26 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள் பினாங்கு துறைமுகம் 1860

1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவு கட்டுமானத்தின் முன்வைப்பு. பினாங்கு முன்னோடி பிரான்சிஸ் லைட் அவர்களின் முன்னெடுப்பு. அதுவே தமிழர்களின் முதன்மைப் பங்களிப்பு. பினாங்கு தமிழர்கள் தான் பினாங்கு கொடிமலையில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். பினாங்கு கொடி மலையில் இருந்து குடி நீரை மாட்டு வண்டிகளில் தோம்பு கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜார்ஜ் டவுன் நகர் மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.

காடுகளாய்க் கிடந்த பினாங்கை மக்கள் வாழும் வசிப்பிடமாக மாற்றிக் காட்டினார்கள். பினாங்கு வனப்பூங்காவை 150-ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புச் செய்தார்கள். குட்டித் துறைமுகமாக இருந்த பினாங்கு துறைமுகத்தைப் பெரிய பரிமாணத்தில் வார்த்துக் காட்டினார்கள்.   பினாங்கு சாலைகளின் கட்டுமானத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்களே. ரொம்ப வேண்டாம்.

பாயாம் லெப்பாஸ் விமானத் திடலை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். பினாங்கு ஜெட்டி துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். கொடிமலைக்கு இரயில் பாதையைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள் தான்.

கொட்டும் மழையிலும் கடிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி தலைப்பாகை கட்டிக் கொண்டு பினாங்கு தீவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். பினாங்குத் தீவின் வளப்பத்திற்கு உறுதுணையாக இருந்து உள்ளார்கள்.

ஆக இவர்களைப் போய் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே. என்னங்க சொல்வது. இதில் இப்போது ரவிக்கையும் சேலையும் பாரம்பரிய உடை என்று வேறு சொல்கிறார்கள். ஒன்றுமே புரியலீங்க. எங்கேயாவது மனுசன் இல்லாத காட்டுக்கு ஓடிப் போகலாம் போல இருக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.10.2020

சான்றுகள்:

1.  In 1786, Francis Light established Penang the first British trading post in the Far East. In 1826, Penang, along with Malacca and Singapore, became part of the Straits Settlements under the British administration in India, moving to direct British colonial rule in 1867. - https://penangport.gov.my/en/public/history-penang-port

2. Penang Then & Now: A Century of Change in Pictures - https://arecabooks.com/product/penang-then-now-a-century-of-change-in-pictures/

3. Penang under the East India Company 1786-1857 and Penang at War 1914-1946.

4. The South Asian Cultural Impact Upon Penang - Penang Tourism





24 அக்டோபர் 2020

போர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள்

தமிழ் மலர் - 24.10.2020

மலேசியாவின் களிமந்தான் மழைக் காடுகள். பழைமை பச்சைக் காடுகள். பசுமை பச்சைக் கம்பளங்கள். பச்சைவெளி பழம் குவியல்கள். ஈரம் பாய்ந்த எழில் கோலங்கள்.

கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய் கூடிக் குலவி வாழ்கின்ற பச்சைக் காடுகளின் பசுங்காட்டு வெளிகள். பரிசுத்தமான இயற்கையின் இனியச் செல்வங்கள். பச்சையில் சங்கமிக்கும் பாரிஜாத உச்சங்கள். அனைத்துமே சொற்களில் வடிக்க முடியாத கானகத்துச் கவிக் காவியங்கள்.

A traditional costume show of Dayak Hindu Kaharinga

இந்தக் களிமந்தான் காடுகள் போர்னியோ தீவில் உள்ளன. மலேசியாவிற்குச் சொந்தமான நீர்நிலைக் காடுகள். இங்கேதான் ஓர் அதிசயம் நடக்கிறது. உலக இந்துக்கள் பலருக்கும் தெரியாத ஓர் அதிசயம். என்ன அதிசயம் தெரியுங்களா?  

இந்தக் காடுகளில் வாழும் டயாக் பூர்வீக மக்கள் ஒரு வகையான இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதத்தின் பெயர் காரிங்கான் (Kaharingan) இந்து மதம். உலகளாவிய இந்து மதத்தின் பின்னணியில் உருவான ஓர் இயற்கை மதம். காரிங்கான் இந்து மதம்.

பாலித் தீவில் பல இலட்சம் இந்தோனேசிய இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட இந்து சமயத்தை உருவாக்கிப் பின்பற்றி வருகின்றார்கள் (Agama Hindu Dharma - Tri Hita Karana). அதைப் போலவே களிமந்தான் காடுகளில் (Ketapang Regency, West Kalimantan) வாழும் காஜு எனும் டயாக் (Dayak Ngaju) பிரிவினரும் ஒரு தனித்துவமான இந்து சமயத்தை (Folk Hinduism) உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள்.

இறைவனே உச்சத்தில் உயர்வானவர்; உயிர்களில் ஒப்புயர்வானவர் (One Supreme God) எனும் கொள்கையில் காரிங்கான் இந்து மதம் செயல்பட்டு வருகிறது.

Dayak Ngaju Native Village, Bukit Rawi, Central Kalimantan
Sandung Dayak ancestral bone houses Tiwah Hindu Kaharingan Kalimantan

போர்னியோவில் பலவகை டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 200 வகையான டயாக் மக்கள். அந்த வகையில் மத்திய களிமந்தான் காடுகளில் காஜு எனும் டயாக் பிரிவினர் உள்ளனர். அவர்கள் பின்பற்றும் இந்து மதமே காரிங்கான் இந்து மதம் ஆகும்.

டயாக் என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். தெரிந்த விசயம். இந்தப் பழங்குடி மக்களில் 250 துணை இனக் குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆஸ்திரோனேசிய (Austronesian) மொழியைப் பேசுகின்றார்கள். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், களிமந்தான் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

(Belford, Audrey (September 25, 2011). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". New York TImes.)

காஜு டயாக் மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.


A child dressed up for a festive Hindu dance in Ubud, Bali

இஸ்லாம்; புரொடெஸ்டனிசம்; கத்தோலிக்கம்; இந்து; புத்தம்; கான்பூசியசம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன.
 
தீவா பண்டிகை (Tiwah) என்பது காஜு டயாக் மக்களின் திருவிழாவாகக் கருதப் படுகிறது. இந்த விழா முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தக் கட்டத்தில் எருமைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை உயிர்ப்பலி கொடுக்கப் படுகின்றன. இந்த உயிர்ப்பலிக்கு யாட்னா (Yadnya) என்று பெயர்.

(Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.)

Kaharingan is an animistic folk religion professed by many
Dayaks in Kalimantan, Indonesia; particularly Central Kalimantan

காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் (Panaturan) என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான் (Balai Basarah - Balai Kaharingan).

காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.

களிமந்தான் டயாக் மக்களிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. மழைக்காட்டு விசுவாசம் என்று சொல்வார்கள். அது அவர்களின் உயிர்த் தன்மை. அதாவது காட்டின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் சிறப்புத் தனமை. மழைக் காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்குள் கண்டிப்பான வரைமுறைகள் உள்ளன.

Gayatri Mantram & Doa berbahasa Sangiang
(Dayak Kalimantan) berirama TANDAK – KAHARINGAN

காட்டில் இருந்து எதை எடுத்து வரலாம்; எதை எடுத்து வரக்கூடாது எனும் எழுதப் படாத சாசனங்கள். அந்த வரைமுறைகளை அவர்கள் தாண்டிச் செல்வது இல்லை. டயாக் சமூகங்கள் காட்டை நம்பியே வாழ்கின்றன. அதனால் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து இருக்கிறார்கள்.


காஜு டயாக் மக்கள் பெரும்பாலோர் விவசாய வணிகம்; நெல் பயிரிடுதல்; கிராம்பு பயிர் செய்தல்; மிளகு, காபிச் செடி வளர்த்தல்; கொக்கோ பயிர் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய களிமந்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான டயாக்குகள் இந்து காரிங்கான் மதத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

Dayak Kaharingan Hindu Girls Central Kalimantan

இருப்பினும் அண்மைய காலங்களில் இந்தக் களிமந்தான் டயாக் மக்கள் இஸ்லாம், கிறிஸ்த்துவ மதங்களுக்கும் மாறி வருகின்றனர்.

1950-ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்காக டயாக் மக்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் காஜு டயாக் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு மேஜர் ஜிலிக் ரீவுட் (Major Tjilik Riwut) என்பவர் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார். மத்திய களிமந்தான் பகுதியின் கவர்னராக இருந்தவர். அவரின் தலைமைத்துவத் தாக்கம்; சுதந்திரப் போராட்டத்  தாக்கத்தினால் காஜு மக்களும் காரிங்கான் மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்கள்.

Dayak Dance at Upau Village Banjarmasin

தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்று சொல்வார்கள். அந்த மாதிரி தலைவரின் போராட்ட உணர்வுகளினால் கவரப்பட்ட டயாக் மக்கள் தலைவர் பின்பற்றிய காரிங்கான் மதத்தையே தங்களின் வழிபாட்டு மதமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1945-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. பஞ்சார்மைசின் மாநிலம் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக காஜு டயாக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காரிங்கான் இந்துக்கள் வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள்.

மேஜர் ஜிலிக் ரீவுட்டின் தலைமையில் ஒரு கொரில்லா படை உருவானது. ஆங்காங்கே எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆக வேறு வழி இல்லாமல் காஜு டயாக் மக்களுக்காக மத்திய களிமந்தான் எனும் தனி மாநிலம் உருவாக்கப் பட்டது. போராட்டத் தலைவராக மேஜர் ஜிலிக் ரீவுட் விளங்கினார்.

Hindu Kaharingan beliefs on Eclipse in Central Kalimantan

அதனால் டயாக் மக்கள் பலரும் மேஜர் ஜிலிக் ரீவுட்டினால் ஈர்க்கப் பட்டார்கள். மேஜர் ஜிலிக் ஓர் இந்து. அதனால் தங்களின் தலைவர் சார்ந்த காரிங்கான் இந்து மதத்தையும் டயாக் மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த மதம் டயாக் மக்களிடம் பரவலாகிப் போனது.

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது. அந்த வகையில் காரிங்கான் மதம் இன்று அளவிலும் களிமந்தானில் உயிர் பெற்று வருகிறது.

களிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

Dayak Hindu Kaharingan saber cultural dance with traditional clothes.
Photo by Prayudi Nugraha

அந்த மன்றத்தின் கீழ் டயாக் இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். டயாக் இந்து மாமன்றம் என்ன என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை கிராமப்புறக் கோயில்களில் இந்துக்களின் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவரை இரு முறை புதைக்கும் பழக்கம். சற்று வித்தியாசமான பழக்கம்.

முதலாவதாக இறந்த ஒருவரின் உடலை முறைப்படி புதைத்து விடுவார்கள். உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது சகல மரியாதைகளுடன் ஊர்வலம் நடைபெறும். இந்து சாமியார்கள் முன் செல்ல உடன்பிறப்புகள் பின் தொடர்வார்கள். மஞ்சள் அரிசி மஞ்சள் பூக்கள் இடுகாட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் தூவப்படும்.

Dayak Hindu Kaharingan married to an Indian in Kuching

இரண்டாவதாகக் கொஞ்ச காலம் கழித்து புதைக்கப்பட்ட அதே உடல் தோண்டி எடுக்கப்படும். இங்கே கொஞ்ச காலம் என்பது சில மாதங்களாக இருக்கலாம். சில வருடங்களாகவும் இருக்கலாம்.

மீட்டு எடுக்கப்பட்ட அந்த உடலைச் சுத்தம் செய்து தங்களின் இந்து முறைப்படி மறுபடியும் புதைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா அமைதி பெறும் என்பது காஜு டயாக் மக்களின் இந்து மத நம்பிக்கை.

சபா, சரவாக் மாநிலங்களில் காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றும் 8,000 டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களின் மதத்தை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. காரிங்கான் இந்து மதம் என்பது ஒரு முழுமையான மதம் அல்ல என்று மலேசிய அரசாங்கம் சொல்லி வருகிறது.

Dayak Hindu Kaharingan di Tabalong Ethnik Festival 25 Agustus 2019

காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம் (Great Council of Hindu Religion Kaharingan). மத்திய களிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது. இங்கே தான் அவர்களின் மதத் தொடர்பான விவகாரங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.

வரலாற்றின் மூன்று காலக் கட்டங்களில் களிமந்தான் காடுகளில் குடியேற்றம் நடந்து உள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் நடந்தது. ஜாவா, களிமந்தான் கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களின் குடியேற்றம் இடம்பெற்றது.

பின்னர் இந்தோனேசியாவில் சைலேந்திரா; மஜபாகித் ஆட்சிக் காலத்தில் ஜாவாவில் இருந்து பலர் களிமந்தான் வந்து குடியேறினார்கள். அவர்கள் மூலமாக டயாக் மக்களிடம் இந்து மதம் பரவி இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

Dayak Hindu Kaharingan chidren

கி.பி.350-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.400-ஆம் ஆண்டு வரையில் கூத்தாய் மார்த்தாடிபூரா எனும் இந்தியர் அரசு போர்னியோ களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இது ஓர் இந்து சாம்ராஜ்யம்.

அதைப் போல கி.பி.1300-ஆம் ஆண்டுகளில் கூத்தாய் கார்த்தாநகரா எனும் இந்து சாம்ராஜ்யமும் களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இந்த இரு அரசுகளின் இந்து மதத் தாக்கம் களிமந்தானில் தேங்கி நின்று இருக்கலாம்.

அந்த வகையில் இந்து மதம் டயாக் மக்களிடையே பரவியும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் களிமந்தான் மழைக் காடுகளில் இந்து மதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(24.10.2020)

Notes:

1. Kaharingan is an animistic folk religion professed by many Dayaks in Kalimantan, Indonesia; particularly Central Kalimantan, although many have converted to Christianity or Islam or follow a syncretic religion. It is estimated that most Dayaks follow their ancient animistic religious traditions (Kaharingan), but often claim to belong to one of the recognized religions in Indonesia to prevent discrimination.

2. Hindu - Javanese influence can also be seen in this religion, and the Indonesian government views it as a form of Folk Hinduism because the Indonesian government recognizes only six official religions, and Kaharingan is not one of them.

3. Anthropos, Volume 102, Issue 2, Osterreichische Leo-Gesellschaft, Gorres-Gesellschaft, Anthropos Institute; Zaunrith'sche Buch-, Kunst- und Steindruckerei, 2007, ... It is remarkable to see how positive and self-conscious Kaharingans currently are in their interior villages. "We are Hindus," they proclaim. Likewise, people in Palangla Raya are proud of being part of a Hindu world community...

சான்றுகள்:

1. Vogel, J.Ph. 1918 The yupa inscriptions of King Mulavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.

2. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War

3. Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.

4. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali, p. 1

5. Baier, Martin (2007). "The Development of the Hindu Kaharingan Religion: A New Dayak Religion in Central Kalimantan". Anthropos. 102 (2)

6. Belford, Aubrey (2011-09-25). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". The New York Times. ISSN 0362-4331.

7. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War




 

23 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம் 1818

1816-ஆம் ஆண்டு இறுதியில், கிரிமினல் கைதிகள் எனும் பெயரில் 73 தமிழர்கள், பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். அனைவருமே அரசியல் கைதிகள். தென் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்கள். மருது பாண்டியர்களின் போர் வீரர்கள். வீரபாண்டிய கட்ட பொம்மனின் வீரர்களும் இருந்தார்கள்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கப்பல். மெட்ராஸ் 6-ஆவது படைப் பிரிவின் லெப்டினன்ட் ராக்ஹெட் (Lieutenant Rockhead) என்பவர் போர் வீரர்களுக்குக் கண்காணிப்பாளர். கப்பலின் தலைமை மாலுமி கேப்டன் லீ (Captain Lee). அந்தக் கப்பலில் தேக்கு மரங்கள் (Senegal Mahogany) இருந்தன. கப்பல் தூத்துக்குடியில் இருந்து கிளம்பியது.

In late 1816 a tall ship set sail from Tuticorin, South India. It’s cargo? Convict Labour & Senegal Mahogany trees. It is from there that St. Georges Church was built. The ship being commissioned by Government to carry the seventy convicts (Political Prisoners) to Penang. Lieutenant Rockhead of the 6th regiment was appointed to command the escort. Captain Lee commanded the ship. One of the captives was Prince Doraisamy Maruthu.

இந்தப் போர் வீரர்கள் தான் பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் (St. Georges Church Penang) தேவாலயத்தைக் கட்டினார்கள். 1817-ஆம் ஆண்டில் கேப்டன் ஸ்மித் (Captain Robert Smith) என்பவரின் மேற்பார்வையின் கீழ் தேவாலயக் கட்டுமானம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது.

பினாங்கு கொடிமலைப் பகுதியில் இருந்து சுண்ணாம்பு பாறைகளை அந்தத் தமிழர்கள் தான் வெட்டி எடுத்து வந்தார்கள். இந்தக் கட்டடம் 100% மணல்; சுண்ணாம்புப் பாறைகளால் கட்டப் பட்டது. இந்த ஆலயம் முழுக்க முழுக்க தமிழர்களால் கட்டப்பட்டது.

Under the supervision of Capt. Smith in 1817 building commenced using 100% Sand & Limestone cut by hand by Convict Labourers from the Hills of Penang.

இந்த கட்டடத்தை மெட்ராஸ் பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த கர்னல் ஜே.எல். கால்டுவெல் (Colonel J.L. Caldwell) வடிவம் அமைத்தார். மற்றும் வங்காளப் பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ராபர்ட் ஸ்மித்தின் (Captain Robert Smith) மேற்பார்வையில் கட்டப்பட்டது. இது மெட்ராஸில் இருந்த செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தின் மாதிரியில் ஜார்ஜிய - பல்லேடியன் )Georgian - Palladia) பாணியில் கட்டப்பட்டது.

The building was designed by Colonel J.L. Caldwell of the Madras Engineers and built by Indian Convict Labour under the supervision of Captain Robert Smith of the Bengal Engineers. It was built on the model of St. George’s Cathedral, Madras, in a Georgian-Palladian style.

ஆலயத்தின் நெடுவரிசைகளில் ஒரு தேக்கு மரப் பதிப்பு உள்ளது. அந்தத் தேக்கு மரம் தான் தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட கடைசி மரமாகும்.

The Doric columns have a Senegal Mahogany post inside to give stability. The tree that sits to the left facing the Church is the last remaining tree that came on the ship from India.

Groundbreaking    1816
Completed    1818

மலாயாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது இந்தக் கட்டிடம் கணிசமாக சேதம் அடைந்தது. ஆலயத்தின் உடபாகத்தில் இருந்த மரப் பொருட்கள் நிறையவே கொள்ளை அடிக்கப் பட்டன.

The building was significantly damaged during the Japanese occupation of Malaya and a lot of her interior fittings were looted.

2007-ஆம் ஆண்டில், இந்தத் தேவாலயம், மலேசியாவின் 50 தேசிய அரும் பொருட்களில் (பொக்கிஷம்) ஒன்றாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது. பெருமை கொள்வோம்.

In 2007, the church was declared one of the 50 National Treasures of Malaysia by the Malaysian federal government.

1816-ஆம் ஆண்டிற்கு முன்னரே, பிரான்சிஸ் லைட் காலத்திலேயே, தமிழர்கள் பினாங்கிற்கு வந்து விட்டார்கள். வந்து இருக்கிறார்கள். பினாங்கு கட்டமைப்பிற்கு முன்னோடிகளாக விளங்கினார்கள். இந்தக் கூற்றுக்கு இந்தப் பதிப்பு ஒரு சான்றாக அமைகிறது. ஆக மலாயா தமிழர்கள் மலாயாவிற்கு நேற்று முந்தாநாள் வந்தவர்கள் அல்ல. நேற்று முந்தாநாள் வந்த வந்தேறிகளும் அல்ல. நினைவில் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.10.2020

References:

1. Colonel James Welsh: Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years' Active Service in the East Indies: Published by London - Smith, Elder and Co, 1830

2. Langdon, Marcus (2013). Penang: The Fourth Presidency of India 1805–1830, Volume One: Ships, Men and Mansions. Penang, Malaysia: Areca Books. ISBN 9789675719073.

3. The Madras-Penang connection. The Hindu - Metro Focus. 27 February 2012.

4.https://www.stgeorgeschurchpenang.com/index.php/about/the-foundation-of-the-church.html

5. Cornelius-Takahama, Vernon: Indian convicts’ contributions to early Singapore (1825–1873)

6. Govindarajan, Vinita. "Remembering the Maruthu Pandiyar brothers, the leaders of the South Indian Rebellion of 1801". Scroll.in.

7. Journal of World History Coverage: 1990-2016 (Vol. 1, No. 1 - Vol. 27, No. 4




மலாயா தமிழர்கள்: அசோகர் காலத்து புலம்பெயர்வு

தமிழ் மலர் - 19.10.2020

மலாயா தமிழர்களின் வரலாறு நீண்டது. நெடியது. வரலாற்று வேதங்களால் வாசிக்க முடியாதது. வாய்ச் சொல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. துயரமான வரலாற்றுச் சோகங்களால் விவரிக்க முடியாதது. அந்தச் சோகங்கள் காலத்தால் மறுக்க முடியாதது. ஞாலத்தால் மறைக்க முடியாதது.

ஒரே வார்த்தையில் சொல்லலாம். மலையூர்த் தமிழர்களின் வரலாறு இன்றைக்கும் இனி என்றைக்கும் சாகாவரம் பெற்ற சாசனம். மலாயா வரலாற்றுச் சாசனத்தில் தலையாயச் சாசனம். மறுக்க முடியுமா?

சோதனைகள் கடந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. ஒன்று மட்டும் உண்மை. மற்றவர்கள் மலையூர் மண்ணில் கால் பதிப்பதற்கு முன்னரே தமிழர்கள் முத்திரை பதித்து விட்டார்கள்.

உண்மையிலேயே இது ஒரு வரலாற்று உண்மை. யார் வேண்டுமானாலும் தமிழர்களின் வரலாற்றுப் படிவங்களைச் சிதைக்கலாம். வரலாற்றுப் படிமங்களை மறைக்கலாம். வரலாற்றுச் சான்றுகளைச் சட்டியில் போட்டு வறுத்தும் எடுக்கலாம். பிரச்சினை இல்லை.

ஆனால்… ஆனால்… மலாயாத் தமிழர்களின் வரலாற்றை மட்டும் எந்தக் காலத்திலும் அழிக்கவே முடியாது. மலாயாத் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணி வேர்களை என்றைக்கும் எவராலும் அறுத்துப் போடவே முடியாது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் திரைகடல் தாண்டி திரவியம் தேடி மலையகத்திற்கு வந்து விட்டார்கள். வணிகர்களாக வந்தார்கள். வணிகம் பார்த்தார்கள். வயல்காட்டு மன்னர்களுக்கு வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள்.

புகுந்த இடத்தில் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தினார்கள். பொன்னையும் பொருளையும் தேடிக் கொண்டார்கள். வந்த வழியாகப் பலரும் திரும்பிச் சென்றார்கள்.

விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் வந்த இடத்தில் உள்ளூர்ப் பெண்களைப் பார்த்து மயங்கினார்கள். கிரங்கினார்கள். கழுத்தை நீட்டச் சொன்னார்கள். கயிறைக் கட்டி விட்டார்கள்.

அப்புறம் என்ன. வழமையான வழுக்கல் தானே. அவர்களும் வயல்காட்டில் மீன் பிடித்தார்கள். சுட்டுத் தின்ன ருசியில் அப்படியே நிரந்தரமாய்த் தங்கி விட்டார்கள். அப்படியே புதிய வாரிசுகளைத் தோற்றுவித்தார்கள். ஒன் மினிட் பிளீஸ். தமிழகம் பக்கம் போய் கொஞ்சம் பார்ப்போமே.

கரிகால் சோழன். கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்க காலத்தைச் சேர்ந்த அழகான அற்புதமான சோழ மன்னன். கி.பி 200-ஆம் ஆண்டுகளில் காஞ்சி முதல் காவிரி வரை ஆட்சி செய்தவர்.


கரிகால் சோழன்

அவர் காலத்தில் ஒரு பெண் புலவர். பெயர் வெண்ணிக் குயத்தியார். புறநானுற்றில் அவரின் ஒரு பாடல்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

(பாடல் 66)



அதன் பொருள் என்ன தெரியுங்களா. காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்றவன். நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்றவன். அப்படிப்பட்ட புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவன் என்று கரிகாலனைப் புகழ்ந்து பாடுகிறார்.

காற்றின் தொழில் நுட்பம் அறிந்து நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறமையும் வல்லமையும் உடையவர்களாக இருந்து இருக்கிறார்கள் என்பதை அந்தப் பாடல் சான்று கூறுகிறது.

இந்தப் பாடல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கடல் பயணத்தில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று.

சங்க காலத் தமிழகத்தில் வசவச முத்திரம், அரிக்கமேடு, மரக்காணம், காரைக்காடு, குடிகாடு, காவிரிப் பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை போன்ற துறைமுகங்கள் புகழ்பெற்று விளங்கி இருக்கின்றன. நான் சொல்வது சங்கக் காலத்தில்.

இடைக் காலத்தில் பெரியபட்டினம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை போன்ற துறைமுகங்கள் இருந்து இருக்கின்றன.

1912-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் கடற்கரையில் ஒரு சிதைந்த கப்பல் கண்டு எடுக்கப் பட்டது. ஆய்வு செய்து பார்த்தார்கள். அது ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரிய வந்தது.

எத்தனை வருடம் பார்த்தீர்களா. 2500 வருடங்கள். அந்தக் கப்பலில் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்கள் எல்லாமே சங்கத் தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப் போகும் எழுத்துகளாக இருந்தன.

இதே மாதிரி ஆஸ்திரேலியா பசிபிக் கடல்பகுதியில் 1811-ஆம் ஆண்டு ஒரு பெரிய சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப் பட்டது. ஆராய்ந்து பார்த்ததில் 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழர்களின் கப்பல் என்றும் கண்டுபிடிக்கப் பட்டது.

அந்தக் காலத்தில் மகதம், கலிங்கம் போன்ற இந்திய அரசுகளிடம் பெரும் பெரும் கடற்படைகள் இல்லை. மகதம் என்பது மகத நாடு. அசோகர் ஆட்சி செய்த நாடு. மகதத்திற்கு அருகில் இருந்தது கலிங்க நாடு.

கங்கை முகத்துவாரத்தில் தாமரலிபதா (Tamaralipta) எனும் துறைமுக நகரம். அது கலிங்க அரசின் துறைமுகம். தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பெயர் வருகிறது. கவனியுங்கள். அந்தக் காலக் கட்டத்தில் இந்தத் தாமிரலிபதா நகரம் மிகவும் புகழ் பெற்றது.

(சான்று: இலங்கையில் தமிழர், கா. இந்திரபாலா; பக்: 126-127)

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். தமிழர்களின் கடல் பயணங்களின் வீர தீரச் செயல்கள் சரம் சரமாய் வந்து கொட்டும். அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் புலம்பெயர வேண்டும். புதுக் குடித்தனம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அறவே இல்லை.

ஆக மறுபடியும் சொல்கிறேன். மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல. அதற்குச் சான்றுகள் தேவை இல்லை. வரலாறே அவர்களுக்கு ஒரு சான்றாக அமைந்து போகின்றது. அசோகர் காலத்தில் தான் தமிழர்களின் முதல் புலம்பெயர்வு நடந்து இருக்கிறது.

கலிங்கப் போரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மண்ணாசை வெறியில் மகா அசோகர் கலிங்கத்தின் மீது படை எடுத்தார். ஓர் இலட்சம் பேரைக் கொன்று போட்டார். ஒன்றரை இலட்சம் பேரை நாடு கடத்தினார்.

கலிங்கப் போரில் தப்பித்த கலிங்கர்களும் நாடு கடத்தப் பட்ட கலிங்கர்களும் தென்கிழக்காசிய நாடுகளுக்குள் அடைக்கலம் அடைந்தனர். கடல் வழியாகக் கலிங்கர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்தனர். இந்த இடத்தில் இருந்துதான் மலாயாவில் தமிழர்களின் வரலாறும் தொடங்குகிறது. கலிங்கர்களும் தமிழர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இது ஒன்றும் கட்டுக் கதை இல்லை. கம்பருக்குப் பின் வந்த கட்டுக் காவியமும் இல்லை. உண்மைக் கதை.

கலிங்கப் போர் என்பது சிலருக்குத் தெரிந்த ஒரு வரலாற்றுப் பதிவு. பலருக்குத் தெரியாத ஒரு காலச் சுவடு. உலக மாவீரர்களில் ஒருவர் அசோகர். கலிங்கப் போருக்குப் பின்னர் அவர் மனமாற்றம் அடைந்தார். அகிம்சைக்கு மாறினார். ஆனால் அவருடைய அகிம்சா மனமாற்றம் என்பது கலிங்கப் போருக்குப் பின்னர் நடந்த கதை. அதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.

உலக வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் மன்னர்கள் வந்தார்கள். வாழ்ந்தார்கள். வென்றார்கள். வீழ்ந்தார்கள். அவர்களில் சிலர் தங்களைத் தாங்களே மாட்சிமை நிறைந்த மாமன்னர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும் அவர்களில் பலர் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இருக்கை இழந்து வாழ்க்கை இழந்து இடம் தெரியாமல் வரலாற்றில் இருந்து மறைந்து போய் விட்டார்கள்.

ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை வாழ்கின்றார் என்று ஹெச். டி. வெல்ஸ் எனும் ஓர் ஆங்கில இலக்கிய மேதை சொல்லி இருக்கிறார். அந்த இந்திய மன்னர் தான் அசோகர்.

அசோகர் கலிங்கத்தின் மீது படை எடுத்ததால் அங்கு இருந்து ஒன்றரை இலட்சம் கலிங்கர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு.

மலாயா, பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குக் கலிங்கர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்தக் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இனி யாராவது மலாயா தமிழர்களை வந்தேறிகள் என்று சொன்னால் இந்த உண்மையைத் தூக்கிப் போடுங்கள். எல்லாம் சரியாக வரும். வந்ததை மறந்த சுயநல அரசியல்வாதிகள் சிலர் வாய்க் கூசாமல் பேசுவதையும் சற்றே நிறுத்தி வைப்பார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(19.10.2020)

சான்றுகள்:

1. R. C. Majumdar (1996). Outline of the History of Kalinga. Asian Educational Services. ISBN 978-81-206-1194-8.

2. Walter Smith (1994). The Mukteśvara Temple in Bhubaneswar. Motilal Banarsidass. ISBN 978-81-208-0793-8.

3. Umakanta Subuddhi (1997). "Economic Life of Orissa under the Bhauma-Karas". In Nihar Ranjan Patnaik. Economic History of Orissa. Indus. ISBN 978-81-7387-075-0.

4. K. A. Nilakanta Sastri, ed. (1988) [1967]. Age of the Nandas and Mauryas (Second ed.). Delhi: Motilal Banarsidass. ISBN 81-208-0465-1.

5. 1.A. P. Patnaik, "Kalingan Link with Countriesof South-East Asia,"Orissa Review,vol. XLVIll, No.9, 1992. p. 25.

6. G. Coedes,The Indianized States of South- East Asia,Honolulu. 1967, p.19.


 

22 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மலையூர் துலாபாரங்கள்

தமிழ் மலர் - 22.10.2020

மலாயா தமிழர்கள் தான் மலையூர் துலாபாரங்கள். அந்த மலையூர் துலாபாரங்கள் வந்தேறிகள் அல்ல. உண்மையிலேயே அப்படிச் சொல்பவர்களில் சிலரும் பலரும் தான் வந்தேறிகள். இது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவிற்குக்கூட தெரிந்த விசயம். வந்தேறிகள் என்று சொல்பவர்களின் வரலாற்றுப் பின்னணி எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.

வந்தேறிகள் என்று சொல்பவர்களில் சிலர் என்னவோ முதல் நாள் முளைத்த முள்ளங்கி மாதிரியும்; முந்தா நாள் குதித்து வந்த வான்கோழி மாதிரியும்; மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறார்கள். திரும்பிப் போ என்கிறார்கள். இது என்ன பசார் மாலாமில் விற்கப்படும் நாசி லெமாக் பொட்டலமா. இல்லை பூத்துப் போன பொங்கல் பொசுங்கலா. வந்தேறிகள் எனும் சொல்லுக்கு மவுசு இல்லாமல் போய் விட்டது.

மலாயா தமிழர்களின் வாரிசுகளும் இப்போதைய மலையூர் துலாபாரங்கள் தான். இன்னமும் உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். நேற்று வந்த அரசியல்வாதிகள் அவர்களை வந்தேறிகள் என்று வாய்கூசாமல் வசைபாடுகிறார்கள்.

ம்ீண்டும் சொல்கிறேன். வந்தேறிகள் எனும் சொல்லுக்கு ஒரு விவஸ்தை இல்லாமலேயே போய் விட்டது. இந்த நாட்டிலே பிறந்து; இந்த நாட்டிலே வளர்ந்து; இந்த நாட்டிலே வாழ்ந்து; இந்த நாட்டிலேயே மரித்துப் போனவர்களை வந்தேறிகள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன நீதி இருக்கிறது. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மனிதம் செத்துப் போகிறது என்று சத்தம் போட்டுக் கத்தும்.

பக்கத்து நாடு கறுப்பா சிகப்பா என்று தெரியாமல் வாழ்கின்ற மலாயா தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்த அப்போதைய மலாயா தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பக்கத்து நாடுகளில் இருந்து கொல்லைப் புறமாக நுழைந்தவர்கள் வந்தேறிகளா?

மலாயா தமிழர்களின் வியர்வைத் துளிகள். மலாயா தமிழர்களின் இரத்தக் குமிழ்கள். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம் தான் இந்தப் பச்சை மண். அப்படிப்பட்ட ஓர் அழகிய மண்ணிலே வந்தேறி எனும் சொல் அர்த்தம் இல்லாத சொல்லாகி விட்டது. திரும்பிப் போ என்கிற கூப்பாடு நீண்டு நெடிந்து ஒடிந்து விழுகிறது. அதனால் பலருக்கும் வெட்கம். வேதனைகள். விசும்பல்கள்.

வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களில் சிலரும் பலரும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு பட்டம் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

1800-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் காபி கரும்புத் தோட்டங்கள் அருகம் புற்களாய் அருகிப் பெருகிப் பரவின. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரும் போட்டிப் போட்டுக் கொண்டு தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். பினாங்கு, ஜொகூர் பகுதிகளில் பிரெஞ்சுக்காரர்கள். பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்கள்.

தோட்டங்களைத் திறந்தாகி விட்டது. வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே. உள்ளூரில் வாழ்ந்தவர்கள் காபி கரும்புத் தோட்ட வேலைகளுக்குச் சரிபட்டு வரவில்லை. காலம் காலமாக வயல்காடுகளே அவர்களின் வாழ்வாதாரம். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்வியல். அப்படியே வாழ்ந்து விட்டவர்கள். கரடு முரடான காட்டு வேலைகள் பொருந்தி வரவில்லை.

சீனர்களைப் பொறுத்த வரையில் ஈய லம்பங்கள் அவர்களின் சொர்க்கவாசல். பணம் கொட்டியது. தோண்டித் தோண்டி எடுத்தார்கள். பக்கத்து நாட்டில் வாழ்ந்தவர்கள் ஜாவானிய மக்கள். சற்றே உடல் வலிமை. காடு மேடுகளை அழிக்க நல்ல உறுதியான உடல்கட்டு.

ஆயிரக் கணக்கில் அல்ல. நூற்றுக் கணக்கில் இறக்குமதி செய்யப் பட்டார்கள். ஆனாலும் அப்போது இந்தோனேசியாவை ஆட்சி செய்த டச்சுக்காரர்களின் கெடுபிடிகள். அதனால் ஜாவனியர்களை மலாயாவுக்குக் கொண்டு வருவதில் சில பல சிக்கல்கள்.

இந்தக் கட்டத்தில் தான் வெள்ளைக்காரர்களின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. வெள்ளந்திகளின் வெகுளித்தனங்கள். வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது. அந்த வெள்ளந்திகளுக்கு இளைச்சவாயத் தனங்கள் இருப்பதையும் ஆராய்ச்சி பண்ணி தெரிந்து கொண்டார்கள். ஆயிரம் ஆயிரமாய் இழுத்து வரப்பட்டார்கள்.

19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய ஆயிரக்கணக்கான தென்னிந்தியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அந்தத் தென்னியந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் சஞ்சிக்கூலி.

சஞ்சிக்கூலி எனும் சொல் சஞ்சி (Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று சொல்லலாம். ஒன் மினிட் பிளீஸ்.

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 85 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக் கூலிகளாய் கப்பல் ஏறி வந்தவர்கள். பினாங்கு புறமலை தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள். அப்புறம் காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளைப் போல நடக்க வைக்கப் பட்டவர்கள்.

லாரிகளில் ஆடு மாடுகளைப் போல ஏற்றி வரப் பட்டவர்கள். மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு நசுக்கிக் கொண்டு வரப் பட்டவர்கள். ரப்பர் தோட்டங்களில் தகரக் கொட்டகைகளை லயங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைக்கப் பட்டவர்கள். அப்புறம் சாகும் வரையில் மிருகங்களை விட மோசமாக வேலை வாங்கப் பட்டவர்கள்.
 
கேவலம்! மலாயாவில் நடந்த கொடுமை அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. அதுவே இப்போதைக்கு ஒரு வரலாறாகவும் மாறிப் போகின்றது.

ஐரோப்பியர்களின் ரப்பர் தோட்டங்களில் இரவு பகலாய் ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தார்கள். பொதுவாக கொத்தடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். வரலாற்று ஆவணங்கள் பொய் சொல்வது இல்லை.

மலாயா தமிழர்களின் இப்போதைய நான்காம் ஐந்தாம் தலைமுறையினர் மற்றவர்களுக்குச் சவால்விடும் அளவிற்கு கல்வித் துறைகளில் வளர்ச்சி அடைந்து பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் படைத்து வருகிறார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் சொல் வாசகம் மலாயா தமிழர்களின் மலைவாசகமாக மாறி வருகிறது.
 
அது எல்லாம் இல்லை. எங்க தாத்தா இத்தாலியில் பிறந்தவர். அங்கே இட்லி சுட்டு விற்றவர். எங்க பாட்டி இங்கிலாந்தில் பிறந்தவர். அங்கே இஞ்சி சூஸ் விற்றவர். என் மாமா அமெரிக்காவில் பிறந்தவர். ஐஸ் கச்சாங் விற்றவர் என்று சிலர் சொல்லலாம். சொல்லிவிட்டுப் போகட்டுங்க. தவறாக நினைக்க வேண்டாம். சிலருக்கு ரொம்பவே வெள்ளைக்காரன் நினைப்பு. அவ்வளவுதான்.

அந்த மாதிரியான ’கிளேமர்’ கிளியோபாட்ராக்கள்; மார்டன் ரோசா பூக்களைப் பார்த்து பெருமை படுவோம். என்ன இருந்தாலும் அவர்களின் உடல்களிலும் மலாயா தமிழர்களின் இரத்தம் ஓடுகிறது. மறந்து இருக்கலாம். விடுங்கள். அப்படியாவது பேசி பிழைத்துப் போகட்டும்.

 

சஞ்சிக்கூலிகள் எனும் மலையூர் துலாபாரங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் ஓரளவிற்குச் சுகமான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் அப்படி வாழவில்லை. வாழ்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த மூத்தவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

தண்ணீர்க் கப்பல்களில் வந்து… வியர்வை மழையில் நனைந்து… வெயில் காட்டில் காய்ந்து… காடு மேடுகளில் அலைந்து… தடி எடுத்த தண்டல்களின் ஏச்சு பேச்சுகளை வாங்கி வதங்கி… இடுப்பு எலும்பு உடைந்து…  அரைவயிறும் கால் வயிறுமாய்க் கஷ்டப்பட்டு... இதை எல்லாம் நம் வருங்காலச் சந்ததியினர் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே இந்தக் கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

1800-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இருந்த வெள்ளைக்காரத் துரைமார்கள் நூற்றுக்கணக்கான கங்காணிகளைத் தென் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கங்காணிகள் வேறு யாரும் இல்லை. அதே கறுப்புத் தோல்கள் தான். அதே சிவப்பு இரத்தம் தான்.

உடலை மறைக்க ஒரு துண்டு வெள்ளை ஜிப்பா. ஒரு துண்டு வெள்ளை வேட்டி. நெற்றியில் பெரிசா ஒரு திருநீறு. ஐம்பது காசு குங்குமம். கொஞ்சம் பன்னீர் சண்பக வாசம். சந்தனக் கலரில் ஓர் இடுப்புத் துண்டு. அம்புட்டுத்தான்.

’ஊருக்கு போங்க. பினாங்குல காசும் பணமும் கித்தா மரத்தில காச்சு காச்சுத் தொங்குதுனு சொல்லுங்க. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். ஆசை ஆசையா அவுத்து விடுங்க. மண்டையை நல்லா கழுவுங்க.

முடிஞ்சா லக்ஸ் லைப் பாய் சவுக்காரத்தை போட்டு நல்லா குளிப்பாட்டுங்க. அப்படியே மூட்டை கட்டி இழுத்துட்டு வாங்க’

இந்த மாதிரி தான் மூளைச் சலவை செய்யப்பட்ட கங்காணிகள் தான் அங்கே அனுப்பப் பட்டார்கள். நாகப்பட்டணத்தில் கப்பலை விட்டு இறங்கியதும் அந்தக் கங்காணிகள் தான் அப்போதைக்கு மலாயாவின் மயக்கும் மாலை மன்மதக் குஞ்சுகள். மன்னிக்கவும். இனிக்கும் இன்னிசை வேதாளங்கள்.

ஆக அந்த வகையில் அந்தக் கொஞ்சல் கொசுறுகளின் ஆசை வார்த்தைகளை நம்பி மலாயாவுக்குள வந்தவர்கள் தான் மலையூர் துலாபாரங்கள். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பேதம் இல்லை. சகட்டுமேனிக்குச் சஞ்சிக்கூலிகளாய்த் தான் மலாயாவுக்குள் வந்தார்கள்.

இதில் கொஞ்சம் படித்த இலங்கை மலையாளச் சொந்தங்கள் பேனா பிடிக்கும் வேலைக்குப் போனார்கள். கிராணிகளாகவும் டிரசர்களாகவும் பேர் போட்டார்கள்.

இருந்தாலும் கப்பல் ஏறி வந்த கதையில் பெரிசா பெருமை பேச எதுவும் இல்லை. வந்தவர்கள் அனைவருமே சஞ்சிக்கூலி துயர அத்தியாயத்தின் அரிச்சுவடிகள் தான். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன். மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் துலாபாரங்கள். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மலாயா தமிழர்கள் மலையூர் துலாபாரங்கள் என்று சத்தம் போட்டுக் கத்தும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.10.2020

சான்றுகள்:

1. Tragic Orphans: Indians in Malaysia by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies.

2. Sandhu, Kernial Singh (30 January 2006). Indian Communities in Southeast Asia ISEAS Publishing.

3. Dr. Martin Richards. "Climate Change and Postglacial Human Dispersals in Southeast Asia". Oxford Journals.

4. The HUGO Pan-Asian SNP Consortium (11 December 2009). "Mapping Human Genetic Diversity in Asia".