22 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள் வரலாற்றில் மருது பாண்டியர்கள்

தமிழ் மலர் - 15.10.2020

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மருது பாண்டியார்களும் ஒரு வரலாற்றுச் சுவட்டைப் பதித்து சென்று இருக்கிறார்கள். 1818-ஆம் ஆண்டு. மருது பாண்டிய வீரர்கள் 72 பேர் பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். விடுதலை பெற்ற பின்னர், அவர்களில் சிலர், தாயகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை.

பினாங்கிலேயே தங்கி விட்டார்கள். உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்படியே மலாயா தீபகற்பத்தில் ஐக்கியமாகிப் போனார்கள். இவர்களின் வாரிசுகள் இன்றும் மலேசியாவின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள்.  இது ஓர் அரிய வரலாற்றுத் தகவல். தொடர்ந்து படியுங்கள்.


ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் ஆதவன் மறைவதே இல்லை. அது அவர்களின் காலா காலத்து வீர வசனம். நாயைச் சுடுவது என்றாலும் நடுத் தெருவில் நடக்க வைத்து தான் சுடுவார்களாம். பாளையங் கோட்டையில் மேஜர் பானர்மேன் (Colonel John Alexander Bannerman) சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

அதே சமயத்தில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் பேசிய வசனங்களையும் நாம் மறந்துவிட முடியாது. நினைவு கூர்கிறேன். எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம்.

வரி வட்டி கிஸ்தி...

யாரை கேட்கிறாய் வரி...

எதற்கு கேட்கிறாய் வரி...

வானம் பொழிகிறது...

பூமி விளைகிறது...

உனக்கு ஏன் கட்டவேண்டும் வரி...

எங்களோடு வயலுக்கு வந்தாயா?

நாற்று நட்டாயா?

ஏற்றம் இறைத்தாயா? அல்லது

கொஞ்சி விளையாடும்

எம்குல பெண்களுக்கு

மஞ்சள் அரைத்தாயா?

மாமனா? மச்சானா?

மானங் கெட்டவனே?

இந்த வசனத்தைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்குப் புகழ்பெற்ற வசனம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மனைத் தூக்கில் போட்டவர் மேஜர் பானர்மேன். அவரிடம் கட்டபொம்மன் பேசிய வசனங்கள்.

அதே அந்த மேஜர் பானர்மேன் தான் 1817-ஆம் ஆண்டு பினாங்கு தீவின் கவர்னராகவும் இருந்தவர். பினாங்குத் தீவில் ஒரு மாதாகோயிலைக் கட்டிக் கொண்டு இருந்தார்.

அந்தச் சமயத்தில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஓர் அறுபது வயது கிழவர் பானர்மேனைப் பார்க்க வருகிறார். உடல் தளர்ந்து உருக்குலைந்து போன அந்தக் கிழவருக்கு வயது வெறும் 33 தான். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் என்ன செய்வது. சின்ன வயதிலேயே அர்த்தம் இல்லாத ஓர் அடிமை வாழ்க்கை. கிழவராகிப் போய் விட்டார். அந்த இளைஞரின் பெயர் துரைச்சாமி. இவர் வேறு யாரும் அல்ல. அவர்தான் சிவகங்கையில் இருந்து பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட சின்ன மருதுவின் சின்ன மகன் துரைச்சாமி.

மருது பாண்டியர் என்பவர்கள் மருது சகோதரர்கள். வீரம் தோய்ந்த வீரத் தமிழர்கள். மரித்துப் போனாலும் வெள்ளைத் தோல்களிடம் மன்னிப்பு கேட்காத மறத் தமிழர்கள். தமிழ் மண்ணில் இருந்து வெள்ளைக்காரப் பிசுபிசுக்களை விரட்டுவதற்காக 1785-ஆம் ஆண்டில் இருந்து 1801 வரை விடுதலைப் போராட்டம் செய்தவர்கள்.

1801-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சிவகங்கைச் சீமையின் திருப்பத்தூர் (Tirupputhur) கோட்டை வளாகத்தில் தூக்கிலிடப் பட்டவர்கள்.

தூக்குக் கயிறுக்கு முன்னால் மருது நிற்கிறார். அப்போது தனக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் காட்ட வேண்டாம் என்று வெள்ளைக்காரர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

‘நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் போராடினேன். ஆனால் தோற்கடிக்கப் பட்டேன். பரவாயில்லை. அதற்காக என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

‘இந்தச் சின்னச் சிறுசுகளைப் பாருங்கள். இந்தச் சிறுவர்கள் என்ன தவறு செய்தார்கள். என்ன பாவம் செய்தார்கள். இவர்கள் ஆயுதம் எதையும் எடுத்தார்களா? இல்லை இவர்களால் ஆயுதங்களைத் தான் தூக்க முடியுமா?  

‘தயவு செய்து அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினார். சாகும் போதுகூட மருதுச் சகோதரர்கள் தங்கள் உயிர்களைப் பெரிதாக நினைக்கவில்லை.

மருதுவின் அந்தக் கடைசி ஆசை இருக்கிறதே, அதை இப்படியும் சொல்லலாம். கப்பல் கடலில் மூழ்குகிறது. கப்பல் தலைவன் அந்த ஆழ்கடலிடம் போய் மடிப் பிச்சை கேட்க முடியுமா. இங்கேயும் அந்த மாதிரி தான் நடந்தது.

சின்ன மருது; பெரிய மருது மகன்களும்; பத்துப் பன்னிரெண்டு வயது பேரப் பிள்ளைகளும் தூக்கிலிடப் பட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. இந்தச் சடங்குகளை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 74, 77, 94-ஆம் ரெஜிமெண்ட் துருப்புகள் நடத்தின.

கப்பம் கட்டாத ஒட்டு மொத்த பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயருக்குப் பயங்கரமான கோபம். மொத்தப் பாளையத்தையுமே தீ வைத்து அழிக்கத் திட்டம் போட்டார்கள். கண்ணில் தென்படுகின்ற அத்தனை ஆண்களையும் பிடித்தார்கள். மறுபேச்சு இல்லாமல் தூக்கில் போட்டார்கள்.

அதே திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில், பெரிய மருதுவின் மகன்கள் கருத்தம்பி; முல்லிக்குட்டித் தம்பி; சின்ன மருதுவின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உள்பட பலர் தூக்கு மரத்தைப் பார்த்தார்கள்.

சின்ன மருதுவின் கடைசி மகன் துரைச்சாமி. இவர் மதுரையில் ஒரு கிராமத்தில் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு வயது 15. பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அதற்குப் பின் அடுத்து அடுத்து நடந்தவை எல்லாம் வெள்ளைக்காரர்களின் அழித்தொழிப்புகள். நெஞ்சத்தை விம்மச் செய்யும் வரலாற்று வேதனைகள்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பிச் சென்ற ஊமைத் துரைக்கு (Oomaithurai) சின்ன மருது அடைக்கலம் கொடுத்தார் என்பது தான் வெள்ளைக்காரர்களின் உப்புச் சப்பு இல்லாத ஒரு காரணம்.

சரி. மருது சகோதரர்கள் தூக்கிலிடப் பட்டதைப் பற்றி சொல்கிறேன். இரண்டு மூன்று பேர்களாகக் இராணுவக் கூண்டிற்குக் கொண்டு வரப் பட்டார்கள். அவசரம் அவசரமாகத் தீர்ப்பு சொல்லப் பட்டது.

முதலில் சின்ன மருதுவைத் தூக்கில் போட்டார்கள். அடுத்தது சின்ன மருதுவின் மூத்த மகன். அடுத்து சின்ன மருதுவின் உற்றார் உறவினர்கள். அடுத்து போர் வீரர்கள். கடைசியாகத் தான் பெரிய மருது.

இப்படித் தான் மருது பாண்டிய வம்சத்தையே கூண்டோடு தூக்கில் போட்டார்கள். ஆக ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளின் சரித்திரங்கள் ஒரு சில நாழிகைகளில் அழிக்கப்பட்டு விட்டன.

அழுவதைத் தவிர சிவகங்கை மக்களுக்கு வேறு எதையும் செய்ய முடியாத நிலை. அந்தச் சமயத்தில் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி வேறு இடத்தில் இருந்தார். தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத வயது.

மருது சகோதரர்களைத் தூக்கில் போட்ட பின்னரும் ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மிஞ்சி நிற்கும் கொஞ்ச நஞ்ச தூசித் துகடுகளையும் அழிக்கத் திட்டம் போட்டார்கள்.

துரைச்சாமி போன்ற மண்ணின் மைந்தர்களை மேலைநாட்டு மக்கள் மறந்து போகலாம். ஆனால் நாம் என்றைக்கும் அவர்களை நாம் மறக்க மாட்டோம். துரைச்சாமி என்பவர் மறவர்ச் சீமை மன்னர்களின் மகன். அவர் பினாங்கில் ஒரு கைதியாக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த தன் சொந்தக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய அந்தக் கண்ணீர்க் கடிதம் கடைசி வரை போய்ச் சேரவே இல்லை. அதுவே வரலாற்றில் கறை படிந்த ஒரு துயரச் சுவடு.

தமிழ் மண்ணுக்காகப் போராடிய மருது வீரர்களின் வரலாறு என்பது காலத்தை மிஞ்சிய காப்பியங்கள். கொஞ்ச நேரம் அவர்களை நினைத்துப் பார்ப்போம். சின்ன மருது மகன் துரைச்சாமிக்கு நடந்தது மகா பெரிய அநியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். சகித்துக் கொள்ள முடியாத வரலாற்றுச் சோகம்!

ஆனால் கட்டபொம்மனைத் தூக்கில் போட்ட மேஜர் பேனர்மென் கடைசி கடைசியாக ரொம்பவுமே வேதனைப் பட்டார். நம் நாட்டுப் பினாங்கில்தான் காலரா நோயினால் 60-ஆவது வயதில் 1819 ஆகஸ்டு 8-ஆம் தேதி இறந்தார்.

அது  அவருடைய தலையெழுத்து, தலைவிதி என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. மேஜர் பேனர்மெனின் சமாதி பினாங்கில் இருக்கிறது. பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படலாம். போய்ப் பாருங்கள். தப்பு இல்லை.

1818-ஆம் ஆண்டில் துரைச்சாமி பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் 70 தமிழர்களும் நாடு கடத்தப் பட்டு இருக்கிறார்கள். அவர்களின் கைகளை விலங்குகளால் பூட்டி இருக்கிறார்கள். கால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடக்க முடியாமல் செய்து இருக்கிறார்கள்.

துரைசாமியைப் பற்றி கர்னல் வெல்ஷ் (Colonel Welsh) என்பவர் தன்னுடைய  'இராணுவ நினைவுக் குறிப்புகள்’ (Welsh, James (1830). Military Reminiscences: Journal of Nearly Forty Years' Active Service in the East Indies) எனும் நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

கடலிலே 76 நாட்கள் பயணம். கடைசியாக பினாங்குத் தீவில் கப்பல் கரை தட்டியது. பயணத்தின் போது இருவர் இறந்து விட்டார்கள். மருது பாண்டியரின் மகன் துரைச்சாமி பினாங்கில் சில ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தார் என்பது மலாயா தமிழர்களின் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம்.

சில ஆண்டுகள் கழித்து துரைச்சாமி பினாங்கில் விடுதலையாகி சென்னைக்கு போய் இருக்கிறார். அவர் ஏற்கனவே ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கி இருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனாலும் துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

(The Madura District Records letter dated 18-5-1891 volume 4669- pages 99 & 100)

துரைச்சாமி விடுதலையாகி மதுரைக்குப் போனதும் மதுரையைச் சுற்றி இருந்த கிராமங்களில் தன் குடும்பத்தையும் தன் சொந்த பந்தங்களையும் தேடி அலைந்து இருக்கிறார் என்று மற்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுப் போன எந்த ஓர் உறவையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளில் மனம் உடைந்து போய் ஓர் அனாதையாகவே இறந்து போனார்.

அவருக்காக ஒரு சின்ன நினைவாலயத்தைக் கிராம மக்கள் கட்டி இருக்கிறார்கள். இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கின்றன.

ஒரு முக்கியமான தகவல். சிவகங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட சிலர், விடுதலை ஆனதும் தமிழ்நாட்டிற்குத் திரும்பிப் போகவில்லை. சொல்லி இருக்கிறேன். பினாங்கிலேயே தங்கி விட்டார்கள். கெடா, பினாங்கு பகுதிகளுக்குப் போய் இருக்கிறார்கள்.

அங்கேயே கொஞ்ச காலம் வாழ்ந்து இருக்கிறார்கள். அங்கே இருந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து இருக்கிறார்கள். அப்படியே மலாயா தீபகற்பத்திலும் ஐக்கியமாகிப் போனார்கள். அப்படியே வாரிசுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் இன்றும் மலேசியாவின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள்.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மருது பாண்டியார்களும் ஒரு வரலாற்றுச் சுவட்டைப் பதித்து சென்று இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம். பெருமை கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.10.2020

சான்றுகள்:

1. K Rajayyan, South Indian Rebellion: The First War of Independence 1800-1801.

2. Govindarajan, Vinita. Remembering the Maruthu Pandiyar brothers, the leaders of the South Indian Rebellion of 1801.

3. Rajarajan, R.K.K. (2019). Linking the ancient with the modern: Rama-Laksmana and the Marutu Brothers analogy.



21 அக்டோபர் 2020

இந்திய ஜாவானிய நாட்டியச் சிறுமிகள் - 1863

யோக்ஜாகர்த்தா சுல்தானகம் (Yogyakarta Sultanate) 1755-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா, ஜாவா தீவை ஆட்சி செய்த ஒரு முடியாட்சி. அரண்மனைச் சபையில் இந்திய ஜாவானிய பெண்களின் நாட்டியங்கள் நடைபெறுவது வழக்கம். (Ooi, Keat Gin - 2004)

யோக்ஜாகர்த்தா சுல்தானகத்தை கெரத்தோன் நாகயோகயாகெர்தோ ஹாடினிங்கிராத் (Keraton Ngayogyakerto Hadiningrat) என்று ஜாவானிய மொழியில் அழைத்தார்கள். 1945-ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தோனேசியா சுதந்திரம் பெற்றதும் இந்தோனேசியக் குடியரசில் ஒரு மாநிலப் பகுதியாக இணைந்தது. (Kahin, Audrey - 2015)

Tari Rakyat, the popular dances of the commoner

யோக்ஜாகர்த்தா சுல்தானகம் முன்பு காலத்தில் மத்தாராம் பேரரசின் (Mataram) ஒரு பகுதியாக இருந்தது. மத்தாராம் பேரரசு ஒரு ஜாவானிய இந்து பௌத்தம் கலந்த (Javanese Hindu–Buddhist) பேரரசு. அந்தப் பேரரசை மேடாங் பேரரசு (Medang Kingdom) என்றும் அழைத்தார்கள்.

கி.பி. 850-ஆம் ஆண்டுகளில் மேடாங் பேரரசு இரு அரசுகளாகப் பிரிக்கப் பட்டது. ஜாவாவில் ஓர் அரசு. ராக்காய் பிக்காதான் (Rakai Pikatan) என்பவரின் தலைமையிலான ஓர் அரசு. இது சிவ வழிப்பாட்டு அரசு (Shivaist Buddhist dynastyynasty). மேடாங் அரசு என்று அழைக்கப்பட்டது. இந்த அரசுதான் பிரம்பனான் ஆலயத்தை கட்டியது.

Dancers of the Sultan of Yogyakarta. Java. Dutch East Indies (1863). Photographer: I van Kinsbergen

மற்றொன்று சுமத்திராவில் பாலபுத்ரதேவா (Balaputradewa) என்பவரின் தலைமையிலான ஸ்ரீ விஜய புத்த வழிபாட்டு அரசு (Srivijaya Buddhist Buddhist Buddhist dynastyynasty). இரண்டுமே சக்தி வாய்ந்த அரசுகள்.

இவற்றில் ஜாவா மேடாங் அரசின் வழித்தோன்றல் தான் ஜொக்ஜாகர்த்தா சுல்தானகம். சமயம் மாறினாலும் பாரம்பரிய நடனங்கள்; கலாசாரப் பின்னணிகளில் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தன.

Dancers at a Dutch recreation centre 1890

பெரும்பாலான நாட்டியப் பெண்கள் பொட்டு வைத்து நாட்டியம் ஆடுவது வழக்கம். அரசவையில் பதின்ம வயது சிறுமிகளின் நாட்டியங்கள் அடிக்கடி நடைபெற்றன. 1863-ஆம் ஆண்டு யோக்ஜாகர்த்தா சுல்தானகத்தைச் சேர்ந்த நாட்டியச் சிறுமிகளின் படத்தைப் பார்க்கிறீர்கள்.

படத்தை எடுத்தவர் ஐசிடோர் வான் கின்ஸ்பெர்கன் (Isidore van Kinsbergen). டச்சுக்காரர். Photographer: Isidore van Kinsbergen (1821–1905)

Permission details: This media file originates from the image database media-kitlv.nl of the Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies (KITLV). Date: 1863

Repronegative. Portrait of two young Balinese dancers 1929

Sources:

1. Dancers of the sultan in Jogjakarta, Leiden University Library, Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies. Isidore van Kinsbergen - KITLV, image 408103 Collection page Southeast Asian & Caribbean Images (KITLV)

2. https://artsearch.nga.gov.au/detail.cfm?irn=191641

3. Ooi, Keat Gin (2004). Southeast Asia.[Volume two, H-Q]. [Volume one, A-G] : a historical encyclopedia from Angkor Wat to East Timor.

4. Kahin, Audrey (2015). Historical dictionary of Indonesia. Lanham : Rowman & Littlefield.




மலாயா தமிழர்கள்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்

தமிழ் மலர் - 21.10.2020

மரத்தில் மலர்ந்து மண்ணில் உதிரும் சண்பகப் பூக்கள் மண்ணுக்குச் சொந்தம். மண்ணில் மலர்ந்து மண்ணில் உதிரும் சரித்திரப் பூக்கள் மனிதனுக்குச் சொந்தம். சண்பகப் பூக்கள் இதமான சண்பக மணங்களைத் தொடுகின்றன. சரித்திரப் பூக்கள் இனமான சரித்திரங்களைத் தோண்டுகின்றன. அந்தத் தேடல்களில் ஒன்றுதான் சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள். பூஜாங் சமவெளியில் புதைந்து கிடக்கும் சொப்பனப் பூக்கள்.

ஒரு காலக் கட்டத்தில் நுசாந்தாரா தீபகற்பத் தீவுகளை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று அழைத்தார்கள். நல்ல ஒரு நெருக்கம். நல்ல ஓர் இறுக்கம்.

கிந்தா பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட
தமிழர் இனம் சார்ந்த அரும் கலைப் பொருட்கள்

அந்தச் சுவர்ண பூமி என்கிறச் சொல் இருக்கிறதே; அந்தச் சொல் தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வட பேராக் மாநிலப் பகுதிகளைக் குறிப்பிடும் ஒரு சரித்திரச் சொல்லாகவும் விளங்கியது.

Suvarnabhumi refers to the Southeast Asian Peninsula, including lower Burma and the Malay Peninsula. Suvarnadvipa the Golden Island or Peninsula, where dvipa may refer to either a peninsula or an island which may correspond to the Indonesian Archipelago, especially Sumatra.

பற்பல நூறு ஆண்டுகளாகச் சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவுகள். இன்னும் அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.

மகாபலிபுரத்தைக் கட்டிக் காத்தவர்கள் பல்லவ ராஜாக்கள். அந்த ராஜாக்களின் காலத்திற்கு முன்பு இருந்தே மலாயா தமிழர்களின் உறவுகள் தொடங்கி விட்டன. இன்னும் தொடர்ந்து வருகின்றன. தொடர்ந்தும் போகின்றன.

சுருங்கச் சொன்னால் விஜயாலய சோழன் என்பவர் தான் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். ஆனாலும் சோழப் பேரரசு காலத்திற்கு முன்பு இருந்தே உறவுகள் தொடங்கி விட்டன.

புக்கிட் பத்து பகாட் ஆலயம். டாக்டர் குவாரிட்ச் வேல்ஸ் (Dr. Quaritch Wales) எனும் ஆராய்ச்சியாளரால் 1936-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.

அந்த வகையில் மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் பூஜாங் சமவெளியின் வரலாறும் மிகவும் பழைமை வாய்ந்தது. பூஜாங் சமவெளியைக் கெடா மாநிலத்தின் புராதன அதிசயம் என்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பூஜாங் சமவெளி 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் பள்ளத்தாக்கில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்று தாராளமாக அழைக்கலாம். அது ஒரு தனி நாகரிகம். சுமேரிய நாகரிகம்; சிந்து நாகரிகம்; எகிப்திய நாகரிகம் என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி பூஜாங்கை பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். தப்பு இல்லை.

அதே சமயத்தில் ஒன்றை மறந்துவிட வேண்டாம். பூஜாங் சமயவெளியின் நாகரிகம் மேற்கு ஆசிய - இந்திய - சீன நாகரீகங்களுடன் தொடர்பு உடையது.

Image of a dancer sculpted in high relief, found at Batu Lintang, south of Kedah.

அது மட்டும் அல்ல. கம்போடியா, அராபியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்து உள்ளன. இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக அந்த நாகரீகம் நீண்டு நெடிந்து போகிறது. அந்தக் காலக் கட்டத்தில் கடல் வழி வாணிபம் சிறந்து விளங்கியது. வணிகச் செல்வங்கள்  நிறைந்து வழிந்தன.

தென்னிந்தியாவை ஆட்சி செய்த பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்கும் கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் நெடும் காலம் நீடித்து வந்து உள்ளன.

இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை, மலாயாவுக்கு வந்த கடலோடிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்து இருக்கிறது.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் சமவெளி பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பூஜாங் சமவெளியின் பரப்பளவு 224 சதுர கி.மீ. பள்ளத்தாக்கின் வழியாக மெர்போக் நதி நளினம் காட்டுகிறது. பசுமை புரட்சி செய்கிறது. கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் தான் பூஜாங் சமவெளி.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் சமவெளியைக் கடாரம் என்று அழைத்து இருக்கிறார்கள். இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது.

Ganesha statue found in Bujang Valley

பூஜாங் சமவெளி ஒரு வியாபார மையமாகவும்; ஆட்சி செய்யும் இடமாகவும் இருந்து இருக்கிறது.

இராஜேந்திர சோழனின் ஆட்சி காலம் கி.பி.1012 - கி.பி.1044. இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார். இந்தக்  கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சி காலத்தில் தான் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியக் காவியம் எழுதப்பட்டது.

பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று.

இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

Cambodia, Myanmar, Thailand, Laos, Vietnam, Malaysia, Indonesia;
unmistakable historical evidence of Hindu-Buddhist influence

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

இதில் 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று பொருள்.

அந்தக் காலத்தில் பூம்புகார் பிரசித்தி பெற்ற நகரமாக விளங்கியது. அதே போல கடாரமும் சிறந்து விளங்கியது. தமிழர்களுக்குப் பெருமையைச் சேர்த்தது.

இராஜேந்திர சோழன் தான் அயல் நாடுகளுக்குப் பெரும்படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன். கங்கை கொண்ட சோழன் என்றும் இவரை அழைப்பார்கள். கடாரத்தின் மீது சோழ மன்னன் படை எடுத்தான் என்று படித்து இருப்பீர்கள். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடாரத்தை 'கடாஹ' என்று ஒரு குறிப்பும் சொல்கிறது.

Archaeologists at Sungai Batu. (Right) A Buddha statue at the Lembah Bujang Museum.

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவைச் சேர்ந்த ஸ்ரீ விஜய பேரரசு; பூஜாங் சமவெளியையும் ஆட்சி செய்து வந்தது. ஸ்ரீ விஜய பேரரசு சுமத்திராவின் பலேம்பாங்கில் தலைமையகம் அமைத்து இருந்தது.

அந்த ஸ்ரீ விஜய பேரரசு சாம்ராஜ்யத்திற்கு சங்கர ராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் அரசராக இருந்தார். 1025 ஆம் ஆண்டு இராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு நடந்தது .

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்ததற்கு காரணம் என்ன? கடாரத்தின் ஆளுமை ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்ததே காரணம்.

தமிழ் நாட்டுச் சோழர்களுக்கும் சுமத்திராவின் ஸ்ரீவிஜயா அரசர்களுக்கும் நல்ல நட்பு முறை உறவுகள் இருந்து வந்து உள்ளதாகக் கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளன.

Reconstruction of a candi near the Lembah Bujang Museum.

அப்புறம் ஏன் இராஜேந்திர சோழன் படை எடுக்க வேண்டும். சீன அரசுக்கும் சோழ அரசுக்கும் இடையே இருந்த வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீ விஜய பேரரசிற்கு இருந்து இருக்கலாம்.

இந்தப் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீ விஜய பேரரசின் எந்த நிலப் பகுதியும் சோழ அரசுடன் சேர்க்கப் படவில்லை. விஜயதுங்கவர்மனே மீண்டும் ஸ்ரீ விஜய பேரரசின் அரசனாகச் சோழர்களால் முடி சூட்டப் பட்டார்.

அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1070 - கி.பி.1120 ) காலத்திலும் கடாரத்தின் மீது படையெடுப்பு நடந்து உள்ளது. ஒரு சமரசத் தீர்வு காண்பதற்காக இந்த இரண்டாம் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப் படுகிறது.

Artist’s impression of a Chinese imperial treasure fleet.

பூஜாங் சமவெளியில் உள்ள கோயில்களின் காலக் கட்டம் முதலாம் நூற்றாண்டில் தொடங்கி 14-ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இந்துக் கோஉஇல்களும் உள்ளன. புத்த விகாரங்களும் உள்ளன. இது வரை ஏறக்குறைய 50 கோயில்களைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப் பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது புக்கிட் பத்து பகாட் ஆலயம் ஆகும். டாக்டர் குவாரிட்ச் வேல்ஸ் (Dr.Quaritch Wales) எனும் ஆராய்ச்சியாளரால் 1936-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. இவருக்கு அடுத்து அல்ஸ்டார் லேம்ப் (Alastar Lamp) எனும் ஆராய்ச்சியாளர் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிதலம் அடைந்த ஆலயத்தின் முழுப் பகுதியை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்த ஆலயத்தில் இருந்து பல பகையான சிலைகள், பல பகையான முத்து மணிகள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த ஆலயம் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டு இருக்கலாம் பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் மெர்போக் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தின் அருகில் கம்போங் பெண்டாலாம் டாலாம் (Kampung Bendang Dalam) எனும் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1960-ஆம் ஆண்டில் அகழ் ஆய்வின் போது ஓர் ஆலயம் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் சிவலிங்கம், சிதைவு அடைந்த சீன நாட்டுக் கற்கலைப் பொருட்கள், சிற்பங்கள் கண்டு எடுக்கப் பட்டன. இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டு இருக்கலாம்.

சண்டி பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங் எனும் பல ஆலயங்களும் இங்கே உள்ளன. பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் புத்த சமயமும் மாறி மாறி வந்து உள்ளன. காலக் கட்டங்களும் மாறி மாறி வருகின்றன.

கடார மண்ணின் இறுகிப் போன பல்லவ இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் மாயம் காட்டுகின்றன. கடார மண்ணைப் பற்றி நம் நாட்டில் தமிழ் அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்து உள்ளனர்.

அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். அந்த அறிஞர்களை ஊழி ஊழி காலத்திற்கும் ஆராதனை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.10.2020

References:

1. Schafer, Edward H. (1963). The Golden Peaches of Samarkand: A Study of Tang Exotics. University of California Press

2. Gerini, G. E. (1909). "Researches on Ptolemy's geography of Eastern Asia (further India and Indo-Malay archipelago)". Asiatic Society Monographs. 1: 77–111.

3. Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 177–184

4. The Travels of Pedro Teixeira, tr. and annotated by W.F. Sinclair, London, Hakluyt Society, Series 2, Vol.9, 1902, p.10;

5. H. R. Wagner and Pedro de Unamuno, "The Voyage of Pedro de Unamuno to California in 1587", California Historical Society Quarterly, Vol. 2, No. 2 (Jul., 1923), pp. 140-160, p.142.



 

20 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு கிராமத்தின் மண்வாசனைகள் - 1863

பினாங்குத் தீவில் ஒரு கிராமத்தின் புகைப்படம். 157 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப் பட்டது. வீடுகளுக்கு வெளியே கிராமவாசிகள். கேமராவை நோக்கி அழகாக ‘போஸ்’ கொடுக்கிறார்கள். ஆண்களில் இருவர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் போல தோன்றுகிறது. பின்புறத்தில் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு மாட்டு வண்டி. அந்தக் காலத்து வேட்டி, தலைப்பாகை, வெள்ளைத் துண்டுகள் சகிதம் ஐந்து தமிழர்கள். அசல் தமிழ்நாட்டு மண்வாசனை. தமிழ்நாட்டு மகிழ்ச்சி தோரனை.

Photograph of a view of a village located near Penang, Malaysia. Two wooden buildings with thatched roofs are located on the left side of the photograph. A group of people stand outside the buildings, looking towards the camera. Two of the men appear to be soldiers. In the middle ground is a cart. In the background are more wooden buildings and a large number of trees.

1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். இந்தப் படம் 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு இருந்தாலும்; அந்தப் படத்தில் உள்ள தமிழர்கள் அந்தப் பகுதிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகி இருக்கலாம். அவர்களின் தோற்றம்; சுற்றுப்புறச் சூழல்; அவர்களின் அணிகலன்கள்; அவர்களுடன் இருப்பவர்கள். இவற்றைக் கொண்டு அவர்கள் அந்தப் பகுதியில் குடியேறி நீண்ட நாட்கள் ஆகி இருக்கலாம்.

Image taken by Kristen Feilberg, a Danish. Although this picture was taken in 1863; It may have been many years since the Tamils ​​in the film came to the area. Consideration must be taken on the originality; the environment; the accessories; and those people around them. With these linings we may conclude that these Tamil people may have settled in the area for a long time.

1869-ஆம் ஆண்டு பினாங்கு தீவிற்கு இங்கிலாந்து இளவரசர் ஆல்பிரட் வருகை தந்தார். அதை நினைவுகூரும் வகையில் அவருக்கு வழங்கிய புகைப்படத் தொகுப்பில் இருந்து இந்தப் படங்கள் மீட்கப் பட்டன.

These images are from the album presented to Prince Alfred, Duke of Edinburgh by the Bishop of Penang in remembrance of his 1869 visit.

1790-ஆம் ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தின் உள்கட்டமைப்புகளுக்கு முதுகெலும்பாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளாய்க் கிடந்த வனாந்திரங்களைச் செதுக்கிச் செப்பனிட்டு சீர் செய்தவர்கள். அந்தக் காடுகளில் சாலைகளையும் மரப் பாலங்களையும் அமைத்தவர்கள். இவர்களைப் போய் வந்தேறிகள் என்று அழைக்கலாமா. நியாயம் மரித்துப் போகிறது..

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.10.2020

Sources:

Malaya Tamils: Fragrance in a Penang Village - 1863

1. Lynn, H.L., 2017: p. 22), Lynn, H.L. (2017). Planting Empire, Cultivating Subjects: British Malaya, 1786-1941. Cambridge: Cambridge University Press.

2. Loh, W.L., 2009: p. 10). Loh, W.L. (2009). Penang: Region and Networks. Neil, K., Khoo, S.N., Loh, W.L. & Yeoh, S.G., (Eds.).

3. View of a village Penang 1863-69 - https://www.rct.uk/collection/2702914/view-of-a-village-penang

 


19 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: கங்கா நகரம் கலைப்பொருட்கள்

தமிழ் மலர் - 19.10.2020

கங்கா நகரம். பண்டைய மலாயாவில் மிகப் பழைமையான அரசு. பழம்பெரும் பூமி. பழம் பெரும் பச்சை மண். பழம் பெரும் வரலாற்றுக் கலசம். அரிய பெரிய கலைநயனங்களைப் பாடிச் சென்ற ஓர் அழகிய வரலாற்றுக் காவியம். நேற்று முந்தாநாள் பூத்த பூஞ்சைக் காளான் அல்ல. 1800 ஆண்டுகளுக்கு முன்னால் மலையூர் மண்ணில் பொன்னொளிர் வீசிய பொன்னுறு மண். மலாயா தமிழர்களின் கதைகளைச் சொல்லும் மற்றும் ஓர் இதிகாசம்.

கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் பரவிப் பெருகி படர்ந்து அடர்ந்து நின்ற ஒரு சிற்றரசு. இதை ஒரு சிற்றரசு என்று சொல்வதைக் காட்டிலும் பேரரசு என்று சொல்வதே சரி. ஏன் தெரியுங்களா?

இந்த அரசு புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளை மட்டும் ஆட்சி செய்யவில்லை. தைப்பிங், கோலகங்சார், சுங்கை சிப்புட், சிம்மோர், ஈப்போ என ஒரு பெரிய நிலப் பகுதியையே ஆட்சி செய்து இருக்கிறது. சும்மா ஒன்றும் சொல்லவில்லை. சரியான சான்றுகள் உள்ளன. ஒரு செருகல்.

ஆடு மாட்டைக் கடிப்பது. தெரிந்த விசயம். மாடு ஆட்டைக் கடிப்பது. தெரிந்த விசயம். இது ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் ஆதிகாலத்தில் இருந்து தெரிந்த விசயம். ஆனால் ஆடுகளும் மாடுகளும் கூட்டு சேர்ந்து கொண்டு மனுசனைக் கடித்தால் எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அப்புறம் ராமர் பாலத்தையும் ராமர் காப்பியத்தையும் கடிப்பதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம். புரியவில்லை. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. வயிற்றெரிச்சல். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. பல்லவர்களின் கலைப்பொருட்கள். தமிழர்களின் தங்க ஆபரணங்கள். சீனர்களின் பீங்கான் மங்குகள். இந்தோனேசிய அரசுகளின் பின்னல் வேலைபாடுகள்.

அவற்றில் சில பொருட்கள் ஈப்போவிலும் இன்னும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது.

அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசிய கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். ஒரு செருகல்.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம். 1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள்.

கரடுமுரடான காடுகள் அழிக்கப் பட்டன. பச்சைப் பசும்புல் லாலான் மேடுகள் எரிக்கப் பட்டன. ஓடைகள், சமவெளிகள், பொட்டல் காடுகள் போன்றவை பள்ளங்கள் தாண்டிய பாலைவனமாகின. அங்கே ஈய லம்பங்கள் ஈசல் காடுகளாய் இளைப்பாறின. ஈயம் விளையாடி சீனர்கள் பலர் பெருத்த பணக்காரர் ஆனார்கள். அது ஈப்போ நகரின் ஈய வரலாறு.

காடு விளைந்தாலும் மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் கிந்தா பள்ளத்தாக்கில் அப்படி அல்ல. கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் விட்டன என்பதுதான் வேதனையான விசயம். அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம்.

இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலங்கச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.

பேராக் ஆற்றின் துணை நதிகளான கிந்தா மற்றும் பெர்ணம் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் பெரிய பெரிய வெள்ளங்கள் ஏற்படுவது உண்டு. தவிர ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அந்தப் பள்ளத்தாக்கில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்ளன. அதனால் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த வழிப்பாட்டுத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆழத்தில் மேலும் ஆழமாகப் புதைப்பட்டுப் போய் இருக்கலாம்.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாகக் காலம் காலமாக வண்டல் மண் குவிந்து வருவதால் கங்கா நகரத்தின் பண்டைய குடியிருப்புகள் புதைபட்டு இருக்கலாம்.

இருந்தாலும் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெண்கலச் சிலைகளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்தச் சிலைகள் அனைத்தும் தரைப் பகுதியில் இருந்து கீழே மிக ஆழமான இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டவை.

கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். சொல்லி இருக்கிறேன். இவை அனைத்தும் கி.பி. 200-ஆம் ஆண்டு தொடங்கி 1025-ஆம் ஆண்டு வரை நடந்தவை. இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு செய்தி. கங்கா நகரத்தைப் பற்றிய விவரங்களைப் பாட நூல்களில் அதிகமாகப் பார்க்க முடியாது. அதற்காகப் பாட நூல்களை எழுதியவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஊதியத்திற்கு வஞ்சகம் இல்லாமல் ஊழியம் செய்வது நல்ல ஒரு பண்பாகும். இது என் தனிப்பட்ட கருத்து.

தவிர அவசரத்தில் அவர்கள் கங்கா நகரத்தை மறந்து போய் இருக்கலாம். அப்படியும் பார்க்க வேண்டும் இல்லீங்களா. எது எப்படியோ கங்கா நகரம் என்கிற ஓர் அரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் ஒரு வேதனையான உண்மை. இந்த வரலாற்றுக் கொடுமையை எழுதும் போது மனசு ரொம்பவும் வேதனைப் படுகிறது.

கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

(6. S. Durai Raja Singam 1962)

புருவாஸ் நகரில் இருந்த ஒரு புராதன சாம்ராஜ்யம் (சிற்றரசு) அழிந்து போய் விட்டதாக வரலாற்று அறிஞர்கள் பல காலமாகச் சொல்லி வந்தார்கள். இருந்தாலும் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. 1849-ஆம் ஆண்டு அதற்கு ஒரு விடிவெள்ளி.

கார்னல் ஜேம்ஸ் லோ (Colonel James Low) எனும் ஆங்கிலேயர் புருவாஸ் பகுதியில் முதல் ஆய்வைச் செய்தார். அந்த இடத்தில் கங்கா நகரம் எனும் ஒரு சிற்றரசு இருந்தது என்பதை உறுதிப் படுத்தினார். கார்னல் ஜேம்ஸ் லோ (1795-1852) என்பவர் பினாங்கு புரவின்ஸ் வெல்லஸ்லி மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். அவர் இங்கிலாந்திற்குத் திரும்பிப் போன பிறகு அந்த ஆய்வுகள் அப்படியே நின்று போயின. (Citation: JMBRAS 1940)

HG Quaritch Wales: pioneer archaeologist, art historian and war correspondent

பின்னர் 1940-ஆம் ஆண்டுகளில் குவாட்ரிச் வேல்ஸ் (H.G. Quaritch Wales) எனும் மற்றோர் ஆங்கிலேயர் மலாயாவுக்கு வந்தார். கங்கா நகரத்தைப் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்தார். பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்குச் சொன்னவரும் இவர்தான். இவரும் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்களை உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார்.

இவர் ஒரு வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதன் பெயர் மாபெரும் இந்தியாவின் உருவாக்கம். (Making of Greater India: a study in South-East Asian culture change) அந்த நூலில் கங்கா நகரம் என்பது ஓர் இந்து அரசாங்கம் என்று எழுதி இருக்கிறார்.

1924-ஆம் ஆண்டில் தாய்லாந்தின் மன்னராக ராமா VI (Rama VI) என்பவர் இருந்தார். அப்போது அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் குவாட்ரிச் வேல்ஸ். நினைவு படுத்துகிறேன்.

கோலாலம்பூர் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில்
அவாலோகிதேஸ்வரா (Avalokitesvara) சிலை

இவரும் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்களை உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார். ஆக 1800 ஆண்டுகளுக்கு முன்னால் கி.பி.200-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1025-ஆம் ஆண்டு வரையில் புருவாஸ் பகுதியில் இந்தியர்கள் சார்ந்த அரசு இருந்து இருக்கிறது என்பதை கார்னல் ஜேம்ஸ் லோ; குவாட்ரிச் வேல்ஸ் இருவருமே ஆணித் தரமாகவும் உறுதியாகவும் சொன்னார்கள்.

அதன் பின்னர் புருவாஸ் பகுதியில் வாழ்ந்த கிராம மக்கள் அங்கே பல புராதனக் கலைப் பொருட்களைத் தோண்டி எடுத்து இருக்கின்றார்கள். அந்தக் கலைப் பொருட்கள் வயல் வரப்புகளில் கிடைத்து இருக்கின்றன. அப்புறம் சன்னம் சன்னமாய்க் கங்கா நகரத்தைப் பற்றிய பற்பல உண்மைகளும் தெரிய வந்தன.
 
புருவாஸ் காட்சியகத்தில் 128 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்கி இருக்கிறது. இது யாருடைய காலத்து ஆயுதம் என்று தெரியவில்லை. நிச்சயம் கங்கா நகரத்து ஆட்சியாளர்களின் ஆயுதப் பொருளாக இருக்காது. ஏன் என்றால் பீரங்கிகள் 17ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.

தவிர நீண்ட வாள்கள், கிரீஸ் கத்திகள், சில்லறை நாணயங்கள், ஈயக் கட்டிகள், சீனாவின் பீங்கான் மங்குகள் (Pottery from the Ming Dynasty), பெரிய ஜாடிகள் போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன. தமிழர்கள் பய்ன்படுத்திய ஜாடிகள். இவை அனைத்தும் புருவாஸில் கண்டு எடுக்கப் பட்டவை.

நிறைய கல் வெட்டுகள், குறியீடுகள், குறிப்புகள், சின்னச் சின்னச் சிலைகளும் கிடைத்தன. அவற்றில் தமிழர்களின் அடையாளங்கள் காணப் படுகின்றன. அதன் பின்னர் மலாயா வரலாற்று ஆசிரியர்களும் கங்கா நகரத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலோச்சிய கங்கா நகரச் சிற்றரசு புருவாஸ் பகுதியை மட்டும் நிர்வாகம் செய்யவில்லை. ஈப்போவில் இருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கும் பெங்காலான் (Pengkalan) எனும் இடத்தையும் ஆட்சி செய்து இருக்கிறது.

ஈப்போ பெங்காலான் எனும் இடத்தில் தான் ஆறாம் நூற்றாண்டுப் புத்தர் சிலை; லிங்க்ச் சிலைகளும் கண்டெடுக்கப் பட்டன. 1959-இல் நடந்த நிகழ்ச்சி.

தவிர 1936-ஆம் ஆண்டு பீடோர் நகரில் மேலும் ஒரு சிலை கிடைத்தது. முன்பு அங்கே ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கம் (Anglo Oriental Tin Mines) இருந்தது. அந்த இடத்தில் ஈயம் தோண்டும் போது 79 செண்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை கிடைத்தது. அந்தச் சிலைக்கு அவாலோகிதேஸ்வரா சிலை (Avalokitesvara) என்று பெயர். இப்போது கோலாலம்பூரில் இருக்கும் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

1962-ஆம் ஆண்டு பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில்
(Jalong, Chemor, Perak, Malaysia) கண்டு எடுக்கப்பட்ட அகத்தியர் சிலை

மலாயா வரலாற்றில் இருந்து எவ்வளவோ தமிழர் சார்ந்த இந்திய வரலாற்றுப் பின்னணிகள் மறைந்து போய் விட்டன. மறைந்தும் வருகின்றன. தமிழர்கள் சார்ந்த ஆவணங்களை முடிந்த வரையில் மீட்டு எடுப்போம். நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சீதனமாக விட்டுச் செல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.10.2020

சான்றுகள்:

1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13

2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.

3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

4. Malayan Place Names, S. Durai Raja Singam, Liang Khoo Printing Company, 1962 - Malaya - 253 page -186).

5. Kulke, Hermann; Kesavapany, K.; Sakhuja, Vijay (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on Chola naval expeditions to Southeast Asia. Institute of Southeast Asian Studies.