப்பாற்ற முயற்சிகள் செய்தார். உண்மை. வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் எதையாவது செய்ய வேண்டும் இல்லையா.




ஆனால் இவரால் எதையும் சரியாக முறையாகச் செய்ய முடியவில்லை. தலைக்கு மேலே வெள்ளம் போய்க் கொண்டு இருக்கிறது. சுனாமி வந்து கதைவைத் தட்டுகிறது. இவரால் என்னங்க செய்ய முடியும்.

இவர் வாங்கிய ஐந்து மில்லியன் ஆண்டுச் சம்பளத்திற்கு வகை வகையாய்க் கதைகள் தான் பேச முடிந்தது. அந்தக் கதைகளில் ஆயிரத்தெட்டு பொய் மூட்டைகளை அவிழ்க்க வேண்டி வந்தது. அந்த பொய் மூட்டைகளில் சேக்ஸ்பியர் நாடகங்கள். அப்படியே நெஞ்சு வெடிக்கும் நகைச்சுவைகள். சாலமன் பாப்பையாவும் சரி; திண்டுக்கல் லியோனியும் சரி; அருள் கந்தாவிடம் ஒன்றும் வாசிக்க முடியாது.

இவை எல்லாம் பொதுத் தேர்தலுக்கு முன்னால் நடந்தவை.

1எம்.டி.பி. வாங்கிய கடன்கள் கோடிக் கோடிகள். அவற்றின் வட்டியைக் கட்டுவதற்கு அருள் கந்தா மேலும் மேலும் கடன்களை வாங்கினார். ஆட்டைப் பிடித்து மாட்டுக் கொட்டகையில் அடைப்பது. மாட்டைப் பிடித்து ஆட்டுப் பட்டியில் கட்டுவது. எத்தனை நாளைக்குத் தான் ஆடும் மாடும் புல் மேயாமல் பே பே என்று கத்திக் கொண்டு இருக்கும். சொல்லுங்கள். அவற்றுக்கும் வாய் வயிறு இருக்கிறது இல்லையா.




சொல்லப் போனால் அருள் கந்தா வாங்கிய கடன்களின் வட்டிகளே குட்டிப் போட்டு பேரன் பேத்திகள் எடுத்து விட்டன. அருள் கந்தாவைத் தவிர வேறு எவர் வந்து இருந்தாலும் சமாளிக்க முடியாத நிலைமை.

ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டிக் கட்ட ஒரு புதிய கடனை வாங்குவது. அந்தக் கடனுக்கு வட்டி கட்ட வேறு ஒரு கடனை வாங்குவது. அந்தக் கடனைத் தூக்கி இந்தக் கடனில் போடுவது. இந்தக் கடனைத் தூக்கி அந்தக் கடனில் போடுவது.

அதாவது ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். அந்தக் கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். இப்படி கடன் மேல் கடன்களை வாங்கி வாங்கி 1எம்.டி.பி.யைக் கடன்காரக் கடலில் மூழ்கடுத்தி விட்டார். கடன்களில் இருந்து கடன்களைக் கழிக்க, கடன்கள் வாங்கியது தான் 1எம்.டி.பி.யில் அவர் செய்த மகா பெரிய சேவை. வேறு ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.




நஜீப், இர்வான் ஸ்ரீகார் அப்துல்லா, ஜோலோ, பால் ஸ்டேட்லன், ஜாஸ்மின் லூ, எரிக் டான்; இந்த வரிசையில் அடுத்து வருபவர் அருள் கந்தா. சமயங்களில் இவரை அனக்கொண்டா கந்தா என்றும் சிலர் அழைக்கிறார்கள். நாம் அப்படி அழைக்க வேண்டாமே. மிகவும் மரியாதையாக அஸ்ருள் கந்தா கந்தசாமி என்று அழைப்போம். அதுதான் அவருடைய உண்மையான பெயர்.

அருள் கந்தா அருமையான பேச்சாளர். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் வரையில் பழைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் பலர் அவர் பின்னால் அணிவகுத்துக் கொடி பிடித்து நின்றனர்.

1எம்.டி.பி.யின் புகழாரங்களைக் கேட்பதற்காக அல்ல. அந்தப் புகழாரங்களைக் கேட்டு மக்கள் எப்படி ஆனந்த மழையில் நனைகிறார்கள் என்பதை ரசிப்பதற்காகத் தான். ஓநாய்கள் மழையில் நனைந்தாலும் அழுவது இல்லை. தெரியும் தானே. அப்படி அழுதால் எதற்கோ ஆப்பு வைக்கின்றன என்று அர்த்தம்.




அருள் கந்தா 14-ஆவது போதுத் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சாலைக் காட்சிகளைப் போட்டு மக்களை நனையாமல் குளிப்பாட்டினார். பேரும் புகழும் எடுத்தார். சாலைக் காட்சி என்றால் ரோட் ஷோ.

அப்படி ஒன்றும் அவர் மாயஜால மந்திரச் சொற்களைப் பயன்படுத்தி மக்களைக் கவரவில்லை. எல்லாம் ஊடகங்களின் பக்கவாத்தியங்கள் தான். வானொலியும் தொலைக்காட்சிகளும் அருள் கந்தாவின் மேடைப் பேச்சுகளை உச்சத்தில் கொண்டு போய் உசுப்பேத்தி வைத்தன. அந்த உசுப்பலில் உறுமி மேளம் அடித்தவர்; அண்டப் புளுகர் ஆகாசப் புளுகர் கோயபல்ஸையும் மிஞ்சிப் போனார்.

மூத்த அரசியல்வாதியின் முகத் துதிக்காக பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்கள். வெள்ளை நீலக் கொடிகளால் வீதிகள் பூராவும் படு ஜோரான அமர்க்களங்கள். பொதுத் தேர்தலுக்கு முதல்நாள் வரையிலும் 1எம்.டி.பி. என்பது ஒரு ராக மாளிகையாகவே களைகட்டி நின்றது.

 
பொதுத் தேர்தலுக்குப் முன்னர் அருள் கந்தா மலேசியா முழுமையும் சுற்றிச் சுற்றி வந்தார். 1எம்.டி.பி. பற்றி விளக்கப் பிரசாரங்கள் செய்தார். நீங்கள் கேளுங்கள் நாங்கள் பதில் தருகிறோம் எனும் மேடை நிகழ்ச்சிகள்.

You Ask, We Answer

அருள் கந்தா வயது 41. இவர் 1977-ஆம் ஆண்டு பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். கோலாலம்பூர் அரச இராணுவக் கல்லூரியில் படித்தவர். 1998-ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றார். சட்டத் துறையில் பட்டம் பெற்றார். லண்டன் நகரிலும் பாஹ்ரேயின் நாட்டிலும் பணிபுரிந்தார்.

பின்னர் 2015 ஜனவரி மாதம் 5-ஆம் தேதி 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றார். 1எம்.டி.பி.யின் மீது புகழ்மாலைகள் சூட்டுவது தலையாய வேலை. நல்லாவே செய்தார். நஜீப் வட்டாரத்தில் நல்ல பெயரையும் எடுத்தார்.




பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அருள் கந்தாவின் உலகம் தலைகுப்புற சரிந்து விழுந்தது. அதே போல பல ஆயிரம் பேரின் எதிர்பார்ப்புகளும் சரிந்து விழுந்தன. பொதுத் தேர்தலில் நஜீப் நிச்சயம் வெற்றி பெறுவார். எப்படியாவது தங்களைக் காப்பாற்றி விடுவார் என்று அருள் கந்தாவும் எதிர்பார்த்தார். நஜீப்பின் நம்பிக்கை நடசத்திரங்களும் எதிர்பார்த்தன.

இவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது வேறு. ஆண்டவர் வேறு மாதிரி எழுதி வைத்து விட்டார். மக்கள் குரலே மகேசன் குரல் என்று தீர்ப்புச் சொல்லி விட்டார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாரிசான் தோற்கடிக்கப்பட்டு புதிய அரசாங்கம் வந்தது. 2018 மே மாதம் இவர் மீது புலன் விசாரணைகள் தொடங்கின. நம்பிக்கை மோசடிகள்; பொய்யான பரப்புரைகள் எனும் குற்றச்சாட்டுகள்.

அருள் கந்தாவை நிதியமைச்சர் தன் அலுவலகத்திற்கு அழைத்தார். 2018 மே மாதம் 30-ஆம் தேதி நடந்தது. 1எம்.டி.பி. கடன்காரர்களுக்கு 143 மில்லியன் ரிங்கிட் (143,750,000 ரிங்கிட்) வட்டி கட்ட வேண்டும். என்ன செய்வது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள். நீங்கள் தானே 1எம்.டி.பி.யின் தலைமைச் செயல் அதிகாரி என்று நிதியமைச்சர் அருள் கந்தாவைக் கேட்டார்.




ஆனால் அருள் கந்தா அழகாகச் சமாளித்து விட்டார். ’நான் விடுமுறையில் இருந்தேன். அதனால் 1எம்.டி.பி.யின் நிதியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று தடாலடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

புதிய நிதியமைச்சர் லீ குவான் எங் அவர்கள், மயக்கம் போட்டு விழாத குறைதான். அருள் கந்தா நம்பிக்கைக்கு அப்பால் பட்டவர்; அவர் நம்ப முடியாத ஒரு மனிதர் என்று வருத்தப் பட்டார்.

2016 - 2017-ஆம் ஆண்டுகளில் 1எம்.டி.பி. பற்றிய தில்லுமுல்லுகளை அமெரிக்க நீதித் துறை விலாவாரியாகப் பிட்டுப்பிட்டு வைத்தது. அதற்கு அருள் கந்தா, ‘1எம்.டி.பி. பற்றி எனக்குச் சரியான விவரங்கள் இல்லை. அதனால் அதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்று சொன்னவர் தான் இதே இந்த அருள் கந்தா. இது எப்படி இருக்கு? 


ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி; அதுவும் கோடிக் கணக்கில் புரள்கின்ற ஒரு நிறுவனத்தின் உயிர்நாடி; அப்படிப்பட்ட ஒருவர் அந்த நிறுவனத்தைப் பற்றிய கணக்கு வழக்குகள் தமக்குத் தெரியாது என்று சொல்லிக் கைகழுவிக் கொண்டால் எப்படிங்க. வேடிக்கையாக இல்லை.

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

எனும் பாடல்கள் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

’நீ பார்த்தாய்; நான் பார்க்கவில்லை. நான் பார்த்தேன். நீ பார்க்கவில்லை. அதற்கு நான் என்ன செய்வது. ஐ ஆம் வெரி சாரி’ என்று சொல்வது போல இருந்தது. உலக ஊடகங்கள் கைதட்டின. அருள் கந்தாவிற்கு வாழ்த்துகள் சொல்லின. உண்மைதான். பொய் சொல்லவில்லை.

அப்புறம் என்னங்க. பெரிய ஒரு முழுப் பூசணிக்காயை ஒரு கவளச் சோற்றுக்குள் அடக்கி வைத்து பூசணிக்காய் எங்கே என்று கேட்டால் யாருக்குத் தான் சிரிப்பு வராது. அட போங்கடா நீங்களும் உங்க அகடவிகடமும் என்று பெருமூச்சு விட்டார்கள்.



அருள் கந்தா மீது இசைமாரியில் வசைமாரி பொழிந்தவர்களில் முதலிடம் வகிப்பவர் பெட்டாலிங் உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா. சும்மா சொல்லக் கூடாது.

அடுப்பாங் கரைக்குக் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டது மாதிரி கேள்விகள் கேட்டார். அமெரிக்க நீதித் துறையின் புள்ளிவிவரங்களை அடுக்கி அடுக்கி வைத்தார்.

சரவாக் ரிப்போர்ட்டின் கண்டுபிடிப்புகளைச் சரம் சரமாய்த் தூக்கிப் போட்டார். தி எட்ஜ் நாளிதழின் சான்றுகளை வரிவரியாய் வரிந்து காட்டினார். அவற்றை எல்லாம் கிண்டல் கேலி வீடியோக்களாகத் தயாரித்து வசைப் புகழ்ச்சி பாடினார். (satirical videos).

அருள் கந்தாவின் மீது எப்போது வேண்டும் என்றாலும் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கப் படலாம். 


நம்பினார் கெடுவது இல்லை; அது நான்மறைத் தீர்ப்பு என்று சொல்வார்கள். நஜீப் அருள் கந்தாவை நம்பினார். அருள் கந்தா நஜீப்பை நம்பினார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நம்பினார்கள். ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரியாகத் தீர்ப்பு எழுதிச் செல்கின்றது.

(தொடரும்)
மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 9
மலேசியா 1MBD மோசடி - 10

சான்றுகள்

1. Brown, Clare Rescastle (2018). The Sarawak Report: The Inside Story of the 1MDB Exposé. Gerak Budaya. ISBN 9789670311166.

2. Wright, Tom; Hope, Bradley (2018). Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World. Hachette UK. ISBN 9780316436489.

3. Global Witness, "The Real Wolves of Wall Street - The banks, lawyers and auditors at the heart of Malaysia’s biggest corruption scandal - https://www.globalwitness.org/documents/19316/The_Real_Wolves_of_Wall_Street_Global_Witness_897.80KB.pdf

4. "Malaysian Prime Minister transferred US$650 million back to Singapore Bank". StatesTimesReview, Singapore. 15 August 2015  - http://statestimesreview.com/2015/08/15/malaysian-prime-minister-transferred-us650-million-back-to-singapore-bank/

மலேசியா 1MBD மோசடி - 8

தமிழ்மலர் - 24.11.2018 - சனிக்கிழமை

பிச்சை எடுப்பதில் மூன்று வகை. அகிம்சா வழியில் வீடு வீடாய் யாசகம் கேட்பது ஒரு வகை. ஏழ்மைத் தாண்டவத்தில் கையேந்திக் கேட்பது ஒரு வகை. இருந்தும் இல்லாதது போல் கேட்பது இன்னொரு வகை. அந்த வகையில் நிகழ்காலப் பிச்சைக்காரன்; எதிர்காலப் பிச்சைக்காரன் என இருவகைப் பிச்சைக்காரர்கள் வருகிறார்கள். நிகழ்காலப் பிச்சைக்காரன் என்பவன் கஞ்சன். எதிர்காலப் பிச்சைக்காரன் என்பவன் ஊதாரி. 




அதே மாதிரி ஒரு பெண்ணின் ஊதாரித் தனத்தால் புகழ்பெற்ற ஓர் அரசியல் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. உலகமே பார்த்து எள்ளி நகையாடும் அளவிற்கு கெட்ட பெயரையும் வாங்கி விட்டது.

ஆசைகள் இருக்கலாம். அந்த ஆசைகள் பேராசைகளாக மாறலாம். ஆனால் பெரும் நட்டங்களைத் தரும் பேராசைகளாக மாறக் கூடாது. 1எம்.டி.பி. மோசடியைத் தான் சொல்ல வருகிறேன். 1எம்.டி.பி. என்பது பேராசைகளுக்குப் பலியான ஓர் அழகிய நிறுவனம்.

அந்த நிறுவனத்தில் இருந்து பணம் கிடைக்கிறதே என்று சொல்லி தாறுமாறாய்ச் செலவு செய்ததால் ரோஸ்மாவின் குடும்பம் இப்போது வேதனைக் குழம்பில் தத்தளிக்கிறது. நாளைக்கு என்ன நடக்குமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்கின்றது.




நஜீப் – ரோஸ்மா இருவரின் மீதும் இதுவரை 50 குற்றச்சாட்டுகள். இன்னும் வரலாம். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப் பட்டால் இருவரின் வாழ்க்கையும் நான்கு சுவர்களுக்குள் நலிந்து போகலாம். சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

இருவரும் பல ஆண்டுகள் சிறைத் தணடனையை அனுபவிக்க வேண்டிய நிலைமை வரலாம். வயோதிகம் வீட்டு வாசல் கதவைத் தட்டுவதற்குப் பதிலாகச் சிறைக் கதவைத் திறந்து விடுகிறது. அந்த வகையில் மலேசிய வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயம் சேர்க்கப் படலாம். தேவை தானா? 

இப்போதைக்கு 1எம்.டி.பி-யின் மொத்தக் கடன் தொகை 42 பில்லியன் ரிங்கிட். அதாவது RM42,000,000,000. இதற்கான வட்டி மட்டும் 3.9 பில்லியன் ரிங்கிட். அதாவது RM3,900,000,000 ரிங்கிட். இவ்வளவு வட்டித் தொகையையும் இப்போதைய அரசாங்கம் கட்டியாக வேண்டும். 




யார் யாரோ தேவை இல்லாமல் அநியாயமாக, ஊதாரித் தனமாகச் செலவு செய்ததற்கு மலேசிய மக்கள் உழைத்துக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வேதனையாக இருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்த வட்டித் தொகைகளைக் கட்டி வருகிறது. கண்டிப்பாகக் கட்டியாக வேண்டும். முடியாது என்று சொல்லவே முடியாது.

எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் சரி; பழைய அரசாங்கம் செய்ததற்கு புதிய அரசாங்கம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பழைய அரசாங்கம் வாங்கிய கடன்களைப் புதிய அரசாங்கம் கட்டியே ஆக வேண்டும்.




இந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் புதிய அரசாங்கம் 1.688 பில்லியன் ரிங்கிட் வட்டித் தொகை கட்டி இருக்கிறது. அதாவது 1,688,000,000 ரிங்கிட். இது வெறும் வட்டி தான். தெரியுங்களா. கடன் அப்படியே நிற்கிறது. வட்டி கட்டவே அங்கே இங்கே பிச்சை எடுக்க வேண்டி இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறார்களோ?

1எம்.டி.பி.-யின் எனர்ஜி லங்காட் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட கடனுக்கு அண்மையில் 208,800,000 ரிங்கிட் வட்டித் தொகை கட்டப்பட்டது.

அடுத்து சுக்குக் இஸ்லாமிக் உத்தரவாதக் கடன் பத்திரங்கள். அதற்கும் வருடா வருடம் வட்டி கட்ட வேண்டும். இந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி 217,510,000 ரிங்கிட் வட்டித் தொகை கட்டினார்கள். அடுத்து அதே சுக்குக் இஸ்லாமிக் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 143,750,000 ரிங்கிட் வட்டி கட்ட வேண்டி இருக்கிறது.




இந்த வட்டிக் கடன்களுக்கு அரசாங்கமும் மலேசிய மக்களும் தான் பொறுப்பு. அரசாங்கம் முதலில் கட்டுகிறது. அரசாங்கம் கட்டியதை மலேசிய மக்கள் வரிப் பணமாகப் பின்னர் கட்டுகிறார்கள். அவ்வளவு தான். கடைசியில் எல்லா கடன்களும்; அந்தக் கடன்களின் வட்டிகளும் மலேசிய மக்களின் தலையில் தான் போய் விழுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.

ஜோலோவின் பிளேபாய் ஆட்டத்திற்கும்; ரோசாப்பூ ரோசம்மாவின் ஜிங்கு ஜிக்கான் ஆட்டத்திற்கும்; புன்னகை ராசா நஜீப்பின் தேர்தல் பிரசாரத்திற்கும் செலவான கோடிக் கணக்கான பணத்தை நாம் தான் கட்டியாக வேண்டும். வேறு வழி இல்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டே படியுங்கள்.




1எம்.டி.பி. நிறுவனம் பயங்கரமாகக் கடனை வைத்துவிட்டுச் சென்று உள்ளது. இப்போதைய புதிய அரசாங்கம் தவணை தவறாமல் வட்டித் தொகையைக் கட்டிக் கொண்டு வருகிறது.

1எம்.டி.பி. என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம். அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகை கட்டத் தவறினால் அனைத்துலக அளவில் மலேசியாவின் பெயர் தான் கெட்டுப் போகும்.

ஏற்கனவே திருட்டுப் பேரார்வத்தில் உலகச் சாம்பியன் என்கிற பட்டத்தை நம் நாடு வாங்கி விட்டது. அந்தப் பட்டம் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்து விட்டது. கிளெப்டோகிரசி என்றால் திருடுவதில் பேரார்வம். 




அப்படி இருக்கும் போது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாமல் விட்டால்... சொல்லவே வேண்டாம். உலகமே ஏளனமாகப் பார்க்கத் தொடங்கி விடும். அப்புறம் உலக முதலீட்டாளர்கள் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். இரண்டு மூன்று தடவை யோசிப்பார்கள். சரி.

என்றைக்கு 1எம்.டி.பி. விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதோ அப்போது இருந்தே பற்பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்து உள்ளன.

2015 ஜூலை 29-ஆம் தேதி 1எம்.டி.பி. புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகக் கட்டடத்தில் 10-ஆவது மாடியில் தீப்பற்றிக் கொண்டது. 




அங்கே தான் முக்கியமான  பழைய ஆவணங்களை எல்லாம் சேமித்து வைத்து இருந்தார்கள். இருந்தாலும் முக்கியமான ஆவணங்கள் எரிந்து போகவில்லை என்று அப்போதைய போலீஸ் தலைவர் கூறினார்.

ஒன்றை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும். புக்கிட் அமான் 10-ஆவது மாடியில் தான் குற்றப் புலனாய்வுத் துறை இருக்கிறது. இந்தக் குற்றப் புலனாய்வுத் துறை தான் நஜிப்பின் வங்கிக் கணக்கு வழக்கை விசாரித்து வந்தது. நஜீப்பின் வங்கிக் கணக்கில் 260 கோடி ரிங்கிட் எப்படி வந்தது என்பதைப் பற்றி விசாரித்து வந்ததார்கள். சரிங்களா.

2013 ஜூலை 29-ஆம் தேதி அரபிய மலேசிய வங்கியின் தோற்றுநர் ஹுசேன் அமாட் நஜாடி (75) கோலாலம்பூர் லோரோங் சிலோனில் சுட்டுக் கொல்லப் பட்டார். அவருடைய மனைவி (49) படுகாயம் அடைந்தார். 

 


மலேசியாவில் ஒரு முக்கிய புள்ளியின் வங்கிக் கணக்கு இந்த அரபிய மலேசிய வங்கியில் தான் இயங்கி வந்தது. அரபிய மலேசிய வங்கியைத் தான் சுருக்கி ஆம் வங்கி என்கிறார்கள்.

Arab Malaysian Bank (AM Bank)

250,000 ரிங்கிட் தொகைக்கு மேல் ஒருவருடைய வங்கிக் கணக்கில் பணம் வைப்புத் தொகை செய்யப் பட்டால் மத்திய வங்கி பேங்க் நெகாராவுக்கு அறிவிக்க வேண்டும்.

Deposits are automatically protected for up to RM 250000 per person per bank. The RM 250000 limit includes both the principal amount and the interest.




2013 மார்ச் மாதம் 22-ஆம் தேதி மலேசிய மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் 2602 மில்லியன் ரிங்கிட் போடப் பட்டது. பணம் வைப்புத் தொகை செய்யப்பட்ட மறுநாள் ஹுசேன் அமாட் நஜாடி அதைப்பற்றி பேங்க் நெகாராவில் புகார் செய்து உள்ளார்.

2013 ஜூலை 25-ஆம் தேதி அதே அந்த மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் மேலும் 251 மில்லியன் ரிங்கிட் வைப்புத் தொகை செய்யப் பட்டது. அதையும் ஹுசேன் அமாட் நஜாடி பேங்க் நெகாராவுக்கு அறிவித்து இருக்கிறார்.




2013 மே மாதம் 5-ஆம் தேதி மலேசியாவின் 13-வது பொது தேர்தல். இந்தக் கட்டத்தில் அந்த மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் இருந்த பணம் பல கோடிகள் வெளியே எடுக்கப் பட்டன. இதையும் ஹுசேன் அமாட் நஜாடி பேங்க் நெகாராவுக்கு தெரியப் படுத்தினார். பேங்க் நெகாரா அமைதியாக இருந்தது.

இதனால் தம்முடைய வங்கிக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் என கருதிய ஹுசேன் அமாட் நஜாடி, 2013 ஜூலை மாதம் 28-ஆம் தேதி போலீஸிலும் புகார் செய்தார்.

புகார் செய்த மறுநாள் நஜாடி சுட்டுக் கொல்லப் பட்டார். இதைப் பற்றியும் புதிதாக ஒரு விசாரணை தொடங்கி விட்டது. அடுத்து ஊழியர் சேமநிதிக் கட்டடத்தில் தீ விபத்து.





2018 பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 5:55-க்கு பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்லில் உள்ள இ.பி.எப். ஊழியர் சேமநிதிக் கட்டடம் எரிந்து போனது. இதுவும் ஓர் அசம்பாவிதம்.

இங்கே இருந்து தான் 1064 கோடி ரிங்கிட் பணம் 1எம்.டி.பி. நிறுவனத்திற்குக் கொடுக்கப் பட்டதாகச் சரவாக் ரிப்போர்ட் சொல்கிறது. (3)

Following an investigation spanning several months, Sarawak Report has sighted numerous documents which reveal that since 2012 a group of operatives, assisted by two convicted foreign fraudsters, have collaborated to extract billions of dollars from EPF, KWAP, FELDA, FELCRA and other public savings funds and government linked companies.

2015 அக்டோபர் 9-ஆம் தேதி திரங்கானு, மாராங், அலோர் லிம்பாட் சட்டமன்ற உறுப்பினர் அலியாஸ் அப்துல்லா (51) அவருடைய வீட்டில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்தக் கொலையின் வழக்கு தொடங்கப்பட்டு விட்டது.




அலியாஸ் அப்துல்லா முன்னாள் திரங்கானு முதலீட்டு வாரியத்தின் (Terengganu Investment Authority) கணக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்டவர். இந்தத் திரங்கானு முதலீட்டு வாரியம் தான் பின்னர் 1எம்.டி.பி. என மாற்றம் கண்டது.

2015 ஜூலை 14-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் இம்பி லோயாட் பிளாசாவில் தேவையற்ற ஒரு கலவரம். ஒரு சாதாரண திருட்டுச் சம்பவம் ஒரு கலவரத்திற்கு இட்டுச் சென்றது. நல்லவேளை. முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்கள்.

1எம்.டி.பி. புலன் விசாரணையைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு சண்டையை யாராவது தூண்டிவிட்டு இருக்கலாம் எனும் கோணத்திலும் ஆராய்ந்து வருகிறார்கள். அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து பார்க்கிறார்கள். 




2013-ஆம் ஆண்டில் இருந்து இப்படி நிறைய நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஏன் நடந்தன என்பதை எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் பின்னணிகளை மக்களிடம் இருந்து மறைக்கவும் முடியாது. ஒருநாளைக்கு உண்மை வெளியே தெரிய வரும்.

இந்தக் கட்டத்தில் அருள் கந்தாவைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. 2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாக அருள் கந்தா நியமிக்கப்பட்டார்.

அவர் 1எம்.டி.பி.க்குள் வருவதற்கு முன்பே 1எம்.டி.பி.யில் பற்பல முறைகேடுகள். எப்படி சமாளிப்பது என்று தடுமாறிக் கொண்டு இருக்கும் போது தான் அருள் கந்தாவை உள்ளே கொண்டு வந்தார்கள். 1எம்.டி.பி.யின் தப்புகளையும் தவறுகளையும் சரி செய்வதற்காகத் தான் அருள் கந்தா கொண்டு வரப்பட்டார். அங்கே தான் அருள் கந்தா நிற்கிறார்.

அருள் கந்தா 1எம்.டி.பி.யில் சம்பளம் வாங்கும் ஓர் அதிகாரி. ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் சம்பளம் என்று முதலில் பேசப்பட்டது.

1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்ற அருள் கந்தாவினால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. அங்கேதான் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். மோசமாக இருந்த நிலைமையை இவர் மேலும் மோசமாக்கியது தான் மிச்சம்.

1எம்.டி.பி. வாங்கிய கடன்கள் கோடிக் கோடிகள். அவற்றின் வட்டியைக் கட்டுவதற்கு மேலும் மேலும் கடன்களை வாங்கினார். சொல்லப் போனால் வட்டிகளே குட்டிகள் போட்டு விட்டன. சமாளிக்க முடியாத நிலைமை.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். அந்தக கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். இப்படி கடன் மேல் கடன்களை வாங்கி 1எம்.டி.பி.யைக் கடன்காரக் கடலில் மூழ்கடுத்தி விட்டார்.  அவரால் இயன்றதைத் தான் செய்தார். கடன்களில் இருந்து கடன்களைக் கழிக்க கடன்கள் வாங்கினார். அதுதான் உண்மை.

ஆனால் இப்போது அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்காமல்; போனஸ் எனும் ஊக்கத் தொகையும் கிடைக்காமல்; வெளிநாட்டிற்கு போகவும் முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே அடங்கிக் கிடக்கிறார். இவருக்கும் இப்போதைக்கு கஷ்ட காலம்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4
மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 9
 

சான்றுகள்

1. Govt to fulfil 1MDB commitments, just paid RM208mil in interest - https://www.thestar.com.my/news/nation/2018/10/18/govt-to-fulfill-1mdb-commitments-just-paid-rm208mil-in-interest/

2. Arab Malaysian Banking Group founder Hussain Ahmad Najadi shot dead in parking lot, wife survives - https://www.thestar.com.my/news/nation/2013/07/29/shooting-ambank-founder-hussain/

3. Extensive evidence has emerged of an extraordinary operation to loot Malaysia’s public savings funds and pass billions of dollars into accounts controlled by individuals - http://www.sarawakreport.org/2018/02/ten-billion-in-bonds-looted-from-epf-to-raise-four-billion-dollars-for-najib-explosive-exclusive-2/

24 நவம்பர் 2018

மாறன் மகாவம்சன்

கெடா வரலாற்று ஆய்வு

காலம் காலமாகக் கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. சரி.
 
Alexander The Great

ஆனால் அந்த மாறன் மகாவம்சன் என்பவர் மாசிடோனியாவில் இருந்து வந்தவர் என்று உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அடம் பிடிக்கிறார்கள். அது சரியன்று. தப்பு.

மாறன் மகாவம்சன் என்பவர் மகா அலெக்ஸாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவரா? இது எப்படி என்று பார்ப்போம்.

(சான்று: LAMB, A. 1960 Report on the Excavation and Reconstruction of Chandi Bukit Batu Pahat, Central Kedah, Federation Museums Journal N.S.5.)

உண்மையில் மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். மாசிடோனியா எனும் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. எப்படி என்று கதையைக் கேளுங்கள்.

கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.
 

மகா அலெக்ஸாண்டர் (Alexander the Great) கி.மு. 326-இல் இந்தியாவின் மீது படை எடுத்தார். பலருக்கும் தெரிந்த விசயம். அதற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரசீகத்தின் மீது ஒரு படையெடுத்தார்.

பாரசீகம் என்றால் ஈரான் நாட்டைக் குறிக்கும். ஆரியன் (Land of the Aryans) எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் என்று அந்த நாட்டிற்குப் பெயரும் வந்தது. முன்பு காலத்தில் ஈரானைப் பாரசீகம் என்று அழைத்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆரியன் எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் எனும் சொல்லே உருவானது.

ஈரான் நாட்டின் தென் பகுதியில் பெர்சிஸ் (Persis) எனும் சமவெளி உள்ளது. ஈரான் மீது படை எடுத்து வந்த கிரேக்கர்கள் ஈரானைப் பெர்சிஸ் என்று அழைத்தார்கள். காலப் போக்கில் ஈரான் நாடு பெர்சியா (Persia) ஆனது. தமிழர்கள் பார்சீகம் என்று அழைத்தார்கள். 1935-ஆம் ஆண்டு பெர்சியா என்பது ஈரான் ஆனது.

(சான்று: https://www.britannica.com/place/Persia - The term Persia was used for centuries and originated from a region of southern Iran formerly known as Persis.)

கி.மு. 330-களில் பாரசீகத்தின் மேற்குப் பகுதியை டாரியஸ் III (King Darius III) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். காவுகமேலா எனும் இடத்தில் (Battle of Gaugamela - 1st October 331 BCE) மகா அலெக்ஸாண்டர் படையுடன் ஒரு பயங்கரமான போர்.
 

இந்தப் போருக்கு அரபேலா போர் (Battle of Arbela) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் போரில் அரசர் டாரியஸ் தோற்றுப் போனார். மகா அலெக்ஸாண்டருக்கு வெற்றி.

இந்தப் போர் முடிந்ததும் மகா அலெக்ஸாண்டர், ஈரான் நாட்டின் கிழக்குப் பக்கமாய் வந்தார். அப்போது அந்தப் பகுதியை ராஜா கீதா (Raja Kida Hindi of Hindostan) எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசர் ஆட்சி செய்து வந்தார்.

இந்த ராஜா கீதாவிற்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தார். அவருடைய பெயர் இளவரசி ஷார் பெரியா (Shaher Ul Beriah). இந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் தான் பிரதான மதம். வேறு எந்த மதமும் தோன்றவில்லை.

ஆக ஷார் பெரியா எனும் இளவரசியை மகா அலெக்ஸாண்டர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தையார் ராஜா கீதாவிற்கு 300,000 தங்க தினார் நாணயங்களை மகா அலெக்ஸாண்டர் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் (King Porus) மன்னரை எதிர்த்துப் போரிட்டார். போரஸ் மன்னனின் துணிச்சலைக் கண்டு அவருக்கே அவருடைய நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அது ஒரு தனி வரலாறு.

(https://en.wikipedia.org/wiki/Battle_of_the_Hydaspes - The Battle of the Hydaspes was fought in 326 BC between Alexander the Great and King Porus of the Paurava kingdom on the banks of the river Jhelum)
 

இன்னும் ஒரு விசயம். அலெக்ஸாண்டர் - போரஸ் போர் நடக்கும் போது ஈரான் இளவரசி ஷார் பெரியாவும் அலெக்ஸாண்டருடன் இருந்து இருக்கிறார்.

போர் முடிந்து அலெக்ஸாண்டர் திரும்பிப் போகும் போது இளவரசி ஷார் பெரியாவைப் பாரசீகத்திலேயே விட்டுச் சென்று இருக்கிறார். பின்னர் அவர் ரோமாபுரிக்கு போகிற வழியில் மர்மமாய் இறந்து போனார். அதுவும் தனி ஒரு கதை.

இந்த மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியா திருமணத்தின் 11-ஆவது தலைமுறை நாயகர் தான் மாறன் மகாவம்சன். புரியுதுங்களா.

மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியாவிற்கும் பிறந்த குழந்தைகளின் வழிவழி வந்தவர்களில் 11-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் தான் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan).

ஆக மாறன் மகாவம்சன் என்பவர் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. மாசிடோனியாவில் இருந்தும் வரவில்லை. அவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்.

பாரசீகத்தின் அப்போதைய பிரதான மதம் மஸ்தியாசனம் அல்லது மத்தியாசனா (Mazdayasna) எனும் மதமாகும்.

(சான்று: Boyd, James W.; et al. (1979), "Is Zoroastrianism Dualistic or Monotheistic?", Journal of the American Academy of Religion, Vol. XLVII, No. 4, pp. 557–588)

மத்தியாசனா மதம் என்பது சோரோஸ்டிரியம் (Zoroastrianism) எனும் வழிப்பாட்டில் இருந்து தோன்றியது. இந்த மத்தியாசனா மதமும் இந்து மதமும் சம காலத்தில் இருந்த மதங்கள்.
 
King Porous

இந்து மதம் சிந்து வெளியில் துரிதமாகப் பரவி வரும் காலத்தில் மத்தியாசனா மதம் பாரசீகத்தில் படர்ந்து பரவி நின்றது.

கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி வருகிறேன்.

மத்தியாசனா மதம் இந்து மதத்திற்குப் பின்னர் தோன்றி இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. சோரோஸ்டிரியம் என்பது ஒரு கிரேக்கச் சொல்.

நாம் இங்கே மதங்களைப் பற்றி விவாதிக்கவில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை. மாறன் மகாவம்சன் என்பவர் எங்கே இருந்து வந்தார். எப்படி கெடாவிற்கு வந்தார் என்பதைப் பற்றித் தான் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். சரிங்களா.

(சான்று: https://prezi.com/h5nqop0pj6h5/hinduism-and-zoroastrianism/)

(சான்று: Gerardo Eastburn. The Esoteric Codex: Zoroastrianism. Books.google.com. p. 1)

இன்னும் ஒரு விசயம். ஒரு தாழ்மையான தனிப்பட்ட பதிவு.. இந்தக் கட்டுரை மிகச் சரியான வரலாற்றுச் சான்றுகளுடன் முன் வைக்கப் படுகிறது. இருந்தாலும் விமர்சன விவாதங்கள் வரலாம். அப்படி ஒரு சூழ்நிலையில் எந்தக் கல்வி மேடையிலும் இந்தக் கட்டுரையின் சான்றுகளை உறுதிபடுத்தத் தயாராக இருக்கின்றோம்.

மாறன் மகாவம்சன். இந்தப் பெயரைச் சற்று உற்றுக் கவனியுங்கள். மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர் தான். இல்லை என்று சொல்லவில்லை.

இருந்தாலும் அந்தப் பெயர் ஓர் இந்து மதப் பெயராகத் தெரியவில்லையா. மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும் சொல்லாகும்.

மாரன் என்பது ஒரு வடச் சொல். மாறன் என்பது தமிழ்ச் சொல்.

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற

எனும் சொற்கள் புறநானூற்றில் சொல்லப் படுகின்றன.

(சான்று: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=55&file=l1280d10.htm).

புறநானூறு எனும் காப்பியம் இடைச் சங்கக் காலத்தில் தோன்றியது. இந்தக் காலப் பகுதி கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்தது.

மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் சங்கம் அமைத்தனர். தமிழ் வளர்த்தனர். அதனால் சங்க காலம் என  பெயர் சூட்டப்பட்டது. சரி.

இந்தச் சங்கக் காலத்தில் மாறன் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தது. தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் தாக்கத்தினால் அப்போது பிறந்த குழந்தைகளுக்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்த வகையில் தான் மாறன் மகாவம்சனுக்குப் பெயர் வந்தது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.

(சான்று: R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35.)

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது.

முன்பு காலத்தில் பாய்மரக் கப்பல்களில் கடல் கடந்து போய் வணிகம் செய்து வந்தார்கள். அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து இருக்கிறார்.

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல.

பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் அதே மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

பள்ளிப்பாட நூல்களிலும் சரி; உயர்க் கல்விக் கூடங்களிலும் சரி; அறிவியல் அகழாய்வுச் சாலைகளிலும் சரி; உண்மையான வரலாற்றை நேர்மையான முறையில் பதிவு செய்ய வேண்டும். அதுவே தார்மீகப் பொறுப்புகளின் தாரக மந்திரங்கள்.

ஏழு ஸ்வரங்களில் சிந்து பைரவி இனிக்கும்.

சாருகேசி இசைக்கும்.

கௌரி மனோகரி மணக்கும்.

நவநீதம் நளினத்தில் தனித்துப் போகும்.

ராகங்கள் மாறுவது இல்லை.

அதே போல வரலாறும் மாறுவது இல்லை.

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 1

தமிழ்மலர் - 16.11.2018 - வெள்ளிக்கிழமை

1எம்.டி.பி. என்பது மலேசியாவின் ஒரு மேம்பாட்டு நிறுவனம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. உலக நாடுகளுடன் பரஸ்பர கூட்டு வணிகம் மேற்கொள்வது; வெளிநாட்டு முதலீடுகளை மலேசியாவிற்குள் கொண்டு வருவது; மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; மலேசிய மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவது; இவைதான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலையாய நோக்கங்கள். 




2008-ஆம் ஆண்டில் திரங்கானு மாநிலத்தில் ஒரு முதலீட்டுக் கழகம் இருந்தது. அதன் பெயர் திரங்கானு இன்வெஸ்ட்மெண்ட் அத்தோரிட்டி (Terengganu Investment Authority). சுருக்கமாக டி.ஐ.ஏ. என்பார்கள். அந்த முதலீட்டுக் கழகத்தின் புதிய வடிவமே இந்த 1எம்.டி.பி. நிறுவனம் ஆகும்.

வெளிநாடுகளில் முதலீடுகள் செய்து பணம் சம்பாதிக்கும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் நோக்கம் நிறைவேறியாதா இல்லையா; மலேசிய மக்களின் எதிர்கால நலன்களுக்காக உருவாக்கப்பட்ட 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஏற்பட்ட பண மோசடிகளின் தாக்கங்கள் என்ன என்ன என்பதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் பார்வை ஆகும்.

1எம்.டி.பி. நிறுவனம் மலேசிய நிதியமைச்சிற்குச் சொந்தமானது. மலேசிய நிதியமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. (Minister of Finance (Incorporated). இந்த நிறுவனத்தின் பண முதலீடுகள்; வருமானம்; இலாப நட்டம் அனைத்திற்கும் மலேசிய நிதியமைச்சு தான் பொறுப்பு. 




கூட்டிக் கழித்துப் பார்த்தால் 1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய நிதியமைச்சே பொறுப்பு. அந்த மலேசிய நிதியமைச்சிற்கு மலேசிய அரசாங்கமே பொறுப்பு. அந்த மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய மக்களே பொறுப்பு.

அதாவது அந்த நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. இப்போது அந்த நிறுவனம் 4200 கோடி ரிங்கிட் நட்டத்தில் தத்தளித்துக் கொண்டு நிற்கிறது. அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி வாங்கப் பட்ட கடன்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு.

இன்னும் தெளிவாகச் சொல்லலாம். மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று இறந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். என்ன இருந்தாலும் அது பழைய அரசாங்கம் வாங்கிய கடன். அந்தக் கடனை இப்போதைய அரசாங்கம் கட்டித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா விட மாட்டார்கள். அனைத்துலக நீதிமன்றம் வரை இழுத்துச் சென்று விடுவார்கள்.




மலேசியர்களை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் அல்லவா. ஆக அந்தக் கடனை இப்போதைய புதிய அரசாங்கம் கட்ட வேண்டிய நிலையில் உள்ளது.

முன்னாள் பிரதமர் நஜீப், மலேசியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனால் நிதியமைச்சு அவரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது.

அந்த வகையில் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமை ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முன்னாள் பிரதமர் நஜீப் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் தான் 1எம்.டி.பி. நிறுவனம் இயங்கி வந்தது. அதாவது அவரின் கண் அசைவில் தான் அந்த நிறுவனமே இயங்கியது.

1எம்.டி.பி. நிறுவனத்தின்  பொதுவான நோக்கம் இதுதான். எரிபொருள்; நில உடைமைகள்; சுற்றுலாத் துறை; விவசாய வணிகம் போன்ற அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்துவது. அந்த வகையில் சில முக்கியமான திட்டங்களில் ஈடுபட்டு வந்தது. அதில் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ஜ் எனும் துன் ரசாக் மாற்றுத் திட்டம் மிக முக்கியமானது. 




Tun Razak Exchange - Tun Razak Exchange, TRX

அந்தத் திட்டத்தின் பழைய பெயர்

Kuala Lumpur International Financial District.

கோலாம்பூர் மாநகரின் நடு மையத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் வகுக்கப் பட்டது. புக்கிட் பிந்தாங், புடு, கொக்ரெயின், கம்போங் பாண்டான், அம்பாங் ஹிலீர் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மேம்பாட்டுத் திட்டம்.

இந்தத் துன் ரசாக் மாற்றுத் திட்டத்தின் கீழ் வருவது பண்டார் மலேசியா எனும் மற்றொரு கிளைத் திட்டம். ஒரு துணைத் திட்டம். 486 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. சுங்கை பீசி விமான நிலையத்தில் மையம் கொண்டது.

பண்டார் மலேசியா திட்டம் 15 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட திட்டம் போடப் பட்டது. புதிய பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் இந்தத் திட்டம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.




2015-ஆம் ஆண்டு தொடக்கம் 1எம்.டி.பி. நிறுவனத்திற்குப் பிரச்சினைகள். சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனைகள்; சந்தேகத்திற்கு உரிய பணமோசடி நடவடிக்கைகள்; பணச் சலவைகள்; ஊழல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் செய்திகள் கசியத் தொடங்கின.

லண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதன் முதலில் பூனைக்கு மணி கட்டியது. அதைத் தொடர்ந்து தி எட்ஜ் எனும் செய்தி இதழும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் இரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டது. அதனால் 1எம்.டி.பி.  நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் நீதித் துறை அமைச்சு வழக்கு தொடர்ந்து உள்ளது. மலேசியாவிலும் அடுக்கடுக்காய் வழக்குகள். ஒவ்வொரு நாளும் புதிது புதியாய் வழக்குகள். நஜீப்பில் இருந்து ரோஸ்மா வரை அன்றாடம் குற்றப் பத்திரிகைகள். 




இதைத் தவிர உலகில் மேலும் ஆறு நாடுகளில் 1எம்.டி.பி. நிறுவன வழக்குகள் தயார் நிலையில் உள்ளன. 1எம்.டி.பி. நிறுவனத்தில் நடந்து உள்ள மோசடிகள் என்ன என்று பார்ப்போம்.

2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான 267 கோடி ரிங்கிட் பணம் முன்னாள் பிரதமர் நஜீப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது என்பது தான் மிகப் பெரிய குற்றச் சாட்டு. ஒரு நாட்டின் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கோடியாகப் பணம் போடப் பட்டது தான் விஸ்வரூபமாகத் தலை எடுத்துக் களை கட்டியது. 

பணத்தைப் பார்த்தீர்களா. ஒரு கோடி இரண்டு கோடி இல்லைங்க. அம்மாடியோவ் என்று சொல்லும் அளவிற்கு 267 கோடிகள். முன்னாள் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் மட்டும் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது. அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்). இரண்டே இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் அவ்வளவு பணம்.

ஆனாலும் அந்தப் பணத்தை சவூதி அரேபியா அரசக் குடும்பம் அன்பளிப்பாகக் கொடுத்தது என்று சொல்லி நஜீப் மறுத்து வருகிறார். 




ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6355 ரிங்கிட் என்று செலவு செய்தால் 267 கோடி ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2739 ஆண்டுகள் பிடிக்கும். அது மட்டும் அல்ல.

267 கோடி ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 இராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்). அப்படி என்றால் எவ்வளவு பணம் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

1எம்.டி.பி. நிறுவனத்தைப் பற்றிய மோசடி இரகசியங்கள் வெளியே கசிய ஆரம்பித்ததும் மலேசிய மக்கள் முகம் சுழித்தார்கள். உலக மக்கள் திகைத்து நின்றார்கள். மோசடிகளில் சம்பந்தப் பட்டவர்கள் கழுத்திற்குக் கத்தி எப்போது வரும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அல்லாடுகிறார்கள்.

அவர்களில் சிலர் கருவாடு என்றால் என்ன; அது எப்படி இருக்கும்; ஒரு கிலோ என்ன விலை என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அதில் ஒரு தலைவர் வேறு ஓர் உலகில் வாழ்ந்து கொண்டு அது சொட்டை இது நொட்டை என்று டிவிட்டர் பண்ணிக் கொண்டு  இருக்கிறார். 




மோசடி இரகசியங்கள் உச்சம் பார்த்த போது நஜீப் பதவி விலக வேண்டும் என்று பலர் அறைகூவல் விடுத்தார்கள். அவர்களில் ஒருவர் இப்போதைய பிரதமர் துன் மகாதீர். இருந்தாலும் நஜீப் விடாப்பிடியாக நின்றார். தான் தவறு செய்யவில்லை என்று நியாயம் சொல்லி வந்தார். அது மட்டும் அல்ல. பூனை பால் குடிக்காது; கருவாடு தின்னாது என்று சொல்லிச் சொல்லியே காலத்தையும் நகர்த்தி வந்தார்.

நஜீப்பிடம் அரசியல் பலம் இருந்தது. அதிகாரப் பலம் இருந்தது. அரசாங்க இயந்திரப் பலம் இருந்தது. உயர்மட்ட நண்பர்கள் பலம் இருந்தது. அதையும் தாண்டிய நிலையில் பண பலம் இருந்தது. அசைக்க முடியவில்லை. தலைவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து போக வேண்டிய ஒரு கட்டாய நிலை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பலரும் குழம்பிப் போய் நின்றார்கள்.

2018 மே மாதம் 9-ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தல் வந்தது. மலேசிய மக்கள் அணி திரண்டார்கள். அரசாங்கத்தையே மாற்றிப் போட்டார்கள். அந்த வகையில் ஆடாத ஆட்டம் ஆடிய ஆண் ஜாதி பெண் ஜாதி பூனைகளுக்கு நன்றாகவே மணிகளைக் கட்டியும் விட்டார்கள். பாவம் அந்தப் பூனைகள். இப்போது நீதிமன்றத்திற்கும் வீட்டு வாசலுக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கின்றன. நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.




நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த கையோடு அரசியல் ஜீவி அன்வார் இப்ராகிம் அவர்களும் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார். 1எம்.டி.பி. நிறுவனத்தின் நம்பிக்கைத் தன்மையை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். அந்த நிறுவனத்திற்கு என்று ஒரு வணிக முகவரி இல்லை; உருப்படியான ஒரு கணக்காய்வாளர் இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே விலாவாரியாக விலாசித் தள்ளினார்.

மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றது. மகாதீர் பிரதமரானார். 1எம்.டி.பி. நிறுவனத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு போக கதவுகளையும் திறந்து விட்டார். 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு இப்போது 4200 கோடி ரிங்கிட் கடன்.

1எம்.டி.பி.  மோசடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் வெளிநாட்டு வங்கிகளில் முதலிடம் வகிப்பது கோல்ட்மேன் சாஸ் (Goldman Sachs) எனும் வங்கியாகும்.

கோல்ட்மேன் சாஸ் வங்கி என்பது ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கி. உத்தரவாதக் கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டிக் கொடுப்பது தான் அந்த தலையாயப் பணியாகும். இந்த வங்கி மலேசிய மக்களை ஏமாற்றி இருக்கிறது என்று பிரதமர் மகாதீர் சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். படித்து இருப்பீர்கள்.

கோல்ட்மேன் சாஸ் வங்கியின் தலைமையகம் அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ளது. உலகம் முழுமைக்கும் 82 கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்தக் கிளை நிறுவனங்களில் 37 ஆயிரத்து 300 பேர் வேலை செய்கிறார்கள்.

இந்தக் கோல்ட்மேன் சாஸ் வங்கி 2015-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பேரில் 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு 2706 கோடி ரிங்கிட் பணத்தைக் கடனாகத் திரட்டிக் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அந்த கோல்ட்மேன் சாஸ் வங்கிக்கு சேவைக் கட்டணமாக 201 கோடி ரிங்கிட் (கமிசன்) கிடைத்து இருக்கிறது.

எவ்வளவு கமிசன் என்று பாருங்கள். தலை சுற்றுகிறது. 201 கோடி ரிங்கிட். அந்தக் கமிசன் பணத்தைக் கொண்டு 4000 மலேசிய மாணவர்களுக்கு முழு நிதியுதவி செய்து அவர்களை மருத்துவர்களாக ஆக்கி இருக்கலாம். அது வெறும் கமிசன் மட்டும் தாங்க. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் இன்னும் எவ்வளவோ கதை இருக்கிறது. அதைப் பற்றி நாளை பார்ப்போம். (தொடரும்)



மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7மலேசியா 1MBD மோசடி - 8

சான்றுகள்


1. 1MDB: The inside story of the world’s biggest financial scandal - https://www.theguardian.com/world/2016/jul/28/1mdb-inside-story-worlds-biggest-financial-scandal-malaysia

2. 1MDB controversy started from day one - https://www.thestar.com.my/news/nation/2018/05/17/controversial-start/

3. Global Witness, "The Real Wolves of Wall Street - The banks, lawyers and auditors at the heart of Malaysia’s biggest corruption scandal (PDF)"

4. Brown, Clare Rescastle (2018). The Sarawak Report: The Inside Story of the 1MDB Exposé. Gerak Budaya. p. 496. ISBN 9789670311166.

5. Wright, Tom; Hope, Bradley (2018). Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World. Hachette UK. p. 400. ISBN 9780316436489.

6. Ex-Goldman bankers face 1MDB charges. BBC News. - https://www.bbc.com/news/business-46062576

7. Value of cash and goods seized from Najib-linked residences amounted to about RM1bil - https://www.thestar.com.my/news/nation/2018/06/27/amar-singh-pc-1mdb/

மலேசியா 1MBD மோசடி - 2 (வண்ணத்துப்பூச்சி விளைவு)

தமிழ்மலர் - 17.11.2018 - சனிக்கிழமை

வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி பலர் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆங்கிலத்தில் பட்டர்பிளை இபெக்ட் (Butterfly effect) என்று சொல்வார்கள். பிரேசில் நாட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது. அதன் சிறகுகள் படபடக்கின்றன. அதனால் அங்கே ஒரு சலசலப்பு. 




அந்தச் சலசலப்பினால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் இருக்கும் சின்ன ஒரு கிராமத்தில் சின்ன ஒரு புயல்காற்று உண்டாகிறது. நம்புவீர்களா. நம்ப முடியவில்லை தானே. ஆனால் அந்த வண்ணத்துப் பூச்சிக்கும் அந்தப் புயல்காற்றுக்கும் தொடர்பு உண்டு என்று நிரூபித்துக் காட்டலாம் என்கிறார்கள்.

ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் (chaos theory) தந்தை என்று அழைக்கப் படுபவர் எட்வர்ட் லோரன்ஸ். இவர் 1963-ஆம் ஆண்டு கணித முறைப்படி வண்ணத்துப் பூச்சி விளைவு என்பது சரியாக அமையும் என்று உறுதி படுத்தினார். கணிதச் சமன்பாடுகளையும் வானிலைக் கோட்பாடுகளையும் இழுத்து இணைத்துப் போட்டு உலக அறிவியலாளர்களை ஒரு வழி பண்ணி விட்டார்.

அதனாலேயே அந்தத் தத்துவத்திற்கு வண்ணத்துப்பூச்சி விளைவு என்று பெயர் வந்தது. ஒரு சின்ன தொடக்க நிலை விளைவு; நீண்ட கால பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொன்னார். அதையே சங்கிலித் தொடர் விளைவுகள் என்றும் இப்போது சொல்லத் தொடங்கி விட்டார்கள்.




அதே போல தான் டோமினோ விளைவு (Domino effect). பல சிறிய டோமினோ கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வையுங்கள். அவற்றில் முதலாவதாக நிற்கும் கட்டையைத் தட்டி விடுங்கள். அதன் பின்னர் பாருங்கள். அடுத்தடுத்து இருக்கும் எல்லாக் கட்டைகளும் அப்படியே அடுக்கு அடுக்காய் விழும். அதுதான் டோமினோ விளைவு.

அதாவது பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால் அதற்கு மூலகாரணமாக முதலில் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடந்து இருக்கும். அந்த முதல் நிகழ்ச்சியின் தாக்கத்தினால் தான் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். நடைபெறலாம்.



ஆனால் பலர் அதை மறந்து விடுகிறார்கள். கடைசியாக நடந்த நிகழ்ச்சியை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறார்கள். அதுதான் வண்ணத்துப்பூச்சி விளைவு. இந்த உலகில் சிலரால் அறியப் பட்ட விதி அல்லது விளைவு. பலரால் அறிய முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விளைவு.

ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் என்பது அதன் தொடக்க காலத்தின் சின்ன ஒரு நிகழ்ச்சியைச் சார்ந்து உள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவின் சுருக்கம்.

வண்ணத்துப்பூச்சி விளைவு போன்றது தான் டோமினோ விளைவு. அதே அந்த விளைவு தான் 1எம்.டி.பி. நிறுவனத்தில் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் நடந்து உள்ளது. அந்த நிறுவனத்தின் மோசடிகளில் முதலில் வந்து நிற்பது கோல்ட்மேன் சாஸ் எனும் முதலீட்டு வங்கியின் விளைவு.

கோல்ட்மேன் சாஸ் வங்கி 2015-ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பேரில் 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு 2706 கோடி ரிங்கிட் பணத்தைக் கடனாகத் திரட்டிக் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அந்த கோல்ட்மேன் சாஸ் வங்கிக்கு சேவைக் கட்டணமாக 201 கோடி ரிங்கிட் தரகுப் பணம் (கமிசன்) கிடைத்து இருக்கிறது. 




1எம்.டி.பி. நிறுவனத்திற்கு கிடைத்த பெரும்பாலான பணத் தொகை ஜோலோ என்பவரின் (Low Taek Jho) வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு ஜோலோ ஆடாத ஆட்டம் ஆடினார். பிளேபாய் கணக்கில் கோடிக் கணக்கில் வாரி வாரி இறைத்து இருக்கிறார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமாக இருந்து இருந்தால் அப்படி செய்து இருப்பாரா. அத்தனையும் மலேசிய மக்களின் பணம். சும்மா வந்த காசு தானே. அதான் அந்த மாதிரி ஆட்டம் போட்டு இருக்கிறார். சரி.

2015 ஆகஸ்டு 3-ஆம் தேதி நஜீப்பின் வங்கிக் கணக்கில் 260 கோடி ரிங்கிட் போடப் பட்டதாக கண்டுபிடிக்கப் பட்டது. நஜீப் மறுத்து வருகிறார்.

1எம்.டி.பி. நிறுவனக் கடனுக்கு ஏற்பாடுகள் செய்த கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரிகள் அமெரிக்க அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்தனர். சட்ட விரோதமாகப் பணச்சலவை செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியது.




இதில் திம் லெய்சனர் எனும் கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு கிடைத்த 18 கோடி கமிசன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார். இப்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

ரோஜர் நிங் எனும் மற்றோர் கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரியை மலேசியப் போலீசார் கைது செய்து விட்டனர். இவர் அமெரிக்காவிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு கடத்தப் படுகிறார்.

டோமினோ விளைவு பற்றி சொல்லி இருந்தேன். அந்த டோமினோ விளைவினால் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் தான் முன்னாள் பிரதமர் நஜீப். 1எம்.டி.பி. குளறுபடிகளில் சரிந்து விழுந்த டோமினோ கட்டைகளில் ஒருவராகத் தான் அவரைப் பார்க்க முடிகின்றது.

மலேசியப் பிரதமர்களில் இந்தியர்களுக்கு நிறையவே நிதியுதவிகள் செய்த பிரதமர். உண்மை. தமிழ்ப் பள்ளிகளுக்கு நிறையவே உதவிகள் செய்தவர். அந்த உதவிகளை மலேசிய இந்தியர்கள் மறக்க மாட்டார்கள். 




அவர் வழங்கிய பணத்தில் பாதி பணத்தைப் பாதி வழியிலேயே பிடுங்கித் தின்னவர்கள் தான் ஏராளம். மீதிப் பணத்தில் மிச்சமாவது கிடைத்ததே. மகிழ்ச்சி அடைவோம். அவர் செய்த உதவிகளை மறக்க மாட்டோம். இருந்தாலும் அவருடைய இன்றைய நிலையில் அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. சரி.

அந்த டோமினோ கட்டைகளில் முதல் டோமினோ கட்டை யார் தெரியுங்களா. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர் தான் ஜோலோ. உலகிலேயே இப்போதைக்கு மகா மகா பெரிய கில்லாடி. அனைத்துலகப் போலீசாருக்கே டிமிக்கி கொடுத்து, கண்ணாமூச்சி காட்டும் அனைத்துலக மன்மதக் குஞ்சு.

ஜோலோ தான் திரங்கானு மேம்பாட்டுக் கழகத்தை 1எம்.டி.பி. நிறுவனமாக மாற்றுவதற்குப் பாதை போட்டுக் காட்டியவர். நஜீப்புடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு காய்களை நகர்த்தியவர். 




இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது இவருக்கும் ரிஷா அசீஸுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ரிஷா அஜீஸ் வேறு யாரும் அல்ல. ரோஸ்மாவின் முதல் கணவர் அப்துல் அஜீஸ் நோங் சிக் என்பவருக்குப் பிறந்த மூத்த மகன். நஜீப்பிற்கு மாற்றாள் மகன்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட நட்பு அப்படியே ரோஸ்மா வரை வந்து அப்படியே நஜீப் வரை போய்ச் சேர்ந்தது. நஜீப் குடும்பத்தாருடன் நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

ஜோலோவின் இயற்பெயர் லோ தேக் ஜோ. (Low Taek Jho). 1981 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி பினாங்கு ஜார்ஜ் டவுனில் பிறந்தவர். சற்றே வசதி படைத்த குடும்பம். கூடப் பிறந்தவர்கள் இருவர். குடும்பத்தில் கடைக்குட்டி.

பினாங்கு சுங் லிங் சீனப் பள்ளியில் படித்துவிட்டு லண்டனில் உள்ள ஹாரோவ் பள்ளியில் மேல்படிப்பு. அங்கே தான் ரிஷா அஜீஸைச் சந்தித்தார். நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். முன்னாள் பிரதமர் நஜீப் அவர்களின் மாற்றாள் மகன் தான் ரிஷா அஜீஸ். 




பின்னர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா வார்ட்டன் கல்லூரியில் படிக்கும் போது குவைத், ஜோர்டான், மலேசிய மாணவர்களுடன் தொடர்புகள். அப்படியே அவர்களின் குடும்பத்தாருடன் நெருக்கங்கள்.

ஜோலோ தன்னுடைய 25-ஆவது வயதிலேயே பணம் சம்பாதிப்பதில் கால் பதித்து விட்டார். 2006-ஆம் ஆண்டு குவாயித் நிதி நிறுவனத்திற்கு கோலாலம்பூரில் 340 மில்லியன் ரிங்கிட் மதிப்பு உள்ள ஆடம்பர அடுக்கு மாடி சொகுசுக் கட்டிடத்தைப் பேரம் பேசி வாங்கிக் கொடுத்தார். அது தான் அவருடைய முதல் பெரிய வணிகத் தலையீடு.

2007-ஆம் ஆண்டு ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்த நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஓர் இளவரசர்; குவாயித் நாட்டு ஷேயிக்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஆகியோர் முக்கியப் பதவிகளில் இருந்தார்கள்.

2010-ஆம் ஆண்டு ஜெயின்வெல் முதலீட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். சின்ன வயதிலேயே பெரிய பெரிய அணுகுமுறைகள். அந்த நிறுவனத்திற்கு தன் அண்ணனையே தலைவர் ஆக்கினார்.

2009-ஆம் ஆண்டு நஜீப், மலேசியாவின் பிரதமர் ஆனதும், 1எம்.டி.பி. நிறுவனத்தின் ஆலோசனை மன்றத்தின் தலைவர் பதவி ஜோலோவிற்கு வழங்கப் பட்டது. அவருக்கு (ஜோலோவிற்கு) அரசாங்கப் பதவி எதுவும் இல்லை என்றாலும் 1எம்.டி.பி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை கேட்கப் பட்டது.




அந்த வகையில் ஜோலோ மூலமாக நிறைய பணப் பட்டுவாடாக்கள் நடந்து உள்ளன. தன் சொந்தப் பயன்பாட்டிற்கும் 1எம்.டி.பி. பணத்தைப் பயன்படுத்தி வந்தார். 1எம்.டி.பி. அதிகாரிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்து இருக்கலாம்.

2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. பணத்தைக் கொண்டு அமெரிக்கா நியூயார்க்கில் 34 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு சொகுசு மாளிகையை வாங்கினார். பின்னர் இந்த மாளிகை நஜீப்பின் மாற்றாள் மகன் ரிஷா அஜீஸ்-இன் பெயருக்கு மாற்றம் செய்யப் பட்டது.

அடுத்ததாக, அமெரிக்கப் புகழ் பெவர்லி ஹில்ஸ் ஆடம்பர வீட்டு மனைப் பகுதியில் மேலும் ஒரு சொகுசு மாளிகையை ஜோலோ வாங்கினார். பல கோடி ரிங்கிட் மதிப்பு உள்ள அந்த மாளிகையையும் ரிஷா அஜீஸ்சிற்கு அன்பளிப்பு செய்தார்.

இந்தக் கட்டத்தில் இண்டர்போல் அனைத்துலகப் போலீசார் ஜோலோவைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். பணம் தான் கோடிக் கணக்கில் புரள்கிறதே. கொஞ்சமாவது நெருடல் ஏற்பட்டு இருக்காது. ஒவ்வொரு நாளும் விலையுயர்ந்த விடுதிகளில் கேளிக்கை விருந்துகள் வைத்தார்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகைகளை எல்லாம் தன் விருந்திற்கு அழைத்தார். அவர்களும் சந்தோஷமாக வந்து குடித்துவிட்டு அவருடன் கும்மாளம் போட்டுவிட்டுப் போனார்கள். ஒவ்வோர் இரவு விருந்திற்கும் ஐந்து இலட்சத்தில் இருந்து பத்து இலட்சம் வரை ஜோலோ செலவு செய்து இருக்கிறார். ஜோலோவின் மன்மத ஆட்டங்கள் நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. Investigators Believe Money Flowed to Malaysian Leader Najib’s Accounts Amid 1MDB Probe - https://www.wsj.com/articles/SB10130211234592774869404581083700187014570

2. Full transcript of interview with 1MDB president Arul Kanda on TV3’s ‘Soal Jawab’  - http://www.therakyatpost.com/news/2015/08/13/full-transcript-of-interview-with-1mdb-president-arul-kanda-on-tv3s-soal-jawab-video/

3. Wright, Tom (9 July 2015). "Malaysian Financier Jho Low Tied to 1MDB Inquiry". The Wall Street Journal. ISSN 0099-9660.

4. Story, Louise and Stephanie Saul. "Jho Low, Well Connected in Malaysia, Has an Appetite for New York". The New York Times

5. Jynwel Capital, led by Jho Low, and Abu Dhabi Funds seek to buy Reebok from Adidas. The Rakyat Post. 20 October 2014.