31 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: கப்பல் ஏறிய கடன் தொல்லைகள்

தமிழ் மலர் - 31.10.2020

கரைவிட்டு கரை தாண்டுகிறார் ஒரு தமிழர். ஆனால் கண்ணீர் விட்டுக் கரை தாண்ட மாட்டார். கடன் சேர்த்த கடனாளியாகத்தான் கரை தாண்டுகிறார். அப்படி கரை தாண்டிய தமிழர் இங்கே மலாயாவில் பாடும் பாடல் என்ன தெரியுங்களா.

காக்கா மேய்க்கப் போன சீமையிலே

சீக்கா படுத்தேன் கித்தா காட்டினிலே

காய்ஞ்சு போன கித்தா உரிக்கையிலே...

சூடு சொரணை எல்லாம் செத்து போச்சுலே...

அடிவயிறு பத்தி எரியுதுலே...

வாழ்க்கைப் பட்ட மலாயா சீமைக்கு வயிறு காஞ்சிப் போறேன் என்று சொல்லிக் கறுப்புக் கங்காணியிடம் கைநாட்டுப் போடுவது. கிராமத்துப் பஞ்சாயத்தில் சத்தியம் பண்ணுவது. சொந்த பந்தங்களிடம் கைமாற்று வாங்குவது. வந்தது வரட்டும் என்று வயல் காட்டை எழுதிக் கொடுப்பது. கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே கடனாளிகளாகத் தான் தமிழர்கள் புறப்பட்டார்கள்.

யாருங்க? கரிசல் காட்டுக் கிராமத்து மண்வாசனைகள் தான். அதாவது நம்முடைய முப்பாட்டன் முப்பாட்டிகள் தான். அவர்களின் பாட்டன் பாட்டிகள் தான். அதாவது நம்முடைய மூத்த மூதாதையர்களின் முன்னோடிப் பந்தங்கள் தான். அதாவது மலேசியத் தமிழர்கள் பலரின் உடலில் ஓடும் சிவப்புக் கலர் இரத்தத்தின் சொந்த பந்தங்கள்.

இந்த உண்மையைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. சிலரால் கிரகித்துக் கொள்ளவும் முடியாது. பரவாயில்லை. குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர். கிளேமர் கிளியோபாட்ரா; பிரேக் டான்ஸ் மைக்கல் ஜேக்சன் நினைப்பில் வாழ்பவர்களுக்குக் கக்கலுக்கு விக்கல் என்று பெயராம். பிக் பாஸ் கமல் அவர்களுக்கு டெலிகிராம் செய்ய வேண்டிய தகவல்.  

உண்மை கசக்கவே செய்யும். இருந்தாலும் எங்க தாத்தா ஒரு கைநாட்டு; ஆனாலும் அவர் சிங்கம்டா. எங்க பாட்டி ஒரு கைக்கீறு; ஆனாலும் அவர் கைவைத்தியம்டா என்று நெஞ்சைத் தட்டிப் பெருமை பேசலாமே. மனசு வேண்டுமே.

இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைத் தமிழர்கள், தங்களின் மூத்தத் தலைமுறையினரை மறந்துவிடக் கூடாது. வாழும் காலத்திலேயே அவர்களைப் போற்ற வேண்டும்.

அடுத்து அடுத்து வரும் தலைமுறையினருக்கு அந்த முதியவர்களின் அர்ப்பணிப்புகளைச் சீதனங்களாக விட்டுச் செல்ல வேண்டும். அப்போது தான் மலாயா தமிழர்களின் வரலாறு நீடித்து நிலைத்து நிற்கும். நேற்று வந்த வந்தேறிகள் ஏளனமாகப் பேச இடம் கொடுக்கவே கூடாது. சரி.

கிராமத் தலைவரிடம் கைநாட்டுக் கடன்.

சொந்த பந்தங்களிடம் கைமாற்றுக் கடன்.

வயல்காட்டை அடகு வைத்தக் கடன்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய சமரசக் கடன்.

குடிசையின் ஓட்டுத் தாரைக்கு ஒட்டுப் போட்ட கடன்.

ஜல்லிக்கட்டு காளைக்குச் சாயம் அடித்த கடன்.

ஐயனார் சாமிக்கு அரிவாள் கத்தி வாங்கிய அஞ்சாறுக் கடன்.


இப்படி எக்கச் சக்கமான கடன்கள். அந்தக் கடன்களின் வாரிசுகளாக வட்டிக் குட்டித் தொல்லைகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும் இல்லீங்களா.

இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா இருப்பார்களா? விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவது மட்டும் அல்ல. கழுதைக்கு முத்துமாலை என்று பெயரும் வைத்து விடுவார்கள்.

அடுத்து ஒரு முக்கியமான கடன். கடல் கடந்து போகும் போது தட்டு முட்டுச் செலவுகள் வந்து சேரும். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கறுப்புக் கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.

ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தமிழர், முக்கால்வாசிக் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முக்கால்வாசிக் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.

அதுவே ஒரு சாமானியத் தமிழரை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டம். பெரிய கங்காணி பயன்படுத்தப் போகும் ஒரு பெரிய துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமானிய மனிதர் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறார்.

இது அதோடு முடிந்து போவதும் இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பலச் சடங்குச் சம்பிரதாயச் செலவுகள்.

காளியம்மாவுக்கு காதுகுத்து

தீர்த்தம்மாவுக்கு திருமணக் கூத்து

ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு

வள்ளியம்மா வயசுக்கு வந்துட்டா சடங்கு


இப்படி வரிசை வரிசையாகப் பற்பலச் சடங்குச் சங்கதிகள். இதையும் தாண்டிய நிலையில் மொட்டை மாடு முட்டை போட்ட சடங்கு; பெட்டை ஆடு குட்டிப் போட்ட சடங்கு; அரச மரத்திற்கு அஞ்சு முழம் கயிறு கட்டிய சடங்கு என்று இன்னும் பற்பலச் சடங்குகள். அப்புறம் அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய ஒரு கட்டாய நிலை.

தோட்டத்தில் கங்காணிக்குச் சொந்தமாக ஒரு மளிகைச் சாமான் கடை இருக்கும். அல்லது பெட்டிக் கடை இருக்கும். அல்லது இரண்டுமே இருக்கும். அந்தக் கடையில்தான் கங்காணி போட்ட விலையில் அரிசி பருப்பு அது இது என்று எல்லாச் சாமான்களையும் வாங்க வேண்டும்.

அப்புறம் இந்தக் கடனும் ஏற்கனவே ஊரில் வாங்கிய பழைய கடனும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கித் தொழிலாளியின் கழுத்தை நெரித்துக் கண்ணீர் வடிக்கச் செய்யும்.

அடுத்து வருவது மகா பெரிய கங்காணியின் அசத்தலான கைங்கரியம். தோட்டத்தின் துரையிடம் இருந்து தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தையும் பெரிய கங்காணிதான் வாங்குவார். அது அப்போதே சஞ்சிக் காலத்தில் எழுதப் படாத ஒரு சாசனம்.

பொதுவாக படிப்பறிவு இல்லாதவர்களைத் தான் தமிழகத்தில் இருந்து அழைத்துச் சென்று இருப்பார்கள். படித்தவர்கள் வருவது ரொம்பவும் குறைவு. கும்முனியில் மாடு மேய்க்கப் போய் இருப்பார்கள்.

ஆக பாமர மக்களின் படிப்பு வாசனை குறைவு தான் கங்காணிகளுக்குப் பிளஸ் பாயிண்ட்.

கங்காணி ஒரு சின்ன கணக்குப் புத்தகம் வைத்து இருப்பார். அதில்...

வேட்டிக்கு ஒட்டுப் போட்ட கணக்கு;

முந்தானைக்கு முடிச்சுப் போட்டக் கணக்கு;

கிழிஞ்ச கோவணத்தைப் பிழிஞ்சு போட்ட கணக்கு.


இப்படி எக்கச் சக்கமாய் ஊறுகாய்க் கணக்குகளை எழுதி வைத்து இருப்பார். அசலும் வட்டியுமாக வரவிலும் வைத்துக் கொள்வார்.

எல்லாம் வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியின் கைக் கணக்குதான். தொழிலாளியின் சம்பளப் பணம் முழுவதும் கங்காணியிடமே மாட்டிக் கொள்ளும்.

அதனால் சம்பளப் பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே வேலை செய்ய வேண்டிய ஒரு கட்டாயம். சிலர் சம்பளப் பணத்தைப் பார்க்காமலேயே செத்துப் போனதும் உண்டு.

கூலிகளின் வீடுகளைக் கூலி லயன்கள் என்று அழைத்தார்கள். Line எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து தான் லயம் எனும் சொல் உருவானது. ஆடு மாடு லாயங்களைப் போன்று வரிசை வரிசையாகக் கட்டப்பட்டு இருக்கும். வீடுகள் என்று சொல்ல முடியாது. தகரக் குடிசை எனும் சஞ்சித் தமிழர்களின் அப்பார்ட்மெண்டுகள்.

விடியல் காலையிலேயே ஐந்து மணிக்கு எல்லாம் கொம்பு ஊதப்படும். அல்லது தப்பு அடிக்கப்படும். உதறல் எடுக்கும் பிரட்டுக் களத்தில் வரிசை பிடித்து நிற்க வேண்டும்.

அந்த மாதிரி கூடுவதை பேரட் (Parade) என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். அதையே பிரட்டுக் களம் என்று நம்மவர்கள் சொல்வார்கள். பேரட் என்பது தான் பிரட்டு என்று மாறியது.

அங்கு இருந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு மாட்டு வண்டிகளில் அழைத்துச் செல்லப் படுவார்கள். சிலர் இருட்டில் நடந்தே போக வேண்டும். அங்கே புலி அடித்த கதைகளும் உண்டு. மலைப்பாம்பு விழுங்கிய கதைகளும் உண்டு.  

இலங்கையில் மலையகத்தில் வேறு மாதிரியான வேலைகள். தேயிலைக் கொழுந்து பறித்தல், காபிப் பழம் பறித்தல், செடிகளைக் கவாத்து செய்தல், காட்டுச் செடிகளைக் களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடுகளை அழித்துதல். இப்படி பற்பல வேலைகளைச் செய்தார்கள்.

ஒரு செருகல். 19-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்கா காலனி நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து போன தொழிலாளர்களின் விவரங்கள்:

•    மொரீஷியஸ் - 453,063

•    பிரிட்டிஷ் குயானா - 238,909

•    டிரினிடாட் - 143,939

•    ஜமாய்கா - 36,412

•    கிரேனடா - 3,200

•    செயிண்ட் லூசியா - 4,350

•    நாட்டால் - 152,184

•    செயிண்ட் கீட்ஸ் - 337

•    செயிண்ட் வின்செண்ட் - 2,472

•    ரியூனியன் தீவுகள்- 26,507

•    சுரிநாம் - 34,304

•    பீஜி - 60,965

•    தென்னாப்பிரிக்கா - 32,000

•    செய்சீல்ஸ் - 6,315

•    மொத்தம் - 1,194,957

1899-ஆம் ஆண்டு வரையிலான ஆப்பிரிக்கா கணக்கு. மலாயாவிற்கு 1900-ஆம் ஆண்டுக்குள் எப்படியும் 250 ஆயிரம் பேர் கப்பல் ஏறி வந்து இருக்கலாம். சரி.

ஓர் இழிவான வாழ்க்கையில் இனம் தெரியாத ஜடப் பொருளாகிப் போன சஞ்சிக் கூலிகளின் பரிதாப நிலையைப் பார்க்கும் போது மனம் பதைக்கிறது.

வேலைச் சுமை. வாழ்க்கைச் சுமை. மனசுச் சுமை. இவற்றை மறக்க மதுபானத்தில் பலர் ஐக்கியமானார்கள். அந்த வேதனையில் மனதை நெகிழ வைக்கும் பாட்டுக் கச்சேரிகள். ஆக வேறுவழி இல்லாமல் முன்வினைப் பயன் என்று மனசைத் தேற்றிக் கொண்டார்கள்.

இந்தத் துயரங்களில் இருந்து விடுபட்டுத் தப்பிக்க நினைத்தாலும் அது அவ்வளவு சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல. இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும் அதுவும் நடக்காது. சட்டம் பேசினாலும் சரிபட்டு வராது.

கங்காணியும் சரி; வெள்ளைக்காரத் தொப்பிகளும் சரி; சிரித்துக் கொண்டே கழுத்தை நெரிப்பதில் பயங்கரமான ஜீபூம்பாக்கள்.

ஒரு செருகல். முட்டை போடுவது நாட்டுக் கோழி. இப்போது வீட்டுக் கோழி. சாரி. ஊசி போட்ட கோழி. அந்தத் தோட்டத்துக் கோழிக்குச் சிலுவார் சட்டை போட்டு நடுத் தெருவில் ஓட வைப்பது ஒரு கலை. ஓடும் போதே முட்டை போட வைப்பது; அதைவிட அசாத்தியமான கலை.

இந்த இரண்டு கலைகளிலும் சகலகலா வல்லவர்கள் என பெயர் எடுத்தவர்கள் யார் தெரியுங்களா? பரங்கியர்கள் என்று பேறு பெற்ற வெள்ளையர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.10.2020

No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.

 



மகாதீர் பேச்சு: உலகத் தலைவர்கள் கொந்தளிப்பு

தமிழ் மலர் - 31.10.2020

பிரான்சில் நடந்த கொலை வெறியாட்டத்தை ஆதரிப்பது போல் துன் மகாதீர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்டிர் குறிப்பிட்டு உள்ளார்.

பிரான்ஸ், நைஸில் நேர்ந்து உள்ள கொலை வெறி ஆட்டத்தில் பாதிக்கப் பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்ட கமலா, கருத்துச் சுதந்திரத்தைத் தாம் வரவேற்றாலும் மகாதீர் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் பிரான்சு கொன்று குவித்ததற்குப் பழிவாங்கும் விதத்தில், முஸ்லிம்கள் ஆத்திரப் படுவதற்கும் அவர்களைக் கொலை செய்வதற்கும் உரிமை உள்ளவர்கள் என்று நேற்று முன்தினம் மகாதீர் அறிவித்துப் பலரின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளார்.

அது பற்றி அவரின் ஆதரவாளர்கள் குறிப்பிடும் போது, பெரும்பாலான முஸ்லிம்கள் ‘கொலைக்குக் கொலை’ எனும் சித்தாந்தத்தை ஏற்பது இல்லை என்று குறிப்பிட்டு உள்ளதோடு, பிரான்சு தனது மக்கள் மற்றவர்களை மதிக்கக் கற்றுத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னர் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் நபி முகமட்டின் சித்திரத்தை வகுப்பில் காட்டி போதனை நடத்திய பின்னர், செச்சன் பிரிவினைவாதி ஒருவரால் வெட்டிக் கொல்லப் பட்டார்.

அதனை அடுத்து தேவாலயம் ஒன்றில் தீவிரவாதி ஒருவன் மூவரைக் கொன்று வெறியாட்டம் ஆடியுள்ளான். இவ்விரு சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் உள்ளவையாகக் கருதப் படுகிறது.

இந்த இரு பயங்கரவாத நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்த பிரெஞ்சு அதிபர் எம்மானுவெல் மேக்ரோன், இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்து அரசு போர் தொடுக்கும் என்றும் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொலை வெறியை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனிடையே, சுதந்திரச் செய்தியாளர் மையத்தின் நிர்வாக இயக்குநர் வத்சலா ஜி. நாயுடு, கருத்துச் சுதந்திரத்துக்கு ஓர் எல்லை உண்டு என்றும் அனைத்துலக மனித உரிமை ஆணையம் எல்லாவித பயங்கரவாதத் தூண்டுதலையும் பாகுபாட்டையும் தடை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

எல்லா முஸ்லிம்களும் கொலை வெறியோடு திரிவது இல்லை என்றாலும், மகாதீரின் அறைகூவலை நியாயப் படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் கூற்றின்படி கொலை செய்யும் உரிமை என்பது யாருக்கும் தரப் படவில்லை. வாழ்வதும் வாழ விடுவதுமே அனைவருக்கும் இருக்கும் உரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

 

30 அக்டோபர் 2020

மலேசிய இந்தியர்களில் எண்பது விழுக்காடு தமிழர்கள்

தமிழ் மலர் - 30.10.2020

கொளுந்து விட்டு எரிகிற தீயின் எச்சம். அதைச் சாம்பல் என்கிறோம். அந்தச் சாம்பலில் நீறு பூத்த நெருப்பு. பார்த்தால் தெரியாது. தொட்டால் சுடும். அதே போலத் தான் மலாயாவுக்குக் கப்பலேறி வந்த தமிழர்களின் எச்சங்களும் மிச்சங்களும் இன்றும் வரலாறு பேசுகின்றன.

நம்முடைய பெற்றோர்; நம்முடைய தாத்தா பாட்டிமார்கள்; நம்முடைய முப்பாட்டன்கள் முப்பாட்டிகள்; எல்லோருமே அந்தத் தமிழர்களின் எச்சங்கள் தான். அதாவது கப்பலேறி வந்த சஞ்சிக் கூலிகளின் எச்சங்கள் தான்.

இதை முதலில் நினைவில் கொள்வோம். ஒரு சிலர் அதில் இடம் பெற மாட்டார்கள். இலங்கை, கேரளாவில் இருந்து வந்த கிராணிகள்; டிரசர்கள்.

இருப்பினும், இல்லை என்று சிலரும் பலரும் மறுத்துப் பார்க்கலாம். மறுத்துப் பேசலாம். எப்படிப் பார்த்தாலும், கடைசியில் அங்கேதான் வந்து நிற்க வேண்டும்.


இப்போது பணம், காசு, புகழ், செல்வம், செல்வாக்கு, அதிகாரம், அழகிய வாழ்க்கை, இத்யாதி இத்யாதி என்று சகல வசதிகளும் வைபோகங்களும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தலைமுறையாகப் பின்னோக்கிப் போய் பார்க்க வேண்டும்.

கடைசியில் ரஜுலா கப்பலுக்கு முன்னால் தான் கைகட்டி நிற்க வேண்டி வரும். ரோணா, அண்டோரா, ஜல கோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் போன்ற கப்பல்களையும் மறந்துவிடக் கூடாது.

அங்கே தான் நம்முடைய பூர்வீகம், சுவர் இல்லாத சித்திரங்களாய்த் தெரிய வரும். ஜல உஷா என்பது 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவுக்கு வந்து போன கப்பல்.

அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் சஞ்சிக்கூலிகளாய் வந்த தமிழர்களின் வாரிசுகள் இல்லை என்று சிலர் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு கலர் கலராய்ப் பெருமை பேசிக் கொள்ளலாம். நல்லது. பேசிவிட்டுப் போகட்டும்.

விமானச் சேவைகள் இல்லாத காலத்தில் அவர்களின் மூதாதையர்கள் மலாயாவுக்கு எப்படி வந்தார்களாம். அதைக் கேட்டுப் பாருங்கள். வருத்தப்பட வேண்டாம்.

இமயமலையில் இருந்து இறக்கைக் கட்டிப் பறந்து வந்தார்களா. இல்லை போர்னியோ களிமந்தான் காடுகளில் இருந்து குதித்து வந்தார்களா. இல்லை அந்தமான் தீவில் இருந்து நீச்சல் அடித்து வந்தார்களா. இல்லை பர்மா சயாம் காடுகளில் புலிகளை முறத்தால் மொத்தி விரட்டி அடித்து விட்டு வந்தார்களா.

கட்டுச் சோறு கூட்டாஞ் சோறு ஆக்கிச் சாப்பிட்டக் கதைகளை எல்லாம் மறந்து விட்டு பெருமை பேசக் கூடாது. ஒரு சிலர் வியாபாரம் செய்ய வந்தார்கள். குஜாராத்தியர்களைச் சொல்லலாம். மற்ற சிறு சிறுச் சமூகத்தவர்களையும் சொல்லலாம்.

அவர்களும் சஞ்சிக்கூலிகளின் பட்டியலில் தான் சேர்க்கப் படுகிறார்கள். ஏன் தெரியுமா. நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறும் போது வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கப்பல் ஏறி இருக்க முடியாது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தான் அப்போது முதலிடம் கொடுத்தார்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர் ஆவணத்தில் கையெழுத்துப் போடச் சொல்வார்கள். அந்த இடத்தில் மலாயாவில் இருந்து அங்கே போன கங்காணியும் கையெழுத்துப் போட வேண்டும்.

அப்புறம் தான் உங்களைக் கப்பலிலேயே ஏற விடுவார்கள். இந்திய முஸ்லீம் சமூகத்தவர்களில் சிலருக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டு உள்ளன.

இந்த இடத்தில் தான் இந்தியர்களின் புலம்பெயர்வு வந்து நிற்கிறது. ஆக, சஞ்சிக்கூலிகளின் எச்சங்களில் அப்போது நீறு பூத்தது. இப்போது அந்த எச்சங்களில் போர்வை போர்த்தப் படுகிறது. இருந்தாலும் இன்னமும் தகித்துக் கொண்டு தான் இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன்.

மலாயாவுக்குக் கப்பலேறி வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி வந்த அந்தத் தமிழர்களை இந்த உலகம் இந்தியர்களாகத் தான் பார்க்கிறது. தமிழர்களாகப் பார்க்கவில்லை.

ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் ’டயஸ்போரா' (Diaspora) என்று அழைப்பார்கள். 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி வெளிநாடுகளில் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

(http://indiandiaspora.nic.in/)


இந்தியன் டையஸ்போரா (Indian Diaspora) எனும் இந்தியர்களின் புலம்பெயர்வை முதலில் தெரிந்து கொள்வோம். 1830-களில் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நலிந்த பிரிவினர்.

1834-க்கும் 1937-க்கும் இடையே அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல் கடந்து சென்று உள்ளனர். அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மட்டுமே மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்தனர்.

புலம்பெயர்  இந்தியர்கள் என்று அழைக்கப் படுகிறவர்கள் இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். உலக நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்கள். 2016 - 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:


அமெரிக்கா (United States) - 4,402,363

சவூதி அரேபியா (Saudi Arabia) - 4,124,000

நேபாளம் (Nepal) - 4,010,000

ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) - 3,860,000

மலேசியா (Malaysia) - 2,109,200

கனடா (Canada) - 1,430,000

தென் ஆப்பிரிக்கா (South Africa) - 1,360,000
Puan Sri Datin Janaky Athi Nahappan (25 February 1925 – 9 May 2014) was a founding member of the Malaysian Indian Congress (MIC) and one of the earliest women involved in the fight for Malaysian (then Malaya) independence. (Third from left)

மியன்மார் (Myanmar) - 1,180,000

பிரிட்டன் (United Kingdom) - 1,051,762

இலங்கை (Sri Lanka) - 850,000

ஓமான் (Oman) - 840,000

மொரீஷியஸ் (Mauritius) - 822,500

குவைத் (Kuwait)- 780,000

சிங்கப்பூர் (Singapore) - 700,028

கத்தார் (Qatar) - 666,000

தாய்லாந்து (Thailand) - 465,000

ஆஸ்திரேலியா (Australia) - 453,000

டிரினிடாட் டொபாகோ (Trinidad Tobago) - 430,300

கயானா (Guyana) - 327,000

பிஜி (Fiji) - 315,198

ரியூனியன் (Réunion) - 273,254

நியூஸிலாந்து (New Zealand) - 170,020

பஹ்ரைன் (Bahrain) - 168,000

பிலிப்பைன்ஸ் (Philippines) - 160,000

சுரிநாம் (Suriname) - 148,000

இந்தோனேசியா (Indonesia) - 128,000

ஜெர்மனி (Germany) - 126,000

இத்தாலி (Italy) - 114,000

தெதர்லாந்து (Netherlands) - 93,000

ஜமாய்க்கா (Jamaica) - 93,000

கென்யா (Kenya) - 90,000

அயர்லாந்து (Ireland) - 81,520

இது ஒரு நீண்ட பதிவு. வாய்ப்பு கிடைக்கும் போது முழுமையாகப் பதிவு செய்யப்படும்.


தொடக்கக் காலங்களில் குடியேறிய தமிழர்களைப் பற்றிய விவரங்கள் சரியான முறையில் ஆவணப் படுத்தப்படவில்லை. இது ஒரு வேதனையான செய்தி. ஆக முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம்.

மலேசியாவைப் பொருறுத்த வரையில் மலேசிய இந்தியர்களில் 81 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆகும். மலேசிய இந்தியர்களின் பட்டியலில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்கள், வங்காளிகள், சிந்திகள், குஜராத்திகள் உள்ளனர்.

பாகிஸ்தானியர்களும் மலேசிய இந்தியர்களின் பட்டியலில் சேர்க்கப் படுகிறார்கள். ஒரு வேடிக்கையான செய்தி.

மலேசிய அரசாங்கத்தின் சலுகைகள்; கல்விக் கடன் உதவிகள்; உயர்க் கல்விக்கானத் தேர்வு முறைகள்; ஆகியவை மலேசிய இந்தியர்கள் எனும் அடிப்படையில் தான் பாகிஸ்தானியர்களுக்கும் சேர்த்து ஒதுக்கீடுகள் செய்யப் படுகின்றன. அதே மாதிரி மற்ற அனைத்துச் சமூகங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன.

வங்காளிகள், குஜராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்கள் என தனியாகப் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. மனுபாரங்களில் இந்தியர்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். தனி ஒரு சமூகத்தின் பேரில் விண்ணப்பிக்க முடியாது. மனுச் செய்தாலும் செல்லுபடி ஆகாது.  

இந்தப் பக்கம் ஒரு மூத்த அரசியல்வாதியை எடுத்துக் கொள்ளுங்கள். 1947-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்தார். மனுபாரத்தில் இந்தியர் என்றுதான் பதிவு செய்து படிக்கப் போனார்.


சான்றுகள் வேண்டாமே. உள்ளங்கை ரேகையைக் கண்ணாடிப் போட்டு பார்க்க வேண்டாமே. இவரும் மலாயா இந்தியர் எனும் பெயரில் தான் பதிந்தார். படித்தும் வந்தார். நல்லபடியாக படித்து நல்ல நிலைக்கு வந்தார்.

இப்போதைக்கு மலேசியத் தமிழர் மனங்களில் சாதனை மனிதராக வாழ்ந்து வருகிறார். சும்மா சொல்லக் கூடாது. மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போட்ட சாதனை. ஒரு தமிழரின் வேதனை விசும்பல்கள். விரக்தியின் குமுறல்கள்.

மலேசிய இந்தியர்களில் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள். மலேசிய இந்தியர்களில் 93 விழுக்காட்டினர். இவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள்; கல்விக் கடன் உதவிகள்; நிதியுதவிகள் சரியான முறையில் மனநிறைவாகக் கிடைக்கவில்லை.


இது இப்போதைய புலம்பல் அல்ல. மலேசியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மலாயா தமிழர்கள் பார்த்து வரும் பஞ்சபுராணத்தின் நித்தியக் கல்யாணிகள். மற்றும் ஒரு சோகமான பல்லவி நாளைக்கும் வரும். ஆறு சுரங்களில் சாடவ சம்பூர்ணங்களை இசைக்கும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
3010.2020

சான்றுகள்:

1. Kesavapany, K.; Mani, A; P. Ramasamy (2008). Rising India and Indian Communities in East Asia. Institute of Southeast Asian Studies. p. 234.

2. "Tragic Orphans: Indians in Malaysia" by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies, ISBN 978-981-4519-03-8

3. Sandhu, Kernial Singh (30 January 2006). K S Sandhu; A Mani (eds.). Indian Communities in Southeast Asia (First Reprint ed.). ISEAS Publishing. ISBN 978-9812304186.

4. http://www.jstor.org/stable/2644086?seq=1#page_scan_tab_contents

5.http://www.tribuneindia.com/news/nation/india-has-largest-diaspora-population-in-world-un/183731.html


அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச் சீட்டில் தமிழ்

தமிழ் மலர் - 30.10.2020

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச் சீட்டில் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் ஓட்டளித்து வருகின்றனர்.

இதில் சான்டா கிளாரா பகுதி மக்கள் சமீபத்தில் ஓட்டளித்தனர். இதற்காக வைக்கப்பட்ட ஓட்டு பெட்டியில் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட மொழிகளுடன் 6 இந்திய மொழிகளும் இடம் பெற்றிருந்தன. ஓட்டு பெட்டி, வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை இந்திய மொழிகளிலும் வழங்கப் பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி, உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வாக்காளர் விண்ணப்பப்படிவம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன், அமெரிக்கா வாழ் இந்தியர்களை குறி வைத்தே தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக ஜனநாயகக் கட்சி தங்களின் தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை 14 இந்திய மொழிகளில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



29 அக்டோபர் 2020

ஆங்கிலேயர் ஆட்சியில் அசாம் தமிழர்கள்

 தமிழ் மலர் - 29.10.2020

அசாம் பழைமை வாய்ந்த நாடு. அந்நியர் தலையீடுகள் இல்லாமல் தனிமையில் ஆட்சி செய்த நாடு. மகாபாரதம், காளிகா புராணம் (Kalika Purana), யோங்கினி தந்திரம் போன்ற புராணங்களில் சொல்லப்படும் நாடு. திபெத்தியம்; பர்மியம்; இந்தியம்; ஆரியம் ஆகிய பண்பாடுகளின் சங்கமத்தில் உருவான நாடு. இந்தியப் பேரேடுகளில் இன்றும் பெருமையாகப் பேசப்படும் நாடு.

 

13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் அகோம் பேரரசு (Ahom kingdom) எனும் பெரும் பேரரசு இருந்தது. தொடக்கக் காலத்தில் கச்சாரி தனவம் அரசு (Kachari Danava dynasty); நரகா அரசு (Naraka); பாகுமா அரசு (Bhauma dynasty); அசுரா அரசு (Asura Kingdom); காமரூபா அரசு (Kamarupa); தாவகா அரசு (Davaka). இப்படி நிறைய அரசுகள் அசாம் நாட்டை ஆட்சி செய்து உள்ளன.

ஆகக் கடைசியாக 1228-ஆம் ஆண்டு தொடங்கி 1826-ஆம் ஆண்டு வரை அகோம் பேரரசு ஆட்சி செய்தது. இந்தக் காலக் கட்டத்தில் மொகலாயர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். டில்லி சுல்தானகமும் ஆட்சி செய்து இருக்கிறது.

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். சும்மா சுற்றிப் பார்க்க வந்தது மாதிரி முதலில் ஒரு ‘ஷோ’ காட்டினார்கள். ஒரு சில ஆண்டுகளில் அகோம் பேரரசை அப்படி இப்படி என்று அடித்துப் பிடித்து வளைத்துப் போட்டுக் கொண்டார்கள். பாலைவனத்துக் கூடாரத்திற்குள் ஒட்டகம் தலையை விட்ட கதை மாதிரிதான். அப்புறம் அடுத்து வந்த 120 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள்.

தேயிலையைப் பிழிந்தால் தேயிலைச் சாறு வரும். தெரியும் தானே. அப்புறம் அதில் கொஞ்சம் சீனி போட்டுக் குடித்தால் ஓர் ‘உம்’ வரும். அதுவும் தெரியும் தானே. அந்த மாதிரி ஆங்கிலேயர்களும் அசாம் தேயிலையை நன்றாகவே பிழிந்து பிழிந்து சாறு எடுத்து விட்டார்கள்.

சீனர்கள் கண்டுபிடித்த தேயிலைக் கலைக்கு சீனமொழியிலேயே அகராதி எழுதிய பெருமை இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. அந்த மாதிரி தேயிலைக்கு அகராதி எழுதி கலைக் களஞ்சியம் தயாரித்தவர்கள்.

சும்மா சொல்லக் கூடாது. அசாம் நாடு சக்கையான பின்னர்தான் அந்த நாட்டை விட்டே வெளியே போனார்கள். அந்தச் சக்கைகளில் ஒரு சக்கைதான் அசாம் நாட்டுத் தமிழர்கள். அப்படி தமிழர்களைப் பிழிந்து எடுத்து விட்டார்கள்.

இன்னும் ஒரு விசயம். 1945-ஆம் ஆண்டில் அசாம் நாட்டை விட்டு ஆங்கிலேயர்கள் போகும் போது சும்மா ஒன்றும் போகவில்லை. அசாமில் இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விட்டார்கள்.

அதாவது பரவாயில்லை. அங்கே இருந்த மக்கள் குடுமி பிடித்துச் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு சூடம் சாம்பிராணி கொளுத்தி வைத்து விட்டுப் போனார்களே. அதை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதாம்.

சூரியனையே திரைத்துணி போட்டு மூடி கின்னஸ் சாதனை படைத்தவர்கள் ஆயிற்றே. அப்படிப்பட்ட சகலகலா வல்லவர்களை மலாயா தமிழர்களும் மறக்க மாட்டார்கள். அசாம் தமிழர்களும் மறக்க மாட்டார்கள். விடுங்கள்.

அசாம் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கியதும் அதன் பழங்காலத்துக் கலாசாரப் பண்புகள் சன்னம் சன்னமாய்ப் பாதிக்கப் பட்டன. அதற்குக் காரணம் அசாம் தேயிலைத் தோட்டங்கள் தான். ராபர்ட் புருஸ் (Robert Bruce) எனும் ஆங்கிலேயர். இவர் மூலமாக 1820-ஆம் ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்கள் அசாம் நாட்டில் தோன்றின.

அசாம் இப்போது இந்தியாவின் ஒரு மாநிலம் தான். இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக அது ஒரு பெரிய நாடாக தனித்து நின்று ஆட்சி செய்து வந்தது. தனியாக இயங்கிய ஒரு நாடு. ஆகவே தான் அதை நாடு என்று அழைக்கிறோம்.

இந்தியாவில் இருந்து நிறைய தொழிலாளர்கள் அசாம் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றார்கள். அதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சில பல ஆயிரம் தமிழர்கள்.

அதற்குப் பின்னர் மணிப்பூர் தமிழர்களும் அசாம் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றார்கள். மணிப்பூர் தமிழர்களைப் பற்றி நேற்றைய கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிசோரம் (Mizoram); நாகலாந்து (Nagaland); திரிப்புரா (Sikkim Tripura); மணிப்பூர் (Manipur); அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh); அசாம் (Assam); மேகாலயா (Meghalaya) ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன.

இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில், மோரே கிராமத்தில் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களில் 3000 பேர் அசாம் தேயிலைத் தோட்டங்களில் இப்போது வேலை செய்து வருகிறார்கள்.

மோரே என்பது ஒரு சிறு கிராமப்புற நகரம். அங்கே தங்கிய தமிழர்கள் காலப் போக்கில் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் குக்கீஸ் என்கிற பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.

தொடக்கத்தில் தமிழர்களுக்கும் குக்கீஸ் பழங்குடிகளுக்கும் சலசலப்புகள். 1990-களில் மணிப்பூர் பூர்வீக இனக் குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள். இடையில் சிக்கிய தமிழர்கள் பலர் கொலை செய்யப் பட்டார்கள்.

அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களும் பழி வாங்கப் பட்டார்கள். அவர்களில் சிலர் மீண்டும் தமிழ்நாட்டுக்கே அகதிகளாகப் போய்ச் சேர்ந்தார்கள்.

இருந்தாலும் காலப் போக்கில் சமரசமானது. தமிழர்களும் குக்கீஸ் பழங்குடிகளும் இப்போது இணைந்து வாழ்கிறார்கள்.

1950-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு ஷொலிம் பெயிட் (Sholim Bait) என்பவர் உதவி செய்தார். அதற்கு அங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரிதான் காரணம். அந்த வரியில் ஒரு குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டார். மீதியை ஆங்கிலேய அரசுக்கு செலுத்தி வந்தார்.

இப்போதைக்கு மோரே கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 35,000. இதில் தமிழர் மட்டும் 17,500 பேர். தமிழர்கள் அனைவரும் தமிழிலும் பர்மிய மொழியிலும் பேசிக் கொள்கிறார்கள்.

ஆங்கிலேய ஆட்சியின் போது பர்மா நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தான் இருந்தது. 1948-க்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். அந்தக் காலக் கட்டத்தில் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை. தேயிலைத் தோட்டத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள் மோரே கிராமத்திற்கே திரும்பி வந்தார்கள்.

மோரே கிராமத்தில் இருந்து ரங்கூன் வரை போய் வியாபாரம் செய்தார்கள். தடைகள் ஏதும் இல்லை. அப்போதைய காலத்தில் மோரே நகரம் இந்தியா பர்மா நாடுகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் செயல்பட்டது.

மோரேவில் இப்போது நிறைய தமிழர் உணவகங்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன மளிகைக் கடைகளும் இருக்கின்றன. அசாம் தேயிலை இங்கே அதிகமாக விற்பனை ஆகிறது.

1960-களில் அசாம் தேயிலைத் தோட்டங்களில் இருந்து குடியேறிய தமிழர்கள் மோரேவில் சின்னச் சின்ன வியாபாரங்கள் செய்தார்கள். மோரேவிற்கு அருகில் நாம்ப்லாங் (Namplong) என்று ஒரு சந்தை இருந்தது. அந்தச் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம். சந்தையில் தமிழர்கள் சிலர் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

தமிழர்களின் புத்திசாலித்தனம்; கடும் உழைப்பு; இந்த இரண்டும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்து விட்டன. ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அசாம் தேயிலைத் தோட்டங்களில் இருந்து வந்தவர்களைத் தான் சொல்கிறேன்.

திருமண விசயத்தில் அசாம் தேயிலைத் தோட்டத்து தமிழர்களிடம் படு சுதந்திரம். பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை பிரச்சினையே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்வீட்டாருக்குத் திருமண சீர் செய்ய வேண்டும். இன்னும் ஒரு விசயம். ரொம்பவும் முக்கியம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே நறுக்கென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார்கள். அதோடு அடுத்த பேச்சு இல்லை.

வந்தவர்கள் வந்தவழியைப் பார்த்துத் திரும்பிப் போக வேண்டியது தான். மணப்பெண்ணின் மனசிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத் தமிழர்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை.

இந்தப் பக்கம் மணிப்பூரில் வாழும் குக்கீஸ் பூர்வீகக் குடிமக்களிடம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஒருக்கால் அதையே மணிப்பூர் தமிழர்கள் பின்பற்றி வரலாம். சொல்ல முடியாது.

அப்புறம் இன்னும் ஒரு நல்ல விசயம். காதலர்கள் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் பிரச்சினை ஒன்றும் பெரிதாக வரப் போவது இல்லை. நிறைய குடும்பங்களில் நடந்து இருக்கிறது. இரு தரப்பும் ஒன்றாகச் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

பின்னர் காதலர்கள் இருவரையும் அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு கன்டிசன். புருசன்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டால் திரும்பி அப்பா அம்மா விட்டிற்குப் போக முடியாது. கதவைச் சாத்தி விடுவார்கள். நல்ல பழக்கம்.

முடிந்தால் நீங்களும் போய்ப் பாருங்களேன். போன வாக்கில் ஒரு பெண்ணைக் காதல் பண்ணி அப்படியே கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாக இருந்து விடுங்கள். பெண்ணின் அப்பா அம்மா தேடி வருவார்கள். நல்லபடியாக அழைத்து வந்து கல்யாணம் செய்து வைப்பார்கள்.

மணிப்பூரில் ஒரு மினி மலேசியாவை உருவாக்கி விடலாம். எப்படி வசதி? முன்பே தெரிந்து இருந்தால் முதல் ஆளாகப் போய் இருப்பேனே என்று நண்பர் ஒருவர் சொல்கிறார். நிறைய பேரன் பேத்திகளை எடுத்து இருப்பேனே. ம்ம்ம்… என்ன செய்வது என்று புலம்புகிறார்.

மணிப்பூரில் அரசு வேலை, ஆசிரியர் வேலை செய்பவர்களுக்குச் சரியான கிராக்கி. அவர்களை உள்ளூர்ப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறார்கள். அங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச பஞ்சாபிகளும் மலையாளிகளும் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாகத் தான் குடும்பம் நடத்துகிறார்கள்.

அப்புறம் என்னங்க. மலேசிய மன்மத ராசாக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும். ஆனால் என்ன. மணிப்பூர்காரர்கள் உங்கள் முதுகில் டின் கட்டி அனுப்பாமல் இருந்தால் சரி. அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்க மாட்டேன்.

அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் வரலாறு உலகத் தமிழர்களின் வரலாற்றில் தனித்துவம் பெற்ற வரலாறு ஆகும். மீண்டும் ஒரு வரலாற்றுக் கட்டுரையுடன் சந்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.10.2020

சான்றுகள்:

1. A History of Assam under the Ahoms 1st Edition 1981 Assam Publication Board Guwahati page 327-328.

2. Bhuyan S.K. Tungkhungia Buranji or A History of Assam 1681–1826 A.D. Department of Historical and Antiquarian studies in Assam.

3. Singh, K. S (2003) People of India: Assam Vol XV Parts I and II, Anthropological Survey of India, Seagull Books, Calcutta.

4. A Case Study in Tea Plantation in Assam, India. R. K. Kar. pp. 13-24 (12 pages) - https://www.jstor.org/stable/40460788.